ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 4

சூரியனுக்குப் பின் பக்கம் என்ற பெயரில் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுப்பு ழ வெளியீடாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத் தொகுப்பில் சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை மட்டும் இல்லை.  புத்தகத்திற்கு அதுமாதிரி தலைப்பிட்டுவிட்டு அக் கவிதை அதில் இடம் பெறவில்லை எனப்தை வேடிக்கையாகச் சொல்வார் ஞானக்கூத்தன். பின் நான் அதைத் தீபம் பத்திரிகையிலிருந்து கண்டுபிடித்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பில் சேர்த்தேன்.  தீபம் நா பார்த்தசாரதியின் புதல்வர் வீட்டிற்குச் சென்று பழைய தீபம் இதழ்களை அங்கயே புரட்டிப் பார்த்து பின் ஒரு நோட்டில் எழுதி வந்து சேர்த்தேன்.  இதுமாதிரி பல விட்டுப் போன கவிதைகளை அத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன்.  அப்படி சேர்த்தாலும். இன்னும் விட்டுப்போன ஞானக்கூத்தன் கவிதைகள் நிச்சயம் இருக்கும். எனக்குத் தெரிந்து கசடதபற இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும், மையம் இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும் அவர் சேர்க்க விரும்பவில்லை.   ஞானக்கூத்தன் ரொம்ப குறைவான வரிகளைக் கொண்ட கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார்.  அதாவது  மூன்று வரி, இரண்டு வரி, நான்கு வரிகள் என்று.

அப்படி எழுதுகிற அவர் கவிதைகள் வலிமை உடைய கவிதைகளாக எனக்குத் தோன்றுகின்றன.  இப்படிப்பட்ட கவிதைகளை ஹைக்கூவாக அடையாளப்படுத்தக் கூடாது.  ஞானக்கூத்தனுக்கு ஹைக்கூ மீது நம்பிக்கை இல்லை.  உதாரணமாக ‘தமிழ்’ என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.

எனக்கும் தமிழ்தான் மூச்சு

ஆனால், 

பிறர்மேல் அதைவிட மாட்டேன் 

என்கிறார்.  ஒருமுறை கவிதை எழுதும் நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார்.  அப்போது பிரமிளும் என்கூட பேசிக்கொண்டிருந்தார்.  அந்த நண்பரை பிரமிளுக்கு அறிமுகம் செய்தேன். பிரமிளுக்கு ஏதோ ஆவேசம் வந்துவிட்டது.    ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர் மேல் விடத்தான் விடுவேன்’ என்று சத்தம் போட ஆரம்பி0த்துவிட்டார் அந்த நண்பரைப் பார்த்து.  ஏன் இந்தக் கவிதை அவரைக் கோபப்டும்படி செய்தது என்று யோசித்துக்கொண்டிருப்பேன்.  எனக்கு இன்றும் புரியாத புதிர் இந்தக் கவிதை. அதன் பின் பிரமிளிடம் இதைப் பற்றி நான் எப்போதும் பேசியது கிடையாது.   இன்னொரு கவிதையான சமூகம் என்ற கவிதையில்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா

சரி 

சோடாப் புட்டிகள் உடைக்கலாம்

         வாடா 

என்கிறார். இக் கவிதைகளை எல்லாம்  நறுக்குக் கவிதை என்று புதுப்பெயர் இட்டுக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  இப்படி ஏகப்பட்ட கவிதைகள் ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார்.  எல்லாத் தொகுப்புகளிலும்  இதுமாதிரி கவிதைகளைப் பார்க்கலாம்.  கவிதை என்பது மனதிலிருந்து தோன்றுவது, அது எழுச்சிப் பெற்று சில வரிகளில் நின்று விடுகிறது என்று நினைக்கிறேன்.   நானும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  ஆனால் ஞானக்கூத்தன் இதில்

திறைமையானவர்.  மேலும் அவர் மறைவுக்குப் பிறகு கடைசியாக வெளியான இம்பர் உலகம் என்ற தொகுப்பில் கூட சுற்றறிக்கை என்ற நறுக்குக் கவிதையைப் பார்க்கலாம்.

ஒரு சுற்றறிக்கை

கடைசிக் கையெழுத்தைத் 

தேடுகிறது.  

அவ்வளவுதான் கவிதை.  இந்தக் கவிதையைப் படிக்கும்போது ஒருவித சோகம் என்னை ஆட்கொள்கிறது.  அவர் மரணத்தை உணர்ந்துதான் இப்படி எழுதி உள்ளாரா என்று.  என்னால் யூகிக்க முடிகிறது.  ஆனால் தெளிவாகக் குறிப்பிட முடியவில்லை.  நான் கேட்டுக்கொள்வதெல்லாம் நறுக்குக் கவிதையை தமிழில் வெளிவரும் ஹைக்கூ என்ற வகையில் சேர்த்து விடாதீர்கள்.

(அகில இந்தியா ஆகாசவாணியில் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும். பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார். அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது. அவர் பேச்சை ஆடியோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யக்கூடாது என்பதால் பதிவு செய்யவில்லை. அவர் புத்தகமாகக் கொண்டு வருவார் என்ற நினைக்கிறேன்.
பெருந்தேவி புதுமைப் பித்தன் கதைகளைப் பற்றி பேசும்போது வாடா மல்லிகை என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார். கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு முறை நான் அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன்.

அந்தக் கதையில் ஒரு விஷயம் புரியவில்லை. மொத்தமே 3 பக்கங்கள் கொண்ட கதை இது. 1934 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை. ஸரஸ÷ என்ற பிராமணப் பெண் விதவையாகி விடுகிறாள். 17 வயதிலேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது என்று புபி எழுதி உள்ளார்.

அவள் அழகை வர்ணிக்கும்போது ஸரஸ÷ ஒர் உலவும் கவிதை என்கிறார். இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம் என்கிறார்.

அவள் வீட்டார்கள் ஒரு சமண முனி மாதிரி அவளைக் கோரமாக்கத் துணியவில்லை. அதை எடுத்திருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள்.

ஸரஸ÷வின் தம்பி துரைசாமிக்குச் சாந்திக் கலியாணம் நடக்கிறது. இதுதான் கதையில் திருப்பத்தைத் தருகிறது. முதலில் ஸரஸ÷விற்குத் தாங்க முடியாத குதூகலம் இருந்தாலும், அவளுடைய உள்ளத்தில் ஒரு விதத் துயரம். அதை வெளிப்படுத்திக் கொள்ள தனிமையில் புழக்கடைக்குச் சென்றுவிட்டாள்.

ஸரஸ÷வைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் மீது இரக்கப் படுகிற ஒரு ஆண் அவளைப் பின் தொடரந்து, அவள் தோளில் கையை வைத்து, ‘நான் இருக்கிறேன்.பயப்படாதே,’ என்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறான்.

அவள் அதை மறுத்து விடுகிறாள். அவள் சொல்கிறாள் : “உமது தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன். அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன் மதிப்பு ஏற்படும். தைரியசால் என்பார்கள். அதை எதிர்பார்க்காறீர். நான் பரத்தையன்று. நான்ஓரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்,” என்கிறாள்.

உண்மையில் அவன் அவளைப் பார்த்து, “நீ ஒரு பரத்தை,” என்று சொன்னதால் கோபம் கொண்டு ஸரஸ÷ அவ்வாறு சொல்கிறாள்.

இத்துடன் கதையை புதுமைப்பித்தன் முடிக்கவில்லை. அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது என்று எழுதியிருக்கிறார்.

ஏன் ஸரஸ÷ என்ற கதாபாத்திரத்தை புதுமைப்பித்தன் சாகடிக்க வேண்டும். இந்த இடம்தான் எனக்குப் புரியவில்லை.

27ஆம் விருட்சம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி…

 

 

 

விருட்சம் சந்திப்பின் 26வது கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து கூட்டத்தைச் சிறப்பு செய்தார்கள்.  அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.  இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். நம்மிடையே பிரபலமான இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி அவருடன் நெருங்கி பழகியவர்கள் அல்லது அவர்களுடைய படைப்புகளைப் படித்து அது குறித்து சிலாகித்துப் பேசுபவர்களின் கூட்டம் இது.  முதல் கூட்டம் தி ஜானகிராமனைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாக உரை நிகழ்ந்தினார்.  அதேபோல் இந்த மாதம் 15ஆம் தேதி பெருந்தேவி புதுமைப்பித்தனின் கதைகளைக் குறித்து உரை நிகழ்ந்த உள்ளார்.  புதுமைப்பித்தன் போல் கநாசு, மௌனி, செல்லப்பா, அசோகமித்திரன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி பலர் பேச உள்ளார்கள்.  நீங்கள் எல்லோரும் வந்திருந்து கூட்டத்தை சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதோ கூட்டத்திற்கான அழைப்பிதழ்.  இதை எல்லோரும் உங்கள் வலைதளங்களில் மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஞானக்கூத்தனின் படைப்புலகம் -2

 

ஞானக்கூத்தன் கவிதைகளில் அப்படி என்ன விசேஷம்.  கவிதையில் அவர் கையாளும் மொழியின் திறன்.  வாசகனைப் பிடித்து இழுக்கும் வித்தியாசமான அம்சம்.  இதுதான் அவர் கவிதைகளை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்துகிறது.  உதாரணமாக :

சைக்கிள் கமலம் என்ற கவிதையைப் பார்ப்போம்.

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்

மைதானத்தில் சுற்றிச் சுற்றி

எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்

தம்பினைக் கொண்டு போய்ப்

பள்ளியில் சேர்ப்பாள்

திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்

கடுகுக்காக ஒரு தரம்

மிளகுக்காக மறு தரம்

கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க

மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்

வழியில் குழந்தைகள் எதிரப்பட்டாலும்

இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழந்தையும் மாடும் எதிரப்படா வழிகள்

எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்

என் மேல் ஒருமுறை விட்டாள்

மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்.

சைக்கிள் கமலம் என்ற கவிதையில் வண்டி ஓட்டுவது பற்றி கூறிகொண்டு வந்தவர், ஒரு வரியில் என் மேல் ஒருமுறை விட்டாள் என்று வரும்.

ஞானக்கூத்தனைப் பற்றி யாராவது பேச வந்தால் ஞானக்கூத்தனின் சில கவிதைகளை யாராலும் சொல்லாமல் இருக்க முடியாது.  நான் அப்படி குறிப்பிடப் பட வேண்டிய அவருடைய கவிதைகளின் பட்டியலை இங்கு தர விரும்புகிறேன்.  பிரச்னை, பரிசல் வாழ்க்கை, கீழ்வெண்மணி, விட்டுப்போன நரி, நாய், காலவழுவமைதி, யோஜனை, தோழர் மோசிகீரனார், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், கொள்ளிடத்து முதலைகள், வெங்காயம், வகுப்புக்கு வரும் எலும்புக் கூடு.  இப்படி ஞானக்கூத்தனின் பல கவிதைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் என்னுடைய பல நண்பர்கள் ஞானக்கூத்தன் கவிதைகளை ஒப்பிப்பார்கள்.

(அகில இந்திய ஆகாசவாணியில் நான் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 1

ஞானக்கூத்தனின் ஒரு கவிதையை நான் எப்போதும் மின்சார வண்டியில் என் அலுவலகத்திற்கு பயணம் செல்லும்போது ரசித்துக் கொண்டிருப்பேன்.  அந்தக் கவிதை இதோ:

என்ன மாதிரி என்பது அக் கவிதை.

என்னை நோக்கி ஒருவர் வந்தார்

எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று

எண்ணிக்கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்

ஒன்றும் கேளாமல் சென்றார்

என்ன மாதிரி உலகம் பார் இது.

இப்படித்தான் ஞானக்கூத்தன் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார்.  இக் கவிதையை படித்துவிட்டு எனக்கு அவர் மீது அளவுகடந்த மரியாதை ஏற்பட்டது.  அவரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தேன். அப்போது அவரை நேரில் கூட பார்த்ததில்லை.  ஒரு முறை என் நண்பர் வைத்தியநாதன்தான், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆன்ந்த், காளி-தாஸ், ஆர். ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன் என்று ழ ஏட்டில் எழுதும் கவிஞர்களை அறிமுகப் படுத்தினார்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடற்கரையில் சந்திப்போம்.  நான் சந்தித்தபோது ழ என்ற சிற்றேடு ஏனோ வரவில்லை.  கவனம் என்ற பத்திரிகைதான்  வந்து கொண்டிருந்தது.  கவனம் பத்திரிகைக்கு ஞானக்கூத்தன்தான் ஆசிரியர்.  ழ நண்பர்களின் வட்டத்திற்குள்  ஆத்மாநாமின் தற்கொலை

பெரிய இடி.  அந்தத் தருணத்தில்தான் நான் திரும்பவும் ழ என்ற சிற்றேடு ஆதமாநாமிற்குப் பிறகு கொண்டுவர அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன்.

பல திறமையான கவிஞர்கள் ழ ஏட்டில் எழுதியிருந்தாலும், ஞானக்கூத்தன்தான் எல்லோருக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்.  எல்லோரும் கவிதையைக் குறித்து அவருடைய கருத்துக்களைக் கேட்காமல் இருக்கமாட்டார்கள்.  ஆத்மாநாமிற்குப் பிறகு வெளிவந்த ழ ஏட்டிற்கு அவர்தான் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முழுக்க முழுக்க ஞானக்கூத்தன் கவிதைகளைக் குறித்துப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பார்.  நான் அவருடைய கவிதைகளின் வாசகன். அவர் கவிதை வரிகளைப் படித்துப் பரவசமடைபவன்.  தமிழ் கவிதை உலகத்தில் ஞானக்கூத்தன் போல் இன்னொருவர் எழுதுவாரா என்று தேடி தேடி பார்த்தாலும் கிடைப்பதற்கு வழி இல்லை என்றே எனக்குத் தோன்றும். ஏன் மற்ற மொழிகளில் கூட ஞானக்கூத்தன் போல் ஒரு கவிஞர் உண்டா என்பது சந்தேகம்தான்.  தமிழ் மொழியை அவர் பயன்படுத்துகிற மாதிரி யாராலும் பயன்படுத்த முடியாது.

நான் நவீன விருட்சம் என்ற பத்திரிகையை 1988ல் தொடங்கினேன்.  அப்போது ஒவ்வொரு இதழ் நவீன விருட்சத்திலும் ஞானக்கூத்தனின் பங்கு இருந்துகொண்டு இருக்கும்.  அவரிடமிருந்து கவிதையை வாங்காமல் விருட்சம் இதழை முடிக்க மாட்டேன்.  ஏன் என்றால் ஞானக்கூத்தன் கவிதையை நேசிப்பவர், நானும் கவிதையை நேசிப்பவன்.

ஞானக்கூத்தனின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் üஅன்று வேறு கிழமைý.  இத் தொகுப்பு வெளிவர பல ஓவியர்கள் பங்குகொண்டு வித்தியாசமாக வந்த தொகுப்பு.  இலக்கியச் சங்கம் வெளியீடாக  வெளிவந்தது.  ஞானக்கூத்தனின் திருமணப் பரிசாக இத் தொகுதியை அவருடைய நண்பர்கள் கொண்டு வந்தார்கள். என்னால் மறக்க முடியாத தொகுப்பு என்று ஞானக்கூத்தன் சொல்லி கேட்டிருக்கிறேன்.

ஞானக்கூத்தனின் பிரச்னை என்ற கவிதை 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.  அக் கவிதையை இங்கு  படிக்க விரும்புகிறேன் :

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை.

இதுதான் ஞானக்கூத்தன்.  புதுமையும், வித்தியாசமான சிந்தனையும் உள்ளடக்கியது அவரது கவிதை. படிப்பவரை யோசிக்க வைப்பதோடு வித்தியாசமாக நினைக்க வைக்கிறது.

ஆரம்பத்தில் ஞானக்கூத்தன் எழுத்து பத்திரிகைக்குத்தான் தன் கவிதைகளை அனுப்பினார்.  ஆனால் எழுத்து அவருடைய கவிதைகளைப் பிரசுரம் செய்யவில்லை.  ஞானக்கூத்தன் ஒரு நேர் பேச்சில் இதை என்னிடம் கூறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  சி சு செல்லப்பா மீது கோபம் கூட வந்தது. ஞானக்கூத்தனின் திறமையை சி சு செல்லப்பா அறியவில்லை.  அப்போது எழுத்து பத்திரிகையில் எழுதிய பல கவிஞர்களிடையே ஞானக்கூத்தன் வித்தியாசமானவர்.  புதுமையான கவிஞர்.  அவர் கவிதைகளை நாம் வாசிப்பது மூலமாக இதை  நிச்சயமாக உணரலாம்.

ஞானக்கூத்தன் கவிதைகள் உண்மையாகவே சி மணி ஆரம்பித்த நடை பத்திரிகை மூலமாகத்தான் முதன் முதலாக பின்னாளில் வெளிவந்தன.  அப்போது அது வெளிவந்த சமயத்தில் எல்லா இடங்களிலும் ஞானக்கூத்தன் பற்றியே பேச்சாக இருந்தது.

(ஆல் இந்தியா வானொலியில் நான் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

வாசகசாலை முயற்சிக்கு வாழ்த்துகள்

 

வாசகசாலையின் கதையாடல் என்ற முதலாம் ஆண்டு விழா கூட்டம் நேற்று (01.07.2017) கன்னிமரா நுல்நிலையத்தில் மூன்றாவது தளத்தில் நடந்தது.  கூட்டத்தில் பேச நான், பரிசல் செந்தில்குமார், கணையாழியின் ஜீவ கரிகாலன் மூவரும் வந்திருந்தோம்.

கூட்டத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம்.  கிட்டத்தட்ட 50 பேர்கள் வந்திருந்தார்கள்.  பாதி பேர்கள் பெண்கள்.  வழக்கம்போல் பத்திரிகைகளில் வந்திருந்த கதைகளைப் பற்றி விமர்சனம் செய்தார்கள்.  அங்கு வந்த பெரும்பாலோர் வாசகர்கள்.  அவர்கள் பார்வையில் கதைகள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதுதான் இக் கூட்டங்களின் முக்கிய நோக்கம்.

இன்றைய சூழ்நிலையில் தமிழில் கதைகளை வெளியிடுகின்ற பத்திரிகைகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.  பெரும் பத்திரிகைகள் கதைகளிலிருந்து விலகி துணுக்குகளாகப் போய் விட்டன.  நடுத்தரப் பத்திரிகைகளும், சிறு பத்திரிகைகளும்தான் சிறுகதைகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு வாசகன் பத்திரிகையில் வருகிற கதையைப் படிக்கும்போதுதான் கதைக்கு உயிர் கிடைக்கிறது.  இன்றைய அவசர சூழலில் பத்திரிகையில் கதையைப் படிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் ஏற்படுவதுண்டு.

இந்தத் தருணத்தில்தான் வாசகசாலையின் பங்கை முக்கியமாக நான் கருதுகிறேன்.  ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்தும்போது இன்னும் பலரை கதைகளை வாசிக்கத் தூண்டுதலாக அமையும்.

1988ஆம் ஆண்டு நான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தியபோது, எழுத்தாளர்களையும் புத்தகங்களையும்தான் அறிமுகப் படுத்தினேன்.  ஆனால் இது மாதிரி கதையாடல் என்ற ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியதில்லை.

விருட்சம் கூட்டத்திற்கும் வாசகசாலையின் கூட்டத்திற்கும் வித்தியாசம் அதிகமுண்டு.

– வாசகசாலை கூட்டத்திற்கு வருபவர்களில் பாதிப் பேர்கள்தான் விருட்சம் கூட்டத்திற்கு வருவார்கள்.

– விருட்சம் சார்பில் முதல் கூட்டம் ஆரம்பித்தபோது எனக்கு வயது 35க்குள் இருக்கும்.  ஆனால் அப்போதே என் கூட்டதிற்கு வரும்பவர்களின் வயது 45லிருந்து 50வயதிற்கு மேல் இருக்கும்.

– விருட்சம் கூட்டத்திற்கு பெண்களே வர மாட்டார்கள்.  இத்தனைக்கும் எளிதாக பஸ் கிடைக்கும் திருவல்லிக்கேணி தெற்கு மாடத்தெருவில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் மாடியில்தான் கூட்டம் நடக்கும்.

– ஆனால் மிகப் பெரிய எழுத்தாளுமைகள் விருட்சம் கூட்டத்திற்கு வந்திருந்து கூட்டத்தைக் கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

– விருட்சம் கூட்டத்திற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.  நூறு ரூபாய்கூட செலவாகாது.  பேசுபவர்க்கு வழிச்செலவுக்குக் கூட பணம் தரப்பட மாட்டாது.  அதனால் கார்டில் கூட்டத்திற்கு அழைப்பு, மாடி அறை வாடகை, பின் குடிக்க தண்ணீர் வைக்க செலவு.  அவ்வளவுதான்.  ஆனால் கூட்டங்கள் நடக்க நடக்க செலவுகளும் கூடிக்கொண்டு போய்விட்டன.  இப்போது ஒரு கூட்டம் நடத்தினால் ரூ.1000 வரை செலவாகும்.  முன்பு காசெட்டில் கூட்டத்தைப் பதிவு செய்வேன்.  இப்போது சோனி வாய்ஸ் ரிக்கார்டில் எங்கே உட்கார்ந்தாலும் பதிவு செய்ய முடிகிறது.  அப்போது நடந்த பெரும்பாலான கூட்டங்களில் மைக் வசதி கிடையாது.  பேச வருபவர்கள் சத்தமாகப் பேச வேண்டும்.  இப்படியே நான் 200 கூட்டங்களுக்கு மேல் நடத்திவிட்டேன் இன்றுவரை.

என் கூட்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் கலந்து கொள்ள வர, பலரை பேச அழைப்பேன்.  கூட்டத்திற்கு வரும் பாதிபேர்கள் பேசுபவர்களாக இருப்பார்கள்.

இப்போது நடக்கும் வாசகசாலை இலக்கியக்கூட்டங்களில் இளைஞர்களின் பங்கு அதிகமாக உள்ளது.  சென்னையில் பல இடங்களில் முக்கியமாக நூல்நிலையங்களில் கூட்டம் நடத்துகிறார்கள்.  கட்டுக்கோப்பாக பலர் இதில் கலந்து கொள்கிறார்கள்.  ஒரு மாதத்தில் பாதி நாட்கள் கூட்டங்கள் நடத்துகிறார்கள்.  பரிசல் செந்தில் குறிப்பிட்ட மாதிரி தினமும் கூட அவர்களால் கூட்டம் நடத்த முடியும்.

விருட்சம் கூட்டத்தைக் கூட அவர்களுடன் சேர்ந்து நடத்தலாமென்று நினைத்தேன்.  பின் என் முடிவை மாற்றிக்கொண்டு விட்டேன்.  ஏனென்றால் விருட்சம் என்ற பெயரைச் சேர்த்தால் அவர்கள் கூட்டத்திற்கு வரும் எண்ணிக்கைக் குறைந்து போக வாய்ப்புண்டு. மேலும் அவர்களும் விருட்டசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இக் கூட்டங்களை சிறப்பாக நடத்திக் கொண்டு வரும் கார்த்திகேயனுக்கும், அருணுக்கும்  என் வாழ்த்துகளை மனமுவந்து தெரிவித்துக்கொள்கிறேன்.   நேற்று இப்படித்தான் நான் பேசினேன்.

கதையாடல் மாதிரி கவிதையாடல் என்ற ஒன்று கொண்டு வரலாமென்று தோன்றியது.  ஆனால் கவிதைக்காக நடத்தும் கூட்டம் மோசமாக இருக்கும்.  தேர்வு செய்து குறிப்பிட்ட சிலரை மட்டும் கவிதைகள் வாசிக்க அழைக்க வேண்டும்.  கலந்து கொள்பவர்கள் எல்லோரும் கவிதை வாசிக்கக் கூடாது.  பார்வையாளராகத்தான் கலந்து கொள்ள வேண்டும்.. ஒரு குழு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அந்தக் கவிதைகள் எழுதியவரை மட்டும் வாசிக்கச் சொல்லலாம்.

கோல வடையைச் சாப்பிடாமல் வந்து விட்டேன்….

 

28ஆம் தேதி இரவு காவேரி எக்ஸ்பிரஸில் பங்களூர் சென்றேன்.  நானும் மனைவியும்.  பங்களூரில் உள்ள எங்கள் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமண நிச்சயதார்த்தம்.  அது 30ஆம் தேதி நடக்க உள்ளதால், 29 ஆம் தேதி மகாலிங்கம் என்ற நண்பருடன் காலை 10 மணி சுமாருக்கு பங்களூர் வலம் வந்தேன்.

நான் முன்பெல்லாம் வந்தால், ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டு எழுத்தாள நண்பர்களை சந்திப்பது வழக்கம்.  இப்போது அதெல்லாம் முடிவதில்லை.  அதனால் ஒரு சிலரை மட்டும் சந்திக்க முடிகிறது.  இந்த முறை பாவண்ணனையும், ஸிந்துஜாவையும் சந்தித்தேன். முன்பு போல் பங்களூர் இல்லை என்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.  மெட்ரோ ரயிலில் கொஞ்சம் சீக்கிரம் போய்விடலாம். மகாலிங்கம் என்ற நண்பர் மட்டும் இல்லாவிட்டால் என்னால் எங்கும் செல்ல முடியாது.  அலுப்பே காட்டாமல் அவர் எல்லா இடத்திற்கும் என்னை அழைத்துக்கொண்டு போய்விடுவார்.  பங்களூரில் எதாவது ஓட்டலுக்குச் சென்று எதாவது சாப்பிடாமல் இருக்க மாட்டோம்.  அதேபோல் புத்தகக் கடைகளுக்குப் போகாமல் இருக்க மாட்டோம்.

மகாலிங்கம் தாடி வைத்துக்கொண்டிருப்பார்.  அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்.  ‘நீங்க தாடி வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.  சாப்பிடும்போது சாப்பாட்டுத் துணுக்கெல்லாம் ஒட்டிக் கொள்ளாதா?’

அவர் சிரித்துக்கொண்டே, ‘ஒட்டிக்கொள்ளாது,’ என்று கூறினார். ‘நான் ஷேவ் செய்யாமல் இருப்பதால் என் முகத் தாடை மென்மையாக இருக்கும்,’  என்றார்.

மகாலிங்கம் பேசுவதற்கும் பழகுவதற்கும் நல்ல மனிதர்.  பஙகளூர் சென்றால் மற்றவர்களைப் பார்க்கிறேனோ இல்லையா குறைந்தபட்சம் மகாலிங்கத்தைப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  மேலும் அவர் சென்னை வந்தால் என்னைக் கட்டாயம் பார்ப்பார்.  ஆனால் மிகக் குறைந்த நேரமே சென்னையில் பார்ப்பார்.  அவருக்குச் சென்னையில் ஏகப்பட்ட நண்பர்கள்.

மகாலிங்கத்துடன் நான் பாவண்ணனைப் போய்ப் பார்த்தேன்.  மெட்ரோ ரயிலில் அழைத்துப் போனார்.  பாவண்ணன் ஒரு கடுமையான உழைப்பாளி. அலுவலகத்தில் அவரைச் சந்தித்தாலும் அவர் கவனமெல்லாம் அலுவல் விவகாரமே சுற்றிக்கொண்டிருந்தது.

பாவண்ணனைப் பார்த்து நான் சொன்னேன் : ‘நான் பத்து கேள்வி பத்து பதில் என்ற ஒன்றை எடுத்து வருகிறேன்.  இதுவரை 10 பேர்களைக் கேட்டு விட்டேன்.  உங்களையும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.’ அவரும் ஒப்புக்கொண்டார்.

அவர் அலுவலகத்தில் வெளிய உள்ள புல்வெளியில் அவரைப் பேட்டிக் கண்டேன்.  அவர் நின்று கொண்டே பதில் சொன்னார்.  அன்றே நான் இன்னொரு எழுத்தாள நண்பரைச் சந்திக்க நினைத்தேன்.  அவர் வேற யாருமில்லை.  ஸிந்துஜா.  ஆனால் சந்திக்க முடியவில்லை.

நானும் மகாலிங்கமும் மெட்ரோ ரயிலில் ப்ளாசம்ஸ் என்ற பழைய புத்தகக் கடைக்குச் சென்றோம்.  பழையப் புத்தகக் கடை என்றாலும்.  விலை மலிவாக இல்லை.  மூன்று புத்தகங்களை அங்கு வாங்கினேன்.  ஓராம் பாமுக், ஐ பி ஸிங்கர், மாப்பசான் புத்தகங்களை வாங்கினேன்.  பக்கத்தில் இன்னொரு பழைய புத்தகக் கடை இருந்தது.  அது ப்ளாசம்ஸ் விட பிரமாதம்.  புக் வோர்ம்ஸ் என்று அதன் பெயர்.   அங்கும் போய் முராகாமியின் இரண்டு புத்தகங்களை வாங்கினேன் (நான் போஸ்டல் காலனியில் புத்தகங்களைக் கொண்டு வைத்துவிட்டதால் புத்தகங்களின் பெயர்களை எழுத முடியவில்லை).  பத்து கேள்வி பத்து பதில் பகுதியில் நான் மகாலிங்கத்தையும் பேட்டி எடுக்க விரும்பினேன்.  ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.  பின் நான் உறவினர் வீட்டிற்கு திரும்பி வரும்போது மணி ஏழாகிவிட்டது.

பங்களூரில் எனக்குப் பிடித்தது கோல வடை என்ற ஒன்று.  இதை அதிகமாக வாங்கிக்கொண்டு சாப்பிட  வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் மல்லேஸ்வர ரோடில் அந்தக் கடையை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.  ஹரமாவ் என்ற இடத்தில் தங்க நேர்ந்ததால் மல்லேஸ்வரத்திலிருந்து காரில் நாங்கள் அங்குப் போய்ச் சேர ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது.

திருமண நிச்சயதார்த்தம் அன்று அதாவது 30ஆம் தேதி சிந்துஜாவை சந்தித்தேன்.  அன்றே சதாப்தி என்ற துரித ரயிலில் நான் கிளம்பி வர நேரிட்டது.  ஸிந்துஜாவை பேட்டி எடுக்க முடியவில்லை.

கதையை வாசகனிடம் முடித்து விடுகிறார்

 

முதன் முதலாக அசோகமித்திரன் கதையான ரிக்ஷாவைத்தான் படித்தேன். இக் கதை 1965 ல் அசோகமித்திரன் எழுதிய கதை. அப்போது எனக்கு வயது 12. நான் கிட்டத்தட்ட இன்னும் 10 வருடங்கள் கழித்து தி நகரில் உள்ள நூல்நிலையத்திலிருந்து அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையைப் படித்தேன். இந்தக் கதை 3 பக்கங்களில் முடிந்து விடும்.
இக் கதை முழுவதும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டிருக்கிறது.
நான் அதுவரை படித்தக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல் இருந்தது அவர் கதை. இப்படிச் சொல்வதால் நான் மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் புறக்கணிக்கவில்லை.
ரிக்ஷா என்ற கதையில் பையன் ரவி ரிஷ்கா என்கிறான். அவனுக்கு ரிக்ஷா என்று சொல்ல வரவில்லை. அவனை ரிக்ஷா சொல்லும்படி வற்புறுத்துகிறார். பல முயற்சிக்குப் பிறகு அவன் ரிக்ஷா என்று சொல்ல வராமல் தடுமாறுகிறான். அப்பா அவனை திருத்த முயற்சித்துத் தோல்வியைத் தழுவுகிறார்.
இந்தக் கதையில் இப்படி ஒரு வரி வருகிறது.
உலகம் க்ஷணகாலம் அசைவற்று இருந்தது.
இந்தக் கதையைப் படிக்கும்போது இப்படி ஒரு வரியை எழுதியிருக்கிறாரே என்று அசந்து விட்டேன். அன்றிலிருந்து அசோகமித்திரன் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டார். நான் மற்ற எழுத்தாளர்களைத் தொடர்ந்து வாசிக்கத் தவறுவதில்லை. ஆனால் அசோகமித்திரன் மீது எனக்கு அலாதியான மரியாதை. மதிப்பு. யாரிடமாவது பேசும்போது நான் அசோகமித்திரன் கதையைப் படிப்பேன் என்று சொல்வேன். என் ஞாபகத்திலிருந்து அகலாமல் இருக்கும் ரிக்ஷா கதையைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பேன். அதை ஒரு குறும்படமாகக் கூட எடுக்க என் ஆசை. ஐந்து நிமிடங்களில் இப் படத்தை எடுத்து விடலாம். இந்தக் கதையை அவர் 10965ல் எழுதி உள்ளார். கதையை எழுதியிருந்த ஆண்டில் என் வயது 12தான். ஆனால் கல்லுரியில் படிக்கும் சமயத்தில்தான் இந்தக் கதையைப் படித்தேன். அதுவும் அவருடைய கதைப் புத்தகத்தை புத்தகச் சாலையில் வாங்கி வந்து படித்தேன்.
அசோகமித்திரன் எழுத்து நடையைப் பார்க்கும்போது அவர் சொற்களை சிக்கனமாகப் பயன்படுத்துகிறார். உண்மையில் இரண்டு உத்திகளை அவர் கதைகளில் பயன்படுத்துவதாக நினைக்கிறேன். ஒன்று சொற் சிக்கனம். இரண்டாவது கதையில் எதாவது சொல்வார் என்று நினைக்கும்போது நழுவிப் போகிற தன்மை. புதியதாக அசோகமித்திரன் கதையைப் படிப்பவனுக்கு அவர் என்ன எழுதுகிறார் என்பது அவ்வளவு சுலபமாகப் புரியாது.
உதாரணமாக ரிக்ஷா என்ற கதையை இன்னொரு எழுத்தாளர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு வரியை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். உலகம் க்ஷணகாலம் அசைவற்று இருந்தது என்ற வரிதான் அது.
ரிக்ஷாவில் போய்விட்டு வா என்றேன் என்கிறான் கணவன். மனைவி கேட்கிறாள்: ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி காதில் விழுந்தது. என்று.
இந்த இடத்தில் அசோகமித்திரன் கதையை முடித்துவிட்டிருக்கலாம். ஆனால் கூட ஒரு வரி வருகிறது. நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருக்கிறான். .
இந்தக் கதையைப் படிக்கும்போது எந்த இடத்தில் அசோகமித்திரன் என்ற எழுத்தாளரை நாம் கொண்டு போய் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. உலகத் தரமான எழுத்தாளராகத்தான் அவர் எனக்குத் தென் படுகிறார்.
அசோகமித்திரன் என்ற எழுத்தாளர் அவர் கதை ஒவ்வொன்றையும் வாசகனிடம் முடித்து விடுகிறார். அவர் கதையைப் படித்த வாசகன்தான் கதையைப் படித்த பரவசத்துடன் யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

நூறு கிராமுக்கு மேலே போகக்கூடாது…

நான் நவீன விருட்சம் 102வது இதழை இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  கிட்டத்தட்ட 90 சதவிதம் அனுப்பி இருப்பேன். இந்த இதழ் 114 பக்கங்கள் கொண்ட அசோகமித்திரன் இதழ்.  இதழ் 120 கிராம் எடை கொண்டிருந்தது.  ஒரு இதழ் அனுப்ப ரூ.4 தபால் தலைகள் ஒட்டி அனுப்பியிருந்தேன்.  கிட்டத்தட்ட 70 பிரதிகள் ஒரு நாளும் பின் இன்னொரு நாளில் 50 பிரதிகள் அனுப்பி இருந்தேன்.  தபால் சார்டிங் அலுவலகத்திலிருந்து போன் வந்தது.  üநீங்கள் ரு.5 தபால் தலை ஒட்ட வேண்டும்,ý என்று சொன்னார்கள்.  எனக்குத் திகைப்பாக இருந்தது.  100 கிராமிற்கு இரண்டு ரூபாய் விதம் 120 கிராமிற்கு 4 ரூபாய் போதும் என்று எண்ணியிருந்தேன்.  நான் அவர்களிடம் அப்படித்தான் சொன்னேன்.  அவர்கள் ஒப்புக்கொள்ளவில்ûடில.  100 கிராமிற்கு இரண்டு ரூபாய் ஆனால் அதற்கு மேல் மூன்று ரூபாய் அதிகமாக ஒட்ட வேண்டும்.  ஐந்து ரூபாய் ஆகும் என்றார்கள்.

வேற வழி இல்லாமல் ஒரு ருபாய் கூடுதலாக  ரூ.120 பணம் கட்டினேன்.  அப்போதுதான் ஒன்று நினைத்தேன்.  ஏனோ தபால்தலை மட்டும் ஐந்து ரூபாய் ஒட்டுகிறோமே என்று.  எனக்கு மனசே இல்லை.  முதல் இதழ் நவீன விருட்சம் கொண்டு வந்தபோது இதழ் விலை ரூ.1.50.  ஆண்டுச் சந்தா ரூ.5 தான்.

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறுபத்திரிகை நடத்தும் நான், சில அடிப்படையான உண்மைகளை உணர வேண்டுமென்று நினைத்தேன்.

100 கிராமுக்குக் கீழ்தான் இனி இதழ் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தேன்.   அப்போதுதான் தபால் தலை ரூபாய் இரண்டுடன் முடிந்து விடும்.

இன்னொரு உண்மையையும் உணர்ந்து கொண்டேன்.  750 பிரதிகள் அச்சடிக்கக் கூடாது என்ற உண்மை.  போன ஜனவரி மாதம் 101வது இதழ் கொண்டு வரும்போது புத்தகக் கண்காட்சியை ஒட்டிக் கொண்டு வரும்படி நேர்ந்தது.  அதனால் 750 பிரதிகள் அடித்தேன்.  ஆனால் இப்போது தேவையில்லை.  நான் 500 பிரதிகளுடன் நிறுத்தி இருக்க வேண்டும்.  தவறு செய்து விட்டேன்.  வெயில் கடுமையாக இருந்ததால் பத்திரிகையை எடுத்துக்கொண்டு போகவே என்னால் முடியவில்லை.  அதனால் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு இலக்கியக் கூட்டங்களிலும் பார்ப்பவர்களிடம் நவீன விருட்சம் 102வது இதழை நீட்டிக்கொண்டிருந்தேன்.

116 பக்கங்கள் கொண்ட விருட்சம் 102வது இதழின் விலை ரு.20தான் இது மிக மிகக் குறைவான தொகை.  நான் எப்போதும் பத்திரிகையை இன்றைய சந்தாதாரர்கள் நேற்றைய சந்தாதாரர்கள் அல்லது எப்போதோ சந்தாதாரர்களுக்கு அனுப்புவேன்.  இலவசமாக பலருக்கு அனுப்புவேன்.  அப்படியும் இதழ் பிரதிகள் மீந்து விடும்.

102வது இதழ் மட்டும் 100 பிரதிகளுக்கு மேல் மீந்து விடும். நான் இனிமேல் 100கிராமுக்குக் கீழ்தான் கொண்டு வர வேண்டும்.  மேலும் 500 பிரதிகளுக்கு மேல் தாண்டக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.

பல சிறுபத்திரிகைகளைப் பார்த்து சிறு பத்திரிகையின் பால பாடத்தைக் கற்றுக்கொண்டவன்.   என்னை அறியாமல் நானே மீறி விட்டேன்.

தந்தையர் தினம்

 

சமீபத்தில் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி என் தந்தை இறந்து விட்டார்.  ஆனால் முன்னதாகவே அவருக்குத் தெரியாமல் நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.  ஆனாலும் இந்தக் கவிதையை அவர் படித்து ரசித்திருப்பாரா என்பது தெரியவில்லை.  இன்று தந்தையர் தினம் என்பதால் அந்தக் கவிதையை நீங்கள் வாசிக்க இங்கே அளிக்கிறேன்.

அப்பா

அப்பா சொன்னார் :

குட்மார்னிங்

சரிதான்

காலையில் காஃபியைச்

சுடச்சுட குடிப்பார்

சரிதான்

முன்னாள் முதல்வர்

கருணாநிதி மாதிரி பேசுவார்

சரிதான்

தெருவில் போவோர் வருவோரைப்

பார்த்து

நலமா என்று கேட்பார்

சரிதான்

ஃபோனில் யாராவது பேசினால்

நலமுடன் வாழ்க என்பார்

சரிதான்

கண்ணாடி இல்லாமல்

பேப்பர் படிப்பார்

சரிதான்

தடியை ஊன்றி தானே

நடைபயிற்சி செய்வார்

சரிதான்

தரையில் அமர்ந்து

காய்கறி நறுக்குவார்.

சரிதான்

யார் உதவி இல்லாமலும்

தன் துணிகளை

தானே துவைப்பார்

சரிதான்

சத்தமாக மெய்மறந்து

பாட்டுப்பாடுவார் ஒரு பாடகர்போல்

சரிதான்

91வயதில் தானே

ஷேவ் செய்து

கொள்வார்

சரிதான்

டிவி முன் சீரியலை

விழுந்து விழுந்து ரசிப்பார்

சரிதான்

படுக்கையை விரித்து

தானே படுப்பார்

சரிதான்

ஆனால் என் 59வது வயதில்

என் தலைமை அலுவலகத்திற்குப்

போன் பண்ணி

என்னை மாம்பலம் கிளைக்கு

மாற்றச் சொல்லி கெஞ்சுகிறாரே

அதுதான் சரியில்லை………..