பெயரிழந்த பறவை

பெயர் கொத்திப்பறந்த ஏதோ ஒன்று 
மரத்தின் உச்சியில் 
அமர்ந்து உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது
என்னை..

தேகமெங்கிலும் அந்நிய வாசனையோடு
சுயத்தை இழந்துக்கொண்டு 
நான்..

உயிர் திருகும் வலியில் என்
உணர்வுகளை கடத்திக்கொள்கிறது
அதனுள்..


பெயரிழந்த பறவையாகிறேன் நான்
குற்றத்தின் சுமையும் என்
சிறகின் மேல்..

 
******************************************
சிதறல் துளி
உறங்கியும் உறங்காமலும் 
இருக்கின்ற விடியலை 
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கின்றன
உன் நினைவுகள்.
என் கனவு, நினைவு, 
எல்லாமாகிப்போகின்றன 
உன் விரலிருந்து கசிந்த 
வார்த்தைகள்..
சுவாசமாய் உட்செல்லும் 
காற்று தீர்மானமாய்
சொல்லும் உன் வார்த்தைகளின் 
வெப்பத்தை..
உடலெங்கும் வழிந்தோடும் 
குருதி மட்டுமே உணரும் 
பிரியம் மேலிடுகிற 
உன் ஒவ்வொரு ஸ்பரிசத்தின் 
குளிர்ச்சியையும்.
உன் அளவிடமுடியா 
பிரியத்தின் முன் 
சிதறல் துளியாகிறேன் 
நான்.
**********************************************
யுகங்களின் தேவதைகளுக்கான 
இலக்கணம் கண்ணீராலும், துன்பத்தாலும் 
மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
தேவதயென்றாலும், தாடகையென்றாலும்
பெண் பெண்ணாய்த்தானிருக்கிறாள்.
 

“” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன