ந.முத்துசாமியின் நெய்ச் சொம்பு

 

அழகியசிங்கர்

ந. முத்துசாமியின் ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள நெய்ச் சொம்பு என்ற கதை. நாலரை பக்கங்கள் கொண்ட கதை. 2004ல் எழுதப்பட்ட கதை.


பத்து வயது சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட கதை.  ந.முத்துசாமி அவருடைய பத்தாவது வயதில் அவருடைய அனுபவத்தைத்தான் கதையாக எழுதி உள்ளார்
எங்கள் வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது என்று ஆரம்பம் ஆகிறது கதை.
ஆரம்பத்தில் ஒரு கிராமப்புற வீட்டில் நெய்ச் செம்பு எங்கே வீற்றிருக்கும் என்பதை நுணுக்கமாக விவரிக்கிறார்.  
எங்கள் வீடு எருமைகளுக்குப் பெயர் போனது.  இரண்டு நாளைக்கு ஒரு முறை தயிர் கடைவார்கள்.  நானும் கடைவேன்.  என்று கதாசிரியர் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கிறார்.மோர் கடைவதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.  அந்த சுவாரஸ்யத்தைக் கம்பனும் அனுபவித்திருப்பான் என்று கம்பனின் வரிகள் இரண்டை குறிப்பிடுகிறர்.
தோயும் வெண்தயிரி மத்தொலிதுள்ளவும்.
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்
பிறகுத் தன் வீட்டில் உள்ள அடுப்பங்கரையைப் பற்றி விவரிக்கிறார். எங்கள் அடுப்பங்கரையில் உள்ள தொட்டி முற்றம்தான் மிகவும் பெரியது.  அதைப்போல் நான் எங்கும் பார்த்ததில்லை என்கிறார்.  இந்தக் கதை அவர் மூலமாக அவரை ஆதாரமாக வைத்துக்கொண்டு சொல்லப்படுகிறது.  அடுப்பங்கரையில் தென்படும் இருட்டை விவரிக்கும்போது அதை நாம் தொலைத்து விட்டோம் என்கிறார்.  
ஒரு வரி விவரிக்கும்போது வருகிறது.  நியாயங்கள் குன்றியிருந்த மொத்தச் சமூகத்திற்காகவும் நாம் இப்போதுதான் உழைக்கத் தலைப்பட்டிருக்கிறோம் என்கிறார்
முதலில் நெய்ச் செம்பு தொங்கிக்கொண்டிருக்கும் உறியைப் பற்றியும், எப்படி வாசலில் திண்ணையில் இருப்பவருக்கு இந்த உறியும் நெய்ச் சொம்பும் கண்ணில் படாமல் இருக்கிறது என்பதை விவரித்துக் கொண்டு போகிறார்.
அதன் பின் நெய்ச் சொம்பு பற்றி.  அது ஈயச் சொம்பு என்பது பழைய மனிதர்களுக்குத் தெரியும்.  அது மாயவரத்திலும் கும்பகோணத்திலும் செய்யப் படுகிறது என்பதையும், இந்த ஊர்கள் ஈயப் பாத்திரங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை என்பதையும் குறிப்பிடுகிறார்.
மாயவரத்தில் உள்ள துலா கட்டத்தை ஒட்டிய பட்டமங்கலத் தெருவின் கோடியில் மேற்குப் பார்த்த கீழ்க்கைச் சாரியில் சில கடைகளில் ஈயப் பாத்திரங்களை லொட்டு லொட்டு என்று தட்டி செய்து கொண்டிருக்கலாம்.
ஈயப்பாத்திரங்கள் பற்றிய பிரஞ்ஞையே இப்போது குறைந்து விட்டது என்கிறார்.  வெள்ளீயம், காரியம் பார்த்து வாங்கத் தெரியாவிட்டால் காரியத்தைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள் என்றும் சொல்கிறார்.  
இந்தக் கதையைப் படித்துக் கொண்டு வருபவர்களுக்குப் பல விபரங்களைச் சொல்லிக்கொண்டு போகிறார்.  படிப்பவர்க்குக் கதையா கட்டுரையா என்ற சந்தேகம் வந்து விடும்.  இந்த விவரணைகள் இருந்தாலும் இது கதைதான்.
ரசம் வைப்பது வெள்ளீயம் மிகவும் ஏற்றது.  ஈயச் சொம்பில்தான் ரசம் வைத்துச் சாப்பிட வேண்டுமென்று சொல்வார்கள்.  ஒருக்கால் ஈயம் உடம்பிற்குத் தேவையோ என்னவோ இப்போது ஈய விஷத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.  அளவைப் பொறுத்து மருந்தும் விஷமாக மாறிவிடும் போலும், வைத்தியரைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். 
இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போகிறார். முதலில் உறியைப் பற்றி.  அந்தக் காலத்து வீடுகளில் உறி வைக்கும் அழகைப் பற்றி..பின் உறியில் தொங்கும் ஈயச்சொம்புகளில் தயிர் கடைவது பற்றி.  ஈயச்சொம்பு எங்கே கிடைக்கும் என்ற விபரம் பற்றி. ஈயச் சொம்பில் ரசம் வைப்பது பற்றி என்றெல்லாம் கூறுகிறார்.
ஒருநாள் காலை நேரத்தில் பெரிய கற்சட்டியில்  தயிர் கடைந்து கொண்டிருக்கும்போது, பழனிவேல என்கிற நண்பன் வந்துவிடுகிறான்.   கண்ணா என்று கூப்பிடுகிறான்.  அப்போதுதான்  பத்து வயது சிறுவனான கதை சொல்லியின் பெயர் கண்ணன் என்று அறிமுகமாகிறது. நண்பன் வந்தது கண்ணனுக்கு மகிழ்ச்சி .   பழனிவேல குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமென்று கேட்கிறான். பானையில் வைத்திருந்த பானைத் தண்ணீரை எடுக்கப்போனான் கண்ணன்.  அடுப்படியிலிருந்த அம்மா அவனைக் கூப்பிட்டாள்.  அவன் நண்பனுக்குத் தண்ணீரைக் கொடுக்கும்போது சற்று மோரைத் தெளித்துக் கொடுக்க வேண்டுமென்பதற்காகக் கூப்பிட்டாள்.  அவன் பிராமணன் இல்லை என்பதால் அம்மா அதுமாதிரி செய்யக் கூப்பிட்டாள்.   நண்பன் முதலியார் .  புஞ்சையில் பிராமணர்களைப் போலவே செல்வாக்கோடு இருந்தவர்கள் முதலியார்கள்.  
நண்பனுக்குத்  தண்ணீரில் மோரைத் தெளித்துக் கொடுப்பதற்குக் கண்ணனுக்கு உடன் பாடில்லை. பத்து வயதிருக்கும் போதே அந்த தீமைகள் கண்ணனுக்குத் தெரிந்தது. 
இங்கு மாட்டுக்காரச் சிறுவர்கள் காவிரிக்கரையில் தொலைவில் நின்று ‘காவிரியில் குளிக்கும் பிராமணர்களைப் பார்த்து, அக்ரகாரப் பாப்பானெல்லாம் சாக மாட்டானா, அவன் ஆத்தங்கரை ஓரத்திலே வேக மாட்டானா’ என்று 
தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு பாடத் தொடங்கி விட்டிருந்தார்கள் அப்போது.
பிறப்பிலே அந்தணராக இருந்தாலும் முத்துசாமிக்குத்  தன்னைச் சார்ந்த சமூகத்தைத் தாக்கி எழுத, அலாதியான துணிச்சல் வேண்டும்.  
இதை இந்தக் கதையில் குறிப்பிடுகிறார் கதாசிரியர். நண்பனுக்குத் தண்ணீரில் மோரை ஊற்றாமல் டம்ளரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.  அடுப்படியிலிருந்து அவன் அம்மா ஓடிவந்து கற்சட்டியில் கடைந்து கொண்டிருந்த மோரில் விரலைத் தேய்த்து டம்ளரில் தெளித்தாள்.  இந்த நிகழ்ச்சி கண்ணனை மிகவும் பாதித்துவிட்டது.  கோபத்துடன் டம்ளரை முற்றத்துச் சுவரில் அடித்தான்.  கற்சட்டித் தயிரைக் காலால் முற்றத்தில் உதைத்து உடைத்தான்.  உறியில் தொங்கிக் கொண்டிருந்த நெய்ச் சொம்பை எடுத்து முற்றத்துச் சுவரில் மோதி உடைத்தான்.  சுவர் முழுவதும், முற்றம் முழுதும் நெய், மோர் ஆறாய் ஓடியது. கோபத்துடன் வெளியே ஓடிய அவனை வாயிற்படியில் மோதி அவன் தலையைக் காயப்படுத்தியது.
ஐயோ அம்மா என்று கீழே விழுந்து மயக்கம் போட்ட அவனை அவன் நண்பன்தான் ஓடிவந்து தூக்கிக் கிடத்திவிட்டு வைத்தியனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து மருந்து வைத்துக் கட்டினானாம்.இந்த நெய்க்கறை இன்னமும் தொட்டி முற்றச் சுவரில் அது உண்டான காரணத்தை இழந்து இருந்து கொண்டிருக்கிறது என்கிறார் முத்துசாமி.
 இந்தக் கதை முதல் பகுதி கட்டுரை வடிவத்திலிருந்தாலும் கடைசியில் ஒரு சின்ன சம்பவத்தை விளக்கி கதைபோல் மாற்றி எழுதி விடுகிறார்.   முத்துசாமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமாகப் படுகிறது..  இவர் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகக் கதைகள் எழுதியதாகத் தோன்றுகிறது.
தமிழில் மிகக் குறைவாகச் சிறுகதைகள் எழுதினாலும் குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளிகளில் 
இவர் ஒருவர்.  இவருக்குக் கூத்துப்பட்டறையில்தான் கவனம் அதிகம்.

நன்றி : மேற்கத்திக் கொம்பு மாடுகள் – ந.முத்துசாமி – சிறுகதைகள் – க்ரியா – பக்கங்கள் : 296 – விலை : ரூ.360


நகுலனின் நினைவு தினம் இன்று..

அழகியசிங்கர்

நான் பொதுவாக ஒவ்வொரு எழுத்தாளரின் நினைவு நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை.  சில தினங்களுக்கு முன்னால் என் நண்பர் உதவியால் நகுலனின் நினைவுநாள் இன்று என்பதை அறிந்தேன். 2007ஆம் ஆண்டு இறந்தார்.  அவர் இறந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன.  86வது வயதில் அவர் இறந்தார்.
‘சென்னைக்கு நகுலன் வந்திருக்கிறார்,’ என்ற தகவலை  நண்பர் ஐராவதம் அவர்களிடம் சொன்னேன்.  நாங்கள் எப்போதும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் சந்திப்பது வழக்கம்.


‘லீவு போடலாமய்யா இன்னிக்கு,’  என்றார் அவர்


‘சரி” என்றேன். 

இருவரும் அசோக்நகரில் நகுலனை சந்திக்கப் புறப்பட்டோம்.  நகுலன் அவருடைய சகோதரர் வீட்டில் தங்கி இருந்தார்.


நகுலன் எப்போதுமே அதிர்ந்து பேசத் தெரியாதவர்.  அவர் ஒரு சமயத்தில் ஒருவருடன்தான் பேச முடியும்.  இன்னொருவர் கேட்க  கிட்டே நெருங்கி வரவேண்டும்.


அன்று பேசிக்கொண்டே இருந்தோம்.  நகுலனைப் பேட்டி எடுத்தோம்.  ஐராவதம்தான் பேட்டி எடுத்தார். 

நான் நோட்புக்கில் அவர் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டிருந்தேன்.  இறுதியில் அந்தப் பேட்டியை வெளியிட வேண்டாமென்று சொல்லி விட்டார்.  நோட்டில் எழுதி வைத்த அந்தப் பேட்டி என் கண்ணில் இன்று வரை படவில்லை.


விருட்சத்திற்குப் படைப்புகள் அனுப்பும் போது தபால் தலை வைத்து அனுப்புவார்.  பிரசுரம் செய்யாவிட்டால் திருப்பி அனுப்பி விடுங்கள் என்பார். 


‘நீங்கள் எது எழுதினாலும் நான் பிரசுரம் செய்வேன்,’ என்று அவருக்குப் பதில் எழுதுவேன்.


மார்ச்சு 1989ஆம் ஆண்டு விருட்சம் இதழில் நகுலனின் குறள் மூலம் ஒரு கவிதை என்ற தலைப்பில் ஒரு கவிதை பிரசுரம் செய்தேன்.

நில் போ வா

வா போ நில்

போ வா நில்

நில் போ வா?


என்று நகுலன் கவிதையைப் பிரசுரம் செய்து விட்டு மாட்டிக்கொண்டு விட்டேன்.  எல்லோரும் இது எப்படிக் கவிதை என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.   பிரமிள் இதற்குப் பதில் அதிரடிக் கவிதை எழுதி என்னையும் நகுலனையும் சாடிவிட்டார்.  காஞ்சிபுரத்திலிருந்து ஒரு இலக்கிய அமைப்பு, எப்படி இதைக் கவிதைன்னு பிரசுரம் செய்தீர்கள் என்று கேள்வி கேட்டு எழுதியது.

நான் நகுலனிடம் பதில் அளிக்கும்படி கேட்டேன்.  அவர் இரண்டரைப் பக்கம் பதில் அனுப்பி இருந்தார்.  அதையும் பிரசுரம் செய்தேன். எல்லோரும் கிண்டல் செய்கிற ராமச்சந்திரன் என்ற கவிதை.  இது அவருடைய கோட். ஸ்டாண்ட் கவிதைகள் என்ற் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.  இது ‘ழ” வெளியீடாக வந்த புத்தகம்.  அந்தக் கவிதை இதோ:


ராமச்சந்திரனா“ என்று கேட்டேன்

” ராமச்சந்திரன்“ என்றார்

எந்த ராமச்சந்திரன் என்று

நான் கேட்கவில்லை

அவர் சொல்லவுமில்லை.


இந்தக் கவிதையைப் படித்துவிட்டு பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தக் கவிதை ஒரு மனநிலையை விவரிக்கிறது.  எல்லா உறவு நிலையிலும் ஆழமில்லை என்று விவரிக்கிறது.  எனக்குப் பிடித்த கவிதையில் இதுவும் ஒன்று.


கவிதைகளைத் தவிர அவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று பலவும் எழுதி உள்ளார்.  இரு நீண்ட கவிதைகள் என்ற புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன்.  ரூ.12தான் புத்தகம் விலை.  மிகவும் முக்கியமான புத்தகம் அது.  ஆனால் யாரும் வாங்கி ஆதரவு கொடுக்கவில்லை. 

அந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நெருப்பு.  பெரும்பாலான கவிதைப் பிரதிகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. நகுலனைப் பற்றி அதிகமாகச் சொல்லலாம்.  முடிந்தவரைச் சொல்ல முயல்கிறேன்.

பிரபஞ்சனின் பகல் நேர நாடகம்

அழகியசிங்கர்

பிரபஞ்சனின் ஒரு பகல் நேர நாடகம் என்ற சிறுகதை 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது.   இதில் தன் அனுபவத்தைக் கதையாக மாற்றி உள்ளார். ஒரு திறமையான எழுத்தாளர் எதையும் சிறப்பாக எழுதக் கூடியவர் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம்.
பொதுவாக இங்கே ஒரு கதையைச் சுருக்கமாக சொல்லிவிட்டு பின் அக்கதையைக் குறித்துத் தோன்றுவதைக் குறிப்பிடுகிறேன். 8 பக்கங்கள் கொண்ட கதை.
முதலில் ஆரம்பிக்கும்போது நட்ராஜன்  குறிப்பிடப்படாத ஊரிலுள்ள எம்பளாயிமென்டில் பதிவு செய்ய வருகிறான்.   புலவர் பட்டம் பெற்றிருக்கிற நட்ராஜன் அந்தப் படிப்பைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைக்கிறான்.
பஸ்ஸில் வந்து இறங்குகிறான் நட்ராஜன்.  அதை இப்படி வர்ணிக்கிறார் பிரபஞ்சன்.
‘நட்ராஜனை மட்டும் இறக்கி விட்டு விட்டு நகர்ந்தது பஸ்.  ஓடும் பஸ்ஸின் பின்புறத்தையும் அந்தக் காலை வெயிலில் மினுமினுக்கும் நீண்ட தார் ரோட்டையும் பார்த்துக்கொண்டு கொஞ்ச நாழி அப்படியே நின்றான் நடராஜன்.
பக்கத்தில் டீ கடை இருக்கிறது.  டீ கடைப் பக்கத்தில் சைக்கிள் கடையும் அதன் பக்கத்தில் வெற்றிலை பாக்குக் கடையும் இருக்கிறது.  வெற்றிலை பாக்குக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி புகைத்துக் கொண்டே போக வேண்டிய ஆபிஸ் பேரை சொல்லி வழி கேட்கிறான்.
இந்த இடத்தில் எந்த இடத்திற்குப் போகப் போகிறான் என்ற விபரத்தைக் கதாசிரியர் ஆரம்பத்தில் கூறவில்லை.  குறிப்பிடப்படாத ஊரிலுள்ள எம்பளாயிமென்ட் அலுவலகத்தில் தனது புலவர் படிப்பைப் பதிவு செய்ய போகிறான்.  எல்லோரும் வரிசையாக நிற்கிறார்கள்.  எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்தவர்கள், எஸ்.எஸ்.எல்.சி பெயில் ஆனவர்கள், பியூசி, டிகிரி படித்தவர்கள் என்றெல்லாம்.  இதில் புலவர் படித்த நட்ராஜனை எங்கே நிற்க வைப்பது என்று காக்கிச் சட்டைக் காரனுக்குத் தெரியவில்லை.  
அந்த ஊர் கடலூர் அல்ல என்பதை ஒருவர் பேசுகிற வசனத்தின் மூலம் காட்டுகிறார்.  
‘இன்னாபா ஒண்ணும் தெரியாதவனாட்ட கார்டு காடடறே.  இது கடலூர் எம்பிளாய்மண்டுல ரிஜிஸ்டரான செத்திபிகேட்டுல்ல?’ என்கிறான் காக்கி சட்டை. 
ஒரு பக்கம் இந்தக் கூத்தெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற நட்ராஜன் தன் வீட்டு ஞாபகம் வர அங்கே போய் விடுகிறான். அவன் மனைவியைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நினைக்கிறான். 
நட்ராஜன் எஸ.எஸ்.எல்.சி பாஸ் செய்தவர்கள் வரிசையில் வந்து நிற்கிறான்.  வரிசை நகர்கிறது.  பதிவு செய்கிற க்ளார்க் முன்னால் தன்னுடைய  காகிதங்களைக் காட்டுகிறான்.  
அவன்,  ‘நீங்கப் புலவரில்ல… எஸ்எஸ்எல.சி கான்டிடேட்ஸ்கூட ஏன் சார் வந்து நிக்கிறீங்க? ஒங்கள மாதிரி ஏஜ÷கேட்ஸ இப்படி இருந்தா என்ன சார் அர்த்தம். போங்க போங்க அந்த டிவிஷனுக்குப் போங்க, ‘ என்று துரத்தி அடிக்கப்படுகிறான்.
இன்னொரு இடத்தில் போய் நிற்கிறான்.  அவரும் நட்ராஜனை துரத்தி அடிக்கிறார்.   ‘யார்கிட்டே போகுது?’ என்று நட்ராஜன் பணிவாகக் கேட்கிறான்.
‘ஆபீஸரைப் போய்ப் பார்,’ என்கிறார்.   அவரைப் பற்றி விசாரிக்கும்போது கதாசிரியர், தன் எண்ணெய் வழியும் மூஞ்சை ஒரு பைலுக்குள் நுழைத்துக் கொண்டார் என்கிறார்.  இங்கே எந்தவித உணர்ச்சியும் வெளிப்படாமல் ஒரு அலுவலகத்தில் இயந்திரத்தனமாக நடப்பதை அப்படியே கொண்டு வருகிறார்.  
எதோ பெயர் போட்ட ஆபிஸர் என்ற பெயர் போட்ட அறை முன் நிற்கிறான் நட்ராஜன்.  அந்த அறை முன் பாப் வெட்டிக்கொண்ட பெண்ணைப் பார்த்து ரசிக்கிறான். 
”ஆபீஸர் இப்போதுதான் வெளியே போனார் 3 மணி ஆகும்,’  என்று இங்கிலீஷ்காரர்களின் தமிழில் சொல்லி, அழகாகச் சிரித்தாள் அவள்.  
நட்ராஜன் வெறுத்து விட்டான். மணி ஒன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தது.  இந்த இடத்தில் அவனைப் பற்றிய வர்ணனை வருகிறது. தலையை விண் விண்ணென்று தெறித்தது.  நேராக டீ கடையை நோக்கி நடந்தான்.  சோறு சாப்பிடத் தோன்றவில்லை.  பசித்தது. ஒரு வயதானவரும் ஒரு சிறுமியும் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  இவன் ரெண்டு வடையை மென்று டீயைக் குடித்தான்.  பெஞ்சின் மேல் உட்கார்ந்துகொண்டு புகைக்க ஆரம்பித்தான். 
மூன்றரை மணிக்குமேல் ஆபீஸர் ஸ்கூட்டரிலிருந்து வந்து இறங்குகிறார்.  அவர் விறைப்பாகக் கம்பீரமாக ஆபீசுக்குற் நுழைந்தார்.நட்ராஜன் அவர் கூடவே போனான்.  உள்ளே அதே டைப்பிஸ்ட். அதே அழகான சிரிப்போடு அவனை வரவேற்றாள். 
இந்த இடத்தில் கதாசிரியர் ஒன்றைக் கூறுகிறார். வெயிலின் உஷ்ணமான சூழ்நிலையில் இங்கு மட்டும் குளிர்ச்சியாய் இருப்பதற்கு இவள் சிரிப்பும் ஒரு காரணமாக இவனுக்குப் பட்டது.
கொஞ்ச நேரம் காத்திருக்கிறான்.  அங்கே உள்ள சூழ்நிலை வர்ணிக்கிறார் கதாசிரியர் நட்ராஜன்ராஜன் பார்வையில்.  
டைப்பிஸ்ட் கொடி மாதிரி அசைந்து அசைந்து அறைக்குள் போய் மிக நிதானமாக வெளியில் வந்தாள் என்று ஒரு வர்ணனை.
ஆபீஸர் அறைக்குள் நுழைகிறான் நடராஜன். அந்தப் பெரிய அறையில் நன்றாகச் சாய்ந்து ஈஸிசேரில் இருப்பதுமாதிரி இருந்தார் அவர். 
நட்ராஜன் காகிதங்களை அவர் முன் நகர்த்தி,  ‘நான் புலவர் பாஸ் செய்திருக்கிறேன், தமிழ் பண்டிட்டாகப் பதிஞ்சுக்கலாம்னு’  நினைக்கிறேன் என்கிறான். 
அவர் துரைசாமி என்ற கீழ்நிலை சிம்பந்தியைக் கூப்பிட்டுக் காகிதத்தில் ஏதே எழுதி அவனிடம் கொடுக்கிறார்.  போய் வந்த களப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். காலை நீட்டி நன்றாகச் சாய்ந்து அந்த வசதியான நாற்காலியில் படுத்தார்.  கண்களை மூடினார். 
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  ஆபீஸர் ஒரு வார்த்தை கூட நடராஜனுடன் பேசவில்லை. அசதி ஒரு காரணமாக இருக்கலாம்.
அவன் வெளியே வர ஐந்து மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.  ஒரு புளியமரத்து நிழ அடக்கி வைத்த மூத்திரம் போய்விட்டு பெட்டிக் கடைக்குப் போய் சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு தான் போக வேண்டிய ஊருக்கு, பஸ்û1 எதிர்கொண்டு நிற்கிறான்.
இந்தக் கதையில் நட்ராஜன் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறான் என்று தெரியவில்லை திரும்பிப் போகும்போதும் எந்த ஊருக்குப் போகிறான் என்பது தெரியவில்லை.
        அவன் படிப்புச் சான்றுகளைப் பதிவு செய்யும் இடம் கடலூர் இல்லை என்பதை இருவர் பேசும் உரையாடல் மூலம் கதாசிரியர் தெரியப்படுத்துகிறார்.  பிரபஞ்சனின் வாழ்கை அனுபவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
  அவன் முன் தென்படும் மனிதர்கள் இயந்திரத்தனமாகத் தென்படும்போதும் அவன் உற்சாகமாக இருக்கிறான்.  
         டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ள கதைகளில் இது முதல் தொகுப்பில் உள்ள கதை. இது ஆரம்பகாலக் கதையாக இருக்குமென்று தோன்றுகிறது. அதையே சிறப்பாக எழுதி உள்ளார்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியும் நானும்..

அழகியசிங்கர்  

வாசுதேவன் முகநூல் குறிப்பிலிருந்துதான் இன்று ஜே கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதை அறிந்தேன்.  சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
அவர்  என்ன தெரிந்து கொண்டீர்கள் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து என்று கேட்டார்.
என்னால் அவருக்கு எந்தவிதமான பதிலையும் சொல்ல முடியாது என்பதோடல்லாம் அவர் நான் சொன்னதையே கேட்டு என்னை மடக்கி விடுவார்.
நான் எதுமாதிரியாகவும் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிச் சொல்ல முடியாது.  மேலும் அதுமாதிரி விளக்க வேண்டிய தேவையும் இல்லை என்றும் தோன்றியது.
என்னைப் பொறுத்தவரை கிருஷ்ணமூர்த்தி 1978ஆம் ஆண்டிலிருந்து என்னுடைய நெருங்கிய தோழன் மாதிரி வந்து சொண்டிருக்கிறார்.  நான் அவர் புத்தகங்களைப் படித்துப் படித்து இப்போதுதான் புத்தகங்களைப் படிப்பதிலிருந்து கொஞ்சம் விலகி இருக்கிறேன்.
எப்பவாவது கீரின்வேஸ்  ரோடில் போய்க் கொண்டிருந்தால். கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனில் அவர் புத்தகங்களை ஒரு மூட்டையாக வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன்.
அவர் பேசிய இடத்தில் அடையாளமாய் ஒரு பெரிய பாறாங்கல் ஒன்று இருக்கும்.  எத்தனையோ கூட்டங்களில் அவர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.  
கூட்டத்தில் அவர் பேச வரும்போது நேராக அவருக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டு அவர் பேசத் தொடங்கி விடுவார்.  சரியாகக் கூட்டத்தை ஆரம்பித்து விடுவார்.  அதே போல் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிடுவார். அவர் கூட்டத்தை ஆரம்பிக்கும்போது கூட்டத்திலிருந்து சலசலப்பு கேட்டுக்கொண்டிருக்கும்.  அவர் பேச ஆரம்பித்தவுடன் கூட்டம் அமைதியாகிவிடும்.  என்னமோ தெரியவில்லை இப்போது கூட என்னால் யார் கூட்டத்தையும் பொறுமையாக ரசிக்க முடியவில்லை.
கிருஷ்ணமூர்த்தியை யாராலும் எந்தக் கேள்வியும் கேட்டு மடக்க முடியாது. எனக்கு இன்னும் கூட ஞாபகமிருக்கிறது.  காலையில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக் கேட்கிறார்.  “நீங்கள் ஏன் ஆடம்பரமாக உடை உடுக்கிறீர்கள்” ‘ என்று.  எனக்கோ இந்தக் கேள்விக்கு கிருஷ்ணமூர்த்தி எதுமாதிரியான பதிலை அளிக்கப் போகிறார் என்று பதற்றம். 
ஆனால் அவர் சொன்ன பதிலால் நான் ஆச்சரியமடைந்து விட்டேன். 
“உங்களை மதிப்பதற்குத்தான் இதுமாதிரி உடை உடுத்தியிருக்கிறேன்” என்றார். அந்தப் பதிலைக் கேட்டுக் கையெடுத்துக் கும்பிட வேண்டுமென்று நினைத்தேன்.
நானும், பிரமிளும் கிருஷ்ணமூர்த்தி கூட்டங்களுக்குப் போவோம்.  முக்கியமாக அவரைப் பற்றிச் சொல்லவேண்டும். கிருஷ்ணமூர்த்தி சென்னை வராவிட்டாலும் கூட சனிக்கிழமைகளில் அவர் கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனுக்குப் போவார்.  வீடியோவில் நடக்கும் பேச்சுக்களைக் கேட்கப்போவார்.
கூட்டம் முடிந்து வீடு வரும்போது அவர் ஒன்றும் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிப் பேச மாட்டார்.  அதேபோல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவர் மயிலாப்பூரிலுள்ள ஷ்ர்டி கோயிலுக்குப் போவார்.  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குரான் ஓதுவார்கள் கோயிலில்.  அதை முக்கியமாகக் கேட்கப் போவார்.
வாராவாரம் இந்த இரண்டு இடங்களுக்கும் போய்க் கொண்டிருப்பார்.  
ஒரு முறை ஜே.கிருஷ்ணமூர்த்தி காரிலிருந்து இறங்குகிறார்.  அவரைப் பார்த்து யாரோ சுடுகிறார்கள்.  இது ஒரு கனவு.  நான் இதுமாதிரி கனவு எப்போது கண்டேனோ அந்த ஆண்டு அவர் இறந்து விட்டார்.  
எப்பவாவது ஜே கிருஷ்ணமூர்த்தியை நினைத்துக்கொண்டால் நான் அவர் புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள் படித்துக்  கொண்டிருப்பேன்.  
‘இன்று ஒரே ஒரு புரட்சி’  என்ற அவர் புத்தகத்தைக் கையில் வைத்திருக்கிறேன்.

பிரிவு என்கிற ஈரானிய படம்

அழகியசிங்கர்

ஆஸ்கர் ப்ர்கடி இயக்கிய   A Separation (பிரிவு) என்ற படத்தைப் பார்த்து விட்டு அசந்து விட்டேன்.  இது குறித்து எப்படியாவது எழுத வேண்டுமென்பது என் ஆசை.
இந்த ஈரானியப் படத்தில் என்ன விசேஷமென்றால்  மனைவி கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்கிறாள்.  பட ஆரம்பத்தில் இந்தக் காட்சி முதலில் காட்டப்படுகிறது.  இருவரும் நீதிபதி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்.  ஏன் விவகாரத்து வேண்டுமென்று கேட்கிறீர்கள் என்று  சிம்மின் (மனைவி- லைலா ஹாத்மி) பார்த்துக் கேட்கிறார்.  
‘நான் என் பெண்ணுடன் ஈரானை விட்டுப் போக விரும்புகிறேன்.  என்னுடன் என் கணவர் வர விரும்பவில்லை,’ என்கிறாள்.
நீதிபதி நாடாரை (கணவன் பேமென் மூடி) பார்த்துக் கேட்கிறார்.  உடனே நாடார்,  ‘என் அப்பா மோசமான நிலையில் இருக்கிறார். அவர் மறதி நோயால் அவதிப்படுகிறார்.  அவரை விட்டு வர முடியாது,’ என்கிறான்.
  கூடவே தன் பெண்ணை மனைவியுடன் அனுப்ப முடியாது என்கிறான். உடனே தீர்ப்பு தரப்படவில்லை. இஸ்லாமிய விதிப்படி கணவர் விவகாரத்துக்குச் சம்மதித்தால்தான் விவாகரத்து கொடுக்க முடியும்.  இருவரும் நீதிமன்ற நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். 
இயல்பாக ஈரான்  நாட்டில் விவாகரத்து  சகஜமாகக் காட்டப் படுகிறது.  சிம்மின் தனியாக அவள் பெற்றோர்களுடன் இருக்கிறாள்.  நாடார் அவன் பெண்ணுடன் இருக்கிறான்.  அவன் அப்பாவைப் பார்த்துக் கொள்ளச் சிரமப்படுகிறான்.
இந்தச் சமயத்தில்தான் நாடார் ரஸய்யா என்ற ஏழைப் பெண்ணை அப்பாவைப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறான்.  அவள் அவளுடைய பெண்ணையும் அழைத்துக் கொண்டு அங்குப் பணி புரிய வருகிறாள்.   முதல் நாளே என்னால் பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்கிறாள்.  ஒரு நாளைக்கான சம்பளத்தைக் கொடுத்துவிடச் சொல்கிறாள்.  நாடார் நான் இன்னொருவரை ஏற்பாடு பண்ணுவதற்குள் காத்திருக்கும்படி சொல்கிறான்.  
‘அப்பாவைப் பார்த்துக்கொள்ள ஆண் அட்டென்டர்தான் வேண்டுமென்கிறாள்.’ 
“ ‘யாரையும் நம்ப முடியாது என்கிறான்,’ நாடார்.
.இரண்டாவது நாள் திரும்பவும் வருகிறாள் அவள்.  அவளுடைய ஏழ்மை அவளை வரவழைக்கிறது.  அவள் கணவன் செருப்பு தைப்பவன்.  ஒரே கடன்.   அவளுக்குப் பதிலாக அவள் கணவன் வருவதாக இருந்தது.  அவன் வரவில்லை.  இரண்டாவது நாள் அவர்கள் கவனிக்காத சமயத்தில் நாடார் அப்பா வீட்டை விட்டு தெருவிற்குப்  போய்விடுகிறார்.  
பதட்டம் அடைந்த  பணிபுரியும் பெண் ரஸய்யா ஓட்டமாய் ஓடுகிறாள் அவரைக் கண்டுபிடிக்க.  செய்தித்தாள் கடையில் அவர் நின்று கொண்டிருக்கிறார்..  அவரைப் பார்த்தபடியே பதட்டத்துடன் தெருவைக் கடக்கிறாள் ரஸய்யா. வசனமே பேசாமல் அப்பாவாக நடித்திருப்பவர் மிகச் சிறப்பாக அந்தப் பாத்திரத்திற்கேற்ப நடித்திருக்கிறார்.
அடுத்தாள் பணிபுரிய ரஸய்யா வருகிறாள். தன் பெண்ணை அழைத்துக்கொண்டு.  நாடார் மாலை நேரத்தில்  வீடு திரும்புகிறான்.  வீடு பூட்டியிருக்கிறது.  சாவி பொதுவான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கிறான். இல்லை.  கதவைத் தட்டுகிறான்.  அவன் அப்பா கதவைத் திறக்க வரவில்லை.   காரில் வைத்திருக்கும் இன்னொரு சாவியை எடுத்து வந்து திறக்கிறான்.  வீடு அலங்கோலமாக இருக்கிறது.  அவன் அப்பா கட்டிலுடன் கட்டப்பட்டிருக்கிறார்.  அவர் கட்டிலிருந்து சரிந்து கீழே விழுந்து கிடக்கிறார்.  
பதறிப்போய்விடுகிறான்.  அவருக்கு நினைவு இருக்கிறதா என்று தட்டி எழுப்புகிறான். அப்பாவைத் தூக்கமுடியாமல் தூக்கி ஓய்வறைக்குள் அழைத்துக் கொண்டு போய் குளிப்பாட்டுகிறான். 
 ரஸய்யா மெதுவாக வருகிறாள்.  ஒன்றும் தெரியாதவள் மாதிரி.  நாடார் அவளைப் பார்த்துக் கடுப்படைகிறான்.   மேலும் அவள் பர்ஸில் வைத்த பணத்தைத் திருடி விட்டதாகத்  திருட்டுப் பட்டம் கொடுக்கிறான்.  ரஸய்யாவிற்கு இந்தக் குற்றத்தைச் சொல்லும்போது தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் இனிமேல் வரவேண்டாமென்று வெளியே அனுப்பி விடுகிறான். திருட்டுக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் திரும்பித்  திரும்பி வந்து கலாட்டா செய்கிறாள்.  நாடார் வேறுவழியில்லாமல் கதவைச் சாத்தி அவளைப் பிடித்துத் தள்ளி விடுகிறான்.  அவன் அவளைத் தொட்டுத் தள்ளியதைப் பார்த்து, அவள் கத்துகிறாள்.  எப்படி ஒரு முஸ்லிம் பெண்ணைத் தொடலாமென்று.
ஏற்கனவே கர்ப்பமாக இருக்கிறாள் ரஸய்ய்ô.  இந்தத் தகராறில் அவளுடைய கர்ப்பம் கலைந்து விட்டதாக நாடார் மீது குற்றம் சுமத்தப் படுகிறது.   தனக்கு அவள் கர்ப்பமாக இருப்பது தெரியாதென்றும், அவளுடைய கருக் கலைந்ததற்கு நான் காரணம் இல்லை என்றும் நாடார் வாதாடுகிறான்.  நீதிபதி அவனுடைய வாதத்தை எடுத்துக்கொள்ள வில்லை.
கோபக்காரனாக உள்ள ரஸய்யாவின் கணவன், கோபத்தில் நாடாரை அடிக்கக் கூடப் போய்விடுகிறான்.  நாடாரின் பெண் அடிக்கடி ஒரு கேள்வியை அவனைப் பார்த்துக் கேட்கிறாள்.  அவள் கர்ப்பமாக இருப்பதை அவளுடைய ஆசிரியருடன் பேசிக் கொண்டிருக்கும்போது நீ கேட்கவில்லையா கேட்கவில்லையா என்று.
நாடார் வேறுவழியில்லாமல் கேட்டதாக உண்மையை ஒப்புக் கொள்கிறான்.  ஆனால் அவன் தள்ளிவிட்டு அவளுடைய கர்ப்பம் கலையவில்லை என்று உறுதியாகக் கூறுகிறான். 
நாடார் ஒரு நாள் ஜெயிலில் கூட அடைத்து விடுகிறார்கள்.  இந்த வழக்கிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.  நாடாரின் மனைவி சிம்மின் ரஸ்ஸயாவிற்கு பணம் கொடுத்து இந்த வழக்கை முடித்து விடலாமென்று தீர்மானிக்கிறாள்.  இதற்காக சிம்மின் காரை அவள் விற்பதற்குத் தயாராக இருக்கிறாள்.
இந்த வழக்கை சுமுகமாக முடிப்பதற்கு ரஸய்யாவின் வீட்டிற்கு வருகிறார்கள்.  பணம் கொடுப்பதற்கு முன் ஒரே ஒரு கேள்வியை நாடார் கேட்கிறான்.  ரஸய்யாவின் கர்ப்பம் கலைவதற்குத் தான் காரணமில்லை என்று கூறுகிறான்.  இது ரஸய்யாவிற்கே தெரியும்.  அது உண்மையாக இருந்தால் ரஸய்யா குரானை வைத்து சத்தியம் செய்ய வேண்டும் என்கிறான்.
ரஸய்யா தீவிர மத நம்பிக்கை உள்ளவள்.  குரான் வைத்து சத்தியம் செய்ய வேண்டுமென்று சொன்னதைக் கேட்டு அழுது விடுகிறாள்.  உண்மையில் தெருவில் சென்று விடுகிற நாடாரின் அப்பாவை அழைத்து வரும்போது ரஸய்யாவின் மீது கார் இடித்து அதனால் பிரச்சினை ஆகிறது.
ரஸய்யா குரான் மீது பொய்ச் சத்தியம் வைக்க விரும்பவில்லை.  ரஸய்யாவின் கணவன் ஆத்திரத்தில் கத்துகிறான்.  அந்த வீட்டைவிட்டு வெளியே போகிறான். 
நாடாரும் அவன் மனைவியும் திரும்பவும் அவர்கள் கார் வைத்திருக்கும் இடத்திற்கு வரும்போது கார் கண்ணாடி நொறுங்கியிருக்கிறது
திரும்பவும் இந்தப் படம் முடியும்போது நீதிபதி முன் நாடாரும் சிம்மின் அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்களுடைய பெண்ணும் அவர்களுடன் இருக்கிறாள்.  
நீதிபதி அவர்கள் பெண்ணைப் பார்த்துக் கேட்கிறாள்.
‘நீ முடிவு பண்ணிவிட்டாயா?  யாருடன் இருக்கிறது,’ என்று. 
‘முடிவு பண்ணிவிட்டேன்’  என்கிறாள்.
பெற்றோர்கள் திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  
பெண் சொல்வதற்குத் தயங்குகிறாள்.  நீதிபதி அவர்கள் இருவரையும் பார்த்து, கொஞ்சம் வெளியில் இருங்கள் என்று அவர்களை அனுப்பிவிடுகிறார்.
நீதிமன்றம்  வராந்தாவில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.  
இத்துடன் படம் முடிவடைந்து விடுகிறது.   மனதை உலுக்குகிற ஈரான் படம் இது.   ஒரு காட்சியைக் கூட வீணடிக்கவில்லை.  இந்தப் படத்தில் இசை இல்லை என்பதே ஒரு குறையாக இல்லை.  2012ல் வெளிவந்த இப்படம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. படத்தை இயக்கிய  ஆஸ்கர் ப்ர்கடிதான் கதை வசனமும் எழுதி உள்ளார்.  
  ப்ரைம் வீடியோவில் இந்தப் படத்தைப் பலமுறை பார்த்து ரசித்தேன். 

‘ கசடதபற’ வில் மௌனி கதை

 

 அழகியசிங்கர் 

 ‘கசடதபற’  என்ற சிற்றேடு அக்டோபர் 1970ல் வெளிவந்து கொடிகட்டிப் பறந்தது. 3 வருடங்கள் அதன் பங்கு முக்கியமானது. அந்தப் பத்திரிகை வந்த மாதிரியே நின்றும் போய்விட்டது. ‘கசடதபற’வின் நான்காவது இதழில் (ஜனவரி 1971) மௌனியின் ‘தவறு’ என்ற கதை பிரசுரமானது. 

‘மணிக்கொடி’ எழுத்தாளரான மௌனி நிறைய வருடங்கள் கழித்து ‘கசடதபற’வில் எழுதிய கதை. அதற்கு முன் ‘அத்துவான வெளி’  என்ற கதையை ‘குருக்ஷேத்திரத்தில்’ மௌனி எழுதினார். அந்தக் கதை  பிரசுரமான ஆண்டு 1968.

 மௌனியை  ‘க.நா.சு’வும், ‘புதுமைப்பித்தனும்’ தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் யாருக்கும் மௌனியைத் தெரிந்திருக்காது. . அவர் முதல் மகன் மாம்பலத்தில் இரயில் நிலைய தண்டவாளத்தைத் தாண்டும் முயன்றபோது, மின் ரயில் தாக்கி மாண்டு போனான். மூன்றாவது மகன் குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இறந்தான். முதல் மகனின் இறப்பு  ‘மனக்கோட்டை’ என்ற கதையையும், மூன்றாவது மகனின் இறப்பு ‘தவறு’ என்ற கதையையும் எழுத வைத்தன. 

 தவறு என்ற கதை நாலாவது இதழ் ‘கசடதபறவில்’ வெளிவந்தது. அதற்கு அடுத்த இதழில் தவறு கதையைப் பற்றி பிரமிள் ஒரு விமர்சனம் எழுதியிருப்பார். 

தவறு கதையாவது ஒருவர் புரிந்து கொண்டு விடலாம்.   பிரமிள் தவறு கதையைப் பற்றிய விமர்சனத்தைப் புரிந்துகொள்ளவே முடியாது.

மௌனி கதைகளில் கதாபாத்திரங்களின் பெயர்கள் இருக்காது. அவன், அவள் என்றுதான் குறிப்பிட்டிருப்பார். இந்த யுத்தியை மௌனிதான் முதலில் தன் கதைகளில்தான் ஆரம்பித்தார். அதே உத்தியைப் பலர் பின்பற்றி பின்னால் எழுதியிருக்கிறார்கள்.  மௌனிக்கு முன்னும், பின்னும் மௌனியைப் போல் ஒரு படைப்பாளி இல்லை. 

 மௌனி தவறு கதையில் இப்படி ஆரம்பிக்கிறார். 

‘ அவன், அன்றிரவு திடீரென விழிப்படைந்தவன் போன்று வழக்கமான நேரத்திற்கு முன்பே, அயர்வு நீங்கி எழுந்தான். ‘

சுஜாதாவிற்கு ஏன் தெரியவில்லை

அழகியசிங்கர்

          சுஜாதாவின் பிறந்தநாளான இன்று இதைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

மரபு உள்வட்டம் என்ற தலைப்பின் கீழ் சுஜாதா கணையாழி கடைசிப் பக்கத்தில் எழுதியிருந்தார்.  ஆண்டு : ஜøன் 1992ல்.  மரபுக் கவிதைக்காகப் போராளிகளின் சங்கம் அமைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.  சுஜாதாவின் நண்பர் ஐஸôக் நிறுவனத்தின் பணிபுரியும் விருத்தம் விசுவநாதன்தான் இதை அமைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்தச் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர விரும்புவோர் ஒரு ரிப்ளை தபால் கார்டில் இரண்டுக்குக் குறையாத வரியாய் கொண்ட ஏதாவது ஒரு மரபுக் கவிதை எழுத வேண்டும். (ஆசிரியப்பா, வெண்பா. கலிப்பா, வஞ்சிப்பா இந்த வகைகளில் தாழிசை துரை விருத்தம் எதையும் தேர்ந்தெடுக்கலாம்) பூ, காதல், இயற்கைக்காட்சி தவிர்த்து இக்காலத்து எந்தத் தலைப்பிலும் எழுதலாம்.  ஆனால் தலை தட்டாத மரபுக் கவிதையாக இருக்க வேண்டியது முக்கியம்.
நான் கல்லூரியில் படித்த காலத்தில் எழுதிய வெண்பா ஒன்றைச் சுஜாதா மரபு உள் வட்டத்திற்கு அனுப்பினேன். என் கவிதை வருமாறு:
பித்தம் தலைக்கேறி பீய்ந்தத் துணியிலே சுத்தம் படராத சுந்தரியை – சைத்தானின்” பார்வை மயங்கி பவனி வருகிறது” போர்வையில் போஙலிக் கிழம்  என் கவிதையை இலக்கியத்தின் வகைகள்  (பிப்ரவரி 1993) என்ற தலைப்பின் கீழ் சுஜாதா கீழ்க்கண்டவாறு மாற்றி பிரசுரம் செய்துள்ளார். என் தொடக்கால வெண்பாவை மாற்றம் செய்திருப்பவர் பாவலர் கோ என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி மாற்றம் செய்திருப்பவர் என் கவிதையின் அர்த்தத்தையே மாற்றி உள்ளார். என் கவிதை எங்கே சரியில்லை என்பது இன்று வரை தெரியவில்லை.
மாற்றிய வெண்பா
பித்தம் பிடித்தவள்போல் பொத்தல் துணிபூண்ட சுத்தம் பறிபோன சுந்தரியை -முத்தமிட” பார்வை மழுங்கியும் பல்லை இளிக்கிறதே” போர்வையில் போகும் கிழம்.
என்  கவிதையின் அர்த்தமே மாறி விட்டது.  ஆனால் சுஜாதாவிற்கு இது ஏன் தெரியவில்லை என்பது புரியவில்லை. 

எது உண்மை?

அழகியசிங்கர்

பாரதியார் சுதேசமித்ரிரனில் சேர்ந்ததைப் பற்றி இரண்டு வித கருத்துகள் இருக்கின்றன. இதில் எது உண்மை?
1) பாரதியார் ‘சுதேசமித்திர’னில் எப்படிச் சேர்ந்தார் என்பதைப் பற்றி மாறுபட்ட விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாரதி மதுரையில் தமிழ்ப் பண்டிதராக இருந்த சமயத்தில் ஜீ. சுப்பிரமணிய ஐயர் மதுரைக்கு வந்ததாகவும், அப்போது அவருக்கு பாரதி அறிமுகமானதாகவும், பாரதியின் மேதையை உடனே அறிந்து கொண்ட அவர் எப்படியாவது அவரைச் சென்னையில் தம் பத்திரிகைக்குக் கொண்டு செல்ல விரும்பியதாகவும், அதன்படி பாரதியைச் சென்னைக்கு வந்துவிடுமாறு சொன்னதாகவும் வரா. கூறுகிறார்.
2) சேதுபதி ஹைஸ்கூல் வேலை முடியும் சமயம், பாரதி தமது உறவினரும் சென்னை போதனா முறைக் கல்லூரி வைஸ் பிரின்ஸ்பாலுமான லக்ஷ்மண ஐயர் என்ற சென்னை வாசிக்கு எழுதியதாகவும், லஷ்மண ஐயர் தமது நண்பரொருவர் மூலம் விசாரித்து, மிகுந்த சிபாரிசின்பேரில் வேலை வாங்கிக் கொடுத்ததாயும் சிலர் கருதுகிறார்கள்.

ஞானக்கூத்தன் எழுதிய ஒரே ஒரு சிறுகதை

அழகியசிங்கர்

    அதிகமாகக் கவிதைகளைப் பற்றிச் சிந்திப்பவர் ஞானக்கூத்தன்.  கிட்டத்தட்ட 700 கவிதைகள் வரை அவர் வாழ்நாள் முழுவதும் எழுதியிருக்கிறார்.  இதைத் தவிரக் கவிதையைப் பற்றி தன் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்.   பலருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.  கவனம் என்ற சிற்றேட்டுக்கு ஆசிரியராக இருந்து 7 இதழ்கள் கொண்டு வந்துள்ளார்.  இந்தச் சிற்றேடு மார்ச்சு 1981ஆம் ஆண்டு வெளிவந்தது.  

ஆனால் யாருக்காவது அவர் கதை எழுதியிருப்பது தெரியுமா? கண்ணீர்ப்புகை என்பதுதான் அவர் சிறுகதை.  ரங்கமணி என்ற பெயரில் கவனம் இரண்டாவது இதழில் எழுதி உள்ளார்.  அந்தக் கத 1981ஆம் ஆண்டு வெளிவந்தது.

அந்த ஒரு சிறுகதையைத் தவிர அவர் வேற எதுவும் எழுதவில்லை.  ஒரு இலக்கியத் தரமான கதை என்றால் அந்தக் கதையைத்தான் சொல்ல வேண்டும். 

ஒரு முறைக்கு இருமுறை படித்தால்தான் கதையைப் புரிந்து கொள்ள முடியும்.  அந்தக் கதையைப் பார்ப்போம்.

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு இடத்திற்குப் போகத் தயாராக இருக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் யோஜனை செய்கிறார்கள்.  ஒருவர் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக நினைக்கிறார். இன்னொருவர் இரயிலில் போய்க் கொண்டிருப்பதாக நினைக்கிறார்.  பெண்கள் பட்டுப் புடவைக்கு மாறுகிறார்கள்.  அவர் ஊருக்குப் போவதற்கு முன் 3 நாட்களுக்குப் பால், தயிர், பத்திரிகை வேண்டாமென்று முன்னதாகவே தெரிவித்து விடுகிறார்கள்.

அவர்களுடன் ஒரு பெரியவரை அழைத்துப் போகப் போகிறார்கள்.  இரயில் நிலையத்திற்குப் போகும் வரைக்கும் தாக்குப் பிடிக்கப் பெரியவர் ஒருமுறை வெற்றிலை பாக்குப் புகையிலையை வாயில் நிரப்பிக் கொண்டுவிட்டார்.

உண்மையில் 3 நாட்கள் ஒரு இடத்திற்குப் போக விரும்பவில்லை.  இங்கே பூடகமாக ஒரு குடும்பத்தைப் பற்றி விவரிக்கப் படுகிறது.  கதையைப் படிப்பவர் யூகம் செய்துகொண்டுதான் கதையைப் படிக்க வேண்டும்.  ஆனால் படிக்கப் படிக்க எளிதில் புரிந்து விடும்.

'அம்மா ரங்கநாயகிக்குத் துக்கம்.  ஒரு மூலையில் சென்று, யாருக்கும் தெரியாமல் துக்கத்தை உதறப் போனதை மற்றவர்கள் பார்த்துவிட்டார்கள்,' என்று ஞானக்கூத்தன் இங்குக் குறிப்பிடுகிறார். 

ஏன் ரங்கநாயகிக்கு துக்கம்? இதை மேலும் படிக்கப் படிக்க விளங்கும்.  வைத்தியநாதன் அனேகமாக இரண்டு வண்டிகளுடன் திரும்பிக் கொண்டிருப்பான்.  வைத்தியநாதன் ரங்கநாயகியின் பையனாக இருக்கலாம்.  கதையில் குறிப்பிடவில்லை.  

பெரியவருக்கு மூன்று நாட்கள் வீட்டை விட்டுப் போகப் பிடிக்கவில்லை.  'நீ போ நான் இருக்கிறேன்,' என்கிறார்.

'யார் போனால் என்ன? யார் தங்கினால் என்ன? எல்லாம் ஒன்றுதான் நீங்கள் போங்கள். நான் இருக்கிறேன்,' என்கிறாள் ரங்கநாயகி. இங்கே ரங்கநாயகி போகவில்லை என்றால் உறவில், கருணையில் ஒன்று அல்லது பல புள்ளிகள் குறைந்துவிட்டதாகப் படும் என்று குறிப்பிடுகிறார் கதாசிரியர்.

ஊருக்குப் போவதை நினைத்து பெரியவருக்கு எல்லாப் பிள்ளைகள் மீது வெறுப்பு வந்து விட்டதுபோல் தோன்றியது.  

குளிருக்குப் போர்த்திக் கொண்டதுபோல் எட்டு முழ வேட்டியை அணிந்துகொண்டு, தலையில் முண்டாசுக்கட்டி, நிதானமாக சத்யநாதன் படிக்கட்டுகளில் இறங்கி எல்லோரும் இருந்த கூட்டத்திற்கு வந்தான்.

சத்தியநாதன் என்ற கதாபாத்திரத்தை நம்மிடம் அறிமுகப்படுத்தும்போது கதை முழுவதும் சத்தியநாதன் பக்கம் போய்விடுகிறது.  யாரையும் பார்க்காதவன் ரங்கநாயகியை மட்டும் கண்டு பிடித்துக் கூப்பிட்டான்.  

சென்ற ஆறு மாதத்தில் இப்படி ஒருமுறைகூட அவன் கூப்பிட்டதில்லையாதலால் ரங்கநாயகிக்குத் திணறலாக இருக்கிறது.

'அம்மா, தீப்பெட்டி இருக்கிறதா?' என்கிறான் ரங்கநாயகிடம்.   ரங்கநாயகிக்கு வியப்பு.  அவளுக்கு ஏற்பட்ட வியப்பில் இப்பொழுது பெரியவரும் சேர்ந்துகொண்டார்.  இந்த ஆறு மாதத்தில் சத்தியநாதன் அவன் பேசிய ஒரு அர்த்தமுள்ள பேச்சாக அவர்கள் இருவர்க்கும் தோன்றியது. 

'தீப் பெட்டி எதற்கு? புகைக்கப் போகிறாயா?' என்று விஸ்வநாதன் கேட்டான்.  

விஸ்வநாதன் திசையை நோக்கி ஒரு முறை சத்யாநாதன் உற்றுப் பார்த்தான்.  

'நான் சுந்தர்ராஜனின் நான்காவது பிள்ளை,' என்கிறான் சத்யநாதன்.  

இப்போதுதான் இந்தக் கதையில் ஒன்று புரிகிறது. சுந்தர்ராஜன் குடும்பம் அங்கிருக்கிறது என்பதும், சுந்தர்ராஜனுக்கு 4 பிள்ளைகள் என்பதும். அந்த வீட்டில் எல்லோரும் ஒரு இடத்திற்கு ரயிலில் எங்கேயோ போகப் போவதாகவும், 3 நாட்கள் குறைந்து அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதும் தெரியவருகிறது. சத்தியநாதனைப் பார்த்து எல்லோரும் கவலைப்படுவதிலிருந்து அவன் மனநலம் சரியில்லாதவன் என்று படுகிறது. அதனால் பெரியவரும் ரங்கநாயகியும் தனியாக அவனை அந்த வீட்டில் விட்டுவிட்டு ஊருக்குப் போவதற்குத் தயங்குகிறார்கள்.

இதையெல்லாம் வெளிப்படையாக நேரிடையாகக் குறிப்பிடப்படவில்லை.  சத்தியநாதன் மாடியில் உள்ள அறையில் இருக்கிறான்.  காலித் தீப்பெட்டியுடன் அவன் மாடிக்குத் திரும்புகிறான்.  இந்த இடத்தில் கதாசிரியர் இப்படி குறிப்பிடுகிறார். பிரயாணக் குதூகலம் எல்லோரிடத்திலிருந்தும் அவிழ்ந்து விழுந்துவிட்டது போலிருந்தது.  உண்மையில் சத்தியநாதனைப் பார்த்துக்கொள்ள பழனியம்மாள் என்ற பணிப்பெண்ணை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

வைத்தியநாதன் வண்டியை எடுத்துக்கொண்டு வரப் போனவன் வெறுங்கையுடன் வருகிறான்.  ஒரு வண்டியும் இந்தப் பக்கமும் வரவில்லை என்கிறான்.  ஏனெனில் அவர்கள் வீட்டு வாசல் பக்கமாக ஊர்வலம் ஒன்று வருகிறது.  அந்தக் கூட்டம் அங்கிருந்து போனபிறகுதான் அவர்கள் கிளம்ப முடியும்.

அடுத்தது ஊர்வலத்தைப் பற்றி கதாசிரியர் விவரிக்கிறார்.  'ஊர்வலம் பெரிய ஊர்வலமாக இருக்கப் போகிறது.  இப்பொழுதே தெருவில் இரண்டு பக்கத்திலும் ஆட்கள் சிறு சிறு கும்பல் பொட்டலங்களாகப் போய்க் கொண்டிருந்தார்கள்,' என்று விவரிக்கிறார்.

இரண்டு கல் தொலைவில் உள்ள சிதம்பரநாதனும் அவன் குடும்பமும் அங்கு சிரமப்பட்டு வருகிறது.  

சாவியைப் பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு பழனியம்மாள் வந்தால் அவளிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்கிறான் சிதம்பரநாதன். 

சிதம்பரநாதனும் அந்தக் குடும்பத்தில் ஒரு பையனாக இருக்க வேண்டும் என்றும் எல்லோரும் சேர்ந்து போக அவன் குடும்பத்துடன் வந்திருப்பதாக நாம் யூகிக்க முடிகிறது.  கதாசரியர் யாரைப் பற்றியும் முழுதாக விவரிக்காமல் பெயர்களை மட்டும் சொல்கிறார். 

உடனே கதை கூட்டத்திடம் திரும்புகிறது.  கட்டுக்கடங்காத கூட்டம்.  கூட்டத்தில் உள்ள ஒரு பகுதியினர் ரெங்கநாயகி வீட்டுக் கதவை அடிக்கத் தொடங்கினர்.  கூட்டத்தை எதிர்த்துக் கேட்ட ரங்கநாயகியை அப்புறப்படுத்திவிட்டு சிலர் மாடிக்குச் சென்றனர்.  செய்வதறியாமல் திகைத்தனர் வீட்டில் உள்ளவர்கள்.  கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் கண்ணீர்ப் புகையை வீகினார்கள்.  கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்குள்ள கடைகளுக்கும் சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.  

போலீஸôர் ரங்கநாயகி வீட்டிற்குள் நுழைந்து கலாட்டா செய்பவர்களை அப்புறப்படுத்தினார்கள்.  மாடிக்குச் சென்று சத்தியநாதளை அழைத்துக்கொண்டு வந்தனர்.  கூட்டத்தினரின் ஒரு பகுதி, மாடியிலிருந்து சோற்றுத் தட்டை வீசினான் என்று சத்தியநாதன் மீது புகார் கொடுத்தனர்.

வீடே ஸ்தம்பித்துப் போய்விட்டது.  சத்யநாதனைக் குறித்து கூட்டம் சமாதானம் ஆகவில்லை.  கூட்டம் அவனைக் கைதி செய்யச் சொல்கிறது.  வேற வழியில்லாமல் கூட்டம் சத்தியநாதனை கைதி செய்கிறது.  அவனை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வருகிறது.

இந்த இடத்தில் கதாசிரியரின் வர்ணனையைக் கவனிக்க வேண்டும்.

'தவறிப்போய்ப் பிறந்த ஒரு மகாராஜா தனது பொன் சால்வையை ஓவியத்துக்காக முன்பக்கம் சேகரித்துக் கொண்டது போல, போர்த்தி இருந்த எட்டு முழு வேட்டியை வலக்கையால் முன்பக்கம் சேகரித்துக் கொண்டு, மற்றபடி நவீன உடையிலிருந்த சத்யநாதன் வண்டியில் ஏறுவதற்காக அதன் அருகில் சென்று ரங்கநாயகி அம்மாளைத் திரும்பிப் பார்த்தான்.'

வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் சத்தியநாதன் மெல்லிய புன்முறுவலுடன் அம்மாவைப் பார்த்தான்.  ரங்கநாயகி அவன் புன்முறுவலைப் பார்த்து சந்தோஷத்தில் துக்கிதாள்.  வண்டி நகர்ந்தது.

நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையை ஒரு முறைக்கு இருமுறை படிக்க வேண்டும்.  ஞானக்கூத்தன் எழுதிய ஒரே ஒரு கதை.   இலக்கியத் தரமான கதை எழுத வரும் என நிரூபிக்கத்தான் எழுதினாரோ என்னவோ?

உஷாதீபனின் பால் தாத்தா

அழகியசிங்கர்

நான் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தினமணி பத்திரிகை வாங்குவது வழக்கம்.  அதில் குறைந்தபட்சம் இரண்டு கதைகள் தென்படும்.  

பத்திரிகை வாங்கினாலும் உடனே படிக்க மாட்டேன்.  பிறகு படிக்கலாமென்று வைத்துவிடுவேன்.  அப்படியே படிக்காமல் மறந்தும் போய்விடுவதுண்டு.  குறிப்பாகக் கதைகள்தான் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன். இதுமாதிரி தினமணி கதிர் பத்திரிகைகளை அடுக்கடுக்காக வீட்டில் வைத்திருக்கிறேன்.  

என்னிடம் இப்படியே பல கதைகள் சேர்ந்து விட்டன.  ஒரு கதையைப் படிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு மேல் போகாது.  ஆனாலும் படிப்பதில்லை.  என்ன காரணம்?  பிறகு படிக்கலாம் பிறகு படிக்கலாமென்று தள்ளிப் போடுவதுதான் காரணம். 

இப்போது கொரோனா நேரமாக இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது.  ஒரு தினமணி கதிர் இதழை முழுவதும் படித்து விடலாம்.  அல்லது குறைந்த பட்சம் கதைகளாவது படிக்கலாம்.

வழக்கம்போல் 19.04.2020 அன்று வந்த தினமணி கதிர் இதழ் மிகக் குறைவான பக்கங்களுடன் அச்சிடப்பட்டிருந்தது.   16 பக்கங்கள்தான் பத்திரிகையே.

அதில் ‘உஷா தீபன்’ எழுதிய ‘பால் தாத்தா’ என்ற கதை வந்திருந்தது.  எடுத்து வைத்துக்கொண்டேன்.  படித்து விடுவதென்று.  சில நிமிடங்களில் படித்து முடித்து விட்டேன்.  இன்றைய சூழ்நிலையில் சிறுகதைகள் எழுதுவதில் பலர் வல்லவர்களாக இருக்கிறார்கள். யாரும் இதையெல்லாம் கவனிப்பதில்லையே என்று எனக்குத் தோன்றும். 

பலர் சின்ன சம்பவத்தை வைத்துக்கொண்டு எளிதாகக் கதை எழுதி விடுகிறார்கள்.  ஒரு கதையைப் பற்றிப் பேசும் போது கதையின் தன்மையைப் பற்றித்தான் பேசவேண்டும்.  இந்தக் கதை இலக்கியத் தரமானதா இல்லையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை என்று தோன்றுகிறது.

 ‘உஷாதீபன்’ எழுதிய பால் தாத்தா என்ற கதை ஒரு நேர் வர்ணனை.  நேர் வர்ணனை செய்பவன் ரமணன்.  அவன் மூலமாக மொத்தக் கதையையும் நம் முன்னால் உஷாதீபன் சொல்கிறார்.  

தினமும் காலையில் முனைக் கடைக்குப் போய் பால் வாங்கிக்கொண்டு வருகிறான்.  கடையில் வாங்கிக்கொண்டு வரும் பால் நாலைந்து முறை திரிந்து விடுகிறது.  இது உறுத்தலாகப் படுகிறது ரமணனுக்கு.  ஏனென்றால் அவன் மனைவி உமா கரித்துக் கொட்டுவாள்.  ஏன் பால் திரிந்து விடுகிறது என்று ரமணனுக்குத் தெரியவில்லை.  

எப்போதும் பாலில் கொஞ்சம் தண்ணீரைக் கலந்துதான் காய்ச்சுவான்.  வீதி கார்ப்பரேஷன் தொட்டியிலிருந்து குடத்தில் பிடித்து வரும் தண்ணீரைத்தான் கலப்பான்.  25 ரூபாய்க்கு மினரல் வாட்டர் வாங்கிக்கொண்டு வரும் தண்ணீரைக் கலக்கமாட்டான். ஏனென்றால் மினரல் தண்ணீரைக் கலந்ததால் ஒரிரு முறை பால் கெட்டுவிட்டது.  அது சரிப்பட்டு வராது என்று ரமணன் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை.  பாலை காய்ச்சப் பயன்படுத்தும் பாத்திரம் மீது அவனுக்குச் சந்தேகம் வரும்.  அலம்பிய பாத்திரத்தில் க்ளீனிங் பவுடர் படிந்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறான்.  அதனால் பால் திரிய வாய்ப்புண்டு என்றும் முடிவு செய்கிறான்.  ஏன் திரிந்து போகிறது என்று எதையுமே அவனால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.  இந்தச் சம்பவமெல்லாம் காலை 4 மணிக்கு நடக்கிறது. இங்கே காலை நேரத்தைப் பற்றி உஷாதீபன் இப்படி வர்ணிக்கிறார்.

……..’ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பொழுதில் இப்படி ஹாரணை அலற விடத்தான் வேண்டுமா? ஒரு காலத்தில் நகர்ப் பகுதிக்குள், ஏர் ஹாரன் உபயோகிக்கக் கூடாது என்றிருந்தது.  இப்போது அந்தக் கண்டிஷனெல்லாம் காற்றில் பறக்க விட்டாச்சு போலும்.  தண்ணி லாரி வருவதற்கு அடையாளமாய் ஓரிரு முறை அடித்தால் போதாதா?  அந்த ஓரிருமுறை கூட சகிக்க முடியாதுதான். மென்னியைப்  பிடிப்பது போல அலறல்’…..

உண்மையில் பால் திரிந்து போவதைப் பற்றி ரமணன் பயப்பட வில்லை.  உமாவின் ஏச்சுக்குத்தான் பயப்படுகிறான்.  

உமா சண்டை போடும்போது பால் வாங்குகிற கடையை மாற்றச் சொல்கிறாள்.  மாற்றுவதால் கொஞ்ச தூரம் நடந்து போக வேண்டும். 

..’.ஆனா நீங்க போக மாட்டீங்க..சோம்பேறித்தனம்.  காலை வீசி நடந்து போயிட்டு வந்தா நல்லதுதான?  தெனமும் வாக்கிங் போகிற மாதிரியும் ஆச்சு’…என்கிறாள்.

ஒவ்வொரு முறையும் இதே ஆலாபனை இதுமாதிரி அவர்களுக்குள் சண்டை வரும்போது அந்தக் கிழவர் ஞாபகம் ரமணனுக்கு வந்து கொண்டிருக்கிறது. வீடுகளுக்குப் பால் விநியோகிக்கும் கிழவன்.  87 வயதாகும் கிழவரைப் பார்க்கும் ரமணனுக்கு தந்தை ஞாபகம் வருகிறது.   

..’.அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன்…பார்த்த நாளிலிருந்தே இவனுக்குத் தன் தந்தையின் நினைவு வந்து கொண்டே யிருக்கிறது.  அவரும் இப்படித்தானே? ஐம்பாதாண்டுகளுக்கும் குறையாமல் இந்த விடிகாலை நாலு மணிக்கு எழுந்தவர்தானே..அவரும்? எழுபத்தைந்து வயதுக்கும் மேலே உழைத்து ஓடாய்ப் போனவர்தானே? பக்கவாதம் வந்ததால்தானே படுத்தார்…இல்லையெனில் ஆளை இருத்த முடியுமா?…’ என்று உஷாதீபன் விவரிக்கிறார்..

அதோ பால் தாத்தா போய்க் கொண்டிருக்கிறார்.  இந்த உலகம் இன்னும் இம்மாதிரித் தியாக சீலர்களால்தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.

தாத்தாவிடம் பால் கொண்டு வந்து போடச் சொல்கிறான் ரமணன்.  ரூ.40க்கு இரண்டு பால்  பாக்கெட்டுகளை.  தாத்தா முகத்தில் மகிழ்ச்சி.  அந்தப் பொக்கைவாய்ச் சிரிப்பு இவனை ஆட்கொள்கிறது. 

மறுநாள் காலை நாலரை மணிக்கு ரமணன் தாத்தா வருகிறாரென்று பார்த்து பால் வாங்க கீழே போகிறான். 

தாத்தா தினமும் பால் கொண்டு வந்து போடுவதற்கு மனைவியும் அங்கீகாரம் கொடுக்கிறாள்.  மனைவி சொல்கிறாள்…’சொல்லப்போனா இந்த ஏரியா ஜனங்கள் பூராவும் அவரை  ஆதரிக்கணும்.  அதுதான் அவர் உழைப்பை மதிக்கிறதன்மை.  அப்பத்தான் நல்ல ஜனங்கள்னு அர்த்தம்..பத்து ரூபாய் சேர்த்து ஐம்பதாகக் கொடுங்கள்,’ என்கிறாள் மனைவி

‘அவளுடைய விடிகாலைப் பேச்சு என்னைக் குளிர்விததது,’ என்கிறான் ரமணன்.  இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு ரமணனுக்கும், மனைவிக்கும் சண்டை வருவதில்லை. 

பக்க்த்து வீட்டு மாமி உமாவிடம், கரண்டால் பால் திரிஞ்சு போயிடறது என்கிறாள். இதைக் கிண்டல் செய்கிறான் ரமணன்.  ‘மூணாமத்த ஆள் சொன்னாத்தான் நம்ப அருமை தெரியும் போஙூருக்கு..கிரகம்டா சாமி’ என்று.

கற்புர புத்தி..பக்கத்தாத்து மாமி சொன்னதும் கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டாளே…திரியாத தெளிந்த மனசு என் அன்பு மனைவி உமாவுக்கு..அதற்குப் பின் வாயே திறக்கவேயிலலையே..சார்?  என்கிறான் ரமணன் 

கதை இங்கே முடிந்து விடுகிறது.  ரன்னிங் கமெண்டரி மாதிரி உஷா தீபன் இந்தக் கதையை எழுதியிருப்பது சிறப்பாகப் படுகிறது.  ஒரு சாதாரண விஷயம்தான்.  எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது.