மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்


அசோகமித்திரன்
ஒரு காலத்தில் வார மாதப் பத்திரிகைகள் மிகவும் குறைவு. வெளிவருவதில் பக்கத்துக்குப் பக்கம் விகடத்துணுக்குகள் இருக்கும். திரும்பத் திரும்ப மருத்துவர்கள் பற்றிய துணுக்குகள். “டாக்டர் உன் நண்பர் என்று சொன்னாயே, பின் ஏன் ஃபீஸ் கொடுத்தாய்?”
“அவர் பிழைக்க வேண்டுமே?”
“அப்படிப் பணம் கொடுத்து வாங்கிய மருந்தை ஏன் குப்பையில் கொட்டினாய்?”
“நான் பிழைக்க வேண்டுமே?”
அந்த நாட்களில் டாக்டர்கள் பத்திரிகைகளைத் தொடாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது கோபமே வராதவர்களாக இருக்கவேண்டும்.
எந்தக் கலாச்சாரத்தில் நீண்ட மருத்துவப் பாரம்பரியம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ந்ம்பிக்கை-அவநம்பிக்கை இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. பெரும்பாலானோர் கடவுளைப் பிரார்த்திகாதபடி டாக்டரிடம் செல்வதில்லை.
கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்த் பிறப்பால் பிராமணரானாலும் ஒரு நாத்திகவாதி. ஒரு முறை அவருடைய குழந்தைக்குப் பெருவாரி நோய் கண்டு விட்டது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும் அம்மை, பிளேக் முதலியன கால அட்டவணை அமைத்துக் கொண்டு மாறி மாறி வரும். அம்மைக்கு வைத்தியம் செய்யாமல் வீடெல்லாம் வேப்பிலையைப் பரப்பி வைப்பார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு ஊமைத்துரை வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான போரைத்தொடர்ந்தார். ஒரு முறை அவர் தங்கியிருந்த வீட்டருகே வெள்ளைக்காரச் சிப்பாய்கள் வந்து விட்டார்கள். வீட்டில் ஒரு மூதாட்டி. ஒரு கவலை வேண்டாம் என்று சொல்லி வாயிற்படியருகே கொத்து கொத்தாக வேப்பிலையை வைத்தாள். வெள்ளைக்கார்ர்கள் அந்தத் தெருப்பக்கமே வரவில்லை. அம்மை நோய்க்கு அவ்வளவு பயம். இன்று நோய்த்தடுப்பு இருக்கிறது. முன்பு நோய் கண்டு விட்டால் வீட்டில் யாரையும் வரவிடமாட்டார்கள். மிகவும் நெருங்கிய உறவினர்களைக் கூட அநுமதிக்க மாட்டார்கள். அம்மை கண்ட நோயாளி ஒருக்கால் மருத்துவ மனையில் இறந்து விட்டால் அது போன்ற சங்கடம் கிடையாது. உடலை வீட்டுக்கு எடுத்து வர முடியாது. நேராக மயானத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். அப்போது பிணத்தை எடுத்துச்செல்ல ஒரு வண்டியும் வராது. நான் வசித்த ஊரில் ஆம்புலன்ஸ் என்று நான் பார்த்தே கிடையாது.
ஊமைத்துரை வரலாற்றில் வேப்பிலை நிகழ்ச்சி பல விவரங்களைத் தெரிவிக்கிறது. இவ்வளவு பயந்து பயந்து இந்த நாட்டில் இருந்தாலும் பழைய ராணுவக் கல்லறைகளுக்குப் போனால் ஒரே கல்லறைக் கல் முப்பது நாற்பது பெயர்களைக் கொண்டிருக்கும். அவர்கள் போரில் உயிர் நீத்தவர்கள் அல்ல. பெருவாரி நோயில் உயிரை விட்டவர்கள்.
சிவராம கரந்த்தின் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அவருடைய மனைவி அவர் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். மாரியம்மனுக்கு வேண்டிக்கொள்ளுங்கள், சாமுண்டிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்… “எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று சொல்லி டாக்டரை அழைக்கப் போனார். டாக்டர்கள் யாரும் வரவில்லை. குழந்தை போய் விட்டது. ஆனால் என் சொந்த அனுபவத்தில் எங்கள் வீட்டில்தான் எவ்வளவு வேண்டிக்கொண்டிருக்கிறோம்,எவ்வளவு காசு முடிப்புகளை சாமி படத்தடியில் வைத்திருக்கிறோம்? இந்த 82வது வயதில் என் பெற்றோர்களை நினைத்துக் கொண்டால் அவர்கள் துக்கம்தான் மனதில் முதலில் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் நாங்கள் வசித்த ஊரில் வைத்தியர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலோனோர் எல் எம் எஸ் அல்லது எல். எம் பி. அதாவது, எம் பி பி எஸ் இல்லை. வைத்தியர்கள் குறைவு என்பதால் சாவு அதிகம் என்று இல்லை. வைத்தியமும் சாவும் பெரிய பிரச்னைகள் அல்ல. பிணத்தைக் கொண்டு போனால் சுடுகாட்டில் எரித்து விட்டு வரலாம் அல்லது புதைத்து விட்டு வரலாம்.
நான் முதன் முதலில் மருத்துவர்கள் பற்றி விகடத் துணுக்கு எதிர்கொண்டது சாரணர் ‘காம்ப்ஃபய’ரில்தான். நான் இருந்த குழுவில் ஓரிருவர் தவிர மற்றெல்லோரும் தெலுங்கு அல்லது உருதுக்காரர்கள்.முன்னமேயே கூறியபடி சிறிய ஊரில் குறைவான மருத்துவர்கள் உள்ள நிலையில் இப்படியும் கேலி செய்ய முடியுமா?
கேலியும் செய்தார்கள். அதே டாக்டர்களிடமும் போனார்கள். தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டார்கள்.
 

“மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன