அசோகமித்திரன் இரண்டு முறைதான் வீட்டிற்கு வந்திருக்கிறார்

அழகியசிங்கர்

அவர் தி.நகரில் உள்ள முதல் பையன் வீட்டிலிருந்தபோதுதான் நான் அடிக்கடி சந்திப்பேன். ஒவ்வொரு முறை அவருக்கு உதவி செய்யும் நோக்கம் எனக்கு இருந்தது.  எங்காவது போக வேண்டுமென்றால் என்னைத் துணைக்குக் கூப்பிடுவார்.  நானும் உடனே போய்விடுவேன்.  நான் மேற்கு மாம்பலத்தில் இருந்தேன். அவரைப் பார்க்க எனக்கு எளிதாக இருந்தது. மேலும் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.  எந்த நேரத்திலும் நான் அவரைப் பார்க்கப் போவேன்.

மேற்கு மாம்பலத்தில் அவருடைய நண்பரின் பெண் கல்யாணத்திற்குக் கூப்பிட்டார்.  எனக்குச் சற்று சங்கடம்தான்.  என்னை யாரென்று தெரியாத ஒரு கல்யாணத்திற்குப் போகிறோமே என்று.  ஆனால் அசோகமித்திரனை அழைத்துக் கொண்டு போகிறோம் என்று மகிழ்ச்சியுடன் செல்வேன்.  அந்தக் கல்யாணத்திற்கு யாரும் என்னை அழைக்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் அசோகமித்திரன் என்னை அழைக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் திருமணம் போன்ற வைபவத்திற்கு அவரை அழைத்துக் கொண்டு போய்விட்டுத் திரும்பவும் அழைத்துக்கொண்டு வரும்போது அவர் தடுமாறிப் போய்விடுவார்.  ஏன் அவர் இப்படிக் கஷ்டப்படுத்திக் கொள்கிறார் என்று தோன்றும். 

இப்படிப் பல இடங்களுக்கு நான் அவருடன் போயிருக்கிறேன்.  இப்படிப் பயணம் செய்யும்போது எங்களிடையே நடக்கும் உரையாடல் முக்கியமாகத் தோன்றும்.  அவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தத் தவற மாட்டார். என்னை அறிமுகப்படுத்தும்போது என்னைப் பற்றி உயர்வாகவே அறிமுகப்படுத்துவார். ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும்போது  முராகாமி என்று ஜப்பான் நாட்டு எழுத்தாளரைப் பற்றி ஒரு முறை கேட்டேன்.  

“அவர் எழுத்தில் சுயமான அனுபவம் சற்று குறைவாக இருக்கிறது,” என்று கூறினார்.

என்னடா இது எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி இப்படி ஒரு அபிப்பிராயம் சொல்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது.  ஆல் இந்தியா வானொலியில் கதை படிக்க ஒரு முறை சென்றார்.  கூடவே நானும். அவர் படித்த ஒரு அற்புதமான கதை. விருட்சத்தில் அக்கதையைப் பிரசுரம் செய்தேன்.  அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரிடம் என்னை அறிமுகப்படுத்தி இவரிடமும் கதை படிக்கக் கேளுங்கள் என்று குறிப்பிட்டார். பின்னால் எனக்கும் அவரால் கதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இதை ஏன் இங்கே சொல்கிறேனென்றால் பொதுவாக ஒரு மூத்த எழுத்தாளர் அவருடன் பயணிக்கும் இன்னொரு எழுத்தாளரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.  தன்னை மட்டும் முன்னிலைப் படுத்திக்கொள்ள முயற்சி செய்வார்கள்.  நான் பலருடன் பயணப்பட்டதால் இதைக் குறிப்பிடுகிறேன்.  ஆனால் அசோகமித்திரன் விதிவிலக்கு.

அவருடைய எந்தப் புத்தகத்தையும் எனக்குக் கையெழுத்து இட்டு எனக்கு அளிப்பார்.  அவருடைய தள்ளாத வயதில்தான் என்னால் அடிக்கடி அவரைச் சந்திக்க முடிந்தது.  நான் அவரை சுலபமாகச் சந்தித்து விடுவேனே தவிர அவரை நான் இருக்குமிடத்திற்குக் கூப்பிட்டதே இல்லை.  காரணம் அவருடைய முதுமை. 

பொதுவாக என் வீட்டிற்குப் பல எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள்.  அசோகமித்திரனும் இரண்டு முறை வந்திருக்கிறார்.  ஒரு முறை நான் மயிலாடுதுறையிலிருந்தபோது.  அங்கு வள்ளலார் கோயில் தெருவில் குடியிருந்தேன்.  மயிலாடுதுறைக்கு வரும் எழுத்தாள நண்பர்களெல்லோரும் என் வீட்டிற்கு வராமலிருக்க மாட்டார்கள்.  அசோகமித்திரனும் அவர் மனைவியுடன் ஒருமுறை வந்திருந்தார்.  அவருடைய மூதாதையர் ஊர் மயிலாடுதுறை.  அங்கு வசிக்கும் மருத்துவர் குரு அவருடைய உறவினர்.  வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்வதற்குத்தான் அவர் வந்திருந்தார். 

இங்கேயெல்லாம் இனிமேல் எங்கே வரப் போகிறேனென்று அவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

சென்னையில் நானிருக்கும் வீட்டிற்கு இரண்டாவது முறை வந்திருந்தார்.  அன்று மாடிப்படிகளில் ஏற சிரமப்பட்டார். உண்மையில் மாடிப்படிகளைச் சபித்தபடியே வந்தார்.  அவர் வருவாரென்று நான் எதிர்பார்க்கவில்லை.  

என் தந்தை இறந்தபோதுதான் அவர் வந்திருந்தார்.  

பி.கு : 1 அசோகமித்திரன் நினைவுகள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  100 பக்கங்களுக்கு மேல் எந்தக் கட்டுரைப் புத்தகத்தையும் எழுத மாட்டேன்.  அசோகமித்திரன் குறித்து இது வரை 77 பக்கங்கள் எழுதி விட்டேன். 

பி. கு 2 : ஒரு முறை புகைப்பட நெகடிவ் ஒன்றைக் கொடுத்து அவர் குடும்பப்  புகைப்படத்தை எடுத்துத் தரும்படி கேட்டுக்கொண்டார்.  புகைப்படத்தை எடுத்த பிறகு எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இன்னொருமுறை எடுத்துக்கொடுத்துவிட்டேன்.  என் கண்ணில் அந்தப் புகைப்படம் தற்செயலாக இப்போது கிடைத்தது. அவர் திருமணத்தின்போது எடுத்த புகைப்படமாக இருக்குமென்று நினைக்கிறேன்.   

காந்தியுடன் நாங்கள் 2




அழகியசிங்கர்

திருமதி ஆபா காந்தியின் நினைவுகளாக 14வது அத்தியாயத்திலிருந்து 24ஆம் அத்தியாயம் வரை இப் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.
ஆபா காந்தியை 12வயது சிறுமியாக இருக்கும்போதே அவருடைய தந்தை சேவா கிராம ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார். ஆபா காந்திக்குப் புரியவில்லை. அனாதைக் குழந்தைகளைத்தானே ஆசிரமத்தில் சேர்ப்பார்களே தான் அனாதை இல்லையே என்கிறார் அப்பாவிடம்.
வர்தாவிலிருந்து சேவா கிராமம் சுமார் 5 மைல் தூரம். முதலில் ஆபா காந்திக்கு விருப்பமில்லை. தன் தாயரை விட்டு வருகிறோமே என்று தோன்றியத. ஆபா காந்தியையும் அவர் அண்ணன் தீரேன் பாபியையும் அழைத்துக்கொண்டு சேவாகிராமம் வருகிறார் அவர்கள் தந்தையாகிய அம்ருத்லால்.
வீட்டு நினைவாகவே இருக்கிறார் ஆபா காந்தி. காந்திஜி வேடிக்கைப் பிரியர். “நான் வேடிக்கைக்காரனாக இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்” என்று அடிக்கடி சொல்வார்.
“என்ன தீர்மானித்தாய்? இங்கே இருப்பாய் அல்லவா?” என்று கேட்கிறார்.
“ரொம்ப அம்மா ஞாபகம் வருகிறது. மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு வருஷம்தான் இங்கு இருப்பேன்” என்கிறார் ஆபா காந்தி.
ஆபா காந்தியை ஆசிரம வாழ்க்கைக்கு பழக்கப் படுத்துகிறார் காந்தி. முதலில் வங்காளி மொழி மட்டும் தெரியும் ஆபா காந்திக்கு. எட்டு மாதங்களில் ஹிந்தி கற்றுக்கொண்டு விடுகிறார். அம்மாவின் ஞாபகமும் வீட்டு நினைவும் வராத அளவுக்கு காந்திஜி ஆபா காந்திமீது அன்பு காட்டினார். அவருக்கு ஆசிரமம் பிடித்து விட்டது.
1200 கிலோ மீட்டர் தூர வெளி மாநிலத்திலிருந்து வந்த ஆபா காந்தி ஒரு வருடம்தான் ஆசிரமத்தில் இருக்கப் போவதாகச் சொன்னவர் வருடக்கணக்கில் இருந்துவிட்டார். இதற்குக் காரணம் காந்திஜி தாயைப் போன்று அவரைப் பார்த்துக்கொண்டதுதான்.
அதேபோல் ஆபாவிற்கு கஸ்தூர்பாயின் ஆதரவு அதிகம். ஒரு சமயம் ஜ÷ரம் 34 முறை வந்தது. அந்தச் சமயத்தில் பா (கஸ்தூர்பா) தான் அவரை தன்னுடன் தன் குடிலுக்கு அழைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டார். இதை நெகிழ்ச்சியுடன் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எப்போதுமே தன்னுடைய காரியத்தை பா யாரையும் செய்ய விரும்புவதில்லை. 1941ல் பா நோய்வாய்ப்பட்டார். அவர் கருக்கலில் குளியலரையில் வைத்திருக்கும் பானையில் காலைக்கடன் கழிப்பார். அந்தப் பானையை சுத்தம் செய்ய ஆபா எடுத்து வைத்துக்கொண்டார். பானையைப் பிடுங்கிக் கொண்டு, ‘வேண்டாம், வேண்டாம்’ என்று தடுத்துவிட்டார் பா. முடியாதத் தருணத்திலும் மற்றவரைத் துன்புறுத்தக் கூடாது என்று நினைத்தவர் பா. இந்த நிகழ்ச்சியை ஆபா பதிவு செய்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில்.
எப்படி காந்தி ஒரு இலட்சிய ஆசிரியர் என்பதை நிரூபிக்கிறார் என்பதை இந்தச் சம்பவம் மூலம் தெரியப்படுத்துகிறார் ஆபா.
ஒருநாள் குடிலுக்குப் போகும்போது மரத்திலிருந்து ஒரு இலையைப் பறித்துவிடுகிறார் ஆபா. இதைப் பார்த்துக் கொண்டிருந்த காந்திஜி இப்படிக் கூறுகிறார் : ” நீ ஒரு இலையைப் பறித்திருக்கிறாய். நீ மட்டும்தான் இந்தத் தவறைச் செய்கிறாய் என்பதில்லை. இது நம் எல்லோருக்கும் வழக்கமாகிவிட்டது. போகும்போதும் வரும்போதும் மரத்தைப் பார்த்தால் இலையைப் பறிப்பது, பூவைப்பார்த்தால் பூவைப் பறிப்பது. இது என்னை மிகவும் உறுத்துகிறது. வலி தருகிறது. இப்படி தேவையில்லாமல் பூ, இலை பறிப்பது ஒரு வகையில் ஹிம்சைதான். நமது நாட்டின் மாபெரும் விஞ்ஞானியான ஜகதீஷ் போஸ் சின்னஞ்சிறு செடிகளுக்கும் உயிர் உண்டு என்று என்னிடம் சொன்னதிலிருந்து மக்கள் என் கழுத்தில் மாலை போடுவதை நான் அனுமதிப்பதில்லை ” என்கிறார் காந்தி.
அந்தக் காலத்திலேயே காந்திஜிக்கு கரோனா என்ற நோய் தொற்றிக்கொள்ளும் என்று தெரிந்திருக்கிறது போலும். இந்தச் சம்பவத்தைப் படித்தால் அப்படித்தான் உங்களுக்குத் தோன்றும்.
காந்திஜியிடம் இரண்டு கைக்குட்டைகள் இருக்கும். ஒன்று முகம், கை துடைக்க ஒன்பது அங்குல நீளமும், ஆறு அங்குல அகலமும் கொண்டது. இன்னொன்று அதைவிடச் சின்னது மூக்கை சுத்தம் செய்து கொள்ள. ஒருவர் காந்திஜியிடம், “பாபுஜி, நீங்கள் முகம் துடைக்க இவ்வளவு சின்ன துணியை ஏன் வைத்துக்கொள்கிறீர்கள்? என்று கேட்டார். காந்திஜி, இது போதுமானதாக இருக்கிறது. இவ்வளவு சின்ன துணி போதும் எனும்போது பெரிய துணியை ஏன் பயன்படுத்த வேண்டும்,? என்றார். அப்படியானால் நீங்கள் ஏன் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, காந்திஜி, சின்ன கைக்குட்டை மூக்கு சுத்தம் செய்ய, தும்மல் வந்தால் மூக்கின் முன் வைத்துக் கொள்வேன். எதிரேயிருப்பவர்கள் மீது எதுவும் பட்டுவிடக்கூடாதல்லவா? அதனாலேயே மூக்கையும் சுத்தம் செய்து கொள்வேன். மூக்கை சுத்தம் செய்த துணியால் முகம் துடைக்கக் கூடாது. தூய்மையின் கண்ணோட்டத்தில் அது நல்லது அல்ல..
1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மாலை. அன்று தான் காந்திஜியை கோட்சே சுட்டுக் கொன்றான். உண்மையில் அன்று மாலை என்ன நடந்தது என்றால் சர்தார் வல்லபாய் படேல் காந்திஜியைச் சந்திக்க வந்திருந்தார். பொதுவாக அவர் காந்திஜியைப் பார்க்க வரும்போது ஆபா காந்தியும் மனு காந்தியும் அறையில் இருப்பார்கள். ஆனால் அன்று சர்தார் சில முக்கிய விஷயங்களைப் பேச வந்தார். ஆபாவும் மனுவும் வராண்டாவிற்கு வந்துவிட்டார்கள்.
ஐந்து மணி பிரார்த்தனை நேரம். எப்படி ஞாபகப்டுத்துவது என்ற தவிப்பு ஆபா காந்திக்கு. சர்தாருடன் பேசிக்கொண்டே இருக்கிறார் காந்தி. 8 நிமிடங்கள் மேல் ஆகிவிட்டது. ஆபா காந்திக்குப் பொறுக்க முடியவில்லை. காந்திஜி பொதுவாக பிரார்த்தனையில் நேரத்தைக் கடைப்பிடிப்பவர். பேச்சை முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஜன்னல் வழியாகக் குதித்து பிரார்தனைக்கு ஓடினார். கொஞ்ச தூரம் கூட நடந்திருக்க மாட்டார். இடப்பத்கத்திலிருந்து ஒரு இளைஞன் வேகமாக காந்திஜி பக்கம் குனிந்தான். மனு அவனைத் தடுக்க முனைந்தார். அவன் அவரைத் தள்ளினான். மனுவின் கையில் உள்ள காந்திஜியின் மாலை, குவளை எழுது அட்டை எல்லாம் கீழே சிதறின. மனு அவற்றை எடுக்கக் கீழே குனிந்தாலோ இல்லையோ, டுமீல் டுமீல் டுமீல் என்று மூன்று குண்டுகள் காந்திஜி மீது பாய்ந்தன. அவை காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. காந்திஜியின் வாயிஙூருந்து ஹே ராம் ஹே ராம் என்ற சொற்கள் வெளிவந்தன. பக்கத்தில் ஆபா காந்தி இருந்ததால் அவருடைய உடல் பாரம் முழுவதும் ஆபா காந்தி மீது சரிந்தது. சமாளித்துக் கொண்டு காந்திஜியை தன் மடியில் தாங்கிக் கொண்டார்.
டாக்டர் பார்கவ் வந்து நன்கு பரிசோதித்த பின்பு நேருவையும் படேலையும் பார்த்து, பாபுஜி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்றார். நேருஜி குழந்தையைப் போல் தேம்பி தேம்பி அழுதார்.
பிரார்த்தனை காந்திஜிக்கு உணவு போன்றது.

காந்தியுடன் நாங்கள்….1



அழகியசிங்கர்

காந்தியைப் பற்றி எந்தப் புத்தகம் படித்தாலும் அதன் மூலம் நமக்கு எதாவது செய்தி கிடைக்காமலிருக்காது.  நாம் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளாமலிருக்க மாட்டோம்.  அல்லது படித்துவிட்டு அப்படியா என்று ஆச்சரியப்படாமலிருக்க மாட்டோம்.  

நான் சமீபத்தில் பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் வெளியிட்ட காந்தியுடன் நாங்கள் என்ற  புத்தகத்தைப் படித்தேன்.  இதை எழுதியவர்கள் கனு காந்தி மற்றும் ஆபா காந்தி.  இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தவர் டாக்டர் எம். ஞானம்.

கனு காந்தி காந்தியின் பேரன்.  ஆபா காந்தி கனு காந்தியின் மனைவி.  கடைசிவரை இவர்கள் இருவரும் காந்தியுடன் வாழ்ந்தார்கள்.  கனு காந்தியின் நினைவுகள், ஆபா காந்தியின் நினைவுகள் என்று இரண்டு பிரிவுகளாகப் புத்தகத்தைப் பிரித்துள்ளார்கள்.

பல தருணங்களையும், நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இந்நூலில் நினைவுச் சித்திரங்களாக வரைந்துள்ளனர்.  இவர்கள் இருவர்களும் காந்திஜியை எவ்வளவு நெருக்கத்தில் கண்டார்களோ, அவ்வளவு நெருக்கமாக அநேகமாக யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.  அந்த விதத்தில் இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான பதிவேடாக எனக்குத் தோன்றுகிறது.

 முதல் 13 அத்தியாயங்கள்  கனு காந்தியும் அதன்பின் 24 அத்தியாயங்கள் வரை ஆபா காந்தியும் புத்தகத்தை எழுதி உள்ளார்கள்.  

          இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய சிவாஜி நரஹரி பாவே சில முக்கியமான குறிப்புகளை முன்னுரையில் எழுதி உள்ளார்.  காந்திஜி 21 நாள்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.  ஆனால் ருசியான உணவுகள் அருந்தும் நம்மைப் போன்றவர்களின் முகத்தில் காணமுடியாத தேஜûஸ அவர் முகத்தில் காணும்பேறு அவருக்குக் கிடைத்ததாக எழுதி உள்ளார். காந்தியின் இந்திய சுயராஜ்யம் என்ற நூலைப் படித்துவிட்டு காந்திஜியின் குருநாதராகிய கோகலே, நீங்கள் இந்தியாவைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  நீங்கள் இந்தியா வரும்போது இதில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி வரும், என்றார்.

காந்திஜி அவர் அறிவுரையின்படி இந்தியாவைச் சுற்றி வந்தார்  மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில். காந்திஜிக்கு அவர் எழுதிய இந்திய சுயராஜ்யம் புத்தகத்தில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமென்று தோன்றவில்லை.

பிரார்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் காந்தி.  கனு காந்தி குறிப்பிடுகிறார்.  ஒரு சமயம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, மன்னிக்க வேண்டும். மாலை பிரார்த்தனை  நேரம் வந்து விட்டது.  நான் நேரத்திற்குப் போக வேண்டும். என்னைப் போக அனுமதியுங்கள் என்று கூறியபடியே கூட்டத்திஙூருந்து எழுந்து விடுவார்.

பிரார்த்தனை என் உணவு, நான் உணவும், நீரும் இன்றி பல நாட்கள் இருந்து விடுவேன்.  ஆனால் பிரார்த்தனையோ, ராம நாமமோ இன்றி ஒரு கணமும் இருக்க முடியாது என்கிறார் காந்திஜி.

1939 கோடைக்காலம்.  சேவா கிராமத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.  மதிய நேரம்.  காந்திஜி வழக்கம்போல படுத்தபடியே கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தார்.  காந்திஜியின் பக்தையான அம்துஸ்ஸலாம் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தார்.  காந்திஜிக்குத் தூக்கம் வந்து விட்டது.  அவர் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்தார்.  1520 நிமிடங்கள் அந்தப் பெண்மணிக்கும் தூக்கம் வந்துவிட்டது.  அவர் தலையணையின் மீது சாய்ந்த உட்கார்ந்து கொண்டு விசிறியை வீச ஆரம்பித்தார்.  சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டார்.  கையிஙூருந்து விசிறி நழுவி காந்திஜி மீது விழுந்து விட்டது.  காந்திஜி விழித்துக் கொண்டார்.  விசிறியை எடுத்து அந்தப் பெண்மணிக்கு விசிற ஆரம்பித்தார்.  நம் காந்திஜி இப்படிப்பட்ட மனிதர் என்று கனு காந்தி வியக்கிறார்.

ஆகாகான் மாளிகையில் காந்திஜியின் சிறைக் காவலின்போது 1943 இல் அவர் 21 நாள் உண்ணாவிரதம் துவங்கியபோது அவருக்குப் பணிவிடை செய்ய அரசாங்கம் கனு காந்திக்கு அனுமதி கொடுத்து விட்டது.  அவர் காந்திஜியுடன் ஆகாகான் மாளிகையில் இருக்க ஆரம்பித்தார்.  கனு காந்தியிடம் கேமரா இருப்பதைக் கண்ட காவலாளி, இதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.  ஆனால் கண்காணிப்பாளர் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்கக் கூடாது, என்றார். அவர் கனு மீது நம்பிக்கை வைத்து கேமராவை எடுத்துப்போக அனுமதித்தற்குக் காரணம் எப்போதும் சத்தியத்தை வற்புறுத்தும் காந்திஜியே ஆவார்.  கனு கேமரா வைத்திருந்தாலும், அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க காந்திஜி விடமாட்டார் என்று ஆங்கில அதிகாரிகளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. 

(இன்னும் வரும்)


துளி – 113 – அசிக்காடு வீரனும், சொகுசு விடுதிகளும்

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் அசிக்காடு சென்றேன்.  மயிலாடுதுறையிலிருந்து அசிக்காடு என்ற கிராமம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  அசிக்காடில் உள்ள புராதன சிவன் கோயிலுக்கும், பெருமாள் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தும் முகாந்தரமாக ஒரு யாகம் நடத்தினார்கள். எல்லோரும் பல இடங்களிலிருந்து வந்திருந்து அசிக்காடில் குமிழியிருந்தோம்.  நல்ல வெயில்.  

முதல் நாளில் ருத்திர யாகம். அசிக்காடு வீரன் கோயிலில்.  காலை ஏழு மணியிலிருந்து மதியம் வரை நீண்டிருந்தது.  காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தோம்.  எனக்கு யாகத்தில் எழும் புகை கண்ணிற்கு ஆகாது.  அதனால் தள்ளிப்போய் உட்கார்ந்திருந்தேன். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் அசிக்காடு கிராமம் வருவதென்றால் உற்சாகமாக இருக்கும்.  முன்பு அங்கிருந்து பலர் வேற இடங்களுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள்.  அக்கிரகாரத் தெருவிஙூருந்த பல வீடுகளை விற்று விட்டுப் போய்விட்டார்கள். தெருவில் ஈ காக்காய் கிடையாது.  இரண்டு குளங்கள் உண்டு. ஒன்று மேல குளம்.  இன்னொன்று கீழ குளம்.  மேல குளத்தில் தண்ணீர் வற்றி விட்டது.  

அந்த மேல குளத்திலிருந்து மண்ணை லாரி லாரியாக வாரி எடுத்துக்கொண்டு போய் விற்றுவிட்டார்கள்.  விவசாய கிராமம் என்றாலும், சொல்லும்படி விளைச்சல் இல்லை.  

எங்கள் பாட்டனாரின் நிலம் நீச்சு எல்லாம் விற்றாகி விட்டது.  வீரன் கோயில்தான் உண்டு.  அங்கிருக்கும் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும்தான் உண்டு.

ருத்ர யாகம் நடந்து கொண்டிருக்கும்போது அங்கு வசிக்கும் ஏழைகள் எங்களைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள்.  அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு வயதானவள் அழ ஆரம்பித்தாள்.

“ பிறந்ததிலிருந்து இங்கதான் சார் இருக்கோம்.  இப்ப சாப்பிட ஒண்ணும் கிடக்கலை சார்.. எங்க பசங்க எல்லாம் இந்த இடத்தை விட்டுப் போயிட்டாங்க..நாங்க போறதுக்கு வழி தெரியலை.. என் வீட்டுக்காரரு சம்பாதிக்க வழி தெரியாம…வீட்டில கிடக்காங்க.. சார் காலையிலிருந்து ஒரு டீ சாப்பிடக் கூட வழி தெரியலை சார்..”.என்று அழுதபடியே சொல்ல, நான் உருகி விட்டேன்.  ஒரு 20ரூபாயைக் கொடுத்தேன்.  அதை எடுத்துக்கொண்டு டீ குடிக்க ஓட்டமாய் ஓடினாள்.  அந்த அழுகை நிஜம்.  நடிப்பில்லை.

அதே அசிக்காட்டில் இன்னொரு பக்கம்.  வற்றிப் போன மேல குளம் இருக்கும் அருகில். தனித்தனியாக சொகுசு விடுதிகள் கட்டுகிறார்கள்.  கட்டிய விடுதிகளைப் பார்க்கும்போது பிரமிப்பு அடங்கவில்லை.  நம்ம அசிக்காடா என்பதை நம்ப முடியவில்லை. நீச்சல் குளம் தனியாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒரு பக்கம் புராதன பெருமாள் கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது.   ஆனால் கருமுத்து தியாகராஜன் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் அசிக்காட்டின் வேறொரு பகுதியில் பெரிய இடத்தை வளைத்துப் போட்டு சொகுசு வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜாரித்ததில் விடுதிகளில் தங்க மேலை நாட்டினர்தான் வரவேண்டுமாம்.  அசிக்காடு இன்னும் சில மாதங்களில் பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளது. என்ன இருந்தாலும் நாங்கள் பார்த்த அசிக்காடு இருக்கப் போவதில்லை.

நியாயமா?



அழகியசிங்கர்

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் பத்திரிகைகள் வாங்குவேன்.  திங்கட் கிழமை தினமணி,  புதன் கிழமை தினத்தந்தி.  சனிக்கிழமை தமிழ் இந்து. ஞாயிற்றுக்கிழமை தமிழ் இந்து, தினமணி, தினமலர்.  ஏன் அப்படி வாங்குகிறேன் என்று கேள்வி கேட்கத் தோன்றும்.  புத்தகங்கள் பற்றிய செய்திகள் இந்தக் கிழமைகளில் இந்தப் பத்திரிகைகளில் வெளிவரும்.

இதனால் நாம் பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.  ஓரளவு புத்தகங்களைப் பற்றி தகவல்களை இப் பத்திரிகைகள் தருகின்றன.  இது மாதிரி யாரும் செய்வதில்லை.  உண்மையில் அனுப்பப் படுகிற எல்லாப் புத்தகங்களைப் பற்றி எழுதுவது கூட இப் பத்திரிகைகளால் முடியாது. ஒரு சமயம்  விருட்சம் வெளியீடாக வந்த காஞ்சி மகானைப் பற்றிய புத்தக விமர்சனம் தினமணியில் வந்தது. அது வெளிவந்தவுடன் தொடர்ந்து போன் வந்து 100 பிரதிகள் வரை விற்றது.  என்னால் நம்ப முடியவில்லை.  ஆனால் இலக்கியப் புத்தகங்களுக்கு இந்த மதிப்பு கிடையாது.  இரண்டு மூன்று போன்கள் வந்தால் ஜாஸ்தி.  பெரும்பாலும் விஜாரித்துவிட்டு விட்டுவிடுவார்கள்.   இருந்தாலும் விருட்சம் வெளியீடாக வரும்  புத்தகங்களை அனுப்பிக் கொண்டிருப்பேன்.  

இன்றைய தினமணி (09.03.2020) இதழில் என் நாவலைப் பற்றி நூல் அரங்கத்தில் வரப்பெற்றோம் என்ற பகுதியில் குறிப்பு வந்திருந்தது.  பெரிய ஏமாற்றமாக இருந்தது எனக்கு.  

தனி இதழ் நன்கொடை ரூ.20 என்று மட்டும் பிரசுரம் செய்திருந்தார்கள்.  அது நாவல் என்றெல்லாம் குறிப்பிடவில்லை.  படித்துவிட்டு புத்தக விமர்சனம் செய்வார்களென்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். தினமணியில் அரைகுறையாய் வந்ததைப் படித்து இரண்டு பேர்கள் போன் செய்தார்கள்.  அவர்களுக்கும் பெரிய குழப்பம்.  அந்தத் தலைப்பு ஒரு நாவலின் தலைப்பு என்று புரியவில்லை. நாவலை வாங்குவதற்குப் பதில் நான் கொண்டு வரும் விருட்சம் பத்திரிகைக்கு ரூ.20 அனுப்புகிறேன் என்று ஒருவர் குறிப்பிட்டார்.  பெரிய ஏமாற்றம் எனக்கு. நான் எதிர்பார்த்தது நாவல்.  ஒரு தகவலைச் சரியாகத் தர தினமணி தவறி விட்டது என்று எனக்குப் பட்டது. 

கனவு மெய்ப்பட வேண்டும்…

 

அழகியசிங்கர்

எலிஸபத் கில்பர்ட் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகம் ஈட், பிரே, லவ்.  இது ஒரு சுயசரிதம்.  இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.  உலகம் முழுவதும் இந்தப் புத்தகம் 6 மிலியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. 1 மிலியன் என்றாலே பத்துலட்சம் இருக்குமென்றாலும் 6 மிலியன் என்றால் 60 லட்சம் பிரதிகள்.  நினைத்தே பார்க்க முடியவில்லை.

இப்படி என் புத்தகம் ஒன்று விற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நான் அதை அச்சடிப்பதற்கும் அனுப்புவதற்கும் திண்டாடிப் போய்விடுவேன்.  நல்லகாலம் எனக்கு ஆண்டவன் அதுமாதிரி அருள் புரியவில்லை. லட்சமே வேண்டாம்.  ஆயிரக்கணக்கில் ஒரு புத்தகம் விற்றால் கூட போதும். வேண்டவே வேண்டாம் நூற்றுக் கணக்கில் விற்றால் போதும்..

சுய சரிதம் என்பதால் இப்புத்தகம் சுவாரஸ்யமாகப் படிக்க முடிகிறது.  348 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 30 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். அதற்குள்ளேயே நிறையா மின்னல்கள் இப் புத்தகத்தில்.    ..பூமியில் கால் ஊன்றி நிற்கவேண்டும்.  நாலு கால்களில் நிற்பதுபோல் அழுத்தமாக நிற்க வேண்டும்.  அப்போதுதான் இந்த உலகத்தில் நிலை பெற்றிருக்க முடியும்.  இந்த உலகத்தை நீ மூளையைப் பயன் படுத்திப் பார்க்காதே..மனதின் வழியாகப் பார்.  அப்போதுதான் கடவுளை அறிய முடியும்.எலிஸபத் இப்போது நியூ ஜெர்சியில் வசிப்பதாக இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. 

இந்தப் புத்தகத்தை நான் ஏதோ பேப்பர் கடையில் வாங்கினேன் என்று நினைக்கிறேன். 

துளி – 109 – மணல்வீடு கொடுத்த கொடை

அழகியசிங்கர்

இந்த இதழ் மணல் வீடு பார்க்கும்போது ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  ‘சிறுபத்திரிக்கைகளின் சிறு என்னும் சாராம்சம்’ என்ற தலைப்பில் பிரவீன் பஃறுளியின் கட்டுரைதான் காரணம்.  

ஈரோட்டில் 03.08.2019 அன்று நடைபெற்ற சிற்றிதழ்களுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கிய விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற ‘நவீன விருட்சம்’ சிறு சஞ்சிகை குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை.

அக்கட்டுரையில் காணப்பட்ட வைர வரிகளை இங்கே அளிக்கிறேன். 

….இந்த நவீன எழுத்தியக்கதின் ஊடும் பாவுமாக வெட்டிச் செல்லும் பல்வேறு போக்குகளும் மொழித்தடங்களும், இன்றைய குழப்படிகளுக்கும் இடையேயான ஒரு நெடிய பாதையில் “விருட்சம் இதழ் தனது அசாதாரணமான நிதானத்துடனும்,  பற்றிக்கொள்ளலின் பிடிவாதத்துடனும் தன் தொடர்ந்த பயணத்துடன் முப்பது ஆண்டுகள் என்ற பெரும் பரப்பைக் கடந்தும் நீண்டு வருகிறது…..

…விருட்சம் தன்னூடாகக் குறிப்பாகக் கவிதைகளின் வழி சாட்சிப் படுத்தியுள்ளது ஒரு முக்கிய இடம்…..

…..இன்று சிறுபத்திரிக்கைத் தளங்களை ஊடுருவிக்கும் கேளிக்கைகள், வெகுசனச் சீரழிவுகள், பொதுவெளி அதிகாரங்கள் நோக்கிய பிறழ்வுகள், இடைநிலை எழுத்து பாவனையிலான சமரச சமன்பாடுகள் என்பவற்றிற்குச் சிறிதும் உட்படாது, விலகி நின்று நவீன விருட்சம் தன் தார்மீகம் சிதையாது துணிந்தும் தனித்தும் சிற்றிதழ் காலப் பிடிவாதத்தையும் செருக்கையும், தன் இருப்பை உரத்து வைக்கும் இடமே அதன் தனித்துவமும் அழகும் ஆகிறது… 

\

..ஒருவித அசௌகரியமும் பதற்றமும் கொள்ளும் மனம் ஒரு தலையங்கத்தில் வெளிப்படுகிறது…

இக் கட்டுரையை எழுதிய பிரவீன் பஃறுளியைப் பாராட்டுகிறேன்.  மணல் வீடு ஹரிகிருஷ்ணனுக்கும் என் நன்றி.

நீங்களும் படிக்கலாம்..

.

அழகியசிங்கர்

இன்றோ நாளையோ 925 பக்கங்கள் கொண்ட நாவலைப் படித்து விடுவேன். ஒரு பங்களூர் பயணத்தின்போது ஆரம்பித்தேன். பின் இன்னொரு பயணம் போது தொடர்ந்து படித்தேன்.  800 பக்கங்கள் வரை படித்து முடித்தேன்.  கிட்டத்தட்ட இன்னும் 200 பக்கங்கள் வரை படிக்க வைத்திருந்தேன். பின் புத்தகக் காட்சியை முன்னிட்டு புத்தகங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக என் கவனம் திரும்பியது.  ஆனால் எப்படியாவது இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விடவேண்டுமென்று தோன்றியது.

இதோ இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத வேண்டும்.  புத்தகத்தைப் படித்து விடலாம் ஆனால் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.  நீங்களும் படிக்கலாம் என்ற என் முதல் புத்தகத்தை ( 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்) எழுத்தாளர் அசோகமித்திரனிடம் கொடுத்தேன்.  அவர் அதைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.  ‘ஒரு புத்தகத்தைப் படித்துவிடலாம்.  ஆனால் அப் புத்தகத்தைப் பற்றி எழுதுவது சுலபமல்ல.  சமயத்தில் என்ன எழுதவேண்டுமென்று தோன்றாது,’ என்றார். 

உண்மைதான்.  ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு என்ன எழுதுவது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான். பொதுவாக ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு, பிரமாதம் இதில் ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் எழுதலாம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஒரு புத்தகத்தைப் பற்றி என்ன எழுதுவது?  இதை இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது எதிர்கொள்ளாமலிருக்கப் போவதில்லை.  ஆனால் ஒன்றுமே எழுதாமல் விட்டுவிட்டால் இந்தப் புத்தகம் எந்தக் குறிப்பும் இல்லாமல் என் கவனத்திலிருந்து மறந்து விடும். அதனால் நான் படிக்கிற புத்தகங்களைப் பற்றி எழுதாமல் இருக்க மாட்டேன்.  ஆனால் வாசிக்கிறவர்கள் இதை ரசிக்க முடியுமா? இப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் என்ன நினைப்பார் என்றெல்லாம் தெரியாது. இதோ இன்னும் ஒரு நாள் இரண்டு நாளில் எழுத வேண்டியதுதான்.

துளி – 103 – குமுதத்திற்கு நன்றி

அழகியசிங்கர்

இன்று குமுதம் பத்திரிகையில் என் நாவல் üதனி இதழ் நன்கொடை ரூ.20ý குறித்துபு(து)த்தகம் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்கள்.  குமுதம் ஆசிரியருக்கு நன்றி.  

இந்த ஆண்டு என் இரண்டாவது நாவலைக் கொண்டு வருவதென்று பெரிய முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன்.  இந்த ஆண்டு நாவல் யுகம்போல் தோன்றுகிறது.  புத்தகக் காட்சியில் ஏகப்பட்ட நாவல்களை வாங்கியிருக்கிறேன்.  

குமுதம் கீழ்க்கண்ட குறிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
‘தனி இதழ் நன்கொடை ரூ.20’  என்ற நாவலைப் பற்றி 5.2.2020 குமுதம் இதழில் குமுதம் நூலகத்தில் பு(து)த்தகம் என்ற பகுதியில் வெளிவந்த குறிப்பு.       
‘சிற்றிதழ்கள் பெருகியிருந்த காலம் மறைந்து அருகிவிட்ட இக்காலத்தில், சிற்றிதழ் ஒன்றினை நடத்தும் ஆசிரியர் முதல் அதில் எழுதுவோர், வாசகர் என அத்தனை பேரின் அத்தனை கணங்களையும் கண் முன் நிறுத்தும் நாவல்/நடையிலும் நயத்திலும்  நவீனத்துக்கு ஏற்ற நளினமான மாற்றங்களுடன் புதிய உத்தியோடு சுவாரஸ்யமான கதையாக நகர்கிறது. படிக்கப் படிக்க, நிஜமா? கற்பனையா? என்ற கேள்வி நிறைய முறை மனசுக்குள் எழுவது நிஜம்!’

இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்தேன்

அழகியசிங்கர்

போன சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை, குவிகம் கூட்டத்திற்கு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அம்புஜம்பாள் தெருவிற்குச் சென்றேன்.  நான் ஐந்தரை மணிக்கே அங்குச் சென்றுவிட்டேன்.  இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்க வேண்டுமென்றுதான்.  

சமீபத்தில் கடுமையான அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.  நான் அவர் வீட்டின் முன் நுழைவதற்கு வண்டியை வைத்துவிட்டுத் திரும்பினேன்.  என்னை கல்கி  பொறுப்பாசிரியர்  (அவர் மனைவியுடன் வந்திருந்தார்) ரமணன் கூப்பிட்டார்.  

“கூட்டம் ஐந்து மணிக்கென்று போட்டிருக்கிறார்கள்.  யாரும் வரவில்லையே?”

“இல்லை ஆறுமணிக்குத்தான் கூட்டம்.  தவறுதலாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.  நான் இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்கப் போகிறேன்,” என்றேன்.

இ.பாவைப் பார்க்க கல்கி ஆசிரியரும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.  இ.பா வீட்டு வாசலில் காலிங்பெல்லை அழுத்தியவுடன், இ.பாவே கதவைத் திறந்தார்.  கொஞ்சம் பலவீனமாகப் பார்க்கத் தென்பட்டாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்.  அவருக்கு 90 வயது.  அந்த வயதிலும் கடுமையான அறுவைச் சிகிச்சையை எதிர்கொண்டிருக்கிறார். 

 அன்றுதான் கல்கி பத்திரிகைக் கடைகளில் வெளிவந்திருந்து. அதில் üஈஸ்வர அல்லா தேரே நாம்ý என்ற இந்திரா பார்த்தசாரதியின் கதை.  ஒரு பக்கம்தான் கதை.  அதைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார் கல்கி ஆசிரியர். உடனே கடையில் கல்கி பத்திரிகையை வாங்கவேண்டுமென்று தோன்றியது. 

கூட்டம் முடிந்து திரும்பும்போது நான் வீட்டிற்குப் போகிற வழியிலேயே கல்கி பத்திரிகையை வாங்கினேன்.  கல்கி வித்தியாசமான தோற்றத்திலிருந்தது.  இ.பா கதை கன கச்சிதமான வடிவத்தில் ஒரு பக்கத்திலிருந்தது. இந்த வயதிலும் உடம்பு முடியாதத் தருணத்திலும் கதை எழுதி கல்கிக்கு அனுப்பியிருந்தார்.  எனக்கு என்னமோ கல்கி வாசகருக்கு இந்தக் கதை புரியுமோ என்று தோன்றியது.

கல்கியின் லே அவுட் பெரிய வடிவத்தில் மாறி இருந்தது.    68 பக்கத்தில். இரண்டு அல்லது மூன்று கதைகள்.  மூன்று தொடர்கள். தொடர்களும் இரண்டு மூன்று பக்கங்களில் அடங்கி விடுகின்றன.   வழக்கம் போல கல்கியின் அலை ஓசை.  முன்பெல்லாம் கல்கியில் தொடர் நாவல்கள் வரும்.  எனக்குத் தெரிந்து பி ரெங்சநாயகியின் தொடரை வாசித்திருக்கிறேன்.  ஜெகசிற்பியின் கிளிஞ்சல் கோபுரம். எப்போதும் கல்கியில் திரைப்பட நாயகிகளின் அட்டைப் படங்கள் வருவதில்லை.  பொறுப்பாசிரியர் ரமணனின் முயற்சியில் கல்கி சிறப்பாக இருக்கிறது.