காந்தியைப் பற்றி 5 கவிதைகள்

   

    அழகியசிங்கர்

     1. காந்தி பிறந்தநாள் இன்று
    காந்தியைப் போற்றுவோம்
    காந்தியைப் போற்றுவோம்
    அவர் கொள்கைகளை ஆதரிப்போம்
    அவர் நாமம் வாழ்க
    அவர் நாமம் வாழ்க

    2. வாசலில் வந்து நின்றார்
    அவரைப் பார்த்து யார் என்று கேட்டேன்
    காந்தி  என்றார்
    நான் அழகியசிங்கர் என்றேன்
    அதன் பின் அவர் பேசினார் அவர் மொழியில்
    நானும் பேசினேன் என் மொழியில்
    ஆனால் இருவருக்கும் என்ன
    பேசினோமென்று  புரியவில்லை
    ஒரே தேசத்திலிருந்தாலும்..

    3. காந்தியைப் பற்றி
    பாரதியார் எழுதினார்
    வெ ராமலிங்கப் பிள்ளை எழுதினார்
    மாடர்ன் பொயட் ஞானக்கூத்தன் எழுதினார்
    இன்னும் இன்னும் பலரும் எழுதினார்கள்
    கவிஅரங்த்தில் கவிதைகள் வாசித்தார்கள்
    இதோ –
    நானும் எழுதி விட்டேன்.

    4. நேற்று என் கனவில்
    காந்தி வந்தார்
    பரவசத்துடன் உட்காரச் சொன்னேன்
    கோபமாக முறைத்துப் பார்த்தார்
    ஏன் ஏன் என்றேன்
    எல்லோரும் கவிதைகள் எழுதி என்னைச்
    சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்
    எவ்வளவு முறை சாவது?

    5. தெருவில் ஒரு மனிதன் படுத்திருந்தான்
    உடலெல்லாம் புழுதி
    கண்கள் இடுங்கி இருந்தன
    காந்தி அவனைப்
    பரிதாபத்துடன் பார்த்தார்
    பின் தட்டி எழுப்பினார்
    “என்ன?” என்று கேட்டான்
    “நான் காந்தி,” என்றார்
    “போய்யா..” என்றான் குடிகாரன்

                                               (01.10.2020)

    (அக்டோபர் 2ம்தேதி விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் வாசித்த கவிதை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன