எதையாவது சொல்லட்டுமா……….99



அழகியசிங்கர் 
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன், நான் என் அப்பாவின் மேட் இன் இங்கிலாந்த் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஒரு குதிரை மேல் ஏறி ஓட்டுவதுபோல் மேற்கு மாம்பலத்திலிருந்து மயிலாப்பூர் வரை ஒரு நண்பரின் வீட்டிற்கு வாரம் ஒரு முறை தவறாமல் போவேன்.  பின் நானும் அந்த நண்பரும் கடற்கரைக்குச் செல்வோம்.  அங்கு வேறு சில நண்பர்கள் வந்திருப்பார்கள்.  நாங்கள் இலக்கியத்தைப் பற்றி பேசுவோம்.  இதெல்லாம் ஒரு காலத்தில் ஆத்மாநாம் நண்பர்களைச் சந்தித்த இடத்தில்தான் சந்திப்போம்.  
நான் என் நண்பரைப் பார்த்தபோது, ஆத்மாநாம் உயிரோடு இல்லை.  ஆனால் மற்ற நண்பர்களுடன் சந்திப்பு நிகழாமல் இல்லை.  எங்கள் கூட்டத்திற்கு ஞானக்கூத்தன்தான் எப்போதும் தலைமை.  என்றாவது கூட்டத்திற்கு அவர் வராவிட்டால் கூட்டம் களை இழந்ததுபோல் இருக்கும். 
நான் முதலில் சைக்கிளிலும் பின் லாம்பி ஸ்கூட்டரிலும் வாரத்தில் ஒருநாள் மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்கு பறந்து பறந்து வருவேன்.  பின் திருவல்லிக்கேணிக்கும் அடிக்கடி போவேன்.  பஸ்ஸில் போக எனக்குப் பிடிக்காது.  சைக்கிள், ஸ்கூட்டர்தான்.  
என் நண்பருக்கு நான் இப்படி வருவது ஆச்சரியமாக இருக்கும்.  அவரால் அதைக் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால் அந்த நண்பர் ஒருமுறை கூட மயிலாப்பூரிலிருந்து மேற்கு மாம்பலம் வர முயற்சி செய்ததில்லை.  ஏன் என்று காரணம் புரியாது?
இப்படி பல ஆண்டுகள் சந்திப்பது என்பது, கொஞ்சம் கொஞ்சமாக நின்றே விட்டது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.  கூட்ட நெரிசல். இப்போது லாம்பி ஸ்கூட்டரை விட பிரமாதமான ஹ÷ரோ ஹோன்டாவும், காரும் இருக்கின்றன. ஆனால் நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை.  சந்திக்கவும் ஆர்வம் இருப்பதில்லை.  பரஸ்பரம் பேசுவதற்குக் கூட ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  
ஏன் போனில் கூட பேச முடியாமல் போய்விட்டது.  ஒருவிதத்தில் பேசுவதெல்லாம் பேசி தீர்த்தாகி விட்டது போல் தோன்றுகிறது.  ஆனால் சில தினங்களுக்கு முன், பாகுபலி என்ற சினிமா படத்தை தேவி தியேட்டரில் 4மணிக்குப் பார்த்துவிட்டு, அண்ணாசாலையிலிருந்து, மாம்பலம் வந்து கொண்டிருந்தேன்.  பெரிய ஹோன்டா வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன்.  பின்னால் என் உறவினர் பையன்.  அவன் என்னை விட வெயிட்.  அதனால் கூட்ட நெரிசலில் வரும்போது, என் கை சுவாதீனமாக செயல் படவில்லை.  அதனால்,  வண்டியை குலுக்கி குலுக்கி ஓட்டியபடி சமாளித்தபடி வந்தேன்.   வீட்டிற்கு வந்தவுடன் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  மாம்பலத்திலேயே இருக்கும் நான் தேவி தியேட்டரில் படம் பார்த்தே ரொம்ப வருஷம் ஆகிவிட்டது.
நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போய் ஒருவரை சந்திப்பதே முடியாத விஷயமாக இப்போது மாறிவிட்டது.  என் நண்பர் தாம்பரத்தில் புதியதாக வ்ளாட் வாங்கியிருக்கிறார், புதிய இடத்திற்கு அவரைப் பார்க்கக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்.  என்னால் போகவே முடியவில்லை.  கூட்டம்.  நெரிசல்.  போக்குவரத்து பயம்தான். 
அதேபோல் என்னைப் பார்க்க வருகிற நண்பர்களும் தெளிவாக இருக்கிறார்கள்.  அவர்களை என் வீட்டிற்குக் கூப்பிட்டால் வரவே பயப்படுகிறார்கள்.   ஒரு எழுத்தாள நண்பரின் சிறுகதைத் தொகுதியை நான் புத்தகமாக பல ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு வந்துள்ளேன். அற்புதமான சிறுகதைத் தொகுதி அது.  ஆனால் அப் புத்தகம் என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்,  அப்படியே என்னிடம் இருந்துகொண்டு இருக்கிறது.   ஒவ்வாரு புத்தகக் கண்காட்சியின்போது ஒரு சில பிரதிகள்தான் விற்கும்.   ஐந்நூறு ரூபாய்க்குப் புத்தகம் விற்கும் காலத்தில், அப் புத்தகம் விலை வெறும் ஐம்பது ரூபாய்தான்.  ஆனால் மக்களுக்கு எது நல்ல இலக்கியம் என்று தெரிவதில்லை.  அப்புத்தகத்தை நண்பர் அவ்வப்போது 25 பிரதிகள் 50 பிரதிகள் கேட்டு என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு  இருப்பார்.  அவர் புத்தகம் கேட்கும்போது ஒவ்வொருமுறை பக்கத்தில் இருக்கும் அவருடைய உறவினர் வீட்டில் கொடுத்து அவரிடம் சேர்க்கச் செய்வேன்.  
இந்த முறை அவர் கேட்டபோது, அவரை வீட்டிற்கு வரச் சொன்னேன். அதுவும் அந்த நண்பர் அடுத்தநாள் கே கே நகரில் உள்ள அவர் உறவினர் வீட்டிற்கு வரப்போவதை அறிந்து அவரை அழைத்தேன்.  மேலும் நானும் ரிட்டையர்ட் ஆகி வீட்டில் இருப்பதால் அவரை வரச் சொன்னேன்.  அவர் கடுமையாக என் வீட்டிற்கு வர முடியாது என்று சொன்னது எனக்கு சற்று வருத்தமாக இருந்தது.  
அதன்பின் எனக்கு ஒன்று தோன்றியது.   நண்பர்கள் யாரையும் அவர்கள் வீட்டிற்குப் போய்ப் பார்க்கக் கூடாது என்றும், அதேபோல் நண்பர்கள் யாரையும் வீட்டிற்குக் கூப்பிடக் கூடாது என்றும், அவர்களைப் பார்க்க வேண்டுமென்றால், பொதுவான இடத்தில் அதாவது பூங்கா, ரயில் நிலையம், ஓட்டல், தெரு, அல்லது எதாவது இலக்கியக் கூட்டத்தில் சந்திப்பது என்றும் தோன்றியது.  அறுபது வயதில் நண்பர்கள் என்று யாரும் கிடையாது என்று புதிய தத்துவம் வேறு தோன்றியது.  நான் சொல்வது சரியா?

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

 

அழகியசிங்கர்

30 06.2014 அன்று நான் பார்த்த படம் சான்று ( PROOF).  ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற திறமையான படததை எடுத்து இயக்குநர்தான் இந்தப் படத்தையும் எடுத்துள்ளார்.  ஆஸ்கர் வெற்றிப் பெற்ற சிறந்த நடிக்கைக்கான விருதுபெற்ற கெயிநத் பால்ரோ Gwyneth Paltrow (Best Actress, Shakespeare in Love, 1998) , அந்தோனி ஹாப்கின்ஸ் (சிறந்த நடிகர் விருதுபெற்றவர்), ஹோப் டேவிஸ் போன்ற வர்கள் சிறப்பாக நடித்தப் படம் ‘சான்று’ என்ற இப் படம்.  27 வயது நிரம்பிய காத்ரின் என்ற  பெண்  நடுசாமத்தில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் குடிப்பதற்கு மது கொடுக்கிறார் அவள் அப்பா.  சிறிது நேரம் அவர்கள் இருவரும் புத்தி பிறழ்ச்சியைப் பற்றி பேசிக்கொணள்டிருக்கிறார்கள். அந்தப் பேச்சு முடியும்போது ஒரு விஷயம் தெரிகிறது.  அவள் அப்பா ராபர்ட் போனவாரம் இறந்து விட்டார்.  அவரை நாளை அடக்கம் செய்யப் போகிறரர்கள்.  காத்ரின் அவளுடைய அப்பாவைப் பற்றி நினைவுகளுடனும், அவளுடைய எதிர்காலம் பற்றிய நிச்சயம் இன்மையுடனும் வாழ்கிறாள்.   அவள் இப்படிபட்ட கனவுடன் விழித்துக் கொள்ளும்போதுதான் அவளுக்குத் தெரிகிறது   அப்பாவுடைய மாணவனான ஹால் அவருடைய அறையில் உள்ள புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய போராட்டம்தான் இப்படம்.  ராபர்ட் என்கிற அவளுடைய அப்பாவை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறாள்   அவளுடைய அப்பா நிச்சயமில்லாமல் இருக்கிறார்.  அவர் கணக்கில் மிக சிறந்த நிபணர்.  வயதோகத்தால் அவரிடமிருந்து அவருடைய நிபுனத்துவம் குறைந்துகொண்டே போகிறது.  அவர் போகும்போது ஒரு ரசகியத்தை விட்டுச் செல்கிறார்.  அந்த ரகசியம் அவளை துன்புறுத்துகிறது.  அது அவளுடைய புனிதத்தன்மையைப் பாதிக்கிறது. 


    அப்பாவின் தூண்டுதலால் புதிய கணக்கு முறையை அவள் கண்டுபிடித்து ஒரு நோட்டில் எழுதுகிறாள்.  அதை அவளைச் சுற்றி இருக்கிற அவளுடைய சகோதரி, அவளுடைய காதலன் நம்ப மறுக்கிறார்கள்.   அந்த நோட்புக்கில் எழுதியிருப்பவை அவளுடைய கையெழுத்தில்லை என்று சொல்கிறார்கள்.  அதை நிரூபிக்க அவள் தடுமாறுகிறாள்.  அவளுடைய பிரச்சினை நிகழ் காலத்தை அவளால் நம்ப முடியாமல் இருப்பது.  அவளுடைய தந்தையைப் பற்றிய நினைவு அவளைத் துரத்துகிறது.  அவள் தடுமாறுகிறாள்.

    அவள் அப்பா வைத்துவிட்டுப் போன வீடு, பொருட்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு அவள் சகோதரியுடன் நியூயார்க் பயணமாகத் தயாராகிறாள்.  உண்மையில் அவளுக்கு அவள் சகோதரியுடன் போவதற்கு விருப்பமில்லை.
 
    அவள் காதலன் அந்த நோட்டில் எழுதிய கணக்கு சமன் அவர் அப்பா கண்டுபிடித்தது அல்ல என்பதை கண்டு பிடித்துவிடுகிறான்.  காத்ரினை நோக்கி அவன் அதைச் சொல்வதற்கு ஓடி வருகிறான்.  முதல் சந்திப்பின் போது தவறுதலாக சொன்னதால், காத்ரீன் மனம் உடைந்து போய் நிற்கிறாள்.  அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பலவீனமான காத்ரீனை நியூயார்க் அழைத்துக்கொண்டு போக அவளுடைய  சகோதரி தயாராகிறாள்.  வேறு வழியில்ûலாமல் அவளுடன் பயணம் ஆகிறாள்.  அவள் தந்தையை பார்த்துக்கொண்டிருந்த அருமையான வீட்டை விட்டுப் போகிறாள்.  அவள் காதலன் ஓடிவந்து காத்ரீன்தான் அந்த கணக்குச் சமனை எழுதியிருப்பதாக வாதாடுகிறான்.  அவள் நம்ப மறுக்கிறாள்.  அந்த நோட்டில் உள்ள கையெழுத்து அவள் அப்பாவின் கையெழுத்து மாதிரி இருந்தாலும், பல ஆண்டுகளாக அப்பா அவளுடன் இருப்பதால், அதே மாதிரி கையெழுத்து வர வாய்ப்பு உள்ளது என்கிறான்.  அந்த இடத்தைவிட்டு போகக் கூடாது என்று அடம் பிடிக்கிறான்.

    அவள் எதையும் கேட்க தயார் இல்லாத மனநிலையில் இருக்கிறாள்.  விமானத்தில் ஏறுவதற்கு முன் அவளும், அவள் சகோதரியும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  அவளுக்கு காப்பி வாங்கிக்கொண்டு வர அவள் சகோதரி போகிறாள்.  திரும்பவும் அவள் மனநிலை புரண்டு போகிறது.  சகோதரியுடன் போகக் கூடாது என்று நினைக்கிறாள்.  

    சகோதரி காப்பியை நீட்ட, காப்பி சாப்பிடக் கூடாது, என் உடலுக்குக் கெடுதல் என்று கூறியபடி அந்த இடத்தைவிட்டு ஓடி விடுகிறாள்.  திரும்பவும் பழைய இடத்திற்கு வருகிறாள்.  அவள் காதலன் அவளைப் பார்க்க வருகிறான்.  அந்தக் கணக்கு சமனை திரும்பவும் உறுதிப் படுத்தலாம் என்று உற்சாகம் ஊட்டுகிறான்.  

    ஒரு திறமையாக எடுக்கப்பட்ட படம். கணக்கை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வெளிவநதிருக்கின்றன.  அதில் இந்தப் படம் எல்லாப் படங்களை விட சிறந்த படம்.

இரவல் புத்தகங்கள்


ஜெ.பாஸ்கரன் 

நீங்கள் ஒரு புத்தகப்
பிரியரா ? ஆம் என்றால் மேலே படியுங்கள் – இல்லை என்றால் மேலே சென்று விடுங்கள் ( அடுத்த
போஸ்டுக்கு என்று அர்த்தம்) ! அல்லது பிரியமான டிவி சானலின் முன் அமர்ந்துகொள்ளுங்கள்
!
’ நூலின்றி அமையாது
உலகு ‘ – இப்புத்தகம் பேராசிரியர் இரா.மோகன் தொகுத்துள்ள, ’புத்தகம்’ பற்றிய கட்டுரைகள்.
புத்தக விரும்பிகள் அவசியம் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம் (வானதி பதிப்பகம்)!
‘ புத்தகம் வாங்கிப்
படிப்பது ‘ என்பதில்  ‘ விலை கொடுத்து ‘ அல்லது
’இரவல்’ என, இரு நிலைகள் மறைந்திருப்பதை அறிக ! சொந்தப் புத்தகத்தைச் சிறிது சோம்பலாய்,
அலமாரியில் வைத்துப் பிறகு மெத்தனமாய் வாசிக்கலாம். இரவல் புத்தகம் சிறிது அவசரமாய்ப்
படிக்க வேண்டியிருக்கும் – இது திருப்பிக் கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும்
! – கொஞ்சம் டென்ஷன் !
புத்தகம் படிப்பவர்கள்
பல ரகம் ! விரும்பிய புத்தகங்களைப் புதியதாய் வாங்கிப் படிப்பவர்கள், வாங்கியவர்களிடம்  இரவல் வாங்கி விரும்பிப் படிப்பவர்கள், லைப்ரரியில்
அமர்ந்து படிப்பவர்கள் ( நேரம் அவர்கள் வசத்தில் இருப்பவர்கள் மட்டும்!), சர்குலேஷன்
லைப்ரரியில் புத்தகம் வாங்கிப் படிப்பவர்கள் (லெண்டிங் லைப்ரரிகள் இன்னும் உள்ளனவா
?), பழைய புத்தகக் கடையில் தேடிப் புத்தகங்கள் படிப்பவர்கள் ( மூர் மார்கெட் முடங்கிய
போது மூச்சு முட்ட வருந்தியவர்கள் இவர்கள்), புத்தகக் கடையில் புத்தகம் வாங்குவதுபோல்,
பல புத்தகங்களை மேய்பவர்கள் என புத்தக விரும்பிகள் எங்கும் உள்ளனர் !
மணிவிழா மலர்கள்,
கோயில் கும்பாபிஷேக மலர்கள், பக்தி மஞ்சரி / திரட்டு, விளம்பரங்களால் நிரப்பப் பட்டு,
ஓரிரு வியாசங்களுடன் வெளிவரும் சாவனீர்கள் – இவை பரிசாகக் கிடைத்தாலும், யாராவது படிக்கிறார்களா
என்று தெரியவில்லை !  
மனிதர்களைப் போலவே,
புத்தகங்களுக்கும் பல முகங்கள் உண்டு !
சில புத்தகங்கள்
ஒரு முறை படிக்கத்தக்கவை – சில பாதியிலேயே மூடி வைக்கத் தூண்டுபவை!
சில திரும்பத்
திரும்ப படிக்க வைப்பவை – புதிய சிந்தனைகளைக் கிளறுபவை.
சில நம் வாழ்நாள்
முழுவதும் அவ்வப்போது படித்து ரசிக்கத்தக்கவை !
புத்தகங்களை இரவல்
வாங்குவது எல்லோருக்கும் பிடிக்கும் – திருப்பிக் கொடுக்கும்போது மனம் சிறிது சிரமப்படும்
!
கொடுத்த புத்தகங்கள்
திரும்பி வராத நிலையில், யாரிடம் கொடுத்தோம் என்பதும் மறந்து தொலைக்க, ‘ கடன்பட்டார்
நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் ‘ மன நிலைதான் புத்தக தானப் பிரபுவுக்கு
!
டாக்டர் மோனிகா
ஃபெல்டன் (14 வருடங்கள் இந்தியாவில் தங்கி, புத்தகங்கள் எழுதியவர்),  இராஜாஜி அவர்களைப் பேட்டி கண்டபோது, புத்தகம் ஒன்றை
இரவலாய்க் கேட்க, அவர் மறுத்திருக்கிறார் ! இரவல் சென்ற புத்தகங்கள் திரும்புவதில்லை
என்பது அவரது எண்ணம் ! அதற்கு அவர் கூறிய ஒரு நிகழ்ச்சி:
கேம்ப்ரிஜ் பேராசிரியர்
ஒருவர் தன் அழகிய நூலகத்தைக் காண்பித்து, ‘ நான் யாருக்கும் நூல்களை இரவல் தருவதில்லை;
ஏனெனில், அவை திரும்பக் கிடைப்பதில்லை ‘ என்றாராம். உடனிருந்தவர்கள் உடனே, ‘ இரவலே
கொடுக்காதபோது, எப்படி அவை திரும்பாது என்று நீங்கள் நிச்சயமாகக் கூறுகிறீர்கள் ?
‘என்று கேட்டார்களாம். அதற்கு சிரித்துக்கொண்டே பேராசிரியர், தன் நூலகத்தில் அழகாக
அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்களைக் காண்பித்து, ‘ இங்கு சேர்ந்துள்ள இந்தப்
புத்தகங்களே அதற்குச் சாட்சி ‘ என்றாராம் !
டாக்டர் மோனிகாவும்,
இராஜாஜியிடம் வாங்கிய இரண்டு புத்தகங்கள், திருப்பிக் கொடுக்கப் படாமல், தன்னுடனேயே
தங்கி விட்டதை, கட்டுரையின் கடைசீச் செய்தியாகக் குறிப்பிடுகிறார் !
இரவல் வாங்கிப்
படிப்போர் கவனத்திற்கு் சில குறிப்புகள்:
·        
இரவல்
என்பதும் பரிசு என்பதும் ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் – குறித்த நேரத்தில்
திருப்பிக் கொடுங்கள் !
·        
பிறர்
புத்தகத்தில் காபி, வடை,பஜ்ஜி எண்ணை, தண்ணீர் கரைகள் படுவதைத் தவிருங்கள் – உங்கள்
புத்தகத்துக்கும் இதே விதிதான் !
·        
பாதியில்
படித்த பக்கத்துக்கு ‘புக் மார்க்’ வையுங்கள் – பக்கத்தின் மூலையை நாய்க் காது போல்
மடிக்காதீர்கள் – அது உங்கள் புத்தகமாகவே இருந்தாலும் !
·        
படுத்துக்கொண்டு
படிக்க வசதியாக, புத்தகத்தை முழுதுமாகப் பிரித்து, அதன் முதுகை உடைத்து விடாதீர்கள்
– மீண்டும் பைண்டு செய்ய வைத்து விடாதீர்கள்.
·        
பிறர்
புத்தகத்தில் அடிக்கோடிடுதல், மார்ஜினில் குறிப்புகள் எழுதுதல் போன்றவைகளைச் செய்யாதீர்கள். 
·        
இரவல்
வாங்கிய புத்தகத்தைப் பிறருக்கு இரவல் கொடுத்து, புதியதாக ஒரு சர்குலேஷன் லைப்ரரி தொடங்கி
விடாதீர்கள் !
 
“ புஸ்தகம் வனிதா விந்தம் பரஹஸ்தகதம் கதம் 1
  
அதவா புனராகச்சே ஜ்ஜீர்ணம் ப்ரஷ்டாச கண்டச: 11

 ஒருவனுடைய புத்தகமும், ஸ்திரீயும், பணமும் பிறர்
கையில் அகப்பட்டால், போனதேயாம். ஒருவேளை திரும்பி வந்தாலும், முழுமையாக வருவது சந்தேகமே
என்கிறது நீதி சாஸ்திரம் !
திரு வலம்புரி
ஜான் அவர்கள் தன் லைப்ரரி வாசலில் எழுதி வைத்திருந்த வாசகம் எல்லோர் கவனத்துக்கும்
உரியது. “ இங்கு உள்ளவை அனைத்தும் என் குழந்தைகள் – கவனமாகக் கையாளவும் ! “
உண்மைதானே !

ஆத்மாநாம் சில குறிப்புகள்

அழகியசிங்கர்
1984 ஆம் ஆண்டு ஜøலை 6ஆம் தேதி ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அந்தச் செய்தியைக் கேட்டு அவருடைய நெருங்கிய நண்பர்களான ஞானக்கூத்தன், காளி-தாஸ், ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன்

அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆத்மாநாம் ழ என்ற பத்திரிகையை ஆரம்பித்தாலும், சில இதழ்களுக்குப் பிறகு அவரால் அந்தப் பத்திரிகையைக் கொண்டு வர முடியவில்லை.  ஞானக் கூத்தன், ஆர் ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து கொண்டு வர காரணமாக இருந்தார்கள்.  அச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ஈண்ள்ர்ழ்க்ங்ழ் என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டபோது, அவரைப் பார்க்கச் சென்ற அவருடைய நெருங்கிய நண்பர்கள் கண்கலங்கி விட்டார்கள்.  ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த நோயின் தாக்கத்தோடு இருக்கும்போதுதான், நான் ஆத்மாநாமை ஒருமுறை சந்தித்தேன்.  வைத்தியநாதன் என்ற நண்பருடன்.  
நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்கு முதலில் சென்றோம்.  ழ வெளியீடாக வந்த கவிதைத் தொகுதிகளை வாங்கினேன்.  காகிதத்தில் ஒரு கோடு என்ற ஆத்மானமின் கவிதைத் தொகுதியையும் அவருடைய கையெழுத்தில் வாங்கினேன்.  
நாம் சிலசமயம் சிலரைப் பார்க்கும்போது நமக்கு அவர்கள் மீது காரணம் புரியாத பரிதாப உணர்ச்சி ஏற்படும்.  ஆத்மாநாமைப் பார்க்கும்போதும், எனக்கு அவ்வாறான உணர்வு உண்டாகாமல் இல்லை.
ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் ஆத்மாநாமை நான் சந்திப்பது வழக்கம்.  அப்போது அவர் கைகளைக் குலுக்கும்போது அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருக்கும்.  அதிக போதையால் அவர் கைகள் நடுங்கின்றன என்பதை நான் பின்னால்தான் உணர்ந்தேன்.
இன்னொரு முறை அவர் ழ இதழ்களைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருப்பார். அதை எல்லோருக்கும் அளித்துக் கொண்டிருப்பார்.  அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது எனக்கு அவர் மீது பரிதாப உணர்வு ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.  அந்த சமயத்தில் எனக்கு அவர் அச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ஈண்ள்ர்ழ்க்ங்ழ் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாது.   அவரைப் பற்றி அவர் நண்பர்கள் கூறும்போது. அவருக்கு உடனடியாக  புகழ் வர வேண்டுமென்ற எண்ணம் இருந்ததாகக் கூறுவார்கள்.  இந்தக் காலத்தில் கவிதையை எழுதிவிட்டு அப்படியெல்லாம் புகழ் அடைந்து விட முடியுமா?  சினிமாவில் எழுதினால் ஓரளவு எல்லோருடைய கவனத்திற்கும் வரலாம்.  ஆனால் ஆத்மாநாம் வித்தியாசமானவர்.
கம்பீரமாக காட்சி அளிக்கும் அவர் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை யாரால்தான் நம்ப முடியும்.  அவர் தற்கொலையைப் பற்றி குறிப்பிடும் அவர் நண்பர் ஸ்டெல்லா புரூஸ், தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிறஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு  அலைந்தாக நேரிடும் என்று சொல்கிறார்.  
ஆத்மாநாம் பற்றி அப்படி குறிப்பிட்ட ஸ்டெல்லா புரூஸ் தானும் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி என்ன சொல்வது.
ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தை ஞானக்கூத்தன் ஏற்பாடு செய்தார்.
  ஆத்மாநாம் படத்தை ஆதிமூலம் பிரமாதமான முறையில் வரைந்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.  ஆத்மாநாம் நண்பர்கள் எல்லோரும் சோகமாய் இருந்தார்கள்.  சிலர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்கள்.
ஆத்மாநாம், ஞானக்கூத்தன் பற்றியெல்லாம் மோசமாக விமர்சனம் செய்யும் பிரமிள் அக்கூட்டத்திற்கு வந்திருந்து ஆத்மாநாம் பற்றி பேசியது ஆச்சரியமாக இருந்தது.  
ஆத்மாநாமின் ஒரு கவிதையைப் படிக்கும்போது பிரமிள் அழ ஆரம்பித்து விட்டார்.  வெளியேற்றம் என்பதுதான் அந்தக் கவிதை.
  
 வெளியேற்றம்
சிகரெட்டிலிருந்து 
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி 
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
பிரமிள் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.  ஆத்மாநாம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் உள்ள கணத்தில் ஆத்மாநாம் நினைத்திருந்தால், தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்க முடியும்.  அந்தக் கணம் மிக முக்கியமானது. 

கசடதபற மே 1971 – 8வது இதழ்

பெரியசாமி  தீர்க்கிறார்

வே மாலி

என்ன செய்வ திநதக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி.  கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.

மற்ற நேரம் – நடக்கும் போதும்
நிற்கும் போதும், இந்தக் கைகள்
வெறும் தோள் முனைத்தொங் கல், தாங்          காத
உறுத்தல் வடிவத் தொல்லை

என்றேன். கையைக் காலாக் கென்றான்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிதை வே மாலி என்ற பெயரில் சி மணி எழுதிய கவிதை. ஒன்றும் பயன் இல்லாதபோது கையை காலாகத்தான் பயன் படுத்த வேண்டும்.  ஆனால் கை பயன்பாடு இல்லாதத் தருணத்தில் தோள் முனைத்தொங்கலாகத் தோன்றுகிறது.  இப்படி வேடிக்கையாக பல கவிதைகள் கசடதபற காலத்தில் உருவாயின.  இக் கவிதையைப் படிக்கும்போது, 1968 ஆம் ஆண்டு எழுதிய ஞானக்கூத்தனின் பிரச்னை கவிதை ஏனோ ஞாபகத்திற்கு வரும்.  அக் கவிதை இதோ:

பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.

ஞானக்கூத்தன் கையை தலைக்கு காவலாக வைக்கச் சொல்கிறார்.

நான் இறக்கவிருந்த இரவில்.. – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
நான் இறக்கவிருந்த இரவில்
வியர்த்துக் கொண்டிருந்தேன் என் படுக்கையில்.
கேட்க முடிந்தது என்னால்
வெட்டுக்கிளியின் கீச்சொலியையும் 
வெளியில் பூனையின் சண்டையையும்.
உணர முடிந்தது என்னால்
மெத்தையின் வழியே என் ஆன்மா 
நழுவி விழுவதை.
தரையில் அது மோதிடும் முன் துள்ளி எழுந்தேன்
நடக்கக் கூட இயலாமல் பலகீனமாய் இருந்தேன்
ஆனாலும் சுற்றி வந்து
எல்லா விளக்குகளையும் எரிய விட்டேன்
திரும்பிச் சென்று  மீண்டும் ஆன்மாவை
படுக்கையில் விழ வைத்தேன்
எல்லா விளக்குகளும் ஒளிர
விழித்துக் கிடந்தேன்.
ஏழு வயதில் எனக்கொரு மகள் இருக்கிறாள்
நிச்சயமாகத் தெரியும்
என் இறப்பை ஒருபோதும் அவள் விரும்ப மாட்டாள்
இல்லையெனில் என் இறப்பு
எனக்கொரு பொருட்டே இல்லை
ஆனால் அந்த இரவு முழுவதிலும் 
எவரும் எனக்குத் தொலைபேசவில்லை
எவரும் மதுபானத்துடன் வரவில்லை
என் தோழியும் தொலைபேசவில்லை
என்னால் கேட்க முடிந்ததெல்லாம்
வெட்டுக்கிளியின் ஒலியை மட்டுமே.
புழுக்கம் அதிகமாய் இருந்தது
அதைச் சமாளிக்க 
எழுவதும் படுப்பதுமாக இருந்தேன்,
சூரியனின் முதல் கதிரொளி
செடிகளின் ஊடாக
ஜன்னலின் வழியாக நுழையும் வரையில்.
அதன் பிறகு மீண்டும் படுக்கைக்குச் சென்றேன்
இந்தமுறை ஆன்மா 
ஒருவாறாக என்னுள்ளே தங்கிவிட
தூங்கிப் போனேன்.
இப்போது தட்டத் தொடங்கினார்கள் மக்கள்
கதவுகளையும் ஜன்னல்களையும்.
தொலைபேசி ஒலித்தது
தொலைபேசி மீண்டும் மீண்டும் ஒலித்தது
பிரமாதமான கடிதங்கள் தபாலில் வந்தன
வெறுப்பைச் சுமந்தும் அன்பைச் சுமந்தும்.
எல்லாம் பழையபடியேதான் இருக்கின்றன.
*
மூலம்: “The Night I Was Going To Die
By Charles Bukowski
**

எதையாவது சொல்லட்டுமா……..98

அகியசிங்கர்

மாம்பலத்தில் ஆர்யாகவுடர் ரோடு என்றுழ உள்ளது.  அந்த ரோடு ஒருவர் நடந்து போனல் போதும், பொழுது நன்றாகப் போய்விடும்.  மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.  எளிதில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக முடியாது.  நான் கிட்டத்தட்ட அநத ரோடு வாசி.  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டல் காலனி முதல் தெருவில்தான் இருந்தேன்.  நல்ல சென்டரான இடம்.  ரோடு அகலமாக இருக்கும்.  ரொம்ப குறைவான அடுக்ககத்தில் நாங்கள் இருந்தாலும், எந்த இடத்திற்கும் அங்கிருந்து போய்விட முடியும்.  அந்தத் தெருவை ஒட்டித்தான் ஆர்யாகவுடர் ரோடு உள்ளது.  அயோத்தியா மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கூட்டம் நடக்கும். பாட்டுக் கச்சேரி நடக்கும்.  கதை உபன்யாசம் நடக்கும்.  எனக்குக் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவு.  ஆனால் நாத்திகன் கிடையாது.  என் வீட்டில் உள்ளவர்கள் அயோத்தியா மண்டபம் போக வேண்டுமென்று சொன்னால், அயோக்கியா மண்டபமா என்று கேட்பேன்.  உடனே வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள்.  நான் சிரித்துக்கொள்வேன்.  

நாங்கள் போஸ்டல் காலனி இடத்திலிருந்து ராகவன் காலனி என்ற இடத்திற்கு வந்து விட்டோம்.  என் அப்பாவும், மாமியாரும் அங்கிருந்து ராகவன் காலனிக்கு வரவே விரும்பவில்லை. வலுக்கட்டாயமாக அழைத்து வரும்படி ஆகிவிட்டது.
ஆனால் அங்கிருந்தும் கொஞ்ச தூரம் நடந்து ஆர்யகவுடர் ரோடு வந்து விடலாம்.  போஸ்டல் காலனி தெருவில் நாங்கள் இருக்கும்போது பல திருட்டுகள் நடந்திருக்கின்றன.   ஒரு முறை தெரு முனையில் இருந்த ஒரு வீட்டில் ஒரு வயதான டீச்சரை கொன்று ஒருவன் நகைகளைக் கொள்ளை அடித்துக்கொண்டு போய்விட்டான்.   
     அந்தக் கொலைக்காரனை போலீசார் பிடித்தும் விட்டார்கள். நாங்கள் இருந்த அடுக்ககத்தின் கீழே ஒரு வீட்டிலிருந்து கலர் டீவியைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.  தலைக்காணிக்கு அடியில் மறைநத்து வைத்திருந்த நகைகள் திருடப்படாமல் தப்பித்து விட்டன. போஸ்டல் காலனி எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும்.  
ராகவன் காலனி அப்படி அல்ல.  தெரு முனையில் மாடுகள் வாலைச் சுழற்றியபடி இருக்கும்.  தெரு உள்ளே நுழைபவர்கள் கொஞ்சம் யோசனை செய்வார்கள்.  அதன் பின் வண்டி.  தெரு முழுக்க டூ வீலர்களை வைக்கும் இடம் எங்கள் தெருதான். கார்கள் கண்டபடி இருக்கும்.  
நான் வைத்திருக்கும் நானோ காரை எடுத்துக்கொண்டு வந்தால், யார் மீதும் இடிக்காமல் போக வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.  இன்னொன்றும் நினைத்துக் கொள்வேன் ஒருவர் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இந்தத் தெருவில் ஓட்டினால் போதுமென்று. சாமர்த்தியம் இல்லாவிட்டால் ஓட்ட முடியாது.  
இங்கே திருட்டே கிடையாது.  ராகவன் காலனி இரவாக இருந்தாலும், விழித்துக்கொண்டே இருக்கும்.  ஜனங்கள் நடமாடிக்கொண்டே இருப்பார்கள்.  திருடன் வந்தால் செத்தான்.  
எங்கள் வீட்டு பால்கனியில் ஒரு காக்கை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து கத்திக்கொண்டே இருக்கும்.  92 வயதாகிற என் அப்பா சொல்வார்.  üüஅது என் நண்பன்,ýý என்று.
நான் திரும்பவும் ஆர்யாகவுடர் ரோடிற்கு வருகிறேன்.  நேற்று என் டூ வீலரை எடுத்துக்கொண்டு சர்வீஸ் கொடுக்க ஆர்யாகவுடர் ரோடு முடியும் இடத்திற்குச் சென்று கொடுத்துவிட்டு, அந்தத் தெரு முனையிலிருந்து பிராக்குப் பார்த்தபடி ஆர்யாகவுடர் ரோடு முழுவதும் நடந்து வந்தேன்.  விதவிதமான கடைகள்.  ஜே பி டிபன் சென்டர் என்ற கடையில் காலை வேளையில் சுறுசுறுப்பாக எல்லோரும் டிபன் சாக்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.   பின் இரண்டு மூன்று தேசிய வங்கிக் கிளைகள்.  ஒரு வேர்கடலை விற்கிற கடை.  ஒரு பிள்ளையார் கோயில்.பேப்பர் கடைகள்.  நாட்டு மருந்து கடைகள்.  ஒரு டைலர் கடை.  இரண்டு கல்யாண மண்டபம்.  ஒரே வாகன ஓட்டம்.  பஸ்கள்.  நான் நடந்து வந்து கொண்டிருக்கிறேன். 
இந்தக் கூட்டம்.  வாகன இரைச்சல் எல்லாம் என்னை தொந்தரவு செய்யாமல் இல்லை.  ஆனால் நான் முன்பு பார்த்த ஆர்யாகவுடர் வேறு மாதிரியாக இருந்தது.  அதைப் பற்றி இப்போது சொல்ல முயற்சிக்கிறேன்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக மேற்கு மாம்பலத்தில் குடியிருப்பவன் நான்.  ஆரம்பத்தில் பஸ்கள் மேற்கு மாம்பலம் நோக்கி அவ்வளவாக வராது.  மழை பெய்தால் தெருவில் நடக்க முடியாது.  குண்டும் குழியுமாக மோசமாக இருக்கும்.  மேற்கு மாம்பலத்தில் அப்போதெல்லாம் முக்கியமான இடம் அயோத்தியா மண்டபம். அங்கு ஒவ்வொரு சம்மரிலும் பாட்டுக் கச்சேரி நடக்கும்.
நாங்கள் வினாயகம் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம்.  அறுபது ரூபாய் வாடகை.  என் அம்மாவிற்கு நாங்கள் மாம்பலம் வந்தது தெரியாது.  ஏன்என்றால் அம்மா இறந்த பிறகுதான் நாங்கள் இங்கு வந்தோம். 
வீட்டிற்குள் கையைத் தூக்கினால் மின் விசிறி கையில் தட்டுப்படும்.  அது வேகமாக சுழலும்போது தலையைச் சீவுவது போல் பயம் ஏற்படும். அப்போதெல்லாம் பல இடங்கள் காலியாக இருந்தன.  நடந்தால் காலில் மண் ஒட்டிக்கொள்ளும்.  கொசுக்கள் இல்லாமல் இருக்காது.  நிறைய பேர்கள் மாம்பலத்தில் குடி வரவே அஞ்சுவார்கள்.  யானைக்கால் நோய் வந்துவிடும் என்ற பயம்தான் காரணம்.  
மாம்பலம் ரயில் நிலையம் ஏறி நான் தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.  எப்போதும் பாட்டி மதியம் சாப்பிட ஒரு தயிர்சாதத்தை டிபன் பாக்ஸில் வைப்பாள்.  அதைச் சாப்பிடவே முடியாது.இந்தச் சமயத்தில் நான் ஒரு கவிதை எழுதினேன். கவிதையின் ஒரு பகுதி.
      விரிசலாய்க் கிழிந்த சுவர்கள்
வெயில் காலத்தில் 
வெயிலாய்த் தகிக்க
மழையோ
சன்னல் வழியே கம்பிபோட
வெளியே எடுத்து வைத்த
கால்கள் திரும்பும் சேற்றுடன்
அப்பா அரசாங்கத்தில் சேவகர்
படித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு
சமையல் செய்துபோட பாட்டி
அம்மா செத்துப்போய்
ஆயிற்றுப் பதினாறு வருடங்கள்
நான் படித்த கிறித்துவக் கல்லூரியில் அப்போதுதான் சங்கரன் என்கிற ஞாநி கசடதபற என்ற சிறு பத்திரிகை இனிமேல் வராது என்று யாருடனோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மறக்க முடியாத ஆர்யாகவுடர் சாலையில்தான் சாரதா ஸ்டோர்ஸ் என்கிற அப்பளாம் விற்கும் கடையில் பிரஞ்ஞை என்ற சிறு பத்திரிகை தொங்கிக் கொண்டிருந்தது.  அநதப் பத்திரிகையும் நின்று போகும் சமயம் என்று நினைக்கிறேன்.  அதை வாங்கி வைத்துக் கொள்வேன். படிக்க மாட்டேன்.  வீட்டிற்கு ஸ்டேஷனலிருந்து நடந்தே வந்து விடுவேன்.பஸ் போக்குவரத்து இல்லாத ஆர்யாகவுடர் சாலை காலியாக இருக்கும்.
என் அப்பா ரிட்டையர்டு ஆனபிறகு நாங்கள் வினாயகம் தெருவிலிருந்து ராகவன் காலனிக்கு குடி பெயர்ந்தோம்.  என் அப்பா அவர் ரிட்டையர்ட் ஆன பணத்தில் வாங்கிய இடம்.  வினாயகம் தெருவிலிருந்து இந்தத் தெருவிற்கு வருவதற்கே எனக்கு மனம் இல்லை.  ஆனால் சொந்த இடமாக ஒரு இடத்திற்கு வருகிறோம்.
யார் எங்கள் தெருவிற்கு காலடி எடுத்து வைத்தாலும் அருவெறுப்பு அடைவார்கள்.  தெரு இரண்டு பக்கங்களிலும் சாக்கடைகள்.  தெரு முனையில் மொட்டையம்மாள் சந்து என்ற ஒன்று உண்டு.  அங்கு கள்ளச் சாராயம் காய்ச்சுவார்கள்.  தெரு முனையில் மாடுகள் கட்டியிருக்கும்.  
அப்பாதான் ராகவன் காலனி நல சங்கத்திற்கு தலைவர்.   காலையில் சாக்கடையில் நீர் நிரம்பி கிடக்கும்.  அவருடைய பணிகளில் ஒன்று சாக்கடையை அருவெறுப்பு அடையாமல் தள்ளுவது.
அந்த ராகவன் காலனியும், ஆர்யாகவுடர் தெருவும் 40 ஆண்டுகளில் பெரிதும் மாறி விட்டது.  ஆர்யா கவுடர் தெரு வழியாக சாதாரணமாகவே நடக்க முடியவில்லை.  அந்த அளவிற்கு வாகன இரைச்சல்.  எங்கே வண்டி எதாவது மோதி விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.
மாலை நேரத்தில் ஆர்யாகவுடர் தெருவில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு தாண்டியே போக முடியாது.  

ஒரு வருத்தமான சந்திப்பு…

அழகியசிங்கர்


போனவாரம் செவ்வாய்க் கிழமை நானும், பெ சு மணி அவர்களும் லா சு ரங்கராஜன் என்ற முதிய எழுத்தாளரைப் போய்ப் பார்த்தோம்.  அவர் உடல்நிலை சரியில்லாமல் சிரமப்படுவதாக பெ சு மணி சொன்னபோது, பெ சு மணியை அழைத்துக் கொண்டு அவரைப் போய்ப் பார்ப்பது என்று தீர்மானித்தேன்.  
டிசம்பர் 1930ல் பிறந்த லாசு ரங்கராஜன் ஒரு காந்திய அறிஞர்.  சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் உதவி ஆசிரியராக 1952-55 வரை பணியாற்றினார்.  பின்னர் புது டில்லியில் மத்திய அரசு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார்.  
 மகாத்மாகாந்தியின் ஆதாரபூர்வமான எழுத்துக்கள், பேச்சுக்கள் யாவற்றையும் திரட்டித் தக்க அடிக்குறிப்புகளுடன் காலவாரியாகத் தொகுத்து நூறு தொகுதிகள் கொண்ட நூல் வரிடசையைப் பதிப்பிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான திட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு “கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் மகாத்மா காநதி” என்ற பெயரில் இந்திய அரசு தனி அலுவலகத்தில் லா சு ரங்கராஜன் விசேஷ அதிகாரியாகவும், பின்னர் துணை இயக்குநராகவும் நியமனம் பெற்றார்.  அங்கு கால் நூற்றாண்டு (1965-1988) தொடர்ந்து பணியாற்றினார். அவ்வமைப்பின் பிரதம ஆசிரியராக இருந்த காந்திய மாமேதை பேராசிரியர் கே சுவாமிநாதன் (1896-1994) அவர்கட்குக் காந்திய பதிப்புக் பணியில் உறுதுணையாக உதவி  வந்த ரங்கராஜன் காந்திய லக்கியத்தில் பெரும் புலமை பெற்றார்.  1988 இறுதியில் வேலை ஓய்வு பெற்றவுடன், மத்திய அரசின் ப்பளிகேஷன்ஸ் டிவிஷனில் (1989-91) பணியாற்றினார்.  அது முதற்கொண்டு, காந்தியம், தேசியம் சார்ந்த சிறப்புக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.  
   இரண்டாண்டுகள் (1992-94) இலக்கிய மாத இதழான கணையாழியில் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.  üüமகாத்மா காந்தியின் ஆன்மிகப் பயணம்ýý என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆதாரபூர்வமான ஆவணம் தயாரித்தளிக்கும் பொருட்டு இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் லா சு ரங்கராஜனைத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டு காலம் (2008-09) சீனியர் ஃபெல்லோஷிப் வழங்கிற்று. அதற்காக லாசு.ரா மூன்று லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் பெற்றார்.   
இவ்வளவு பெருமைக்குரிய லா சு ரா,  உடல்நிலை சரியில்லாமல வீட்டில் கட்டிலில் படுத்தப் படுக்கையாக இருந்தது பரிதாபத்துக்குரியதாக தெரிந்தது. அவரால் எழுந்து கூட உட்கார முடியவில்லை.  முதுகில் அவருக்குப் பிரச்சினை.  
ஒரு வினாடி அவரை நான் பார்க்கும்போது அவரைத் தொந்தரவு செய்ய வந்து விட்டோமோ என்று தோன்றியது.  பெ சு மணி கட்டாயம் அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று சொன்னதால் நானும் பெ சு மணியை அழைத்துக் கொண்டு வந்தேன்.  லா சு ராவிற்கு வாரிசு யாருமில்லை.  அவரைப் பார்த்துக் கொள்ள 80வயதான அவர் மனைவி இருக்கிறார்.  அவர்கள் இருவரும்தான் அந்த வீட்டில்.  மனைவி அவர் பக்கத்திலிருந்து எல்லா உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார்.
எந்த மனிதனாக இருந்தாலும், அவர் மாதிரியான உடல் உபாதையில் இருக்கும்போது, பேசவே தோணாது.  யாராவது வருகிறார்கள் என்றால் வெறுப்புடன் பார்ப்பார்கள்.  தன்னுடைய துக்கத்தை, வலியை எப்படியாவது காட்டுவார்கள்.  ஆனால் லா சு ரா வேறு மாதிரியாக இருந்தார்.  நான் கொண்டு வந்த புத்தகங்களை வாங்க மறுத்தார்.  படிக்க முடியாது என்று.  அவரைப் பார்த்துக்கொள்ள யாராவது ஒருவர் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.  80 வயதான மனைவிதான் பக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
நானும், பெ சு மணியும் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினோம்.  அவர் மறுத்தார்.  தன்னால் உடலை அசைக்க முடியாது என்று கூறினார்.  கேட்க எங்களுக்கு வருத்தமாக இருந்தது.  ஒரு வழியாக அவர் படுத்தப் படுக்கையில் இருக்கும்போது நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  
நாங்கள் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பும் போது, லர சு ரா எங்களுக்கு அவர் எழுதிய மூன்று புத்தகங்களைக் கொடுத்தார்.  1. பிரார்த்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி 2. 21 ஆம் நூற்றாண்டின் மகாத்மா காந்தி 3. காந்திஜியின் ஹிந்த் ஸ்வராஜ்.  அந்த மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் வெளிவந்தபோது, அவர் மனைவி சொன்ன விஷயம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  அவருக்கு முதுகில் எலும்பில் கான்சராம்.  இந்த விஷயம் அவருக்கே தெரியாதாம்.  அன்று முழுவதும் லாசுரா வே என் மனதில் இருந்தார்.   80 வயது நிரம்பிய அவர் மனைவியை நினைத்துதான் எங்களுக்கு வருத்தம்.  நாங்கள் திரும்பி வரும்போது மழை பெய்துக் கொண்டிருந்தது.  
தயவுசெய்து இதைப் படிக்கும் யாரும் அவர் நோயைப் பற்றி அவரிடம் சொல்லி விடாதீர்கள்.  

அப்பாவும் நானும்

அழகியசிங்கர்


அப்பாவிற்கு 93 வயது.  எனக்கும் 61 வயது.  இந்தப் புதிய இடத்திற்கு வந்தபிறகு, அப்பாவால் வாசலைத் தாண்டி வெளியே வந்து நடக்க முடியவில்லை.  வீட்டிலேயே நடப்பார்.  பெரும்பாலும் தூங்கி வழிவார்.  எழுந்தவுடன் தினசரிகள் வந்து விட்டதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.  தினசரிகளை எடுத்து அப்பா முன் வைப்பேன்.  அதற்கு முன் அப்பா பால்கனி முன் நின்று தெருவில் வருவோர் போவோரைப் பார்த்து கை அசைப்பார்.  எல்லோருடைய பெயர்களையும் கூப்பிட்டு காலை வணக்கம் சொல்வார்.  நலமுடன் வாழ்க என்பார்.  சிலரைப் பார்த்து, üகாப்பி  சாப்பிட வரட்டுமா?ý என்பார்.  தெருவில் விளையாடும் சிறுவர்களிடம், மாஜிக் செய்வதாக சொல்வார். 
அப்பா எப்போதும் காலையில் சின்ன தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உணவு உண்பார்.  அந்தச் சின்ன தட்டில் கொஞ்சம் சாதம் வைத்துக்கொண்டு, ரசம் அல்லது சாம்பாரை பிசைந்து சாபபிடுவார்.  பின் தூங்கச் சென்று விடுவார்.  தூங்கிய பிறகு திரும்பவும் எழுந்து குளிக்கப் போவார்.  குளித்து விட்டு வந்தபிறகு தானே ஒரு பெரிய தட்டில் சாப்பாடு சாப்பிடுவார். 
தான் சாப்பிடுவதாக இருக்கட்டும், குளிப்பதாக இருக்கட்டும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டார்.   தானாகவே ஷேவ் செய்து கொள்வார். மாலை நேரங்களில் அப்பா டிவி போட்டு பார்த்துக்கொண்டே இருப்பார்.  
அப்பா இருக்கும் அறையில்தான் நான் புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டிருப்பேன்.  üüஎன் அறை என்றுதான் பேர், ஆனா உன் புத்தகங்கள்தான் இருக்கு,ýü என்று கோபமாக முணுமுணுப்பார்.  அப்பா என்னிடம் உள்ள புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு விடுவார்.  அசோகமித்திரனின் கதைகள் இரண்டு பகுதிகளாக இருந்தன.  எல்லாவற்றையும் அப்பா படித்து விட்டார்.  üüஎன்னப்பா படித்தே, படித்த கதையைச் சொல்லு,ýý என்றால், அப்பாவிற்கு சொல்லத் தெரியாது.  
அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன படிக்கிறார் என்று எனக்குத் தோன்றும்.  ஒரு முறை படபடவென்று இருக்கிறது என்று அப்பா சொல்ல, மலர் மருத்துவமனைக்கு அழைத்துப் போனேன்.  90 வயதுக்கு மேலே உள்ள ஒருவரை பரிசோதிக்க மருத்துவர்கள் விரும்பவில்லை.  அவர்கள் என்னையும் அப்பாவையும் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அப்பாவிற்கு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டார்கள்.  
முன்பெல்லாம் என் நண்பர்கள் யாராவது வந்தால், அப்பா டீ போட்டுக் கொடுப்பார்.  உப்புமா நன்றாக செய்து கொடுப்பார்.  வீட்டில் யாரும் இல்லாவிட்டால் தானே சமையல் செய்ய ஆரம்பித்து விடுவார். அப்பா கொடுக்கும் டீ நன்றாக இருக்கிறது என்று சில நண்பர்கள் கூறுவதுண்டு.  இப்போதெல்லாம் அப்பாவால் டீ போட முடியவில்லை.
நான்தான் காப்பி போட்டுக் கொடுப்பேன்.  அப்பா என்னைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேளவி.  üüஇவ்வளவு புத்தகங்கள் வாங்கறியே, எப்ப படிக்கப் போறே?ýý அப்பாவின் இந்தக் கேள்விக்கு என்னால் பதிலே சொல்ல முடியாது.  அப்பா மீது கோபம்தான் வரும்.  அவர் காலத்தில் அவர் எந்தப் புத்தகத்தையும் வாங்கியதில்லை.  அவர் வேலைக்குப் போன காலத்தில், தினசரிகளை வாங்கிக் கூட படிக்க மாட்டார்.  இப்போது நான் வாங்குவதைப் பார்த்துதான் அவர் எடுத்துப் படிக்கிறார். 
அப்பாவைப் பற்றி இன்னொன்று சொலலவேண்டும்.  அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.  வெற்றிலைகூட போட மாட்டார்.  யாரைப் பார்த்தும் தப்பாகப் பேச மாட்டார்.  கோபமே வராது.  
அப்பா 40 ஆண்டுகளாக பென்சன் வாங்குகிறார்.  நானும் பென்சன் வாங்குகிறேன்.  அவர் என்னைப் பார்த்து சொல்வார்:  üüநான் சீனியர் பென்சன்கரான்.. நீ ஜøனியர் பென்சன் காரன்,ýý என்பார்.  உண்மைதான்.
                       (தந்தையார் தினத்தை முன்னிட்டு எழுதியது)  

கசடதபற APRIL 1971 – 7வது இதழ்

தோட்டி

ந  மகாகணபதி                             



ஈக்களை, நேற்று விரட்டி
நீ படுத்திருக்கையில் மற்ற
குப்பைகளை வாரிப்போனேன்.

கடித்து மகிழ்ந்த கரும்புச் சக்கைகள்
கால் பரப்பிக் கிடக்கும் பழத்தோல்கள்.
வாடிய இலைகள் இவற்றை விட்டு ஈக்கள்
உன்னை, இன்று மொய்க்க, நீ அவற்றை
விரட்டவில்லை

மூலையில்
வழக்கமாய் மாடுகள் நிற்க
நானும் நிற்க, வேலையும்
நிற்கிறது நடக்காமல.

இந்தத் கவிதையை எப்படி அர்த்தப்படுத்துவது.  படுத்திருப்பவள் தோட்டியா?  அவளுக்கு உதவியாய் அவளுக்கு நெருக்கமானவள் வருகிறாள்.  அடுத்த நாள் ஈக்கள் படுத்துக்கிடந்தவளை மொய்கிறது.  அப்படியென்றால் அவள் சவமாக மாறிவிட்டாள்.  அவளுக்கு உதவி செய்ய வந்தவள் ஒன்றும் தோன்றாமல் நிற்கிறாள்.  அற்புதமான கவிதை.