கடிதங்கள்

.
வெ.நாராயணன் இலக்கியவட்டம் காஞ்சிபுரம் 21.08.1989விருட்சம் 3வது இதழில் பக்கம் 23ல் நகுலன் அவர்களுடைய குறள் மூலம் கவிதை பின்வருமாறுவெளியாகியுள்ளது. ‘நில் – போ – வா/வா – போ – நில்/போ – வா – நில்/நில் – போவா?’ இதற்குஎன்ன அர்த்தம் என்று புரியவில்லை என்று சென்ற கூட்டத்திற்கு வந்த நண்பர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர. கவிதை புனைந்தவரின் கருத்தறியவும் விரும்புகின்றனர்.
நகுலன் பதில்
நில் போ வா
இப்பொழுது இயங்கிவரும் அதிநூதன இலக்கிய விமர்சன இயக்கத்தில் ஒவ்வொரு வாசகனும் ஒரு படைப்பைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறான் என்றும், சிருஷ்டி கர்த்தாவைவிட வாசகன்தான் முக்கியம் என்ற ஒரு இயக்கம் உலவி வருகிறது. மேலும் ஒரு சிருஷ்டிகர்த்தாவின் விளக்கம் அதிகார பூர்வமானது என்று சொல்வதற்கும் இல்லை. இதைத் தொடர்ந்து சிந்திக்கையில் ஒரு சிருஷ்டிகர்த்தாவும் தான் எழுதியதைப் பற்றி விளக்கம் தருவது என்பது அவனுக்கு அவ்வளவு உவப்பான ஒரு காரியமும் இல்லை.என்றாலும் …………….என் படைப்புகளைப் படித்தவர்களுக்கு, நீல பத்மனாபன் ஒரு இடத்தில் கூறியமாதிரிநான் ஒரு மரபுவாதி – புதுக் கவிதை எழுதினாலும், என் நாவல்கள், கவிதைகள் முதலியவற்றைப் படித்தவர்களுக்கு எனக்கு “குறள்” மீதுள்ள பிடிப்புத் தெரிந்திருக்கும். வேறொரு இடத்தில் வேறொரு சிநேகிதர் கூறியமாதிரி கவிதை எழுதியவனுக்கு அது முடிந்தபிறகு அவனே அதன் முதல் வாசகன் ஆகிறான் – தானே எழுதியதைத் தானே தெளிவு படுத்திக்கொள்வதற்கு.
மறுபடியும் தொடர்கிறேன். காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தைச் சார்ந்த நண்பர் வெ நாராயணனின் கேள்வி என் கவிதையின் அர்த்தம் என்ன என்று. இது ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. கருத்துக்காகக் கவிதையா அல்லது கவிதைக்காகக் கருத்தா? யோசித்துப் பார்க்க வேண்டும்.
மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என்னைப் பற்றியவரையில் நான் எதை எழுதினாலும் என்ன எழுதுகிறோம் என்ற பேதமின்றித்தான் எழுதுகிறேன் – எழுதி முடித்த பின்தான் என்ன எழுதினேன் என்று எனக்கே தெரிகிறது. இதே மாதிரிதான் ஒரே விதமான கவிதைகளைப் படித்துப் பழகிய பிறகு, வேறு வகையில் எழுதப்பபட்ட கவிதைகளைப் படிக்கும்பொழுது அது நமக்குப் பிடிபடாமல் போவதில் ஆச்சரியப் படுவதற்கில்லை. இத்தகைய அனுபவம் வரும்பொழுது அக் கவிதையைப் படிக்காமல் விட்டு விடுவது என்பது ஒரு நிலை. அதைக் கட்டாயப்படுத்திக் கொண்டு படிப்பதில் ஒரு பயனுமில்லை. ஆனால் ஒரு கால இடையீடு விட்டுப் படிக்கையில் அது நமக்கு ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் கொடுக்கலாம்/கொடுக்கிறது. இங்குதான் எலியட் கூறியமாதிரி புரியாமல் இருக்கும் நிலையிலேயே ஒரு கவிதை நமக்குப் பிடிக்கலாம்/பிடிக்கிறது.
இனி விஷயத்திற்கு வருகிறேன். அடிப்படையான தகவல்கள் உருவ வேறுபாடுகள் கொள்கின்றன. இங்கு கா.நா.சு சொன்ன மாதிரி ஒரு வார்த்தை. ஏன் ஒரு மொழியே, ஒரு படிமமாக மாறலாம், மாறுகிறது. “குறள் மூலம் ஒரு கவிதை” என்பது என் கவிதையின் தலைப்பு – இந்த மூலம் குறளில் எங்கு இருக்கிறது? குறளில் பழக்கம் உள்ளவர்களுக்கு “கற்றப்பின் அதற்குத் தக நிற்க” என்ற வரியில் கடைசி வார்த்தையில் இருந்து “நில்” என்பது, பழைய உரை ஆசிரியர்கள் கூறிச் சென்ற மாதிரி பெறப்படுகிறது. “வா போ” என்பது “மயன்””போவென்று அழைத்து வாவென்று வெருட்டி”என்ற வரியிலிருந்து வந்தது. மேலும் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வார்த்தைகளைக் கொண்டு விளையாடுவது என்பதில் ஒரு ஈடுபாடு. ஏன் எலியட் கூறியமாதிரி கவிதை எழுதுவது என்பதே ஒரு உயர்தர விளையாட்டு என்பதன்றி வேறென்ன? பிறகு எனக்கு ஒரு தொடர்ந்து வரும் பிரக்ஞையில் குறள் ஒரு நீதி போதனை நூல் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியே நீதி போதனையாக இருக்கும் என்றாலும் அதன் பின்னால் ஒரு அனுபவச் சூழல், அதன் கட்டுக்கோப்பின் இறுக்கம், அதன் வார்த்தைச் சிக்கனம், அதன் நுட்பம், இவைகளெல்லாம் அதை ஒரு உயர்தரக் கலைப் படைப்பாகச் செய்கிறது. என் கவிதையின் மையம் “நில்” என்பது, ஆனால் இந்த ஒரு நிலை பேருனை ஒரு தத்துவ நிச்சயத்திலிருந்து, நாம் தடுமாறிக்கொண்டே இருந்தாலும், அதை விட்டு நம்மால் நகர முடியவில்லை. எனவே இந்த மூன்று வார்த்தைகளுக்கு வேறு வேறு உருவங்கள் கொடுத்து, கடைசியாக வேறு ஒரு உருவம் கொடுத்து அதை ‘நில் – போ – வா’ என்ற ஒரு அர்த்தமற்ற வார்த்தையைச் சிருஷ்டி செய்து வாழ்க்கையே ஒரு விடுபடாத புதிராக அதைத் தெளிவிக்க நாம் கொள்ளும் முயற்சி எப்பொழுதுமே தோல்வியில் முடிகிறது என்றாலும், இந்த முயற்சியே நமக்கு வாழ்க்கையின் கவர்ச்சியில் ஈடுபடச் செய்கிறது. இரு வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் இந்த நிலையிலிருந்து நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. எந்தவிதச் சித்தாந்தத்துக்கும் வாழ்க்கை வழங்கிக் கொடுப்பதில்லை என்பதே அதன் ஆழ்ந்த ரகசியம் போலும். ஒரு வகையில் வாழ்க்கையைப் போல் ‘நில் – போ – வா’ என்பது ஒர அர்த்தமற்ற சொல் தொடராக நம்மைக் கவ்வுகிறது. எனவே ‘நில் – போ – வா’?
இவ்வளவுதான் என் கவிதையைப் பற்றி நான் சொல்லக் கூடியது.

“கடிதங்கள்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. அன்புள்ள நண்பருக்கு,

    தங்கள் கடிதம் கண்டேன். தமிழில் முக்கியமான படைப்பாளி நகுலன். அந்தக் கடிதத்தில் நகுலன் என்னென்ன சொல்ல வருகிறார் என்பதை நீங்கள் உற்று கவனிக்கவேண்டும்.
    ‘இப்பொழுது இயங்கிவரும் அதிநூதன இலக்கிய விமர்சன இயக்கத்தில் ஒவ்வொரு வாசகனும் ஒரு படைப்பைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறான் என்றும், சிருஷ்டி கர்த்தாவைவிட வாசகன்தான் முக்கியம் என்ற ஒரு இயக்கம் உலவி வருகிறது.’

    என்று கடித ஆரம்பத்தில் குறிப்பிடுகிறார்.

    காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தைச் சார்ந்த நண்பர் வெ நாராயணனின் கேள்வி என் கவிதையின் அர்த்தம் என்ன என்று. இது ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. கருத்துக்காகக் கவிதையா அல்லது கவிதைக்காகக் கருத்தா? யோசித்துப் பார்க்க வேண்டும்
    என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறார். இதையெல்லாம் சேரத்து அவர் கவிதையை வாசிக்க வேண்டும். மிக முக்கியமான ஒரு இடத்தில்,
    மேலும் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வார்த்தைகளைக் கொண்டு விளையாடுவது என்பதில் ஒரு ஈடுபாடு. ஏன் எலியட் கூறியமாதிரி கவிதை எழுதுவது என்பதே ஒரு உயர்தர விளையாட்டு என்பதன்றி வேறென்ன?

    என்று சொல்லும்போது, நீங்களும் நானும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கலாம் அல்லவா?
    உங்கள் கடிதத்திற்கு நன்றி.
    அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன