தந்தையர் தினம்

 

சமீபத்தில் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி என் தந்தை இறந்து விட்டார்.  ஆனால் முன்னதாகவே அவருக்குத் தெரியாமல் நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.  ஆனாலும் இந்தக் கவிதையை அவர் படித்து ரசித்திருப்பாரா என்பது தெரியவில்லை.  இன்று தந்தையர் தினம் என்பதால் அந்தக் கவிதையை நீங்கள் வாசிக்க இங்கே அளிக்கிறேன்.

அப்பா

அப்பா சொன்னார் :

குட்மார்னிங்

சரிதான்

காலையில் காஃபியைச்

சுடச்சுட குடிப்பார்

சரிதான்

முன்னாள் முதல்வர்

கருணாநிதி மாதிரி பேசுவார்

சரிதான்

தெருவில் போவோர் வருவோரைப்

பார்த்து

நலமா என்று கேட்பார்

சரிதான்

ஃபோனில் யாராவது பேசினால்

நலமுடன் வாழ்க என்பார்

சரிதான்

கண்ணாடி இல்லாமல்

பேப்பர் படிப்பார்

சரிதான்

தடியை ஊன்றி தானே

நடைபயிற்சி செய்வார்

சரிதான்

தரையில் அமர்ந்து

காய்கறி நறுக்குவார்.

சரிதான்

யார் உதவி இல்லாமலும்

தன் துணிகளை

தானே துவைப்பார்

சரிதான்

சத்தமாக மெய்மறந்து

பாட்டுப்பாடுவார் ஒரு பாடகர்போல்

சரிதான்

91வயதில் தானே

ஷேவ் செய்து

கொள்வார்

சரிதான்

டிவி முன் சீரியலை

விழுந்து விழுந்து ரசிப்பார்

சரிதான்

படுக்கையை விரித்து

தானே படுப்பார்

சரிதான்

ஆனால் என் 59வது வயதில்

என் தலைமை அலுவலகத்திற்குப்

போன் பண்ணி

என்னை மாம்பலம் கிளைக்கு

மாற்றச் சொல்லி கெஞ்சுகிறாரே

அதுதான் சரியில்லை………..

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன