அஞ்ச லட்டைக் கதைகள் 16

அழகியசிங்கர்

இது என் 16வது கதை.  கதையைப் படிக்க  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 
தூ….

எதிரில் கனகா வந்து கொண்டிருந்தாள்.  காலில் செருப்பில்லாமல்.  எப்போதும் இந்தத் தெருவில் நடக்கும்போது துப்பிக்கொண்டே நடப்பாள்.  
ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்து, ‘துப்பாதே.  காலில் செருப்புப் போட்டுக்கொண்டு நட,’, என்பேன்.
அவள் சரி சரி என்று தலை ஆட்டுவாள்.  திரும்பவும் அதே மாதிரிதான்.  அவர்கள் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்களைக் கூட்டிக்கொண்டு வருவாள்.
நாய்களும் எங்கள் வீட்டுக வாசல் முன் மூத்திரம் போகும்.  நான் ‘ஹே ஹே’ என்று கத்துவேன்.  கனகாவைப் பார்த்து, ‘ நாய்களைக் கொண்டு வராதே,’  என்று கத்துவேன். 
உண்மையில் நான் சொல்வதைக் கேட்டு தெருவில் துப்புவதை நிறுத்திவிட்டாள்.  கொஞ்சம் திருந்தி விட்டாளென்று நினைத்துக் கொண்டேன்.  ஆனால் செருப்பு மட்டும் போடுவதில்லை.
அவளிடம் செருப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை இல்லாவிட்டால் வாங்கிக் கொடுத்துவிடலாம்.  
எங்கள் தெரு புழுதி நிறைந்த தெரு.  அத்துடன் அசுத்தமான தெரு.  எல்லாம் தூசி மயமாக இருக்கும்.  கனகா மட்டும் கவலைப்படுவதில்லை.  அவளுக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணும்.  அவர்களும் கல்லூரிகளுக்குப் போகும்போது மட்டும்  நவ நாகரீக உடைகளை அணிந்து கொள்வார்கள்.  பொதுவாகத் தெருவில் அம்மா மாதிரி செருப்பு மாட்டிக் கொண்டு நடக்க மாட்டார்கள்.  கனகாவின் கணவன் இருக்கிற இடம் தெரியாது.  அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து போவதைப் பார்த்ததே இல்லை.  
இப்போதெல்லாம் வாசல் அருகில் நான் நிற்கிறேனா என்று கனகா பார்ப்பாள்.  நான் நிற்பதை அறிந்தால் அவள் வீட்டைவிட்டுத் தாண்டி வரமாட்டாள்.

இன்று தந்தையார் தினமா..

அழகியசிங்கர்

காலையில் ஒரு வாழ்த்துச் செய்தி வந்தது.  தந்தையார் தின வாழ்த்துக்கள் என்று.  தந்தையார் தினமா என்று தெரியவில்லை.  இன்று அவரைப் பற்றி நினைத்துக்கொள்வோமே என்று தோன்றியது.
என் அப்பாவைப் பற்றி உயர்வாகச் சொல்வதற்குப் பல விஷயங்கள் உண்டு.  அவருடைய பிள்ளைகளை அவர் அடித்ததில்லை.  கோபித்துக் கொண்டது இல்லை.
எனக்கு ஆச்சரியமாக இருக்கும் அவர் ஏன் கோபப்படுவதில்லை என்று.  மேலும் அவர் யாருடன் பழகும்போது கோபப்பட்டதே இல்லை.  
அவருக்குப் போதை வஸ்துக்கள் பழக்கமில்லை. சிகரெட் பழக்கம்மட்டுமல்ல வெற்றிலை பாக்கு கூட பயன்படுத்த மாட்டார்.  அவருக்குச் சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் எல்லாம் கிடையாது.   அவருடைய பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ளவில்லை.  90 வயதுக்கு மேல் ஆனாலும் தரையில் அமர்ந்து கொண்டு காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பார்.   அவர் நான் பயமுறுத்துகிற மாதிரி பெரிய பெரிய புத்தகங்களைப் படிக்க மாட்டார்.  பின்னால்தான் என் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.   ஜானகிராமன் முழு சிறுகதைத் தொகுதியைப் படித்து விட்டார். அசோகமித்திரன் சிறுகதைகளையும் படித்து விட்டார்.  ஆனால் அவருக்கு புதுமைப்பித்தன் ஓடவில்லை.
என் குறுநாவல்களைப் பாராட்டிக் கொண்டிருந்தவர் அவரை வைத்தே உறவினர்கள் என்ற குறுநாவல் எழுதியிருந்தேன்.  அதைப் படித்த பிறகு என்னுடைய எழுத்தையும் படிக்கப் பிடிக்காமல் போய்விட்டது.
என்ன எழுதறே? என்பார்.  நான் சிரித்துக்கொண்டே போய் விடுவேன்.
அவருக்கு ஹோமியோபதி மருந்தில் விருப்பம் அதிகம்.  இந்த கொரோனா காலத்தில் அவர் இருந்திருந்தால் ஹோமியோபதி மருந்தைச் சாப்பிடும்படி வற்புறுத்துவார்.
அவருக்கு 95 வயது வரை எந்த நோயும் கிடையாது. இதய நோய் எதுவும் வந்ததில்லை.  தள்ளாமைதான் காரணம்.  2017ஆம் ஆண்ட புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன் இறந்து விட்டார்.  அந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டு.  “

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 147

அழகியசிங்கர்  

காணாமல் போன ஆறு

சுரேஷ் பரதன்

ஆதியில் அந்த ஆறு

 
ஆதியில் அந்த ஆறு


ஓர்  ஆறாகவே இருந்தது.


அதன் கரையில்

படகுத்துறையும் இருந்தது.


படகோட்டி ஒருவனும்

இருந்தான்


படகோட்டிகாரோட்டியான சில நாட்களில்

படகுத்துறை ஆற்றோடு

போயிற்று


படகுத்துறை போன பின்புதான்

ஆறும் காணாமலேயே

போய்விட்டது.

நன்றி : ஊர் நடுவே ஒரு வன தேவதை – சுரேஷ் பரதன் – வெளியீடு : நான்காவது கோணம் வெளியீடு – பக் : 112 – விலை : ரூ.90 

சூம் மூலமாக நான்காவது கூட்டம்

அழகியசிங்கர்

விருட்சம்  நான்காவது  சூம்  கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை 19.06.2020 அன்று  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 
கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்களை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறேன். இதுவரை கவிதை வாசித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
29.05.2020 அன்று கவிதை வசித்தவர்கள் : 1. தேவேந்திர பூபதி  2. லக்ஷ்மி மணிவண்ணன் 3. யவனிகா ஸ்ரீராம்  4. திருக்கூனன் கண்டராதித்தன். 
05.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி   4. பானுமதி  5. உமா பாலு 6. வசந்த தீபன்  7 ஆர்.கே  8 . வேணுவேட்ராயன் 9. சுரேஷ் ராஜகோபாலன்
12.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. இராய செல்லப்பா 2. கால சுப்ரமணியம் 3. ப்ரியம் 4. திருநாவுக்கரசு 5. புதிய மாதவி 6. தாமரைச் செல்வன்

azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: virutcham poetry meeting 4 Time: Jun 19, 2020 07:00 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us04web.zoom.us/j/73802493495?pwd=TDBLay9DNEpZRUFnM1h0d3VJcWRUdz09 Meeting ID: 738 0249 3495 Password: poem

வெட்டுக்கிளிகள்


அழகியசிங்கர்

வெட்டுக்கிளிகளே“

வெட்டுக்கிளிகளே

உங்களை யாரு கூப்பிட்டார்கள்?

எங்கள் இடத்தில்தான்

நீங்கள் இருக்கிறீர்கள்

நாங்கள் ஏன் போக வேண்டும்?
(16.6.2020)

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்..


அழகியசிங்கர்

அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகனும் மோகினியும் வணக்கம் தெரிவிக்கிறார்கள்.  காணொளி மூலம் ஒன்றாக சந்திக்கிறார்கள்.
அழகியசிங்கர் : எப்படி உள்ளீர்கள்?
ஜெகன் : நன்றாக உள்ளோம்.  ஆனால் வீட்டிலேயே இருக்கிறோம்.
மோகினி : நீங்கள் சொன்ன பா ராகவனின் யதியைப் படித்து விட்டேன்.
ஜெகன் : நான் இன்னும் கொஞ்சம் பக்கங்கள் படிக்கப் பாக்கி இருக்கின்றன.
அழகியசிங்கர் : உங்களுக்கு என்ன தோன்றுகிறது அந்த நாவலைக் குறித்து 
மோகினி : பக்கங்கள் அதிகம்.  இன்னும் குறைந்த பக்கங்களில் அவர் எழுதியிருக்கலாம்.
ஜெகன் : ஒரு எழுத்தாளரை இத்தனைப் பக்கங்கள்தான் எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்தவோ சொல்லவோ முடியாது.
அழகியசிங்கர் : அவ்வளவு பக்கங்களை உடைய ஒரு நாவலை ஒரு வாசகர் வாசிக்க வேண்டும்.  இன்றைய வாசகர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களாக என்று தெரியாது.
மோகினி: அவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் இவர் நாவலை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படாமஙூல்லை.
ஜெகன் : என் நண்பர் ஒருவர் தால்ஸ்தாயின் ‘வார் அன்ட் பீஸ்’  என்ற நாவலை ஒரு வாரத்தில் படித்து விட்டார். 
மோகினி : அதையே க.நா.சு இரண்டு மூன்று முறைகள் படித்ததாக சொல்லியிருக்கிறார்.
அழகியசிங்கர் : ராகவன் நாவலைப் படித்துக்கொண்டு வரும்போது இது தொடர்பாக எனக்கு இன்னும் இரண்டு மூன்று நாவல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒன்று க.நா.சுவின் அவதூதர், இரண்டு : அசோகமித்திரனின் மானசரோவர், மூன்று ஹெர்மன் ஹெஸ் எழுதிய  ‘சித்தார்த்தா’.  இதைத் தவிர இன்னொரு புத்தகத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.  அது ‘த அக்டிவ் சைட் ஆப் இன்பினிடி’.  கார்லஸ் காஸ்டினடா எழுதிய புத்தகம். 
ஜெகன் : இந்த நாவலைப்பற்றி சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
அழகியசிங்கர் : இந்த நாவலின் கதையை இரண்டே வரிகளில் குறிப்பிடலாம்.  ஆனால் ராகவன்  எழுதிய 925 பக்கங்களையும் படிக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சார்ந்த நால்வர் ஞான வழியைத் தேட ஒவ்வொருவரும் வீட்டிற்குத் தெரியாமல் வெளியேறி விடுகிறார்கள்.  நால்வரும் ஒவ்வொரு வழியைத் தேடி செல்கிறார்கள்..அம்மா மரணம்போது சந்திக்கிறார்கள்.  இதுதான் கதை.
மோகினி : இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
ஜெகன் : முதல் பையன் பெயர். விஜயகுமார்.  இரண்டாவது வினய் குமார்.  மூன்றாவது விமல் குமார்.  நான்காவது வினோத் குமார்.
அழகியசிங்கர் : கதை கடைசி வரை விமல் குமார் மூலமாகத்தான் நடைபெறுகிறது.  மடிகேரியில் தங்கியிருக்கும் விமல் குமார் ஒரு ஸ்தாபனமாகி விடுகிறான்.  அவனைச் சுற்றிலும் ஒருசில சீடர்கள்.  கேசவன் மாமா விமல் குமாரைப் பார்க்க வருகிறார்.  அவனுடைய அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் ஒரு முறை வந்து பார்க்க வேண்டுமென்று கூப்பிடுகிறார்.  
ஜெகன் : கேசவ மாமா அவன் அம்மா கேட்கச் சொன்னதைக்கேட்கிறார்.  “உண்மையைச் சொல்லு.  நீ கடவுளைப் பாத்தியா? அப்படி ஊர் உலகமெல்லாம் திரிஞ்சு என்னத்த கத்துண்டே? ஒன்ன பாத்ததும் இதத்தான் கேக்க சொன்ன உங்கம்மா.”
மோகினி : விமல் குமாருக்குச் சொகுசான வாழ்க்கை அமைந்து விடுகிறது. அந்த வாழ்க்கையை அவன் விரும்பவில்லை.  உதற விரும்புகிறான். ‘அகங்காரமே ஆடை.  அதைக் களைவதற்குப் பிக்ஷை எடுத்து உண்பதே சரி,’ என்கிறான்.  
அழகியசிங்கர் : இத்தனைப் பக்கங்களிலும் பளிச் பளிச்சென்று வரிகள்.  இந்த நாவலை அவ்வளவு சுலபமாக விவரிக்க முடியாது.  நான் பல நாட்களாக இதைப் பற்றி என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மோகினி :  மூத்த அண்ணன் விஜயகுமார் முதல்முதலாக வீட்டைவிட்டுப் போவதை விமலிடம் தெரிவிக்கிறான்.   அவன் சொல்கிறான் : ‘ ‘வாழ்க்கை ரொம்பச் சின்னதுடா விமல்.  பாடம் மட்டும் படிச்சி மார்க் வாங்கி வீணாப் போயிடக்கூடாது.’
ஜெகன் :  வீட்டைவிட்டு முதல் அண்ணா போய்விடுவான் என்று விமலுக்குத் தெரிந்தாலும் யாரிடமும் அவன் சொல்லவில்லை.  அவன் சொல்லிக்கொள்ளாமல் போனது அந்தக் குடும்பத்தில் ஒரு அடி.  அவன் அப்பா கலங்கிப் போய்விட்டார்.  அம்மாவிற்கும் பெரிய அதிர்ச்சி. இந்த நாவல் சுழற்றி சுழற்றி நான்கு சகோதரர்களிடம் நடக்கிறது.  
மோகினி : இரண்டாவது அண்ணன் வினயும்  வீட்டை விட்டுப் போய்விடுகிறான்.  அவனை ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி வீட்டு வரவேற்பறையில் விமல் பார்க்கிறான். விமல் அவனைப் பார்க்கிறான்.    ‘காலம் அவன் முகத்தை ஒடுங்கவைத்திருந்தது.  கன்னங்கள் இரண்டு டொக்காகியிருந்தன.  பிதுங்கி விழுந்துவிடுவது போலக் கண்கள் திரண்டு வெளியே தெரிய, முகம் அடர்ந்த தாடியில் பாதி அதற்குள்ளாகவே வெளுத்திருந்தது.  அவன் தலை வாருவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். வினய்யின் 45 வயதில் விமல் பார்க்கிறான் 
அழகியசிங்கர் :  இந்த நாவலைப் பற்றிய உரையாடலை அவ்வளவு சீக்கிரமாக முடித்து விட முடியாது.  இன்னும் பேசுவோம்.                                                                                                                                                                                   (தொடரும்)        

என் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ராஜேஷ் சுப்பிரமணியன்….

 அழகியசிங்கர்      

  Shifting Shadows என்ற பெயரில் 92 கவிதைகளை ஆங்கிலத்தில் என் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ராஜேஷ் சுப்பிரமணியன்.... சுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளார்.  அவர் மொழி பெயர்த்தது சிறப்பாக இருக்கிறது.  அதில் ஒரு கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

Book

The book lay in front of me.
Have not opened and read it.

The cover was excellent.
The printed pages looked wonderful.
The book caused much ecstasy
In imagination.

The one who had given me the book asked
“Have you read the book in full?”.
“Not yet”.
The book still remained closed.

Numerous books are being published, every day.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 146

அழகியசிங்கர்

யானை என்ன யானை

கிருஷ்ணன் நம்பி

யானை என்ன யானை?
யானை கொம்பன் யானை!
யானை மீது யாரோ?
யானை மீது ராஜா!
யானை என்ன ஆச்சு?
யானை செத்துப் போச்சு!
ராஜா என்ன வானார்?
நாட்டு மன்னர் ஆனார்!
நாட்டு மன்னர் எங்கே?
நாட்டு மன்னர் நாமே!
நாமும் அவரும் ஒன்றோ ?
நம்முள் ஒருவர் ராஜா!

நன்றி : கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (முழுத்தொகுப்பு) – தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன் – காலச்சுவடு பதிப்பகம் – பக்கம் : 480 – விலை ரூ.350 – முதல் பதிப்பு : நவம்பர் 2009

அஞ்சலட்டைக் கதைகள் 15

அழகியசிங்கர்

இது என் 15வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.   

கீரை
கிளம்புவதற்குமுன் பாரதி செல்லம்மாவைப் பார்த்து, ‘சகுந்தலா எங்கே?’ என்று கேட்டார்.  
‘அவளுக்கு உடம்பு சரியில்லை.  படுத்துத் தூங்கறா,’ என்றாள் செல்லம்மா.  
பாரதி ‘இந்தியா’ பத்திரிகை அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டார்.  அவர் போவதற்கு முன், ‘வரும்போது மறக்காமல் கீரை வாங்கிக்கொண்டு வாருங்கள்,’ என்றாள் செல்லம்மா.
ஏதோ ஞாபகமாய், ‘சரி’ என்று தலை ஆட்டிவிட்டுக் கிளம்பினார் பாரதி.
இந்தியா பத்திரிகை அலுவலகம் வந்தவுடன் ஒரு மேசை மீது உட்கார்ந்துகொண்டு, நமஸ்தே வாயோ..த்வ்மேவ ப்ரத்யஷம்,,ப்ரஹமாஸி என்றார் உரத்தக் குரலில்.  
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.  இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் பாரதியார் சுதந்திரமானவர்.  அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. 
பக்கத்திலிருந்த குறிஞ்சி அய்யங்கார், என்ன பாரதி எதற்காக திடீரென்று ஸ்லோகம் சொல்ஙூ வணங்கினீர்கள்? என்று கேட்டார்
அங்கே பார், என்றார் பாரதி.  எதையோ சுட்டிக்  காட்டினார்.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.   ‘அங்கே என்ன ஒன்றுமில்லையே?’  என்றார் குறிஞ்சி அய்யங்கார்.  
‘அங்கே பந்தலைப் பார்.  பந்தலில் யாரையுமே காணோமே? ஒரு சின்ன கயிறுதானே ஆடிக் கொண்டிருக்கிறது.’
‘ஆமாம்.  அவர்தான் அந்தக் கயிற்றை ஆட்டிவிட்டுப் போனார்.’
‘காற்றிலே கயிறு தானாக ஆடுகிறது.  அவ்வளவுதான்.’
‘அது சரி பாரதி.  காற்று அடித்தால் கயிறு ஆடாமல் இருக்குமா? ‘
அந்தக் கயிற்றை ஆட்டிவிட்ட சக்திதான் இறைவன்.  இறைவன்தான் காற்று.  நமக்கு ஜீவிக்கப் பிராணனைக் கொடுக்கிறது, என்று குறிப்பிட்டார்.
எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்டுப் பேசாமலிருந்தனர்.
அன்று வீட்டிற்குப் போனவுடன் செல்லம்மா சொன்னதை  மார்க்கெட்டில் வாங்காமல் வந்து விட்டோமே என்று தோன்றியது பாரதிக்கு.

சூமில் நான் நடத்தும் கவிதைக் கூட்டம்

அழகியசிங்கர்

கடந்த 3 வாரங்களாக நான் சூமில் கவிதைக் கூட்டம் நடத்தி வருகிறேன்.  முதல் வாரம் 4 கவிதை வாசிப்பவர்களை அழைத்து கவிதை வாசிக்கக் கூப்பிட்டேன்.  அந்தக் கூட்டம் சரியாக நடக்கவில்லை. நானும் சூம் கூட்டம் நடத்துவதற்குப் புதுசு.  கொஞ்சம் சரியாக நடக்காமல் போய்விட்டது. 


இரண்டாவது கூட்டத்தில் கவிதை வாசிப்பவர்கள் எண்ணிக்கையைக் கூட்டினேன். 

இந்தமுறை பத்து  கவிதை வாசிப்பவர்கள்.  ஆனால் கூட்டம் நடத்தும்போது சிலர் கூட்டத்தில் முன்னதாக வந்திருந்து காத்திருந்ததால் நேரம் குறுகலாகப் போய்விட்டது. 


வெயிட்டிங் வந்திருந்தவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு 7 மணிக்குத்தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.  மேலும் 10 கவிதை வாசிப்பவர்களைக் கூப்பிட்டதால், முதலில் கவிதை வாசித்தவர் கவிதை வாசிக்கும்போது சீக்கிரம் அவர் கவிதை வாசித்து முடிக்க வேண்டுமென்று தோன்றியது.  பத்து கவிதை வாசிப்பவர்களுக்கு நேரம் சரியாக இருக்குமா  என்று பரபரப்பாக இருந்தது.
அதனால் வரும் வெள்ளிக்கிழமை (12.06.2020) கவிதை வாசிப்பவர்கள் எண்ணிக்கை 5 பேர்களாக வைத்திருக்க விரும்புகிறேன்.  ஏற்கனவே வாசித்தவர்களைத் தவிர்த்து புதியதாக வாசிப்பவர்களைக் கொண்டு வர விரும்புகிறேன். 


ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொரு கவிதையாக  வாசிக்க வைக்கலாமென்றும் தோன்றுகிறது.  
கவிதை வாசிக்கும் நிகழ்ச்சியில் நான் கண்டு பிடித்த விஷயம்.  கவிதை வாசிப்பதைக் கேட்கச் சிறப்பாகவே இருக்கிறது.  கவிதையை மௌனமாக வாசிக்கும்போதுதான் பெரும்பாலான கவிதைகள் நமக்கு உடன்பட மறுக்கிறது.


இன்னொன்றும் கண்டுபிடித்தேன் எல்லோரும் கவிதைகளைச் சிறப்பாகவே வாசிக்கிறார்கள்.