இன்று வாசித்த புத்தகம் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் என்ற புத்தகம். இந்த நாவல் பல சம்பவங்களின் கோர்வை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
இந்தச் சம்பவங்கள் வரம்பு மீறியவை. ஆனால் இந்த நாவலைப் படிப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. இந்த நாவலில் வருகிற கதாநாயகன் பெயர் என்ன என்று தெரியவில்லை. அவர் தானே முன்வந்து சொல்வதுதான் இந்த நாவல். நாவல் முழுவதும் ஒருவர் பேசுவதுபோல் ஆரம்பிக்கிறது. இந்த நாவலில் கதா மாந்தர்கள் தப்பாக நடக்கிறார்கள். அடிக்கடி குடிக்கிறார்கள். பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்கிறார்கள். கதையில் ஒரு ஒழுங்கு என்று எதிர்பார்ப்போம். அந்த ஒழுங்கை இந்த நாவல் கட்டுடைக்கிறது.
சந்திரன் என்ற நண்பனுடன் ஏற்பட்ட நட்பைச் சுற்றி இந்த நாவல் வட்டமிடுகிறது.
சுந்தர் அண்ணா என்பவர், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத இந்த நாவலின் கதாநாயகனைப் பார்த்து, üஒரு மோசமான கண்டம் ஒன்று இப்போது உன் அமைப்பு படி உருவாகி இருக்கிறது. அந்தக் கண்டத்தைத் தாண்டி விட்டால் அதற்கடுத்து சக்ரவர்த்திக்கு நிகரானவனாக மாறிப் போவாய்ý என்கிறார்.
“என்னுடைய எண்ணங்கள்தான் என்னை வழி நடத்துகின்றன. என்னுடைய செயல்கள்தான் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றிக்கும் காரணம்,” என்கிறான் கதைசொல்லி.
சந்திரன் காதலிதான் மாதங்கி. அவளைப் பற்றி ஒரு இடத்தில் கதைசொல்லி இப்படிக் கூறுகிறான். மாதங்கிதான் என் சிநேகிதி, அம்மா எல்லாம் என்று. கல்லூரி காலத்திலிருந்து கதைசொல்லியின் உணவு உடை சமாச்சாரங்கள் எல்லாம் மாதங்கி கவனித்துக் கொண்டிருக்கிறாள். சந்திரன்தான் அதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறான்.
இந்த நாவல் கல்லூரியில் படிப்பதில் சுழன்று வருகிறது. இளங்கலை படிப்போடு கதைசொல்லி தன் படிப்பை முடித்து விடுகிறான். மாதங்கி, சந்திரன் எல்லாம் முதுகலை படிப்பிற்குத் தயாராகிறார்கள். இவர்களுடைய இன்னொரு கல்லூரி நண்பர்கள்தான் கதைசொல்லியின் நண்பர்களாக மாறுகிறார்கள்.
இங்கே திவ்யா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் கதா ஆசிரியர். சந்திரனுடன் படித்த தோழிதான் திவ்யா. திவ்யாவிற்கும் கதைசொல்லிக்குமான உறவு ஒரு சாதாரண புள்ளியிலிருந்து ஆரம்பமாகிறது.
ஒரு ரெஸ்ட் ரூமில் திவ்யாவுடன் கதைசொல்லிக்கு இப்படி ஒரு அறிமுகம் நடக்கிறது. üஇயல்பாக நெருங்கி வந்து என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். கை ஜோதிடம் பார்ப்பதுபோல என் உள்ளங்கைகளை அவளது விரல்களால் வருடிவிட்டாள். அவள் நெருங்கி வந்து என்னை மார்போடு ஒட்டி அணைத்து, என் உதட்டருகே அவளது உதடுகளைக் கொண்டுவந்து முத்தமிட்டுக் கொள்ளலாமா? என்றாள். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தபோது அவள் என் உதடுகளைக் கவ்வினாள். நான் அவளது உடலெங்கும் என்னுடைய கைகளை கௌரவமாக நகர்த்தினேன்.ý
சந்திரனும் கதைசொல்லியும் அடிக்கடி பேசிù;கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் ஒரு நிழல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. திவ்யாவுடன் கதைசொல்லி பழகுவது சந்திரனுக்குத் தெரியாது, அதை அவன் விரும்ப மாட்டான் என்பதால்.
“உன் மாய உலகம் ஒருநாள் உன்னை அடித்து வெளியே துரத்தும்,” என்கிறான் சந்திரன் ஒருநாள். அவனுடைய வீட்டில் பணம் இருந்தாலும் விடாப்பிடியாக அதை உதறிவிட்டு வாழ்கிறவன்.
கதைசொல்லி கோபத்துடன், “உன்னுடைய வாழ்க்கை உனக்கு இப்படிச் சிந்திக்கச் சொல்லித் தந்திருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் உன்னுடைய நியாய தர்மங்களுக்கு வேலையே இல்லை,” என்கிறான் கதைசொல்லி.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சந்திரனும் கதைசொல்லி சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்தார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சந்திரன் தவிர்த்துவிட்டான்.
கதைசொல்லியின் வறுமையைப் பற்றி இந்த நாவலில் பல இடங்களில் வெளிப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு குறிப்பு வருகிறது. படிக்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது.
‘கல்லூரியில் என்னை சந்திரன் முதன்முறையாகப் பார்த்தபோது என்னிடம் இரண்டு சட்டைகள், ஒரு பேண்ட் மட்டுமே இருந்தன. துவைத்து மாறி மாறிப் போட்டுக்கொள்வேன். என்னுடைய வகுப்பிலிருந்த பெண்பிள்ளைகள் கூட இதுபற்றி பலமுறை என்னிடம் விசாரித்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் காந்தியைப் பற்றிச் சொல்லித் தப்பித்துக்கொள்வேன். காந்தி எளிமையாக இருக்கச் சொன்னது மனதளவில் என்னைக் கவர்ந்துவிட்டது என்றும் அதனால்தான் விடாப்பிடியாக இந்தப் பழக்கத்தை நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்,’ என்று எல்லோரிடமும் தன் ஏழ்மையை மறைக்கச் சொல்லிக்கொண்டிருப்பான் கதைசொல்லி.
திவ்யா கதைசொல்லியைவிட இரண்டு வயது மூத்தவள். திருமணம் ஆனவள். கதைசொல்லியுடன் அவள் நெருங்கிப் பழகும்போது நல்ல மூடில் இருந்தால், சிலசமயம் மச்சான் என்பாள், சிலசமயம் பேபி என்பாள்.
இந் நாவலில் ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒவ்வொரு கதை வருகிறது. கதைசொல்லியைத் தெடார்புப்படுத்திதான். 12வது அத்தியாயத்தில் பாண்டியை அறிமுகப்படுத்துகிறார். இது தொடர்பாக எதாவது கதை இருக்கும். ரசித்துப் படிக்க முடியும்.
பதிமூன்றாவது அத்தியாயத்தில் பரதராமன் என்கிற பிஆர்ரை அறிமுகப்படுத்துகிறார். அவருடன் ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை கதைசொல்லி விவரிக்கிறார். அதேபோல் விக்னேஷ் என்ற சினிமா நடிகனைப் பற்றி தகவல்களைக் கொடுக்கிறார். சந்திரனின் தாய் மாமாவைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். தாய் மாமன் சந்திரனை விட கதைசொல்லியுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.
இந்த நாவலில் அங்கங்கே பல நிஜமாக நடந்த சம்பவங்களைப் புனைவாக மாற்றி எழுதியிருக்கிறார். ஆந்திராவில் ஒரு அரசியல் தலைவரின் ஹெலிகாப்டர் மரணம், ஒரு நடிகையைக் குளிக்கும்போது நிர்வாணமாகப் படம் எடுத்ததைப் பற்றி, போலி சித்த மருத்துவர்களைப் பற்றியும் வருகிறது. அதிகார மட்டத்திலிருக்கும் விஸ்வநாதனை யாரோ கொலை செய்து தஞ்சாவூரில் உள்ள கால்வாயொன்றில் போட்டுவிட்டார்கள். அவர் அதிகார மட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர். அடவடியான காரியங்களுக்கு அந்தக் பகுதியில் அறியப்பட்டவர். இந்தக் கொலைக்கான துப்பும் கிடைத்து விடுகிறது. இது ஒரு அத்தியாயம் முழுக்க வருகிறது.
ரோலக்ஸ் வாட்ச்சைப் பற்றி குறிப்புகள் 27வது அத்தியாயத்தில் வருகிறது. ரோலக்ஸ் வாட்ச் மாத்திரம் டுப்ளிக்கேட் கிடைக்காது. அதற்குக் காரணம் தொழில் சாம்ராஜ்யத்தில் உள்ள ஒரு தொழில் தர்மம்.
இந்த வாட்ச்சை விற்று வருகிற இலாபத்தில் தான தரும காரியங்கள் பலவற்றை செய்து வருகிறது இந்த நிறுவனம்.
மேரியட்டில் அறையெடுத்து திவ்யாவை வரச் சொல்லி அழைக்கிறான் கதைசொல்லி. அங்கே அவர்கள் இருவரின் லீலைகள் தொடர்கின்றன. üüநாம பிரிஞ்சுரலாமா?ýý என்று கேட்கிறான் கதைசொல்லி. அவளும் சரி என்கிறாள். எப்படி இந்த உறவு தற்செயலாக ஆரம்பித்ததோ அதேபோல் பிரிவும் ஏற்பட்டுள்ளது என்று முடிகிறது கதை.
சந்திரனுக்கு பெல்ஸி பால்ஸி நோய். ஒவ்வொரு வருடமும் ஐம்பதாயிரம் அமெரிக்கர்களுக்கு இந்த நோய் வருமாம். முகத்தில் ஒரு பக்கம் மட்டும் இழுத்துக்கொண்டு விடுமாம். இதற்கு எந்த மருந்தும் கிடையாதாம். தானாகவே சரியாகப் போக வேண்டும். முகத்தில் பயிற்சிகள் செய்து வரவேண்டும். கதைசொல்லி உருகுகிறான். தனக்கு வரக்கூடாதா? ஏன் சந்திரனுக்கு வந்தது என்று. திவ்யாவுடன் ஏற்பட்ட உறவு துண்டித்துப்போனது பற்றி சந்திரனிடம் சொல்லவேண்டும். சுந்தர் அண்ணாவைப் பார்த்து தற்செயலானவன் என்று சொல்ல வேண்டுமென்று நினைக்கிறான் கதைசொல்லி.
156 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் ஆரம்பித்திலிருந்து முடியும் வரை கீழே வைக்க முடியவில்லை. விறுவிறுவென்று போகிறது. இன்னும் இவருடைய மற்ற நாவல்களையும் படிக்க வேண்டும்.
இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன. ஒரு புத்தகம் லா ச ராமாமிருதத்தின் ‘நான்’. இன்னொரு புத்கதம் ‘காண்டாமிருகம்’. ஆனால் லா ச ராவின் ‘நான்’ மட்டும் எடுத்துக்கொண்டு போனேன். இதைப் படி முதலில் போதும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
உறவினர் வீட்டுக்குப் போனபோது ‘கண்டாமிருகத்தையும்’ எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமென்று தோன்றியது.
ஏற்கனவே சிந்தா நதி என்ற பெயரில் லா ச ரா அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார் என்று தோன்றியது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் அதை உறுதி செய்ய முடியும். üநான்ý என்கிற இந்தப் புத்தகம் அவருடைய சுயசரிதம். அவர் அம்மாவைப் பற்றி ரொம்ப எழுதியிருக்கிறார். குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி வந்திருந்தது. அதை இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்கள். இந்தப் புத்தகம் முழுவதும் அவருடைய சுயசரிதம்மட்டும் இல்லை. 3 சிறுகதைகள் சேர்த்திருக்கிறார்கள். ஒரு கட்டுரை.
குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி. அதில் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார். ‘ஒருமுறை மௌனி என் வீட்டிற்கு வந்திருந்தார். இங்கே இப்படி எனக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தார். கூட இன்னொருவரும் வந்திருந்தார். அவர், “நீங்க ராமாமிருதத்தைப் படித்திருக்கிறீர்களா?” என்று மௌனியைக் கேட்டார். “நான் படித்ததும் இல்லை. படிக்கப் போவதும் இல்லை.” என்று மூஞ்சியில் அடிப்பது போல் பதில் சொன்னார் மௌனி.
அவர் படிக்காவிட்டால் போகிறார். அது பற்றி எனக்கு வருத்தமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால் இந்த மனிதன் இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. எனக்குத் தெரியவில்லை, என்று கோபப்படுகிறார் லா ச ரா.
ஏன் மௌனி அவர் எதிரிலியே அப்படிப் பேசினார்? எழுத்தாளர்களுக்குள் பொறாமை உணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளர் முன் இன்னொரு எழுத்தாளர் இப்படி வெளிப்படுத்துவது அநாகரிகம். என்னிடம் கூட ஒரு விமர்சகர் மௌனியை தூக்கி வைத்து ராமாமிருதத்தை மட்டமாகப் பேசுவார். அதைக் கேட்டு ரொம்ப நாட்களாக ராமாமிருதம் புத்தகங்களைப் படிக்காமல் இருந்திருக்கிறேன். அபிதா என்ற நாவலை படித்தவுடன் என் எண்ணம் மாறிவிட்டது. ஆனால் உண்மையில் மௌனி எழுத்து வேற, ராமாமிருதம் எழுத்து வேற. இதை நான் ராமாமிருதத்தைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் உணர்ந்தேன்.
பல இடங்களில் அம்மாவைப் பற்றி சொல்லியிருக்கிறார். üஎன் அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியார், 36, 37 ரூபாய் சம்பளம். என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது என்று அம்மா கையில் பணத்தைக் கொடுத்து விடுவார். அவள் கை நல்ல கை. பசுமாடு வளர்த்தாள். தோட்டம் போட்டாள். எல்லாம் நன்றாக வந்தது. சீக்காளி ஆம்படையான். அவள் ஒழுங்காக அவரைப் பார்த்துக்கொண்டாள். கடமைதான் இது. காதலினால் பார்த்தாள் என்று அதனை நான் சொல்ல வரவில்லை. அவளே சொன்னாள். வேண்டியது பண்ணியாகிவிட்டது உங்க அப்பாவுக்கு. அப்புறம் எனக்கு ஒன்றும் கடன் இல்லையப்பா. எனக்கு இது பண்ணவில்லையே என்று எந்த குற்றமும் இல்லை. அவர் இறந்தபோது கொஞ்ச நேரம்தான் அழுதாள்.’
இன்னொரு இடத்தில் லா ச ரா, “என் எழுத்து புரியவில்லை என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள். புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? புரியாமல் இருந்துவிட்டுதான் போகட்டுமே. இப்போது என்ன கெட்டுப் போய் விட்டது?” இப்படி சொல்வது விரக்தியில் சொல்லாமல் இருக்க வேண்டும்.
லா ச ரா சில இடங்களில் அபாரமாக சிலவற்றை சொல்லிக்கொண்டு செல்கிறார். :. ‘கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன். பிம்பம் என்னைத் திரும்பிப் பார்க்கிறது. எத்தனை அழகு. நான் இவ்வளவு அழகா என்ன? இல்லை. பிம்பம் என்னைக் காட்டிலும் அழகாக எனக்குத் தோன்றுகிறது.’
லா ச ரா புத்தகத்தில் நான் ரசித்த பகுதிகள்.
சின்ன வயதில், வீட்டில் நடமாடும் சில மொழிகள்.
வேலையிலிருந்து மகன், மாலை திரும்பி வந்ததும், தாய் அவன் வயிற்றைத் தடவிப் பார்ப்பாளாம். (என் குழந்தை சாப்பிட்டானா
இல்லியா) பெண்டாட்டி இடுப்பைத் தடவிப் பார்ப்பளாம். (இன்னிக்கு எனக்கு என்ன கொணார்ந்திருக்கே?)
அப்புறம் ஒரு குட்டி உபநிஷக்கதை.
ஒரு மருமகள், மாமியாரை வீட்டை விட்டுத் துரத்தியதுடன் திருப்தி அடையாமல் அவள் தலையைக் கொண்டு வரச் சொன்னாளாம். அவள் சொன்னபடியே கணவன் செய்து, தாயின் தலையைப் பிடித்துக் கொண்டு வரும் வழியில் கல் தடுக்கி விழுந்தானாம். உடனே தலை பேசிற்றாம்.
‘கொழந்தே, அடிபட்டுட்டுதா?’
‘ஒரு சமயம் வயல் பரப்பின் மேல் நான் பையனாய் ஓடிக்கொண்டிருக்கையில், திடுக்கென என் வழி குறுக்கே ஒரு பாம்பு தென்பட்டது. சுமார் நாலடிக்கு எட்ட, அது படமெடுத்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. நின்றேன். ஒருவரையொருவர் அந் நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தோமோ?
எனக்குக் கல்லெடுத்து அடிக்கத் தோன்றவில்லை. ஓடிவிடத் தோன்றவில்லை. பயமாயில்லை. கைகால்கள் வெலவெலத்துச் செயலிழந்து விடவில்லை. எங்களுக்குள் ஏதோ சொந்தம் இருந்ததாகப் பட்டது. இதோபார் நாம் சோதரர்கள். அவரவர் வழியில் போய் விடுவோம். ஒருவரையொருவர் ஏன் துன்புறுத்திக் கொள்ள வேண்டும்? என்கிற மாதிரி.
அது படத்தைக் கீழே போட்டு, சாவதானமாக வயலில் இறங்கி தேங்கிய தண்ணீரில் கதிர்களிடையே மறைந்தது.’
தி.ஜ.ர தான் மானசீக குரு என்கிறார் லா ச ராமாமிருதம். இதை இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவர் வார்த்தைகளிலேயே தி ஜ ர வைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
‘தி ஜ ர என் எழுத்தை அதன் போக்கில் வளர்த்தவர். அதிநுட்பமான விமர்சகர். அவர் காலத்திலேயே அவருடைய முழுத் தகுதியை யாரும் உணரவில்லை. என் மானஸீக குரு. புரியாத மட்டுமல்ல, வக்ரமான எழுத்தாளன் என்று நான் எழுத்தாளனாக உருவாகிக் கொண்டிருக்கும் நாளில் சக எழுத்தாளர்களாலேயே கண்டனமான போது எனக்குப் பக்கபலமாய் என் எழுத்தில் நம்பிக்கை மாறாதவராக இருந்தவர். அவர்தான், “நீ எதை வேணுமானாலும் எழுதுடா, நான் போடுகிறேன்,” என்று தான் சக்தி பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது சொன்னதை செயலில் காட்டி எனக்குத் தைரியமூட்டினர் அவர். அப்படி முதுகைத் தட்டி என்னை வளர்த்திராவிடில், இப்போது எழுத்தாளனாக எங்கிருந்திருப்பேனோ?’
இலக்கியப் பார்வை என்பதற்கு இப்படி பதில் அளிக்கிறார்.
‘இலக்கியப் பார்வை என்பது எழுத்தின் பண்பாடு மட்டும் அன்று. மனத்தின் பண்பாடும் என்றே தோன்றுகிறது. உலகத்தை இப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு மனப்பக்குவம் கிட்டிவிடுமா?’
லா ச ரா அவருடைய படைப்பில் அடிக்கடி மரணத்தைப் பற்றி எழுதியருப்பார். இதோ:
‘யாருடைய மரணமும் அதன் வேளையில்தான் நேர்கிறது என்பது தவறாத உண்மை. ஆனால் அது எங்கள் குடும்பத்தில் சற்று அடிக்கடி வாசற்படியைக் கடந்திருக்கிறது என்பதும் உண்மை. அதன் மூட்டம் என் எழுத்தில் அதிகமாகக் கவிந்திருப்பின், அது ஆச்சரியமில்லை.
‘ஒருவனின் மறைவுடன், மறைந்தன அவன் அதுகாறும் அவனில் திரட்டிய அனுபவம், ஞானம், சமுதாயத்துக்கு அவன் பயன் அந்த மட்டில் உயிரின் முடிவு, உயிருக்குத் துரோகம், ஆனால் இது ஒரு கோணம், கோணங்கள் எத்தனையோ, அவைகளின் நியாயங்களும் அப்படியே…
‘எனக்கு சின்ன வயதில் வாசலில் பிணம் போனால் பயம். பிராம்மணப் பிணம் முகத்தையும் மூடி பின்னால் யாரோ துரத்துவதுபோல் அவசரமாய் ஓடும்.
‘சாவே, உன்னை ஏற்கிறேன். ஏனெனில் எனக்கு வேறு வழியில்லை. நீ நியதி, அதனால் நீ கர்வமடைய வேண்டாம். உன்னுடன் என்றும் சமாதானமாக முடியாது. நீ பலவான். ஆனால் நியாயவான் இல்லை…
‘இன்றைய பையன்கள் ரொம்பவும் தேறிவிட்டார்கள். என் இரண்டாவது பிள்ளை கண்ணனுக்கு மாதம் ஒரு விபத்தேனும் பார்ப்பதில் தனி ராசி போலும். ‘தலை தனியா தண்டவாளம் தாண்டி உருண்டு விழுந்தது பாருங்கோ! என்னப்பா, உடம்பை சிலிர்த்துக்கறேளே! உங்கள் காலத்தை விட இப்போ இடைஞ்சல் அதிகம். காலையில் கிளம்பிப் போனோம்னா, மாலை திரும்பி வறோம்னு நிச்சயமில்லை. உங்கள் காலத்தில் இது சொல்லலங்காரம். இப்போ அப்பட்டமான உண்மை. நாமெல்லாம் இட்லி சாம்பார்தானே! பிணத்தைப் பார்க்கவே பயம். விபத்தை எங்கே ஜரிச்சுக்கப் போகிறோம்! ‘
தி ஜ ரா, ராமாமிருதம் கதைகளைப் பற்றி இப்படி விமர்சிக்கிறார்:
üüஇன்னொன்று உன்னிடம் பார்க்கிறேன். கதைக்குத் கதை பாம்பு வருகிறது. காரணம் இல்லாவிட்டாலும் பாம்பு வரும்பவடி ஒரு காரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய். உபமானமாகவோ உருவகமாகவோ பாம்பைக் காட்டுகிறாய். அப்புறம் இன்னொன்று உன் கதைகளில், ஸ்னானம் செய்துவிட்டு ஈரப் புடவையைச் சுற்றிக்கொண்டு ஒரு ஸ்திரி படித்துறை ஏறி வருவாள். இது மாதிரி காட்டல்கள், நீ ஒரு சமயம் பார்த்து, சித்திரம் உன் மனத்தில் அழுத்தமாய் விழுந்திருக்கும். ஆனால் அதுவே அப்ùஸஸன் ஆகிவிடக் கூடாது. ஆனால் எழுதுவதே அப்ùஸஸன்தான்.ýý
எந்த எழுத்தாளர் இப்படி இன்னொரு எழுத்தாளர் மீது அக்கறை கொண்டு சொல்வார்கள். இன்றைய காலத்தில் அப்படி யாரையும் பார்ப்பது அரிது.
இந்தப் புத்தகத்தில் அவருடைய சுய சரிதம் தவிர நான்கு கதைகள் உள்ளன. ‘நன்னு விடசி… பிம்பம். சோழம் பாக்க வாங்கோ..பாய் ஃப்ரண்ட்..’ இதில் நன்னு விடசி சிறப்பான கதை. அக் கதையை ஒருவர் கட்டாயம் படிக்க வேண்டும். சினிமாவில் தருணங்கள் என்றும் ஒரு கட்டுரை இருக்கிறது.
மணிகொடி எழுத்தாளர்கள் எல்லோரும் பீச்சில் சந்தித்த நிகழ்ச்சியை ஒரு இடத்தில் விவரிக்கிறார். அவர்கள் எல்லோரும் என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார் தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சி ப்ரசாரம் கிடையாது. ஆனால கடற்கரையில் மாலை அந்த இரண்டு இரண்டரை மணி நேரம், இந்த ஏழெட்டு பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, இதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.ý என்கிறார் லா சு ராமாமிருதம் பரவசத்தோடு.
முதலில் நான் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கலாமென்று நினைத்தேன். பின் வேண்டாமென்று விட்டுவிட்டேன். அது ஒரு மொழிபெயர்ப்பு நூல். அந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் கவனம் தேவை என்று தோன்றியது. பின் நேற்று மாலை 4மணிக்குத்தான் இன்னொரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்தேன். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது இந்தப் புத்தகத்தைப் படித்தே தீர்வது என்று முடிவு கட்டினேன். ஆனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. வேறு வேறு வேலைகள் வந்து தொந்தரவு செய்யத் தொடங்கின. ஆனால் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றவில்லை. எப்படியாவது முடித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டினேன். இதோ முடித்தும் விட்டேன். ஆனால் இந்தப் பதிவை நேற்றே இட முடியவில்லை.
நான் படித்த புத்தகத்திற்கு வருகிறேன். அது üராஜாஜியின் ஜெயில் டைரி.ý 206 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. 1921ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தோராம் தேதி பிற்பகல் ராஜாஜியும் மாகாண கமிட்டித் தலைவர் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரியாரும் வேலூர் மத்திய சிறைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று ஆரம்பிக்கிறது இந்த ஜெயில் டைரி.
ராஜாஜியை ஜெயிலுக்குக் கூட்டிப் போக போலீசு ஜவான்கள் வர கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. அதற்குள் ராஜாஜி ஒரு சிறுகடிதம் மகாத்மாவிற்கு எழுதுகிறார்;
ýஎனக்கு முன்று மாத வெறுங்காவல் தண்டனையே கொடுத்திருக்கிறார்கள். அது மிகவும் சொற்ப தண்டனை. ஆயினும் தாங்கள் ஜனவரி மாதத்திற்குள் சுயராஜ்யத்தைப் பெற்றுவிடுவீர்கள்
என்று நம்புகிறேன். அதனால் எவ்வளவு தண்டனை கொடுத்தால் என்ன? ý
சிறைக்குச் செல்வதற்கு முன் என்னன்ன எடுத்துக்கொண்டு போனார் என்பதை ஒரு விஸ்ட் போடுகிறார். ýநான் என்னுடைய சிறு பையில் பற்பொடியும், கிராம்பும், ஒரு குயர் கடுதாசியும், குண்டூசிகளும், பென்சில்களும், ஒரு பௌண்டன் பேனாவும் கொண்டு போயிருந்தேன். அத்துடன் பவுண்டன் பேனாவுக்கு üஸ்வான்ý மையும், ஒரு கூஜாவும், ஒரு சிறு பித்தளைக் குவளையும் வைத்திருந்தேன். என்னிடம் சில புஸ்தகங்களும் இருந்தன. கிறிஸ்துவ வேதம், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், தாயுமானவர் பாடல்கள், மகாபாரதத் தமிழ் மொழி பெயர்ப்பு, பி சி ராய் எழுதிய மகாபாரதம் ஏழு பாகங்கள், ராபின்சன் க்ரூúஸô – இவைதான் அவர் கொண்டு போன புத்தகங்கள். கூடவே தூரத்துப் பார்வைக்கான கண்ணாடியும், படிப்பதற்கான கண்ணாடியும் அவரிடம் இருந்தன.
முதல் பத்து நாட்கள் சிறையில் அவர் வசிக்க வேண்டியிருந்த அறைகள் தனிக் கொட்டடி. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இருக்கக் கூடியவை. அதில் பத்துநாட்கள் அவர் தங்கினார்.
முதல் நாள் சிறை அனுபவத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:
üசிறைவாசம் சந்தோஷமாகவே தோன்றுகிறது. வெளியிலிருப்பவர்கள்தான் சிறைக்குப் பயப்படுகிறார்கள். எங்களை மாலை 5.45 மணிக்கே அடைத்து விட்டார்கள். அறைக்குள் என்னை வைத்து வெளியே பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு போகும் முதல் அனுபவம் எனக்கு இதுவே. அதனால் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது.ý
இன்னொரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : üதுணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து இந்த வாழ்வைப் பரிபூரணமாக அனுபவிப்பதற்கு என்னிடம் அதிக பலமில்லாமலிருக்கிறதே என்று எண்ணி வருந்தினேன்.ý
மோர் நல்ல ஆரோக்கியமான உணவு. விலையும் அதிகமில்லை. ஆனாலும் அதை அரசாங்கத்தார் கைதிகளுக்கு ஏன் கொடுக்க விரும்பவில்லை என்று ஆச்சரியப்படுகிறார் ராஜாஜி.
ராஜாஜி ஆஸ்துமா நோயால் கஷ்டப்படுகிறார். இந்த ஜெயில் டைரி முழுவதும் அவர் ஆஸ்துமா நோயால் படும் அவஸ்தை அங்கங்கே வருகிறது.
ராஜாஜிக்கு அரசியல் கைதிகளை சரியாகக் கவனிக்க வில்லை என்ற வருத்தம் இருக்கிறது. சாதாரண கைதிகளுக்குக் கொடுக்கும் உணவையே கொடுக்கிறார்கள். உணவைப் பிச்சைக்காரர்கள் மாதிரி அவசரமாக அள்ளி அள்ளிச் சாப்பிட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று குறிப்பிடுகிறார்.
அவர் தங்கியிருக்கும் அறையைப் பெருக்க நல்ல துடைப்பம் கிடையாது. சிறை அதிகாரிகள் அறைகளின் சுத்தத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. மூட்டைப் பூச்சிகளும், கொசுக்களும் தொந்தரவு செய்கின்றன.
ஆங்கிலத்தில் ராபின்ஸன் குரூúஸô என்ற ஓர் அழகான கதைப் புத்தகம் இருக்கின்றது. அதில் குரூúஸô என்பவர் கப்பல் உடைந்து தன்னந்தனியாக ஒரு நிர்மானுஷ்யமான தீவில் அகப்பட்டுக்கொண்டுள்ளார். ஆயினும் அவர் தீவுக்கு வந்த சில காலம் கழித்து, üஏதேனும் கப்பல் வந்து அழைத்துச் செல்லாதா? என்று அடிக்கடி கடலை நோக்கியவண்ணமாக நிற்கிறார் என்று, அந்தக் கதை கூறுகிறது. அதேபோல் சில நண்பர்கள் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள் என்கிறார் ராஜாஜி.
ராஜாஜியின் சரித்திர அட்டையில் கீழ்கண்ட விவரங்கள் காணப்படுகின்றன.
üüஅரசியல் கைதி. வந்த தேதி . 21.12.2021. அப்பீல் செய்ய மறுத்துவிட்ட தேதி 24.12.2021. பெயர் : ஸி ராஜகோபாலச்சாரியார். பிராமணர். இந்திய தேசிய காங்கிரசின் பொதுக் காரியதரிசி. கல்வி நிலை : ஸி.
மேலும் சில விபரங்கள் :
தண்டனைத் தேதி : 21.12.2021
விடுதலைத் தேதி : 20.03.2022
வயது : 42
உயரம் : 5 அடி 4 அங்குலம்
நிறை : 104 ராத்தல்.
தினம்தினம் ஒரே மாதிரி உணவையே காலையும் மாலையும் கைதிகளுக்குக் கிடைக்கிறது. அதில் எத்தனை மண்ணும் கல்லும். எத்தனை தூசியும் தும்பும். இவற்றை தினமும் உண்பதற்கு நிரம்பக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன என்று யோசிக்கிறார் ராஜாஜி. அவரே காரணத்தைக் கண்டுபிடித்து சொல்கிற விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் என்ன சொல்கிறாரென்றால், üநாம் இதுவரை நம்மைச் சூழ்ந்துள்ள ஏழை மக்களைச் சிறிதும் எண்ணாமல் பலவிதமான பலகாரங்களை உண்டு பழகியதுதான். இந்த விஷயங்களை எண்ணி எண்ணி நாங்கள் உணவை மகிழ்ச்சியுடன் உண்ணப் பழகி விட்டோம்.ýý என்கிறார்.
சர்க்கார் ஏற்படுத்தும் கஷ்டங்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறார் ராஜாஜி. துன்பத்தைத் தாங்க முடியாமல் இருந்தால் சர்க்கார் வெற்றி அடைந்ததாக மமதையில் இருப்பார்கள்.
இந்த இடத்தில் ஒரு கதையைக் குறிப்பிடுகிறார். பகதூர் ஷா என்னும் சக்கரவத்தியைப் பற்றி முகமது ஹ÷úஸன் சொன்ன சுவாரசியமான கதை இது.
பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் ஒருவர் பகதூர் ஷாவைக் கேலி செய்வதற்காக அவருடைய மகனின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்துக்கொண்டு வந்து அவர்முன் வைத்தார். அப்பொழுது பகதூர் ஷா அதைக் கண்டு புன்னகை புரிந்தார். பிறகு அவருடைய தோழர்கள் அவர் புன்னகை புரிந்ததன் காரணத்தை வினவினார்கள். üüஎனக்கு வருத்தம் உண்டாக்கவே அப்படிச் செய்தான். நான் வருத்தத்தைக் காட்டினால் அவன் எண்ணம் கைகூடி விடுமல்லவா?ýý என்று பகதூர் ஷா பதிலுரைத்தார்.
இன்னொரு இடத்தில் இப்படிக் கூறுகிறார் : üஒத்துழையாமை என்பது அரசியல் இலட்சியம் ஒன்றை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட சாதனம் மட்டுமன்று. வாழ்க்கையை எவ்விதம் நடத்த வேண்டும் என்னும் தார்மிக வழியைக் காட்டுவதே அது. அந்நியாயத்துடன் ஒத்துழையாமலிருப்பதே அவசியம் செய்து தீர வேண்டிய கடமையாகும்.ý ராஜாஜி சுறும் ஒத்துழையாமை பற்றி கருத்து நாம் எல்லோரும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய தார்மிக வழி என்று எனக்குப் படுகிறது.
சிறையில் இருக்கும் ராஜாஜி வெளியே உள்ள கிராமத்திலிருந்து வரும் நாதஸ்வர இசையால் பரவசம் அடைகிறார்.
சிறையில் இருந்துகொண்டு ராஜாஜி நகைச்சுவை உணர்வை இப்படி வெளிப்படுத்துகிறார் : üபொல்லாத ரயில் வண்டி சிறைக்கு அருகில் என்னைத் தமாஷாகக் கேலி செய்வதுபோல் கூவிக்கொண்டே போகிறது.ý
ஈக்களையும் எறும்புகளைப் பற்றி சொல்லும்போது தன் சிறுவயது நினைவுகளைக் கூறுகிறார் :
üüஈக்களை என்னுடைய சுற்றப்புறத்திலிருந்தும் நீக்க முடியவில்லை. மனத்திலிருந்தும் நீக்க முடியவில்லை. ஈக்களும் எறும்புகளும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே என்னுடைய இரண்டு நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றன. இவைகளில் எதைப் பார்த்தாலும் சிறுபிராயத்து நினைவுகளும் அப்போது என் தாயார் எவ்விதம் இருந்தாரோ, அதுவும் என்னுடைய ஞாபகத்திற்கு வந்து விடுகின்றன.ýý
தக்காளிப்பழத்தை வைத்து ராஜாஜி ஒரு ஜோக் அடிக்கிறார்:
üஎனக்குத் தரும் தக்காளிப் பழங்களைப் பார்த்தால் இவைகளை உண்பதற்காகவேனும், விடுதலையான பிறகும் கூட வேலூர்ச் சிறைக்கு வர ஆசை ஏற்படும்போல் தெரிகிறது.ý
ராஜாஜி விடுதலை ஆகும் நாள் சமீபித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தருணத்தில் ராஜாஜி வருத்தத்துடன் இப்படிக் குறிப்பிடுகிறார் ü வெளியே சென்றதும் நான் பார்க்கக் கூடியது யாது? போர்க்களம் வெற்றிடமாயிருக்கும். போர்வீரர்கள் எங்கும் காணப்பட மாட்டார்கள். சின்ன சின்ன தகவல்களைக் கொண்ட இப்புத்தகத்தைப் படிக்க படிக்க பல விஷயங்களை எனக்குப் போதிப்பதாகத் தோன்றுகிறது. மறக்க முடியாத புத்தகம்.
நான் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டுமென்று என் புத்தகக் குவியலில் தேடிக் கண்டு பிடித்தேன். அந்தப் புத்தகம் வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 1990ல் அப் புத்தகம் வெளிவந்துள்ளது. இன்னும் கூட அப்புத்தகத்தின் பிரதிகள் விற்பனைக்கு வானதியில் கிடைக்கலாம்.
உண்மையிலேயே கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டில் அவருடைய 3 புத்தகங்களை வைத்துக்கொண்டிருந்தேன். முதல் புத்தகம் அவருடைய நாவல் பசித்த மானிடம், இரண்டாவது புத்தகம் சுகவாசிகள் என்ற அவருடைய குறுநாவல்கள். மூன்றாவது புத்தகம்தான் முக்கியமான புத்தகம். கு ப ரா என்ற மகத்தான எழுத்தாளரைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைப் புத்தகம்.
எப்படியும் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதி விடுவதென்று, அசராமல் நேற்றிலிருந்து இன்று முழுவதும் படித்து முடித்து விட்டேன். 282 பக்கங்கள் கொண்ட புத்தகம்.
1996ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்பதால் புத்தகத்தைத் தொட்டுப் படிக்கும்போது தாள்கள் எல்லாம் ஒடிந்து ஒடிந்து விழுந்து கொண்டிருந்தது. கு.ப.ராவைப்பற்றி கரிச்கான்குஞ்சுவின் இந்தப் புத்தகம் அவ்வளவு உருக்கமாக இருந்தது.
இதைப் பற்றி எழுதும்போது முதலில் கடைசியில் அவர் புத்தகத்தை முடித்திருக்கும் பகுதியிலிருந்து எழுதலாமென்று நினைக்கிறேன்.
கரிச்சான் என்ற புனைபெயரில் கு ப ராஜகோபாலன் வழக்கமாகக் கட்டுரைகள் எழுதுவார். கு ப ராஜகோபாலன் இறந்தபோது அவரைக் குறித்து கலாமோகினியில் துயரக் குறிப்பை கரிச்சான் குஞ்சு என்று புனைபெயரைப் பூண்டு எழுதி உள்ளார். ‘என்றுமே நான் குஞ்சுதான்; கரிச்சான் ஆக மாட்டேன். அந்த மேதை எனக்கேது?’ என்று முடித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தை கரிச்சான்குஞ்சு.
மொத்தம் 12 பகுதிகளாக இந்தப் புத்தகத்தைப் பிரித்திருக்கிறார். கரிச்சான் குஞ்சு என்கிற ஆர் நாராயணசுவாமி. அவர் எழுதிய தலைப்புகள் பின்வருமாறு : 1. பாயிரம் 2. கூôழ்க்கைச் சுருக்கம் 3. கு ப ராவும் பழந்தமிழ் இல்கிகயமும் 4. சிறுகதைகள் 5. கு ப ராவின் வேரோட்டம். 6. நாடகங்கள் 7. கவிதை 8. கண்ணன் என் கவி 9. எதிர்கால உலகம் 10. டால்ஸ்டாய் – வாழ்க்கையும் உபதேசமும் 11. கு ப ரா – சில நினைவுகள் 1 12. கு ப ரா – சில நினைவுகள் 2
கு ப ராவின் சிறுகதைகளைப் பற்றி 190 பக்கங்களுக்கு எழுதி உள்ளார். கிட்டத்தட்ட அவருடைய கதைகள் முழுவதையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
திரு பெ சோ சுந்தரராஜன் üசிட்டிý அவர்கள் கூறுவது :
“கு ப ராஜகோபாலன் தனது கடைசி நாட்களில் எழுதிய சோதனை பூர்வமான கதைகள் பலத்த் சர்ச்சைக்கு உள்ளாயின. ஆண் – பெண் உறவைப் பற்றி, ஆபாசமாகவோ, அல்லது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையிலோ எழுதிவிட்டு, நடப்பியல் ரீதியில் துணிச்சலாக எழுதிவிட்டோம் என்று நினைத்துக்கொள்ளும் சிலர் இன்று செய்யும் தவறுகள் கு ப ராவின் கதைகளில் காணப்படா.”
கனகாம்பரம் என்ற கு ப ராவின் சிறுகதைத் தொகுப்பு பற்றி ஆனந்தவிகடன் விமர்சனம் வெளியிட்டிருந்தது. அதற்கு கு ப ராவின் குறிப்பு இது. கவனிக்க வேண்டிய குறிப்பு;
“என் கதைப் புத்தகத்தை விமர்சனம் செய்த யாரோ ஒருவர், நான், üஉடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் – இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான், நான் கவனித்த வரையிலும் என் அநுபவத்திலும் வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன. கண்டதை எழுதுவதுதான் கதை? என்று கேட்கலாம். கதை உருவாகும்போது, கண்டது மட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செம்பும் சேருவது போலச் சேர்கின்றன. ”
க நா சு கு.ப.ரா கதைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “நல்ல எழுத்து எல்லாமே இலக்கியம் ஆகும்போது, புரட்சிகரமாகவும் அமைகிறது என்பது, கு.ப.ராவின் எழுத்துக்களில் தெரிய வருகிறது. புரட்சி என்கிற ஆசையில் எழுதவில்லை அவர், மனிதன் என்கிற நினைப்பில் எழுதினார்,” என்கிறார்.
இதையெல்லாம் கு ப ரா தனது 43 ஆண்டுகளில் எழுதி உள்ளார் (1902 -1944). இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கும்போது எங்கேயோ போய்விட்டது நமது சமுதாயம். ஆனால் கு ப ரா எழுத்துக்களை இன்றும் படிக்க முடிகிறது. அதன் நுணுக்கங்களைக் கதை சொல்கிற விதத்தை நம்மால் ரசிக்க முடிகிறது.
கரிச்சான் குஞ்சு அவருடைய எழுத்துக்களை லிஸ்ட் போட்டுள்ளார். சிறுகதைகள் – அச்சில் புத்தகத்தில் கிடப்பவை -79
நாவல் – 1. நாடகங்கள் – 8, கவிதை 21. இதைத் தவிர துர்சேகந்தினி, தேவி சௌது ராணி என்ற இரண்டு வங்காளி நாவல்களை மொழி பெயர்த்திருக்கிறார்.
இரண்டாவது அத்தியாயத்தில் அவர் வாழ்க்கைச் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
1902 ஜனவரி மாதம் பிறந்தார் 1944 ஏப்ரல் 27ஆம் தேதி மறைந்தார். தந்தை பட்டாபிராமய்ய்ர், தாய் ஜானகி அம்மாள். 1926ல் திருமணம். துணைவியார் அம்மணி அம்மாள். முதலில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா ஆபிஸில் வேலை பார்த்தார். பிறகு ரெவென்யூ இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றார்.அப்போது அவருக்குத் திடீரென்று கண் பார்வை மிக மிகக் குறைந்துவிட்டதால் வேலை போய்விட்டது. சிட்டி இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘அந்த சமயம் ஒரு குறுகிய காலத்திற்காவது தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு லாபமாக அமைந்தது என்று துயர் கலந்த பெருமை கொள்ளலாம்’ என்கிறார்.
கும்பகோணத்தில் ஆர் மகாலிங்கம் என்ற கண் மருத்துவர் செய்த அரிய சிகிச்சையால் ஓரளவு கண் பார்வை மீண்டது. ஆனால் எழுத்தாளராக இருந்து காலத்தை ஓட்டலாமென்று அசட்டு நம்பிக்கையில் காலம் ஓட்டினார்.
உடல் நலம் குன்றி அவர் மருத்துவ மனையில் இருக்கும்போது அவர் காலை எடுத்துவிட வேண்டுமென்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் ‘நான் அமைதியாகச் சாக விரும்புகிறேன்’ என்று கூறியபடி காவேரி தீர்த்தம் ஒரு டம்ளர் வேண்டுமென்கிறார். உடனே ஓடிப்போய் பக்கத்திலிருந்த பக்தபுரித் தெருவிலிருந்து வாங்கி வந்த நீரை குடித்துவிட்டுத்தான் இறந்தார்.
மூன்றாவதாக கு ப ராவும் பழந்தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் கரிச்சான் குஞ்சு எழுதியிருக்கிறார் அதில் அவருக்கு ஆர்வம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
நான்காவதாகச் சிறுகதைகள் என்ற தலைப்பில் 190 பக்கங்களில் கு ப ராவின் பல கதைகளைக் குறிப்பிட்டு எழுதி உள்ளார்.
கரிச்சான் குஞ்சு கு ப ராவின் கதைகளைப் பற்றி இப்படிக் கூறுகிறார் : எல்லோருக்கும் எழுதுகிறார். பழகு தமிழில், சாதாரணமான வார்த்தைகளே பழகிய தேய்ந்த சொற் பிரயோகங்களில். யாரும் முன்னம் கண்டிராத புதிய ஒரு உலகையே அவர் தீர்மானிக்க முடித்திருப்பது பேராச்சர்யம். இந்த ரசனைத் திறம் கு.ப.ராஜகோபாலன் ஒருவரிடத்தில் மட்டுமே காணப்படுகிறது.
“தமிழ் இலக்கியத்தில் இந்த சிறுகதை உருவப் பிரஞ்ஞையை மறவாது இன்னும் பத்து தலைமுறை மாறினாலும் மறவாத வண்ணம் தமது சிறுகதைகளினால் அழியாவண்ணம் நிலைபெறச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் கு ப ராஜகோபாலன்,” என்கிறார் கரிச்சான் குஞ்சு.
ஐந்தாவது பகுதியில் கு ப ராவின் வேறோட்டம் என்ற தலைப்பில் இப்படிக் குறிப்பிடுகிறார் : ‘கு.ப.ரா சுயமாக எழுதிய நாவல்கள் இரண்டு. இரண்டும் முற்றுப் பெறவில்லை. ஒன்று அச்சிடப்படவே இல்லை. காண்டேகர் எழுதிய ‘கருகிய மொட்டிற்கு’ எதிர்வினைபோல் ‘கருகாத மொட்டு’ என்ற அவரது நாவல் கையெழுத்துப் பிரதியிலேயே பதினொரு பக்கங்களோடு நின்று போயிற்று,ý என்ற கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார். இந்த விபரம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அதேபோல் வேரோட்டம் என்ற முற்றுபெறாத நாவலும் எழுதி உள்ளார். வாசகர் வட்டம் கொண்டு வந்த சிறிது வெளிச்சம் என்ற புத்தகத்தில் இந்த நாவல் உள்ளது.
ஆறாவது பகுதியில் நாடகங்கள் என்ற தலைப்பில் 8 நாடகங்கள் எழுதி உள்ளாதாக கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார்.
ஏழாவது பகுதியில் கு ப ராவின் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கு ப ரா 21 கவிதைகள் எழுதி உள்ளார். கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது, கு ப ரா இப்படிச் சொல்கிறார்:
“ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவம் உண்டு, அதற்கும் அணி உண்டு. அலங்காரம் உண்டு. தளை உண்டு. மோனை உண்டு. இவை எல்லாவற்றிற்கும் மேலாத அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம்.” என்கிறார்.
எட்டாவது பகுதியில் கண்ணன் என் கவி என்ற தலைப்பில் சிட்டியும், கு ப ராவும் எழுதிய புத்தகம். இது சிறிய நூல். இந்தப் புத்தகம் இரண்டாம் பதிப்பாக 44 ஆண்டுகளுக்குப் பிறகு பூங்கொடி பதிப்பாக வந்துள்ளது என்கிறார் கரிச்சான் குஞ்சு. இதைக் குறிப்பிடும் ஆண்டு 1990. இப்போது இந்தப் புத்தகம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
ஒன்பதாவது பகுதியில் எதிர்கால உலகம் என்ற தலைப்பில் பல அறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
பத்தாவதாக டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும் அலையன்ஸ் வெளியீடாக முதற் பதிப்பு வந்திருக்கிறது. மிகவும் விரிவான ஆய்வு நூல்.
கு ப ரா- சில நினைவுகள் 1, 2 என்று 11அம் அத்தியாயமும் 12 அத்தியாயமும் கரிச்சான் குஞ்சு கு ப ராவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதியிருக்கிறார். இந்தப் பகுதி சற்று உருக்கமாக எழுதப் பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் கரிச்சான் குஞ்சு அவரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இதில் தொண்டர் கடையில் கு ப ரா புத்தகக் கடை வைத்திருந்தார். பெரும்பாலும் வருபவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். புத்தகங்கள் வாங்க மாட்டார்கள்.
கு ப ரா வறுமையில்தான் வாடி உயிர் இழந்தார். வறுமையை நினைத்து அவர் என்றுமே புலம்பியதில்லை. இந்தப் புத்தகம் பற்றி இன்னும் சொல்லலாம். ஒவ்வொருவரும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இது. வானதி பதிப்பகம் மூலம் வந்துள்ளது. விலை ரூ.24தான.
கடந்த இரண்டு நாட்களாக நான் எந்தப் புத்தகத்தையும் படிக்க வில்லை. தினமும் புத்தகத்தைப் படித்துவிட்டு அதைப்பற்றிக் குறிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருந்த எனக்கு, புத்தகமே படிக்க முடியவில்லை. சனிக்கிழமை முழுவதும் என் பரபரப்பு அடங்கவில்லை. புத்தகத்தைத் தொட முடியவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். ஆனால் முழுவதும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. அன்று மாலை விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 50வது கூட்டம்.
அடுத்த நான் ஞாயிற்றுக்கிழமை. அன்றும் என்னால் புத்தகம் படிக்க முடியவில்லை. வீட்டில் விருந்தினர்கள் வருகை. அன்றும் என்னால் படிக்க முடியவில்லை. தெளிவான மனநிலையில்தான் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியும் என்று தோன்றியது.
ஒருவழியாக ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதும் படித்து முடித்தேன். இதோ நான்கு மணி வரை அந்தப் புத்தகத்தைப் பற்றி எதுவும் எழுத முடியவில்லை.
கூடவே நான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகங்களையும் படித்துக்கொண்டு வருகிறேன். எல்லாம் நத்தை வேகத்தில்.
இப்போது நான் எடுத்துக்கொண்டு பேசப்போகிற புத்தகம் üகடலும் கிழவனும்ý என்ற எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய புத்தகம். இந்தப் புத்தகத்திற்காக ஹெமிங்வேவிற்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் ச சு சு யோகியார்.
தன்னுடைய சின்னஞ்சிறு படகில் தன்னந்தியாகஅவ்வளை குடாவில் மீன் பிடிப்பவன் ஒரு கிழவன். எண்பத்து நான்கு நாட்களாக அவனுக்கு ஒரு மீன் கூடக் கிடைக்கவில்லை. முதல் 40 நாட்களாக அவன் கூட ஒரு பையன் இருந்தான். கிழவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி அந்தப் பையனை வேற ஒரு படகிற்கு அனுப்பி விட்டனர் அவன் பெற்றோர்கள்.
ஒவ்வொரு நாளும் கிழவன் மீன் கிடைக்காமல் சோர்வோடு வருவான். அதைப் பார்த்த பையன் அவனுக்கு உதவியாய் மீன் குத்தி ஈட்டியையும், கயிற்றுப் புரிகளையும், பாய் மரப் படுதாவையும் சுமந்து வருவான். ஒட்டுத் தையல்கள் போட்ட மரக்கோணிச் சாக்குகளைப் பார்க்கும்போது பாரிதாபமகத் தோற்றம் தரும் என்று வர்ணிக்கிறார் ஆசிரியர்.
பையனுக்குக் கிழவனிடம் அலாதியானதொரு பிரியம். ஏன் எனில் அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்ததே அந்தக் கிழவன்தான்.
உண்மையில் பெரிய மீன்களைப் பிடிக்கச் சக்தி இருக்கிறதா? என்று கிழவனைப் பார்த்து பையன் கேள்வி கேட்கிறான்.
அப்படித்தான் நினைக்கிறேன். மீன் பிடிப்பதில் எத்தனையோ தந்திரங்கள் உண்டு என்கிறான் கிழவன்.
கிழவனுக்கும் பையனுக்கு நடக்கும் உரையாடலைப் படிக்கும்போது கிழவனுடன் தன்னை விடப் பலமடங்கு வயதில் பெரியவனுடன் பேசுகிறோம் என்று பேசுவதில்லை. நீ நான் என்பதைப்போல் பேசுகிறான்.
ச து சு யோகியார் மொழிபெயர்க்கும்போது எனக்குப் பெரிய குறையாகத்தான் படுகிறது.
இந்த நாவலைப் படிக்கும்போது நானே கடலுக்குப் போனதுபோல் ஒர் உணர்வு ஏற்பட்டது.
85வது நாள் மீன் பிடிக்கப் போகிறான் கிழவன். அது ஒரு அதிர்ஷ்டமான நாள் என்கிறான். ஒரு லாட்டிரி சீட்டு வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்கிறான் கிழவன் பையனிடம். ஆனால் அது வாங்க இரண்டரை டாலர்கள் பணம் வேண்டும். ஆனால் இல்லை.
இந்தக் கதை ஒன்று கிழவன் தனக்குதானே பேசுகிறான். இன்னொன்று அவன் சிறுவனுடன் பேசுகிறான். உரையாடல் மூலமாகவே கதை வெகுவாக நகர்கிறது. ஒரு இடத்தில் கிழவன் இப்படிக் கூறுகிறான்.
“வயதே என் அலாரம் கடிகாரம். கிழவர்கள் ஏன் சீக்கிரம் எழுந்திருக்கிறார்கள் தெரியுமா? உள்ள கொஞ்ச நாட்களாவது நீண்ட நாட்களாக இருக்கட்டுமே என்றுதான்,” என்கிறான் கிழவன்.
கிழவன் பையனோடு பேசும்போது பேஸ் பால் விளையாட்டைப் பற்றி அடிக்கடி பையனிடம் பேசுகிறான். பையனுக்கு அந்த விளையாட்டின் மீது தீவிர காதல்.
பலவகைப்பட்ட மீன்களைப் பற்றிய குறிப்புகள் இப் புத்தகத்தில் வெளிப்படுத்தப் படுகின்றன. கிழவனுக்கு கடல் எப்போதுமே ஒரு கன்னிகைதான். காதலிப்பவர்களுக்கு அது பெரிய வரங்களைத் தரும், அல்லது மறுக்கும்.
கிழவன் தன்னந்தனியாக கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது தனக்குதானே பேசிக்கொண்டு செல்கிறான். சிலசமயம், கடற் பன்றி பெரிய கடற்பன்றி என்று கத்தவும் செய்கிறான்.
கிழவன் எதிர்பாராதவிதமாய் ஒரு பெரிய மின் மாட்டிக்கொண்டு விடுகிறது. அதை அசையாமல் கவனிக்கிறான் கிழவன். அது தப்ப வேண்டுமென்றால் படகையே கவிழ்த்துவிடும் என்று நினைக்கிறான் கிழவன். இந்தத் தருணத்தில் பையன் தன் அருகில் இல்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது.
அந்த மீன் ஒரு முறை சுண்டி இழுத்த இழுப்பில் கிழவன் குப்புற விழுந்துவிட்ôன். கண்ணுக்கடியில் ஒரு கீற்றுக் காயம். கன்னத்தில் ரத்தம் வழிந்தது. அது எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சரி, முடிவில்லாமல் இப்படகை இழுத்துக்கொண்டு போக முடியாது என்று நினைக்கிறான்.
வடக்கிலிருந்து ஒரு சிறிய பாடும் பறவை படகை நோக்கிப் பறந்து வந்தது. அது படகின் முன்புற விளிம்பில் உட்கார்ந்தது. அப்புறம் கிழவன் தலைக்கு மேல் சுற்றிச்சுற்றி வந்தது. பின் தூண்டிற் கயிற்றின் மேல தங்கியது.
கிழவன் அதைப் பார்த்து கேட்கிறான் : “உன் வயதென்ன? நீ முதல் முதலாகக் கடலின் மேல் பறப்பதா?”
கிழவன் எத்தனையோ பெரிய மீன்களைப் பார்த்திருக்கிறான். ஆயிரம் பவுண்டு எடையுள்ள மீன்களையும் கண்டிருக்கிறான். இரண்டைப் பிடித்துமிருக்கிறான். ஆனால் தனியாயல்ல. இப்போது தனியாக மாட்டிக்கொண்டு விட்டேன். அதுவும் கடல் நடுவில் கண்டும் கேட்டிமிராத மகாப் பெரிய மீனோடு தன்னந்தனியாகப் போராடுகிறான்.
கருணை நிறைந்த கன்னியம்மனை வணங்குகிறான். புனிதக் கன்னியே இந்த மீன் சாக வரம் கொடு – அதிசயமான மீனானாலும் இது சாககத்தான் வேண்டும் என்று வணங்குகிறான்.
“நானோ ஓய்ந்துபோன ஒரு கிழவன். இருந்தாலும், என் சகோதரனான இந்தப் பெரிய மீனைக் கொன்றுவிட்டேன். இனி சதி வேலையைச் செய்தாக வேண்டும்,” என்று கிழவன் சத்தமாகச் சொல்கிறான்.
இன்னொரு இடத்தில், கிழவன் கூறுகிறான் : இப்போதோ நானும் மீனும் சரிநிகர் சமானமாகப் பக்கம் பக்கமாய் நீந்திச் செல்கிறோம். வேண்டுமானால் அதுவே என்னைக் கரைக்கு அழைத்துச் செல்லட்டும். பாவம். அது எனக்கு யாதொரு கெடுதியும் செய்யவில்லை. எனக்கும் அதற்கும் வித்தியாசமென்ன – நான் அதைவிடத் தந்திரசாலி – அவ்வளவுதானே?
பெரிய மீனின் புண்ணிலிருந்து ரத்தம் வழிகிறது. அதை மோப்பம் பிடித்து சுறாக்கள் தாக்க வருகின்றன. அதையும் எதிர்கொள்கிறான் கிழவன்.
இன்னொரு இடத்தில் கிழவன் இப்படி கூறுகிறான்: üஅந்த மீனைக் கொன்றது பாவமாயிருக்கலாம். என் உணவுக்கும், பிறபலர் உணவுக்குமாகத்தான் அதைக் கொன்றேன் என்றாலும் அவ்வாறு கொன்றதென்னமோ பாவந்தான்.ý
தன்னிலை விளக்கமாக இவ்வாறும் கூறுகிறான் : நீ ஒரு வலைஞன். உன் தற்பெருமைக்காகவே அதைக் கொன்றாய். உயிரோடிருந்தது போதும், இறந்தபிறகும் கூட நீ அம்மீனை அன்புடன் பாராட்டினாய். அன்பு கொண்ட ஒன்றைக் கொல்வது பாவமல்ல, அல்லது லாபந்தானா? என்று.
அவன் கரைக்கு வரும்போது, அவன் எடுத்துக்கொண்டு வந்த பெரிய மீன் பாதியாகத்தான் இருக்கிறது. மற்ற சுரா மீன்கள் அதைக் கொத்தி தின்று விடுகிறது. திரும்பத் திரும்ப கொத்துகிறது.
இறுதியில் படகின் முன்புறம் தூக்கிய வாலோடு அம்மீன் கூடு வீதி விளக்கின் வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. அதன் வெளுத்த நீண்ட முதுகெலும்பையும். சரியா குத்தீட்டிக் கொண்டைத் தலையையும் இடையிலுள்ள வெறுமையும் கண்டான். என்கிறார்.
கிழவன் நீண்ட நேரம் தூங்கி எழுந்தபின், üஅவை என்னை முறியடித்துவிட்டன என்கிறான்.
கிழவன் திரும்பவும் அவன் குடிசையில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். பக்கத்தில் பையன் அவனைக் கண்காணித்தவாறே உட்கார்ந்திருந்தான். கிழவனது தூக்கம் சிங்ககங்களைப் பற்றி கனவுகளால் நிரம்பி இருந்தது என்று கதையை முடிக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே.
பெரிய மீனைப் பிடித்த கிழவனுக்கு இது வெற்றியா தோல்வியா என்று தெரியவில்லை. ஏன்என்றால் அந்தப் பெரிய மீனû மற்ற மீன்கள் தங்கள் உணவாக சாப்பிட்டு விடுகின்றன. வெறும் எலும்புக்கூடுதான் மிச்சமிருக்கிறது.
காவேரியிலிருந்து கங்கை வரை - மோட்டார் சைக்கிள் பயண அனுபவங்கள் என்ற தலைப்பில் பிரபு மையிலாடுதுறை அவர்கள் நேற்று (21.09.2019) பேசிய உரையை 3 பகுதிகளாக இங்கு தருகிறேன்.
இன்று நான் எடுத்துக்கொண்டு எழுதப்போகிற எழுத்தாளரைப் பற்றி பலர் பேசி விட்டார்கள். இதில் நான் என்ன புதுமையாக சொல்ல முடியுமென்று தோன்றவில்லை. ஆனால் என்னிடம் தெளிவாக ஒரு விஷயம் தோன்றிவிட்டது. நான் படிக்கிற புத்தகத்தைப் பற்றி எதாவது எழுதுவது என்பது.
சில புத்தகங்களை நான் முழுவதுமாகப் படிக்க முடியவில்லை. சில புத்தகங்களை üதம்ý பிடித்துப் படித்து விடுகிறேன். நான் அப்படிப் படித்தப் புத்தகம்தான் நகுலனின் ‘இவர்கள்.’ அதேபோல் இன்னொரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டுமென்று நினைத்தேன். நினைத்தபடியே படித்து முடித்து விட்டேன்.
அவ்வளவு எளிதாக என்னால் படித்து முடிக்கமுடியாத புத்தகங்கள் அதிகமாக உள்ளன. எல்லாம் ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும். எல்லாம் நாவல்கள். முழுவதும் படித்து முடித்தால்தான் எதையாவது அந்த நாவûப் பற்றி சொல்ல முடியும்.
தினமும் எதாவது ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு எதையாவது எழுத வேண்டுமென்ற கெட்ட வழக்கத்தை வைத்திருக்கிறேன். முதலில் 50 நாட்களுக்குத்தான் இது. இது எப்படிப் போகிறது என்று பார்க்க வேண்டும். அதன் பின் தொடர முடியுமா தொடர முடியாதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
நான் இன்று எடுத்துக்கொண்டு படித்த நாவல் அசோகமித்திரனின் தண்ணீர். நற்றிணை வெளியிட்டுள்ள இந்த நாவலில் ந முத்துசாமியின் தண்ணீர் என்ற நாவலைப் பற்றி எழுதியுள்ள நீண்ட கட்டுரை உள்ளது. அதில் ந முத்துசாமி üதண்ணீர்ý என்ற நாவல் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் குறியீட்டு நாவல் என்று குறிப்பிடுகிறார். ஏன் அப்படி சொல்கிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
வண்ணநிலவன் பின் அட்டையில் இப்படி கூறுகிறார் : üஅசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற அமர சிருஷ்டிகள் என்பேன்.ý என்கிறார்.
அசோகமித்திரனின் எல்லா எழுத்துக்களும் அவர் சூட்சுமமான எழுத்தாளர் என்பதை அறிந்து கொள்ளலாம். சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும், நாவல்கள் ஆகட்டும், குரலே உயர்த்தாமல் ஒருவித அழுத்தத்தை வாசிப்பவரிடம் உருவாக்கி விடுவார். அவருடைய எழுத்துக்களை வாசிப்பவர்கள் திரும்ப திரும்ப அவருடைய எழுத்துக்களையே யோசிக்க வைத்து விடுவார்.
யமுனா, சாயா என்ற இரண்டு பெண்மணிகள். இருவரும் சகோதரிகள். யமுனா வயதில் மூத்தவள். சாயா படித்தவள். திருமணம் ஆனவள். மிலிட்டரியில் அவள் கணவன் பணிபுரிகிறான். எப்போது சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வரப்போகிறான் என்ற ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறாள் சாயா. முரளி என்ற ஆண்குழந்தை. ஆனால் அவளுடன் வளரவில்லை. சென்னையில் ஒரு ஒண்டு குடுத்தனத்தில் வசிக்கிறார்கள். எவ்வளவு இடர்பாடுகள் இருக்குமோ அவ்வளவு இடர்பாடுகளுடன். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் 24 மணி நேரமும் தண்ணீர்தான்.
பாஸ்கர் ராவ் என்ற கயவன் யமுனாவிற்கு சினிமா ஆசையைக் காட்டி தன் இச்சைக்குப் பயன்படுத்துகிறான். அவன் ஒருமுறை ஜமுனாவை அழைத்துக்கொண்டு போக வருகிறான். சாயா அவனைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. யமுனாவின் பலவீனத்தைப் பார்த்து அவளுடன் சேர்ந்து இருக்க வேண்டாமென்று போய்விடுகிறாள்.
யமுனா பாஸ்கர் ராவ்வின் பலவீனத்திற்கு உடன்படுகிறாள். அங்கே ஒரு காட்சியை அவோகமித்திரன் விவரிக்கிறார் : ‘தினமும் அவனால் இழுத்துப் போகப்பட்டு யார் யாரோ பெயர் ஊர் பாஷை தெரியாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து குடித்துவிட்டு இரவெல்லாம் இருட்டிலும் விளக்கு வெளிச்சத்திலும் கிக்கிக்கி என்று வாய்விட்டு இளித்துச் சிரித்துக்கொண்டே காலம் கழிக்க வேண்டுமா? அவர்கள் சாராயத்தைத் தரும்போது அந்த தம்ளரைப் பிடுங்கிச் சாராயத்தை அவர்கள் மீதே ஏன் கொட்டி விட முடியவில்லை.’
பாஸ்கர் ராவ் படம் எடுப்பதற்கு பணம் போடுபவர்களை வரவழைக்கிறான். இரண்டு இரண்டு பேர்களாக வருவார்கள். அவர்கள் முன் யமுனா படும்பாடை இப்படி சொல்கிறார் :
‘இரு நெல்லூர் தடியர்கள் ஜமுனாவை துணியை அவிழ்த்து அந்த ஓட்டல் அறையில் ஓட வைத்து வேடிக்கை பார்த்தார்கள்.’ இந்தக் காட்சியைக் கற்பனை செய்ய முடியவில்லை. சாயா யமுனா விட்டுப் போய்விடுகிறாள். ஹாஸ்டலுக்கு. இந்த சம்பவத்திற்குப் பிறகு யமுனா தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள். ஆனால் அந்தத் தருணத்தில் வீட்டுக்காரி பார்த்துவிடுவாள். கத்து கத்தென்று கத்துவாள். வீட்டைவிட்டு காலி பண்ணச்சொல்லி ரகளை பண்ணுகிறாள்.
யமுனாவை ஆறுதல் படுத்த இரண்டு மூன்று வீடுகள் முன்னால் டீச்சர் ஒருவர் வசிக்கிறார். அவருடைய கதையை அசோகமித்திரன் விவரிக்கிறார். அது இன்னுமொரு சோகக் கதை. டீச்சர் யமுனாவிடம் தன் சோகத்தை விவரிக்கிறார்.
யமுனாவிடம் டீச்சர் கொல்கிறார் : üஎன்ன ஆயிடுத்து அப்படி உனக்கு? உன்னோட தொல்லையெல்லாம் உன் தலைக்குள்ளேதானிருக்கு. உன் கண்ணுக்குள்ளேயிருக்கு.ý
அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறாள். மாமா வீட்டில் இருக்கிறாள். மாமா அம்மா நிலமையைச் சொல்லி யமுனாவையும் சாயாவையும் வந்து பார்க்கச் சொல்கிறார். அம்மாவைப் பார்க்க இருவரும் கிளம்புகிறார்கள். சாயாவை திரும்பவும் பார்க்கும்போது தன்னுடன் வந்து இருக்கும்படி கெஞ்சுகிறாள் யமுனா. அம்மாவை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சாயாவின் வாரிசு முரளி அங்கேதான இருலுக்கிறான்.
அடுத்த முறை சாயா யமுனா இருக்கிற இடத்திற்கு பாஸ்கர் ராவ் வருகிறான். அவளுக்கு சினிமாவில் நடிப்பதற்கு சைட் ஹீரோயின் கொடுப்பதாக சொல்கிறான். யமனா வேண்டாமென்று சொல்லி விடுகிறாள். அதற்கு அவள் சொன்ன காரணம். அவனுடைய குழந்தையை சுமக்கிறாள். மூன்று மாதம் என்கிறாள். சாயாவுக்கு பெரிய அதிர்ச்ரி. பாஸ்கர் ராவிற்கு நம்ப முடியாமல் இருக்கிறது.
இந்த அதிர்ச்சியை யமுனா சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுகிறாள். üஇப்படி சகதியிலே மாட்டிண்டே அக்கா,ý என்கிறாள் சாயா.
‘எப்பவோ நடக்கப் போறதுக்கு ஏன் இப்பலேருந்தே கவலைப்பட்டுண்டு இருக்கணும்?’ என்கிறாள் யமுனா.
இந்த நாவல் முழுவதும் தண்ணீருக்காக இரவு பகலாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் படுகிறபாடை விவிரிக்கிறது.
இன்று மதியம் மேல் பழைய தினசரி தாள்களைப் பேப்பர் கடையில் போடுவதற்கு எடுத்துக்கொண்டு சென்றேன். ஒரு காலத்தில் பல பத்திரிகைகள் வாங்குவேன். இப்போதெல்லாம் வாங்குவதில்லை. ஆனாலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமைகள் தோறும் பத்திரிகைகள் வாங்குவேன். ஆனால் வீட்டில் சேர்ந்து கவலைப்படும்படி செய்துவிடும். அதை பேப்பர்கடையில் போடுவதைவிட வேற வழி இல்லை என்று தோன்றும். அசோக்நகரில் வசிக்கும் என் நண்பர் ராஜாமணி வீட்டிற்குச் சென்றால் வீட்டு வாசலில் கட்டுக்கட்டாய் பேப்பரை கட்டிவைத்திருப்பார். பல மாதங்களாக வாங்கிக் குவித்திருப்பார். பேப்பர் கடையில் போடுவதற்கே அவரக்கு மனசு வராது. நானும் அப்படித்தான். இதில் என்ன பிரச்சினை என்றால் பேப்பரை மேலோட்டமாகப் பார்க்கத்தான் தோன்றுமே தவிர ஆழமாகப் படிக்க முடியாது. நேரம் இருக்காது. அல்லது அப்புறம் படிக்கலாமென்று வைத்துவிடுவோம். இதுமாதிரி பட்டதால்தான் நான் தினமும் பேப்பர் வாங்குவதை உடனே நிறுத்திவிட்டேன். அப்படியும் வார முடிவில் வாங்கும் பேப்பர்கள் சேர்ந்து சேர்ந்து போய்விடுகின்றன. திரும்பவும் முழுவதும் படிக்காமல் வெறுமனே புரட்டிப்போடும் பத்திரிகைகள்தான். ஆனால் இதை பேப்பர் கடையில் போடுவதற்கும் மனது வருவதில்லை. வேறு வழியில்லாமல் என்னிடம் சேகரித்து வைத்திருந்த பேப்பர்களைப் பேப்பர் கடையில் போட்டுவிட்டேன். மனதிற்குள் கொஞ்சம் விசனமாக இருந்தது. குரியர் கடையில் நின்றிருந்தபோதுதான் நண்பர் திருவள்ளுவனரிடமிருந்து தொலைப்பேசி வந்தது. அவர்தான் இன்றைய தினமணி நாளிதழை வாங்கச் சொன்னார். உடனே போய் வாங்கி வந்தேன். தினமணி 85 என்ற பெயரில் தினமணி நாளிதழ் இன்று மட்டும்60 பக்கங்களுக்கு மேல் வந்துள்ளது. பத்து ரூபாய்தான். பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொக்கிஷமாக எனக்குத் தோன்றுகிறது. தினமணி அளவில் 16 பக்கங்களுக்குக் குறையால் ஒவ்வொன்றும் வந்துள்ளது. என் நண்பர்களுக்கு எல்லாம் போன் மூலம் இதைச் சொல்கிறேன். இதழல்ல, இது இயக்கம் என்று தினமணி ஆசிரியர் கி வைத்தியநாதன் எழுதியிருக்கிறார்.
எந்தச் சமயத்தில் எந்தப் புத்தகம் படிக்க வேண்டுமென்ற குழப்பம் என்னுள் இருந்துகொண்டே இருக்கும். ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் ஒரு புத்தகத்தை என்னால் படித்து முடிக்க முடியாது. ஆனாலும் படித்தவரை அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்வது தீர்மானம் செய்துள்ளேன்.
இன்று நான் படித்த புத்தகம் ஜென் சதை ஜென் எலும்புகள் என்ற புத்தகம். பால் ரெப்ஸ், நியோஜென் சென்ஸகி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். தமிழில் சேஷையா ரவி செய்திருக்கிறார். மீள்பார்வை ஆர் சிவக்குமார். அடையாளம் வெளியீடாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.
ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம். ஜென் என்பது ஓர் அனுபவம். கிட்டத்தட்ட 101 கதைகள் மொழிபெயர்த்துள்ளார்கள். இதைத் தவிர வாசலற்ற வாசல் என்ற தலைப்பில் சில தத்துவங்கள். பின் மையப்படுத்துதல் என்ற தலைப்பில் இறுதியில் ஜென் என்பது என்ன என்ற ஒரு பக்கத்தில் விளக்கம். இத்தனையும் இந்தப் புத்தகத்தில் பதிவாகி உள்ளது.
ஜென் என்பது என்ன? என்ற கேள்வியை எழுப்பி பதில் கொடுக்கிறார்கள். விருப்பப்பட்டால் முயலுங்கள். ஆனால் ஜென் தானாகவே வருகிறது. உண்மையான ஜென், தினசரி வாழ்வில் தன்னைக் காட்டிக்கொள்கிறது. அது செயலாக உள்ள பிரக்ஞை. வரம்புக்குட்பட்ட எந்த விழிப்புணர்வையும் விடக் கூடுதலாக அது நம் எல்லையற்ற இயல்பை அடையும் எல்லாக் கதவுகளையும் திறக்கிறது.
இனாயத் கான் ஒரு இந்துக் கதையைச் சொல்கிறார். ஒரு மீன், ராணி மீனிடம் போய்க் கேட்டது. üநான் கடலைப் பற்றி எப்போதும் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அதென்ன கடல்? அது எங்கே இருக்கிறது?ý
ராணி மீன் விளக்கியது : 'நீ வாழ்வதும், அசைவதும், உன் உயர் இருப்பதும் கடலில்தான். கடல் உனக்குள்ளும் இருக்கிறது. நீ இல்லாமலும் இருக்கிறது. நீ கடலால் ஆனவள். நீ கடலில்தான் முடிவாய். கடல் உன் சொந்த உயிரைப் போல உன்னைச் சூழ்ந்துள்ளது.' ஏதோ புரிகிற மாதிரி இருக்கிறதா? அதுதான் ஜென்.
இதில் பெரும்பாலும் உள்ள ஜென் கதைகள் அரைப்பக்கம், முக்கால் பக்கம், முழுப்பக்கம், ஏன் கால் பக்கம் கூட. ஒவ்வொன்றையும் நிதானமாக வாசிக்க வேண்டும். ஏன் படித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டு யோசிக்க வேண்டும். அப்போதுதான் ஜென் புரிகிற மாதிரி தோன்றும். ஜென் அனுபவத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
நான் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கவில்லை. படித்து முடித்தபின்னும் முடித்துவிட்டேன் என்றும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு ஆழமாகக் கருத்துக்களைக் கொண்டது. புரிகிற மாதிரி இருந்தாலும், புரியாத மாதிரி தோன்றும். நன்றாக யோசிக்க வைக்கும்.
இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பால் ரெப்ஸ் ஜென் தத்துவங்களால் தூண்டப்பட்ட பல்வேறு அ-புனைவுகளையும், கவிதைகளையும் இயற்றியிருக்கிறார். இவற்றுள் üஜென் டெலக்ராம்ஸ்ý (ஜென் தந்திகள்) நூலும் ஒன்று. இவர் இந்தியா, நார்வே, ஜப்பான் என்று பல நாடுகளில் வாழ்ந்த அமெரிக்கர். வாழ்நாள் முழுவதும் ஞானத் தேடல்களில் ஆழ்ந்திருப்பவர். வயதானாலும் மகிழ்ச்சியைப் பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்.
நியோஜென் சென்ஸகி சர்வதேச அளவில் புகழ்பெற்ற புத்த ஞானி. தனக்கென்று ஒரு வீடு இல்லாத அவர், ஒரு மடாலயத்திருந்து மற்றொன்றுக்கு மாறியபடி தேசமெங்கும் அலைந்து கல்வி பயின்றுவந்தார். அவருடைய பயணம் காலப்போக்கில் அவரை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து சேர்த்தது.
இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு வாசகம். பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்ற üஜென் சதை, ஜென் எலும்புகள்ý எண்ணற்ற மக்களின் வாழ்வுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கிறது.
உண்மைதான். இந்தப் புத்தகம் படிக்கும்போது அந்த எண்ணம் உண்டாகாமல் இல்லை. ஒரு ஜென் கதையோடு முடிப்போம்.
1. ஒரு கோப்பைத் தேநீர்
மெய்ஜி காலத்தில் (1868-1912) ஜென்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவரை ஜப்பானிய குரு நான்-இன் வரவேற்றார்.
நான்-இன் விருந்தினரின் கோப்பையில் தேநீர் ஊற்றினார். அது நிரம்பிவிட்டது. இருந்தும் அவர் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருந்தார்.
கோப்பை நிரம்பி வழிவதைக் கவனித்த பேராசிரியரால் அதற்கும் மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 'நிரம்பிவிட்டது. இதற்கும் மேல் கொள்ளாது,' என்றார்.
'இந்தக் கோப்பை மாதிரிதான்ý என்ற நான்-இன், üநீங்கள் உங்களை சொந்த கருத்துகளையும் எண்ணங்களையும் கொண்டு நிரப்பி வைத்திருக்கிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் கோப்பையைக் காலி செய்யாவிட்டால் நான் எப்படி உங்களுக்கு ஜென்னைக் காட்ட முடியும்?' என்றார்.
அரைப் பக்கம்தானே என்று நாம் படித்து விடலாம். ஆனால் யோசிக்க யோசிக்க நாம் எங்கோ போய்விடுவோம்.