மூன்று கவிதைகள்

கவிதை ஒன்று

வெகு நாட்களுக்குப் பிறகு

எனக்கொரு கடிதம் வந்தது

சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்

எனக்கென தோன்றிவிட்ட மாயையை

அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது

நிரம்பி வழியும் தனிமையின் நிழலை

அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்

இன்னும் கிழித்துப் படிக்கவில்லை

இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்

இதை அனுப்பியிருக்கக் கூடும்

எதன் அடையாளமாகவேனும்

தெரிந்து கொள்ளும் ஆவலில்

கடிதத்தைக் கிழித்தேன்

அதனுள்

ஏதோவொரு பறவையின்

முறிந்த சிறகு கிடந்தது

கவிதை இரண்டு

இரவுகளின் நடனத்தைக்

கண்டவர்

அவ்வளவு எளிதில் உர்ரான்குவதில்லை

கழிதலறியும் உத்திகளை

எவ்வழியிலேனும் கையாளத்

தயாராக இருக்கிறார்

சுயசெய்கைகளுக்கு உட்பட்ட

காமவெளிப்பாடுகள் துருத்தி நிற்கும்

கழியாத இரவொவ்வொன்றும்

அவரை வீழ்த்த எப்பொழுதும்

காத்துக்கிடக்கின்றன

நடனத்தின் அசைவுக்குள்

விழும் எம்முறையும் வெறுக்கிறார்

நெடியுடன் பிறக்கும் விட்டிலை

கவிதை மூன்று

உதிர்தலில் வாடாத மரங்களின்

பெருமூச்சைக் கடந்து செல்லும்

நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்

ஒரு பூனையின் சாதுர்யமாக

கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து

அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்

அவரின் பாதங்களில்

பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன

ஒவ்வொரு சீட்டினுள்ளும்

கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து

சூடு தாளாமல் இறந்து போன

யாரோ ஒருவர் இருக்கிறார்

வெகு சிலர் எனது இருப்பை

கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்

அவர் இன்னும் உறங்கிக்

என் கோணிப்பை நிறைத்திருக்கும்

விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை

அவரது வாயில் ஊற்றுகிறேன்

அவை வழுக்கிச் சென்று

மரண முடிச்சைத் தேடுகின்றன

கடவுள் திமிருகிறார்

கண்கள் பிதுங்குகின்றன

சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது

மூச்சு அடங்குகிறது

கடவுள் இறந்து போகிறார்

கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்

எனது வாயிலிருந்து இருபற்கள்

நீட்டி முளைத்து நிற்கின்றன

ஒரு பிசாசின் உருவமாக

“மூன்று கவிதைகள்” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

ஆ.முத்துராமலிங்கம் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன