இனிமேல் இரண்டாவது மாடி வீடுதான் வேண்டும்….



அழகியசிங்கர்


டிசம்பர் முதல் தேதி என் பிறந்தநாள்.  இரண்டாம் தேதி நான் எதிர்பாராத நிலை ஏற்பட்டது.  மழை ஏற்பட்டதால் நான் வெளியே போகவில்லை.  இந்த நிலை அப்படியே நீடித்திக் கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் போன மழையில் தண்ணீர் வரவில்லை. நான்  ஹாய்யாக டிவி பார்த்துக்கொண்டிருந்தேன்.  முடிச்சூரில் தண்ணீர் சூழ்ந்து எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.   அதை டிவியில் காட்டியபோது நம்ப முடியாமல் இருந்தது.  நம் சென்னையில் ஒரு பகுதியிலா இப்படி என்று பட்டது. 
நம்ம இடம் பரவாயில்லை என்று நினைத்தது எவ்வளவு தப்பு. எனக்குத் தோன்றியது கரண்ட் கட் ஆகிவிட்டால் என்ன  செய்வது.  உடனே மோட்டார் போட்டு மேலே தொட்டியை நிரப்பினேன்.  அப்போது மழைப் பெய்து கொண்டிருந்தது.  ஒரு அரை மணி நேரம் போட்டிருப்பேன்.  பின் அணைத்து விட்டேன்.  ஆனால் 9 மணிக்கு கரண்ட் நின்றுவிட்டது.  
மழை வலுத்துக் கொண்டிருந்தது.  சிறிது நேரம் கழித்து தெருவைப் பார்த்தபோது தெருவெல்லாம் தண்ணீர்.  நான் திகைத்துவிட்டேன்.  நம்ம தெருவிற்கே தண்ணீர் வராதே?  எப்படி?
இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தேன்.  மழை வலுத்துக் கொண்டிருந்தது.  முன்பே விட தண்ணீர் அதிகமாக இருந்தது.  என்னால் நம்ப முடியவில்லை.  முன்பு நாங்கள் இருந்த போஸ்டல் காலனி தெருவில்தான் சாதாரண மழைக்கே தண்ணீர் வந்துவிடும்.  ஆனால் ராகவன் காலனி என்கிற இந்தத் தெருவில் அப்படி இல்லை.  ஏன் இப்படி?
இந்தத் தெருவில் எங்கள் வீடுதான் புதிதாக கட்டியிருக்கும் இடம்.  சற்று மேடாக இருக்கும்.  கீழ் தளத்தில் கார்கள் டூ வீலர்கள் வைத்துக் கொள்ள முடியும்.  
தெருவில் வண்டிகள் வைத்துக் கொண்டவர்கள் எங்கள் வீட்டில் பைக் கார் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார்கள்.  சரி என்றேன்.
தெருவில் வைத்திருந்த பெரும்பாலான வண்டிகள் எங்கள் வீட்டில் நுழைந்து விட்டன.
எனக்கே பெருமை நம்ம வீடு இந்தத் தெருவிலுள்ள வண்டிகளைத் தாங்குகின்றன என்று.   கீழே உள்ள ஒரு இடத்தில் என் புத்தகங்களை வைத்திருந்தேன். தரையில் வைத்திருந்தேன். என் பிறந்த தினத்தை ஒட்டி நேர் பக்கம் என் கட்டுரைத் தொகுதியை அடுக்கடுக்காக வைத்திருந்தேன். டிசம்பர் ஒன்றாம் தேதி சிலரைப் பார்த்து என் புத்தகப் பிரதியைக் கொடுக்க நினைத்தேன். எனக்கு சிறிது சந்தேகம்.  புத்தகங்களை மேடையில் ஏற்றி வைத்து விடலாம் என்று.  தரையில் தண்ணீர் வந்தால் என்ன செய்வது.  உண்மையில் நான் வராது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன்.  ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைக்கத் தொடங்கினேன்.  என் வீட்டில் குடியுள்ள மற்றவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
சிறிது நேரம் கழித்து நான் திரும்பவும் பார்த்தபோது தண்ணீர் உள்ளேயே நுழையவே ஆரம்பித்து விட்டது.  என்னால் நம்ப முடியவில்லை.  என் வீட்டு பின் பகுதியில் அடுத்தத் தெருவில் உள்ள வீடு மூழ்கி விட்டது.  பின் பகுதி வீட்டுக் கிணறு ரொம்பி வழிந்தது. அதன்பின்தான் இந்தத் தண்ணீரின் விபரீதம் புரிந்தது.  அவசரம் அவசரமாக கீழே உள்ள வீட்டில் தரையில் பரப்பியிருந்த புத்தகங்களை எடுத்து சமையல் அறை மேடைமீது அவசரம் அவசரமாக திணித்தேன். மெதுவாக தண்ணீர் வீட்டின் உள்ளே நுழைந்து என் காலை தொட்டு விட்டது.  என் முயற்சயில் சோர்வே ஏற்பட்டது.  சில புத்தகங்களை பெஞ்சில் வைத்தேன்.  பின் அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பிúன்.  
விலை மதிக்க முடியாத எத்தனையோ புத்தகங்கள் தரையில் இருந்தன.  அவையெல்லாம் ஜல சமாதி ஆக வேண்டியதுதானா என்று தோன்றியது.  
கொஞ்ச நேரத்தில் புத்தகம் எல்லாம் தண்ணீரில் சூழ்ந்து விட்டன.  உள்ளே பார்க் பண்ணியிருந்த டூ வீலர்கள், கார்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி விட்டன.   முதல் மாடியில் நாங்கள் குடியிருந்தோம்.  கிட்டத்தட்ட 20 படிகள் தாண்டி வர வேண்டும்.  6 படிகளைத் தாண்டி வந்துவிட்டன தண்ணீர்.  மேலும் தெருவில் காலடி வைத்தால் என் கழுத்துக்கு மேல் தண்ணீர்.  ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களும் மொட்டை மாடிக்கு வந்து விட்டார்கள்.  மொட்டை மாடியைப் பார்த்தபோதுதான் தெரிந்தது.  எங்கள் தெருவில் அவ்வளவு  பேர்கள் உள்ளனரா என்று.
என் மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது.  என் மனைவி எனக்கு மேல் பயந்தவளாக இருந்தாள்.  காலையில் தண்ணீர் வரும்போது என் டிஜிட்டல் காமரா மூலம் படம் பிடித்துச் சென்றேன். சிலரை தந்தி டிவி மாதிரி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன்.  நான் பார்த்துக் கொண்டிக்கும்போதே கோவிந்தன் ரோடில் வெள்ளம் போல் தண்ணீர் அடித்துக் கொண்டே சென்றது.  எல்லாம் வேகம்வேகமாக அடித்துச் சென்று கொண்டிருந்தது.  
எதிரில் குமரன் ஸ்டோரில் பணிபுரிந்தவர்கள் வீடு.  தண்ணீர் அந்த வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் பண்ணியது.  எல்லாவற்றையும புரட்டிப் போட்டது.  அந்த வீட்டிற்குள் இருந்தவர்கள் மாடிக்கு ஓட்டமாய் ஓடிவிட்டார்கள்.
ராத்திரி எல்லாம் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன்.  ஒரே இருட்டு.  தண்ணீர்.  93வயதாகிற அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பாட்டுக்கு இருந்தார்.  நான் எப்போதோ வாங்கிய பிலிப்ஸ் ரேடியோவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  யூபிஎஸ் ஜாக்கிரதையாகப் பயன் படுத்திக் கொண்டோம்.  யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  மடிப்பாக்கம் ராம்நகர் 8வது மெயின் சாலையில் இருக்கும் என் பெண் தன் குடும்பத்துடன் முதல் மாடிக்கு ஏறிச் சென்றுவிட்டாள்.  எனக்கு அவள் குடும்பத்தைப் பற்றி கவலை.
முதல் மாடியில் 6வது படியை துவம்சம் பண்ணும் தண்ணீரை நினைத்து எனக்குக் கவலை.  ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாசலில் வந்திருந்து இன்னும் தண்ணீர் எத்தனைப் படிக்கட்டுகள் ஏற வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் அடுத்தநாள் என்று தண்ணீர் வடிந்து விட்டது.  இயல்பு நிலை வர சில நாட்கள் ஆயிற்று.
 

பிறந்தநாள் போது ஒரு குழப்பம்

    

அழகியசிங்கர்

        இன்றுதான் என் பிறந்தநாள்.  67 நாட்கள் பின்னால் அப்பா பிறந்த தினத்தை சர்டிபிக்கேட்டில் தப்பாகக் கொடுத்து விட்டார். ஏன் தெரியாமல் அப்படி கொடு:த்தார் என்பது தெரியவில்லை.  93 வயதாகிற  அவரைக் கேட்டால், ஞாபகமில்லை என்கிறார். அதனால் டிசம்பர் மாதம் பிப்பரவரி மாதம் ஆகிவிட்டது. பெரும்பாலோருக்கு பிறந்த நாளே ஞாபகத்தில் இருப்பதில்லை.  பிறந்த நாள் என்பதை நம் வயதை ஊகிக்க ஒரு அடையாளம். அவ்வளவுதான். நான் அந்தத் தவறை என் புதல்வனுக்கோ புதல்விக்கோ செய்யவில்லை. 


    பல ஆண்டுகள் நான் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதைப் பற்றி யோசித்ததில்லை.  பெரும்பாலும் எனக்கு அது தெரியாமல் கூட போய்விடும்.  யாரும் அன்று என்னை வாழ்த்தக் கூட மாட்டார்கள். உண்மையில் அன்று நான் யாரிடமாவது சண்டைக்குப் போவோனாக இருப்பேன்.  அல்லது என்னிடம் யாராவது வம்புக்கிழுத்து திட்டினாலும் திட்டியிருப்பார்கள்.  

    இன்று சினிமாவில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் இந்தப் பிறந்தத் தினத்தை வைத்துக்கொண்டு அடிக்கிற கூத்தை நினைத்து வேடிக்கையாக இருக்கிறது.  ஒரு அடையாளத்திற்காகத்தான் பிறந்த நாள் என்பதைத் தவிர அதுவும் மற்ற நாட்களைப் போல் ஒரு நாள்தான்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிறந்த தினத்தை ஒட்டி என் புத்தகங்கள் கொண்டு வர வேண்டுமென்று நினைப்பதுண்டு.  2013 ஆம் ஆண்டு என் பிறந்த தினத்தை ஒட்டி என்னுடைய 4 புத்தகங்களைக் கொண்டு வந்தேன்.  3 சிறுகதைத் தொகுதியும் 1 கவிதைத் தொகுதியும்.  

    அதேபோல் இந்த வருட பிறந்த தினம் போது என் மொத்த சிறுகதைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர நினைத்தேன்.  முடியவில்லை.  ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நான் 4 அட்டைப் படங்களை ஒன்றாக அடித்து வைத்திருந்தேன்.  அதில் மூன்று அட்டைப் படங்களை அப்போதே புத்தகஙகளாகக் கொண்டு வந்துவிட்டேன்.  நாலாவதாக ஒரு அட்டைப் படத்தில் என் கட்டுரைப் புத்தகம் கொண்டு வர நேர் பக்கம் என்ற பெயரில் அட்டைப் படம் தயாரித்து வைத்திருந்தேன்.  ஒவ்வொரு வருடமும் என் கடட்டுரைப் புத்தகம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும்போது ஒரு அலட்சியம் இருந்து கொண்டே இருக்கும்.  என் நண்பரும் கவிஞரும் வைதீஸ்வரன் வரைந்த ஓவியத்தைக் கொண்டு அந்த அட்டைப் படத்தைத் தயாரித்திருந்தேன்.  அற்புதமான ஓவியம் அது.  100 பக்கங்களுக்கு மேலாக அந்தப் புத்தகம் கொண்டு வரலாமென்று நினைத்திருந்தேன்.  

    கடந்த 27 ஆண்டுகளாக பத்திரிகைக் கொண்டு வருவதும் புத்தகம் போடுவதும் என் வழக்கம்.  புத்தகம் விற்பது என்பதெல்லாம யோசித்துக் கொண்டிருக்கும்போது என் நிலை ரொம்பவும் மாறி விட்டது.  முதலில் 1000 பிரதிகள் அச்சடித்தப் புத்தகமெல்லாம் பின்னால் 600 பிரதிகளாக மாறி விட்டன.  அதன் பின் 500 பிரதிகள் அடிக்கத் தொடங்கினேன். இப்படி நான் அடித்த 600 பிரதிகள் 500 பிரதிகள் புத்தகங்களே இன்னும் என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன.  லாவண்யா என்ற கவிஞர் எழுதிய ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்’ என்ற கவிதைத் தொகுதி என்னை விட்டு அகலுவதில்லை.  நான் யோசிப்பேன்: அந்தக் கவிதைத் தொகுதிக்கு நத்தை என்று பெயர் வைத்ததால் நத்தை நகராமல் என்னிடமே இருக்கிறதா என்று.

    முன்பு லைப்ரரி ஆர்டர் கிடைக்கும்.  புத்தகமும் நம்மை விட்டு நகரும்.  இப்போதெல்லாம் அதெல்லாம் கிடையாது.  மேலும் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி புத்தக விமர்சனம் வந்தால் புத்தகம் விற்கும் என்று சொல்வார்கள்.  அதெல்லாம் கூட பொய்.  முதலில் பத்திரிகையில் விமர்சனமே வராது.  ஏன் என்றால் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஏராளமான புத்தகங்கள் வந்து குவிகின்றன.  யார் புத்தகத்தை விமர்சனம் செய்வது என்ற குழப்பம் அவர்களுக்கு வந்து விடும்.  மேலும் அப்படி விமர்சனம் வந்தப் புத்தகம் பிரமாதமாக விற்று விடாது.  புத்தகக் கடைகளில் விற்கக் கொடுக்கலாம் என்றால் அவர்கள் ஏகப்பட்ட புத்தகங்களை வைத்துக் கொண்டு விழி பிதுங்குகிறார்கள்.  நம் புத்தகங்களைக் கொடுத்தால் எத்தனைப் பிரதிகள் விற்கின்றன என்பதைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை.  சரி புத்தகம் விற்றப் பணத்தையாவது கேட்கலாம் என்றால்…நம்மைப் பார்த்தால் சிரிக்கிறார்கள்.  புன்னகை புரிகிறார்கள்.  புததகம் விற்பதைப் பற்றி கேட்டால் அவர்கள் முகம் மாறி விடுகிறது. அப்படியென்றால் என்னதான் செய்வது?  அதுதான் புரியவில்லை.  அதனால் இப்போது ஒன்றே ஒன்றுதான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.  

    கவிதைப் புத்தகம் என்றால் 50 பிரதிகள், கதை, கட்டுரை, நாவல் என்றால் 100 பிரதிகள் அடிக்கத் தொடங்கி இருக்கிறேன்.  இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பக்கங்கள் அதிகமாகப் போகாமல் புத்தகம் தயாரிப்பது.  இதனால் தயாரிப்புச் செலவு குறைவதோடு அல்லாமல், படிப்பவர்களும் எளிதாகப் படித்து முடித்து விடலாம். அதனால் பெரும்பாலான என் புத்தகங்கள் எல்லாம் 200 பக்கங்களுக்குள் இருக்கும்.  விலையும் அதிகமாக இருக்காது.  பெரும்பாலும் இந்தப் புத்தகங்களைக் கூட விற்பதற்கு யாரிடமும் கொடுக்காமல் விற்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    நான் 50 புத்தகம் 100 புத்தகம் தயாரிக்கும் போது என் செலவு 50% ஆகி விடும்.  அதாவது 100 பக்கம் தயாரிக்கும் ஒரு புத்தகம் விலையை நான் ரூ100 வைத்தால் எனக்கு ரூ50 செலவாகும் ஒரு புத்தகம் தயாரிக்க. 

    நேர் பக்கம் என்ற பெயரில் நான் அட்டைப் படத்தை 600 அடித்திருந்தேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு.  அதனால் அப்புத்தகம் மட்டும் 370 பிரதிகள் இப்போது அடித்து விட்டேன்.  பல சந்தர்ப்பங்களில் நான் வாசித்த எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது.  அப் புத்தகம் முழுவதும் பல படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதி இருக்கிறேன்.  அவர்களுடைய படைப்புகளைப் பற்றி.  இன்னும் கூட நான் அதிகமாக எழுதியிருக்கிறேன்.  மிகக் குறைவாகத்தான் நான் தேர்ந்தெடுத்துப் புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  அப்புத்தகம் 142 பக்கங்கள் கொண்ட புத்தகம்.

    எந்தந்தப் படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன் என்று ஒரு லிஸ்ட் கொடுக்க விரும்புகிறேன்.

    1.சி சு செல்லப்பா 2. க.நா.சு 3. நகுலன் 4. பிச்சமூர்த்தி 5.அசோகமித்திரன் 6. தி ஜானகிராமன் 7. நீல பத்மநாபன் 8. வைதீஸ்வரன் 9. பிரமிள் 10. வெங்கட் சாமிநாதன் 11. கோபிகிருஷ்ணன் 12. ஸ்டெல்லாபுரூஸ் 13. ஐராவதம் 14. டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜன் 15. ஜெயகாந்தன் 16. பாரதியார்  

    370 பிரதிகள் என் புத்தகத்தை அடித்துவிட்டதால், ராத்திரி எல்லாம் தூக்கம் வராமல் போகிறது.  என் பிறந்த நாள் போது இதுமாதிரியான கலக்கமா எனக்கு?
   

2 கவிதைகள்

                                                           நீல பத்மநாபன்



                        1   நடப்பியல்

  அன்றாட வாழ்வில்
  மூச்சுத்   திணறவைக்கும்
 ஒராயிரம் நடப்பியல் உண்மைகள்
  நித்தம் நித்தம் நிரந்தரமாய்
  குரல்வளையை                        
  நெறித்துக்கொண்டிருக்கையில்
   உலக மகா தத்துவங்கள்
   வரலாற்று ஆவணங்களை
    பார்த்துப்    பரவசப்படச்சொன்னால்……..?!

                            2         வலியும் கிலியும்

                                      வலியை சகித்துக்கொள்ள
                                      நெடுநாள் பயின்று பயின்று
                                      ஒரளவுக்கு பழகமுடிந்தும்
                                       வலிகள் வரப்போகிறதென்ற
                                      ஆரம்ப சைகைகள்
                                      கிடைக்கத் தொடங்கையிலேயே
                                      நெஞ்சில் வந்து உடும்பாய்
                                      கவ்வுக்கொண்டுவிடும்
                                      வரப்போகும் வலியை
                                      நினைந்துள்ள கிலி…….!
                                     அதை அப்புறப்படுத்த
                                      எடுத்துக்கொண்ட
                                      அப்பியாசங்களெல்லாம்
                                     தோல்விக்குமேல் படுதோல்வி
                                     என் செய்வேன்..,.என் செய்வேன்…,
                                      பராபரமே…………..

ஜான்னவி

நவீன விருட்சம் 98வது இதழில் வெளி வந்த கவிதை ஜான்னவியின் காலக் கணக்கு கவிதையைப் படிக்க அளிக்கிறேன். நவீன விருட்சம்
இதழைப் பொறுத்தவரை எதாவது ஒரு கவிதை, கதை, கட்டுரை சிறப்பாக அமைந்து விடுகிறது. யாருக்காவது நவீன விருட்சம் இதழ் வேண்டுமா? முகவரியை அனுப்புங்கள்.

காலக் கணக்கு
ஒரு சொற்ப காலம்
நாம் குழந்தைகளாய் இருந்தோம்
ஒரு சொற்ப காலம்
நாம் இளமையோடிருந்தோம்
ஒரு சொற்ப காலம்
நாம் மகிழ்ச்சியில் நினைத்தோம்.
ஒரு சொற்ப காலம்
நாம் நேசித்த செல்லப் பிராணிகள்
நம்முடனிருந்து பின்
காணாமற் போயின
அல்லது
மடிந்து போயின.
சொற்ப காலமே ஆனது
நானறிந்த
அல்லது
மடிந்து போயின
சொற்ப காலமே ஆனது
நானறிந்த
அல்லது அறிந்திருந்ததாக நினைத்திருந்த
மனிதர்கள் மாறிப் போவதற்கு.
சொற்ப காலமே ஆனது
நானறிந்த
அல்லது அறிந்திருந்ததாக நினைத்திருந்த
மனிதர்கள் மாறிப் போவதற்கு.
ஒரு சொற்ப காலத்தில்
நீ உன் வாழ்க்கையில்
கற்ற சகலத்தையும்
நிகழ்ந்த அனைத்தையும்
அறிந்திருந்த அனைவரையும்
மறந்து போனாய்
ஒரு சொற்ப காலத்தில்
அன்பானவர்கள்
மறைந்து விட்டார்கள்,
அந்நியர்கள் வசிக்கிறார்கள்
சுற்றிலும்.
இன்னுமொரு சொற்ப காலத்தில்
என்னென்ன மாறும்?
எதுவுமே நிகழ
ஒரு சொற்ப காலமே
போதுமானதாக இருக்கிறது.
.

கோபிகிருஷ்ணனைப் பற்றி சில குறிப்புகள..

அழகியசிங்கர்


வாசக சாலை என்ற அமைப்பு கடந்த ஓராண்டாக ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  நேற்று விடாமல் மழை பெய்தாலும் அவர்கள் கூட்டத்தை நிறுத்தவில்லை.  திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில்  கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி கூட்டம் நடத்தி வருகிறார்கள்.  நேற்று (22.11.2015- sunday) கோபிகிருஷ்ணனைப் பற்றி ஒரு கூட்டம நிகழ்த்தினார்கள். கமலி பன்னீர் செல்வம், தமிழ் செல்வன், அபிலாஷ், நான் நால்வரும் பேசினோம்.
திருவான்மியூரை அடைந்த போது மழை பிய்த்து உதறியது.  வாசக சாலை நண்பர்கள் போன் செய்து மழையால் கூட்டம் இல்லை என்று சொல்வார்கள் என்று நினைத்தேன்.  அதுமாதிரி எதுவும் நடக்க வில்லை.  மழையில் கொஞ்சம் நனைந்தபடி பனுவல் சென்றேன்.  எனக்கு ஆச்சரியம் எப்போதும் கூட்டத்திற்கு வருபவர்கள் இந்த மழையிலும் வந்திருந்தார்கள்.  
மழையில் நனைந்தபடி கோபிகிருஷ்ணனைப் பற்றி பேசியது புது அனுபவமாக இருந்தது.  கோபி 2003ல் இறந்து விட்டார்.  கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இதுமாதிரியான கூட்டம் நடைபெறுகிறது.  12 ஆண்டுகள் முன் கோபிகிருஷ்ணனுடன் பேசியதெல்லாம் ஞாபகத்தில் கொண்டு வந்தேன்.
1022 பக்கங்கள் கொண்ட கோபிகிருஷ்ணன் படைப்புகள் என்ற புத்தகத்தை சி மோகன் தொகுத்ததை நற்றிணை என்ற பதிப்பகம் துணிச்சலாகக் கொண்டு வந்துள்ளது.  இந்தப் புத்தகம் விலை ரூ.800.
கோபிகிருஷ்ணன் ஒரு வித்தியாசமான மனிதர்.  உளவியல் பிரச்சினை உடைய எழுத்தாளர்.  மனப்பிறழ்வை இலக்கியமாக மாற்றியவர்.  அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து யாராலும் வாசிக்க முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வாசிக்க வேண்டும்.  அபபடித் தொடர்ந்து வாசித்தால் மனப்பிறழ்வு நிலைக்கு வாசிப்பவர் ஆளாக நேரிடும்.  தமிழில் இதுமாதிரியான எழுத்தை உருவாக்கியவர் கோபிகிருஷ்ணன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.  
ஒருமுறை விருட்சம் கூட்டத்திற்கு கோபிகிருஷ்ணனைப் பேசக் கூப்பிட்டேன்.  ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு என்ன பேச வேண்டுமென்று தயார் செய்து கொண்டு கட்டுரையாக எழுதி வாசித்தார்.  வாசிக்கும்போது நடுக்கமான நடுக்கம் அவருக்கு.  
விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது கோபிகிருஷ்ணனைத்தான் இணை ஆசிரியராக சேர்த்திருந்தேன்.  முதல் இதழ் வந்தது.  இரண்டாவது இதழ் வெளிவருவதற்கு முன் கோபிகிருஷ்ணனிடமிருந்து ஒரு கடிதம்.  தன்னை விருட்சம் இதழிலிருந்து விலக்கிக் கொள்ளும்படி.  1988ல் மாறுபட்ட எழுத்தாளர்களைப் பிணைப்பது பிரச்சினையாக இருந்தது.  கோபிகிருஷ்ணனால் அப்படி ஒரு நிலையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  
நேற்று பேசிய கூட்டத்தில் நான் இன்னும் சிலவற்றை தெளிவாகப் பேசியிருக்க வேண்டும்.  உதாரணமாக ஒவ்வொரு புத்தாண்டின் போது கோபிகிருஷ்ணனிடமிருந்து ஒரு கார்டு வரும் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து.  இதை சொல்ல மறந்து விட்டேன்.கார்டில் புத்தகாண்டு வாழ்த்துகள் என்றுதான் எழுதியிருப்பார். இந்தக் கார்டை அனுப்பும் அவர் மனநிலை எனக்குப் பிடிக்கும்.
கோபி தானாகவே தன்னை அழித்துக் கொண்டு விட்டார்.  தொடர்ச்சியாக விடாமல் அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார்.  எந்த வேலையிலும் நிலைத்து நிற்க மாட்டார்.  அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது.  வேண்டுமென்றே குளிர் பானங்கள் குடிப்பார். 
இப்போது இருந்தால் கோபிக்கு 70 வயது இருந்திருக்கும்.  ஒரு நாள் கோபி போன் செய்தார்.  ‘ஆஸ்பத்ரி விஷயமாக என் செலவுக்குப் பணம் வேண்டும்,’ என்று கேட்டார்.  அவர் அதிகமாகப் பணம் கேட்கப் போகிறார் என்று நினைத்தேன்.  ஆனால் அவர் கேட்டது வெறும் 200 ரூபாய்தான்.  ‘அலுவலகம வந்து வாங்கிக் கொள்ள முடியுமா?’ என்று கேட்டேன்.    ‘நீங்கள்தான் வர வேண்டும்.  என் உடல்நிலை சரியில்லை,ýý என்றார்.  üüநான் சனிக்கிழமை வந்து உங்களைப் பாரக்கிறேன்,’ என்றேன்.  
ஆனால் சனிக்கிழமை லதா ராமகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து, கோபிகிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது.   என்னால் நம்ப முடியவில்லை.  அதே சமயத்தில் வருத்தமாக இருந்தது.
அவர் மரணம் அடைநத சமயத்தில் நான் கோபிகிருஷ்ணனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.  ‘நானும கோபிகிருஷ்ணனும்’ என்பதுதான் தலைப்பு.  நேர் பக்கம் என்ற என் கட்டுரைப் புததகத்தில் இக் கட்டுரை வர உள்ளது. 
திடமான மனநிலையில் நீங்கள் இருந்தால்தான் அவர் புத்தகத்தை வாசிக்க முடியும்.  நான் கொஞ்சம் கொஞ்சமாக அவர் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அவர் புத்தகத்தைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.
கோபிகிருஷ்ணன் படைப்புகள் – பக்கம்: 1022 – விலை: ரூ800 – நற்றிணை பதிப்பகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5 – தொலை பேசி எண் : 9486177208, 9442956725
 

இராமானுஜர்



சைவர்கள் உடம்பில் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். இப்படிப்
பூசிக்கொண்டு யாத்திரை போகிறவர்களைப் பூச்சாண்டி என்று ஜைனர்கள்
வருணித்தார்களாம். குழந்தைகளை மிரட்டுவதற்குப் பூச்சாண்டியிடம் பிடித்துக்
கொடுப்பேன் என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.
நாமம் போடுவதென்றால் ஏமாற்றுவது என்று ஒரு சாரார்
அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். அது சைவ வைணவப் பூசல்களை ஒட்டி எழுந்த
தொடராக இருக்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் பிற போராட்டக்காரர்களும்
நாமம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் புதியதல்ல.
மார்ச் 2015ல் மட்டும் இப்படிப்பட்ட இரண்டு நிகழ்வுகளை நான்
தொலைக்காட்சியில் பார்த்தேன். கோவையில் ஒரு தி.மு.க. பெண் உறுப்பினர்
நெற்றியில் நாமம் வரைந்துகொண்டு மன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம் செய்தார்.
20.1.15 அன்று ஜாதிச் சான்றிதழ் பற்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பந்தலில்
நாமம் வரையப்பட்டிருந்தது. தி.மு.க. பொருளாளர் திரு. ஸ்டாலின் ‘நாமம் –
நாற்றிப் பதினொன்று – போட்டுவிட்டார்கள்’ என்றார். மேலும் மூன்று
விரல்களால் 111 என்று நெற்றியில் வரைந்து காட்டினார்.
இப்போது தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி வைணவப் பெரியார், தத்துவச்
சிந்தனையாளர் இராமானுஜரைப் பற்றிய தொலைக்காட்சித் தொடருக்குத் திரைக்கதை
எழுதுவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கல்கியில் அவர் பேட்டியும்
வெளியாகியுள்ளது. இனிமேல் நாமம் போடுவதைக் கேலி செய்ய வேண்டாம் என்று
தி.மு.க. தலைவர் தனது கட்சிக்காரர்களுக்குத் தெரிவிப்பாரா?
சோழனின் சபையில் ஒரு வங்காளப் பெரியவர் வைணவம் சொல்லும் கருத்துகளை
இராமானுஜருக்கு முன்னேயே கோடிட்டுக் காட்டினார் என்பதைக் கலைஞர் அறிவாரா?

தப்பித்தல்

ராமலக்ஷ்மி

மஞ்சள் கண்கள்.
சின்னக் கொம்புகளில்
எப்போதோ தீட்டப்பட்ட
சிகப்பு வர்ணத்தின் மிச்சங்கள்.
பால்வெள்ளைக் கழுத்துக்கு 
அழகு சேர்த்த
ஆழ்நீலக் கழுத்துப் பட்டையின் 
சங்கிலி
கட்டப்பட விட்டுப் போயிருந்ததை 
உணர்ந்தும்
கொட்டடியில் ஆறஅமரப் பசும்புல்லை
அசைபோட்டுக் கொண்டிருந்த
ஆட்டுக்குத் தெரிந்திருக்க வேண்டும்
எப்படியும் வெட்டப்படப் பிறந்த 
பிறப்பென்பதும்
தப்பித்தல் தரப் போவதில்லை
எதனிலிருந்தும் 
விடுதலையை என்றும்.
***

ஆம் ஆத்மியும் அண்ணா ஹஸாரேவும் நியாயமும்

WRITTEN BY :
பிரபு மயிலாடுதுறை


சில நாட்களுக்கு
முன், ஒரு நண்பரின் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.அவர் ஒரு கட்டிடப் பொறியாளர்.கட்டிட
வரைபடங்களை வரைந்து கொடுப்பவர்.ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் கட்டித் தருபவர்.மயிலாடுதுறைக்காரர்.பழகுவதற்கு
இனிமையானவர்.கடுமையான சொற்களை எவ்விஷயத்துக்கும் பயன்படுத்தாதவர்..சில நாட்கள்  சென்னையில் ஒப்பந்தக் கட்டுமானத் தொழில் புரிந்தார்.இப்போது
முழுமையாக மயிலாடுதுறைக்கு வந்து விட்டார்.அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.
எனக்கு பொதுவாக
ஒரு தயக்கம் உண்டு.ஒருவரை தொழில் நிமித்தமன்றி, நட்பார்ந்த ரீதியில் அவர்கள் பணி புரியும்
இடத்திலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ சந்திப்பது எந்த அளவு சரி என தயங்குவேன்.குறிப்புகள்
கேட்டுப் பெற பணியாளர் காத்திருக்கக் கூடும்.வாடிக்கையாளர்களின் பணிகள் பற்றி-பணி முன்னேற்றம்
பற்றி அவர்களுக்குள் மட்டுமே பேச வேண்டிய விஷயங்கள் இருக்கும்.பணம் கொடுக்கல் வாங்கல்
இருக்கும்.புதிய வாடிக்கையாளர் சந்திக்க வருவர்.அவர்கள் ஒரு இடத்தில் நிறைய பேர் இருப்பத்தைக்
கண்டு திகைப்பர்.எனவே நண்பர்கள் பணி புரியும் அல்லது தொழில் புரியும் இடத்திற்கு சென்று
சந்திப்பதை தவிர்ப்பேன்.ஆனால் எல்லா நாட்களும் ஒரே நாள் போல இருப்பதில்லை.அவர்கள் பணிச்சுமையின்றி
இருக்கக் கூடிய நாட்களும் சாத்தியமே.எனவே அங்கு சென்று சூழலை அவதானித்து அதற்கு தகுந்தாற்போல்
நடந்து கொள்வேன்.
எனது நண்பரின்
அருகில் அமர்ந்து அவரின் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தேன்.திரையின் வலது கோடியின்
மேல் பக்கத்தில் மேல் நோக்கிய அம்புக்குறி வடதிசையை சுட்டியது.அவர் வரைந்த வரைபடத்தில்
கீழ் நோக்கிய அம்புக்குறி வடதிசையை சுட்டியது.வடதிசையை வரைதாளில் மேல் நோக்கியவாறு
அமைத்தே வரைபடம் வரைய வேண்டும் அல்லவா  ஏன்
இப்படி உள்ளது என நண்பரிடம் வினவினேன்.நீங்கள் சொல்வது சரிதான்;கணிணி வடதிசையை மாற்றமில்லாமல்
காட்டும்.ஆனால்  சாலையை வைத்தே இடங்களை அடையாளப்படுத்திக்
கொள்கிறார்கள்.எனவே எளிமையான புரிதலுக்காக இவ்வாறு செய்வதுண்டு எனக் கூறினார்.
நண்பர் வரைந்த
வரைபடத்தில் சில சர்வே எண்களும் அதன் உட்பிரிவு எண்களும் இருந்தன.நெற்றியில் நீறணிந்த
வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்த ஒரு கிராமத்து மனிதர் என்னருகே அமர்ந்திருந்தார்.அவரிடம்
நண்பர் ஒரு ஏ-4 அளவில் அச்சான வரைபடத்தைக் கொடுத்தார்.நீங்கள் உத்தேசித்தவாறு இருக்கிறதா
என பார்த்துக் கொள்ளுங்கள்; திருத்தம் ஏதும் இருந்தால் கூறுங்கள் என்றார்.சில திருத்தங்கள்
கூறினார்.திருத்தப்பட்ட வரைபடம் வரைபடத்தாளில் ஏ-1 அளவில் அச்சேற்றப்பட்டு அம்மோனியா
பிரிண்ட் போடப்பட்டது.கிராம ஊராட்சி ஒன்றின் ஒப்புதல் ஒன்றுக்காக அனுப்பப்பட உள்ளது
என என்னிடம் கூறினார்.ஒப்பீட்டளவில்,ஊராட்சியின் ஒப்புதல் என்பது எளிமையானதுதானே என
கேட்டேன்.நண்பர் இந்த கேஸ் வித்தியாசமானது எனக் கூறினார்.கிராமத்து மனிதர்  முழு விபரத்தையும் சொன்னார். 
அவரது பெயர் இராமமூர்த்தி.அவர்
மயிலாடுதுறையில் வசிப்பவர்.அவரது சொந்த ஊர் பாளையமங்கலம். மயிலாடுதுறை பாளையமங்கலம்
இடையேயான தூரம் ஒன்பது கி.மீ.சில ஆண்டுகளுக்கு முன்னால் அவரது மனையை தமிழகத்தின் பெரிய
கட்சிகளில் ஒன்றின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் ஆக்கிரமித்தார்.ஆக்கிரமித்த முறை நூதனமானது.இராமமூர்த்தியின்
மனைக்கும் அரசியல்வாதியின் மனைக்கும் இடையே ஒரு புறம்போக்கு நிலம் இருந்துள்ளது.அதனை
மெல்ல ஆக்கிரமித்த அரசியல்வாதி இராமமூர்த்தியின் இடமே புறம்போக்கு என்ற பொய் பிரச்சாரம்
மேற்கொண்டு சிலரை நம்பவைத்தார்.கிராம நிர்வாக அலுவலர் அரசியல்வாதிக்கு உடந்தை ஆனார்.இராமமூர்த்தியின்
மனையில் இருந்த மரங்கள் புறம்போக்கு மரங்கள் என வெட்டப்பட்டன.காவல் நிலையத்திற்கு சென்று
புகார் அளித்துள்ளார் இராமமூர்த்தி.காவல்துறை அதனை ஏற்கவில்லை.நீதிமன்றத்தில் சிவில்
வழக்காக பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி விட்டனர்.மயிலாடுதுறை நீதி மன்றத்தில்
வழக்கு நடந்தது.தீர்ப்பு இராமமூர்த்திக்கு சாதகமாக வந்தது .நாகப்பட்டினம் நீதிமன்றத்தில்
மேல் முறையீடு செய்தார் அரசியல் புள்ளி.அதிலும் இராமமூர்த்தியின் தரப்பே வென்றது.
நில அளவை பதிவேடுகளில்
ஏமாற்று செய்து இராமமூர்த்தியின் இடத்தின் ஒரு பகுதியை தனது இடம் எனக் கூறி வேறு ஒருவருக்கு
விற்பனை செய்ய கிரய உடன்படிக்கை செய்தார் அரசியல்வாதி.அது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டு
நீதிமன்ற உத்தரவுப்படி அதனை ஒப்படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் அரசியல் பிரமுகர்.
நீதிமன்ற வழக்குகளில்
தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததால் இராமமூர்த்தி மீது,கிராமத்தில் வசித்து வந்த ஒருவரை
பணம் கொடுத்து தூண்டி விட்டு சாதிப்பெயர் சொல்லி திட்டினார் என புகார் அளிக்கச் செய்து
தீண்டாமைச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய வைத்தார் அரசியல்வாதி.தன் மீது தொடுக்கப்பட்டது
பொய் வழக்கு என நீதிமன்றத்தில் நிரூபித்து வழக்கிலிருந்து வெளியே வந்தார் இராமமூர்த்தி.
நீதிமன்றத்தின்
அனைத்து வழக்குகளிலும் தோல்வி கண்டதால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நில ஆர்ஜிதம்
மூலம் அதனை அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப் பார்த்தார் அரசியல்வாதி.கிராம நிர்வாக அலுவலர்,வட்டாட்சியர்,கோட்டாட்சியர்,சார்
ஆட்சியர் மற்றும் ஆட்சியர் ஆகியோரிடம் மீண்டும் மீண்டும் நிலைமையை விளக்கி மனு அளித்து
தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தனது மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன
என கேள்வி கேட்டு அரசை இயங்கச் செய்து வெற்றிகரமாக அதிகாரிகளுக்கு உண்மை நிலையை புரியவைத்தார்
இராமமூர்த்தி.இவரது முழுக்கதையையும் கேட்ட மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியரிடமும் சார்
ஆட்சியரிடமும் இராமமூர்த்தியின் முன்னிலையிலேயே தொலைபேசியில் பேசி அரசியல் குறுக்கீடுகளை
புறந்தள்ளி நியாயப்படி நடக்க  ஆணையிட்டுள்ளார்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம் தனக்கு பெருமளவில்
உதவி புரிந்ததாக கூறுகிறார் இராமமூர்த்தி.அரசின் நிர்வாக இயங்குமுறையையும் அதிகாரப்
படிநிலைகளையும் அதிகாரிகளின் மனோபாவங்களையும் புரிந்தவராகி ஒரு இணை அரசாங்கமாக உருவெடுத்துள்ளார்
இராமமூர்த்தி.நீதித்துறை,காவல்துறை.வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்களின்
படிக்கட்டுகளில் பல ஆண்டுகள் ஏறி இறங்கியிருக்கிறார்.மெல்லிய குரலில் பேசுகிறார்.யார்
மீதும் கசப்போ வெறுப்போ அற்றவராக இருக்கிறார் என்பதை கவனித்த போது வியப்பாக இருந்தது.அரசாங்கத்தின்
மூடப்படும் கதவுகளைக் கண்டு தனக்கு அச்சமில்லை தகவல் பெறும் உரிமைச் சட்டம் அரசின்
மூடப்படும் கதவைத் திறக்கும் சாவியை நம் கைகளில் கொண்டு வந்து சேர்த்துள்ளது என்கிறார்.
சில மாதங்களுக்கு
முன் ரலேகான் சித்தியில் திரு.அண்ணா ஹஸாரே அவர்களை சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன் என
அவரிடம் கூறினேன்.தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவாக அவரே காரணமாக இருந்தார் என்பதால்
தான் நிகழ்த்திய சமரில் அண்ணாஜிக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது என நெகிழ்வுடன்
குறிப்பிட்டார்.
அரசு இயந்திரம்
பெரியதுதான் ஆனால் அது ஆம் ஆத்மிகளுக்கானதே.ஓர் எளிய மனிதனின் வெற்றி தார்மீக ரீதியில்
மிகப் பெரியதே.சாமானியர்களின் தார்மீக பலத்தின் உருவமாக அண்ணா ஹஸாரே இருக்கிறார் என
நினைத்துக் கொண்டேன்.இவ்விஷயம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என கேட்டேன்.பன்னிரண்டு
ஆண்டுகள் என்றார்.ஒரு மகாமக காலம்.பாண்டவர்களின் வனவாச காலம்.
இப்போது போடப்படும்
கட்டிட பிளான் எதற்கானது என கேட்டேன்.ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில் எனது
மகனுக்காக கட்ட உத்தேசித்துள்ள இல்லத்தின் வரைபடம் என்றார்.அது கட்டப்படும் போது ஒரு
வீடாக மட்டும் இருக்காது;ஓர் எளிய மனிதர் நியாயத்தினால் மட்டுமே அடைந்த வெற்றியின்
சின்னமாகவும் இருக்கும் என எண்ணிக் கொண்டேன்.

புகைப்படம் சொல்லும் கதை 1







ந பிச்சமூர்த்தி அவர்களின் நூறறாண்டு விழா 15.08.2000 ஆம் ஆண்டில் சிறப்பாக திருவல்லிக்கேணியில் பாரதி வாழ்ந்த இல்லறத்தில் கொண்டாடப்பட்டது.  அன்று பிச்சமூர்த்தியின் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், ஒரு கவிதைத் தொகுதியும் வெளியிடப்பட்டன.  விழாவின் தொடர்பாகக் கட்டுரைகளும் படிக்கப்பட்டன.  

அப்போது எடுத்தப் புகைப்படத்தை இங்கு அளிக்கிறேன்.

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை   

மாரியம்மன் 3

தேசமாளும் முத்தம்மா


    முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டில் உழவர் பெரு மக்களால் வணங்கப்படும் தெய்வம்.  சில சிற்றூர்களில் இவருக்குப் பெரிய கோவிலும், தேரும் திருவிழாவும் உண்டு.  இவள் பிறப்பு முத்தாரம்மன வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது.  ஏழ் கடலுக்கும், அப்பாலுள்ள, மணி நாகப்புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது.  பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர்.  அவர்கள் பிரம்ம ராக்குசக்தி, சின்ன முத்தார், பெரிய முத்தார் என்பவர்கள்.  அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தைகள் பெற்றார்கள்.  அனைவரையும் அழைத்துக் கொண்டுபோய் கயிலையில் சிவபெருமானை வணங்கினர்.  நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் வியாதிகளை வரமாகக் கேட்டார்கள்.  பிரம்ம ராக்கு – சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற வியாதிகளையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார்.  இவ்வாறு கொடிய நோய்களை உண்டாக்கும் சக்தி பெற்ற மூன்று சகோதரிகளும், தமிழ் நாட்டிலே வந்து குடியேறி கொடியவர்களைத் தண்டிக்க பரமசிவனுடைய வரங்களைப் பயன்படுத்தி வருகிறார்களாம்.

    இப்பொழுது பிரம்ம ராக்கு சக்திக்கு சிற்சில ஊர்களிலேயே கோயில்கள் உள்ளன.  முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் கோயில் கொண்டிருக்கிறாள்.  இவள் தீயவர்களைக் கொடு நோயால் தண்டிப்பாள்.  நல்லவர்களை வாழ்த்தி வரம் கொடுப்பாள்.

    பிற்காலத்தில் கன்னடியர், ஆந்திரர் படையெடுப்புகளின் போது தமிழ்நாடு புகுந்த மாரியம்மன் சிற்சில ஊர்களில் இவளோடு ஐக்கியமாகி விட்டாள்.  இவள் பார்வையால் உடலில் முத்துக்கள் ஆயிரக் கணக்கில் தோன்றுவதால் இவளுக்கு ஆயிரத்தாள் என்றும், மாரியோடு கலந்து விட்டதால் முத்து மாரியென்றும், தேசம் முழுவதும் பரவியிருப்பதால் தேச முத்து மாரியென்றும் பல பெயர்கள் வழங்குகின்றன. 

    நடுராத்திரி உற்சவத்தின் போது இவள் சிம்ம வாகனத்தில் ஏறி வருவாள்.  பெண்கள், இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள்.

    கீழ் வரும் பாட்டு சேலம மாவட்டத்தில் வழங்குகிறது.

            நாலு காலச் சட்டம்
            நடு நிறுத்தி
            நட்சத்திரம் போல
            ஒரு தேர் எழுப்பி
            தேருக்கு ஒடையாளி
            தேசமாளும் முத்தம்மா
            தேரேறி வருவதைப் பாருங்கடி
            ஓலைப் பொட்டி
            தலை மேலே
            ஒம்பது மக்களும்
            கக்கத்திலே
            மக்களைப் பெத்த மாரியம்மன்
            மவுந்து வருவதைப் பாருங்கடி

சேகரித்தவர் : வாழப்பாடி சந்திரன்               இடம் : வாழப்பாடி