இரண்டு கவிதைகள்


நாற்பட்டகம்
இன்று இது நான் புகைக்கும் எத்தனையாவது சிகரெட்டோ
இன்று இவள் நான் காதலிக்கும் எத்தனையாவது பெண்ணோ
இன்று இது எத்தனையாவது இன்றோ
இன்று இது எத்தனையாவது எத்தனையாவதோ
எப்போது நினைத்தாலும் அழ முடிகிறது
எப்போது நினைத்தாலும் காதல் வசப்பட முடிகிறது
எப்போது நினைத்தாலும் கவிதை எழுத முடிகிறது
எப்போதுமே நினைக்கத்தான் முடிகிறது
தனிமைக்கு பயந்தவர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள்
தனிமைக்கு பயந்தவர்கள் மது அருந்துகிறார்கள்
தனிமைக்கு பயந்தவர்கள் காதலிக்கிறார்கள்
தனிமைக்கு பயந்தவர்கள் கவிதை எழுதுகிறார்கள்
தனிமைக்கு பயந்தவன் தனிமையாகவே இருக்கிறேன்

திட்டவட்டமாக
நான் அவளைச் சுற்றி
ஒரு வட்டம் வரைந்தேன்
அவள் என்னைச் சுற்றி
ஒரு வட்டம் வரைந்தாள்
வட்டங்கள் ஒன்றை ஒன்று
வெட்டிக் கொண்ட
இணையும் புள்ளிகளில்
யாரோ எங்களைச் சுற்றி
ஒரு வட்டம் வரைந்தார்
ஏதோ ஒரு விதிப்படி
நாங்கள் அந்த வட்டங்களை விட்டுத்
துடித்து வெளியேறினோம்
இப்போது நாங்கள்
எந்த வட்டத்திற்குள்ளும்
இல்லை … இல்லாமலும் இல்லை

“இரண்டு கவிதைகள்” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன