விரிசல்

ஒரு சாயங்கால வேளையில்
கண்ணாடியோ பீங்கானோ
விழுந்து நொறுங்கும் சப்தம்
பொதுச்சுவருக்கு அப்பால்
பக்கத்து வீட்டில்
மையங் கொண்டிருந்தது
கதவருகில் சென்றபோது
கசிந்து கொண்டிருந்தன
கடுமையான வார்த்தைகள்
ஒவ்வொரு துண்டும்
பொறுக்கப்படும் ஓசை
ஒன்றில் அவன் முத்தம்
ஒன்றில் அவள் வெட்கம்
சிலவற்றில் அவர்கள் சத்தியம்
ஒரு மிகப்பெரிய துண்டில்
இப்போது அழுது கொண்டிருக்கும்
குழந்தையின் சிரிப்பு
பதட்டமாக நானும் நானும்
பேசித் தீர்க்கிறோம்
மறுநாள் காலையில்
கலங்காத கண்களுடனும்
வழக்கமான புன்சிரிப்புடனும்
அவளைக் கண்ட எனக்கு
நிம்மதியுடன் சற்று ஏமாற்றமும்
வார இறுதியில்
கைகோர்த்துச் சென்றவர்களின்
சிரிப்பின் விரிசல்
மாயப்பசையில் இணைந்திருந்தது
கோபத்தில் தட்டை
நகர்த்த மட்டும் அறியும்
எனக்குள் இருக்கும் மிருகம்
இன்னும் கொஞ்சம் வளர்கிறது

அவளா இது?

லூசியா. அதுதான் அவள் பெயர். பாத்திரங்களை முறையாக அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் வேறு ஏதோ நினைவில் உழன்று கொண்டிருந்தாள். ‘இன்னும் சிறிது நேரத்தில் எட்வர்ட் வந்துவிடுவார்’, என்ற எண்ணம் எழுந்ததும், இரவு உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினாள். பத்தே நிமிடத்தில் மிருதுவான சப்பாத்தியும், மணமணக்கும் குருமாவும் தயார் பண்ணிவிட்டாள். அவற்றை சூடாகவே இருக்கும்படி வைத்துவிட்டு, சோபாவில் சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள்.
அவள், இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் முன் எட்வர்ட், குழந்தைகள், சமையலறை மட்டுமே நிழலாடின. சலிப்பாக உணர்ந்தாள் முதன் முறையாக. ‘என் வாழ்க்கை இவ்வளவுதானா?’ என்ற நினைப்பு அவளை என்னவோ செய்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
எட்வர்ட் தன் முதல் மனைவி இறந்த பிறகு, மிகவும் சிரமப்பட்டான். அவனால் அலுவலகத்திற்கும் சென்று, ஐந்து மற்றும் மூன்றே வயதான தன் பெண் குழந்தைகளையும் கவனிக்க இயலவில்லை. அந்த நேரத்தில்தான் லூசியாவைச் சந்தித்தான். அவளின் சந்திப்பால் எட்வர்ட் சிறிது ஆறுதல் அடைந்தான். அவன் தன் விருப்பத்தை அன்றே அவளிடம் கூறிவிட்டான், உடன் தன் நிலைமையையும் எடுத்துரைத்தான்.
ஆனால் லூசியாவோ, “உங்கள் குழந்தைகள் விருப்பமும் எனக்கு மிக முக்கியம்.” என்று கூறிவிட்டாள். மறுநாளே சந்தித்தான், குழந்தைகளுடன். அவள் அன்பாகப் பேசிய சில நிமிஷங்களிலேயே அவளிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் வயது அப்படி.
வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே எட்வர்ட் மனதிலும், குழந்தைகள் மனதிலும் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் லூசியா. வீட்டை அவ்வப்போது மாற்றங்கள் செய்வது, புதிய வகை உணவுகள் தயார் செய்வது என முழுமையாகத் தன்னை குடும்பத்திற்காக அர்ப்பணித்து விட்டாள். முக்கியமாக குழந்தைகள் கவனிப்பில் அவளை மிஞ்ச அவளேதான். குழந்தைகள் தன்னை ‘லூசியா’ என்றே அழைக்க பழக்கப்படுத்தியிருந்தாள். இதனால் ‘குழந்தைகளுக்கும் தனக்குமுள்ள இடைவெளி குறையும்’ என்பது அவள் எண்ணம். தினமும் கதை கூறுவாள். அடிக்க மாட்டாள். ஆனால் கண்டிப்புடன் இருப்பாள். மொத்தத்தில் தங்கள் அம்மாவையே மறக்கச் செய்து விட்டாள். அவர்கள் வளர்ந்து தன் வழியே சென்றபின், எட்வர்ட் மட்டுமே அவளின் உலகமானான்.
‘டிங் டாங்’. அழைப்பு மணி ஓசை அவளை இக்காலத்திற்கு மீட்டது. சுயநினைவு வந்தவளாய், உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்தது எட்வர்ட்தான் வந்தான்.
அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே கேட்டாள், “எட்வர்ட், நான் உங்களோடு சிறிது நேரம் பேசலாமா?”
“இது என்ன புதுக் கேள்வி! எப்போதும் நீதான் பேசுவாய். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்றைக்கு என்ன ஆச்சு?”
அவன் ஹாஸ்யத்தை அவள் ரசிக்கவில்லை.
“இல்லை, என்னைப் பற்றி பேச வேண்டும்.”
அவன், அவளை விநோதமாகப் பார்த்தான். ‘இன்று இவளுக்கு என்ன ஆச்சு’ என்ற விநோதப் பார்வை.
“சரி, சொல்லு.” என்றான் எட்வர்ட், மனதில் ஆயிரம் கேள்விகளுடன்.
“எட்வர்ட், நான் என் வாழ்நாளை வீணடித்து விட்டதாக உணர்கிறேன்.”
அவளை ஆழமாகப் பார்த்தான். இன்று லூசியா, அவளாகவே இல்லை என்பது போலப் பார்த்தான்.
“எனக்கு நீங்கள், குழந்தைகள், சமையலறைத் தவிர வேறு ஒன்றுமே என் வாழ்கையில் இல்லை. இத்தனை நாள் இப்படி, எப்படி இருந்தேன் என எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களோடு 20 வருடம் வாழ்ந்து விட்டேன். ஆனால் அதனால் நான் சாதித்தது என்ன?………” அவள் பேசிக் கொண்டே போனாள்.
அவள் பேச்சு அவன் காதில் விழவில்லை. லூசியா எப்படி இப்படி மாறினாள் என அதிசயித்தான். இத்தனை நாள் தன்னைப் பற்றி சிந்திக்காமல் இப்போதாவது சிந்தித்தாளே என்று மகிழ்ந்தான். ஆனால் அடுத்த நொடி சற்றே நிதானித்து விழித்துக் கொண்டான்.
அவர்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் ஞாபகமாக ஞாபகத்திற்கு வந்தது.
“உன் பெயர் என்ன?”
“லூசியா, உங்கள் பெயர்?”
“எட்வர்ட். உன் வயது?”
“ஆறு.”
‘அப்படியானால் இவள் வயது இப்போது இருபத்தி ஆறு. எப்படி மறந்தேன் இதை. அவளின் அன்பின் பிடியில் மறந்து விட்டேன் போலும். இனியும் தாமதிக்கக் கூடாது. ஏற்கெனவே ஒரு வருடம் தாமதமாகிவிட்டது. இது ஆபத்தின் அறிகுறி.’
சட்டென்று தன் லேசர் பேனாவை கீழே போட்டான். அதை எடுப்பது போல் கீழே குனிந்தான்.
அவளின் கெண்டைக் காலில் மச்சம் போன்ற ஒன்று இருந்தது. சட்டென அதை அழுத்தினான்.
“எட்வர்ட், என்ன செய்கிறாய்?” பதட்டமானாள். அவன் பிடியை விடவில்லை.
“விடு என்….” பேச்சிழந்தாள்.
அதன் பிறகும் ஒரு நிமிடம் கழித்தே தன் பிடியை விட்டான். ‘அப்பாடா’ என்றிருந்தது அவனுக்கு.
அவன் அவளை, இல்லை, அதைத் தூக்கி ஓரமாக நிறுத்திவிட்டு அவளை வாங்கிய இடத்திற்கு போன் போட்டு ‘Switch Off’ செய்து விட்டதை கூறினான்.
சோபாவில் கண்மூடி சாய்ந்தான். ‘லூசியாவை பிரியணும்’ என்ற எண்ணம் அவனை வதைத்தது. ‘ஆனாலும் லூசியா இல்லாவிட்டால் என்ன, வேறு ஒரு ஃபெல்சியாவோ, ஆசியாவோ வரப் போகுது. செய்யும் வேலைகள் ஒன்றுதானே’, என்று சமாதானமானான்.
ஆனாலும் ஒரு ரோபோ எப்படி இருபத்தைந்து வருடங்களில் சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கிறது என்பது அவனுக்கு மட்டுமல்ல, பலருக்கும் இன்னும் அது புரியாத புதிராகவே இருக்கிறது, இந்த 24ஆம் நூற்றாண்டிலும் கூட.


விளம்பரங்களில்

விளம்பரங்களுக்கிடையில்
வந்து போகின்றன
விளம்பரதாரர் வழங்கும்
நிகழ்ச்சிகள்

நல்லது பயக்குமெனில்
நல்லது கறையென்கின்றன

இன்னுமதிக வெளுப்புக்கு
இவையிவை என்ற
அறிவிப்புகளோடு

இலவசங்களுக்கான
சீசன்களை
எப்போதும்
நினைவுறுத்திக்கொண்டு

விளம்பரங்களில்
வகுபட்டு
பின்னமாகிக் கொண்டிருக்கிறது
பொழுதுகள்

எதையாவது சொல்லட்டுமா 10

ராஜன் தோட்டம் என்ற இடத்தில்தான் காலையில் நடைபயிற்சி செய்வேன். ஏராளமானவர்கள் வருவார்கள். விளையாட்டில் பெயர் எடுக்க வேண்டுமென்கிற யுவதிகளும், யுவர்களும் அதிகமாகக் கலந்துகொள்வார்கள். என்னைப் போலுள்ளவர்கள் நடந்துகொண்டே இருப்பார்கள். மகாலிங்கம் என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அரசாங்கத்தில் பணிபுரிபவர். இரண்டு புதல்வர்கள். இரண்டு பேர்களையும் கடன் வாங்கிப் படிக்க வைத்துவிட்டார். பெரிய புதல்வன் ஐஐடியில் படித்திருக்கிறான். ஆனால் அவர் புதல்வர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஐஐடியில் படித்த பெரிய புதல்வனுக்கு சொற்ப சம்பளத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு தயக்கம். மகாலிங்கத்திற்கு என்னைப் போல் சர்க்கரை. அவர் கிரவுண்டில் நடக்கிறதைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். அப்படி நடப்பார். நான் ஒருமுறை சுற்றி வருவதற்குள் அவர் இன்னொரு முறையும் சுற்றியபடி என்னைப் பிடித்து விடுவார்.
அப்படி நடந்து கொண்டிருந்தவர்தான் மெதுவாக நடக்கத் தொடங்கினார் அன்று. காலில் ஏதோ அடிப்பட்டுவிட்டதாம். அன்று அவர் சுரத்தாக இல்லை. கடன்காரர்கள் தொந்தரவு செய்கிறார்களாம்.வங்கியில் கடன் வாங்காமல் தனியாரிடம் வாங்கிவிட்டார். பையன் தலை தூக்கினால் எல்லாம் பொடி பொடியாகிவிடும். அதுதான் தாமதம் ஆகிறது. மகாலிங்கம் என்னுடன் பேசிக்கொண்டே வரும்போது சோகமான பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே வந்தார்.
”என்னயாயிற்று?” என்று கேட்டேன். அப்போதுதான் கடன்காரர்களின் நச்சரிப்பைப் பற்றி குறிப்பிட்டார். ”முதலில் இந்தச் சோகமான பாட்டுக்களையெல்லாம் பாடாதீர்கள்,” என்றேன்.
இந்தச் சம்பவத்தை ஏன் சொல்கிறேனென்றால், சினிமா பாட்டுகள் மனிதன் மனதுள் புகுந்துகொண்டு பிறாண்டும் ரகளையைப் பற்றிதான். நான் அலுவலகம் கிளம்பும்போது பஸ் பாடாமல் இருக்காது.. எரிச்சலாக இருக்கும். சத்தமாகக் கேட்டுக்கொண்டே போக வேண்டும். எனக்கும் சினிமாப் பாடல்கள் பல நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும். பொதுவாக சோகமான நிகழ்ச்சிகளை அதிகமாக ஞாபகப்படுத்தும். குர்பானி என்ற ஹிந்திப் படத்தின் பாடல்களைக் கேட்டால் அது என் திருமணத்தை ஞாபகப்படுத்தும். பாக்கியராஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த பாரதிராஜா படத்தின் பாடல்களைக் கேட்கும்போது என் நண்பன் இறந்த ஞாபகம் வரும். ஒரு சினிமா பாடல் ஒளிமயமான எதிர்காலம் பற்றி குரலெழுப்பிக் கொண்டிருக்கும். உண்மையில் சினிமாப் பாடல்களுடன் நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்வதைப் போல் ஒரு முட்டாள்தனத்தை குறித்து என்ன சொல்வது?
நம் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் நடந்தே தீரும். அதற்கும் இந்தச் சினிமாப் பாடல்களுடன் முடிச்சுப் போடக்கூடாது. சினிமாப் பாடல்களைக் கேட்டு அதன் மூலம் தீர்வு காணக்கூடாது. சினிமாப் பாடல்களுடன் நம் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கட்டத்துடன் முடிச்சுப் போடக் கூடாது.
நான் ஒவ்வொரு நாளும் வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சினிமாப் பாடல்களைக் கேட்காமல் இருப்பதில்லை. ஆனால் எதிர்காலம் என்னவென்று எனக்குத் தெரியாது.

ரசனை

நீர்ப்பறவை நீந்தாத வரையிலும்
மீன்கள் துள்ளிக் குதிக்காத வரையிலும்
மழைத்திரவம் சிந்தாத வரையிலும்
சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடாத வரையிலும்
காற்று பலமாக வீசாத வரையிலும்
சலனமற்று கிடக்கின்ற குளத்துநீரில்
தங்கள் பிம்பத்தை ரசித்துக் கொண்டிருக்கும்
கரையோர பனைமரங்கள்

சுமை

எத்தனையோ கனமான பொருட்களைஇந்தக் கைகள்தூக்கிச் சென்றிருக்கின்றனவிழாக்கள் போதும்சடங்குகள் போதும்இப்போது வெறுமனே கட்டிக் கொண்டிருந்தாலும்கைகள் சுமையாக இருக்கின்றன

இன்று வரை

நிச்சயமாய்
தெரியுமென்றாலும்
நீண்டு
கொண்டுதான் இருக்கிறது
இன்று வரை.

ஏதாவதொரு
கையசைப்போ
எதிர்கொண்டழைக்கும்
முகமொன்றுக்கோ
ஆன ஏக்கங்கள்.

O

எதையாவது சொல்லட்டுமா / 9

நான் சீகாழி மயிலாடுதுறை என்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். சனிக்கிழமை சென்னையை நோக்கி வந்துவிடுகிறேன். நான் சொல்ல வந்தது வேறு. பொதுக் கழிப்பிடம் பற்றி நீங்கள் எதாவது நினைப்பதுண்டா? பஸ்ஸில் பயணிக்கும்போது ரொம்ப உபத்திரவமானது இந்தக் கழிவறைகள். சனி மதியம் நான் சீகாழி பஸ் ஏறினால், எனக்குப் பெரும்பாலும் பாண்டிச்சேரியில்தான் இந்தக் கழிவறைகளை நோக்கி ஓட வேண்டியிருக்கும்.இரண்டு ரூபாய் காசு வாங்கிக்கொண்டு கழிவறை வாசலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பான். பை சகிதமாய் வரும் நான் அவன் காலடியில் அதைக் கிடத்திவிட்டு உள்ளே நுழைவேன். ஏண்டா நுழைகிறோம் என்றுதான் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். கழிவறையில் கொட்டுகிற தண்ணீர் மூத்திரம் மாதிரி இருக்கும். இப்படி ஒரு அவதியா என்று நினைக்காமல் இருக்க மாட்டேன். இந்தக் கழிவறையில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
ஆண்களை விடுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் அவதிப்பட வேண்டியிருக்கும். நான் இருக்கும் சீகாழி பிராஞ்சு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் உள்ளே மட்டும் வந்து விடாதீர்கள். உள்ளே சாப்பிட ஓட்டை ஒடிசலான நாற்காலிகள். டைனிங் டேபிள் கிடையாது. இதைத் தவிர சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பாம்பு எதாவது வந்துவிடுமா என்ற பயமும் எனக்குண்டு. அங்கும் கழிவறை மோசம். தாழ்பாள் கிடையாது. ஒரு பக்கம் கையால் கதவைப் பிடித்துக்கொண்டுதான் யூரின் போகமுடியும். நான் சென்னையில் 18 மாதங்கள் பணிபுரிந்த ஹஸ்தினாபுரம் கிளையில் கழிவறை அடைத்துக்கொள்ளும். பீக் சம்மரில் தண்ணீர் வராது. அவஸ்தைதான்.
நான் சென்னையைக் கடந்தபிறகு என் நினைவெல்லாம் கழிவறைகளைப் பற்றிதான். கும்பகோணம் வட்டார அலுவலகத்திலும் கழிவறைப் பார்க்க சகிக்காது. ஏண்டா உள்ளே நுழைகிறோம் என்று இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். 406 சதுர அடிகள் என்று பெயர். அந்தப் பெயரில் ஒரு புத்தகமும் போட்டிருக்கிறேன். எலிகண்ட் ப்ளாட் பிரமோட்டர்கள் 406 சதுர அடியில் ஒரு சின்ன அடுக்ககம் கட்டித்தந்தார்கள். உண்மையில் நான் ஏமாந்துவிட்டேன். அந்த இடம் கட்டித் தரும்போது இப்படித்தான் அமையப்போகிறது என்று சற்றும் எண்ணவில்லை. மாம்பலத்தில் ஏற்கன஧அவர்கள் கட்டித் தந்த இடத்தைப் பார்த்த பிறகுதான் இந்த இடத்தைப் புக் செய்தேன். படுபாவி கட்டி முடித்தப் பிறகுதான் தெரிந்தது. கழிவறை மோசமாக இருக்கிறதென்பது. அதைப் பார்த்த என் அலுவகத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணி, ‘டாய் டாயலட்’ மாதிரி இருக்கிறது என்றாள். எனக்கு அவமானமாக இருந்தது.
எதாவது ஒன்று சரியில்லை என்றால், அதைப் பற்றியே நான் நினைத்துக்கொண்டிருந்தால் எனக்குக் கனவு வரும். ஒரு தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் அந்த இடத்தில் உள்ள சமையலறை சன்னலைப் பிடித்துக்கொண்டிருப்பது போல் ஒரு கனவு. வாடகைக்கு அந்த இடத்தை விடும்போது யாரும் குண்டாக வாடகைக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். ஏன்என்றால் டாயலட்டைப் பயன்படுத்தப் படாதபாடு படுவார்கள்.
அந்த அடுக்ககம் கட்டி முடித்துத் தரும்போது, நடிகர் திலகம் சிவாஜி ஞாபகம்தான் வரும். ரொம்ப குண்டாக மாறி விட்டிருந்தார் அந்தச் சமயத்தில். அவர் என் அடுக்ககத்தில் வந்திருந்து வீட்டு டாயலட்டைப் பயன்படுத்தினால், உட்கார்ந்தால் அவரால் எழுந்திருக்கவே முடியாது. தண்ணீரையும் பயன்படுத்த முடியாது.
நான் அந்த அடுக்ககத்தை யார் பேச்சையும் கேட்காமல் வாங்கியிருந்ததால், என் மனைவி என்னுடன் 1 மாதம் மேல் பேசக்கூட இல்லை. அவ்வளவு கோபம். பிரமிள் சாந்தோமில் மீனவர்கள் குப்பத்தில் பொது கழிவறை பக்கத்தில் ஒரு அறையில் குடியிருந்தார். மழை காலங்களில் கழிவறையிலிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். மனிதர் பட்டப்பாடை நான் அறிவேன்.

எதையாவது சொல்லட்டுமா / 8

சென்னையிலிருந்து ஒரு வழியாக 2ஆம் தேதி நவம்பர் கும்பகோணம் வந்துவிட்டேன். வழக்கம்போல் மயிலாடுதுறையில் தங்கி கும்பகோணம் சென்று கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னைக்குச் சென்றுவிடுவேன். பின் ஞாயிறு கிளம்பி வந்துவிடுவேன். மயிலாடுதுறையில் முன்பு தங்கியிருந்த வீட்டிலேயே தங்கி தினமும் கும்பகோணம். எனக்கு எந்த இடம் என்று தெரிய சில நாட்கள் ஓடிவிட்டன. பட்டுக்கோட்டையா? புதுப்பித்தன் கதையின் தலைப்பான அதிராமப்பட்டிணமா? அல்லது மன்னார்குடியா என்று திகைத்துக் கொண்டிருந்தேன். வேலையை விட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றேன். ஒருவரிடம் வேலையை விடலாமா என்று யோசிக்கிறேன் என்றேன். பின் இன்னொன்றும் சொன்னேன். வேலையை விட்டால் மாதம் ஆயிரம் கூட சம்பாதிக்க முடியாது என்று. அதைக் கேட்டு அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் இனிமேல் சம்பாதிக்க வேண்டாம் என்று சும்மா இருந்தால், சும்மா இருக்க விட மாட்டார்கள் வீட்டில். என் அப்பா தொண தொண என்பார். மாமியார் தொண தொண என்பார். மனைவி ஏளனமாய்ப் பார்ப்பாள். விற்காத புத்தகங்கள் எல்லா இடங்களிலும் என்னைப் பார்த்து கண் சிமிட்டும்.
உத்யோகமின்றி பல நண்பர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். புத்தகம் போடுவதையும், பத்திரிகை நடத்துவதையும் நிறுத்தும்படி ஆகிவிடும். ஏதோ உத்தியோகத்தில் இருப்பதால் இந்த மட்டும் ஆண்டொன்றில் வாங்கும் Festival Advance ம், Medical Bill ம் விற்காதப் புத்தகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சி சு செல்லப்பாவின் ராமையாவின் சிறுகதைப்பாணி புத்தகம் கடையில் போட்டால் கிலோ என்ன விலைக்கு எடுத்துக்கொள்வான் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நல்லவேளை அலுவலகம் என்னை தற்காலிகமாக காப்பாற்றி விட்டது. நானே எதிர்பார்க்காத சீர்காழி என்ற ஊருக்கு என்னை அனுப்பி விட்டது. முன்பு பந்தநல்லூர் மாதிரி இப்போது மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வந்தும் போயும் கொண்டிருக்கிறேன். சனிக்க்஢ழமைகளில் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்.
2 வாரங்களாக டூவீலரைக் கொண்டுவர படாதபாடு பட்டேன். விடுமுறை அதிகமாக எடுத்துவிட்டதால், லீவு என்றால் மூச்…மடி கணனி வந்துவிட்டதால் எல்லோருடனும் தினமும் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை விட படு மோசமான நிலையிலும் உத்தியோகத்தைப் பிடித்துக்கொண்டு தலை விதியே என்று இருக்கும் பல நண்பர்களின் சோகக் கதை இன்னும் மோசமாகத்தான் இருக்கும். அவர்களும் என்னுடன் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். என்ன சரியா?
(இன்னும் வரும்)

நீ விட்டுச் சென்ற மழை

நீ விட்டுச் சென்ற மழை
எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்
அதனூடு
இருப்பின் மகிழ்வுகளை எங்கோ
தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு
தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது
தனிமை
செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி
எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ