புத்தக விமர்சனம் 13

அழகியசிங்கர்
சங்கவை என்ற பெயரில் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய 927 பக்கங்கள் கொண்ட மெகா நாவலை எல்லோரும் படிக்க வேண்டும்.  ஒரு பெண் எழுத்தாளர் இத்தனைப் பக்கங்கள் ஒரு நாவலை எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  இன்றைய தமிழ் சூழ்நிலை மெகா நாவல் சூழ்நிலை.  ஆனால் யார் இத்தனைப் பக்கங்களைப் படிப்பது என்ற கவலையும் பலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. எழுதுபவர்களுக்கு அதுமாதிரி கவலை இருப்பதாக தெரியவில்லை. இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  சமீத்தில் பெண் எழுத்தாளர்கள் யாரும் அவ்வளவாக நாவல் எழுதுவதாக தோன்றவில்லை.  கவிதைகள் அதிகமாக எழுதி புத்தகமாக வருகிறது.  அல்லது சிறுகதைத் தொகுதி வெளிவருகிறது.  மெகா நாவல் மாதிரி யாரும் முயற்சி செய்வதில்லை. 
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தில் நான் 30 பக்கங்கள் படிப்பேன் என்று வைத்துக்கொண்டால்  900 பக்கங்கள் படிக்க 30 நாட்கள் ஆகும்.  இதில் என்ன பிரச்சினை என்றால் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது கதா பாத்திரங்களை  ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
சங்கவை நாவலைப் படிக்கும்போது அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.  படித்து முடித்தப்பின் நான் திரும்பவும் எதாவது ஒரு பக்கத்திலிருந்து அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குவேன்.  இப்படி பலமுறை படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதவேண்டுமென்ற எண்ணம்தான் முக்கிய காரணம்.  இந்த நாவல் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த விரசமுமில்லாமல் ஜெயசாந்தி கொண்டு போகிறார். அலுக்காத சரளமான நடையை கையாள்கிறார். இன்றைய நவீன நாவலில்ன தன்மையில் நாவல் முழுவதும் எதோ ஒரு இடத்தில் சிறுகதையைக் கொண்டு எழுதுவார்கள், ஒரு இடத்தில் கட்டுரைத் தன்மையைக் கொண்டு வருவார்கள், சிலர் கவிதைவரிகளை நாவலில் அங்கங்கே தெளிப்பார்கள்.  ஜெயசாந்தி கதைத் தன்மையையும். கவிதைத் தன்மையையும் நாவலில் கொண்டு வருகிறார்.
சமீபத்தில் நான் படிக்கும் புத்தகங்களை விமர்சனமாக எழுத முயற்சி செய்கிறேன்.  இப்படி எழுதுவதால் எந்த அளவிற்கு இதில் வெற்றி பெறுகிறேன் என்பது தெரியவில்லை.          
ஜெயசாந்தியின் இந்த நாவல் மூன்று கல்லூரி மாணவிகளை  சுற்றி வரும் நாவல்.  ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்து நட்புடன் பழகும் மூன்று பெண்களைப் பற்றிய நாவல் இது.   இன்றைய காலத்தில் இப்படி விகற்பமில்லாமல் நட்புடன் பழகக் கூடியவர்கள் இருப்பார்களா என்பது தெரியவில்லை.  இந்த மூன்று பேர்களில் ஒருவர் பெயர் சங்கவை, இன்னொருவர் பெயர் ஈஸ்வரி, மூன்றாமவள் பெயர் தமிழ்ச்செல்வி.  இந்த மூன்று பேர்களைப் பற்றியும் அவர்களைச் சுற்றியுள்ள நட்பு வட்டம், உறவினர் வட்டம் குறித்துதான் இந்த மெகா நாவல்.  
ஒரு விதத்தில் இந்த நாவல் ஈடெறாத ஆசையைக் குறிவைத்து எழுதப்படுகிறதா என்று தோன்றுகிறது.     இந்த மூன்று பெண்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை.  அதில் அவர்கள் ஆழ்ந்து அதைப்  பற்றிய கவலைகளுக்கும், கலக்கத்திற்கும் ஆளாகிறார்கள்.
எல்லோரும் சங்கவி என்ற பெண்ணிடம் ரொம்ப அன்பு பாராட்டுகிறார்கள். யாரைச் சுற்றி இந்தக் கதை நகர்கிறது என்று பார்த்தால், சங்கவி என்ற பெண்ணைச் சுற்றித்தான் நடக்கிறதா என்றால் இல்லை.  இது எல்லாவற்றைப் பற்றியும் சொல்கிறது.
ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சினையைப் பற்றி பேசுகிறது. ஆனால் மூன்று பேர்களாலும் அவர்கள் எதிர்த்து நடக்கும் சம்பவங்களை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. எதைக் குறித்தும் எதுவும் செய்ய முடியவில்லை.  ஈஸ்வரியால் அவள் அக்கா கலைவாணியைக் காப்பாற்ற முடியவில்லை.    இந் நாவலில் தினமும் கேள்விப்படும் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா அக்கிரமங்களும் வெளிப்படுகின்றன.  கல்வி நிலையங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை பாலியல் பிரச்சினை.  இப்படி பாலியல் பிரச்சினையில் உள்ளாகும் பெண்கள் அதை எதிர்த்து வெற்றி பெற முடியாத அவல நிலையை இந் நாவல் வெளிப்படுத்துகிறது.  பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு தமிழ் பேராசிரியை தன் உள்ளக் குமறல்களை டைரியில் எழுதி  வைக்கிறாள்.   ஈஸ்வரியின் சகோதரி கலைவாணியோ தான் படிக்கும் படிப்புக்கு டாக்டர் பட்டம் வாங்க தனக்கு மேலே உள்ள பேராசிரியரின் பாலியல தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள்.  தன் துன்பத்தை ஏன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.   
அதேபோல் மணல் கொள்ளையைத் தடுக்க ஒரு கிராமம் நினைக்கிறது. ஆற்று மணலிலிருந்து இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் எடுத்துப் போகும் மணலை தடுக்க கண் விழித்து காவல் காக்கிறார்கள் மூன்று பேர்கள்.   அவர்களுக்குத் தெரியாமல்  அதில் கலந்துகொண்ட பூத்துரை தமிழ்ச்செல்வியின் கிராமத்தில் உள்ள ராஜகனியின் கணவன் மணல் லாரியில் அடிப்பட்டு சாகிறான்.  மணல் கொள்ளையைத் தடுக்க ஒரு உயிரைப் பலிகொடுக்கும் இயலாமையை இந்த நாவல் விவரித்துச் செல்கிறது.  
எபி என்கிற கிருத்துவப் பையனைக் காதலிக்கிறாள் தமிழ்ச்செல்வி. ஒவ்வொரு நேரத்திலும் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள். எபியின் பெற்றோர்கள் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறார்கள்.  அந்தப் பெண் முழுக்க ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டு கர்த்தருக்குள்ளே வரவேண்டும் என்கிறார்கள்.  தமிழ்ச்செல்வி ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த பெண்.  இந்த மதமாற்றத்திற்கு அவள் தயங்குகிறாள்.  ஏன் தயங்குகிறாள் என்பது தெரியவில்லை.  தனக்குப் பிடித்தப் பையனுடன் வாழ ஏன் விரும்பவில்லை.  மதம் ஏன் இதற்கு தடையாக உள்ளது என்பது புரியவில்லை.   அவள் மீது விருப்பப் பட்டாலும் எபியும் வேற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் நிர்பபந்தத்திற்கு ஆளாகிறான்.  எபியின் இந்த முடிவை சங்கவை ஏற்றுக்கொள்ளவில்லை.  சங்கவி என்ற கதாபாத்திரத்தை தனக்குச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்பால் அவதிப் படுபவள் போல் இந்த நாவலில் ஜெயசாந்தி வெளிப்படுத்துவது போல் காட்டுகிறார்.
இந்த எதிர்பாராத திருப்பம் நாவலை முடிவு நிலைக்கு கொண்டு போகிறது. இந்த நாவலின் புரியாத புதிர் சங்கவி.  வெள்ளப் பெருக்கில் ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போகும்போது தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறாள்.  அவளை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
நிமலோ என்ற பிரஞ்சுக்காரர் உலகம் முழுவதும் ஏதோ ஆன்மிகத் தேடலுக்காக சுற்றுபவர்.  சங்கவி நினைவிலேயே தன்னைக் கரைத்துக் கொண்டவர்.  உண்மையில் சங்கவி மீது காதல் வயப்பட்ட அவர் அவளைத் திருமணம் செய்துகொள்ளக் கூட நினைக்கிறார்.  ஆனால் அவள் அதை மறுத்து விடுகிறாள்.  வழக்கம்போல் நிராசை. திருநெல்வேலிக்கு அவர் திரும்பவும் வரும்போது, அவர் சங்கவி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விபரத்தை அவளுடைய சகோதரன் ஆனந்த் மூலம் அறிந்து பெரிதும் கலக்கம் அடைகிறார். 
இறுதியில் காவி உடையில் தலையை முக்காடிட்டு சங்கவி புத்தத் துறவியாக கியோட்டாவில் தெரிகிறாள் என்பதாக கதை எதிர் பாராமல் கதை முடிகிறது.
இப்படிப்பட்ட முடிவுடன் ஏன் இந்த நாவலை ஜெயசாந்தி முடித்தார் என்று எனக்குப் புரியவில்லை. 
இந்த நாவல் முழுவதும் ஆண் பெண் உறவு நிலையை சுமுகமாக தீர்க்க இந் நாவலாசிரியை விரும்பவில்லை.
27.12.2015 அன்று கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் விருதை ஜெயசாந்தி அவர்கள் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.  அந்த வைபவத்திற்கு நானும் சென்றேன்.  கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் இந்த நாவலை சிலாகித்துப் பேசும்போது ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொன்னார்.  இந்த நாவலை எழுத ஜெயசாந்திக்கு துணிச்சல் வேண்டுமென்று.  கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் போராடும் துணிச்சல் தனக்கு இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.  இன்னொன்றும் சொன்னார் கல்லுரி மாணவிகள் ஒவ்வொருவரும் இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று.  
நானும் ஒப்புக்கொள்கிறேன்.
சங்கவை – நாவல் – இ ஜோ ஜெயசாந்தி – 927 பக்கங்கள் – விலை ரு. 820 – வெளியீடு : விருட்சம், சீத்தாலட்சுமி அடுக்ககம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33 – தெ.பே : 9444113205

அறிவிப்பு

   
 அழகியசிங்கர்
 
 

 
 திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா
 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வெளியாகி இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்த நாவல்களில் விருட்சம் வெளியீடாக வந்த எழுத்தாளர் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய üசங்கவைý என்ற நாவல் 2015ம் ஆண்ட திருமதி ரங்கம்மாள பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிப்பு விழா  27.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கஸ்தூரி சீனிவாசனம் அறநிலையம், கோயமுத்தூரில் நடைபெற உள்ளது.

 அன்று காலை நாவலாசிரியையும், நாவலைப் பிரசுரம் செய்த பதிப்பாளரையும் கௌரவம் செய்கிறார்கள். 

 அந்த விழாவிற்கு பதிப்பாளர் என்ற பொறுப்பில் நானும் செல்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 1983ஆம் ஆண்டிலிருந்து திருமதி ரங்கம்மாள் பரிசு நாவல்களுக்குப் பரிசு கொடுத்து வருகிறார்கள்.  1985ல் பாலங்கள் என்ற சிவசங்கரி நாவலுக்குப் பிறகு, இ ஜோ ஜெயசாந்திக்கு 2015ல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.  நாவலுக்குப் பரிசாக 17 முறைகள் கொடுக்கப்பட்ட விருதில், இரண்டே இரண்டு பெண் எழுத்தாளர்கள்தான் இதுவரை பரிசு பெற்றுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சார்வாகன் இறந்துதான் விட்டார்…………

அழகியசிங்கர்



நான் பார்க்க வேண்டுமென்று நினைத்த எழுத்தாளர்களில் ஒருவர் சார்வாகன்.  இன்னொருவர் ராஜம் கிருஷ்ணன்.  இவர்கள் உயிரோடு இருக்கும்போது சந்தித்துப் பேச வேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.  முதல் காரணம்.  நான் பார்க்க நினைத்த எழுத்தாளர்களை யாராவது ஒருவராவது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தி இருக்க வேண்டும்.  புத்தகம் மூலம் இந்த எழுத்தாளர்களை எனக்குத் தெரிந்திருந்தாலும் முழுமையாக இவர்கள் எழுதிய புத்தகங்களை நான் படித்தவனில்லை. ஏன்எனில் புத்தகம் படிப்பது எனக்குப் போராட்டமாக இருக்கிறது.  நான் விரும்பும் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது பெரிய போருக்குத் தயாராவது போல் இருப்பேன்.  அதே சமயத்தில் புத்தகம் படிப்பது போல் அற்புதமான விஷயம் வேறு எதுவுமில்லை என்றும் நினைப்பவன்.
ராஜம்கிருஷ்ணன் புத்தகங்களை நான் ஆரம்ப காலத்திலேயே படித்திருக்கிறேன்.  க்ரியா வெளியீட்டின் மூலம் வெளிவந்த சார்வாகனின் சிறுகதைத் தொகுதியான üஎதுக்குச் சொல்றேன்னா,ý என்ற புத்தகத்தை அது வந்த சமயத்திலேயே வாங்கி வைத்திருக்கிறேன்.  ஆனால் வழக்கம்போல் சில கதைகளைப் படித்துவிட்டு வைத்துவிட்டேன்.  ஒரு புத்தகத்தை எடுத்து நான் பிறகு படிக்கலாம் என்று வைத்து விட்டால், அதைத் திரும்பவும் கண்டு பிடித்து படிப்பது எனக்கு சிரமமாகிவிடும்.  இந்த விதத்தில் சார்வாகன் எழுத்தை முழுதும் படிப்பதை விட்டுவிட்டேன். இதே போல் பல எழுத்தாளர்களை நான் படிப்பதை விட்டிருக்கிறேன். ஆனால் என் மனதில் சார்வாகன் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. 
அதன்பின் 40 சிறுகதைகளும் 3 குறுநாவல்களும் கொண்ட 500 பக்கங்கள் கொண்ட சார்வாகன் கதைகள் என்ற புத்தகம் நற்றிணை பதிப்பக வெளியீடாகக் கிடைத்தப் புத்தகமும் எனக்குக் கிடைத்தது.   எப்போது முழுவதும் படிக்க ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  அந்தச் சமயத்தில் நான் அழகிரிசாமியின் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சமயமும் சார்வாகன் கதைகள் புத்தகம் பார்ப்பதற்குக் கிடைக்கும்போது, ஆரம்பிக்கவேண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து வைத்துவிடுவேன்.
ஆனால் சமீபத்தில் வந்த வெள்ளம் என் அறையைச் சூறை ஆடியது.  அதில் சார்வாகன் கதைகளும் மாட்டிக்கொண்டது.  தண்ணீரில் நனைந்து நன்றாக ஊறிப் போய்விட்டது.  ஆனால் அந்தப் புத்தகத்தை நான் தூக்கிப் போடவில்லை.  நனைந்து விட்டது என்று கொஞ்சம் வருத்தப்பட்டேன்.  ஆனால் இப்போது அவர் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
சமீபத்தில் நான் வைதீஸ்வரன் என்ற கவிஞரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.  அவர் சார்வாகன் நண்பர்.  üஒரு சோகமான விஷயம்,ý என்றார்.  ‘என்ன?’ என்று கேட்டேன்.  “சார்வாகன் உடம்பு முடியாமல் இருக்கிறார்.  தன் உடம்புக்கு மருத்துவரை அணுகாமல் மருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்,” என்றார். 
சார்வாகனைப் போய் பார்க்க வேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் உடல்நிலை சரியில்லாத ஒருவரை போய்ப் பார்ப்பதை நான் சங்கடமாக நினைப்பவன்.  மேலும் சார்வாகனுக்கு என்னை யார் என்று தெரியாது.  யோசனையில் இருந்தேன்.  ஆனால் 21ஆம் தேதி எனக்கு தளம் ஆசிரியர் பாரவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.  “மோசமான நிலையில் சார்வாகன் இருக்கிறார்.  வந்து பார்க்கவும்,” என்று.  அச் செய்தியைப் பார்த்தவுடன், அசோகமித்திரனுக்கு போன் செய்தேன்.  “சார்வாகன் மோசமான நிலையில் இருக்கிறாராம்.  நாளை போய்ப் பார்க்கலாமா?” என்று கேட்டேன்.  அவரும் போய்ப் பார்க்கலாம் என்றார்.
ஆனால் சிறிது நேரத்தில் பாரவியிடமிருந்து இன்னொரு செய்தி வந்தது.  சார்வாகன் இறந்து விட்டார் என்று.  எனக்கு வருத்தமாகப் போய்விட்டது.  நான் பார்த்துப் பேச வேண்டுமென்று நினைத்த எழுத்தாளர் ஒருவர், நான் பார்க்காமலேயே இறந்து விட்டாரே என்று.
சார்வாகன் விஷயத்தில் ஏற்கனவே 1988ஆம் ஆண்டு அவர் இறந்து விட்டதாக ஒரு சிறுபத்திரிகையில் செய்தியும், அவரைப் பற்றி வல்லிக்கண்ணன் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார்.  சாலிவாஹனன் என்ற எழுத்தாளர் இறந்ததை தவறாக அப்படி சொல்லிவிட்டார்கள்.  பின் அந்தச் சிறு பத்திரிகை தன் தவறை உணர்ந்து மறுப்பு எழுதியிருந்தது.  இப்போதும் அதுமாதிரி இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.  ஆனால் இப்போது இந்தச் செயதியைச் சொன்னது பாரவி.  அவர் சொல்வதில் உண்மை தப்பாது.  சார்வாகன் இறந்துதான் விட்டார்.
அடுத்தநாள் காலையில் நானும் அசோகமித்திரனும் சார்வாகன் வீட்டிற்குச் சென்றோம்.  குளிர்பதனப் பெட்டியில் சலனமில்லாமல் சார்வாகன் படுத்து இருந்தார்.  அவர் உயிரோடு இருந்தால் என்னுடன் என்ன பேசியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.   
அவருடைய புத்தகத்தைப் படிக்கும்போது இயல்பாகவே அவருக்கு நகைச் சுவை உணர்வு எழுத வருகிறது என்று தோன்றியது.
சார்வாகன் கதைகள் என்ற புத்தகத்தில் உள்ள ‘பிரியா விடை’ என்ற கதையில், ஒரு இடத்தில்  கீழ்க்கண்டவாறு அவர் எழுதியிருக்கிறார்.:
“யார் நீங்கள், தெரியவில்லையே?” என்றேன்.
“உங்களை அழைத்துவர மேலேயிருந்து அனுப்பியிருககிறாரகள்.  வாருங்கள் போகலாம்,” என்றார் சட்டைக்கார மனுஷர்.
“நீங்கள்…எம தூதர்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.  எமதூதர்கள் என்றால் முறுக்கின மீசையுடன் கிங் காங் உடம்போடு கையில் பாசக் கயிறுடன் இருப்பார்கள் என்பதுதான் என் கற்பனை.  அறுபது வயதுக் குடியானவன் போலவும், ‘லட்சிய எழுத்தாளர்’ போலவும் இருப்பார்கள் என்று நான் கனவிலும் கருதியதில்லை…
.
சார்வாகனின் கதையில் இப்படி நகைச்சுவையுடன் கூடிய சித்திரிப்பு பெரிதும் வெளிப்படுகிறது.  பிரியா விடை என்ற இக் கதையை 60ல் எழுதிய சார்வாகன் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் செய்ய அனுப்பவில்லை.  
மேலும் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாத எழுத்தாளர் அவர். 500 பக்கங்கள் கொண்ட சார்வாகன் கதைகள் என்ற புத்தகம் அவர் எழுதி சாதித்ததைப் பறை சாற்றுகிறது.  
ஹரி ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் அவர் கவிதைகளும் எழுதி உள்ளார்.
அவருடைய கவிதையில் உள்ள சில கவிதை வரிகள் :
மழை விட்ட வானம்
காலடியில் சேறு
குளம்படிக் குழி
தண்ணீர் தளும்புகிறது
சந்திரத் துண்டுகள்
சந்திரத்
துண்டுகள்
தூள்கள் காலடியில்
வானத்தில்
மதி
அவர் கதைகள் புத்தகமாக வந்ததுபோல் கவிதைகளும் தொகுத்து புத்தகமாக வரவேண்டும்.  வரும் என்று நம்புகிறேன்.
சார்வாகன் பற்றி நான் இன்னும் அறிந்து கொண்டது.  அவர் எழுத்தாளர் மட்டுமல்ல.  அவர் ஒரு மருத்துவர்.  குறிப்பாக தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவை சிகிச்சைத் துறையில் பணிபுரிந்து உலக அளவில் பேர் பெற்றவர்.  தொழுநோய் மருத்துவத் துறையில் இவர் செய்த அளப்பரிய சேவையை மேன்மைப் படுத்தும் வகையில் 1984இல பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.  

எழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது……

சார்வாகன்
திங்கட்கிழமை (21-12-2015) காலமான சார்வாகன் என்றும் அறியப்பட்ட ஹரி ஸ்ரீநிவாசன் தொழில்முறையில் அறுவை சிகிச்சை நிபுணர். நீண்ட காலம் செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனியில் பணி புரிந்தவர். பின்னர் ஆக்ரா சென்று பணியாற்றினார். அதன் பிறகு சென்னையில் மிகச்சின்ன அளவில் வீட்டிலேயே மருத்துவ ஆலோசனைகள் தந்தவர். எண்பத்தேழு வயதில் காலமாவதற்குக் காரணம் தேட வேண்டியதில்லை. தொழு நோய் கண்டவர்கள் விரல்களைச் செயலாக்கம் தரும் அறுவை சிகிச்சையில் அவர் உலகப் புகழ் பெற்றவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் பணியைக் குறித்து ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டது. அவர் ஆர்.கே.நாராயண் குடும்பத்துக்கு உறவினர்.
அவருடைய தொழில்முறைக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவர் விரும்பி எழுதத் தேர்ந்தெடுத்த மொழி தமிழ். சி.சு.செல்லப்பா வெளியிட்ட’எழுத்து’ மாத இதழிலும் ’புதுக்குரல்’ நூலிலும் அவருடைய கவிதைகள் உள்ளன. அவருடைய இலக்கியத் தனித்தன்மையைக் கண்டு கொண்ட ‘நகுலன்’ (டி.கே. துரைசுவாமி) அவருடைய சில கவிதைகளையும் இரு சிறுகதைகளையும் அவர்  தொகுத்து வெளியிட்ட ‘குருக்ஷேத்திரம்’ நூலில் இடம் பெறச் செய்தார். அதில் சார்வாகன் எழுதிய ஒரு கதை ஒரு சிற்றூரில் நடக்கும் கொடியேற்றத்தைப் பற்றியது. நகைச்சுவையில் அது வகைப்படுத்த இயலாத ஒரு தனித்துவமான படைப்பு. ‘உத்தரீயம்’ என்ற அவருடைய இன்னொரு கதையும் வகைப்படுத்த முடியாத ஒரு விசேஷப் படைப்பு. ‘தாமரை’ மாத இதழிலும் ‘கணையாழி’ இதழிலும் அவர் சில கதைகள் எழுதினார். 
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ‘க்ரியா’ அவருடைய  ஒரு சிறுகதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனை ஆசிரியர் என்று தலப்பில் போட்டு இரு வெவ்வேறு அளவுகளில் ‘ஞானரதம்’ என்ற பத்திரிகையில் வெளிவந்த அவருடைய சிறுகதை ‘கனவுக்கதை’ கதையை காலம் சென்ற எழுத்தாளர் ஐராவதம் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கிய சிந்தனை’ மாதக் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தார். ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமரர் சுந்தர ராமசாமியிடம் விடப்பட்டிருந்தது. அவர் சார்வாகனின் ‘கனவுக் கதை’யையே தேர்ந்தெடுத்தார்.
‘மணிக்கொடி’ காலத்திலிருந்தே ‘சாலிவாகனன்’ என்ற புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவருடைய கதை, கட்டுரை, கவிதைகள் தவிர அவர் நல்லதொரு பத்திரிகை ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலமானார். அச்செய்தியை ஒரு நண்பர் சொன்ன முறையில் வல்லிக்கண்ணன் அதைச் சார்வாகன் என்று நினைத்து ஓர் இரங்கல் கட்டுரை எழுதி, அது பிரசுரமும் ஆகிவிட்டது. தன்னைப் பற்றிய இரங்கல் கட்டுரையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த எழுத்தாளர்கள் இருவர். ஒருவர், சார்வாகன். இன்னொருவர் ஹெமிங்வே.
இரு ஆண்டுகளுக்கு முன்பு நற்றிணைப் பதிப்பகம் யுகன் சார்வாகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளையும் சேர்த்து ஒரு சிறப்பு வெளியீடு வெளிக்கொணர்ந்தார். அது 2013 சென்னை புத்தகச் சந்தையின் போது வெளியிடப்பட்டது.
சார்வாகன் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுணர். அவருடைய இறுதி நாட்களில் மருத்துவமனை கொண்டு சென்றேயாக வேண்டும் என்றிருந்த போது கூட அவர் சம்மதம் தரவில்லை. சென்னையில் அவர் வீட்டிலேயேதான் அவர் உயிர் பிரிந்தது.
சார்வாகன் அவருடைய புனைப்பெயருக்கேற்ப வாழ்ந்தவர். இடதுசாரிச் சிந்தனை உடையவர். பெரும்பாலும் கதருடை அணிந்தவர். அவருடைய ‘உத்தரீயம்,’ ’கனவுக்கதை’ போன்றவை தமிழ் உரைநடைப் படைப்புகளில் முற்றிலும் ஒரு புதிய பாணியை வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்தவை.
.   

சின்ன தப்புகள்….

….

அழகியசிங்கர்



குவியம் இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த நேர்பக்கம் என்ற என் புத்தக அறிமுகக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. சிறப்புப்
 பேச்சாளராக வந்திருந்த அசோகமித்திரனுக்கும், என் பொருட்டு பேச வந்திருந்த ப்ரியாராஜ், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களுக்கும், குவியம்

சார்பில் ஏற்பாடு செய்த கிருபானந்தன், சுந்தர்ராஜனுக்கும் என் நன்றி. நன்றி. நன்றி.

அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கும்போது அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நான் என்னை மறந்து அவர் பேச்சை ரசித்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.
வெள்ளத்தால் ரொம்பவும் நனையாத கொஞ்சம் நனைந்த புத்தகங்களை அள்ளி எடுத்துக்கொண்டு கூட்டத்திற்கு வந்திருந்தேன்.என் புத்தகத்தில் புத்தகம் முடிந்தபின் நான் சில சின்ன தப்புகளைச் செய்துவிட்டேன். இந்தப் புத்தகத்தில் அட்டைப் பட ஓவியத்தை வரைந்தவர் கவிஞர் எஸ் வைதீஸ்வரன். இதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். அற்புதமான ஓவியம் அது. உண்மையில் இந்தப் புத்தகம் வந்ததே ஒரு விபத்துதான். கிட்டத்தட்ட 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு புத்தகங்களுக்கு அட்டை பிரிண்ட் செய்திருந்தேன். மூன்று புத்தகங்களை அப்போதே கொண்டு வந்துவிட்டேன். நேர் பக்கம் என்ற பெயரில் அப்போது கொண்டு வர இருந்த என் புத்தகம் மாட்டிக்கொண்டது.
அந்தப் புத்தகத்திற்கான அட்டையைத் தயாரித்து ஒரு மூலையில் கட்டி வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 600 அட்டைகள் அடித்து வைத்திருப்பேன். எப்படி இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பது என்ற குழப்பம் என்னிடம் இருந்து கொண்டு இருந்தது. பல இலக்கிய நிகழ்ச்சிகளின்போது நான் எழுதிய கட்டுரைகளைத் திரட்டி வைத்துக் கொண்டு இருந்தேன். அதே போல் பல படைப்பாளிகளைப் பற்றியும் நான் எழுதி வைத்திருந்தேன். உண்மையில் எழுத்தாளர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
க்ருஷாங்கினி பேசும்போது, ‘பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி எதுவும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை’ என்று கூறினார். அது உண்மைதான். பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி நான் கட்டுரைகள் எழுதியிருந்தாலும், சேர்க்க மறந்து விட்டேன். அதேபோல் இன்னும் சில படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதி இருந்தாலும் சேர்க்க மறந்து விட்டேன். வைதீஸ்வரன் கவிதைகள் குறித்து நான் எழுதிய கட்டுரை, வாசகர் கடிதப் பாணியில் எழுதியிருந்தேன். பலருக்கு அது புரியாது. அத்தனை வாசகர் அவர் கவிதைகளைப் பற்றி எழுதி இருக்கிற என்று
கூடத் தோன்றும். வாசகர் கடிதப் போர்வையில் எல்லாம் நான் எழுதியதுதான். உண்மையில் கட்டுரை முடிவில் நான் இதைத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மேலும் வைதீஸ்வரன் கவிதைகளைக் குறித்து இன்னும் ஒரு முறை படித்துவிட்டு எழுத வேண்டுமென்று கூடத் தோன்றியது. நான் மதிக்கும் இன்னொரு கவிஞர் ஞானக்கூத்தன். அவரைப் பற்றி நான் எதுவும் இத் தொகுப்பில் கட்டுரை எழுதவில்லை.
அசோகமித்திரன் சிறுகதைகளைக்குறித்து, நாவல்களைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளைக் குறித்து பெரிய அளவில் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் இந்த நேர்பக்கம் என்ற பெயரில் கொண்டு வந்த இந்தத் தொகுப்பு இன்னும் தொடரும். சிறுபத்திரிகைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும்போது, பிரம்மராஜனின் மீட்சி, சதங்கை, ஞானரதம் பற்றியெல்லாம் எழுத மறந்து விட்டேன். அடுத்தப் பதிப்பு வரும்போது இந்தத் தவறை திருத்திக்கொள்வேன்.
142 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை 120 ரூபாய்தான். வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இப் புத்தகத்தை ரூ 60 க்குத் தர தயாராக இருக்கிறேன்
.
நான் கவிதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக அசோகமித்திரன் தெரிவித்தார். உண்மையில் கவிதையை விட சிறு
கதை எழுதுவதுதான் ரொம்பவும் சிரமம். பொறுமை வேண்டும். நான் அதற்கான முயற்சியை எப்போதும் செய்துகொண்டுதான் இருப்பேன். ஆனால் நான் கவிதையை நினைத்தால் எழுதிவிடுவேன். இப்படி எழுதுகிற கவிதைகளில் பல கவிதைகள் எடுபடாமல் கூடப் போய்விடும். யார் கவிதையை நான் படித்தாலும் சரி, என் கவிதையை நான் எழுதினாலும் சரி எது சிறந்த கவிதை என்பதில் எனக்கு குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கும்.
சரி இந்தப் புத்தகத்தின் அடுத்தப் பதிப்பு வரும் என்று ஆர்வமாய் ஒருவர் கேட்கிறார். உடனே வரவேண்டும் என்பது என் ஆசைதான். ஆனால் தெரியாமல் 100 பிரதிகள் அடிப்பதற்குப் பதில் 360 பிரதிகள் அடித்து விட்டேன். வெள்ளம் புண்ணியத்தால் கொஞ்சம் புத்தகங்கள் பிரியா விடை பெற்றுக்கொண்டு என்னை விட்டுப் போனாலும், மீதி உள்ள எல்லாப் புத்தகங்களையும் விற்க குறைந்தது ஐந்தாறு வருடங்களாவது ஆகும். அதனால் இப்போதே என் கம்ப்யூட்டரில் நான் செய்த சிறு சிறு தவறுகளை சரி செய்து விடுகிறேன். ஏன் எனில் எனக்கு அப்போது கொண்டு வரும்போது திரும்பவும் சின்ன தப்புகள் மறந்து போனாலும்போய்விடும்.

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்


அழகியசிங்கர்


கவிதை 3

வெள்ளம் வடிந்த அடுத்தநாள்
காலை
பால் எங்கே கிடைக்கிறது
என்று அலைந்து கொண்டிருந்தேன்
எங்கள் தெரு வீரமணி
மாடுகளை வைத்து வியாபாரம்
செய்வான்
அவனிடம் உள்ள மாடுகளை
அடுத்தத் தெருவிற்கு மேட்டுப்பகுதிக்கு
ஓட்டிச் சென்று விட்டான்
மழைத் தூறலில்
அவனும் மாடும் நனைந்தபடி
பால் கறந்து கொண்டிருந்தான்
அவனைப் பார்த்து சிரித்தேன்
üதருகிறேன் அரை லிட்டர்
யார் கண்ணிலும் படாதீர்கள்..ý
என்றான்.

கவிதை 4

சொல்கிறேன் கேளுங்கள்
இனிமேல் மழை என்றால்
வெள்ளம் வருமென்று ஞாபகம்
வந்து
பதட்டமடைய நேர்கிறது
என்ன செய்வது?

கவிதை 5

தெருவில் வெள்ளம்  புகுந்த
காலத்தில்
மொட்டை மாடியில் போய்
தஞ்சம் அடைந்தோம்
சுற்று முற்றும் பார்த்தோம்
வானத்தைப் பார்த்து
கையெடுத்துக் கும்பிட்டோம்
பின்
எதிர் வீடு பக்கத்து வீடென்று
எல்லோர் வீட்டு
மொட்டை மாடிகளையும்
பார்த்தோம்
இவ்வளவு பெண்களா
எங்கள்     தெருவில்…..

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

அழகியசிங்கர்

கவிதை 2




ராமன் வீடு தனியாக இருக்கும்
கீழே மேலே என்று
பள்ளத்தில் இருக்கும்
எப்பவோ கட்டிய வீடு
சாதாரண மழைக்கே வந்து விடும்
உள்ளே மழை நீர்
இது பெரும் மழை
தெருவில் உள்ள சாக்கடை
நீரெல்லாம் உள்ளே வந்து
ராமன் அதிர்ச்சி அடைந்து
தன் வீட்டு மாடியில் குடியிருக்கும்
வீட்டில் தஞ்சம் அடைந்தார் மனைவியுடன்
மறு நாள் மாடியில் இருந்து
தெருவைப் பார்த்தார் கவலையுடன்
அவர் முகமே சரியில்லை
அடுத்தநாளுக்கு அடுத்தநாள்
தெருவில் நடந்தபோது
என்ன ஆயிற்று என்று கேட்டேன்
சீலிங் பேன் வரை சாக்கடை நீர்
நாற்றம்
வீட்டுப் பத்திரம் எல்லாம் போய்விட்டது
இன்னும் என்னன்ன துயரமெல்லாம்
சுமக்கப் போகிறேனோ என்று
உடைந்த குரலில் கூறி
மேலும் பேசப்பிடிக்காமல்
நகர்ந்து விட்டார்

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

          அழகியசிங்கர்

        கவிதை 1

        கண் முன்னே நடந்தது
        நீரின் ஓட்டம்
        வகை தெரியாமல் மாட்டிக்கொண்டோம்
        கீழ்த் தரை வளாகத்தில்   
        வைத்திருந்த புத்தகங்களின்
        பெருமையை யார் அறிவார்
        வந்த நீர் லபக்கென்று
        வாயில் இட்டுக்கொண்டது.
        திரும்பவும் நீர் அரக்கன்
        முதல் மாடி வளாகத்தில் வீற்றிருக்கும்
        எங்களை மிரட்டப் போகிறதோ
        என்று பயந்தவண்ணம் இருந்தோம்
        ஒவ்வொரு படிக்கட்டையும்
        தொட்டு தொட்டு
        வந்து கொண்டிருந்த கரும் நிற
        நீர் அரக்கனை
        ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்
        அன்று இரவு தூக்கம் சிறிதுமில்லை
        ஆனால் தர்மத்திற்குக் கட்டுப்பட்ட
        நீர் அரக்கன் எங்களை விட்டுவிட்டான்
        பயபபடாதே
        என்று ஆறுதல் படுத்தபடியே
        கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து
        பின்னோக்கிப் போய்விட்டான்
        ஆனால்
        எங்கள் மனதில் புகுந்த அச்சம்
        அவ்வளவு சுலபத்தில்
        எங்களை விட்டு அகலவில்லை
                                                                                                      09.12.2015
                                                                                                       புதன்
                                                                                                       8.20 காலை
       
       

தனித்துவங்கள்


ராமலக்ஷ்மி
 
 
காட்டுத் தீக்கு ஒப்பாக
இரத்தச் சிகப்பு இலைகளோடு
கனன்றிருந்த விருட்சத்தின் இலைகள் 
பழுப்புக்கு மாறத் தொடங்கியிருந்தன
இளவேனிற்கால முடிவில்.

ஒவ்வொன்றாய் உதிர்ந்து
ஒற்றை இலையோடு 
ஓரிருநாள் காட்சியளித்த விருட்சத்தின்
கடைசி இலையும்
விடை பெற்றுப் பறக்கலாயிற்று.

கண்களுக்குப் புலப்படாத வளியில்
சுழன்று சுழன்று பயணித்து 
குவிந்து கிடந்த மற்ற இலைகளின் மேல்
வீழ்ந்த இலையின்
காற்றுக்கெதிரான கடைசிப் போராட்டத்தை
கண்டு பாராட்ட எவருமில்லை.
விருட்சத்தோடு 
அதிகம் தாக்குப் பிடித்த முயற்சியை
கவனிக்க நேரமுமில்லை.

நேரே உதிர்ந்து உலர்ந்தவற்றுக்கும்
அதற்குமான வித்தியாசத்தை
உலகம் உணர வாய்ப்புகளற்று
இலைகளோடு இலையாக
வாடிச் சருகான அதன் மேல்
ஊர்ந்து கொண்டிருந்தது
மண் புழு.

தண்ணீர் பக்கமா கண்ணீர் பக்கமா……….

அழகியசிங்கர்
சமீபத்தில் நான் கொண்டு வந்த புத்தகம் பெயர் நேர்பக்கம்.  இப்புத்தகம் ஒரு கட்டரைத் தொகுதி.  பல எழுத்தாளர்களைப் பற்றி படைப்புகளைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுதி இது.  
ஒரு காலத்தில் 1000 பிரதிகள் அச்சடித்த நிலை மாறி 300 பிரதிகள் அச்சடிக்கும் காலமாக இன்று மாறி விட்டது.  நான் 376 பிரதிகள் மட்டும் அச்சடித்துள்ளேன்.  என் பிறந்த தினமான டிசம்பர் ஒன்றில் எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று கொண்டு வந்து விட்டேன்.
ஒரு ஆட்டோவில் புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.  என் புத்தகம் மட்டுமல்லாமல், பெருந்தேவியின் தீயுறைத் தூக்கம், நீல பத்மநாபனின் 148 கவிதைகள் தொகுதி, அய்யப்பப் பணிக்கரின் கோத்ர யானம் என்ற புத்தகமும் கொண்டு வந்துள்ளேன்.  என் புத்தகம் தவிர மற்றப் புத்தகங்கள் 100தான் அச்சடித்துள்ளேன்.  கவிதைப் புத்தகம் என்பதால்.  இந்த நான்கு புத்தகங்கள் அடிக்க 25000 ரூபாய் செலவு ஆகிவிட்டது.
என் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையில் என் புத்தகங்களை வைத்திருந்தேன்.  வேற வழியில்லை.  டிசம்பர் 1ல் நான் என் புத்தகத்தின் சில பிரதிகளை சில நண்பர்களுக்குக் கொடுக்க நினைத்தேன்.  முடியவில்லை.  மழை.  கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகமாகியது.  2ம் தேதி காலையில் தெருவில் மழை நீர்.  எனக்கு ஆச்சரியம்.  மழையா நம்ம தெருவிலா என்று.  
டிஜிட்டல் காமராவை எடுத்துக்கொண்டு தெருவைப் படம் பிடித்தேன்.  இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை நீர் அதிகமாகியது.  இந்தத் தெருவில் என் வீட்டில் எப்படி மழை வரும் என்ற கர்வம் வேறு. தெருவில் உள்ள எல்லோருக்கும் என் வீட்டில் வண்டிகளை வைக்க அனுமதி கேட்டார்கள்.  சரி என்றேன்.  வீட்டின் உள்ளே ஒரே வண்டிகள்.  
மழையே நீ எங்கே என் வீட்டிற்கு வரப்போகிறாய் என்று மழை நீரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  தெருவில் நுழைந்த வெள்ளம் மெதுவாக எங்கள் வீட்டு வாசலில் வந்தது.  எனக்கு சந்தேகம்.  புத்தகம் என்ன ஆகப் போகிறதோ என்று.  உள்ளே திறந்து தரையில் வைத்திருந்த நேர் பக்கம் புத்தகப் பன்டில்களை மெதுவாக எடுத்து அங்கே போட்டிருந்த பெஞ்சில் வைத்தேன்.  பின் சமையல் அறை மேடையில் வைத்தேன்.  அப்படியும் பல புத்தகங்கள் கீழேதான் இருந்தன.  அதன் பின் போன ஆண்டு அதன் முந்தைய ஆண்டு பதிப்பு செய்த புத்தகப் பன்டல்களையும் எடுத்து வைத்தேன்.
ஆனால் பல புத்தகங்களை கீழே வைத்துவிட்டு வந்தேன்.  பின்னாலேயே மழை நீரும் வந்து விட்டது.  உள்ளே சூழந்து கொண்டது.  கொஞ்சம் நேரம் கழித்து நம்ப முடியாமல் மாடியில் இருந்து வேடிக்கைப் பார்த்தேன்.  வெள்ளம் உள்ள புகுந்தது.  மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.  கரண்ட் போய் விட்டது.  வீட்டில் உள்ளே வைத்திருந்த எல்லா டூ வீலர்களும் நாசம்.  மூன்று கார்கள் நாசம்.  என் காரை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்ததால் தப்பித்தது.
வெள்ளம் முழுவதும் போனபிறகு அறைக் கதவைத் திறந்தேன்.  புத்தகங்களையெல்லாம் சிதறி அடித்திருந்தது.  பண்டுல் பண்டுலாக தூக்கிப் பந்துபோல் விசிறி எறிந்திருந்தது வெள்ளம். என் முன்னால் புத்தகமெல்லாம் கண்ணீர் விட்டு அழுதன.நேர் பக்கம் புத்தகம் பல இடங்களில் சிதறி தண்ணீரில் நனைந்து கேவலமாக இருந்தது. ரோஜா நிறச் சட்டை என்ற என் கதைப் புத்தகம் ரோஜா நிறத்தை இழந்திருந்தது.
தவறுதலாக நேர் பக்கம் என்ற புத்தகம் பெயரை மாற்றி வைத்திருக்க வேண்டுமா?  வேண்டுமென்றால் புத்தகம் பெயரை  தண்ணீர் பக்கம் அல்லது கண்ணீர் பக்கம் என்று வைத்திருக்கலாமா?
142 பக்கத்தில் 22 எழுத்தாளர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம்தான் நேர் பக்கம்.  இதை ஒரு விமர்சகரிடம் விமர்சனத்திற்குக் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவர் எப்படி எழுதுவார் என்று பின்வருமாறு கற்பனை செய்து பார்க்கலாம் :
‘அதிகம் பக்கம் போகாமல் சின்ன சின்ன கட்டுரைகளாக 22 எழுத்தாளர்கள் அல்லது புத்தகங்கள் பற்றி எழுதி உள்ளீர்கள்.  யாரையும் நீங்கள் பாராட்டவும் இல்லை.  அதே சமயத்தில் வசைப்பாடவும் செய்யவில்லை.  மனதை பிழிய பிழிய எழுதி உள்ளீர்கள். இப்படி மனதைப் பிழியும்படி எழுதுவது பெரிய விஷயம்.’
இந்த விமர்சனத்தைப் படிக்கும்போது எனக்கு பயங்கர சந்தேகம்.  இந்த விமர்சனம் செய்தவருக்கு நான் பிழிந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்ற சந்தேகம்தான் அது. ஏன்எனில் வெள்ளப் பெருக்கால் வீட்டில் அடுக்கடுக்காக வைத்திருந்த நேர் பக்கம் புத்தகம் தண்ணீரில் நனைந்து பின் நான் புத்தகத்தை பிழிந்து காயப்போட்ட விஷயம் எப்படி அவருக்குத் தெரிந்தது.  விமர்சனத்தில் அவர் ஏன் பிழிய பிழிய எழுதியிருப்பதாக சொல்கிறார் என்று தோன்றியது.
புத்தகம் நனைந்தாலும் மேலே நான் இருக்கும் இடத்திற்கு புத்தகத்தைக் காய வைக்க எடுத்துச் செல்ல முடியவில்லை.அப்படியும் நான் புத்தகங்களை நான் இருக்கு முதல் அடுக்கத்திற்கு எடுத்து வந்து விட்டேன்.  இதனால் என் வீட்டில் உள்ளவர் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை தற்போது.   ‘மழைக்குடை நாட்கள்’ என்ற ‘கோ கண்ணன்’ எழுதிய கவிதைப் புத்தகம்.  அது இன்னும் அழுகையை நிறுத்தாமல் ஈரம் சொட்ட சொட்ட இருக்கிறது.  இந்தப் புத்தகத்தையும் தெரியாமல் மேலே கொண்டு வந்து விட்டேன். இப் புத்தகத்தைப்  பார்த்து வீட்டில் உள்ளவர், üஇந்தப் புத்தகத்தை எப்போது கொண்டு வந்தீர்கள்?ý என்று பெரிய ரகளை.  இந்த வெள்ளத்தால் நான் தெரியாமல் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாம் தெரிந்து போய் விட்டது.  
இந்த வெள்ளத்தால் புத்தகம் மட்டுமல்ல நானும் சேர்ந்து அவதிப்படுகிறேன்.  புத்தகம் போனதற்காக நிவாரண நிதி வேண்டாம்.  லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும், நான் திரும்பவும் அச்சடித்து  என் செலவை ஈடு கட்டி விடுவேன்.  கிடைக்குமா? முதலமைச்சர் கவனத்திற்கு நான் எழுதியது போகுமா?