எழுந்ததும்
ஓடிவந்து என் போனைத் தட்டிப் பறிக்கிறாய்
பின்
என்னை விட்டு ஓட்டமாய் ஓடுகிறாய்
இதோ -
இப்போது இந்த ஊரை விட்டுக் கிளம்புகிறோம்
என்றால்
புரியாமல் முழிக்கிறாய்
தலையை வாரவிடாமல்
உடைகளைக் கழற்றி எறிந்து
அங்கும் இங்கும் குதிக்கிறாய்
அம்மாவையும் அப்பாவையும்
பாடாய்ப் படுத்துகிறாய்
உன் மழலைக் குரல்
இன்னும் காதில்
ஒலித்தவண்ணம் உள்ளது
சுட்டிப் பெண்ணே ஆரபியே....
03.05.2019
பீனிக்ஸ்
காலை : 6
விருட்சம் 16 சூம் கவிதை வாசிக்கும் கூட்டம் 11.09.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 7 மணி அளவில் 22கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள். பாரதியாரைத் தூக்கி சுமந்த கல்கி என்ற தலைப்பில் கடற்கரை மத்த விலாஸம் அங்கதம் உரை நிகழ்க்தினார்
வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விருட்சம் சார்பில் சூம் மூலம் 16வது கவிதை வாசிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கவிதை வாசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், பாரதியை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை அன்று பாரதி அன்பர்கள் பாரதியைக் குறித்து உரை நிகழ்த்த உள்ளா கள் .
இந்த வாரம் உரை நிகழ்த்த இசைவு தந்துள்ளவர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் . ‘பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்துகிறார்.
வழக்கம்போல் இந்த முறையும் கவிதை வாசிப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்திற்கு எல்லாக் கவிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
ஒவ்வொருவரும் 2 நிமிடத்திற்குள் கவிதை வாசிக்க வேண்டும். நீளமான கவிதைகளைத் தவிர்க்க வேண்டும்.
எந்தத் தலைப்பிலும் கவிதை வாசிக்கலாம். சூம் கூட்டத்தில் நேரிடையாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு கவிதையை வாசிக்கத் தொடங்கலாம்.
இதுவரை பங்கு பெற்றவர்கள் கலந்து கொள்ளும்போது வாசிக்காத கவிதையை வாசிக்கவும்.
கவிதையை வாசிக்கும்போது உச்சரிப்பைச் சரியாகக் கவனித்து உச்சரிக்கவும். அரசியல், மத சம்பந்தமான கவிதைகளை வாசிப்பதைத் தவிர்க்கவும். கவிதையில் ஆபாசத்தைத் தவிர்க்கவும்.
நான் வணங்கும் ஆசிரியர்கள் என்று யாருமில்லை நான் சந்தித்த ஆசிரியர்கள் உண்டு ஒருவர் பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் என் ஆசிரியராக இருந்தார் குடும்பத்தில் நடப்பதை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அசட்டு ஆசிரியரும் உண்டு மாணவர்களைக் கிண்டல் செய்தே பழக்கப்பட்ட பெண் ஆசிரியரும் உண்டு ஆனால் அவர்களிடமிருந்து இதெல்லாம் கற்றுக்கொள்ளக் கூடாதென்று கற்றுக்கொண்டேன் கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன்தான் நான் பார்க்கும் எல்லோரிடமும் எதாவது கற்றுக்கொள்கிறேன். இன்னும் கூட…
இது என் 22வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு மேல் முடிந்து விட்டது.
எல்லாம் சரி
இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு என்று தெரியாமலிருந்தேன். சமீப காலத்தில் அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ஏன்?
நானும் அவளும் ஒரே கல்லூரியில் படித்தாலும் எனக்கு முன்னாலேயே அவளுக்கு
வேலை கிடைத்து விட்டது. அதன்பின்தான் எனக்கும் கிடைத்தது. நானும் அவளும் கல்லூரி காலத்திலிருந்து ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். இருவரும் மேற்கு மாம்பலத்தில் பக்கத்துப் பக்கத்துத் தெருவிலே குடியிருக்கிறோம்.
இரண்டுபேர் குடும்பமும் சாதாரண குடும்பம். வாடகை வீடுகளில்தான் வாசம்.
கடந்த சில மாதங்களாக அவள் என்னுடன் பழகும்போது அலட்சியம் காட்டுவதுபோல்
தோன்றுகிறது. இதை நேரிடையாக அவளிடம் போட்டு உடைத்து விடலாம். ஆனால்
அதெல்லாம் சரி வராது.
நான் இந்த விஷயத்தில் அவளுடைய உரிமையை
முக்கியமாகக் கருதுகிறேன். ஒருவர் யாருடன் பேச வேண்டும் யாருடன் பேசக்
கூடாது என்பதெல்லாம் அவரவர் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.
இந்தத் தருணத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்தியா வந்து இரண்டு மூன்று மாதங்கள் வந்திருந்து தங்குவதாகச் செய்தி வந்தது.
நான் உடனே அவர்களுடைய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, கிருஷ்ணமூர்த்தியைச்
சந்திப்பதற்கு வாய்ப்புத் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.
அவர்கள் ஒருநாள் வந்து சந்திக்கலாமென்று அனுமதி அளித்தார்கள். எனக்கு அவளுடைய பிரச்சினைதான் முக்கியமாகத் தோன்றியது. இதற்கு எதுமாதிரியான தீர்வு என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவரைப் பார்த்து இதைப் பற்றிப் பேச வேண்டுமென்று யோசித்தேன். கிருஷ்ணமூர்த்தியிடம் இதைப்பற்றியெல்லாம் பேசினால் சிரிக்கத்தான் சிரிப்பார்.
நான் கேலிக்கு ஆளாவேன் என்றெல்லாம் தோன்றியது. இந்தத் தருணத்தில் அவளைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
ஒரு முறை போன் செய்தபோது, அவள் சொன்னாள் :” வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. பார்க்க முடிவில்லை,” என்று.
அந்தப் பதில் எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. அதை நினைத்துப் பல நாட்கள் நான் யோசனை செய்தபடி இருந்தேன். வீட்டில் அம்மா கூடச் சொன்னாள் : நீ முன்பு மாதிரி கலகலப்பாக இல்லை என்று.
கிருஷ்ணமூர்த்தியைச் சந்திக்க வேண்டிய நாள் வந்து விட்டது. அன்று
அலுவலகம் போகவில்லை. சரியாக மதியம் 12 மணிக்கு அவரைச் சந்திக்க நேரம்
கொடுத்திருந்தார்கள்.
அவர்கள் அலுவலகத்திற்குப் போய் நான் வந்து விட்டதை அறிவித்தேன். அவர்கள் சில நிமிடங்கள் காத்திருக்கும்படி சொன்னார்கள்.
எப்போதுமே எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி தங்கியிருக்குமிடம் பிடிக்கும். அடர்ந்த மரங்களும் செடிகளுக்கு நடுவில் அவர் தங்கியிருக்கும் வீடு இருக்கும். மரப்படிக்கட்டுகள் வழியாக மாடிக்குப் போனால் அவர் அறை இருக்கும்.
அங்கு அவரைப் போய்ச் சந்தித்தேன். உட்காரச் சொன்னார். அவர் என்னையே
உற்றுப் பார்த்தார். என்ன கேட்க வேண்டுமென்பதுபோல் அந்தப் பார்வை
இருந்தது. அவர் மௌனமாகவே இருந்தார்.
ஒரு நிமிடம் நான் அவரைக் கூர்ந்து கவனித்தேன். என்னை அவர் தலையிலிருந்து கீழ் வரை தீர்க்கமாகப் பார்ப்பது போல் தோன்றியது. உடனே என் மனம் அமைதியாகிவிட்டது.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தோம். பின் நீங்கள் போகலாமென்பதுபோல் தலை ஆட்டினார். ஒருக்ஷணம் உலகமே புரிய ஆரம்பித்தது. வெளியே வந்து விட்டேன்.
உலகப் பூனைகள் தினம் இந்த மாதம் 8ஆம் தேதி முடிந்து விட்டது. வரும் வெள்ளிக்கிழமை பூனைகளைப் பற்றி கவிதைகள் வாசிப்பது என்று தீர்மானித்துள்ளோம். இதுவரை விருட்சம் சார்பில் நடைபெற்ற கவிதைக் கூட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதைகள் வாசித்து கவிஅரங்சத்தைக் கௌரவப்படுத்தி உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பாக்குவார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் புதியவர்கள் சிலரும் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள். விருட்சம் கவிதை வாசிப்பு என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கியிருக்கிறேன். கவிதைகள் வாசித்த எல்லோருடைய பெயர்களையும் அதில் சேர்த்துள்ளேன். ஒரு குழுவாகச் செயல்பட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. பூனையைப் பற்றி கவிதை வாசிக்கக் குறைந்தது 60பேர்களாவது வருவார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரும் ஒருமுறைதான் ஒரு கவிதைதான் வாசிக்க இயலுமென்று நினைக்கிறேன். பூனை வாழ்க. மியாவ். (பாஸ்கரனின் பூனைப்படம்)
உலகப் பூனைகள் தினம் இன்று. நான் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம் நடத்த ஆரம்பித்து 3 மாதங்கள் ஓடிவிட்டன. அடுத்த வாரம் (14.08.2020) உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த முன் வந்துள்ளேன். பூனைகள் குறித்து ஏராளமானவர்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள். பூனை ஒரு ஆன்மிக மிருகம். எளிதில் யாரிடமும் பழகாது. ஒரு பூனையைத் தூக்கி மேலே போட்டால் அது கொஞ்சமும் அடிப்படாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தது. அசோகமித்திரன் தாமோதர ரெட்டி வீட்டில் வசித்தபோது அவருடன் பூனைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் நான் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தும் போது ஒவ்வொரு முறையும் பூனைகள் குறித்து கவியரங்கம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். இதோ அடுத்த வாரம் உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த உள்ளேன். முதலில் பாரதியார் எழுதிய பூனைக் கவிதையுடன் துவங்க உள்ளேன். பூனைகள் குறித்து கவிதைகள் எழுதி உள்ள கவிஞர்களை எல்லாம் ஒன்று திரட்ட விரும்புகிறேன். வாசிக்க வரும் ஒவ்வொரு கவிஞரும் பூனை பற்றி எழுதிய கவிதை மட்டும் வாசிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கூட இருக்கலாம். வாசிக்க வருபவர்கள் அவர்கள் கேள்விப்பட்ட வாசித்த கவிதைகளைக் கூட வாசிக்கலாம் எல்லாரும் வாசித்த கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வருவேன். நான் ஏற்கனவே பூனைகள் குறித்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர முனைந்துள்ளேன். நீங்கள் பூனையைக் குறித்து வாசிக்க விரும்புவதாக இருந்தால் உங்கள் தொலைப் பேசி எண்ணைக் குறிப்பிடவும். அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை (14.08.2020) பூனையைக் கொண்டாடுவோம். நன்றி. மியாவ். பூனைக் கவிதையை ஞாபகப்படுத்தும் விதமாய் இதோ ஒரு பூனைக் கவிதை
இரண்டு பூனைகள்
ஒரு கருப்புப் பூனை நாற்காலி மீது அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்தது மியாவ் என்றது.. இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் நாற்காலி கீழே அமர்ந்திருந்தது. என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று இரண்டு முறை கத்தியது நான் பேசாமல் வந்து விட்டேன்.
விருட்சத்துடன் குவிகம் இணைந்து நடத்தும் சூம் கூட்டம்.
விருட்சம் மூலமாக அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். கடைசியாக நடத்திய அஞ்சலிக் கூட்டம் அசோகமித்திரனுக்கு . ஞாபகத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன் யார் யாருக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேனென்று. 1. சி சு செல்லப்பா 2. ஷண்முக சுப்பையா 3. கரிச்சான் குஞ்சு 4. வெங்கட் சாமிநாதன் 5. ஜெயகாந்தன் 6. ஞானக்கூத்தன் 7 அசோகமித்திரன் இவர்களில் பலர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள். சிலர் நண்பர்கள் சொல்லி கூட்டம் நடத்தியிருக்கிறேன். இந்த முறை சூம் மூலமாகக் கூட்டம் நடத்த எண்ணம். கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9444113205 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்தவும். தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர்களில் சா.கந்தசாமியும் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று அவருடைய பங்களிப்பை யாரும் மறைக்க முடியாது. அவருடைய சாயா வனம் என்ற நாவல் புத்தகமாக வரும்போது அவருக்கு வயது 24. திரும்பவும் அதை மூன்று முறை எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டம் வரும் வியாழக்கிழமை – 06.08.2020 – 7 மணிக்கு நடைபெற உள்ளது.
சா.கந்தசாமிக்கு அஞ்சலியைத் தெரிவிக்க வேண்டியவர்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளுங்கள். 9444113205 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
இன்று மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது. காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார். இந்த மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வயதை முடித்திருந்தார். அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார். “ அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொன்னார். அவர் சொன்னது நியாயமாகப் பட்டது. அவர் மருத்துவமனையிலிருந்து மீண்டு வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று மரணமடைந்து விட்டார். என் முக்கியமான எழுத்தாளர் வரிசையில் அவரும் ஒருவர். பல ஆண்டுகளாக நான் அவரிடம் நட்புடன் பழகி வருகிறேன். உற்சாகி. தோன்றுவதைச் செய்து முடித்து விட வேண்டுமென்று நினைப்பவர். அவருடன் பழகினால் முதுமையே தெரியாது. நான் எழுதிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால் உடனே படித்து விட்டு அடுத்தநாள் போன் செய்து தன் அபிப்பிராயத்தைச் சொல்லி விடுவார். அந்த அளவிற்குப் புத்தகம் படிப்பதில் தீவிரமானவர். பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களில்தான் அவரைப் பார்த்திருக்கிறேன். நான் நடத்திக்கொண்டு வந்த மூகாம்பிகைக் கூட்டத்திலும் உற்சாகமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். இதை இங்கு திரும்பவும் ஒளிபரப்ப நினைக்கிறேன். அவருடைய பிறந்ததினத்தை ஒட்டி அவருடைய அவருக்குப் பிடித்த சிறுகதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகத் தயாரித்து விட்டேன். ந. கிருஷ்ணமூர்த்தியின் முன்னுரையுடன். ஆனால் அதற்குள் அவர் மரணம் முந்திக்கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலுள்ள அவருடைய இரண்டாவது புதல்வன் வீட்டிற்குச் செல்வர். திரும்பி வரும்போது ஒருபுத்தகம் எழுதிக்கொண்டு வருவார். நான் அமெரிக்கா செல்லும்போது அவரிடம் சொல்லிக்கொண்டு போனேன். “பொழுதை வீணடிக்காதைய்ய…நிறையா புத்தகங்கள் படி…உன் பயணத்தைப் பற்றி எழுது,” என்றார். ஒரு முறை சாகித்திய அக்காதெமியின் தேனாம்பேட்டை அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் ரவீந்திரநாத் தாகூரின் ‘சிதைந்த கூடு’ என்ற புத்தகத்தை வாங்கச் சொன்னார். அதில் சிதைந்த கூடு குறுநாவலைப் படிக்கும்படிச் சொன்னார். அதன்பின் ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கும்போது சிதைந்த கூடு படித்தியா? என்று கேட்பார். படிக்கவில்லை என்று சொன்னால் லேசாகக் கோபித்துக்கொள்வார். பிறகு கேட்பதையே விட்டு விட்டார். இதோ இன்னும் இரண்டு மூன்று பக்கங்கள்தான் அந்தக் கதையைப் படித்துமுடிக்க இருக்கின்றன. படித்து முடித்தவுடன் அவரிடம் சொல்லலாமென்றிருந்தேன். எழுதுவதையும் படிப்பதையும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தான். அசோகமித்திரன் கூட டைப் அடித்துப் படைப்புகளை அனுப்புவார். கந்தசாமி கையாலேயே எழுதுவார். ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற வரிசையில் அசோகமித்திரன் பற்றி ஒரு புத்தகம் அவர் வெளிநாடு போவதற்கு முன் முடித்து விட்டுப் போயிருந்தார். அது தான் அவருடைய கடைசியாக எழுதிய புத்தகம் என்று நினைக்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.