பேட்டி

(நவீன விருட்சம் 66வது இதழில் (ஜøன் 2005ல் வெளிவந்தது) அசோகமித்திரன் எழுதிய கட்டுரையைத் தந்திருக்கிறேன் வாசிக்க.  100வது இதழ் கொண்டு வரும்போது இன்னொரு திட்டமும் உள்ளது.  முதல் இதழிலிலிருந்து நூறாவது இதழ் வரை பிரசுரமானவைகளிலிருந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் முக்கியமான ஒரு படைப்பு விதம் எடுத்து புத்தகமாகக் கொண்டு வர எண்ணம்.) 
அசோகமித்திரன்
                                                                                         பேட்டி


ஒரு புது மாதப் பத்திரிகைக்காக நண்பர் ஒருவர் என்னைப் பேட்டி கண்டார்.  கேள்விகள் அவருடையது.  பதில்களை எழுதிக் கொடுத்து விட்டேன்.  அச்சில் எப்படி வரப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக் கூடியவனாக நினைக்கப் பட்டிருக்கிறேன்.  பேட்டி காண வருபவர்கள் ஒருவர் தவறாமல் அவர் காணும் பேட்டி மிகவும் வித்தியாசமானது என்றுதான் சொல்வார்.  ஆனால் ஒரே மாதிரிக் கேள்விகள்.  அல்லது ஒரே மாதிரிப் பதில்களைப் பெறக்கூடும் கேள்விகள்.
உண்மையில் இந்தப் பேட்டிகளில் பேட்டி காணப்படுபவரை விட பேட்டி காண்பவரின் நோக்கம்தான் நன்கு வெளிப்படுகிறது.  ஆரம்பத்தில் அச்சில் என்னுடைய பேட்டிகளைக் கண்டு நான் திகைத்துப் போயிருக்கிறேன்.  இப்போது பதில்களை எழுதிக் கொடுத்து விடுவது அதனால்தான்.  இல்லாது போனால் பேட்டி காண்பவர் அவராகவே பதில்களை எழுதிக்கொண்டு விடுவார்.  இதைத் திட்டமிட்டபடி செய்வது உண்டு.  அப்படியொரு திட்டம் இல்லாமல் பேட்டிகள் நிகழ்ந்திருக்கின்றன.  இதெல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியரின் தேர்வு என்று ஒன்றுண்டு.  அவர் வெட்டி விடும்போது எப்படி நான் முக்கியம் என்று நினைத்ததை உணர்ந்து கொண்டு அதை வெட்டிவிடுகிறார் என்றும் ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.
பேட்டிகளே பத்திரிகைத் தேவைக்காக உருவான ஒரு வடிவம்.  வள்ளுவரும், வீரமாமுனிவரும் பேட்டி கொடுத்ததாக வரலாறில்லை.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் பத்திரிகைகளும் மக்களிடையே ஜனநாயகச் சிந்தனைகளும் எழுச்சி பெற ஆரம்பித்ததில் ஒரு பிரச்னை குறித்துக் கேட்டு அதற்கு அந்த அறிஞரின் பதிலைத் தருவதில் பேட்டி வடிவம் ஒரு மாதிரித் தெளிவு பெறத் தொடங்கியது.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் சில அமெரிக்க இளைஞர்கள் üபாரிஸ் ரிவ்யூý என்ற பத்திரிகையைத் தொடங்கினார்கள்.  (கம்ப்யூட்டர்க்காரர்கள் திட்டவட்டமான தகவல்கள் பெறலாம்).  இவர்களுடைய பத்திரிகையில் பிரபல எழுத்தாளர்கள் இடம் பெறவும் வேண்டும், அவர்களுக்குச் சன்மானம் தரும்படியாகவும் இருக்கக் கூடாது.  இதற்கு ஓர் உத்தியாக üபாரிஸ் ரிவ்யூý பேட்டிகள் தொடங்கின.  பேட்டிக்கு முன்பு பேட்டி காண்பவர்  அந்த எழுத்தாளரின் படைப்புகள், அவருடைய தொடக்கம், வளர்ச்சி, வாழ்க்கை வரலாறு, படைப்புகள் அனைத்தையும் நன்கு அறிந்து ஆராய்ந்து வைத்திருப்பார்.  எழுத்தாளருக்கு அந்தப் பேட்டி புத்துணர்ச்சியூட்டுவதாக அமையும்.
பேட்டிகள் பற்றி முற்றிலும் எதிர் கோணத்தில் ஒரு கருத்து இருக்கிறது.  பேட்டியைப் படிப்பவர்கள் சாதாரணப் பத்திரிகை வாசகர்கள்.  அவர்களுக்கு எழுத்தாளர்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கப் போவதில்லை.  ஆதலால் பேட்டி காண்பவர் அந்த வாசகர்களின் பிரிதிநிதியாக இருந்து அந்த எழுத்தாளரின் பதில்களைப் பெறுவதுதான் பெரும்பான்மை வாசகர்களுக்கு நியாயம் செய்வது ஆகும்!
ஆனால் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன.  உண்மையில் எழுத்தைப் பற்றியும் எழுத்தாளரைப் பற்றியும் ஒப்புக்குத்தான் கேள்விகள்.  பல கேள்விகள் ஜோசியர்களைக் கேட்பவையாக இருக்கும்.  இது எப்போது முடியும்?  அது எப்போது மாறும்?  இதை ஏன் நீங்கள் செய்யவில்லை?  அதை ஏன் செய்தீர்கள்?  உண்மையில் இதெல்லாம் யாருக்கும் எந்தத் தெளிவும் ஏற்படுத்தப் போவதில்லை.
எழுத்தாளனுக்கு – புனைகதை எழுத்தாளனுக்கு – அவனுடைய புனைகதைதான் முறையான வெளிப்பாடு.  அப் புனைகதைகளுக்கு அப்பால் அவன் பேச வேண்டியிருந்தால் அவன் புனை கதைப் படைப்பை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதான் பொருள்.
இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால் பேட்டி தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.  பல சந்தர்ப்பங்களில் பேட்டி தாட்சண்யத்துக்காக ஒப்புக் கொள்ளப் படுகிறது.  பேட்டி காண வருபவர் நிறுவனம் எதையும் சாராது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்.  இந்தப் பேட்டி எதாவது ஒரு பத்திரிகையில் ஒரு சிறு தொகை அவருக்குப் பெற்றுத் தரக்கூடும்.
எனக்குத் தெரிந்த சிலர் வரிந்து கட்டிக்கொண்டு பேட்டிகள் தந்திருக்கிறார்கள்.  சென்ற ஆண்டு (அல்லது அதற்கு முந்தைய ஆண்டு) சாகித்திய அகாதெமி தலைவர், துணைத்தலைவர், மொழிவாரி ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடந்தது.  தலைவர் உருது எழுத்தாளர்.  அவரை யாரும் அறிமுகமில்லாதவர் என்றும் சொல்ல முடியாது.  அவர் துணைத்தலைவராக இருந்திருக்கிறார்.  இப்போது தலைவராக விரும்புகிறார்.  நம் குடியரசுத் தலைவர் தேர்தல் கூட ஒரு முறை ஒரு துணைத் தலைவரைத் தலைவராக்கியது.   இந்த உருது எழுத்தாளர் முரளி மனோகர் ஜோஷி பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு.  உருது மொழியில் இந்துத்துவா!   எனக்கு அன்று அவர் என்னதான் எழுதியிருக்கிறார் என்று அறிய ஆவலாகத்தான் இருந்தது.  ஆனால் பல தமிழ் எழுத்தாளர் தலைவர்கள் (அல்லது பிரமுகர்கள்) அவர் கவிதை எழுதினார் என்று கோபம் கொண்டிருந்தார்கள்.  அந்த மனிதர் விமரிசக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்றுதான் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  விமரிசகர் கவிதை எழுதியிருந்தால் எப்படி இருக்கும்.  அன்று நிறையத் தமிழ்ப் பேட்டிகள் இந்த உருது மனிதரைத் தாக்கின.  இதை அவர் அறிந்திருந்தால் தமிழ் எழுத்துலகில் இந்த அளவு தாக்கப்படுவதற்கு அவருடைய பெயரும், புகழும் பரவியிருக்கிறதா என்று நினைத்துப் பூரித்துப் போயிருப்பார்.  முரளி மனோகர் ஜோஷியைப் புகழந்து பாடிய கவிதையை யாராவது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் யனுள்ளதாயிருக்கும்.  இங்கேதான் எவ்வளவு பேரைப் புகழ்ந்து பாட வேண்டியிருக்கிறது.
         

வலலிக்கண்ணன் கடிதம்….

அழகியசிங்கர்
    நவீன  விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன்.  இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று.
நவீன விருட்சத்தைப் புரட்டிக்கொண்டு வந்தபோது இக் கடிதம் கண்ணில் பட்டது.  உடனே இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடன் ந பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்துடன்…
வல்லிக்கண்ணன்                                                                                      29.09.2004
சென்னை                                                                            
     நீங்கள் சென்னையில் இல்லை, உத்தியோக உயர்வுடன் பந்தநல்லூர் வங்கிக் கிளைக்கு மாறுதல் பெற்றிருப்பதையும், மயிலாடுதுறையில் தங்கி தினசரி அங்கே போய் வந்து கொண்டிருப்பதையும் 64வது இதழ் மூலம் தெரிந்து கொண்டேன்.  உங்கள் அனுபவக் கசப்புகளை கவிதையில் பதிவு செய்திரக்கிறீர்கள்.  அட்டை உரையாடலில் வேறு அனுபவங்களை ரசமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
புகழ் பெற்ற üமயூரா லாட்ஜ்ý ஊத்தப்பம் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஒரு ஊத்தப்பம் ஆர்டர் செய்தும் முழுசாகச் சாப்பிட முடியாத  அதன் தரம் பற்றியும் அறிந்தேன்.  üசாப்பிட விளங்காத அளவிற்குý அதன் ருசி, காரம், மணம், குணம் இருக்கும் போலும்.  ஒருவேளை பெரிசாக, பருமனாக, சப்பென்று இருக்குமோ என்னவோ என்று என் மனம் சந்தேகப்படுகிறது.
வாணாதிராஜபுரம் ஊரின் பசுமையான சாலை, வேலூர் பாதைகள் வயல்கள் சூழ்ந்த, ஆள்கள் நடமாட்டமில்லாத பிரதேசம், இரவுக்காட்சி எல்லாம் என்னுள், üஆகா, அருமையான காட்சிகள்ý என்ற எண்ணத்தை எழுப்பும் விதத்தில் விவரிக்கப் பட்டிருக்கின்றன.  இவற்றை எல்லாம் கண்டு களித்து ரசிக்க எனக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை என்று என் மனமாகப்பட்டது வருத்தப்பட்டுக் கொள்கிறது.  அது ஒரு குட்டிச் சாத்தான்.
üதனிமை சிலசமயங்களில் மோசமான எண்ணங்களையும் உருவாக்கும்,ý என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  சரிதான்.  தனிமை என் இனிய நண்பன் என்று நான் ஒரு அருமையான கவிதை எழுதியிருக்கிறேன்.  சரி, எப்படியோ நாள்கள் போகின்றன.
‘நவீன விருட்சம்’ இதழ் சிறப்பாக இருக்கிறது.  மறக்கப்பட்டுவிட்ட கட்டுரை, கதைகளின் மறுபிரசுரம் பாராட்டப்பட வேண்டியதாகும்.  இப்படி அருமையான விஷயங்கள் காலப் பாழில் மறதிப் புழுதியில் மக்கிப் போயுள்ளன.  அவற்றை எல்லாம் திரும்பத் திரும்பப் படிப்பவர்கள் எவருமிலர்.  பல சமாச்சாரங்களை ஒரு தடவை படிக்கக்கூட வாசகர்கள் கிடைப்பதில்லை.  ஆனாலும் எழுத்து உற்பத்தி மிக நிறைய ரொம்ப ஏராளமாகப் பென்னம்பெரும் அளவில் நடந்து கொண்டிருக்கிறது. 

எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்

எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்
அழகியசிங்கர்
சமீபத்தில் நடந்த ஒரு பெண்ணின் கொடூரமான கொலையிலிருந்து பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.  பெண்களைத் துரத்துவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.  எழுபது வாக்கில் என் உறவினர் பெண்ணை என்னுடன் கல்லூரியில் படித்தப் பையன் துரத்துவான்.  எதாவது கிண்டலாகப் பேசுவான்.  அவனுக்குத்  தெரியாது அந்தப் பெண் எனக்கு உறவினர் என்று. அவனிடம் இதுமாதிரி செய்யாதே என்று சொல்ல நினைத்தேன்.  அதற்குள் அவனுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. மின்சார வண்டியில் அவன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தான். மீனம்பாக்கம் வரை அவன் சென்று கொண்டிருக்கும்போது, அவன் முன் பக்கம் உள்ள பெண்கள் பெட்டியில் இருந்த பெண்களைக் கிண்டல் செய்தபடி தலையை அளவுக்கு அதிகமாக நீட்டியபடி வந்திருக்கிறான்.  மீனம்பாக்கத்தில் ரொம்பவும் குறுகலாக இருந்த மின் கம்பத்தில் அவன் தலை மோதி, சம்பவம் இடத்திலேயே இறந்து விட்டான்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் மேற்கு மாம்பலம் இப்போது இருக்கிற வசதி இல்லாத காலத்தில் தெரு விளக்குகள் பளிச்சென்று எரியாது.  மாலை ஏழு மணிக்கே இருட்டத் தொடங்கி விடும்.  பெண்கள் தனியாக தெருவில் நடப்பதற்கே பயப்படுவார்கள்.  தனியாக நடந்து வரும் பெண்களை இடிப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள்.  
இதுமாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. பெண்களைத் துரத்துவது அல்லது எதாவது காரணம் காட்டி பெண்களை அடைய முயற்சி செயவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 
விபரீதமாகப் போகும்போது கொலை செய்யும் அளவிற்குப் போய்விடுவார்கள்.  .  முன்பைவிட இப்போதெல்லாம் இது குறித்துப் பேசும் அளவிற்கு முன்னேறி உள்ளார்கள்.  ஊடகத்தில் இது குறித்து சலசலப்பு ஏற்படுகிறது.  நீதிபதிகள் இதை தனியாகவே ஒரு கேஸôக எடுத்துக்கொண்டு அரசாங்கத்தை விஜாரிக்கிறார்கள்.
இவ்வளவு நடந்தும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்குமா? நடக்கத்தான் நடக்கும்.  பெண்களைத் துரத்தும் ஆண்கள் இருக்கத்தான் இருப்பார்கள். கொஞ்சம் பார்க்க லட்சணமாக இருக்கும் பெண்களுக்கு ஆபத்து எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
இன்றைய காலத்துப் பெண்களும் துணிச்சலானவர்கள்.  ஆண்களின் இந்தத் துரத்தல்களைப் பற்றி கவலைப்படாதவர்கள்.  யாராவது சிலர்தான் ஏமாந்து விடுகிறார்கள்.
என் சீர்காழி வங்கிக் கிளையில் புதியதாக சேர்நத பெண் கேரளாவைச் சேர்ந்தவள்.  பார்க்க லட்சணமாக உயரமாக இருப்பாள்.  வங்கியில் புதிததாக சேர்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள்.  அப்படி பயிற்சி கொடுக்கும் இடத்திலேயே அந்தப் பெண்ணிற்கு பிரச்சினை ஆரம்பித்து விட்டது.  அந்தப் பெண்ணை பயிற்சி எடுத்துக்கொள்ளும் புதியதாக சேரும் ஒரு இளைஞன் துரத்த ஆரம்பித்தான்.  அவனிடமிருந்து தப்பிக்கவே போதும் போதும் என்று ஆகிவிட்டது.  செல்போனில் வெளி ஆட்கள் அடித்தால் எடுக்க மாட்டாள். முக்கியமாக முகநூலில் தொடர்பு கிடையாது.  எப்போது சீர்காழியை விட்டு ஆழப்புழைக்குப் போகப்போகிறோம் என்று தவமாய் இருப்பாள். மேலும் சீர்காழி என்ற இடத்தில் அறை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணி இன்னொரு ùப்ண்மணியுடன் கூட்டாக இருந்தாலும், சுற்றிலும் அவளை நோட்டமிடும் ஆண்களைக் கண்டு அவள் பயப்படாமல் இல்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் வெளியே யாரிடமும் சொல்ல மாட்டாள்.  தைரியமான பெண்.  மிக சாதாரண குடும்பத்தைச் சார்ந்த பெண் அவள். இப்போது அவள் ஊருக்கு திரும்பிப் போய்விட்டாள்.  திருமணம் செய்துகொண்டு பதவி உயர்வும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறாள்.  
சமீபத்தில் என் உறவினருடன் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றோம்.  அவர்கள் டில்லியைச் சேர்ந்தவர்கள்.  டில்லி ரொம்ப மோசமாம். மாலை 7 மணிக்கே தனியாக எந்தப் பெண்ணும் போக முடியாதாம்.  ‘உங்கள் சென்னை பரவாயில்லை,’ என்றார் நண்பர். 
சரி. இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்யும் ஆண்களை எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்.  இது பெரிய கேள்விக்குறி.   
   

இன்று அவர் நினைவு நாள்.

இன்று அவர் நினைவு நாள்.  
அழகியசிங்கர்

ஆத்மாநாமை நான் முதன் முதலாக நண்பர் வைத்தியுடன்தான் சந்தித்தேன்.  என்னை ஆத்மாநாமிற்கு அறிமுகப்படுத்தினார் வைத்தி. ழ வெளியீடாக வந்திருந்த காகிதத்தில் ஒரு கோடு, அவரவர் கை மணல், சூரியனுக்குப் பின் பக்கம் என்ற மூன்று கவிதைத் தொகுதிகளை வாங்கினேன்.  காகிதத்தில் ஒரு கோடு என்ற புத்தகத்தில் ஆத்மாநாமின் கையெழுத்தைப் போடும்படி கேட்டுக்கொண்டேன்.

அன்று ஆத்மாநாம் நான் வைத்தி மூவரும் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம்.  அதன்பின்,  சாந்தி தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றோம்.  ஆனால் ஒன்றும் வாங்கவில்லை.  ஏன் அங்கு சென்றோம் என்பது புரியாத புதிர்.  அவருடைய நிஜம் என்ற கவிதையைப் பற்றி விஜாரித்தேன். அவர் பதில் சொன்னது ஞாபகத்தில் இல்லை.
அந்தக் கவிதை இதோ:
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமே நிஜமோ நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்
இரண்டாவது முறையாக நான் ஆத்மாநாமை இலக்குக் கூட்டத்தில் சந்தித்தேன்.  ஒன்றும் பேசவில்லை.  ஆனால் அவர் கையில் ழ என்ற பத்திரிகையை வைத்துக் கொண்டிருந்தார். அப் பத்திரிகையை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.    
மூன்றாவதாக நான் ஆதமாநமை ஞாநியின் திருமண வைபத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த பரீக்ஷா நாடகத்தில் சந்தித்தேன்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆத்மாநாமிடம் நகுலனைப் பற்றி கேட்டேன்.  ‘அவர் முக்கியமான எழுத்தாளர்,  எளிதில் புரியாது,’  என்றார் ஆத்மாநாம்.  என்னிடம் பேசிக்கொண்டு இருந்தவர், விமலாதித்த மாமல்லன் இருக்கும் இடத்திற்கு எழுந்து போய்விட்டார். மாமல்லனிடம் ஆத்மாநாம் கொடுத்தப் புத்தகத்தை வாங்கச் சென்று விட்டார்.

நான்காவது முறையாக ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் ஆத்மாநாமைச் சந்தித்தேன்.  நானும் அவரும் கைக் குலுக்கிக் கொண்டோம். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

ஐந்தாவதாக அவர் தற்கொலை பற்றிய செய்தியை அறிந்தேன்.  அவருடைய நண்பர்கள் இரங்கல் கூட்டமொன்றை நடத்தினார்கள்.   நானும் கலந்து கொண்டேன்.  உருக்கமான இரங்கல் கூட்டம் அது. முதன் முதலில் தற்கொலை செய்துகொண்ட கவிஞன் ஆத்மாநாமாகத்தான் இருக்க வேண்டும்.

இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமிள், வெளியேற்றம் என்ற ஆத்மாநாம் கவிதையைப் படித்துவிட்டு கேவி அழுதார். நம்ப முடியாமல் இருந்தது.  இன்று ஆத்மாநாம் நினைவு நாள்.  என் நண்பர் வைத்தி, வளைந்த மீசைக்கொண்ட நண்பரை இனி பார்க்க முடியாது என்று ஆத்மாநாம் பற்றி எழுதிய கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.  

நீங்களும் படிக்கலாம் 22

அழகியசிங்கர் 
22) வேடிக்கைக் கவிதைகள்..
போன ஆண்டு பேயோன் என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு இலக்கியவாதி சிலாகித்துப் பேசியதை அறிந்து யார் இந்தப் பேயோன் என்று யோசிக்கத் தொடங்கினேன்.  எனக்கு அதுவரை தெரியாத பெயராக இருந்தது.  செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி 2015 ஆம் ஆண்டு பேயோன் என்பவரின் இரண்டு புத்தகங்களை வாங்கினேன்.  காதல் இரவு என்ற அவருடைய கவிதைத் தொகுதியும், பேயோன் 1000 என்ற சமகால ட்விட்டர் நுண்பதிவு புத்தகமும்.  வேற புத்தகங்கள் அவருடையது எதாவது உள்ளதா என்பது தெரியவில்லை.  இப்புத்தகங்களில் ஒன்று 2011 ஆம் ஆண்டிலும் இன்னொன்று 2009ஆம் ஆண்டிலும் ஆழி வெளியீடாக வந்துள்ளன. 
கவிதைத் தொகுதிக்கு ஏன் காதல் இரவு என்ற பெயரை சூட்டினார் என்று யோசித்துக் கொண்டு அந்தப் புத்தகத்தைப் புரட்டினேன்.  சமீப காலத்தில் நான் படிக்க விரும்புகிற கவிதைத் தொகுதிகளை அவ்வளவு சுலபமாக நெருங்க முடிவதில்லை.  ஆனால் பேயோன் கவிதைத் தொகுதி வித்தியாசமான தொகுதியாக இருந்தது.  அவர் கவிதைகளில் தென்படும் அங்கத உணர்வு ரொம்பவும் இயல்பாக செயல்படுகிறது.  கவிதையில் ஒருவிதத் தீவிரத்தன்மையுடன் அலட்சிய மன்பான்மையும் செயல்படுகிறது.
புதிய கவித்துவங்கள் என்ற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகளில் தெளிவாகவே கவிதையைப் பற்றிய சில விஷயங்களை முன் வைக்கிறார்.  üகவிதையைப் படித்தவுடன் புரிந்துவிட அது நீதிக் கதை அல்ல, ஒன்றுமே புரியாமல் அடித்துவிட அது மழலை மொழியும் அல்ல.ý என்று குறிப்பிடுகிறார்.
இன்னொரு இடத்தில் ஒரு கவிதை எப்படி கவித்துவமாகிறது? என்ற கேள்வியை எழுப்பி, அது கையாளும் பொருண்மையினால்தான் என்கிறார். திரும்பவும் இவர் எப்படி கவிதை எழுதியிருக்கிறார் என்று பார்க்கும்போது, காதல் என்ற வார்த்தையை கிண்டல் செய்கிறாரோ என்று தோன்றுகிறது.  
முதல் பக்கத்திலேயே இப்படி எழுதுகிறார்.
üதெருவில் உன் பெயர் கொண்ட 
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுவேன் 
காதல் கவிதைகளை நக்கல் செய்கிறாரோ என்ற சந்தேகம்தான் நம் மனதில் ஏற்படுகிறது.  
இன்றைய காலத்தில் சிலசமயம் கவிதைத் தொகுதியையோ, சிறுகதைத் தொகுதியையோ, நாவலையோ படிப்பது என்பது யாரோ ஒருவர் தண்டனை கொடுப்பதுபோல் தோன்றுகிறது.  ஆனால் பேயோன் கவிதைகள் அப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தவில்லை.  
இத் தொகுப்பில் கவிதைகளைப் பற்றியே கவிதை எழுதியிருக்கிறார்.  அதாவது மெட்டா கவிதை என்று அப்படி எழுதுவதைக் குறிப்பிடலாம். உதாரணமாக : மரத்தில் சிக்கிய கவிதை என்று ஒன்றை எழுதியிருக்கிறார்.  இது சற்று நீளமான கவிதை.  உரைநடை வடிவத்தில் எழுதப்பட்ட சோதனை கவிதை இது.  இதைப் படிக்கும்போதும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
எழுதிய கவிதை ஒன்று மரத்தில் சிக்கிக் கொண்டது.  அதை திரும்பவும் மீட்க வழி தெரியவில்லை.  கடைசியில் இப்படி எழுதுகிறார்.
üஇரண்டாவது, மூன்றாவது, நான்காவது முறையாக அந்தக் கவிதையை மீண்டும் எழுதிப் பார்த்துவிட்டேன்.  அதற்குப் பிறகு பலவற்றை எழுதிக் கிழித்தாயிற்று.  கழுவேறிய மரியாதை அந்த ஒரு கவிதைக்குத்தான்,ý என்று முடிக்கிறார்.
தேவையானவை என்ற கவிதையைப் படிக்கும்போது அது வெறும் காய்கறிகளின் லிஸ்ட்.
பெங்களூர் தக்காளி  – 2
குடை மிளகாய்      – 1
       ………..என்று லிஸ்ட்டை எழுதி முடித்துவிடுகிறார். வேற ஒன்றும் இதன் மூலம் சொல்ல முயற்சிக்கவில்லை.
அதேபோல் இருபத்திநாலு காதல் கவிதைகள் என்ற நீண்ட கவிதை.
இதேபோல் நக்கலடிக்கும் கவிதையை நான் இதுவரை படித்ததில்லை.
அந்தக் கவிதையின் கடைசிப் பாராவை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன். 
என்னங்க 
என்னங்க
என அழைத்துக்கொண்டே 
யிருக்கிறாய் விஷயத்தைச்
சொல்லாமல்..
இத் தொகுப்பைப் பார்க்கும்போது கவிதையை எள்ளி நகையாடுவதுபோல் தோற்றம் அளிக்கிறது.  சிலசமயம் சில கவிதைகள் படிப்பவரை சிந்திக்கவும் வைக்கிறது. பொதுவாக பேயோன் எழுதுகிற கவிதைகளைப்போல் பலரும் எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒன்றிரண்டு கவிதைகள்தான் ஒரு தொகுதியில் எழுதி இருப்பார்கள்.  இதில் விதிவிலக்கு என்னவென்றால் பேயோன் தொகுதி முழுவதும் இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறார்.  எப்போதும் இந்தக் தொகுதியை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு கவிதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம்.  
காதல் இரவு – கவிதைகள் – பேயோன் – விலை ரூ50 ஆழி பப்ளிஷர்ஸ் 1 ஏ திலகர் தெரு, பாலாஜி நகர், அய்யப்பன்தாங்கல், சென்னை 600 077 தொலைபேசி எண் : 9940147473
 

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்…………….

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்…………….
அழகியசிங்கர்
தளம 14வது இதழில் இருந்து பொன் குமாரின்  பூனையைப் பற்றி எழுதிய கவிதையை அளித்துள்ளேன்.  தளம் பத்திரிகை பாரவி என்ற தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் தொடர்ந்து நடந்து வருகிறது.  அவருக்கு என் வாழ்த்துகள்.  எந்தச் சிறுபத்திரிகை என்றாலும் தனிப்பட்ட படைப்பாளியின் முயற்சியின் பேரிலேயே நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  கூட்டாக நடத்த வேண்டுமென்று நினைத்தால் சிறுபத்திரிகை நின்றுவிடும்.  அதற்கு உதாரணமாக கசடதபற, பிரஞ்ஞை போன்ற பத்திரிகைகளைக் குறிப்பிடலாம். சிறப்பாக தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் நடந்த பத்திரிகை சி சு செல்லப்பாவின் எழுத்து. 120 இதழ்கள் வரை வந்துள்ளன.  தளம் இப்படி பாரவி என்ற தனிப்பட்வரின் முயற்சியில் 14 இதழ்கள் வரை கொண்டு வர முடிந்துள்ளது.  இதே அவர் கூட்டாக சிலரை சேர்த்தால் இது சாத்தியம் இல்லாமல் போயிருக்கும்.  ஏன் நானே என் தனிப்பட்ட முயற்சியால் விருட்சம் பத்திரிகையின் 99வது இதழ்கள் வரை கொண்டு வந்துள்ளேன். 100வது வரும் இந்தத் தருணத்தில் என்னால் தளம் மாதிரி ஒரு இதழை அத்தனைப் பக்கங்களுடன் கொண்டு வர சாத்தியமே இல்லை.  
காலைச் சுற்றிய பூனை
பொன் குமார்
ஒரு குழந்தை வளர்ப்பதற்கு
ஒப்பானது
ஒரு பூனை வளர்ப்பது
வீட்டுக்குள்
எங்குச் சென்றாலும்
காலைச் சுற்றிச் சுற்றியே
வரும்.
தூங்கும்போது
வயிற்றினடியில்
வந்து படுத்துக் கொள்ளும்
உட்கார்ந்திருந்தாலோ
மடியில்
அடைக்கலமாகி விடும்
எப்பகுதியில் இருந்தாலும்
மியாவ் என்றால் போதும்
ஒரு நொடிக்குள் முன்னிற்கும்
பூனை இருப்பதால்
எட்டிப் பார்ப்பதே இல்லை
எலிகள்
பழகி விட்டதால்
பாலினைத் தீண்டாத பண்பு
பாரட்டத் தக்கது.
அணுக்கும் பூனைக்கும்
அடையாளம் மீசை.
ஆண் என்பதால்
அடர்த்தியாகவே இருந்தது
ஆசையாகவும் இருந்தது
குடும்ப அட்டையில் 
இடம் பெறும் அளவிற்கு
ஒன்றியது
ஒரு வாரமாக காணவில்லை
ஒரு பெண் பூனை
உலவியதாக தகவல்

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

அழகியசிங்கர்
டாம் டைக்வேர் எடுத்த ரன் லோலா ரன் என்ற படம் சற்று வித்தியாசமானது.  இது ஒரு சுவாரசியமான படமும் கூட.  படம் முழுவதும் லோலா என்பவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.  லோலாவின் ஓட்டத்தை ஒட்டி இந்தப் படத்தை எடுத்துள்ளார்.  ஓட்டத்துடன் காலத்தையும் கட்டிப் போடுகிறார்.
லோலாவின் காதலன் மானி அவளுக்குப் போன் செய்கிறான்.  அவளை  போனில் திட்டுகிறான்.  குறிப்பிட்ட நேரத்திற்கு லோலா அவனைச் சந்திக்காமல் சென்றதால், மானி சோதனை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கடத்தல் தொழிலில் கிடைத்த வைரங்களை ஓரிடத்தில் ஒப்படைத்து பணத்துடன் வருகிறான்.  அவன் எதிர்பார்த்த இடத்தில் லோலா சரியான நேரத்தில் வராததால் பை நிறைய பணத்துடன் ரயிலில் பயணம் செய்ய நேரிடுகிறது.  சோதனை அதிகாரிகளைப் பார்த்தபோது, எடுத்துக்கொண்டு வந்த பணப்பை ரயிலில் ஒரு மூலையில் வைத்துவிட்டு இறங்கி ஓட வேண்டியிருந்தது.  அவனுடன் அந்தச் சமயத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு தாடிக்காரர் பணப்பையை எடுத்துக் கொண்டு விடுகிறார்.  
அந்தப் பணப் பையில் இருந்த பணத்தை திருப்பி கடத்தல்காரர்களிடம்  கொடுக்காமல் இருந்தால், அவன் உயிருக்கே ஆபத்து.  லோலா அவனை சந்திக்க முடியாமல் போனதற்கு அவள் ஓட்டி வந்த பைக்கை யாரோ எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக சொல்கிறாள்.  இன்னும் 20 நிமிடத்தில் 12 மணி அடிப்பதற்குள் ஒரு லட்சம் பணம் கொண்டு வரும்படி அவளிடம் இரைஞ்சுகிறான்.  லோலா தன் காதலனை காப்பாற்ற தன் அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறாள்.  காதலனோ 20 நிமிடத்தில் அவன் இருக்குமிடத்திற்கு பணத்துடன் வரச் சொல்கிறான்.  அப்படி வராவிட்டால் எதிரிலுள்ள கடைக்குச் சென்று கொள்ளை அடிக்கப் போவதாக  அழுதுகொண்டே சொல்கிறான்.  லோலா தான் எப்படியும் வந்து விடுவதாக சொல்கிறாள்.  
லோலா காதலனை சந்திக்கவும், பணத்தை அப்பாவிடம் பெறவும் ஓடுகிறாள்.  ஓடிக்கொண்டே இருக்கிறாள்.  அவள் அப்பா அலுவலகத்தில் தன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.  அவளை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.  இந்தத் தருணத்தில் லோலா உள்ளே நுழைகிறாள்.  இந்தப் படத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கியமானதாகப் படுகிறது.  லோலா வேகமாக ஓடிக்கொண்டு வரும்போது, ஒரு சைக்கிள் விற்பனை செய்ய விரும்புவனைப் பார்க்கிறாள்.  அவன் சைக்கிள் வேண்டுமா என்று கேட்கிறான். அது திருட்டு சைக்கிள் வேண்டாம் என்று குறிப்பிடுகிறாள் லோலா.  அவள் காதலனின் பணத்தை எடுத்துக்கொண்டு போகிறவனை வழியில் பார்க்கிறாள்.  அவன் அவளைக் கடந்து செல்கிறான்.  பின் அவள் அப்பாவின் அலுவலகத்தில் அவள் நுழையும்போது, அவள் எதிரில் வரும் ஒருவளுடன் கிட்டத்தட்ட மோதுவது போல் ஓடுகிறாள்.  இந்த இடத்தில் அப்படி மேதினால் என்ன நிலைக்குத் தள்ளப் படுவோம் என்று கற்பனையில் அவள் நிலையை படத்தில் காட்டுகிறார்கள்.
பின் அப்பா அறைக்குள் நுழைந்தபோது, அவர் காதலி, இவள்தான் உங்கள் மகளா என்று கூறியபடி வெளியே போய் விடுகிறாள்.  லோலா அப்பாவிடம் பணம் கேட்கிறாள்.  அவர் தரமறுக்கிறார்.  அவளை திட்டி வெளியே அழைத்துப் போய் விட்டுவிட்டு இனிமேல் வீட்டிற்கே வரப் போவதில்லை என்கிறார்.  
செய்வதறியாது திகைக்கிறாள் லோலா. அலுவலக வாசலில் ஒரு வயதானவள் எதிர் படுகிறாள்.  அவளிடம் நேரம் கேட்கிறாள்.  12 மணி அடிக்க மூன்று நிமிடங்கள்தான் இருக்கிறது.  லோலா அங்கிருந்து வேகமாக மானியைப் பார்க்க அவசரம் அவசரமாக ஓடுகிறாள்.  12 அடித்தவுடன், மானி எதிர் உள்ள கடைக்குச் சென்று கொள்ளை அடிக்க துப்பாக்கியை எடுத்து சத்தம் போடுகிறான்.  லோலாவும் அவனுடன் சேர்ந்து சத்தம் போடுகிறாள்.  வெளியே வரும்போது போலீசு அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.  மானி கொள்ளை அடித்தப் பணத்தை தூக்கி எறிகிறான்.  போலீசு சுட லோலா அடிப்பட்டு கீழே விழுகிறாள்.  மானியுடன் இருந்த காதலை எண்ணிப் பார்க்கிறாள்.  ஒரு நிமிடம் மனதிற்குள் நினைத்துப் பார்க்கிறாள்.  üநான் சாகக் கூடாது,ý என்று.  
ஒரு நிமிடம் முன்னதாக வந்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசனை போகிறது.  திரும்பவும் லோலாஓடி வருகிறாள்.  அதே நிகழ்ச்சிகளை சந்திக்கிறாள்.  பணத்தைத் திருடிய தாடிக்காரன் கடந்து போகிறான். சைக்கிள் காரன் கடந்து போகிறான்.  ஆம்புலன்ஸ் வண்டி கடந்து போகிறது.  கன்னியாஸ்திரிகள் கடந்து போகிறார்கள்.  அப்பா அலுவலகத்தில் நுழைகிறாள்.  அவள் அப்பா அவளைப் பற்றியும் அவள் அம்மாவைப் பற்றியும் மட்டமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் அவருடைய காதலியுடன்.  உள்ளே நுழைந்த லோலா அப்பாவிடம் பணம் கேட்கிறாள்.  அவர் பணம் தர மறுக்கிறார்.  அந்த அறையில் உள்ள எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறாள்.  பின் வெளியே வந்து வாசலில் காவல் காரனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து அப்பாவை மிரட்டி ஒருலட்சம் பணத்தைத் தயார் செய்து லோலா அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுகிறாள்.
காதலனை சரியாக 12 மணிக்கு சந்திக்கிறாள்.  அவன் பெயரைக் கூப்பிட்டு
கத்துகிறாள்.  அவனைப் பார்ப்பதற்குள் மனதில் அவளை அவன் பார்க்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறாள்.    அவன் அவளைப் பார்த்து அவளை நோக்கி திரும்பி வருகிறான்.  வேகமாக வரும் ஆம்புலன்ஸ் வண்டி அவன் மீதுமோதி அவனை கீழே சாய்த்து விடுகிறது.  ஆனால் அவன் சாக விரும்பவில்லை.  திரும்பவும் நிகழ்ச்சிகள் பின்னோக்கிப் போகின்றன.  
லோலா திரும்பவும் வீட்டிலிருந்து கிளம்பி ஓடி வருகிறாள்.  இப்போது சம்பவங்கள் ஒவ்வொன்றும் வேறு விதமாக மாறி விடுகின்றன.  சைக்கிள்காரன் தாடிக்காரனை ஒரு சின்ன  தெரு ஓர ரெஸ்டரான்டில் சந்தித்து அவன் சைக்கிளை விற்கிறான்.  சைக்கிளில் தாடிக்காரன் வருகிறான்.  அப்பாவை சந்திக்கசச் செல்லும் லோலா அவரைச் சந்திக்க முடியவில்லை. அதன் முன் அப்பாவுடன் இருக்கும் அவருடைய மேலதிகாரியான மேயரைச் சந்திக்கிறாள்.  லோலாவின் அப்பா மேயருடன் அவர் காரில் போகும்போது எதிரில் ஒரு காரில் மோதி விடுகிறார்கள்.  அவர்கள் இருவரும் காரிலேயே இறந்து விடுகிறார்கள்.   
  செய்வதறியாத லோலா வேகமாக ஓடி வரும்போது, ஒரு டிராக்டர் மீது மோதிக் கொள்ள இருக்கிறாள்.  டிராக்டர் ஓட்டி வண்டியை அவள் மீது மோதாமல் அவளைத் திட்டுகிறான்.  அந்த வண்டி இருக்குமிடத்திலிருந்து எதிரில் காசினோ இருக்கிறது.  அங்கு  செல்கிறாள்.  அவள் கையில் உள்ள பணத்தை வைத்து சூதாட்டம் ஆடி ஒரு லட்சம் சம்பாதிக்கிறாள்.  அதை ஒரு பையில் போட்டு அந்த இடத்தை விட்டு ஓடி வருகிறாள்.  திரும்பவும் அவள்ஓடி வரும்போது சிவப்பு நிற ஆம்புலன்ஸ் வருகிறது ஒரு பெரிய கண்ணாடி பலர் தூக்கிப் பிடித்தபடி நடு ரோடில் நடந்து வருகிறார்கள்.  ஆம்புலன்ஸ் அவர்கள் மீது மோதாமல் நிற்கிறது.  ஓடி வந்து கொண்டிருந்த லோலாவும் அந்த ஆம்புலன்ஸில் ஏறிக் கொள்கிறாள்.  ஆம்புலன்ஸில் ஒரு இதய நோயாளி.  சாகும் நிலையில் இருக்கும் அவனை, லோலா அவன் கையைப் பிடித்தபடி நான் இருக்கிறேன் என்கிறாள்.  அவனுடைய இதயத் துடிப்பு சீராகி அவன் சரியாகிவிடுகிறான்.  லோலா அவள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி அவள் காதலனை சத்தம்போட்டு கூப்பிடுகிறாள்.
அவள் காதலன் மானி டெலிபோன் பூத்திலிருந்து வெளியே வரும்போது பணத்தைத் திருடிய தாடிக்காரனை சைக்கிளில் செல்வதைப் பார்க்கிறான்.  அவனை துப்பாக்கியால் மிரட்டி அந்தப் பணப்பையைப் பறித்துக் கொள்கிறான்.  பின் வேகமான பணத்தை கொடுத்துவிட்டு லோலாவைப் பார்க்க வருகிறான்.  லோலாவும் அவனும் சந்தித்துக் கொள்கிறார்கள்.  üஎல்லாம் முடிந்து விட்டது,ý என்கிறான் காதலன்.  பின் அவள் கையில் வைத்திருக்கும் பை என்ன என்கிறான் மானி.  அவள் சிரிக்கிறாள்.  படம் இத்துடன் முடிந்து விடுகிறது. 
ஒரே சம்பவம் மூன்று முறை வெவ்வேறு விதமாக காட்டியிருக்கிறார்கள்.  ஒருமுறை லோலா சுட்டுக் கொள்ளப் படுகிறாள்.  ஒருமுறை மானி விபத்தில் சிக்கி இறந்து விடுகிறான்.  மூன்றாவது முறை அவள் அப்பா விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார். 
காலத்தையும் விதவிதமான சம்பவங்களையும் வைத்து இந்தப் படம் ரொம்ப பிரமாதமாக எடுக்கப் பட்டிருக்கிறது.  திறமையான தொழில் நுட்பங்களையும், கிராபிக்ஸ்ஸ÷ம் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன.  வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு மாதிரி மாறிவிடக் கூடியது என்பதை டாம் டைக்வர் என்ற ஜெர்மானிய டைரக்டர் 1998லேயே இப்படத்தை எடுத்துள்ளார்.  இன்றும் இப் படத்தைப் பார்க்க பிரமிப்பாக உள்ளது.   

தோன்றும் கவிதை வரிகள்

அழகியசிங்கர்
காலையில் வாக் போகும்போது எனக்கு கவிதை வரிகள் தோன்றினால் வீட்டில் உள்ள கர்னாடக வங்கி டைரியில் எழுதி வைப்பேன்.  தேதி எழுதுவேன்.  நேரம் எழுதுவேன்.  ஆனால் யாரிடமும் இதுமாதிரி எழுதுவதை காட்ட மாட்டேன்.  கிட்டத்தட்ட 30 க்கு மேல் கவிதைகள் எழுதியிருப்பேன். நானே படித்து ரசிக்கக் கூடிய கவிதைகள் இவை.  அவற்றில் ஒன்று ஜெயமோகன் என்ற தலைப்பில் ஒரு கவிதை.  இதோ உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.
ஜெயமோகன்
ஆயிரக்கணக்கான பக்கங்களில்
மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார்
படிக்க படிக்க வளர்ந்துகொண்டே போகிறது
எது மாதிரியான எழுத்தளார் இவர்
எப்படியெல்லாமோ யோஜனை செய்கிறார்
என்பது ஆச்சரியம்தான்
எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா
ஆனால் 
என்ன செய்வது
அவர் எழுதும் வேகத்திற்கு
என்னால் படிக்க முடியவில்லையே…….

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர்

உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன.  அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர்.  இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவருக்கு வயது எழுபதாவது இருக்கும்.
இந்தத் தொகுதிக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைகள் குழப்பமில்லாமல் ஆழ்ந்து யோசனை செய்ய வைக்கும். இந்தத் தொகுதி வரும்போது ஒரு முறை என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார்.  அன்று ஒரு பண்டிகை தினம்.   நான் வீட்டில் அவருக்கு விருந்தளித்தேன்.  இப்போது அவர் முகமே எனக்கு மறந்து விட்டது.  
ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார்.  பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன்.
இத் தொகுப்பை திரும்பவும் கொண்டு வர உத்தேசித்துளளேன்.

உமாபதி

ஓசைகள்
ஓசைகளின் உபத்திரவம் 
தாங்க முடியாமல் போச்சு
இன்ன இடமென்றில்லாமல்
வீட்டில்
வெளியில்
விவஸ்தை கெட்டுப் போச்சு
எப்போது என்று ஞாபகமில்லை
மனிதர்கள் பேச்சை மறுத்து
ஒதுங்கிய நாளாய் இருக்கலாம்
கதிகளின் ஓசைக்குக் காதை
அடைத்த அன்றாய் இருக்கலாம்
காற்று பேசத் துவங்கியது
தன் இச்சைப்படி
மெலிதாய் உரத்தும்
விஷயங்களுக்குத் தக்கபடி
எல்லாம் கை மீறினதாய் உணர்ந்து
வழியில்லாமல்
குருடாக்கிக் கொண்டேன்
விளைந்தது ஆபத்து
முதல் நாள்
எதரில் கண்ட சில விரல்களில்
இன்னும் சில முகங்களில்
என் செவிகள்
பின்னர் ஒரு பூனையின் முகத்தில்
புல்லின் நீர் கோந்த முகத்திலும் கூட
நாளாக நாளாக என் உடம்பே
எனக்கொரு செவியாச்சு
உலகெங்கும் என் செவிகள்
வெளியெங்கும் என் செவிகள்
எல்லாம் ஆரவாரம்.

ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல்

அழகியசிங்கர்

அப்போது நாங்கள் போஸ்டல்காலனி முதல் தெருவில் குடியிருந்தோம்.  இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  தீபாவளி அன்றுதான் நடந்தது.  எங்கள் வீடு இருந்த தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர் தனியாக இருந்தாள்.  வயதான பெண்மணி. அந்தப் பெண்மணிக்கு சொந்தமான தனி வீடு. அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருந்தாள். பயங்கரமான அதிர்ச்சி அது.  இவ்வளவு அருகில் ஒரு கொலை நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.  
கொலை செய்தவன் அந்தப் பெண்மணியின் நகைக்காக கொலை செய்து விட்டான்.  தனிமையில் இருக்கும் அந்தப் பெண்மணி நகைக்காக கொலை செய்ய வருபவனிடம், கேட்டவுடன் நகைகளைக் கழட்டிக் கொடுத்திருக்கலாம்.  அந்தப் பெண்மணி எரிர்ப்பு தெரிவித்ததால் இது மாதிரி நிகழ்ந்து விட்டது. போலீசுகாரர்கள் திறமையானவர்கள்.  ஒருவாரத்தில் அந்தக் கொலையாளியைப் பிடித்து விட்டார்கள்.
நம் அருகில் இது மாதிரி நிகழ்ச்சி நடக்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு அதிர்வு ஏனோ ஏற்படுகிறது.  மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.  நாங்கள் அன்று அப்படித்தான் தவித்தோம். 
இந்தக் கொடூர நிகழ்ச்சியை அடிப்படயாகக் கொண்டுதான் நான் ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல் ஒன்றை எழுத முயற்சி செய்து வெற்றிகரமாக எழுதினேன்.  
என்னதான் எழுதினாலும் நிஜம் பயங்கரமானதுதான்.