குழந்தைகள் பூங்காவில்

அழகியசிங்கர்



நேற்று ஞாயிற்றுக்கிழமை.  இந்த முறை விட்டுவிடலாம் என்று தோன்றியது. அதற்குக் காரணம் அப்பா. வீட்டில் அறையில் இருந்த அவர் நொடிக்கொருதரம் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்.  எங்கும் நகர முடியவில்லை.  கிருபானந்தன் போன் செய்தார்.  அசோக்நகரில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்குச்  சென்றோம்.  இந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயகாந்தன் கதைகளும் ஞானக்கூத்தன் கவிதைகளும்.  பிறகு எங்களுடைய கதைகள் கவிதைகள் வாசித்தோம்.
குழந்தைகள் பூங்காவில் நாங்கள் வாசித்ததுக் கொண்டிருந்தபோது, ஊஞ்சல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.  பக்கத்தில் ராஜாமணி வீடு இருந்தது.  அங்கு போய்விட்டோம்.  ராத்திரி 8 மணிவரை படித்தோம். ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு மாதிரி.  இதுவும் அப்படித்தான். கதைகளையும், கவிதைகளையும் படிக்கும்போது அது ஒருவித அனுபவத்தைத் தராமல் இருக்க தவறுவதில்லை.  பின் நாங்களே கதை சொல்லும் முயற்சியையும் செய்து பார்த்தோம்.  எல்லாவற்றையும் ஆடியில் கொடுத்துள்ளோம். கேட்டு மகிழவும். உங்கள் கருத்துகளை அறிய ஆவல். மேலும் இதை இன்னும் பிரமாதமாகக் கொண்டு போக என்ன வழி என்று சொல்லவும்.

எழு வரிக் கதைகள்

அழகியசிங்கர்
1.சிகரெட் பிடிப்பவன்…
நானும் என் மனைவியும் தெருவில் நடந்து சென்றோம்.  தெரு முனையில் வாலை ஆட்டியபடி மாடுகள்.  வீரபாகு திரும்பவும் மாடு வியாபாரமும் பால் வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறான்.  அவனைப் பார்த்தாலே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவனும் அதைப் பொருட்படுத்தவில்லை.  கோடம்பாக்கம் ரோடில் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்தோம்.  வண்டி ரிப்பேர் என்பதால் வண்டியில் செல்லவில்லை.  மசூதி தெருவில் தனியாக இருக்கும் மாமியார் வீட்டிற்குத்தான் சென்று கொண்டிருந்தோம்.  தெருவில் ஒரு இடத்தில் நாலைந்து இளைஞர்கள் சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நான் சிகரெட் பிடிப்பேன்,” என்றேன் மனைவியிடம்.
அவள் பேசாமல் வந்து கொண்டிருந்தாள்.  நான் திரும்பவும் அதையே சொன்னேன்.
“நான் நம்பவில்லை,” என்றாள் அவள்.
“நீ நம்ப வேண்டும், அவ்வளவுதானே,,” என்று ஒரு பெட்டிக் கடையை நோக்கிச் சென்றேன்.  கடைக்காரனைப் பார்த்து, “ஒரு சிகரெட்” என்றேன்.  “என்ன பிராண்ட்” என்று கேட்டான்.  “ஏதோ ஒன்று,” என்றேன்.  அவன் ஒரு சிகரெட்டைக் கொடுத்தான்.  அதைப் பற்ற வைத்துக் கொண்டேன்.  மனைவி முன் சிகரெட்டை ஊதினேன்.  அவள் சிரித்தாள்.  “இப்பவாவது தெரிந்து கொள்.. நான் சிகரெட் பிடிப்பேன்” என்றேன்.  அவள் மௌனமாக இருந்தாள்.
“என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று கேட்டேன்.
“இப்பவும் சொல்கிறேன்…உங்களால் சிகரெட் பிடிக்க முடியாது,” என்றாள்.
கையிலிருநத சிகரெட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, அவளுடன் அமைதியாக நடந்தேன்.

2.  பெயரை மாற்றிப் பார்
 நாங்கள் இருவரும் ஒரு பஸ்ஸில் தியோசபிகல் சொûஸட்டிக்குச் சென்று கொண்டிருந்தோம்.  “ஓரு கவிதை சிறந்தது என்று எப்படித் தெரியும்,” என்று கேட்டேன்.
“கவிதை உயிரோடு இருக்க வேண்டும்.  அதுதான் சிறந்த கவிதை,” என்றார்.
“உயிரோடு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது,”என்று கேட்டேன்.
“அது உமக்குப் புரியாது,ý”என்றார்
பின் நாங்கள் இருவரும் தியோசபிகல் சொûஸட்டி கட்டடத்திறகு உள் சென்றோம்.  அவர் ஒவ்வொரு மரம் முன் நின்று நின்று வந்தார்.  ஒரு மரம் குள்ளமாக இருந்தது.  அடர்த்தியாய இலைகள் இருந்தன.  ஒரு மரம் நீண்டு இருந்தது.  அந்த மரத்தின் பெயரை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார்.  ஒரு ஆலமரத்தின் கீழ் ஒரு பெரிய பாறாங்கல் இருந்தது.  ஏன் அதை கையால் அவர் புரட்டினார் என்று தெரியவில்லை.  நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு கருந்தேள் கண்ணில் தட்டுப் பட்டது.  எனக்கும் அவருக்கும் திகைப்பு.
பின் அங்கிருந்து வறண்ட குளம் கிட்டே போய் நின்றோம். üüஉன் பெயரை மாற்று,ýý என்றார் பின்  ஒரு பேப்பர் பேனாவை எடுத்து என் பெயரை மாற்றி எழுதினார்.  அவர் பெயரையும் எழுதினார்.  பின் அந்தக் காகிதங்களை தூக்கி குளத்தில் போட்டார்.  
அன்று நான் வீட்டிற்குத் திரும்பிய பிறகு யோசித்தேன்.  ஏன் அவர் அப்படிச் செய்தார் என்று. 
2.   நேதாஜிதாசன் 
1,  கேள்வி
ஒரு யோகியிடம்  ஒரு பெரிய செல்வந்தர் “பிறப்பதற்கு முன் மனிதன் என்னவாக இருப்பான்” என்று கேட்டான். அதற்கு அந்த யோகி  “எனக்கு எப்படி தெரியும்” என பதிலளித்தார்.அந்த செல்வந்தன் “நீங்கள் ஒரு முற்றும் உணர்ந்த யோகி. உங்களுக்கு தெரிந்திருக்கும்” என சொன்னார்.மீண்டும் அந்த யோகி பேச ஆரம்பித்தார் “நான் யோகி தான் ஆனால் இன்னும் பிறக்கவே இல்லை”.
அந்த செல்வந்தன் பயங்கர குழப்பத்துடன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த யோகி தன் அருகில் இருந்த சீடனிடம் சொன்னார் “இவர்களை கேள்வி கேட்க இயலவில்லை என்ற நிலையில் வைத்திருக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு” என.அந்த சீடன் ஒரு இருபது நொடிக்கு சிரிப்பை நிறுத்தவில்லை

அங்கும் இங்கும்……..

அழகியசிங்கர்
கவிதைக்காக என்ற புத்தகத்தில் ஞானக்கூத்தன் கொஞ்சம் பேசட்டுமா? என்ற தலைப்பில் இப்படி எழுதியிருக்கிறார் :
‘கடினமான காரியங்களில் ஒன்று படிப்பது.  இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள்.  முற்றிலும் தப்பித்துக் கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்து விட்டது.  எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம்.  நாவல் படிப்பவர்க் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிப்பவர்கள் நாவல்களைப் படிப்பதாகத் தெரியவில்லை.  பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை.  படிப்பவர்கள் அதைக் கேலி செய்ய இடம் தரும் எழுத்துகளைப் படிக்கிறார்கள்.  இப்படி வாசகரகளின் கடைத்தெரு வீணாகிக கொண்டிருக்கிறது.  இதற்கிடையில் படிக்கிறார்களோ இல்லையோ வெளியிடும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ எழுதுகிறவர்கள் இருந்து வருகிறார்கள்.’
34 தலைப்புகளில் 256 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூல் இது.  எனக்கு மட்டும் அதிகாரம் கிடைத்தால் இதை ஒரு பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பேன்.  பழைய இலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் ஒன்றாகக் கொண்டு வரும் முயற்சி இதில் இருக்கிறது.
பழைய அரிய தகவல்களை இப் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.  அதைவிட முக்கியம் ஞானக்கூத்தனின் தமிழ் நடை.  
கவிதை எழுதுபவர்களும் கவிதையைப் பற்றி புரிந்துகொள்ள விரும்புவர்களும் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும்.  2009ல் கொண்டு வந்த இந்தப் புத்தகத்தை இன்னும் நான் விற்றுக் கொண்டிருக்கிறேன்.  
புத்தகம் எழுதுபவர்கள் கடைசி வரை புத்தகத் தலைப்பைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு கவிதையோ கதையோ எழுதினால் தலைப்பை நாம் எழுதி முடித்தப்பின்தான் யோசிப்போம்.
ஞானக்கூத்தன் வித்தியாசமானவர்.  முன்னதாக அவர் கொண்டு வர விரும்பிய கவிதைத் தொகுதிக்கு ‘கந்திற் பாவை’ என்ற தலைப்பில் வர உள்ளதாக இந்தப் புத்தகத்தில் 2009 ஆம் ஆண்டில் விளம்பரப் படுத்தி உள்ளார்.   ஏனோ அப் புத்தகம் வரவில்லை.  என்னைப் போல் சாதாரணமானவர்களுக்கு இது போன்ற தலைப்புகள் கற்பனையில் கூட தோன்றாது.  
ஆனால் இத் தலைப்பை தேவகாந்தன் என்ற எழுத்தாளர் அவருடைய நாவலுக்கு சூட்டி விட்டார்.  காலச்சுவடு அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளது.
தேவகாந்தன் இதைத் தெரிந்து செய்தாரா தெரியாமல் செய்தாரா என்பது தெரியவில்லை.  

ஏடிஎம்மில் போய் ஏன் பணம் எடுக்க முடியவில்லை?

அழகியசிங்கர்


சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் எனக்கு போன் செய்தார்.  “ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.  “நிச்சயமாக,” என்றேன்.  “ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும்,” என்றார்.
நான் அவரைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றேன்.  என் வீடு பக்கத்திலேயே அவர் வீடு இருந்தது. அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன்.  
சிலசமயம் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார். அவர் எதிர்பார்க்கும் ஞாயிற்றுக்கிழமையில் நான் போயிருக்க மாட்டேன். அவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.  அந்த ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இன்னொரு ஞாயிற்றுக்கிழமை செல்லும்போது, “உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்,” என்று அவர் மனைவிதான் குறிப்பிடுவார்.
அவரால் நடக்கவே முடியாது.  ஆர்யக்கவுடர் தெருவில் உள்ள ஏடிஎம்மில் அவரால் நடந்தே போக முடியாது.  நான் டூ வீலரில் அவரை உட்கார வைத்து அழைத்துக் கொண்டு போவேன்.  அப்போது டூ வீலரை ஜாக்கிரதயாக ஓட்டுவேன்.  ஏன் எனில் அவர் குள்ளமாக குண்டாக இருப்பார்.  எனக்கு டூ வீலர் ஓட்டும்போது தடுமாற்றம் ஏற்படுமோ என்று தோன்றும்.
ஏடிஎம் இருக்கும் இடத்திற்குப் போவோம்.  பின் மெதுவாக படி ஏறுவார். சில படிகள் என்றாலும் அவருக்கு ஏறுவதில் தடுமாற்றம் இருக்கும்.  நான் அவருக்கு உதவி செய்வேன்.  என் தோள்பட்டையைப் பிடித்தபடி படிக்கட்டு ஏறுவார்.
ஏடிஎம் அறையில் அவரிடம் உள்ள கார்டை என்னிடம் கொடுத்து விடுவார். ஏடிஎம் பெட்டியில் கார்டை செலுத்தி அவரால் பணம் எடுக்க முடியாது.  ரொம்ப மெதுவாக சீக்ரெட் எண்களைச் சொல்வார்.  
அவருக்கு என் மீதே சநதேகம் வந்து விடுமோ என்று தோனறும்.  அவர் கேட்கும் தொகையை எடுத்துக் கொடுப்பேன்.  அந்தத் தொகையை அவர் 15 நாட்கள் அல்லது 30 நாட்கள் வைத்துக் கொண்டு செலவு செய்வார்.  ஏன் அவரால் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை என்று பலமாக யோசிப்பேன்.  அவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம் இருக்கும். 
பின் அங்கிருந்து நாங்கள் ஜேபி டிபன் சென்டருக்குப் போவோம்.  எனக்கும் அவருக்கும் பொங்கல் என்றால் பிரியம்.  மேலும் ஜேபி டிபன் சென்டரில் டிபன் செலவு குறைவாக இருக்கும்.  அவர் சரவணா ஓட்டலுக்குப் போவதை விரும்ப மாட்டார்.
வாரத்திற்கு ஒரு முறை அவர் இப்படி வெளியில் வருவதுண்டு.  மற்றபடி வீட்டிலேயே இருப்பார்.  எங்கும் போக முடியாது.  போகவும் மாட்டார்.  அவர் வீட்டில் வைத்திருக்கும் புத்தகங்கள் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருப்பார். அவற்றைப் படித்து எழுதுவார். அவர் வீட்டில் கணனி கிடையாது.  அவருக்கு உபயோகப் படுத்தவும் தெரியாது.
மின்சாரக் கட்டணத்தை அவருக்காக இன்டர்நெட் மூலம் நான் கட்டுவேன். நான் கட்டிக் கொடுத்தாலும் அதை அவர் நம்ப மாட்டார்.  அதைக் கட்டுவதற்காக ஒருத்தரை உதவிக்கு வைத்துக் கொண்டிருந்தார்.  உதவி செய்பவ் நேரில் போய் மின்சாரத் தொகையை கட்டினால்தான் நம்புவார்.
“கொஞ்சமாவது நடக்க முயற்சி செய்யுங்கள்,”என்பேன்.  அதைக் கேட்கவே அவர் விரும்ப மாட்டார்.
ஒரு முறை ஒரு கல்யாணத்திற்கு என்னை அழைத்துப் போகச் சொன்னார். “நீயும் வா..தெரிந்தவர்கள் கல்யாணம்தான்,” என்றார்.  “நான் எப்படி வருவது. என்னை யாருக்கும் தெரியாதே?,” என்றேன்.  “பரவாயில்லை…வா..யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.  நான் உன்னைக் கூப்பிடுகிறேன்,” என்றார்
நான் வேறு வழி இல்லாமல் என்னுடைய நானோ காரில் அவரை அழைத்துக் கொண்டு போனேன்.  என் காரில் அவர் உட்கார்ந்தாலும் அவர் முகத்தில் நான் சரியாக ஓட்டுகிறேனா என்ற பயம் இருந்துகொண்டு இருக்கும்.
நாங்கள் இருவரும் கல்யாண மண்டபத்திற்குச் சென்றோம்.  முதல் மாடியில் கல்யாணம்.  லிப்டில் ஏறிப் போய்விட்டோம்.  சாபபிட்டுவிட்டு மாடிப்படிக்கட்டுகள் வழியாக இறங்கினோம்.  அவரால் இறங்க முடியவில்லை.  மூச்சு வாங்கியது.  எனக்கு திகைப்பாக இருந்தது.  ஒருவர் ஏறுவதற்குத்தானே திணறுவார்.  இவர் இறங்கவே தடுமாறுகிறாரே என்று நினைத்தேன்.   அவரை வீட்டில் கொண்டு போய் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
பின் சரவணா ஓட்டலுக்கு அழைத்துப் போய் பொங்கல் வாங்கினேன். அவரும் வந்திருந்தார்.  திடீரென்று உட்கார்ந்து விட்டார்.  ஒரு மாத்திரை பெயரைச் சொல்லி உடனே வாங்கி வரச் சொன்னார். எதிரில் அப்போலோ பார்மஸியில் வாங்கி வந்தேன்.  மாத்திரையை விழுங்கியபிறகு அவருக்கு சரியாகிவிட்டது.  வீட்டில் கொண்டு வந்து விட்டேன்.  இனிமேல் அவரைப் பார்க்கவே கூடாது என்று நினைத்தேன்.  அப்படிப் பார்த்தாலும் வெளியே அழைத்துப் போகக் கூடாது என்று நினைத்தேன்.  ஒரு நாள் மதியம் அவர் மனைவி மடியில் இறந்து விட்டார்.  அன்று அவர் விபூதிப் பூசிக்கொண்டு பளிச்சென்று இருந்தார்.
ஒவ்வொரு முறை நான் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, 68 வயதில் ஏன் அவரால் பணம் எடுக்க முடியவில்லை என்று யோசிப்பேன்.

ஏழு வரிகளில் கதை….


செல்வராஜ் ஜெகதீசன் 
நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா?”



“மொத்தமா உன் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல எத்தனை பேர் தேறும்” என்றான் ரமேஷ்.
ரமேஷ் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இப்படி எதையாவது கேட்பான். அப்போது சரவணன் பேசிக்கொண்டிருந்தான். வெளியூரில் வேலை. ஏதோ விடுமுறையில் வந்திருந்தான்.
“உன்னையும் (என்னைக்காட்டி) இவனையும் விட்டா இன்னும் ஒரு ரெண்டு பேர் தேறும்…நான் அதிகமா யார் கிட்டயும் அவ்வளவா வச்சிக்கிறதில்ல..”என்றான் சரவணன்.
“நல்லா யோசிச்சுப் பாரு.. அது மட்டும்தான் காரணமா…” என்ற ரமேஷிடம்
“இப்போ என்ன சொல்ல வர?”…என்றான் சரவணன்.
“கடந்த அரைமணி நேரமா நீதான் பேசிக்கிட்டிருக்க…நாங்க வெறுமனே கேட்டுக்கிட்டுதான் இருக்கோம்…இதுவே உன் பிரண்ட்ஸ் சர்க்கிள் கம்மியா இருக்கக் காரணமா இருக்கலாம். நீ கொஞ்சம் அதிகமா பேசற..”
நன்றாக யோசித்திருப்பான் போலிருக்கிறது. இப்போதெல்லாம் பேசும்போது இடையிடையே “நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா?” என்பதை சேர்த்திருந்தான்.
பேச்சு என்னவோ அதே அளவுதான்.
o

ஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார்

அழகியசிங்கர்
ஆத்மாநாமின் பிரச்சினை உடனடியாக புகழ் வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்று அவர் நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருக்கும் அதுமாதிரியான பிரச்சினை இருக்குமென்று தோன்றுகிறது. குறிப்பாக எழுதுபவர்களுககு.   எப்போதும் நம்முடைய எழுத்தை யாராவது படிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.  பத்திரிகைகளில் தினசரி தாள்களில் எதாவது படைப்புகள் வெளிவந்தால் அதை உடனடியாக தெரிந்தவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறார்கள். பின் அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.
இப்போதாவது முகநூல் என்ற ஒன்று இருக்கிறது.  அதன் மூலம் நாம் தெரிவிக்கிற கருத்துகளை உடனுக்குடன் மற்றவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இப்போது ஒருவருக்குக் கிடைக்கிற இந்த அங்கீகரிப்பு அன்று மட்டும் இருந்திருந்தால், ஆத்மாநாம் போன்றவர்கள் தற்கொலையே செய்திருக்க மாட்டார்கள்.  
அவர் எழுதி வைத்த அத்தனை கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வர வழி இல்லாமல் தவித்தார்.  அந்தச் சமயத்தில் அவர் எழுதிய வேகத்தில் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று தெரியவில்லை.  
நம் முன்னே விரிந்து கிடக்கும் இந்த உலகம் கொடூரமானது. அதை நாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேற வழி இல்லை.
ஆத்மாநாமிற்கு இதெல்லாம் தெரியாது.  கட்டாயம் தெரிந்திருக்கும்.  திறமையாக கவிதை எழுதத் தெரிந்த ஒருவருக்கு இதெல்லாம் ஏன் தெரியாது.  அப்படி தெரிந்தாலும ஒரு கேள்வி உள்ளே உழன்று கொண்டே இருக்கும்.  
üஏன் எல்லோருடைய கவனத்திற்கு எழுத்து போகவில்லை என்ற கவலை.ý அதைப் பற்றி யோசிக்க யோசிக்க பூதம் போல் அது வளர்ந்து கொண்டே அவரையே விழுங்கக் காத்திருக்கும்.
விடுதலை என்ற கவதையில் ஆத்மாநாம் இப்படி எழுதுகிறார்: 
கண்ணாடிச் சிறைக்குள்
கண்ணாடிச் சிறை
அக் கண்ணாடிச் சிறைக்குள்
நான்
அக்கண்ணாடிச் சிறையைத்
திறந்து
வெளி வர முயல்கிறேன்
திறக்கும் வழியே இல்லை.
இதுதான் பிரச்சினை.  ஆத்மாநாமின் பிரச்சினை.  அவருக்குத் தெரியவில்லை நம்மைச் சுற்றிலும் எந்தக் கண்ணாடிச் சிறையும் இல்லை என்பது.  நாமே கற்பித்துக் கொள்வதுதான் இந்தக் கண்ணாடிச் சிறை என்று. இப்படி வேறு விதமாக அவர் யோசித்திருந்தாலும் எதைக் குறித்து அவர் கவலைப் பட்டிருக்க மாட்டார்.
   நம்முடைய சராசரி நிலையை உணர்ந்து சாதாரணமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.  அப்படி இருந்தால் உடனடியாக புகழ் வேண்டும் என்ற வேதாளத்தைப் பிடித்துத் தொங்கியிருக்க வேண்டாம்.
ரொம்ப ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தார்.  இப்போதென்றால் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, ஷ்ரூதி டிவியைக் கூப்பிட்டு படம் எடுக்க வைத்து நாலு பேர்களைப் பேசக் கூப்பிட்டிருக்கலாம்.  ஆனால் அந்தக் காலத்தில் அதெல்லாம் தெரியவில்லை. 
    கவிதை நூலை கொண்டு வந்தவர் அதை எப்படி விற்பது என்பது கூட தெரியவில்லை.  அவருக்குத் தெரிந்த இன்னொரு கவிஞருக்கு அந்தப் புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து, படித்து அபிப்பிராயம் சொல்ல சொன்னார்.  ஏன் இது மாதிரி பெரிய தப்பை செய்தார் என்று தெரியவில்லை.  அந்த இன்னொரு கவிஞரும் அந்தப் புத்தகத்தை வாங்கியவர், அக் கவிதைப் புத்தகம் குறித்து எந்த அபிப்பிராயமும் சொல்லவில்லை.  கவிதை எழுதியவரும் விடாமல் அவரைப் பார்த்துக் கேட்க, வேற வழி இல்லாமல் அவர் சொன்ன கருத்து, கவிதைகள் பிடிக்கவில்லை என்பதுதான். 
என்ன பெரிய அடி கவிதை எழுதியவருக்கு..இதற்கு அடிப்படையான காரணம்.  ஆத்மாநாமின் சின்டரம்தான்.  உடனடியாக புகழ் வேண்டும்..ஆனால் சுஜாதா என்ற எழுத்தாளர் ஒரு இடத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன்.  உலகத்தில் எல்லோரும் சில நிமிடங்களாவது புகழ் அடைந்து விடுவார்கள் என்பது.  இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.
ஆனால் ஆத்மாநாமைப் பொறுத்தவரை அது தற்கொலை வரை போய் கொண்டு விட்டது.  சரி, நாம் வசித்துக் கொண்டிருக்கும் வீடு நம்மைவரவேற்குமா?  நிச்சயமாக இருக்காது…ஆத்மநாமிற்கு வீடு கண்டு கொள்ளவே இல்லை.  அவர் அன்புக்காக ஏங்கினார்.  
அவருடைய வெளியேற்றம் என்ற கவிதையைப் படித்துப் பார்க்கலாம்.
சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான் 
சிகரெட்டிலேயே 
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை 
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
ஆத்மாநாம் எதிர்பார்த்தது ஒரு புன்னகைதான், ஒரு கை அசைப்புதான் 
ஆனால் அது கூட கிடைக்கவில்லை.  என் கேள்வி ஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார் என்பதுதான். ஆத்மாநாம் போல் இன்றும் பலர் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிழல் ஆத்மாநாமன்களாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 

நகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகள்







அழகியசிங்கர்



ஏழு வரிக் கதைக்கு முக்கிய காரணம் நகுலன்தான்.  அவர் ஞானரதம் அக்டோபர் 1972ல் மூன்று நொடிக் கதைகள் எழுதி உள்ளார்.  அதைப்படித்துப் பார்த்தப் பிறகு அதே மாதிரியான முயற்சியை ஏன் எற்படுத்துக் கூடாது என்று தோன்றியது. இதோ நகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

கதை ஒன்று

ஆஸ்பத்திரி.

அறையில் அவன்.

ரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள்

நான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதம் தட்டி விழித்துப் பார்த்தான்.

யாரும் இல்லை.  மறுபடியும் தூங்கி விட்டான்.

அவ்விருவரும் வெளியில் வந்தனர்.

முதல்வன் : ஏன்?

மற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை.

கதை இரண்டு

அவளுக்கு ஐந்து வயது.

தாயிடம் விரைந்து சென்றாள்.

“அம்மா உன்னை யாரோ பார்க்க வந்திருக்கார்.”

“üயாருடி?”

“தெரியல்லே, அம்மா, கேட்டதுக்கு உனக்குத் தெரியும்கிறார்.”

அவள் வெளியே வந்ததும், அவனைப் பார்த்தாள்.

அவள், “குழந்தை வருவதற்கு முன் போய் விடுங்கள்.  உங்களுடன் இனியும் என்னால் அவஸ்தைப்பட முடியாது,”

அவன்,”அலமு, நான் சொல்வதைக் கேள்….”

அவள் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்றாள்.

அவன் சிறிது நேரம் நின்றுவிட்டுப் பிறகு ஸ்டேஷனுக்குச் சென்று ரயிலில் ஏறினான்.

கதை மூன்று

கடைத் தெரு.

பகவட 12 மணி.

நல்ல வெயில்.

அவள் பார்க்க மிக அழகாக இருந்தாள்.

பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.

üüஐயா, யாருக்குமே என் மீது இரக்கமில்லையா?  ஒத்தராவது எனக்குத் தாலிப் பிச்சை தர மாட்டீங்களா?ýý

கூட்டத்தில் ஒரு கூட்டச் சிரிப்பு.

üüபைத்தியண்டா,ýý என்ற கூக்குரல்

அப்பொழுது அவள் விழித்துக் கொண்டாள்.

நடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடிந்தது

அழகியசிங்கர்




ஒரு கவிதை ஒரு கதை கூட்டம் நேற்று (08.05.2016) வழக்கம்போல் நடேசன் பூங்காவில் நடைபெற்றது.  மௌனி கதைகளையும், ஆத்மாநாம் கவிதைகளையும் வாசிப்பதாக முடிவு செய்திருந்தோம்.  ஒவ்வொரு வாரமும் கூட்டம் என்பது இப்படித்தான் நடக்குமென்று எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு யார் தலைவர்?  யாரும் தலைவர் இல்லை.  வருபவர்கள் எல்லோரும்தான் தலைவர்கள்.  முதலில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஆத்மாநாம் கவிதைகள் ஒவ்வொன்றாக வாசித்தோம்.  கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் ஆத்மாநாமின் பெரும்பாலான கவிதைகளை வாசித்துவிட்டோம்.  ரவீந்திரன், கீதா ரவீந்திரன், திருமலை, நாகேந்திர பாரதி, நான், கிருபா எல்லோரும் வாசித்தோம். ஆனால் இப்போது தோன்றுகிறது ஒவ்வொரு கவிதையைக் குறித்தும் எல்லோரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியிருக்கலாமோ என்று. 
என் நண்பர் நாகேந்திர பாரதி அவருடைய கவிதை ஒன்றை வாசித்தார்.  அது குறித்து முடிந்த அளவு கருத்து தெரிவித்திருக்கலாம். அடுத்த முறை இது மாதிரி செய்து பார்க்கலாமென்று தோன்றுகிறது.
மௌனி கதைகளை வாசிக்கத் தொடங்கினோம்.  பூங்காவில் நாங்கள் இருந்த பகுதியிலிருந்து இன்னும் உள்ளே நிழல் அதிகமாக தரக்கூடிய இடமாக போய் உட்கார்ந்தோம்.  அந்த இடம் இன்னும் அற்புதமாக இருந்தது. குடும்பத்தேர் என்ற மௌனியின் கதையை திருமலை என்ற நண்பர் வாசித்தார்.  ஒரு முழு கதையை முழுவதுமாக ஒருவரே வாசிப்பதற்குப் பதில் விட்டுவிட்டு இன்னொருவரும் வாசிக்க சொல்லலாம் என்று தோன்றியது. அவர் வாசித்துக் கொண்டிருக்கும்போது ராகவன் காலனி முதியோர் இல்லத்திலிருந்து ஒரு அலறல்.  என் மனைவி அவசர அழைப்பு.  94 வயது தந்தையை கவனிக்கச் சொல்லி.  நடுவில் நான் போகும்படி ஆகிவிட்டது.  ஆனால் கூட்டத்தைத் தொடரும்படி கிருபாவிடம் கூறினேன்.  ‘நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் வாருங்கள்,’  என்று கூறினார்.
நான் உடனே வந்து விட்டேன்.  இன்னும் சிறிது நேரத்தில் முடியவேண்டிய கூட்டத்தில் முழுமையாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.   
வீட்டிற்கு வந்து மௌனியின் பிரபஞ்ச கானம் என்ற கதையை வாசித்தேன். அந்தக் கூட்டத்தை நான் வீட்டில்தான் முடித்தேன். ஒரு கதையை சத்தமாக வாசிக்கும்போது சில இடங்களில் வரிகள் தடுமாறுகின்றன.  தப்பாக படிப்பது போல் தோன்றுகிறது.  மௌனமாக வாசிக்கும்போதும் இது மாதிரியான பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.    ஆனால் நாம் வரிகளை மௌனமாக முழுங்கி முழுங்கி விடுவோம்.
எனக்கு வேடிக்கையாக இருந்தது.  இநதக் கூட்டம் நடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடிந்து விட்டது என்று.  
     கூட்டத்தில் நாங்கள் படித்ததை ஆடியோவில் பதித்து உள்ளோம்.  நீங்களும் கேட்டு ரசிக்கவும்.

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 5

அழகியசிங்கர்


மேற்படி ஐந்தாவது கூட்டமானது வரும் ஞாயிறு (08.05.2016) மாலை 5 மணிக்கு நடேசன் பூங்காவில் அரங்கேற்றம் நடாத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.நமது நண்பர் ஒருவர் அடிக்கிற கூத்தை யாராலும் தடுக்க முடியாது போல் இருக்கிறது. நாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கூட்டத்தைப் பார்த்து, பூங்காவிற்கு வரும் மக்கள் தொகை குறைந்து விட்டதாக குறிப்பிடுகிறார். இப்படியே போனால் பூங்காவிற்கு யாரும் வராமல் போகலாம் என்று பயமுறுத்துகிறார்.
நடேசன் பூங்காவில்தான் கூட்டம் நடத்த வேண்டுமா வேற எங்காவது போகலாமா என்று அசோக்நகரில் உள்ள ஒரு பூங்காவைப் பார்த்தேன். மெட்ரோ ரயில் ஓடும் பக்கத்தில் அந்தப் பூங்கா வீற்றிருக்கிறது. தினமும் நான் நடை பயிற்சி செய்யும் இடம். ஆனால் அந்தப் பூங்காவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு பிரச்சினை. சேனல் மியூசிக் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது சரிப்பட்டு வராது. நாம் படிக்கும் கதைக்குப் பதிலாக மியூசிக் கேட்கும்படி நேர்ந்தால்..அதனால் அதை விட்டுவிட்டேன். திரும்பவும் இந்த முறை நடேசன் பூங்கா. அடுத்த முறை வேற எதாவது பூங்கா கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். உங்களுக்கு எதாவது பூங்கா தென்பட்டால் தெரிவிக்கவும்.
யாராவது கூட்டத்திற்கு வந்திருந்து கலந்து கொள்ள ஆசைப் பட்டால் அவர்களுக்கு மின்சார வண்டி அல்லது பஸ்ஸில் வர வசதியாக ஒரு இடம் வேண்டும். அதற்கு நடேசன் பூங்காதான் சரி.
இந்த ஞாயிற்றுக்கிழமை (08.05.2016) அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு மெனனியின் கதைகளையும், ஆத்மாநாம் கவிதைகளையும் வாசிக்கலாமென்று தீர்மானித்திருக்கிறேன்.
யாராவது புதிதாக எழுதி உள்ள கதையோ கவிதையோ வாசிக்கலாம்.
படிப்பவர் வேறு கேட்பவர் வேறு. படிப்பவர் படிக்கும்போது, கேட்பவர் கூட்டத்தை நெறிப் படுத்துபவராகவும், அதேசமயத்தில் கதையையோ கவிதையையோ உற்று கவனிப்பவராக இருக்க வேண்டும். யாரும் அதிகப் பக்கங்கள் கொண்ட கதையைப் படிக்கக் கூடாது. தண்ணீர் தாகம் எடுப்பவர் கையில் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவும். வாசிப்பவர் நிதானமாக வாசிக்கவும். கணீரென்று பூங்கா முழுவதும் உள்ளவர்கள் கேட்பது போல் வாசிக்க வேண்டும். படிக்கும்போது எங்காவது தடுமாறினால், இன்னொரு முறை வாசிக்கலாம். வாசித்துக்கொண்டிருக்கும்போது காதைத் துளைப்பதுபோல் சத்தம் வந்தால் ஒரு வினாடி நிறுத்தி விட்டு பின் தொடரலாம்.
வாசிப்பவர் யார் வாசிக்கிறார்கள் என்றும், யாருடைய கதையை வாசிக்கிறோம் என்றும் சொல்ல வேண்டும். எல்லாம் ஆடியோவில் பதிவாகி உலகமெங்கும் ஒலிபரப்பாக உள்ளது.
கூட்டம் நடக்குமிடம் : நடேசன் பூங்கா
வெங்கடரங்கன் தெரு, தி நகர்,
சென்னை 17
கிழமை ஞாயிறு (08.05.2016)
நேரம் : மாலை ஐந்து மணி
வாசிப்புக்கு தேர்ந்தெடுத்த புத்தகங்கள்
1. மௌனி கதைகள்
2. ஆத்மாநாம் கவிதைகள்
ஒரு வேண்டுகோள் :
ரொம்ப தூரத்தில் இருந்து யாரும் இக் கூட்டத்திற்கு வரவேண்டாம். போகலாமா வேண்டாமா என்று தோன்றினால் போக வேண்டாமென்று தேர்ந்தெடுத்துக் கொள்ளூங்கள்.
இப்போது முதல் கூட்டத்தில் நாங்கள் வாசித்த கதையை ஆடியோவில் க்ளிக் பண்ணிக் கேட்கவும். சுவாரசியமாக இருக்கும்.

கவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று

அழகியசிங்கர்
கவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று. இந் நாளில் நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
புதிதாக வர உள்ள ‘அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்’ என்ற அவரது கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை இங்கு அளிக்கிறேன்.
??
உடம்பெல்லாம்
கால் முளைத்த
ஒரு புள்ளிப் பூச்சி
எப்படி உறவு கொள்ளும் என்பது
என் வினோதமான கேள்வி.
ஆனால்
நிலத்தில் எங்கு பார்த்தாலும்
புள்ளிப் பூச்சிகள்
கேள்விக்கே இடமில்லாமல்…………..