பரிமள விலாஸ்

சிறுகதைபாங்காக்கில்தமிழ்ப் பெண் என்று கேட்டதும் சட்டென்று உள்ளே பரபரப்பானது. அதுவரை பெண் விஷயத்தில் அசட்டையாக, சமர்த்தாக இருந்தவன்தான். தாக சாந்தி என்று பார்ட்டிகளில் கிடைக்கும். அளவாக அருந்துவான். எதாவது வாய் தவறிவிடுமோ, கேலியாக ரகளையாக கிவிடுமோ, என்று பயத்துடன், அத்தோடு அன்றைய நாளை முடித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பி, தாள் போட்டுக்கொண்டு படுத்துவிடுவான். காலையில் மூளை தெளிய எழுந்து கொள்வதில் கவனமாய் இருப்பான். தலைவலி என்று இழுத்துப் போட்டுக் கொள்ளமாட்டான். முந்தைய நாள் இரவு அவனுக்கே கனவு போலிருக்கும். ஆனால் தாக சாந்தி இல்லை, இது தேக சாந்தி! வேண்டாம் …என மறுக்க சட்டென வாய் வரவில்லை. வேண்டும் என்று சொல்லவும் கூச்சமாய், தயக்கமாய் இருந்தது. இன்னும் முழுசாய் ஒருநாள் இருந்தது கையில். கான்டிராக்ட் விவாதங்களில் இழுபறி இருக்கலாம். பேசித் தீர்க்க, சரிசெய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கலாம்… கூட ஒருநாளாகும் என அவன் அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்தார்கள். இவன் காட்டிய செக்யூரிட்டிகள் அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தன. ம். பிசினெஸ் பங்குதாரர்களில் ஒருத்தராக அமைச்சர் ஒருவரின் பினாமி இருந்தார். அந்நியச் செலாவணிகளுக்கு வசதி. ஓகோ.. புதிய தயாரிப்பை விற்கிற வளாகங்கள் பற்றிய அலசல், அதன் விளம்பர உத்திகள் எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்கினான். (கல்லூரி நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்யலாம்.) அடேடே. தாய்லாந்து மாடல் ஒருத்தியை வைத்து உருவாக்கிய ஒரு மாதிரிவிளம்பரத்தையும் காட்டினான்… கா! மிகக் குறைவாக போதைவஸ்து கலந்த குளிர்பானம். நட்வில் இங்கிலாந்து பூர்விகப் பிரஜை என்றாலும் மூணு தலைமுறையாக அவர்கள் பிசினெசில் பாங்காக்கில் கொடிகட்டிப் பறந்தார்கள். புது மோஸ்தரில் மேஜை நாற்காலிகள் என்று ஆரம்பித்து, வீட்டு அலங்காரம் வரை வியாபாரத்தை அகலப்படுத்தியிருந்தார்… மனுசன் புகழுக்கு அடிமை. பேச்சுவார்த்தையில் சில நல்ல வார்த்தைகள் அவரைப் பற்றியும், அவரது சாதனைகள் பற்றியும் தெளித்துப் பேசியபோது அவர் முகம் பிரகாசமானதை கவனித்தான். அவரைப் பாராட்டினால், என்னை அறிவாளி என நம்புகிறார்!… அப்பவே வந்த காரியம் பழம் என்று தெரிந்து விட்டது. உற்சாகமாய் இருந்தது. 2 கட்டுப்பெட்டியான குடும்பம் இவர்களுடையது. அப்பா ரொம்ப ஆசார சீலர். தினசரி காலை சந்தி பண்ணாமல் காரியங்களைத் துவக்க மாட்டார். பெருமூச்சு விடும்போது கூடவே, என்னப்பனே ஈஸ்வரா, என்று நாமகரணம் இருக்கும். நம்ம கைல என்ன இருக்கு, என்று மேலே காயத்தைக் காட்டிப் பேசுவார். பொழைச்சிக் கிடந்தா நாளைக்கு சந்திக்கலாம், என்பார். தாத்தாவின் பெயரே அவனுக்கு வாய்த்தது. தட்சிணாமூர்த்தி. நாசூக்காக தட்ஷிண் என்று சுருக்கிக் கொண்டான். அதுவே அவன் தாத்தாவின் பெயர். தாத்தாவுக்குத் தாத்தாவின் பெயரும் அதுதான். மரபும் பழம் பெருமையுமான குடும்பம். அப்பாவுக்குத் தாத்தா காலத்திலேயே வயிற்றுப்பாட்டு அடிப்படையில் நகரம் நோக்கிப் பெயர்ந்த குடும்பம் என்றாலும், ”நாங்கள்லாம் கும்போணத்துக் காரா,” என்று சொல்கையில் ஒரு மிடுக்கு, ஒரு நிமிர்வு காணும். தோப்பு துரவு கட்டி ண்ட குடும்பம்… குலப்பெருமை வழிய வழியப் பேசுவதில் மனம் சிலிர்க்கும், நுரைக்க நுரைக்க பீர் அருந்துகிறாப்போலதாத்தாவுக்குத் தாத்தாவின் – தட்சிணாமூர்த்தியின் நாலடி அளவிலான பெரிய படம் இன்றும் வீட்டில் இருக்கிறது. யாரோ ஓவியன் முன்னமர்ந்து போஸ் கொடுத்து வரைந்து வாங்கியது. ஒட்டடையா மீசையா என்று தெரியாமல் உயரப் பரணில் பார்க்கலாம். பணம் வந்துவிட்டால் மீசை இல்லாமல் எப்படி?… அவரோடு குடும்பம் சரிவு கண்டது. நிலம் நீச்சு தோப்பு துரவு என்று பரிபாலனக் குடும்பம். தோப்புக்குள் குலதெய்வ பூஜை வெகு அமர்க்களமாய் நடக்கும். ஜட்கா வண்டி. அதில் விருந்தாளிகளை அழைத்துப் போய் வயல்பக்கம் ”அதோ பாத்தேளா? அந்த எல்லை…. அதுவரை நம்மது…” அப்பா ஹைவே இன்ஞினியர். ஜி போட்ட ஜீப் பிராப்தி உண்டு. ஊரே சாமி சாமி, என்று சலாம் போட்டது. இப்பவும் நகரத்தில் அதை எல்லாம் எதிர்பார்க்கிற நப்பாசை உண்டு. ஒரு சின்ன உருமலுக்கும் ஓடி சேவகர்கள் வந்து நிற்பார்கள், அது ஒரு காலம் – என்பார். இப்ப கைத்தடி இல்லாமல் நடக்கேலாது. என்றாலும் கைத்தடியைத் தரையில் அழுத்தும் அழுத்தத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். அப்படி அவர் நினைத்துக் கொள்கிறார்!… உலகமும் போக்கும் அறியாமலேயே, அதை சட்டை செய்யாமலேயே, ஒத்துக்கொள்ளாமலேயே வளர்ந்து விட்டிருந்தார்கள். நான் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? உலகம் என்னுடையது. எனக்குக் கீழ் உலகம்! என்னை அண்டி, என்னைச் சுற்றி இயங்கும் உலகம்… தட்சிணுக்கு பாதி வேடிக்கை. பாதி பிடித்தும் இருந்தது. கும்பகோணத்துக்கு ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வரக்கூட ஆசைப்பட்டான். அப்பா அதில் இஷ்டப்படவில்லை. ”இப்ப அங்க எதும் இல்லடா, எல்லாம் போயாச்சு” என்கிற குரலின் துக்கம் சங்கடமாய் இருந்தது. சொத்தும் அதிகாரமும் மனுசனுக்குச் சட்டையில் பணம் மாதிரி, தேவையில்லாவிட்டாலும் வேண்டித்தான் இருக்கிறது. அது ஒரு தோரணை… மல்லிகைப்பூவாய் வெளுத்த கதர்ச்சட்டைக்கு, நடுவில் பள்ளம் விட்ட பித்தளை உடுக்கைப் பித்தான்களை மாட்டிக் கொள்வார்கள். மேல் பட்டன் போடாமல் புலிநக செய்ன் தவழும் நெஞ்சுமயிர்க்காடு. சந்தனம் மணத்துக் கிடக்கும். சட்டைக்குள் தெரிகிறாப் போல புத்தம் புதிய ஒத்த ருவ்வாய்க் கொத்து. தேவை இல்லாவிட்டாலும், ஒரு தங்கமுலாம் பூசிய பார்க்கர் பேனா. மீசையை அடிக்கடி ஒதுக்கிக் கொள்ளும் பந்தா. தனக்குக் கீழே உலகம் என்கிற பாவனைதான் எத்தனை சுகமானது. அதிகாரப் பித்து. நில உச்சவரம்புச் சட்டம் ஒரு இடி. அதைவிடப் பெரிய இடி ஒன்று விழுந்தது… பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சடித்து வெளியிட்டு வந்தார்கள். ஆட்சி மாறாது, பாடத் திட்டங்கள் மாறாது, என்ற நம்பிக்கையில் பத்து வருடத்துக்குத் தேவையான நூல்களை அச்சிட்டுத் தயாராய் வைத்திருந்ததில் திடீரென்று ஆட்சியும் மாறி, பாடத்திட்டமும் மாறி…. மொத்தமும் வீணாய்ப் போனது. ஒரு பெரிய பங்களா முழுதும் புத்தகம். லாரி லாரியாக எடைக்குப் போட எடுத்துப் போனது பரிதாபம். போர்க்களத்தின் பிண வண்டி போல! மிஞ்சியது ஒட்டடை படிந்த சுவரில் தாத்தா படம்தான். தூக்கிச் சுருட்டிய அந்த மீசை அப்போது சற்று கீழே வளைந்ததாக சரித்திரம். அத்தோடு முடியவில்லை விவகாரம். கருப்புப் பணம் நாட்ல ஏராளமாய்ப் போச்சுன்னதும் ஆர்டர் போட்டான் கவர்மென்ட் – ஆயிர்ரூவா நோட்டு செல்லாது! அப்பத்தைய ஆயிர்ருவ்வா பாத்திருக்கேளா? பலசரக்குக் கடை ஜாபிதா மாதிரி நீளமான கோவணத்துண்டு. கருப்புப் பணம் வெச்சிருக்கறவன் எல்லாம் சில்ரச் சில்ரயாவாயா பதுக்கி வெச்சிருப்பான்? ஆயிர்ரூவாயாத்தானே வெச்சிருப்பான்னு ஒரு கணக்கு. வெள்ளைப் பணமா? வா வந்து பேங்கல கணக்குக் காட்டி இத்தனாம் தேதிக்குள்ள மாத்திக்க – அடுத்த வாரம் முதல் ஆயிர்ரூவா புழக்கத்திலேயே கிடையாதுன்னான்… மாமா முகத்தப் பாக்கணுமே. (தன் மாமனாரைப் பற்றிக் கதை சொல்லும் பாட்டி முகத்தைப் பார்க்கணுமே.) பாடப் புத்தகம் வெச்சிருந்த குடடீன்லியே பெட்டி பெட்டியா வெச்சிருந்தாங்க. பூரா ஆயிர்ரூவா நோட்டு… சலவைத்தாள். டிரங்குப் பெட்டி சவப்பெட்டியாச்சு… எங்கயும் தர முடியாது, வெச்சிருந்து என்ன செய்ய? ஒரு கணக்கும் கிடையாது. கால காலத்துக்கும் பூட்டியே உள்ளே கிடந்த பணம். புஸ்தகங்களையாவது பழைய பேப்பர்க்காரன் எடுத்துக்கிட்டான். இதுக்கு அந்த விதியும் அத்துப் போச்சே! எடுத்து சூரை விடலாம்… மாமா சுருட்டுப் பத்த வெச்சிக்கிட்டு ஒரு சிரிப்பு சிரிச்சார், அழறாரா சிரிக்கிறாரா? நெஞ்சு ஏறியேறி இறங்குது… நாங்கள்லாம் வெந்நீர் அடுப்புல பணத்தைப் போட்டுக் குளிச்சம். கிளியோபாட்ரா பால்ல குளிப்பாளாமே? அதைவிடப் பணக்காரக் குளியல்! – பாட்டிக்கும் பெருமைப்பட விஷயங்கள் இருந்தன! பொம்பளைங்களுக்கு, அழகான மத்த பொம்பளைங்க விஷயம் எப்படியும் தெரிஞ்சிருது, நாடுவிட்டு கண்டம் விட்டு வந்து சேர்ந்திருதே3 முழுசாய் ஒருநாள் இருந்தது கையில். பூட்டிய தனியறையில் எப்படியும் அடைந்து கிடக்க முடியாது. புத்தர் கோயில் அது இது என்று பண்பாட்டு சமாச்சாரங்களிலும் ஆர்வம் இல்லை. நட்வில் அவன் தவிப்பை வேடிக்கை பார்த்ததாய்த் தெரிந்தது. கான்டிராக்ட் முடிந்த ஜோரில் நட்சத்திர ஹோட்டலில் விருந்து அமர்க்களங்கள் இருந்தன. சும்மா இல்லை – இந்தியப் பணத்தில் நாற்பது கோடி கான்டிராக்ட். மிதமாக சோமபானம் அருந்திக் கொண்டாடலாம் தப்பில்லை. அவனே இத்தனை சுளுவாய் வேலை முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. முதல் பார்வையிலேயே அவனை நட்விலுக்குப் பிடித்திருக்க வேண்டும். ஆச்சர்யம் காத்திருந்தது அப்போது அவனுக்குத் தெரியாது. மெல்லிசை என்று ஒரு பெண் மேடையேறினாள். புடவைக்கட்டும் முகவெட்டும் இந்தியச் சாயலில் இருந்தது. கண் இடுங்கிய கிழக்கத்தியச் சாயல் அறவே இல்லை. எதும் கசல் போலக் கேட்போமே என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். மிதமான பவுடர் பூச்சுதான். உதட்டுச்சாயம் இத்தனைதூரத்திலும் பளபளப்பாய்த் தெரிந்தது. லிப்கிளாஸ் போட்டிருப்பாளாய் இருக்கும். அழ(ஹா!)ய்த்தான் இருக்கிறாள் என நினைத்தான். அழகு சார்ந்த தன்னம்பிக்கை. கூந்தலைத் தளரவாரியிருந்தாள். பாய்போல் விரிந்த நீளக் கூந்தல் கிறங்கடிக்கிறதாய்… என்ன ஆச்சு எனக்கு? இத்தனை கவனிக்கிறோமே என நினைத்தான்… அழகில்லாத பெண்கள் எத்தனை குரல்வளமும் சங்கீதஞானமும் இருந்தாலும் மேடையில் எடுபடாது என்று தோன்றியது. புன்னகைத்துக் கொண்டான்… தமிழ்ப்பாடல்! எதிர்பார்க்கவேயில்லை. வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன். வெள்ளிக்கிழமை அது இரவு நேரம். மனசினில் கோலமிட்டாள்… சுசீலாவின் எளிய சங்கதிகள் ஆனால் பாடும்போதுதான் ருசி தெரியும். எளிமையாய்ப் பாடுவதுதான் சிரமம். எளிமையில் பாவம் முக்கியம். அந்தப் பார்ட்டியே அவனுக்காக என்று தெரியாது. பிரத்யேகமாக அவள் வரவழைக்கப் பட்டிருக்கிறாள். நட்வில் புன்னகைத்துக் கொண்டார். இன்னொரு மடக். இன்று அதிகம் என்று பட்டது. அலட்சித்தான். இது தேவவேளை! அழகான இரவு. தெரியாத ஊரில் தமிழ்ப்பாடல். அழகான பெண். பெண்ணே உன் பெயர் என்ன? ”சம்யுக்தா” என்றார் நட்வில். புன்னகைத்துக் கொண்டார். கான்டிராக்ட் விவாதத்தில் என்னை அயர்த்திய தட்சிண். இப்போது என் முறை… என நினைத்துக்கொண்டார். அப்படியொன்றும் பெண் விஷயத்தில் சலனப்படுகிறவன் அல்ல, என்று சொல்லியிருந்தார்கள். பெண் விஷயத்தில் சபலம் இல்லாத ஆண்கள் இல்லை, என்பது அவர் அபிப்பராயம். வழுக்கைத்தலையைத் தடவி புன்னகைத்துக் கொண்டார். கிறங்கிக் கிடந்தான் அவன்… அலுப்பான அவன் உலகம் சட்டென்று புதுப்பிக்கப்பட்டு விட்டது. கான்டிராக்டை மற. அவன் வந்ததில் மறக்க முடியாத அனுபவம் ‘இது’ என்றிருந்தது. சம்யுக்தா! எப்படியெல்லாம் பேர் வைக்கிறார்கள். பாட்டே மறந்து போனான். என்னவோ உதடசைக்கிறாள்… நட்வில் காதருகில் ”நீங்கள் விரும்பினால்…” என்னும் போது சட்டென நா உலர்ந்துவிட்டது பதில் சொல்ல. ஆனால் மனப் படபடப்பு அதிகரித்து விட்டது. பூ மலர்ந்து தேன் கசிகிறாப் போல. என்ன அசட்டுத்தனமான கிளர்ச்சிகள். 4 பிரதிபா என நினைக்க மனம் துணுக்குற்றது. பொதுவாக வெளியூர் என்று வேலைவிஷயமாக அவன் போயிருந்தால் எந்த அவசரத்துக்கும் வீட்டிலிருந்து அவனைக் கூப்பிட அவன் அனுமதிப்பதில்லை. என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியாது, என்று சமாளித்தாலும், உண்மையில் தான் தாக சாந்தி செய்துகொண்டிருக்கும் வேளைகளில் வீட்டு அழைப்புகள் சங்கடப்படுத்தி விடும், என பயம் இருந்தது. தானே தொலைபேசியில் கூப்பிட்டு பிரதிபாவுடனும் அப்படியே பிள்ளை `ஹரியுடனும் நாலு வார்த்தை பேசுவான். முன்னெல்லாம் அப்பா ஹரியுடனும் பேசிக் கொண்டிருந்தான். இப்போது அவருக்குக் காது மந்தமாகி விட்டது. பிரதிபா பிறகு அவரிடம் தகவல் சொல்வாள். அலுவலகப் பயணங்களின் போது அவன் சிநேகிதர்கள் எல்லாம் மனைவியை அழைத்துப் போனார்கள். கம்பெனி அதனை அனுமதித்தது. என்றாலும் ஏனோ இதுவரை அந்த நினைப்பு அவனில் வரவில்லை. ஒருவேளை உள்ளூற மனசுக்குள் இந்தத் தனிமையான சந்தர்ப்பத்துக்காக ஏங்கிக் கிடந்தானோ தெரியாது! நிறைய ஆசையும் அதைவிட நிறைய பயமுமாய் உள்ளே குலுங்கியது. பொன்னாசை பெண்ணாசைல நம்ம குடும்பம் சீரழிஞ்சது போதும்டா, என்று அப்பா அலுப்புடன் சொல்லிக் கேட்டிருக்கிறான். அப்ப கூட வேடிக்கையாய் அப்பாவிடம் – ”ஆடும்போது ஆடிட்டு ஓய்ஞ்சப்பறம் வேதாந்தமா உங்க குடும்பத்துக்கு…” என்று சிரிப்பான். பிறகு அவர்பார்க்கக் குனிந்து ”அந்தக் காலம்லாம் போச்சுப்பா. இது உழைக்கிற தலைமுறை… அப்டியெல்லாம் ஆகாது,” என அவரை சுவாசப் படுத்துவான். பார்ட்டி முடிந்து படுக்கையில் தூங்க முடியவில்லை. ”பார்ட்டி உங்களுக்குத் திருப்தியாய் அமைந்ததறிய மகிழ்ச்சி” என்றார் நட்வில் கைகுலுக்கி. ”உங்களை மகிழ்விப்பது எங்கள் கடமை. நாளை காலை பத்து மணிக்குக் கார் அனுப்புகிறேன்” என்றார் புன்னகையுடன். ”ம்?” என்றான் விளங்காமல். தரையில் கால் பாவாத நேரம் அது. மனசு தளும்பிக் கொண்டிருந்தது. ”இரவில்தானே ஊர் திரும்ப வேண்டும். பகலை ரம்மியமாக்கிக் கொள்ளுங்கள். பகலில் சம்யுக்தா உங்களுடையவள்… நல்வாழ்த்துக்கள்.” குபீரென்று யாரோ தூக்கினாற் போல வயிற்றில் கிளுகிளுப்பு. 5 பாடப் புத்தகம் அடித்த பரம்பரை. நேர் எதிர்மறையான வாழ்க்கை வாழ்ந்தார்கள். கைநிறையப் பணம். தேவைக்கு மேலான, அபரிமிதமான பணம், கௌரவம். தட்சிணாமூர்த்தி ஊர்ப் பெரிய மனிதர். கோவில் பொது நிகழ்ச்சிகளில் அவர் முக்கியப் பிரமுகராக அழைக்கப் பட்டார். கச்சேரிக்காரர்கள் நாட்டியக்காரிகள் என்று கலைஞர்கள் அந்த ஊருக்கு வந்தால் இங்கேதான் தங்குவார்கள். அவர்களை இறக்க தனி வீடே இருந்தது. அறுவடை முடிந்த ஜோரில் திடீரென்று உன்மத்தம் அதிகமாகி சினிமாக்காரர்களைப் பார்க்க பட்டணம் போய்வருவதும் உண்டு. திரைப்படம் எதோ ஆரம்பித்து நிறுத்தி விட்டதாகக் கேள்விப் பட்டான்… பாட்டிக்குப் பாட்டி (அப்போது பாட்டி அல்ல!) எல்லாம் பார்த்தபடி பொருமுவாள் தனக்குள். அவர்கள் வந்து மீண்டும் கிளம்பிப் போகும்வரை தாத்தா அந்த வீட்டில்தான் இருப்பார். ‘பரிமள விலாஸ்’ – என்றால் பஸ் ஸ்டாண்டு குதிரை வண்டிக்காரனே கொண்டுவந்து விட்டு விடுவான். தனி சமையல்காரன் உண்டு. ஒரே வேடிக்கை, கேளிக்கை, அமர்க்களம்… வாழ்வது ஒருமுறை என்று தத்துவம் பேசியாகிறது… இவன் தாத்தாவில் இருந்து குடும்பம் சுதாரித்ததாக அப்பா சொல்வார். விட்ட குறை தொட்ட குறை என்று, கோவில் காரியங்களில் முன்கை இன்றைக்கும் அப்பாவுடையதுதான். தவறாமல் பெருந்திருவுக்குப் பணம் போகிறது. தன் கையால் மணியார்டர் அனுப்புவதும் ரசீதைப் பத்திரப்படுத்தி மகிழ்வதும். அப்பாவின் பிறந்த நாளுக்கு இன்றைக்கும் அர்ச்சனை நடத்தி தபாலில் பிரசாதம் வருகிறது. இதுவரை இப்படி ஒரு படபடப்பு ஆர்வத்துடிப்பு அவனிடம் இருந்ததில்லை. ஆனாலும் பெயர் தெரியாத இடத்தில் சற்றும் எதிர்பாராமல் கேட்ட தமிழ்ப்பாடல். சம்யுக்தா, என்ன பேர்! இந்தியாவுக்குள் என்றால் ஒருவேளை தீர்மானமாக மறுத்திருப்பான் என்று தோன்றியது. இவளை… இவளை மறுக்க முடியுமா உன்னால், எனக் கேலியடித்தது மனம். லேசான புன்னகையுடன் அவனைப் பார்த்துப் பார்த்து அவள் பாடினாள். கையில்லாத ரவிக் அவனைத் திணறடித்தது. அவன் சுற்றுக் சூழலையே மறந்து போனான். பெண், பார்ட்டி எல்லாம் மீறிய ஒரு கொஞ்சல் இருந்தாப் போலிருந்தது அவளிடம். அழைப்பு இருந்தது. மனசை மயிற்பீலியால் வருடினாப் போல… இவளைச் சந்தித்த கணங்களுடன் மீதி வாழ்க்கை வாழ்வதா, சந்திக்காத ஏக்கத்துடன் நாடு திரும்புவதா, என்று யோசித்தான். யாருக்குத் தெரியப் போகிறது, என ஒரு சமாதானம். தெரிந்தாலும் இந்த சந்தர்ப்பம் பொறாமையைத்தான் ஏற்படுத்தும், அலுவலகத்தில் தவறாக யார் இதைச் சொல்வார்கள், என்றிருந்தது. ஒருவேளை சகாக்களுக்கு முன்பே இது அனுபவப்பட்டும் இருக்கலாம்! மனம் எப்படியெல்லாம் தனக்கு சாதகமாக கணக்கு போடுகிறது… மணி பார்த்தான். விறுவிறுவென்று குளியலறைக்குப் போனான். வெள்ளிக்கிழமை விடியும் நேரம்… என்னமாய்ப் பாடினாள். 6 சந்திக்குமுன்பே பரபரப்பாயிருந்தது. நேற்றைய அவளது முகம் கண்முன்னே வந்தது. இன்றைய அவள் அலங்காரம் எப்படியிருக்கும் என ஒரு கற்பனை. தெரிந்தும் மனிதர்கள் எப்படித் தப்பு செய்கிறார்கள்! திருட்டு ருசிக்காரர்கள். திருட்டே ஒரு ருசிதான். அதுதரும் கிளர்ச்சி. தனக்குமட்டுமேயான ஒரு ரகசியம் என்பது வேண்டியிருக்கிறது போலும். சட்டென்று இந்தப் பயணம் எத்தனை முக்கியமானதாக ஆகிவிட்டது. பொழுதுகளுக்கு றெக்கை முளைத்ததாய்த் தெரிகிறது. ஆர்டர்லி கொண்டுவந்து வைத்த காபி ஆறிக்கிடந்தது. மறந்திருந்தான். புன்னகையுடன் எடுத்துக் குடித்தான். அவன் சூடாய் இருந்தான். கதவை யாரோ மெலிதாகத் தட்டியதும் துள்ளியெழுந்தான்… எதையும் நினைக்காமல் இந்த நிமிஷத்தையே நினைடா அப்பனே, என மனசுக்கு உற்சாகமாய்க் கட்டளை பிறப்பித்தான். பயமாய் தயக்கமாய் இருந்தது. பழகிவிடும்… புன்னகையுடன் கதவைத் திறந்தான். தெரியாத ஊர். வண்டி ஓடுகிறது. வாழ்க்கை தனக்கு மாத்திரமேயானதாய் ஒரு மயக்கம். பயந்த மனசை ஷ் என அடக்கினான். தனக்கேயான உலகம், ரகசியமான உலகம். தாத்தாவிடம் பேசினால் எத்தனையோ ரகசியங்கள் இப்படிக் கிடைக்கலாம். அவர் நினைப்பு இப்ப எதுக்கு, என்று கட்டுப்படுத்தினான். பாட்டிக்குத் தெரிந்தது கொஞ்சம், தெரியாதது கடல் அளவு. முடிந்தவரை பயத்தை ஒளித்து மனசை வேடிக்கை காட்டிக்கொண்டே போக முயற்சித்தான். பிரதிபா என நினைத்து நாக்கைச் சுருட்டிக்கொண்டான். தெரியாது, அவளுக்குத் தெரியாது. இந்த ரகசியம் என்னோடு புதையுண்டு போகும். அப்பாவரை கூட இது வெளிவராது. நட்வில் பெருந்தன்மையானவர். அவரைத் தாண்டி விஷயம் வெளிவராது. காரைத் திருப்பச் சொல்லிவிட்டால் நிம்மதியாய் இருக்கும், என்று பட்டது. ஆனால் அவனுக்கு முன்னால் மனசு துள்ளி முன்னால் ஓடுகிறதே, என்ன செய்ய. இன்னும் கொஞ்ச நேரத்தில் சம்யுக்தா – உனக்கே உனக்கானவள், என்ற நினைவு எத்தனை இதம். பளபளப்பான அந்த உதடுகள். சட்டென திரும்பி அவனைக் கூர்ந்து பார்த்து சிறிய புன்னகையுடன் அவள் பாடியது, அந்த உதடுகளைக் கடிக்க வெறி வந்தது நிஜம். கதவைத் திறந்தவளைக் கண்டதும் திக்கென்றது மனசு. பிரத்யேகமாய் அவனுக்கெனவே ஓர் அலங்காரம். காரம் போல எச்சிலை உள்ளிழுத்துக் கொள்ள வைத்தது. தயங்கிய அவன் கையைப் பிடித்து – – வாங்க, என உள்ளே அழைத்த இதம். கண் படபடத்தது. அடேய் நாற்பது கோடி வர்த்தகத்தை அலட்சியமாய்க் கையாண்டவன் நீ. இவளிடம் சரணடைவதா? வெகு சகஜம் போல நடந்து கொள்… ள முடியவில்லை. பிரமிப்பாய் இருந்தது. நாய்க்குட்டிபோல அவள் பின்னால் போகிறான். மனசுக்குள் அசட்டுச் சிரிப்பு. ஷ் அவளுக்குத் தெரிந்துவிடப் போகிறது, என்று கூச்சமாய் இருந்தது. ”நம்ம ஊர்ச்சமையல்தான். அவியல். பிடிக்குமோல்யோ?” என்றாள். உன் கையால எது பண்ணினாலும் பிடிக்கும், என உளற நினைத்தான். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாள். சுவரில் நவீன ஓவியம் ஒன்று தொங்கியது. ரசனை உள்ளவள்தான் போலிருக்கிறது. சற்று சுதந்திர சிந்தனை உள்ள பெண்போல நினைத்தான். முன்பே அவனை முற்றாக அறிந்தவள் போல எத்தனை மெலிதாய் என்னைக் கையாள்கிறாள் என நினைத்தான். பெண்கள் சாகசக்காரிகள்தான். குளித்து வாசனைபூசி கிட்ட வந்து பாரிமாறும்போதே உள்க்கொந்தளிப்பாய் இருந்தது. குனிந்தபோது கன்னத்தில், வெட்கத்தை விட்டு வாசனை பிடித்தான். சிரித்தாள். மறுக்கவில்லை. ”அவசரமா?” என்றாள். அவனது தன்னடையாளத்தைக் கூரை கூரையாய்ப் பிரித்து சூரையாடிவிடுவாள் போலிருந்தது. ”நீ ஒண்ணு குடுடி” என்றான் பித்தத்துடன். ”எங்க?” என அவள் சீண்டினாள். கன்னத்தைக் காட்ட நினைத்தவன் உதட்டைக் காட்டினான். எனக்கு என்னவோ ஆகிவிட்டது, என நினைத்துக் கொண்டான். வெண்முத்துப் பற்கள். கலகலவென எப்படிச் சிரிக்கிறாள். ”கூடவே சாப்பிட்டிரு. லேட்டாகுதில்ல?” என்றான். ”உடனே போயி ஷப்ளைட் பிடிக்கணுமா?” என்றாள் கண்ணைப் பார்த்து. அப்படிக் கண்ணைப் பார்த்துப் பேசாதேயேன், என நினைத்தான். பேசியதும் பிடித்துத்தான் இருக்கிறது. விநாடி ஒவ்வொன்றும் இத்தனை அழகாய் அவன் அதுவரை உணர்ந்ததேயில்லை… பிரதிபாவுடனான கணங்கள்… அது தனிக்கதை. திருட்டு மாங்காய் இது. பின் திரும்பிக்கொண்டு தன் உடைகளுக்கு விடுதலை தர அவனை ஒத்தாசைக்கு அழைத்தபோது கண்கள் சிரித்தன உள்ளே. பிரகாசமான கணங்கள். தைரியத்துக்கு ஒரு பெக் இருந்தால் நல்லது, என்னுமுன்னே அவன் முன் ஊற்றித் தந்தாள். அடிப்பாவி ஊருக்கு விமானமேற விடுவாளா என்றே தெரியவில்லை. நவீன ஓவியம்போல புரிந்தும் புரியாத கணங்களாய் இருந்தன அவை. அவளைப் பற்றிக் கேட்கலாமாய் நினைத்து உடனே மறந்தான். அல்வாத் துண்டில் மயிர் – வேண்டாம். அட ஆண்பிள்ளையே உன்னைப்போல ஒருவனைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன், என்றாள். எல்லாரிடமும் பேசுகிற வசனமா தெரியாது. அவனுக்கு வேண்டியிருந்தது அது. உன்னைப் போல ஒருத்தியை நான் சந்திக்கவேயில்லையடி பெண்ணேகலவியில் இத்தனை வேடிக்கை உண்டா என்று திகைத்துத் திகட்டியது. அவன் மூழ்கினான். மனமோ மிதந்தது… இது இப்படியே நின்றுவிடாது, தொடர வேண்டும் என்று சங்கல்பம் பிறந்தது. சுவாசம் வந்து மல்லாக்கச் சாய்ந்தபோது ”நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சம்யுக்தா…” என்றான். ”நானும்” என்றாள் அவன் மார்பு முடிகளை அளைந்தபடியே. ”திரும்ப எப்ப வருவீங்க?” என்று கொஞ்சினாள். ”எதாவது வாய்ப்பு ஏற்படுத்திக்கிட்டாவது வருவேன்…” என அவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான். ”ரொம்ப நல்லாத் தமிழ் பேசறே…” ”இப்பதான் உங்ககிட்ட தமிழ் பேசறேன். இந்த ஊர்ல தமிழ் பேச யார் இருக்கா?” என்றாள். ”தமிழ்நாட்டுக்கு வருவியா?”
”கூட்டிட்டுப் போங்க!” என்று, என்ன அழகாய்ச் சிரித்தாள். ”எந்த ஊர் உனக்கு?” ”கும்பகோணம். இப்ப யாரும் இல்ல அங்க, ஒரு காலத்துல சொந்த வீடு இருந்தது எங்களுக்கு. பெரிய வீடு. பரிமள விலாஸ்” என்றாள் அவள்.

“பரிமள விலாஸ்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன