65வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்


அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 65வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6.30மணிக்கு (21.08.2021) சிறப்பாக நடந்தது. அதன் காணொளியைப் பாரீர்.  இது கவிதைக் குறித்து உரையாரடல் கூட்டம். 

வண்ணதாசன் பிறந்த நாள் இன்று…

அழகியசிங்கர்

 வண்ணதாசன் கதை ஒன்று.  பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது.  குற்றால அருவியில் குளிக்க வருபவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார்கள்.  நான் அங்கு ஒருமுறை சென்றிருக்கிறேன்.  தலையில் எண்ணெய்யைத் தடவி படபடவென்று அடிப்பார்கள். அது அற்புதமான அனுபவம்.


அதுமாதிரி எண்ணெய்யைத் தலையில் அடித்து  ஆயுள் மசாஜ் செய்துகொள்ள வருபவர் கேட்பார்.  என்றாவது ஒரு நாள் இதுமாதிரி ஆயுள் மசாஜ் செய்துகொண்டு அருவியில் குளித்ததுண்டா என்று.


உடனே அடுத்த நிமிடம் துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்கக் கிளம்பி விடுவான்.  கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தில் இந்தக் கதை இருக்கிறது என்று நினைக்கிறேன். கதை பெயர் ஞாபகமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.
மாதம் இரண்டு முறை நடத்தும் கதைஞர்கள் கூட்டத்தில் இந்த முறை வண்ணதாசன் கதைகளைப் பற்றிப் பேசலாமென்று நினைக்கிறேன்.


பிறந்த தினமான அவருக்கு வாழ்த்துகள்.

நவீன விருட்சம் இதழ் ஏன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது?

துளி – 215

அழகியசிங்கர்

கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து முயற்சி செய்து, விருட்சம்  117வது இதழ் கொண்டு வந்து விட்டேன்.


ஏன் என்னால் எளிதாகக் கொண்டு வர முடியவில்லை என்ற கேள்வியை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இதழ் கொண்டு வந்த பிறகு.
கேட்டுக்கொண்டே இதழையும் கொண்டு வந்து விடுகிறேன்.  இன்று வயது முதிந்தவர் நாள். நேற்று அச்சடித்து வீட்டிற்கு வந்தவுடன், நான் வீட்டில் இல்லை.  பெண் வீட்டிலிருந்தேன்.  பக்கத்து வீட்டில் உள்ள நண்பர் வாங்கி வைத்துக் கொண்டிருந்தார்.


அடுத்தநாள் மாலை நேரத்தில்தான் நான் பன்டிலைப் பிரித்து நவீன விருட்சம் இதழைப் பார்த்தேன். ஆச்சரியம் கொண்டேன். 


இதைக் கொண்டு வருவதற்கா இப்படி பாடாய் என்னையே படுத்திக்கொண்டிருந்தேன் என்ற கேள்வி என்னுள் கேட்டு அடங்கியது.


ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது ஒரு பர்சனாலிட்டியைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.


இந்த இதழில் கட்டுரைகளை அதிகம் தரவேண்டுமென்று விரும்பினேன்.  அப்படியே செய்து முடிக்க முடிந்தது. 


இந்த இதழில் வெளிவந்தவற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.


1.கேள்விகள் – பதில்கள் 

2.ஷம்பாலா நாவலில் என்ன அரசியல் இருக்கிறது-தமிழவன்

3.தர்மேஸ்வரி தேவி பருனய் மொ.பெ. அழகியசிங்கர்  

4.க.நா.சு என்கிற ஓர் இலக்கிய சகாப்தம்        -இந்திரா பார்த்தசாரதி   

5.லாவண்யா சத்தியநாதன் கவிதை 

6.கவிதையும் ரசனையும் – கட்டுரை – அழகியசிங்கர்

7.கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் – கட்டுரை – ப,சகதேவன்

8.நம்பிக்கை – சிறுகதை – கௌரிஷங்கர்

9.மொழிபெயர்ப்பு கவிதை – மரு.ஜெயலக்ஷ்மி     

10. தனது – சிறுகதை – இந்திர நீலன் சுரேஷ்

11.நானில்லாத வீடு – கவிதை – அதங்கோடு அனிஷ்குமார்

12.பேயோன் கவிதைகள் 

13.மீட்சி – சிறுகதை – பிரபு மயிலாடுதுறை                   

 14.பொம்மைப் பெண் – குறுங்கதை – முபீன் சாதிகா  

15.ஒரு நொடிக்கதைகள் 

16.நான் அவரில்லை – மைக்ரோ கதை – பெருந்தேவி 

17.கோ பூஜை – சிறுகதை – மீ.விஸ்வநாதன்

18.ஹைக்கூ/குறும்  கவிதைகள் – ந.பானுமதி 

19.நிம்மாண்டு நாயக்கரும் பொய்யாளி நாயக்கரும் – கட்டுரை

20.பூ – கவிதை – பி.ஆர் கிரிஜா

21.பதினாறு சக்கரம் – கவிதை – ப.சகதேவன்

21.எட்டிப்பார்க்கக் கூடாது – அ.க.- அழகியசிங்கர்

22.உரையாடல்

23.தெரு நண்பர் – கவிதை – அழகியசிங்கர்

63வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்திய கவிதை நூல்


அழகியசிங்கர்

சமீபத்தில் நடந்த 63வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். ‘நினைவுக்கு வராத காரணங்கள்’ என்ற ‘நவீன்’ புத்தகம்தான் அது.

உயிர்மை பதிப்பகத்தால் அச்சடிக்கப்பட்ட இப் புத்தகம் மிக அருமையாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. கையடக்கமாக உள்ளது இந்தப் புத்தகம். 54 பக்கங்கள். இந்தப் புத்தகத்தின் விலை : ரூ.40 தான். மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன்.

‘மறைக்க முடியாத பொய்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

இதைத்தான் 63வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினேன். இதிலிருந்து ஒரு கவிதையை அளிக்கிறேன்.

டிக்கெட்

வரவேண்டாம் என

என்னை நீ பணித்த

சில நிமிடங்களுக்கு முன் தான்

டிக்கெட் உயிர்பெற்றது

தனதுடலில்அச்சிடப்பட்டிருந்த

திகதியையும் நேரத்தையும்

ஒரு முறை உரக்கச் சொன்னது

தனது பயணம் பற்றிய

அவசியம் குறித்தும்

புலன்களின் வேட்கை பற்றியும்

அது ஓயாமல் பிதற்றத் தொடங்கியது

நமது இடைவெளியை

தனது மெலிந்த மேனியால்

இணைக்க முடியும் எனவும்

உன்னுள் உடைந்த சில பகுதிகளை

ஒட்ட முடியும் எனவும்

தீர்க்கமாகச் சொன்னது

நான் அதனிடம்

உன் ஊரில் நடக்கும்

மூன்று அதிசயம் பற்றி கூறினேன் :

1. வண்ணத்துப்பூச்சி மீண்டும் கூட்டுப்புழுவாவது பற்றி

2. மலர்கள் மீண்டும் மொட்டுகளாவது பற்றி

3. ஓர் அன்பு சிதைவது பற்றி

டிக்கெட் சிரித்தபடி

தான் உயிர்பெற்றதைவிட

அவை பெரிதில்லை என்றது.

1Chandramouli Azhagiyasingar

கவிதையும் ரசனையும் – சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் – 2

அழகியசிங்கர்

(தொடர்ச்சி …)


இயல்பாகவே படைப்பாளிகள் பலர் அதீத மன இயல்புடையவர்கள்.
இன்னும் பல படைப்பாளிகள் சந்று மனநிலை தெளிவாக இல்லாதவர்கள்.
என் இலக்கிய நண்பர் ஒருவர் இரண்டு புத்தகங்களை நீங்கள் படிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். ஒரு புத்தகம் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘காதுகள்’ என்ற நாவல். இன்னொரு புத்தகம் கோபி கிருஷ்ணனின் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’
சாதாரண மனநிலை உள்ள மனிதர்கள் இதுமாதிரி புத்தகங்களைப் படிக்கும்போது மனம் கலங்கித்தான் போவார்கள்.


இப் புத்தகங்கள் முழுக்க முழுக்க மனநிலை பிறழ்ந்தவர்கள் எழுதிய புத்தகங்கள். அவர்களுடைய பிரச்சினைகளை நாவல்கள் மூலம் கொண்டு வந்துள்ளார்கள்.
சுகந்தி சுப்பிரமணியன் ஒரு கவிதை.


மாறும் ஒரு பூங்காவனம்.


நேரம் தகவாமல் உணவு

வீட்டுக்குள், வெளியே என

விதவிதமாய் உடைகள்

டப்பாக்களில் நிறைந்து வழியும்

மளிகைச் சாமான்

வீடு நிறையப் புத்தகம்

மேஜை நிறைய பேப்பர்கள்

சுவர் முழுக்க சித்திரங்கள்

மாலையானால் டி.வி

காலையும் மதியமும் சமையல்

ஆனாலும் என்ன

இது போதுமா வாழ்க்கைக்கு

மனசைக் காணோமே

என் மனதை நான் தொலைத்தபின்

பிறர் மனசை அறிய மறந்தபின்

நான் உணரும் தவிப்பில்

ஏகப்பட்ட கோடிகள் நஷ்டமானது.


இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் மனசை தொலைத்து விடுகிறார். இது ஒரு மனப்பிறழ்வுக் கவிதை.


ஆத்மாநாமின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.


விடுதலை என்ற கவிதையைப் பற்றிச் சொல்கிறேன்.


கண்ணாடிச் சிறைக்குள்

கண்ணாடிச் சிறை

அக்கண்ணாடிச் சிறைக்குள் நான்
அக்கண்ணாடிச் சிறையைத் திறந்து

வெளி வர முயல்கிறேன்


திறக்கும் வழியே இல்லை

எரிச்சலுற்று

உடைத்து வர

நினைக்கிறேன்

உள்மனப் போருக்குப் பின்

முயற்சியை விடுத்து

சும்மா இருக்க முடிவெடுக்கிறேன்


கண்மூடித் திறக்குமுன்

கண்ணாடிச் சிறையைக் காணோம்

எங்கும் முன்பிருந்த அதே ஒளி


மனப்பிறழ்வு உள்ள ஒருவர் சிறப்பாக

கவிதை எழுதுபவராக இருக்கலாம். சிறப்பாக ஓவியம் தீட்டுபவராக இருக்கலாம். சிறப்பாக இசை நிகழ்ச்சியை நடத்துபவராக இருக்கலாம். சிறப்பாக விளையாடுபவராக இருக்கலாம்.

ஆனால் இவர்களுடைய அடிப்படைப் பிரச்சினை நான். அதைச் சரி செய்ய முடியாது அவர்களால். அவர்கள் படைப்புகளில் தெரியாமல் அது வெளிப்பட்டுவிடும். ஆத்மாநாம் கவிதையாக இருந்தாலும் சரி, சுகந்தி சுப்பிரமணியின் கவிதையாக இருந்தாலும் சரி, மனம் ஒரு பிரச்சினையாகப் போகிறது.


சுகந்தி, என் மனதை நான் தொலைத்தபின்…என்று எழுதுகிறார்.

ஆத்மாநாம், உள்மனப் போருக்குப் பின் முயற்சியை விடுத்து சும்மா இருக்க முடிவெடுக்கிறேன்.என்கிறார். ஆனால் என்ன எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரி புதிய கவிதைகளை எழுதியிருக்கிறார் ஆத்மாநாம்.


இந்தப் புத்தகத்தில் சுகந்தி சுப்ரமணியனின் ‘போட்டோ’ என்ற கதை சிறப்பாகப் படுகிறது. எல்லோரும் கவனிக்க வேண்டிய கதை.


இதில் கடைசியாக சேர்த்திருக்கும் டைரிக் குறிப்புகள், படிக்க வித்தியாசமாக இருக்கிறது.
கோபிகிருஷ்ணனின் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ மாதிரி இந்த டைரி குறிப்புகளை ஒரு நாவலாக மாற்றி இருக்கலாம். வித்தியாசமாக இருந்திருக்கும்.


இதில் இரண்டை மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.


எனக்குத் தோசை சுடத் தெரியலே, மறந்து போச்சு. நேத்து தோசை சுடத் தெரியிலேன்னு ஓன்னு அழுதேன். சத்தம் போட்டு அழுதேன். பெரிசா அழுகை.
****

வீட்டைச் சுத்தம் பண்ணிச் சமையல் பாத்திரம் கழுவி வச்சேன். நாலு மாத்திரை கெடச்சுது. இது கூலியா? சம்பளமா? லஞ்சமா? ****

 

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 64வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

 
அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 64வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.08.2021) சிறப்பாக நடைபெற்றது.
எல்லோரும் என்.டி.ராஜ்குமார் மொழிபெயர்த்த பவித்ரன் தீக்குன்னி கவிதைகளை வாசித்தோம். அதன் காணொளியை இங்கு அளிக்கிறேன்.

64வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

 
அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 64வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற, சனிக்கிழமை – நாளை – மாலை 6.30மணிக்கு (14.08.2021) நடைபெற உள்ளது. இது ஒரு மொழி பெயர்ப்பு கூட்டம்.

எல்லோரும் என்.டி.ராஜ்குமார் மொழிபெயர்த்த பவித்ரன் தீக்குன்னி கவிதைகளை வாசிக்க உள்ளோம். கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 64வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Aug 14, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86577606745?pwd=L2NQRFJkQlUwbWtEMlpuUG9MVlJiQT09

Meeting ID: 865 7760 6745

Passcode: 789708

சில குறிப்புகள்….


அழகியசிங்கர்


சமீபத்தில் சிறுபத்திரிக்கைகள் பற்றி ஒரு கூட்டத்திற்குத் தயாராக இருந்தேன். என் கையில் மணிக்கொடி காலம் என்ற பி.எஸ் ராமையாவின் புத்தகம் இருந்தது. அதை எடுத்துப் படித்து சில குறிப்புகள் எடுத்தேன்.


அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. ஆனால் அற்புதமான புத்தகம். புத்தகத்தில் உள்ளக் குறிப்புகள் இதோ:


– பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில்தான் தமிழில் நடை, பொருள், அமைப்பு ஆகியவற்றில் புதுயுக இலக்கியம் தோன்றியது.
– வேதநாயகம் பிள்ளை, ராஜம் அய்யர், மாதவ அய்யர் மூவரும் தமிழ் இயக்கத்தை உலக இலக்கிய உருவ ஒற்றுமை இயக்கத்துடன் இணைத்து வைத்த முன்னோடிகள் என்று சொல்வது பொருந்தும்.
– இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி காலத்தில் தமிழில் ஆங்கிலத்திலிருந்து மறந்த துப்பறியும் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டும், உள்ளூர் ஆடை மாற்றம் மட்டும் செய்விக்கப்பட்டும், தழுவியும் ஏராளமாக வெளிவந்தன.
அந்தப் பொழுதில்தான் பாரதியார் கவிதை அமைப்பில் புதிய வடிவங்களையும் தோற்றுவித்தார்.
– அதே நேரத்தில் வ.வே.சு அய்யர் மற்ற நாடுகளில் பரவி வளர்ந்து கொண்டிருந்த சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைத் தொட்டுக் காட்டித் தமிழில் புதிய இலக்கியம் பெருகி வளருவதற்குச் சிறுகதை வடிவம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் விளக்கினார்.- சுதேசமித்திரன் பத்திரிகையில் புதிய வடிவ எழுத்துக்கு புதிய வடிக எழுத்துக்கு இடம் கிடைத்தது. – 1932-33 ம் ஆண்டுகளில் சென்னையில் மேல் நாட்டு இலக்கியங்களையும் சுவைத்து, பழைய இலக்கியங்களிலும் திளைத்த சிலர் கூடி இருவகைச் சுவைகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் ஒரு வட்டம் தோன்றிச் சிறிது சிறிதாக விரிவடைந்து கொண்டிருந்தது.
1933ல் ஆனந்தவிகடன் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த முன் வந்தது. போட்டியின் விளைவாக அரசியலுக்காகப் பத்திரிகை படித்தவர்கள் கவனம் இலக்கியத் துறையின் புறம் திரும்பியது.
– 1933ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த வட்டத்தினரின் முயற்சியாகச் சென்னையில் தமிழ் அன்பர் மாநாடு நடந்தது. மாநாட்டில் உ.வே.சாமிநாத அய்யர், திருவிக, வையாபுரிப்பிள்ளை முதலியவர்களும் கலந்து கொண்டார்கள்.
– இந்தக் காலத்தில்தான் மணிக்கொடி பத்திரிகை தொடங்கியது.
– 75 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விவேக சிந்தாமணி என்று ஒரு தமிழ் மாதப் பத்திரிகை நடந்து சொண்டிருந்தது. அதில்தான் பி ஆர் ராஜம் அய்யர் தமது கமலாம்பாள் சரித்திரத்தைத் தொடர்கதையாக எழுதினார்.
– ஸண்டே அப்சர்வார் என்ற பத்திரிகை உலக முழுவதுமிலிருந்த தந்திச் செய்திகள் யாவும் இருக்கும். அதோடு, கலை, இலக்கியம் போன்ற சிறப்புப் பகுதிகளும் இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்திப் பத்திரிகையாகவும் கட்டுரைகள், கதைகள், வாழ்க்கைப் போக்குகள், சிந்தனையாளர்களின் கருத்துக்கள் யாவும் கொண்ட ஒரு வார இதழாகவும் இருந்தது.
– மணிக்கொடி பத்திரிகை அந்த நேரத்தில் தமிழ்ப் பத்திரிகைகளைப் படிக்கும் எல்லா மக்களுக்கும் சுவைக்காது என்பது அதைத் தொடங்கியிருப்பவர்களுக்கும் தெரியும். மணிக்கொடி தரத்தைச் சுவைத்து வரவேற்பவர்கள் இரண்டாயிரம் முதல் ஐயாயிரம்இருப்பார்கள் என்று எதிர்பார்த்ததன் அது தொடங்கப்பட்டது. பன்னிரண்டு இதழ்கள் வெளிவந்த பிறகும் அந்தத் தரத்து வாசகர்கள் ஒரு ஆயிரம் பேர்கள்கூட கிடைக்கவில்லை என்ற நிலைமைதான் இருந்தது.
– அரசின் ஆதரவில் நடந்த சென்னை நூலகம் அசோஸியேஷன் என்ற புத்தகாலயச் சங்கத்தின் முந்நூற்றைம்பது உறுப்பினர்களுக்கும் மணிக்கொடி இதழ்கள் இலவசமாக அனுப்பப்பட்டன.
ஒரே ஒருவர்தான் மணிக்கொடிக்கு ஒரு வருடச் சந்தா அனுப்பி ஆதரவு காட்டினார். நமது உலகறிந்த விஞ்ஞான மேதை சர் ஸிவி ராமன் அவர்களின் மனைவியர் திருமதி லோககூந்தரி ராமன்தான் ஆதரவளித்த அந்த ஒரே ஒருவர்.
– விற்பனையாளர்கள் பத்திரிகை உருவத்தை மாற்ற வேண்டுமென்றார்கள்.
உண்மையில் பத்திரிகை உருவத்தை மாற்றினார்கள். அதனால் விற்பனை கூடவில்லை என்பது உண்மை.

கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்

அழகியசிங்கர்


சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டேன். தமிழில் மனப்பிறழ்வுடன் இலக்கிய உலகத்தில் பவனி வந்தவர்களில் ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்கள்;.

கவிதை மூலமாக ஆத்மாநாமும், சிறுகதைகள் மூலமாக கோபிகிருஷ்ணனும் சாதித்துக் காட்டியவர்கள்.

பெண் படைப்பாளியான சுகந்தி சுப்ரமணியனும் மனப்பிறழ்வுடன் தன் வாழ்நாளைக் கடத்தியவர். இவருடைய கவிதைகள் எல்லாம் மனப்பிறழ்வை இன்னும் துல்லியமாகக் காட்டுகின்றன.

இப் புத்தகத்தில் ஜெயமோகன் சுகந்தி சுப்ரமணியன் கவிதைகளைக் குறித்து இப்படிக் கூறுகிறார். “எப்படியானாலும் சுகந்தியின் கவிதைகளை இப்போது பார்க்கும்போது, அர்த்தமுள்ள ஒன்றை சுப்ரபாரதிமணியன் செய்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.” என்கிறார்.

இன்னொரு இடத்தில் ஜெயமோகன் இப்படி எழுதியிருக்கிறார். ‘2009இல் சுகந்தியின் மறைவை சுப்ரபாரதிமணியன் ஒரு குறுஞ்செய்தியில் எனக்குத் தெரிவித்திருந்தார். அந்த குறுஞ்செய்தி விதவிதமான நினைவுகளை எழுப்பியது. பல வருடங்கள் தாண்டிச் சென்று விட்டிருந்தன. சுகந்தி கவிதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டிருந்தார். சிலகாலம் மனநோய் விடுதியில் இருந்துவிட்டு மீண்டு வந்திருந்தார். அவரை நானேகூட நினைத்துப்பார்த்ததும் இல்லை. அந்த மரணம் ஒரு பெரிய விடுதலை என நினைத்துக்கொண்டேன். உடல் என்ற அடையாளம் என்ற வாழ்க்கை என்ற அறையைத் திறந்து அவர் வெளியேறிவிட்டார்.

திருப்பூர் தமிழ்ச் சங்க விருது வாங்கத் திருப்பூர் சென்றபோது சுகந்தி சுப்ரமணியனைப் பார்த்திருக்கிறேன். அப்போது என்னிடம் அவர் கவிதைக் குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவருடன் பேசும்போது இவருக்கா மனப்பிறழ்வு என்று தோன்றியது.

அவருடைய ‘புதையுண்ட வாழ்க்கை‘ என்ற கவிதைத் தொகுதியைக் குறித்து விமர்சனம் எழுதியிருந்தேன். இந்தத் தொகுதியில் இருப்பவை பெரும்பாலும் கவிதைகள். சில கதைகள். சில டைரிக் குறிப்புகள். எந்த ஆண்டில் இதையெல்லாம் எழுதினார் என்பது பற்றிக் குறிப்புகள் இல்லை. அவர் கணவர் சுப்ரபாரதி மணியன் ஒரு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் என்பதால் சுகந்தி எழுத்துக்களைப் பாதுகாத்துத் தொகுத்துள்ளார். இப்போது ஒரு கவிதையைப் பார்ப்போம்.


ஒரு கவிதை முழுக்க ஒரே விஷயம்

எத்தனை வீர சாகசம் பெண்ணே

முதல் வரியில் வந்தது

குழந்தை சிரிப்பு மனதில்.


இரண்டாவதில் தண்ணீர் பிடி சண்டைகள்.

மூன்றாம் வரியில் குளிரில் விறைத்து

செத்த லட்சுமி கிழவி நான்காவதில்

கேஸ் தீர்ந்த அலுப்பில்

ஸ்டவ்வின் உதவியான இம்சைகள்


ஐந்தாம் வரியில்

ஓசியில் டிவி சினிமாவுக்கு

அலைந்து கதவு தட்டும் குழந்தைகள்

ஆறாவதாய் சின்னம்மாவின்

மெனோபாஸ் கஷ்ட அழுகைகள்

ஏழாவது வரியில்.


இன்னும் சமையல் ஆகவில்லை.

இன்னொரு கடைசி வரியாய்

கவிதையை முடிக்க

ஒரு வரி சொல்லேன் பெண்ணே!


சுகந்தி சுப்ரமணியன் கவிதையில் முக்கியமான ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். சின்னம்மாவின் மெனோபாஸ் கஷ்ட அழுகைகள் என்று ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். பெண்கள் படும் துயரங்களை பதிவு செய்திருக்கிறார்.

பொதுவாக ஆண்கள் வழியாக உலகத்தைப் பார்க்கும் பெண் கவிஞர்கள் தங்களுடைய பிரச்சினைகளை எழுத்தில் பதிவு செய்ய மாட்டார்கள். சுகந்தியின் கவிதையில் பெண் தான் படும் வலிகள் பதிவாகி உள்ளன.

முதன் முதலில் சுகந்திதான் தன் கவிதைகளில் தன் வலியை அதாவது பெண் படும் வலியைப் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. தமிழில் இவர்தான் முன்னோடியாக இருப்பாரா என்று தோன்றுகிறது.

இன்னும் ஆராய்ந்து பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வரமுடியும். இவருடைய இரண்டாவது கவிதையில் ஒரு ஆணின் திமிர்தனம் எப்படி வெளிப்படுகிறது என்பதை நாசூக்காகத் தெரியப்படுத்துகிறார். இதோ அந்தக் கவிதை.

நான் போகின்ற பாதையெல்லாம்

பெண்ணென்று பயமுறுத்தும் எல்லாரும்.


என் குழந்தை தவிர

ரேஷன் கடையில்

சர்க்கரை எடை

குறைந்த காரணம் கேட்டதும்

பாமலின் டின்னுக்கு எழுதியவன்

அதை அடித்து ஸ்டாüக் இல்லையென்றான்.


பெண்ணுக்கென்ன கேள்வி என்றான்

கியூவில் நின்ற ஆண்களும், பெண்களும்,

வானம், வீதி, வாசனம் பார்த்தனர்


இடுப்பிலிருந்த என் குழந்தை

முகம் பார்த்துச் சிரித்தது.


சுகந்தியின் கவிதையை மேலும் நான் விவரிக்க விரும்பவில்லை. கவிதையைப் படித்தவுடன் நமக்கு அக் கவிதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று புரிகிறது. பெரும்பாலும் சுகந்தி அவருடைய வீட்டைப் பற்றி அவருடைய வாழக்கைக் சூழல் பற்றி குழப்பமான மனநிலையைப் பற்றி எழுதி உள்ளார். இப்படி குடும்ப உறவைப் பற்றி கவிதைகள் எழுதியதால் இவர் கவிதைகள் நான்கு சுவருக்குள் முடிந்து விட்டனவோ என்று தோன்றுகிறது. தலைப்பில்லாமல் எல்லாக் கவிதைகளையும் எழுதி உள்ளார்.

மூன்றாவதாக நான் குறிப்பிடுகிற கவிதை முழுக்க முழுக்க பெண் மையக் கவிதை. நான் சமீபத்தில் ஒரு பெண் கவிஞரின் கவிதைகளைப் படித்தேன். அது “முழுக்க காதல் கவிதைகள். எல்லாம் கருத்துக் கொட்டல்கள். அனுபவம் சற்றுக்கூட இல்லை. போஙூயான வார்த்தைகள். ஆனால் சுகந்தி கவிதைகள் இயல்பாக அவர் நிலையைப் புலப்படுத்துவதாக உள்ளது. இதோ இன்னொரு கவிதை.


என் குழந்தையின்

தொப்புள் கொடியை

அறுத்தது யார்?

பாட்டியா? நர்ஸô?

நினைவில்லை


என் முதல் கர்ப்பம்

பற்றிய முதல் செய்தியை

யாரிடம் சொன்னேன்?

ஞாபகமில்லை


பள்ளியில் அ, ஆ, இ, ஈ

கற்றுக் கொடுத்த ஆசிரியர் யார்

மறந்து போனது


பள்ளி மைதானத்தில்

விளையாடும்போது ருதுவான கணத்தில்

என் கைபிடித்து சந்தோஷம் கொண்ட

முகம் எது?

நினைவில்லை.


சட்டெனச் செத்துப் போன அப்பா

எனக்காய் விட்டுப் போன வார்த்தைகள்

எவை? எவை?

நினைவில்லை.


முதல் பிரசவம் குறித்து

பயமுறுத்திச் சொன்னவர் யார்?

மறந்து போனது

பாஷை புரியாத ஊரில்

புது பாஷையில்

முதல் கேள்வி கேட்ட பெண்?

நீள்கிறது நினைவில்லைகள்,

ஏதோ ஒருவகையில்

எல்லாவற்றிற்கும்

முக்கியத்துவம் இருந்தும்


அடுக்கடுக்காய் ஒரு பெண் படுகிற பதற்றம் இக் கவிதை முழுவதும் தெரிகிறது. பெண்களால் உணருகிற பெண்ணைப் பற்றிய கவிதை இது. மொத்தத்தில் இவர் கவிதைகள் மூலம் இவர் குரல் இப்படி ஒலித்துக்கொண்டிருக்கிறது. மனப்பிறழ்வான மனநிலையைத் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார் இன்னும் இவர் படைப்புகளை ஆராய விரும்புகிறேன்.
(இன்னும் வரும்)


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 8 ஆகஸ்ட் 2021அன்று வெளிவந்தது.)

07.08.2021 அன்று விருட்சம் நடத்திய 63வது கவிதை நேசிக்கும் நி கழ்ச்சி

அழகியசிங்கர்

இந்த 63வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சியில் 30 பேர்களுக்கு மேல் கலந்துகொண்டு ஆத்மாநாம் கவிதைகளை வாசித்ôர்கள்.  அதைத் தொகுத்து காணொளியாக உங்கள் முன் அளிக்கிறேன்.
கண்டு களியுங்கள்.