யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?

 
எனக்கு எப்போதும் இந்தச் சந்தேகம் வருவதுண்டு.  முன்பை விட இப்போது தமிழ்ப் புத்தகங்களை யாராவது விரும்பிப் படிக்கிறார்களா என்ற சந்தேகம்தான்.  இது குறித்த நான் பலரிடம் விஜாரிக்க விரும்பவில்லை.  சமீபத்தில் பெஸன்ட் நகர் பீச்சில் காலை 6 மணிக்கு சில இளைஞர்கள் கிட்டத்தட்ட 30 வயதுக்குள் இருப்பவர்கள் பெரும்பாலோர் ஐடியில் பணிபுரிபவர்கள் ஆங்கிலத்தில் கதைகளை வாசித்தார்கள்.  அவர்கள் வாசித்தக் கதைகளின் தரம் அவ்வளவாய் சிறப்பாய் இல்லை.  ஆனால் தமிழில் இதுமாதிரியான கூட்டத்தை நடத்தத்தான் முடியுமா?  யார் தமிழில் எழுதுகிறாரகள்? யார் தமிழ் கதைகளைப் படிக்கிறார்கள்? நானும் சிறி;து முயற்சி செய்து பூங்காவில் கதை கவிதை வாசிப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தினேன்.  அக் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை.  அது நடத்துவது கேலிக் கூத்தாகி விடுமா என்று கூட எனக்குத் தோன்றியது.
இப்போது உள்ள இளைஞர்களில் தமிழ் படிப்பவர்கள் மிக மிக குறைவு.  பொதுவாக பெரும்பாலோர் புத்தகங்களே படிப்பதில்லை. மீறிப் படிப்பவரகள் என்ன புத்தகங்களைப் படிக்கிறார்கள்.  பெரும்பாலோர் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை வாசிக்கிறார்கள். அல்லது தமிழ் நாவல்களை வாசிக்கிறார்கள்.  ஆனால் சிறுகதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ யாரும் பொருட்படுத்துவதில்லை.  அதனால் தமிழில் கவிதைப் புத்தகம் சரியாக விற்க முடியவில்லை.  சிறுகதைக்கும் அந்த நிலைதான்.
கட்டுரைகள் கூட பல்கலைக் கழக மாணவர்கள் இயற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை யாரும் படிப்பதில்லை.  தமிழின் இந்த நிலைக்கு யார் காரணம்?  இன்னும் போக போக நிலைமை மோசமாகி விடும்.  முன்பை விட தமிழில் இப்போது எதிர்கொள்கிற பிரச்சினைகளை சாதாரணமாக விளக்கி விட முடியாது.
நான் இப்போது கூட தமிழில் எழுதிக்கொண்டிருக்கிற எழுதப் போகிற எழுத்தாளர்களை நினைத்து கவலைப்பட்டுத்தான்  இதைக் குறிப்பிடுகிறேன்.  அடிப்படையில் தமிழில் படிப்பது என்பது சரியாக வரவில்லை.  இன்றைய தமிழ் மாணவர்கள் மூலம் தமிழ் படைப்புலகம் சிறக்கப் போவதில்லை.  தமிழை மட்டும் நம்பாமல் இருக்கும் இளைஞர்களிடம்தான் அதாவது தமிழை ஆங்கிலத்திற்கு அடுத்ததாகப் பயன்படுத்தும் இளைஞர்களிடம்தான்  தமிழில் இனி படிக்கவும் தமிழ் மொழியில் படைப்புகளை உருவாக்கவும் வழி இருப்பதாகப் படுகிறது.
நான் பள்ளிக்கூடத்தில் எட்டாவது வகுப்பு படிக்கும்போதே பள்ளி நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பேன்.  தென்னாட்டுப் பழங்கதைகள் என்ற புத்தகம், இராமசாமிப் புலவர் தொகுத்தது எட்டுப் பாகங்கள் கொண்ட புத்தகம்.  ஒவ்வொரு பாகமும் 300 பக்கங்கள் இருக்கும்.  அப் புத்தகங்களை எடுத்து எடுத்துப் படிப்பேன்.  அப்படி தமிழில் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருப்பேன்.  இப்போதோ அத் தென்னாட்டு கதைகள் தொகுதி எங்கும் கிடைப்பதில்லை.  அவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்த சைவ சித்தாந்த கழகம் அப் புத்தகத்தை திரும்பவும் பிரசுரிக்க விரும்பவில்லை.  காரணம் அப் புத்தகத்தைப் படிக்க சிறுவர்கள் யாரும் தயாராய் இல்லை.
இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.  அப்படி ஆர்வமாக இருந்த நான், இப்போது அந்த அளவிற்கு ஆர்வம் ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன?  யோசித்துப் பார்க்கிறேன்.  இன்னும் நான் தினமும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் முன்புபோல் படிக்க முடியவில்லை.  ஏன்?  என்னுடைய பள்ளிக்கூட காலத்தில் நான் தங்கசாலையில் இருந்தேன்.  அங்குள்ள ஒரு தியேட்டர் பக்கத்தில் கீழே பிளாட்பாரத்தில் மர்ம நாவல்களை விற்றுக்கொண்டிருப்பார்கள்.  பி டி சாமி, மாயாவி, அரூர் ராமநாதன் என்றெல்லாம்.  அப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படித்துபின் மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுப்பேன்.  அதன் பின் என் வாசக எல்லை சற்று விரிவடைந்து, கல்கி, சாண்டில்யன், தமிழ்வாணன் என்றெல்லாம் போயிற்று.  மு வ வின் கரித்துண்டு, அகல் விளக்கு என்றெல்லாம் படித்திருக்கிறேன்.  என் கல்லூரி ஆண்டுகளில் நான் பாரதியாரின் கட்டுரைகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் எங்கு சென்றாலும்  புத்தகம் படித்துக்கொண்டே இருப்பேன்.
கொஞ்சங் கொஞ்சமாக ஆங்கிலப் புத்தகங்களையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் இப்போதோ அந்த அளவிற்கு வேகமாக என்னால் புத்தகங்களைப் படிக்க முடிவதில்லை.  நான் அலுவலகத்தில் சேர்ந்த புதியதில் ராயப்பேட்டாவிலிருந்த க்ரியாவில் வித்தியாசமான புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கவிதைப் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன்.  பெரும்பாலும் சிறுகதைகளையும் கவிதைகளையும்தான் நான் படிப்பேன்.  எப்போதும் எனக்கு சில புத்தகங்கள் படித்தாலும் புரியாது.  அதுமாதிரி புரியாத புத்தகங்களையும், பத்திரிகைகளையும் நான் வைத்திருப்பேன்.
முன்னே மாதிரி என்னால் புத்தகங்கள் படிக்க முடியாவிட்டாலும், புத்தகங்களை வாங்கி குவிக்க வேண்டுமென்ற ஆர்வமும், எந்தச் சந்தர்ப்பத்திலாவது இப் புத்தகங்களைப் படித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  என்னுடைய பலம் டிவியில் நான் முழுவதுமாக மாட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் என்னுடைய கவலை எல்லாம் இக் காலத்தில் இருக்கும் இளைஞர் மீதுதான். தெருவில் என் வீட்டு கீழே ஏகப்பட்ட இளைஞர்கள் கூடி வெறும் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர்களில் யாருமே புத்தகம் படித்ததில்லை.  நான் இருக்கும் வளாகத்தில் 6 வீடுகள் உள்ளன.  அதில் ஒருவர் கூட புத்தகம் வாங்கவும் மாட்டார்கள்.  படிக்கவும் மாட்டார்கள்.  ஏன் என் வீட்டில் உள்ள என் மகனோ மகளோ தமிழ் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள்.  என் அப்பா மனைவி எல்லாம் தமிழ் புத்தகங்களின் பக்கமே வர மாட்டார்கள். என் சகோதரன் வீட்டில் யாருமே தமிழ் புத்தகங்கள், பத்திரிகைகள் பக்கம் வரவே மாட்டார்கள். என் சகோதரன் நான்  தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்து கிண்டல் செய்வான். ஆனால் அவர்கள் முன் நான் குவித்து வைத்திருக்கும் தமிழ் புத்தகங்களைப் பார்த்து அவர்கள் சத்தம் போடுவார்கள்.
இப்படியே போனால் ஒரு கட்டத்தில் தமிழ் புத்தகம் படிப்பது குறைந்து பின் யாரும் படிக்கக் கிடைக்காமல் போய்விடலாம்.  அந்தத் தருணத்தில் தமிழை வளர்க்க அரசாங்கமே பதிப்பாளர்களைக் கூப்பிட்டு புத்தகம் கொண்டு வர நிதி உதவி செய்யலாம்  அல்லது எதாவது ஒரு இடத்தில் எல்லோரையும் கூட்டி தமிழ் புத்தகங்கள் படிப்பவருக்கு சலுகையாக சன்மானம் வழங்கப்படும் என்று அளிக்கலாம்.  ஆனால் யார் எத்தனை பக்கங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கிறார்கள் என்று கணக்குச் சொல்லும்படி இருக்கும்.  ஆனால் எனக்கோ புத்தகங்களைப் பார்த்தால் வாங்கி வைத்துவிட வேண்டுமென்ற வெறி இன்னும் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
நான் ஒரே சமயத்தில் பல புத்தகங்களைப் படித்துக்கொண்டு  போவேன். மறந்து விடாமல் போவதற்கு புத்தகம் படித்து முடித்தப்பிறகு இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன் என்று எழுதுவேன்.  ஆனால் இப்போதோ நான் படிக்கும் புத்தகத்தைக் குறித்து சில பக்கங்கள் எழுத வேண்டுமென்று எழுதுகிறேன்.
இந்த இடத்தில் வல்லிக்கண்ணன் அவர்களையும், எஸ் ராமகிருஷ்ணன் அவர்களையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  ஒருமுறை வல்லிக்கண்ணன் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டேன்.  வல்லிக்கண்ணன் மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை நாவல்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போனார்.  மறக்க முடியாத நிகழ்ச்சி அது.
சமீபத்தில் குவிகம் இலக்கியம் சார்பாக எஸ் ராமகிருஷ்ணன் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பத்து புத்தகங்களுக்கு மேல் புத்தகங்களைப் பற்றியும் புத்தக ஆசிரியரைப் பற்றியும் உற்சாகம் கரைபுரண்டோட சொல்லிக்கொண்டே போனார்.
ஆனால் நான் உடனே படித்துவிட்டு எழுதி விட வேண்டும்.  இல்லாவிட்டால் மறந்து விடும்.

என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்…

                                              

 

நான் கிட்டத்தட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  185 கவிதைகள் கொண்ட அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 300 பக்கங்கள் வரை இருக்கும்.  ஆனால் விலை ரூ.150 தான்.  புத்தகக் கண்காட்சியின்போது ஒரு சிலர் வாங்குவார்கள்.  என்னிடம் உள்ள அத்தனைப் பிரதிகளும் விற்க இன்னும் 20 புத்தகக் கண்காட்சியாவது நடைபெற வேண்டும்.  அதன்பின் வினோதமான பறவை என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன்.  தெரியாமல் 300 பிரதிகள் அடித்து விட்டேன். பின் புத்தக வெளியீட்டு விழா என்றெல்லாம் நடத்தவில்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பினேன்.  பல பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை.  வரப்பெற்றோம் என்ற தலைப்பில் ஒரு சில பத்திரிகைகள் அக் கவிதைத் தொகுதியைப் பற்றி கண்டு கொண்டது.  என் கவிதைகளைப் பற்றி தமிழவன், நகுலன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், ரிஷி போன்ற நான் மதிக்கும் படைப்பாளிகள் எழுதி உள்ளார்கள்.
என் கவிதைத் தொகுதிகளை நான் புரட்டிப் புரட்டிப் பார்ப்பேன். என் கவிதைகளை நானே படித்து ரசிப்பேன்.  சமீபத்தில் புத்தகக் கண்காட்சியின்போது ஞானக்கூத்தன் வந்திருந்தார்.  அவரிடம் கேட்டேன். ‘நானும் ‘வினோதமான பறவை’ என்ற கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன்.  யாரும் ஒன்றும் சொல்லவில்லை,’ என்றேன். ‘காலம் வரும். எல்லோரும் சொல்வார்கள்,’ என்றார் அவர்.  எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு உடனே ஆச்சரியம்.  அப்படியெல்லாம் அவர் பேசிவிட மாட்டார்.
இந்த வினோதமான பறவை கவிதைத் தொகுதியை வெள்ளம் வந்து பதம் பார்த்துவிட்டது.  அந்தப் புத்தகக் கட்டுகள் மட்டும் இருந்தால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அந்தக் கவிதைத் தொகுதி விற்க.
நான் தொடர்ந்து கவிதைகளை ஒரு  நோட்டில் எழுதிக் கொண்டு வருகிறேன்.  ஆனால் முன்பு இருந்த வேகம் இப்போது இல்லை.  சில சமயம் பல தாள்களில் எழுதுகிற கவிதைகளை எங்கயோ வைத்துவிடுவேன்.  சில தொலைந்தும் போய்விடும்.
30ஆம் தேதி செப்டம்பர் மாதம் ஆறுமணிக்கு பரிசல் செந்தில் என்னை கவிதை வாசிக்க அழைத்தார்.  எனக்கு ஆச்சரியம்.  அவருக்கு எப்படி என்னை கவிதை வாசிக்கக் கூப்பிட வேண்டுமென்று தோன்றியது என்ற ஆச்சரியம். எப்படியும் கவிதை வாசிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  காரணம்.  பல கவிதை எழுதுபவர்கள் அங்கு வந்திருப்பார்கள்.  அவர்கள் முன் வாசிக்கலாம் என்ற எண்ணம்தான்.  ஆனால் நான் இப்போது இருக்கிற சூழ்நிலையில் என்னால் வர முடியாமல் போய்விட்டது.  எதிர்பாராத திருப்பமாக நான் கவிதை வாசிக்க முடியாமல் போய்விட்டது.
அங்கு நான் எழுதி கல்வெட்டில் வந்த ஒரு கவிதையை வாசிக்கத்தான் நினைத்தேன்.  அதை நான் இங்கே அப்படியே தருகிறேன்.  நீங்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
 ரிடையர்டு ஆனால்…
அப்பா கேட்டார்:
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
வீட்டில் உன்னை மாதிரி சும்மா உட்கார்ந்திருப்பேன்
 
மனைவி கேட்டாள் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
சினிமா கச்சேரி என்று சுத்துவேன்
 
பையன் கேட்டான் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
ஊரைச் சுற்றுவேன். இந்தியா முழுவதும்
பார்க்காத இடம் அதிகம்
 
பெண் கேட்டாள் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்
லைப்ரரி போய் புத்தகக் குவியலில் முகம் புதைப்பேன்
 
நண்பன் கேட்டான்:
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்
காலையில் எழுந்தவுடன், மூக்கைப் பிடித்து உட்கார்ந்து விடுவேன்
பின் ஒவ்வொரு கோயிலாக படி ஏறுவேன்.
 
இலக்கிய நண்பர் கேட்டார்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறீர்
ஒவ்வொரு இலக்கியக் கூட்டமாகப் போவேன்
நானும் நடத்துவேன் கூட்டங்களை
 
அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்ய் போகிறீர்
ஒவ்வொரு பிராஞ்சாப் போவேன்
பார்ப்பேன் பணி புரிபவர்களை
எதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று..
 
நானே கேட்டேன் 
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்..
கடைக்குப் போவேன் காய்கறி வாங்க
பால் பாக்கெட்டுகளை எடுத்து பிரிட்ஜில் வைப்பேன்
குளிப்பேன் தோன்றியபோது
சாப்பிட செல்வேன் ஓட்டலுக்கு
வண்டியை ஓட்டுவேன் அங்கும் இங்கும்
வெறுமனே மதியம் படுத்துத் தூங்குவேன்
எழுந்து காப்பி போடுவேன்
கம்ப்யூட்டரில் பேஸ் புக் பார்ப்பேன்.
 
ஒருநாள் மகிழ்ச்சியாப் போயிற்று என்று சந்தோஷப்படுவேன்.
ஆனால் சம்பாதிக்க மாட்டேன்.  

சில துளிகள்…….2

 
ஒரு வழியாக 100வது இதழ் விருட்சம் அடுத்த வாரம் வந்துவிடும். அதன்பின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.  எப்படி இந்தக் கூட்டத்தை நடத்தலாமென்று யோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
                                                                                          *********
அக்டோபர் மாத ஆனந்தவிகடன் தடம் இதழில் நான் எழுதிய ‘நானும் அசோகமித்திரனும்’ என்ற கட்டுரை  வெளிவந்துள்ளது.  ரொம்பநாட்கள் கழித்து நான் எழுதிய திருப்திகரமான கட்டுரை இது.  தடம் வாங்கிப் படியுங்கள்.
                                                                                     *********
எனக்குப் பிடித்த கவிதைகள் என்ற பெயரில் 100 கவிதைகள் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்.  இப்போது 28 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  எல்லாக் கவிதைகளையும் புத்தகங்களிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்படும்.
                                                                                       **********
இந்த ஆண்டு தீபாவளி மலர்கள் வாங்க வேண்டாமென்று நினைக்கிறேன். ஏன்எனில் போன ஆண்டு தீபாவளி மலர்களையே நான் இன்னும் படித்து முடிக்கவில்லை.  அவற்றை படித்து முடித்தப்பின் பழைய பேப்பர் கடைகளிலிருந்து இந்த ஆண்டு தீபாவளி மலர்கள் வாங்கிப் படிக்கலாம்.
                                                                                     ***********
இந்த மாதம் 25ஆம் தேதி டாக் சென்டரில் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற நாவலைக் குறித்துப் பேசுகிறேன்.  20 நிமிடமாவது பேச வேண்டும்.  614 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் 148வது பக்கம் படித்துக்கொண்டு வருகிறேன்.
                                                                                       **********
பிரம்மராஜன் கவிதையைப் படித்தவுடன் இப்படியெல்லாம் எழுதிப் பார்க்கலாமா என்று தோன்றுகிறது.  அப்பாவைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று எழுதுகிறேன்.
                                                                                     ***********
கடந்த 7 வாரங்களாக அமெரிக்காவிலிருந்து வந்த  என் பையன், அவன் மனைவி, அவன் புதல்வி என்று வீட்டை கலகலப்பாக்கி விட்டார்கள். அவர்கள் திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டார்கள்.  இரண்டு நாட்கள் அவர்கள் இருந்த அறையைப் பார்க்கவே எனக்கு சங்கடமாக இருந்தது.
                                                                                     ***********
சமீபத்தில் எந்த தமிழ் சினிமாவையும் நான் பார்க்க விரும்பவில்லை.  இதுவும் ஏன் என்று தெரியவில்லை.
                                                                                     ***********
தானாகவே பதவி மூப்பு வாங்கிக்கொண்ட என் நண்பர் குறிப்பிட்ட விஷயம் சற்று யோசிக்க வைத்தது.  ‘அலுவலகத்தில் இருந்தபோது பல அலுவலக நண்பர்கள் அவரிடம் பேசுவார்களாம்.  இப்போது யாரும் பேசுவதில்லையாம்..’ ‘வருத்தப்படாதே நண்பா,’ என்று அவரிடம் சொன்னேன்.
                                                                                 *************
சமீபத்தில் நான் முழுவதும் படித்தப் புத்தகம் எம் டி முத்துக்குமாரசாமியின் நிலவொளி எனும் இரகசிய துணை.  நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் இப் புத்தகம் பற்றி எழுதி உள்ளேன்.  அதிகப் பக்கங்கள் வருவதால் என்னுடைய நவீன விருடசம் பிளாகில் வெளியிட உள்ளேன்.
                                                                                          (பின்னால் இன்னும் தொடரும்)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 27



போகன் சங்கர் கவிதை

முத்தம் செய்வதெப்படி
எனக் கேட்ட
முதிரா முலைப் பெண்ணே…

முத்தத்தைப்
பலவகைகளில் செய்யலாம்

தெய்வத்தைத் தொழுவதைப் போல
பக்தியுடன்
சிலர் செய்வார்
பழம் சாப்பிடுவது போல
பசியுடன் சிலர் செய்வார்
பட்டாம்பூச்சி
பிடிப்பது போல்
பயத்துடன் சிலர் செய்வார்
முள்கரண்டியில்
இறைச்சியைக்
குத்துவது போல
இன்னும் சிலர் செய்வார்
நான் எப்போதும்
முத்தத்தை
யுத்தத்தைப் போலதான்
செய்வேன்

நன்றி : எரிவதும் அணைவதும் ஒன்றே – கவிதைகள் – போகன் சங்கர் – பக்கம் : 112 – விலை : ரூ.90 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 600 083, தொலைபேசி : 044-24896979 

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 8

வழக்கம்போல எட்டாவது கூட்டம் இது.  என் நண்பர் பெ சு மணி நாங்கள் இருந்த போஸ்டல் காலனி முதல் தெருவின் எதிரிலுள்ள ராமகிருஷ்ணபுரம் 2வது தெருவில் வசித்து வருகிறார்.  ஒவ்வொரு முறையும் தெருவில் நடந்து செல்லும்போது அவரைச் சந்திப்பது வழக்கம்.
இப்படி ஒவ்வொரு விழாக்கிழமையும் பலரைச் சந்தித்து பேட்டி எடுக்க வேண்டுமென்பது அடியேனின் விருப்பம்.  இதை எத்தனைப் பேர்கள் ரசிப்பார்கள் என்பது தெரியாது.  இதை இன்னும் கொஞ்சம் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும்.  இப்போதுதான் இது புரிய வருகிறது.
https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs&authuser=0

https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 26


அழகியசிங்கர்  

தெரிதல் புரிதல்

பிரம்மராஜன்








நான் எழுதிக்கொண்டிருப்பதை
எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எழுதிக்கொண்டிருப்பதாக எழுதுவதை
எழுதுகிறேன்.
எழுதுவதை எழுதுகிறேன் என்று
எழுதிக்கொண்டிருப்பதை எழுதுகிறேன்.
எழுதுவதால் எழுதுகிறேன்.
தெரிகிறேன் என்பதால் பார்க்கிறாய்
பார்ப்பவன் பார்க்கப்படுகிறான்
தெரிகிறதா
கேட்கப்படுபவன் கேள்வியாக
தெரிபவன் தெரிதலாக
புரிபவன் புரிதலாக
பூப்பவன் புதிராக
அடுக்கடுக்காய் அதிர்ச்சியாக
சிந்திப்பவன் சிக்கலாக
சிற்பி உளியாக
ஓவியன் காணுதலாக
சிக்கல் சிரமமாக
சிரமம் சிந்தனையாக
சுடர் சாம்பலாக
சாம்பல் உன் எலும்பாக
பாஸ்பரஸ் பகற்கனவாக
பகற்கனவு பதியன் பூவாக
பூத்தது புதிராக புரியாதாய்
புதிய புத்தம் கவிதையாய்
அடுக்கடுக்காய் அணூ அணுவாய்
அலையில் அலையில்
தழுவித் தழுவி
கழுவிக் கரைந்த உடலாக
கரைமீது கால்.

நன்றி : ஞாபகச்சிற்பம் – கவிதைகள் – பிரம்மராஜன் – பக் : 64 – முதல் பதிப்பு : ஜøன் 1988 – விலை ரூ.12 – தன்யா – பிரம்மா பதிப்பகம், பர்ன் வூயு, குன்னூர் தெரு, ஊட்டி 643 001 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 25

அழகியசிங்கர்  


                    பெண்பாற் கூற்று

சுகிர்தராணி




வெகுதூரம் ஓடிய
விலங்கொன்றின் உலர்நாவென
தரையோடு வற்றிவிட்டது உறைகிணறு
ஒற்றை உடலோடு உறங்குமிந்த இரவு
உவப்பாக இல்லை
என் பாதிப் புன்னகைக்குப் பின்னே
சொல்லப்படாத கதையொன்று இருக்கிறது
அவனை மிகவும் விரும்புகிறேன்
சீராக நறுக்கப்படாத அவன் மீசையையும்
என் கவிதைகளைச் சிலாகிக்கிறீர்கள்
குழந்தைகள்மீது பெருவிருப்பம் எனக்கு
ஆயினும் கருத்தரிக்க இயலாது
கூந்தலை வெட்டிக் கொள்கிறேன்
உதட்டில் ஊறும் முத்தங்களை
அவ்வப்பொழுது உமிழ்ந்து விடுகிறேன்
வேறென்ன செய்ய
இறந்து போன அப்பாவைப்
பார்க்க வேண்டும் போலிருக்கிறது
சிறுமிகளுக்கு
மாலை நேர வகுப்பெடுக்கிறேன்
கள்ளக்காதல் என்னும் சொல்லின்
பின்னுள்ள வலி புரிகிறது
இந்தக் கவிதையில்
மர்மங்கள் எவையுமில்லை
அகழ்ந்தெடுத்தல் புராதனச் சோதனை
எவையும் வேண்டாம்
வேண்டுமானால்
என்னை ஒழுக்கங்கெட்டவள்
என்று சொல்லிக் கொள்ளுங்கள்

நன்றி : இப்படிக்கு ஏவாள் – கவிதைகள் – சுகிர்தராணி – விலை ரூ.75 – பக் : 72 – முதல் பதிப்பு : மே 2016 –  காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525




மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 24

அழகியசிங்கர்

 தூர்

 நா முத்துக்குமார்




வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொரு முறை
விசேஷமாய் நடக்கும்.

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.

கொட்டாங்குச்சி, கோலி,
கரண்டி,
கட்டையோடு உள்விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்,
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே.

சேறுடா…சேறுடாவெபன
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்.

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

நன்றி :  பட்டம்பூச்சி விற்பவன் – கவிதைகள் – நா முத்துக்குமார் – முதல் பதிப்பு : டிசம்பர் 1997 – விற்பனை உரிமை : ப திருநாவுக்கரசு, 31/48  இராணி அண்ணா நகர், கலைஞர் நகர், சென்னை 600 078 – விலை ரூ.20.



மனதுக்குப் பிடித்த கவிதைகள் 23

அழகியசிங்கர்  

நிலவும் நிலவுகளும்

தேவதச்சன்




எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
எங்களூரில் நான்கு கிணறுகள்
மூன்று ஊருணிகள்
ஒவ்வொரு இரவும்
எங்களூரில்
ஏழு நிலவுகள் வந்து
அழகு கொள்ளை கொள்ளும்
தண்ணீரில் கல் எறிந்து
ஒரே நிலவை
ஆயிரம் நிலவாய்
ஆக்குவோம் நாங்கள் சிறார்கள்.
வெறுமனே
பொறுமை காத்து
ஆயிரம் நிலவுகள்
ஒரே நிலவாய் கலப்பதை
பார்ப்பார்கள் பெரியவர்கள்
இப்போது ஊருணியை
பஸ் நிலையங்கள்
ஆக்கிவிட்டார்கள்.  மேலும்
கிணற்றை மூடி
குப்பைத்தொட்டியாக மாற்றி
விட்டார்கள்.
இப்போது
தனியான ஒரு நிலவு
எங்கள் ஊர்
மேலாகப் போய்க்கொண்டிருக்கிறது

நன்றி : எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது – கவிதைகள் – தேவதச்சன் – பக்கம் : 64 – விலை : ரூ. 40 – உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை  600 018 – தொ பேசி : 91-44-24993448

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 22

அழகியசிங்கர்

  நான்

நகுலன்




வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
üüயார்?ýý
என்று கேட்டேன்.
üüநான்தான்
சுசீலா
கதவைத் திறýý
என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நன்றி : நகுலன் கவிதைகள் – தொகுப்பும் பதிப்பும் : முனைவர் சு. சண்முகசுந்தரம் – காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை – பதிப்பாண்டு : 2001 – விலை : ரூ.100