ஞானக்கூத்தனின் பிறந்த தினம் இன்று

ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது ஞானக்கூத்தனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். விருட்சம் பத்திரிகை அச்சடித்து வரும்போதெல்லாம் முதலில் ஞானக்கூத்தனிடம் ஒரு பிரதி கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு வருவேன்.
திருவல்லிக்கேணி தெருக்களின் முனைகளில் ஞானக்கூத்தனை பலமுறை சந்தித்துப் பேசிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறேன். அவர் வீட்டுத் திண்ணைகளிலும் மொட்டை மாடிகளிலும் பேசியிருக்கிறேன். ஒருமுறை பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்துப் படிக்கட்டிகளில் உட்காரந்து பேசியிருக்கிறேன். இதுமாதிரி திருவல்லிக்கேணி என்றாலே ஒரு அடையாளத்தை ஞானக்கூத்தன் என் மனதில் ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல் அவர் கவிதைகள் மூலமும் ஒரு ஞாபகத்தை உண்டாகியிருக்கிறார்.
இன்று ஞானக்கூத்தனின் பிறந்தநாள். இம்பர் உலகம் என்ற பெயரில் வெளிவந்த கவிதைத் தொகுதிதான் அவருடைய கடைசி கவிதைத் தொகுதி. அந்தத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை இங்குத் தர விரும்புகிறேன்.

சுசீலாவும் பிறரும்

மௌனியும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்.
நகுலனும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்
மௌனியும் நகுலனும்
தெருவில் நடந்தால்
சுசீலா ஏன் வரவில்லை என்று
மக்கள் தெருவில் தேடுவார்கள்
சுசீலாவும் தோழியும்
தெருவில் நடந்தால்
மௌனியும் நகுலனும்
வரவில்லை என்று
மக்கள் மகிழ்வார்கள்
நானும் சுசீலாவும்
தெருவில் நடந்தால் மக்கள்
என்னையே பார்ப்பார்கள்
எப்படி இவளை இவன்
பிடித்தான் என்று.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன