ஏழு வரிகளில் ஒரு கதை…

அழகியசிங்கர்

ஏழு வரிகளில் கதை எழுத முடியுமா என்ற கேள்வி கேட்டு ஒன்றை நானும் எழுதி முகநூலில் வெளியிட்டேன்.  நான் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் கதைகளை எழுதி அனுப்பி உள்ளார். நீங்களும் முடிந்தால் எவ்வளவு கதைகள் வேண்டுமானாலும் அனுபபலாம்.  navina.virutcham@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  எல்லாவற்றையும் ஒரு புத்தகமாக பதிவு செய்ய உத்தேசம். இதோ அசோகமித்திரனின் கதைகள்.
1. ஒரூ காகம்
வழக்கம் போல, டெய்லி தவறாமல் வந்து  உட்டான்ஸ் எல்லாம் உடர சீனு அன்னிக்கும் நல்ல பார்ம்ல.. சுனாமி வரும்னு மிருகங்கள் பறவைகள் இதுக்கெல்லாம் முன்னமே தெரிஞ்சிடுமாம். யார் கிட்ட கதை உடராங்க.. எனக்கு சுத்தமா இந்தமாதிரி மூட நம்பிக்கைஎல்லாம் கிடையாது. அப்போது ஒரு காக்காய் அவர் தலை மீது இடித்தும் இல்லாமலும் சென்றது. பக்கத்தில் ஜாக்கிங்கில் இருந்த ஒரு மாமி சொன்னாள்- காக்காய் தலைல தொட்டுதுன்னா சனீஸ்வரன் இல்லன்னா பிரம்மஹத்தி பிடிக்குமாம், ஜாக்கிரதை . அடுத்த நாள் சீனுவைக் காணும் – சனிக் கிழைமை.. எங்கு சென்றாரோ
 2. ட்ரா ஜி்க் கதை
நடேசன் பூங்கா கதை கேட்போர் எல்லோரும் சென்று அரைமணிக்கும் மேல் ஆகி விட்டது. ஒருவர் மட்டும் சோகம் கவ்விய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். நான் அவரிடம் சென்று கேட்டேன் : நான் படித்த ட்ரா ஜி்க் கதை நன்றாக இருந்ததா.   அவர் சொன்னார்: இன்னொரு கதையும் படித்திருந்தீர்களானால், என்னுடைய கைமுறுக்கு அத்தனையும் விற்றுப்போயிருக்கும்
3. ஜயராமனும் லட்சுமியும்
கூட 25 லட்சம் கொடுத்து ரோட் பக்கம் இல்லாமல் பின்புறம் சமுத்ரம் வ்யு கிடைக்கும் படி பார்த்துத் தான் வாங்கினார்கள்- ஜயராமனும் லட்சுமியும். சுமார் இரண்டு கோடி ஆயிறறு. மேலே இண்டீரியர் வேறு இன்னொரு முப்பது. கிராண்ட் க்ரிஹப்ரவேசம். தடபுடல். பதினாலாவது மாடி ப்ளாட்ல இருந்த பெரிய சிடவுட்ல ஷாமியானா போட்டு, ரோட்ல போறவங்க வரவங்க எல்லாம் வாசல்ல நின்ன காரை எல்லாம் பார்த்து விட்டு யாரோ சினிமா காரங்க வந்திருக்காங்க போலன்னு போனாங்க.இப்ப சமுத்ரம் தான் பார்த்துக் கொண்டு இருக்கு தினமும் ஜெயராமன் லட்சுமி குடுமி பிடி சண்டையை …

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் இன்று இல்லை



அழகியசிங்கர்



இந்த வாரம் நடை பெற வேண்டிய ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளேன்.

7 வரிகளில் யாராவது கதை எழுதி அனுப்ப முடியுமா?
கதை :

நடேசன் பூங்காவில் கண்ணயர்ந்துவிட்டேன். பின் பல குரல்களின் சத்தம் கேட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன்.மேடையில் ஒருவர் உரத்தக் குரலில் சத்தம் செய்தபடி இருந்தார். கதை படிக்கிறாராம். சிலர் நடந்து கொண்டிருந்தார்கள். நானும் கதை சொல்லும கூட்டத்தில் கலந்து கொண்டேன் ‘கதை என் முன் நடந்து கொண்டிருக்கிறது,’ என்றேன்.

இன்று உலகப் புத்தக தினம்

அழகியசிங்கர் 
இன்று புத்தக தினம்.  புத்தகம் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறலாம். ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம இருந்தால் மட்டும் புத்தகம் படிக்க முடியும். பதிப்பாளர், எழுத்தாளர், வாசகர் மூவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் ஒரு புத்தகம்.  ஒரு தரமான புத்தகத்தைக் கொண்டு வர ஒரு பதிப்பாளர் முன் வர வேண்டும், ஒரு தரமான எழுத்தை எழுத ஒரு எழுத்தாளர் முன் வர வேண்டும், அதை வாசிக்க ஒரு வாசகனும் தயாராக இருக்க வேண்டும்.
ஒரு புத்தகம் வாசிப்பவன் புத்தகத்தை எடுத்துப் படிக்க பலவிதத் தடைகளை கடக்க வேண்டிய நிலையில் உள்ளான்.  என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் புத்தகம் படிப்பார்கள். என் தந்தை எனக்குத் தெரிந்து புத்தகமே படிக்க மாட்டார்.  அவர் தினசரி தாள்களையே இப்போதுதான் படிக்கிறார்.  ஆனால் படித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். என் மனைவி, ‘லட்சுமி’ என்ற எழுத்தாளர் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பார்.  ஆனால் இப்போதெல்லாம் அவருக்கு டிவியில் பொழுது போய் விடுகிறது. 
என் சகோதரன் முன்பெல்லாம் தமிழ் புத்தகம் படிக்க ஆர்வம் காட்டுவான்.  இப்போது சுத்தமாக இல்லை.  அவன் படிப்பது வணிகம் சம்பந்தமான புத்தகம். சில டானிக் புத்தகங்களையும் படிப்பான்.  என் பெண் படிப்பது கல்கியின் பொன்னியின் செல்வன்.  அதுவும் இப்போதுதான் படிக்கத் தொடங்குகிறாள்.
ஆனால் எல்லோருக்கும் புத்தகம் படிக்க வேண்டுமென்ற பெரிய ஆர்வம் இல்லை. நான் மட்டும் என் வீட்டில் விதிவிலக்கு.  அதனால் அதிகமாக திட்டும் வாங்குபவனும் கூட.  எப்போது பார்த்தாலும் புத்தகத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பவன்.  
என் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கிப் படிப்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பே புத்தகத்தைத் துறக்க ஆரம்பித்து விட்டார்.  அவர் சேகரித்தப் புத்தகங்களை அவரே சொந்த செலவு செய்து நூல் நிலையத்திற்கு அனுப்பி விட்டார்.  பெரிய வீடும் வசதியும் இருந்தும் அவரால் ஏன் புத்தகத்தைப் பாதுகாக்க விரும்பவில்லை என்பது தெரியவில்லை.  ஒரு காலத்தில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். இப்போது எழுதுகிறாரா என்பது தெரியவில்லை.  இன்னும் சிலர் இருக்கிறார்கள்.  புத்தகத்திற்காக ஒரு செலவும் செய்ய மாட்டார்கள்.   இலக்கியக் கூட்டம் நடக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக் சென்டருக்கு அடிக்கடி செல்வேன். 
அவர்கள் அளிக்கும் விருந்தில் சுடச்சுட கிச்சடி நன்றாக இருக்கும். எழுத்தாளர்கள் பேசுவதைக் கேட்பதற்குமுன் கிச்சடி நினைவு வந்து அங்கு ஓடி விடுவேன்.  ஆனால் கூட்டம் முழுவதும் இருந்து கேட்பேன்.  திரும்பி வீடு வரும்போது அங்குப் பேசப்படும் புத்தகத்தை வாங்காமல் இருக்க  தோன்றாது. 
ஆனால் அங்கு வாங்கும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வருவதற்குள் யாராவது என்னிடமிருந்து படிக்க வாங்கிக்கொண்டு விடுவார்கள்.  பின் எனக்குக் கிடைக்காது.  அதனால் டாக் சென்டரில்  எந்தப் புததகமும் வாங்க மாட்டேன்.  மேலும்  புத்தகங்களை யாருக்கும் தெரியாமல்தான் வாங்குவேன்.  என் மனைவி முன்பெல்லாம் அலுவலகம் போய்க் கொண்டிருப்பார்.  அவர் போனபிறகுதான் புத்தகம் வாங்குவேன். யாருக்கும் தெரியாமல் வீட்டில் ஒரு இடத்தில் கொண்டு வந்து வைத்துவிடுவேன்.
யாராவது என்னைப் பார்க்க வருகிறார்கள் என்றால் என்னிடம் எதுவும் புத்தகம் கேட்கக்கூடாது என்று மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.  
சமீபத்தில் ஒருவர் எனக்குப் போன் செய்தார்.  ‘ஜானகிராமன் புத்தகங்கள் வேண்டும்,’ என்று கேட்டார்.  அவர் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை.
நான் சொன்னேன் : ‘நியூ புக் லேண்ட்ஸில புத்தகம் கிடைக்கும். போய் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்…இல்லாவிட்டால் நான் உஙகளுக்கு வாங்கித் தருகிறேன்,’ என்றேன்.
என்னைப் பொறுத்தவரை பலருக்கு புத்தகத்தை வாங்கிப் படிக்கும் வழக்கம் இல்லை.  அவர்கள் தேவையான அளவிற்கு பணம் வைத்திருந்தாலும், புத்தகம் வாங்குவது கிடையாது.  ஏன்?  இரண்டு பேர்கள் சரவணா பவன் ஓட்டலில் காப்பி சாப்பிட்டால், ஒரு விருட்சம் ஆண்டுச் சந்தா அளவிற்கு பணத்தை ஓட்டல்காரர்கள் வசூல் செய்து விடுவார்கள்.  ஆனால் காப்பிதான் சாப்பிடுவார்கள் தவிர, சந்தா கட்டி பத்திரிகையை வளர்க்க உதவி செய்ய மாட்டார்கள்.  ஏன்? 
புத்தகம் ஒரு தொந்தரவான விஷயம்.  படிப்பது இன்னொரு தொந்தரவான விஷயம்.  புத்தகமே படிக்காத பல குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன்.  இப்படி புத்தகமே படிக்காத இரண்டு நண்பர்களை என் புத்தக ஸ்டாலை பார்த்துக்கொள்ள சொல்லி புத்தகக் கண்காட்சி போது ஏற்பாடு செய்து விட்டேன் ஒரு ஆண்டில்.  என் புத்தகங்களை விற்க அவர்கள் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு நடந்தால் புத்தகமே போட வேண்டாமென்று தோன்றும்.  
என்னதான் புத்தகம் எழுதினாலும் என்னதான் புத்தகம் கொண்டு வந்தாலும், வாசிப்பவர்கள் கிடைக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.  
எல்லோரையும் எப்படி புத்தகம் படிக்கும்படி செய்வது?  அது நம் கையில் இல்லை.  
சில ஆண்டுகளுக்கு முன் புத்தக தினத்தை முன்னிட்டு நான் ஒரு கவிதை எழுதினேன்.  அதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்று உலகப் புத்தக தினம்

எல்லாக் குப்பைகளையும் தூக்கி
தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
என் புத்தகக் குவியலைப் பார்த்து
மலைத்து நின்றாள்
என்ன செய்வதென்று அறியாமல்

பின் ஆத்திரத்துடன்
தெருவில் வீசியெறிந்தாள்

போவோர் வருவோர் காலிடற
புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும் பட
படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
எல்லார் முகங்களிலும் புன்னகை
நானும் ஆவலுடன்
மாடிப்படிக்கட்டிலிலிருந்து
தடதடவென்று இறங்கி
புத்தகத்தின் வரியை
இடுப்பில் ஒழுங்காய் நிலைகொள்ளாத
வேஷ்டியைப் பிடித்தபடி படித்தேன்
‘இன்று உலகப் புத்தக தினம்
இன்றாவது புத்தகம் படிக்க
அவகாசம் தேடுங்கள்’
நானும் சிரித்தபடியே
புத்தகத்தில் விட்டுச் சென்ற
வரிகளை நினைத்துக்கொண்டேன்
இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
வேஷ்டியைப் பிடித்தபடி….           (14.06.2008)   

லாவண்யாவின் கடலின் மீது ஒரு கையெழுத்து



அழகியசிங்கர்


எங்கள் வங்கி அலுவலகம் இருந்த தெரு முனையில்தான் பாரத வங்கி இருந்தது.  ஒரு காலத்தில் அங்கு வண்ணதாசன் பணி புரிந்திருக்கிறார். நான் அந்த வங்கிக்குப் போகும்போது அவரைப் பார்த்திருக்கிறேன்.  அவர் எங்கோ எழுந்து போவதுபோல் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஆனால் நான் சொல்ல வந்தது அவரைப் பற்றி அல்ல.
சேதுராமன் என்ற நண்பர்.  பாரத வங்கியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.  அவரைப் பார்க்க விருட்சம் இதழை எடுத்துக் கொண்டு போவேன்.  வா என்று வரவேற்பார்.  பல நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவார். விருட்சம் இதழுக்காக சந்தாத் தொகையைக் கொடுப்பதோடல்லாமல், இன்னும் சிலரிடம் சொல்லி வாங்கிக் கொடுப்பார்.  அவர் ஒரு புத்தக நண்பர்.  எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நண்பர்.  அவரைப் பார்க்கப் போவதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஒருமுறை அவர் கவிஞர் ஒருவரை அறிமுகப் படுத்தினார்.

“சார், இவர் சத்தியநாதன்.  லாவண்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார்,” என்றார் அவர்.

வந்தது ஆபத்து விருட்சத்துக்கு என்று நினைத்துக் கொண்டேன்.  லாவண்யா என்ற பெயரில் எழுதும் சத்தியநாதன், வேடிக்கையாகப் பேசக் கூடியவர்.  அந்தக் காலத்துப் பிரஞ்ஞை இதழில் ஒரு குறிப்பிடும்படியான சிறுகதை எழுதி உள்ளார்.  அவருடன் பழக பழக விருட்சத்திற்கு ஆபத்தில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

விருட்சத்தில் கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார்.  மடமடவென்று கவிதைகள் எழுதிக் குவித்து விடுவார்.  பின் மொழிபெயர்ப்பு செய்து சில கவிதைகளை அனுப்பி விடுவார். நானும் சளைக்காமல் அவர் எழுத்தைப் பிரசுரம் செய்வேன்.

அவருக்கு ஒரு ஆசை.  தான் எழுதுகிற கவிதைகளை எல்லாம் புத்தகமாகப் போட வேண்டுமென்ற ஆசை.  உண்மையில் அது விபரீத ஆசை. அதேசமயத்தில் கவிதை எழுதுகிற எல்லோருக்கும் நியாயமாய் ஏற்படும் ஆசைதான்.

முதல் கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடாக ஒன்றை கொண்டு வந்தார். அந்தக் கவிதைத் தொகுதியின் பெயர் ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்’  நான் முதன் முதலாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தது கவிதைத் தொகுதிதான்.  தொடர்ந்து பல கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன்.  அதில் ஒரு பெரிய தப்பு செய்து விடுவேன். கவிதைத் தொகுதியை 500 பிரதிகள் அச்சடித்து விடுவேன்.  ஆரம்பத்தில் இந்தத் தப்பை செய்திருக்கிறேன்.  பெரும்பாலும் என்னிடமே என்னை விட்டு அகலாமல் இருப்பது நான் கொண்டு வரும் கவிதைப் புத்தகங்கள்தான். ஆனால் உண்மையில் அத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்துப் பார்த்தால், அத் தொகுதிக்கு ஒரு நியாயமற்ற தண்டனை தந்துவிட்டதாகத்தான் நினைப்பேன்.
லாவண்யாவின் முதல் தொகுதி பெயர் ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்,’  அதென்னவோ தலைப்பில் ஒரு தப்பு செய்து விட்டோம். நத்தை என்ற பெயரைக் கொண்டு வந்து விட்டோம்.  அப்படி கொண்டு வந்து விட்டதாலோ என்னவோ கவிதைப் புத்தகம் என்னை விட்டு அகலாமல் நத்தை மாதிரி ஒட்டிக் கொண்டு விட்டது.

லாவண்யா கொஞ்சம் உணர்ச்சிகரமான மனிதர்.  ‘கவிதைப் புத்தகம் எதாவது விற்றதா?ý என்று அப்பாவித்தனமாகக் கேட்பார்.

“அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள்,” என்று அவரைத் தேற்றுவேன்.  
ஒவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சியில் அவருடைய கவிதைத் தொகுதியை எடுத்துக்கொண்டு போவேன்.  என்னுடையதையும் இன்னும் பலருடையதும் சேர்த்துதான்.

அவர் அடிக்கடி ஒன்று சொல்வார். “இலவசமாகக் கொடுத்து விடுங்களேன்,” என்று.

“அது மட்டும் செய்யக் கூடாது,” என்பேன் நான்.

“முதலில் புத்தகம் விற்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தால் யாரும் அதைத் தொடக் கூட மாட்டார்கள்.”என்பேன்.

“அப்படி என்றால் என்ன செய்வது,” என்று கேட்பார்.

“கவலைப் படாதீர்கள், ஒன்றிரண்டு விற்கும். இன்னொரு விதத்தில் உங்கள் புத்தகம் உதவியாக இருக்கிறது,” என்பேன்.

“எப்படி?”

“நானே கொஞ்சமாகத்தான் புத்தகமே கொண்டு வருகிறேன்.  ஏதோ கவிதைப் புத்தகங்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகாமல் இருக்கிறதாலே, நாம் நிறையாப் புத்தகங்கள் கொண்டு வந்ததுபோல் பிரமையை ஏற்படுத்துகிறது,”என்று சொல்வேன்.

அவர் சிரித்துக் கொள்வார்.  ஆனால் உண்மையில் திறமையாக கவிதை எழுதக் கூடியவர் லாவண்யா.  அவர் கவிதைகளில் ஒரு வித கிண்டல் தன்மை பளீரிடும்.

2009 ஆம் ஆண்டில் அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளோம்.  கவிதைத் தொகுதியின் பெயர் கடலின் மீது ஒரு கையெழுத்து. முன்பெல்லாம் நான் செய்த பெரிய தப்பு 500 பிரதிகள் அச்சடிப்பது.  பின் அந்தத் தப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 300 பிரதிகள் ஆயிற்று.  இப்போது அதுமாதிரி தப்பே செய்வதில்லை.  ஏன்எனில் 5டி பிரதிகள்தான் கவிதைத் தொகுதியே அடிக்கிறேன்.  கைக்கு அடக்கமாக எங்கே வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போகலாம்.

லாவண்யாவை அறிமுகப் படுத்தியவர் சேதுராமன் என்ற நண்பர்தான்.  அவர் ஒரு வாசகர்.  எழுத்தாளர் அல்ல.  ஆனால் எழுத்தாளர் நண்பர்.  சுந்தர ராமசாமி மீது அவருக்கு அலாதியான பிரியம் உண்டு.

சுந்தர ராமசாமிக்கு ஒரு விழா நடந்தது (மணி விழா என்று நினைக்கிறேன்) நாகர்கோவிலில்.  சேதுராமன் குடும்பத்தோடு அதாவது மனைவி, மகள், பேரன் பேத்தி என்று நாகர்கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.  அந்தச் சமயத்தில் சுனாமி வந்து எல்லோரும் இறந்து விட்டார்கள்.  நானும் லாவண்யாவும் சந்திக்கும்போது சேதுராமனைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம்.

லாவண்யாவின் கவிதை ஒன்றை  படியுங்களேன்.
கடல்

ஒரு தாயைப்போல கடல்
எனக்கு
மீன்களை உணவாய் தந்தது
ஒரு தந்தையைப்போல் கடல்
கட்டுமரத்தில் 
பயணிக்க கற்றுத்தந்தது
ஒரு நண்பனைப் போல கடல்
கார்முகிலிருளிலும்
திசைகளறியச் செய்தது
ஒரு கயவனைப்போல கடல்
என் மனைவி மக்களை
மூசசுத்திணறக் கொன்றது.
லாவண்யாவின் üகடலின் மீது ஒரு கையெழுத்துý என்ற இக் கவிதைத் தொகுதியின் விலை ரூ.30 தான்.  உங்களுக்கு வாங்க வேண்டுமென்று தோன்றினால், ரூ30 ஐ விருட்சம் கணக்கில் அனுப்புங்கள்.  நான் புத்தகத்தை உடனே அனுப்பி வைக்கிறேன்.
ACCOUNT NUMBER No. 462584636
Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOK NAGAR BRANCH.
IFSC CODE : IDIB 000A031


 

ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.

அழகியசிங்கர்

ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன்.  பொதுவாக எதாவது புத்தகம் அல்லது பத்திரிகை படித்துக்கொண்டு வருவது வழக்கம்.  என் பக்கத்தில் பேசுவதற்கு நண்பர்கள் கிடைத்தால் பேசிக்கொண்டே வருவேன். நான் படிக்கிற பத்திரிகை அந்த மின்சார வண்டியில் வந்து கொண்டிருக்கும் சக பயணிகளுக்கு என்னவென்று தெரியாது. கவனம் என்ற சிற்றேட்டின் முதல் இதழைப் படித்துக்கொண்டு வந்தேன்.  சில தினங்களுக்கு முன்புதான் அந்தப் பத்திரிகையை திருவல்லிக்கேணியில் உள்ள ஆர் ராஜகோபாலன் என்பவரிடமிருந்து வாங்கி வந்திருந்தேன்.
மாம்பலம் வரை என் மின்சார வண்டிப் பயணம் முடிந்து விடும். பின் அங்கிருந்து நடந்து வீட்டிற்குப் போய்விடுவேன்.  பின் அடுத்தநாள் மின்சார வண்டியில் அந்தப் பத்திரிகை அல்லது எதாவது புத்தகம் படிப்பது தொடரும். அப்படி அன்று கவனம் பத்திரிகையைப் படித்துக் கொண்டு வரும்போது எதிரில் ஒருவர் அமர்ந்து இருந்தார். என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தார்.  
“உங்கள் கையில் உள்ள பத்திரிகையைத் தர முடியுமா?” என்று கேட்டார்.
நான் கவனம் பத்திரிகையை அவரிடம் கொபடுத்தேன்.  அந்தப் பத்திரிகையைப் பார்த்த அவர், “ஞானக்கூத்தனை உங்களுக்குத் தெரியுமா?”
“கேள்விப்பட்டிருக்கிறேன்…ஆனால் இன்னும் பார்த்ததில்லை,” என்றேன்.
“இந்தப் பத்திரிகை எங்கிருந்து வருகிறது?”
“திருவல்லிக்கேணியில்.  கணையாழியில் இந்தப் பத்திரிகைப் பற்றிய செய்தி வந்திருந்தது.  அதை அறிந்து அங்கே போய் வாங்கினேன்,” என்றேன்.
“பிரமிளைப் பற்றி தெரியுமா?”
“போன வாரம் பிரஞ்ஞை என்ற சிற்றேடை எங்கள் மாம்பலத்தில் சாரதா ஸ்டோரில் வாங்கினேன்.  மாம்பலத்தில் உள்ள யாரோதான் அந்தப் பத்திரிகையை நடத்துகிறார்கள்.  அதில் வெங்கட்சாமிநாதன் என்பவர், பிரமிளுக்குப் பதில் சொல்வதுபோல் பக்கம் பக்கமாக ஏதோ கட்டுரை எழுதி இருக்கிறார்….எனக்கு ஒன்றும் புரியவில்லை..”
“பிரமிள் என்னை அடிக்கடி பார்க்க வருவார்…உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்,” என்றார்.
அவர் அதன்பின் நான் பணி புரியும் வங்கி முகவரியையும் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டார்.  அவர் பெயர் ஷங்கரலிங்கம் என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.  அவர் கஸ்டம்ஸில் பணிபுரிவதாகவும் சொன்னார்.
சிலதினங்களில் பிரமிளுடன் ஷங்கரலிங்கம் என்னைப் பார்க்க அலுவலகத்திற்கு வந்தார்.  
அப்படித்தான் எனக்கு பிரமிள் அறிமுகம்.  அதன்பின் அடிக்கடி பிரமிளைச் சந்திப்பேன்.  என் வங்கி ஒரு சொளகரியமான இடத்தில் வீற்றிருந்தது. மின்சார வண்டியைப் பிடித்தால் எளிதாக வங்கிக்கு வந்து விடலாம். பிரமிளைத்தான் நான் அடிக்கடி சந்தித்தேன்.  ஷங்கரலிங்கத்தை நான் பிறகு பார்க்கவே இல்லை. 
பிரமிள்தான் எனக்கு டேவிட் சந்திரசேகர் என்பவரை அறிமுகப்படுத்தினார்.  அவர் பாரிஸில் உள்ள சின்டிக்கேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  அவர் அடிக்கடி எங்கள் வங்கிக்கு வருவார்.  என்னைப் பார்த்துப் பேசாமல் போக மாட்டார்.  
ஒரு முறை அவரிடம், “பிரமிள் எப்படி சமாளிக்கிறார்..எங்கும் வேலைககுப் போகாமல் ஒருவர் எப்படி இருக்க முடியும்,” என்று கேட்டேன்.
“என்னைப் போல் சில நண்பர்கள் உதவி செய்வார்கள்,” என்றார் அவர்.
அதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  சிறுபத்திரிகையே புரியவில்லை.  அதிலும் சண்டைப் போடும் சிறுபத்திரிகைகளை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.  வெங்கட்சாமிநாதன் கட்டுரையைப் புரிந்து கொள்வதற்கு முன் பிரஞ்ஞை பத்திரிகை நின்று விட்டது. யாருக்கும் பணம் கொடுக்க முடியாத சிறு பத்திரிகையில் மட்டும் எழுதும் பிரமிளை யார் அறிவார்?
“எல்லோரும் சேர்ந்து ஒரு குரூப் மாதிரி ஆரம்பித்து மாதச் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்து பிரமிளுக்கு உதவி செய்யலாமே,”என்றேன்.
“அதெல்லாம் சாத்தியமில்லை… யாரையும் திரட்ட முடியாது..அவரவருக்கு தோன்றியதை உதவி செய்யலாம்…நான் அவர் தங்குவதற்கு இடத்திற்கான வாடகையைக் கொடுக்கிறேன்,” என்றார்.
இப்படியும் ஒருவரா என்று வியந்தேன்.  எனக்கு அவர் மீது அலாதியான மரியாதை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.  ஆனால் அவர் பிரமிளைப் பார்த்தால், பிரமிள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார்.  அவரை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேச மாட்டார்.
பிரமிள் கண்சிமிட்டியபடி என்னிடம் ஒரு விபரம் சொன்னார்.  “ஏன் டேவிட் உங்க வங்கிக்கு அடிக்கடி வருகிறார் என்பது தெரியுமா?” என்று கேட்டார்.
“தெரியாது,” என்றேன்.
“ஒரு பெண்ணைப் பார்க்கத்தான் இங்கு வருகிறார்.”
நான் டேவிட்டிடம் இதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
ஒருநாள் பிரமிள் என்னிடம் மேல் நோக்கிய பயணம் என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்தார்.  நான் உடனே அதற்குப் பணம் கொடுத்து வாங்கினேன்.  பின் நாங்கள் இருவரும் டிபன் சாப்பிடப் போனோம்.
“யார் இந்தக் கவிதைப புத்தகம் அடித்தார்கள்,” என்று பிரமிளிடம் கேட்டேன்.
“ஈரோடில் உள்ள நண்பர்தான் அடித்துக் கொடுத்தார்..எல்லாப் புத்தகங்களையும் என்னிடம் கொடுத்து விட்டார்…நான் விற்றாலும அவரிடம் பணம் கொடுக்க வேண்டாம்.”
பிரமிளின் அந்தக் கவிதைத் தொகுதியை அவ்வளவு சுலபமாக விற்க முடியாது என்று எனக்குத் தோன்றியது.  
அடுத்த முறை பிரமிள் வந்தபோது கவிதைப் புத்தகத்தைப் படித்தீரா என்று கேட்டார்.
“படித்தேன்…நீளமான கவிதையான மேல் நோககிய பயணம் புரியவில்ல.  என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று கேட்டேன்.
“அப்படின்னா வேற எதாவது கவிதைப் புரிந்ததா?” என்று கேட்டார்.
“வண்ணத்துப்பூச்சியும் கடலும் என்ற கவிதைதான் புரிந்தது,” என்றேன்.  பிரமிளுக்கு ஆச்சரியம்.  என்னை நம்ப முடியாமல் பார்த்தார்.  அவர் எதாவது கேள்வி கேட்டால் நான் மாட்டிக்கொண்டு விடுவேன் என்று தோன்றியது. 
“டேவிட்டிற்கு நீங்க புரியறதுன்னு சொன்ன கவிதைதான் புரியவில்லை.. அந்த நீண்ட கவிதை அவருக்குப் புரிகிறது,” என்றார் பிரமிள்.  
சில ஆண்டுகளுக்குப் பிறகு டேவிட் இறந்து விட்டார்.  டேவிட் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.  என்ன சாதாரண நாளில் வீட்டிற்கு வந்திருக்கிறாரே என்று தோன்றியது.  ஏன் எனில் எப்போதும் சனி அல்லது ஞாயிறில்தான் அவரைச் சந்திப்பது வழக்கம்.  எப்போதும் இல்லை.  பல மாதங்கள் சந்திக்காமல் கூட இருப்போம். 
வீட்டிற்கு வந்தவர், “இன்றைக்கு முக்கியமான நாள்,” என்றார்.
“ஏன்?”என்று கேட்டேன்
“என் பிறந்தநாள்,” என்றார் பிரமிள்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, அவர் கையைக் குலுக்கினேன்.  பின் சரவணாபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய் டிபன் வாங்கிக் கொடுத்தேன்.
அவர் வீட்டிற்கு வந்து பிறந்தத் தினத்தைச் சொன்னது வேடிக்கையாக இருந்தது.  பொதுவாக நான் யாருடைய பிறந்தத் தினத்தையும் என் பிறந்த தினம் உள்பட ஞாபகத்தில் வைத்துக்கொள்வது கிடையாது. பெரும்பாலும் மறந்து விடும்.  ஆனால் அதன்பின் அவர் பிறந்த தினத்தன்று வீட்டிற்கு வந்ததை இன்னும் கூட ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன். 
பிரமிளுக்கு நான் புரிந்தது என்று சொன்ன கவிதை இதோ:
வண்ணத்துப்பூச்சியும் கடலும்
சமுத்திரக் கரையின் 
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது

ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வேண்டும்

அழகியசிங்கர்
இந்த முறை ஞாயிற்றுக்கிழமை ஒரு கவிதை ஒரு கதை கூட்டத்திற்கு வந்திருந்த நண்பர்களான வேடியப்பன், விஜய் மகேநதிரன், வினாயக முருகன், சுந்திர புத்திரன், ஈழவாணி, கீதாஞ்சலி, கவிஞர் ஆரோ இன்னும் பலருக்கும் என் நன்றி.  இந்தக் கூட்டத்தில் கவிதைகளை சிலவற்றைப் படித்தோம்.  கதைகளை படிக்காமல் சொல்ல வருகிறதா என்று பார்த்தோம். அதில் ஓரளவு வெற்றிதான். வேடியப்பனை எனக்குக் கதை எழுதுபவராகத் தெரியாது.  அவர் சினிமா எடுக்க விருப்பப் படுபவராகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.  அவருடைய இரண்டு கதைகளையும் படிக்காமல் சொல்லும்போது எல்லோராலும்  நன்றாக ரசிக்க முடிந்தது.  ஈழவாணி முதலில் மஞ்சப்பு  முக்கூத்தி என்ற கவிதையைப் படித்தார்.  அவர் படித்த விதம் நன்றாக இருந்தது.  கூட்டம் கலகலக்கத் தொடங்கியது.
வினாயக முருகன் லக்க்ஷ்மி சரவணகுமாரின் வள்ளி திருமணம் கதையை சொன்னார்.  இக்கூட்டத்தின் முக்கிய விஷயம்.  சொல்பவர் கதையை நன்றாகச் சொல்ல வேண்டும்.  அதேபோல் கேட்பவர் கவனத்துடன் கேட்க வேண்டும்.  அப்போதுதான் முழுமையாக கதையையோ கவிதையையோ உள்வாங்கிக் கொள்ள முடியும்.
சுந்தரபுத்திரன் பாட்டி கதை ஒன்றை சொன்னார்.  பாவண்ணன் கதையை ஒருத்தர் சொன்னார்.  ஈழவாணி என்பவர் இலங்கையில் நடந்த கதை ஒன்றை குறிப்பிட்டார்.  அந்தக் கதையைக் கேட்பதற்கே உருக்கமாக இருந்தது.  
புதிதாக வந்திருக்கிற தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற புத்தகத்திலிருந்து ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ என்ற கதையையும், ‘ஹர்ஷவர்த்தனர் அறிவு’ என்ற கதைகளையும் படித்தோம்.  புது எழுத்து வெளியீடாக இப் புத்தகம் வெளிவந்துள்ளது. பிரமிள் எழுதிய கவிதைகள் இரண்டைப் படித்தோம்.  அவர் பிறந்த தேதி இருபதாம் தேதி ஏப்ரல் மாதம்.  ஒரு கவிதையின் பெயர்  வொட லொட.. இன்னொரு கவிதையின் பெயர் எந்துண்டி வஸ்தி?
கதை சொல்வது என்பது எப்படி ஒரு கலையோ அதைப் போல் கதையைக் கேட்பதும் ஒரு கலை.  இதற்கெல்லாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  
பள்ளிக்கூடங்களில் கதை கவிதை சொல்வது மாதத்திற்கு ஒரு முறையாவது யாராவது அறிமுகப் படுத்தினால் நன்றாக இருக்கும்.  ஆனால் இதெல்லாம் சாத்தியம இல்லை.  பூனைக்கு யார் மணி கட்டுவது?  எலிதான் மணியைக் கட்ட வேண்டும். அதேபோல் கல்யாணம் போன்ற மகிழச்சிகரமான இடங்களில் கதையோ கவிதையோ வாசிக்கும் கூட்டம் நடத்தலாம்.  ஆனால் கல்யாணத்திற்கு வந்தவர்கள் ஓடிப் போகாமல் இருக்க வேண்டும்….
மூன்று கூட்டங்களில் நாங்கள் வாசித்த கவிதைகள் கதைகளை நான் பதிவு செய்திருக்கிறேன்.  அதைக் கேட்டாலே சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் கேட்க வேண்டும்.  முடியுமா?
நேற்று இரவு இதை type அடித்துக்கொண்டிருந்தபோது வாசலில் பயங்கர வெடி சப்தம்.  எங்கள் தெருவிற்கே அரசியல் வாதிகள் தேர்வில் நிற்கப் போவதை அறிவிக்க வந்து விட்டார்களா என்ற கிலிதான் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அது இல்லை.  தொடர்ந்த வெடி சப்தமும், ஒரு குழந்தையின் அலறலும் கேட்டது.  பதறிப் போய் பால்கனியிலிருந்து கீழே  பார்த்தேன். எங்கள் வீட்டு வாசலில் உள்ள டிரான்ஸ்பார்மர்தான் வெடித்துக்கொண்டு தீபாவளி புஸ்வானம் மாதிரி எரிந்து கொண்டிருந்தது.  தெருவே கூடி விட்டது. மண்ணைப் போட்டு எல்லோரும் அணைத்துக் கொண்டிருந்தார்கள். மின்சாரம் துண்டிக்கப் பட்டது.  மின் ஊழியர்கள் உடனே வந்து விட்டார்கள். டிரான்ஸ்பார்மரில் எரிந்து கருகிப்போன ஒயர்களை எல்லாம் துண்டாக வெட்டி வெளியே எறிந்தார்கள். உடனே மின்சரம் எடுக்கும்படி சரி செய்து கொண்டிருந்தார்கள்.  அந்த ராத்திரியில் அப்பாவை அறையில் விட்டுவிட்டு வந்து விட்டேன்.  அவரோ அறையில் இருட்டில் பேன் இல்லாத புழுக்கத்தில் என் பெரைச் சொல்லி பெரிசாக கத்த ஆரம்பித்து விட்டார்.  பின்னர் அவர் அறைக்குச் சென்று அவரைச் சமாதானம் செய்தேன்.
இன்று நானும் அப்பாவும்தான் வீட்டில் இருந்தோம்.  நான் கதை சொல்றேன் என்றேன்.  அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தார்.  பின் நான் தொந்தரவு செய்தேன்.  வேறு வழி இல்லாமல் சரி சொல்லு என்றார்.  நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்…ஒரு அப்பா, ஒரு பையன், பையனின் மனைவி. அப்பாவுக்கு 93 வயது.  பையனுக்கு 62 வயது.  பையன் மனைவிக்கு 59 வயது….அப்பா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்….என்ன நான் சொல்ற கதை புரியுதா…. ஒன்றும் சொல்லவில்லை….நான் திரும்பவும் ஆரம்பித்தேன்..பையனுக்கு ஒரு நாள் என்னமோ ஆகிவிட்டது…அவனுக்கு அவன் யார் என்று தெரியவில்லை….எங்கே இருக்கிறோம்னு தெரியலை….அப்பா சொன்னார்…’என்னைப் படுக்க விடேன்…ஏன் இதெல்லாம் சொல்றே..’  ‘சரியப்பா நான் விட்டுடறேன்..ஆனா இதுவரை சொன்ன கதையைச் சொல்லேன்.’ என்றேன். அப்பா கதையைத் திருப்பி சொல்லவில்லை.  அவர் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார்….

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 3 அழகியசிங்கர்

அழகியசிங்கர்








வழக்கம்போல் இந்த ஞாயிற்றுக்கிழமை (17.04.2016) கூட்டம் 4.30 மணிக்கு. 
விஜய் மகேந்திரன், வினாயக முருகன்  வேடியப்பன் முதலிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டு கதை வாசிப்பதாக கூறி உள்ளார்கள்.  நீங்களும் வரலாம்.  தூரம் ஒரு பொருட்டல்ல என்றால் வரலாம்.
புதிய முறையாக கதையைப் படிக்காமல் சொல்லிப் பார்க்கும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
போன ஞாயிற்றுக்கிழமை கவிதையே வாசிக்கவில்லை.  இந்த முறை முதலில் கவிதையுடன் தொடங்கலாம் என்று நினைக்கிறோம்.இந்த முயற்சியை இன்னும் பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல தோன்றுகிறது. 
தி நகரில் உள்ள வெங்கட நாராயணன் தெருவில் உள்ள நடேசன் பூங்காவில் நடைபெற உள்ளது.
உங்களுடைய ஆதரவு தேவை.

என்னுடைய கதை….

அழகியசிங்கர்


இந்த மாதம் கலைமகள் இதழில் விருட்சத்தில் வெளியான டீ என்ற என் சிறுகதை திரும்பவும் பிரசுரமானது.  என்னால் நம்ப முடியவில்லை.   கலைமகள் ஆசிரியருக்கு என் நன்றி. நீங்களும் படிக்க அந்தக் கதையை இங்கு அளிக்கிறேன்.
..
டீ………
அந்தக் கிராமத்தில் அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் வயதானவர்கள்.  தினமும் அவர்கள் சந்திக்கும் இடம்.  அந்தக் கிராமத்திலேயே பிரதானமாக இருக்கும் அந்த டீ கடையில்தான்.  என்ன அந்த டீக் கடையில் முக்கியமானது என்றால் ஒன்றுமில்லை.  அது கொஞ்சம் பெரிய டீக் கடையாக இருக்குமாதலால்,  அவர்கள் இருவரும் அமர்ந்துகொண்டு உலக விசாரணை வீட்டு விசாரணையெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.  நான் அவர்கள் இருவரையும் அடிக்கடிப் பார்ப்பேன்.  பென்சன் பணம் வாங்க எங்கள் வஙகிக் கிளைக்குத்தான் வருவார்கள்.  சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்து மாட்டிக்கொண்ட என்னைப் பார்த்து பச்சாதாபப்படுவார்.  
“இந்த இடத்திலேயே இருக்கீங்களே இந்த இடம் போரடிக்கவில்லையா?” என்று ஒரு நாள் கலியமூர்த்தி என்ற பெரியவரைப் பார்த்துக் கேட்டேன்.
:”போரடிக்கவில்லை.  ஆனா எனக்கு மெட்ராஸில இருந்தாதான் போரடிக்கும்,” என்றார் அவர்.
“நீங்க மெட்ராஸ் வந்திருக்கீங்களா?”
“ஒரே தடவைதான் வந்திருக்கிறேன்.  மயிலாப்பூர் என்ற இடம்.  என் தம்பிக்கு கல்யாணம் ஆன சமயத்தில,”
“நான் ஒருமுறை கூட மெட்ராஸ் போனதில்ல.. திருச்சிக்குப் போயிருக்கேன்,” என்றார் அப்துல்லா என்ற கலியமூர்த்தியின் நண்பர்.
இருவரும் அந்தக் கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டிலே இருந்தார்கள். மிக சிறிய வீடு.  ஒரு வரண்டா ஒரு அறை ஒரு சமையல் அறை. கழிவறையும், குளிக்கும் இடமும் தனித்தனியாக பின்னால் இருந்தன.  இரண்டு வீடுகளும் ஒரே மாதிரியாகக் கட்டியிருந்தார்கள்.
“நாங்கள் இருவரும் சகோதரர்கள் மாறி.. எங்கள் வாரிசுகள் எல்லாம் எங்கக் கூட இல்லை.” என்றார் அப்துல்லா.
“எனக்கு ஒரே ஒரு பையன்.  அவன் அமெரிக்காவில இருக்கான்.  வருஷத்துல ஒரே ஒருமுறை வந்திருந்து சில நாட்கள் இங்கே தங்கிவிட்டுப் போவான்,”என்றார் கலியமூர்த்தி.
“எனக்கு ஒரே ஒரு பெண்தான்.  அதைக் கட்டிக் கொடுத்துட்டேன்.  அது துபாயில இருக்கு.  ‘அப்பா, எப்படி இருக்கேன்னு’ விஜாரிக்கும்,  அவ்வளவுதான்.” என்றார் அப்துல்லா.
அவர்கள் குரல்களில் இதையெல்லாம் சொல்லும்போது எந்த வருத்தமும் இல்லை.  வருமானம் என்று பெரிதாக இல்லாவிட்டாலும, அவர்கள் இருவரையும் பாதுகாத்துக்கொள்வதற்கான பணம் கிடைக்காமல் இல்லை. மேலும் அவர்கள் தேவை ரொம்பவும் குறைவு. 
முதலில் அப்துல்லா மனைவிதான் இறந்து போனாள்.  அதன்பின் அப்துல்லா கலியமூர்த்தி வீட்டில்தான் சாப்பிடுவார்.  அதற்காக அவர் பணம் கொடுத்தாலும் கலியமூர்த்தியும் அவர் மனைவியும் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டனர்.
“என் சகோதரன் மாதிரி நீங்கள்,” என்று கலியமூர்த்தியின் மனைவி அப்துல்லாவை கவனித்துக் கொள்வாள்.  அதுமாதிரி சமயங்களில் அப்துல்லா உண்மையில் நெகிழ்ந்து போயிருக்கிறார். மேலும் அந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு இவர்கள் இருவர் குடும்பங்களையும் தெரியும்.  கிராமத்தில் எதாவது பிரச்சினை என்றால் இவர்களுடைய அறிவுரையைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.  
ஒருமுறை கிராமத்தில் காலரா நோய் தொற்றிக்கொண்டபோது எப்படி மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பது என்பது பற்றி மருத்துவ ரீதியில் தெரிந்துகொண்டு பலரிடம் அறிவுரை கூறி பிரச்சாரம் செய்தார்கள் இருவரும்.  
ஒரு வருடம் முன்புதான் கலியமூர்த்தியின் மனைவியும் இறந்து விட்டாள்.  கண்கலங்கி அவள் கணவரையும், அப்துல்லாவைப் பார்த்தும் கையசைத்து விட்டுப் போய்விட்டாள். அது ஒரு பெரிய துக்கமாக கலியமூர்த்தியை வாட்டியது உண்மைதான்.  அந்தத் தருணத்தில் அப்துல்லாவின் துணை பெரிதும் தேவைப்பட்டது.  
இப்படி அதிசயமாக இரண்டு பேரகள் இருப்பதை நினைத்து அந்த ஊரே பெருமைப் பட்டது.  அவர்களுக்குள் எந்தச் சண்டையும் நிகழ்ந்ததில்லை. ஹிந்து கோயிலுக்குள் அப்துல்லாவும், மசூதிக்கு கலியமூர்த்தியும் போய் வருவார்கள்.  
அந்தக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் இருவர் மீது ஒரு சந்தேகம் எப்போதும் வலுத்துக் கொண்டே இருந்தது.  எப்படி அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதுதான் அந்தச் சந்தேகம்.  அவர்கள் வீட்டில் அவர்கள் எந்தச் சமையலையும் அடுப்பை மூட்டி சமைப்பதில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் உணவு வழங்கினாலும, அது ஒரு தொடர்கதை கிடையாது.  சில நாட்கள் யாருமே அவர்களுக்கு உணவு வழங்கமாட்டார்கள்.  
அதேபோல் உணவு இல்லை என்று அவர்கள் கவலைப் படுவதுமில்லை.  எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது? அவர்களுடைய எளிமையான வாழ்க்கை அவர்களை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கிறது.
யார் வேண்டுமானாலும் காலையில் அவர்கள் இருவரையும் டீக் கடையில் பார்க்கலாம்.  டீக்கடையில் வாங்கும் தினசரிகளை வைத்துக்கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச நேரம் நடப்பார்கள்.  கிராமத்தில் உள்ள பாதையில்.  பின் டீக்கடையில் டீயைச் சாப்பிட்டபடி கிட்டத்தட்ட காலை 11 மணி வரை பொழுதைக் கழிப்பார்கள்.  பின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு சிறிது நேரம் தூங்கி எழுந்து திரும்பவும் டீக் கடைக்கு வந்து விடுவார்கள்.
எனக்கு அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கேட்டவுடன் ரொம்ப ஆச்சரியம்.  எப்படி சமையல் பண்ணாமல் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்பதுதான் சந்தேகம்.
என் அலுவலக நண்பரை நான் கிண்டல் செய்வேன்.  அலுவலகம் நடந்து கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக அவன் வெளியே ஓடுவான்.  என்ன காரணம் என்றால் சுடச்சுட டீக் கடையில் போடும் போன்டாவைச் சாப்பிடத்தான் அவன் அப்படி ஓடுவான்.  அதனால் அவன் பெயரை போன்டா ஸ்ரீனிவாசன் என்று அலுவலகத்தில் கூப்பிடுவோம்.
அவனைப் பார்த்துதான் ஒரு முறை கூறினேன் : “நீ இப்படி போன்டாவுக்காக தினமும் ஓடுகிறாயே,,,அவர்களைப் பார்த்தாயா? எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்கள்.”
“யாருக்கு என்ன தெரியும்.  அவர்கள் இருவரும் டீக் கடையில் இருப்பதால் எதாவது சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள் என்று.”
எனக்கும் அந்தச் சந்தேகம் எழுந்ததால், டீக் கடைக்காரரிடம் ஒரு நாள் அவர்களைப் பற்றி விஜாரித்தேன். 
“அவர்கள் இருவரும் இந்தக் கடைக்கு வருவதால்தான் இந்தக் கடையில் லட்சுமி கடாச்சாம் தவழ்கிறது.  டீயைத் தவிர அவர்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.”
“ஒரு நாளைக்கு எத்தனை டீ சாப்பிடுவார்கள்.”
“பத்து பதினைந்து சாப்பிடுவார்கள்.  சில சமயம் 20 டீக் கூட சாப்பிடுவார்கள்.”
“நிஜமாகவா?”
“உண்மைதான் சார்.  நல்ல மனுஷங்க சார் இரண்டு பேரும்.”
அன்றிலிருந்துதான் என் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருந்தது.  எப்படி இவர்கள் இருவரும் டீ மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள் என்று,
அவர்கள் இருவரும் ஒருமுறை வங்கிக் கிளைக்கு வந்தவுடன், விஜாரித்தேன்.  “இது உண்மையா?”
“எது?”
“நீங்க இருவரும் டீ மாத்திரம் சாப்பிட்டு இருப்பது.”
“ஆமாம்.” என்றார் அப்துல்லா.
“எப்படி அது மாதிரி இருக்க முடியும்?”
“எங்கள் தேவை மிகக் குறைவானது.  ஒரு நாள் அப்படி இருக்க முடிவு செய்தோம்.  வெறும் டீ மாத்திரம் அன்று குடித்தோம்.  பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது.  எங்களால் அப்படி இருக்க முடிந்தது.”
“நானும் அப்படி இருக்க முடியுமா?”
“நீங்க ஏன் தம்பி அப்படி இருக்கணும்.  நாங்க வயசானவங்க.  எந்த வேலையும் எங்களுக்குக் கிடையாது.  இன்னும் எத்தனை வருஷம் உயிரோடு இருப்போனுன்னு தெரியாது. அதனால் டீயைக் குடிச்சிட்டு காத்திருக்கிறோம்.”
நான் அந்தக் கிராமத்தை விட்டு வேற கிராமத்திற்கு மாறி வந்து விட்டேன்
  ஆனால் அந்தக் கிராமத்தில் இருக்கிற அந்தப் பெரியவர்களை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.
ஒருநாள் தினமலர் பத்திரிகையைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு செய்தி, அவர்கள் இருவர் புகைப்படங்களைப் பிரசுரம் செய்து.  ’75 வயதிலும் டீ மாத்திரம் குடித்து உயிர் வாழ்கிறார்கள்,’ என்று.
  
.

முதல் இதழ் நவீன விருட்சம்

அழகியசிங்கர்


மொத்தம் 16 பக்கங்கள்.  ஜøலை – செப்டம்பர் 1988 ஆண்டு வெளிவந்தது.  மயிலாப்பூரில் உள்ள ஒரு அச்சக உரிமையாளரிடம் தயார் செய்யக் கொடுத்திருந்தேன்.  500 பிரதிகள் அடித்தேன் என்று ஞாபகம்.  எல்லாப் பக்கங்களும் கவிதைகள்.  அதை அச்சடித்துவிட்டு எடுத்துக்கொண்டு வரும்போது, அச்சக உரிமையாளரைப் பார்த்தேன்.  அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன்.  ஆனால் அவர் ஏளனமாகப் பார்ப்பதுபோல் இருந்தது. அவர் அச்சக உரிமையாளர் மட்டுமல்ல, ஆனால் ஒரு இலக்கியவாதியும் கூட.  
‘இதில் உள்ள கவிதைகளைக குறித்து என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டேன்.
அவர் சொன்னார் : ‘ இதெல்லாம் கவிதை இல்லை.’
அடுத்த இதழ் அங்கு அடிக்கப் போகவே இல்லை.  ஏன் மையிலாப்பூர் பக்கமே தலையை வைத்துப் படுக்கவில்லை.  எங்காவது பார்த்தாலும் தள்ளிப் போய் நிற்பேன்.  தப்பி தவறி பார்த்துவிட்டால் போதும் அவருடைய ஏளனப் பார்வை என் முன்னால் தவழ்ந்தபடி வரும். 
16 பக்கங்களில் கவிதைகள் எழுதியவர்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. ரா ஸ்ரீனிவாஸன் 2. கோபி கிருஷ்ணன் 3. தேவதேவன் 4. ஆர்.ராஜகோபாலன் 5. துரியன் கோஷ் ப்ரீதி 6. சுரேசன் 7. ஆனந்த் 8. ஞானக்கூத்தன் 9. கண்ணன் எம் 10. ஜெயதேவன் 11. ஆ இளம்பரிதி 12. எஸ் வைத்தியநாதன் 13. கி சீனிவாசன் 14. நாரணோ ஜெயராமன் 15. அழகியசிங்கர் 
முதல் பக்கத்தில் அலங்கரித்த ஸ்ரீனிவாஸன் கவிதையை இங்கு அளிக்கிறேன்.
ரா ஸ்ரீனிவாஸன்
சூரியனைத் தவிர
சூரியனே, நீ உதயமாகும் பொழுது 
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி

நீ மறைகின்றாய்
மலைகளுக்கும்
கட்டிடங்களுக்கும்
ஒவ்வொன்றிற்கும் அப்பால்
நீ எழுதிய ஓவியமும்
மெல்ல அழிகின்றது
இருள் சூழ்ந்து
பின்பு அதிகாலையினில்
நீ உதிக்கின்றாய்
உன்னுடன் நானும் 
மாலைக்கான ஓர் புதிய ஓவியமெழுத.

குழந்தையின் தோழர்

தம்பி சீனிவாசன்

அம்மா அப்பா என் மேலே
அன்பைக் காட்டும் தோழர்கள் – நான்
கும்பிடும் சாமி நீயும் என்
கூட ஆடும் ஒரு தோழன்