மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 118

அழகியசிங்கர் 

 புராதனக்குடுவை

பா ராஜா

மிக அழகான வேலைப்பாட்டுடன் கூடிய

புராதனக்குடுவையன்று எனக்குக்கிடைத்திருக்கிறது 

அதனைக்கொண்டு

பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம் 

நிதி திரட்ட உண்டியல் குலுக்கலாம் 

கள்ளருந்தப் பயன்படுத்தலாம் 

கழிப்பறையின் குவளையாக்கலாம் 

திரியன்றுப் போட்டு விளக்காக்கலாம் 

காகங்களுக்கு நீர் வைக்கலாம் 

அரிசியளக்கும் படியாக்கலாம் 

படுக்கையில் கிடக்கும் தகப்பனின் மூத்திர டப்பாவாக்கலாம் 

பூஜையறையில் வைத்துப் பூஜிக்கலாம் 

உள்ளே பூதமிருப்பதாய் கோகுலிடம் பயம் காட்டலாம் 

மண்ணை நிரப்பி டேபிள் ரோஜா செடி வளர்க்கலாம் 

அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கலாம் 

இனப்பெருக்கஞ்செய்யத் தோதாய் பறவைக்கூட்டின் மூலையில் 

பொருத்தலாம் 

நாட்டாமைகள் எச்சியுமிழ் சினிமாவில் நடிக்க வைக்கலாம் 

அல்லது 

இறுதிச்சடங்கில் அஸ்தியெடுப்பதற்கென பத்திரப்படுத்தலாம் 

எவ்விதமதனைப் பயன் படுத்துவதென்ற பெருங்குழப்பத்தால் 

சிரம் வெடித்துச்சிதற 

கழுத்தின் மேல் அமர்ந்திருக்கிறது அப்புராதனக்குடுவை 

சற்றே சிதிலமடைந்து.

நன்றி : மாயப்பட்சி – பா ராஜா  – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 64 – விலை : ரூ.60

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன