மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

அழகியசிங்கர்  

 படிப்பு

கால சுப்ரமணியம்

படிப்பதென்பது சிரமமான காரியம்தான்.

படித்தால் அறிவு வருகிறது

எதையும் யோசிக்க வைக்கிறது. 

மற்றவர்களுடன் 

எரிச்சலடைய வேண்டியிருக்கிறது

பிழைக்கத்தெரியாதவனாகிறான் 

வெளியில் பெருமைப்படுத்தப்பட்டு 

உள்ளுக்குள் சிரிக்கப்படுகிறான்.

கண்களில் தீட்சண்யம் மங்கி 

கண்ணாடி போடுகிறான். 

வேலைகளைத் தட்டிக் கழித்து 

அவசரமாய் மேய்ந்து 

தூக்கமில்லாமல் அசைபோடுகிறான்.

மற்றவர்களுக்குப் பிரமிப்பூட்டும் 

கனத்த புத்தகங்கள் 

மந்திர எழுத்துகள் 

இவனுக்குச் சாதாரணமாகின்றன. 

முகம் கடுத்து தலை நரைக்கும் 

வழுக்கையும் விழும் , 

நெற்றியில் கோடிழுக்கும். 

போதைவஸ்து வேறு தேவையில்லை 

விளக்கு வெளிச்சங்களில் சிறைப்படுகிறான் 

மற்றவர்களின் அர்த்தமற்ற வாழ்க்கையை 

எண்ணிச் சிரிக்கிறான். 

படித்த விஷயங்களை ஞாபகப்படுத்தப் 

படாதபாடு படுவான் 

அவர்கள் சொல்வதைத் 

தனதாகப் பாவித்துக் கொள்வான்

சுயமிழப்பான் 

வெறும் வார்த்தை லட்சியங்களுக்கு 

உயிரையும் விடுவான். 

படிப்பதைவிட ஆறறிவுக்கு 

வேறு முக்கிய வேலை உள்ளதா என்ன?

நன்றி : மேலே சில பறவைகள் – கால சுப்ரமணியம்  லயம் வெளியீடு – பக். 88 – விலை : 70 – தொலைபேசி : 9442680619

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி



அழகியசிங்கர்

மயிலாடுதுறையில் இருக்கும்போது ஒரு இலக்கிய நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.  அவர்  ஆயிரம் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதாகச் சொன்னார்.  ஆயிரம் புத்தகங்கள் என்றால் அளவு என்ன என்று பார்ப்பதற்காகப் போனேன்.  

அங்குப் போய் பார்த்தவுடன் ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாகவே தெரியவில்லை.  அந்த அளவிற்கு அடுக்கி வைத்திருந்தார். மூன்று அடுக்குகளாக வைத்திருந்தார்.  

வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அப்படி அடுக்க வேண்டுமென்று தோன்றியது.  என் நூலகத்தில் அதுமாதிரி ஆரம்பித்தேன். 

புத்தகங்களை நிரப்புவதற்கு முன்னை விட அதிக இடம் கிடைத்தது.  முன்பு நான் புத்தகங்களைப் படுக்க வைத்திருந்தேன்.  அதன் மேல் மேல் என்று அடுக்கிக்கொண்டு போவேன்.  ரொம்ப இடத்தை அது எடுத்துக்கொண்டு விடும்.

நண்பர் வீட்டிலிருப்பதுபோல் நீளமாகப் புத்தகங்களை நிற்க வைத்திருந்தேன்.  புத்தக முதுகு பார்ப்பவர்களைக் கவர்ந்து விடும். மேலும் அதிக இடம் கிடைக்கும்.  நான் வசிக்கும் வீட்டிலேயும் கட்டிலில் அப்படி அடுக்கத் தொடங்கினேன். மேலும் முதுகைப் பார்க்கும் போது என்ன புத்தகம் என்று தெரிந்து விடும்.

ஊரிலிருந்து வந்தவுடன் எனக்கு இரண்டு நாட்கள் இப்படிப் பொழுது போயிற்று.  மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஏகப்பட்ட புத்தகங்கள் நீள வாக்கில் அடுக்க வேண்டும்.

ஒரு இரும்பு ராக் முழுவதும் 33 வருடங்களாகச் சேகரித்து வைத்திருக்கும் விற்காத விருட்சம் இதழ்களை (என்னை விட்டுப் போக விரும்பாத) நீள வாக்கில் அடுக்கி அழகு பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி.

புத்தகக் காட்சி – ஒளிப்பதிவு கூட்டம் – 11 – 20.01.2020 அன்று நடந்த நிகழ்ச்சி

அழகியசிங்கர்

“புத்தகக் காட்சி முடிந்து விட்டது. என் புத்தகமான காலியாக இருக்கின்றன நாற்காலிகள் என்பதைக் குறித்து செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் பேசியதை ஒளி பரப்புகிறேன். ஆனால் அங்கே பேசியதை ஒளிபரப்பு செய்வதில் தாமதம். கணினியின் ஹார்ட் டிஸ்க் போய்விட்டது. முகநூலில் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. இதோ இப்போது பதிவு செய்கிறேன்.

புத்தகக் காட்சி – ஒளிப்பதிவு கூட்டம் – 9 – 18.01.2020 அன்று

அழகியசிங்கர்

புத்தகக் காட்சியில் எடுத்த ஒளிப்பதிவுகள் முழுவதையும் நான் இன்னும் ஒளிபரப்பவில்லை. அதன் பின் நண்பர்கள் புத்தகக் காட்சி அனுபவங்களைக் குறித்து எடுத்த ஒளிப்பதிவுகளை நான் இன்னும் பயன் படுத்தவில்லை.
கவிஞர் ஜானு இந்து அவர்கள் அழகியசிங்கரின் நாவலான ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன் என்ற புத்தகம் குறித்து உரையாடிய ஒளிப்பதிவு

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 130

அழகியசிங்கர்  

‘உயிருள்ள பத்திரிகை’

மீரா

லாரி மோதி

மாடு சாவு

மாடு முட்டிக்

கிழவி மரணம்

கணவன் மனைவியின்

கழுத்தை அறுத்தான்

மருமகன் மாமன்

மண்டையை உடைத்தான்

இவை தாம்

என் தமிழ் இனத்தை மேலே

உயர்த்த வந்த

ஒரேஉயி ருள்ள

பத்திரி கையிலே

பளிச்சிடும் செய்திகள்

நன்றி : மீரா கவிதைகள் (முழுத் தொகுப்பு) – அன்னம் மனை எண்.1 நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 077 கை பேசி : 7598306036 – பக்கங்கள் : 573 – விலை : ரூ.400  முதல் பதிப்பு : 2015 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2– 129

அழகியசிங்கர்  

பிம்பம்

சுரேஷ் ராஜகோபால்

வீட்டில் நிலை கண்ணாடி

அதில்தான்

தினமும் முகம் பார்ப்பேன்

ஒரு அருவருப்பான பிம்பம்தான்

தெரிந்தது

எனக்குள் ஒரு அகம்பாவம்

குற்றம் அதில்தானே என்றே

கண்ணாடியை சுத்தம் செய்தேன்

துணிகொண்டு துடைத்தேன்

மின்னியது

மறுபடி போய் நின்றேன்

பிம்பத்தில் மாற்றமில்லை

பிழை

ஆடியிலா

என்னிலா-

வியந்து நின்றேன்

நன்றி : நான் என்னைத் தேடுகிறேன் – சுரேஷ் ராஜகோபால் – பக்கங்கள் : 104 – விலை : ரூ.75 – குவிகம் பதிப்பகம் – தொலைபேசி : 9442525191 – 9791069435

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

அழகியசிங்கர்  

தவசிக்கருப்புசாமி கவிதை

முடிந்துவைத்துக் கொடுப்பவள் மூச்சு 

வருவதும் போவதுமாயிருக்கிறது 

ஓலை வந்தால் நடையழியும் 

அன்றுமில்லை காற்று இன்றுமில்லை குளிர் 

மீறின பண்ணாட்டுக்காரி தொண்டைக்குழியிலென்ன ஆசையோ 

சொத்துக்கு வழக்காடுகிறா ளென்றுச்சொல்லி 

சித்திரத்தை தோண்டி அப்புறத்திலே பதிக்கும் 

செல்ல மகளை தள்ளி வைத்தோம் 

நெய்ப்பந்தம் பிடிப்பவர்களுக்கேது நேரம் 

தலை திரும்பவொட்டாது தொடுதிரை மேய்ச்சல் 

அப்பனாத்தாள் பேச்சுக்கு செவி சாய்ப்ப தென்பதொரு 

அப்பட்டமான பொய் பித்தலாட்டம் 

எசமான் பிழைக்கவா கன்றுகள் சூல் கொள்வது 

பெயர்த்த பணத்திற்கு குதிரைகளோட வேண்டும் 

மலம் ஜலம் புடை சூழ முடைக்கட்டில் கோலோச்சும் 

காய்ச்சல்காரி கருவாட்டுக்கு அனத்துகிறாள் 

ஊசிப்போட்டுக்கொல்லுங்க 

ஊசிப்போட்டுக்கொல்லுங்க 

ஒத்த நூறுருவா தாளுக்கு பழி சுமக்க 

நமெக்கென்ன கேனமா?

நன்றி : அழிபசி – தவசிக்கருப்புசாமி – வெளியீடு : மணல்வீடு – ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டுர் வட்டம், சேலம் மாவட்டம் – 636 453 பக்கம் : 78 விலை : ரூ.80 தொலைபேசி : 09894605371

புத்தகக் காட்சியை முன்னிட்டு தாறுமாறான கவிதைகள்

 

அழகியசிங்கர்

1.

புத்தகக் காட்சி ஓய்ந்து விட்டது

இன்னும் ஓயவில்லை

மனதிலிருந்து

2.

தனி இதழ் நன்கொடை விலை ரூ.20

என் நாவலின் பெயர்

விலை ரூ.20 தா என்று கேட்கிறார்கள்

3.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு

வந்து விட்டேன்

வீடு முழுக்க புத்தகங்கள்

4.

நண்பர்கள் வந்தார்கள்

புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்

பின்

சிரித்தபடியே சென்று விட்டார்கள்

5.

எல்லாரும் வந்தார்கள்

எல்லாம் சரிதான்

ஆனால் நான் நினைத்தபடி

புத்தகங்கள் வாங்கவில்லை

6

புத்தகக் காட்சியில்

சில இடங்களைத்

தவிர்க்க நினைத்தேன்

ஆனால் முடியவில்லை

யூரின் போகுமிடத்தையும்

சாப்பாடு கூடத்தையும்

7.

இந்தப் புத்தகக் காட்சியில்

நாவல்களாக வாங்கிக் குவித்தேன்

என்னன்ன நாவல்கள் என்று கேட்டார்கள்

நான் சொல்லவில்லை

8.

புத்தகங்களை வாங்கியாயிற்று

எப்போது

என்று கேட்கிறார்கள்

அது

எப்போதும் குழப்பம்தான்

9.

வந்தார்கள்

வென்றார்கள்

சென்றார்கள்

10.

பொன்னியின் செல்வன் வத்தியதேவன்

குதிரையேறி

எல்லாக் கடைகளிலும்

இருக்கிறான்

துளி – 93- புத்தகக் காட்சி நினைவுகள் 3

அழகியசிங்கர்

பொதுவாகப் புத்தகக் காட்சி உரிய நேரத்திற்கு நான் வர முடியாது.  நேற்று கூட்டம் 12 மணிக்குக் கூட்டம் ஆரம்பிக்கிறது என்று போனேன்.  பிறகுதான் தெரிந்தது பதினொரு மணிக்கே.

புத்தகக் காட்சியில்தான் பல நண்பர்களைப் பார்த்து உரையாடமுடியும்.  புத்தகக் காட்சியில் பரிதாபத்துக்குரியவர்கள் கவிஞர்கள்.  

என்ன தலைகீழாக நடந்தாலும் கவிதைப் புத்தகம் விற்பது என்பது நடக்காது.  பலர் கவிதைப் புத்தகங்களை விசிட்டிங் கார்டு போல கொடுத்துவிடலாமென்று கேவலப் படுத்துவார்கள்.  அதுமாதிரியெல்லாம் கொடுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றும்.

கவிதைப் புத்தகம் கொண்டு வருபவர்களை நான் எச்சரிக்கை செய்வது வழக்கம்.  இப்போது உள்ள சூழலில் கவிதைப் புத்தகத்தைக் குறைவாக அச்சிட்டு வைத்து கொள்ளலாமென்று தோன்றுகிறது.

நான் ஞானக்கூத்தனின் இம்பர் உலகம் (அவர் சொல்லி) கவிதைத் தொகுதி கொண்டு வந்தபோது 50 பிரதிகள்தான் விற்க முடிந்தது.  நானும் அதிகமாக அடிக்க வில்லை.  அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு 100 பிரதிகள்தான் அடித்திருந்தேன். 100 கவிஞார்களின் கவிதைகளைத் தொகுத்து மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்று தொகுதி கொண்டு வந்தேன்.  அளவோடுதான். 

ஒரு புத்தகம் 100 பிரதிகள் விற்றால் குதிக்க வேண்டும்போல் தோன்றும். அதுவும் கவிதைப் புத்தகங்கள் விற்றால் ஒரே உற்சாகமாகிவிடுவேன். எனக்குத்தான் இதுமாதிரி நடக்கிறது.  மற்ற பதிப்பாளர்களுக்கு அது மாதிரி இல்லை என்று நினைக்கிறேன்.

என் நண்பர் மையம் ராஜகோபல் கவிதைப் புத்தகங்கள் கொண்டு வர விரும்பினார்.  அவரிடம் எச்சரித்தேன்.  எத்தனைப் புத்தகங்கள் கொண்டு வரப் போகிறீர்கள்.  அவர் நூறைத் தாண்டிய ஒரு எண்ணிகையைக் கூறினார்.  300 அல்லது 500.  நான் அலறினேன். ஏன் அப்படி செய்கிறீர்கள்.  50 போதும் என்றேன்.  அவருக்கு நிறையா நண்பர்கள் என்றார்.  அப்படியென்றால் 100 அடியுங்கள். அவர் என் பேச்சைக் கேட்கவில்லை.

என்னிடம் விற்பதற்கு அந்தப் புத்தகம் கொடுத்தார்.  அந்தக் கவிதைப் புத்தகம் தலைப்புப் பார்த்தவுடன் இதுமாதிரி தலைப்பில் ஒரு கவிதைப் புத்தகம் எழுதினால் எப்படி விற்குமென்றுதான் தோன்றியது.  இது எடுபடாது என்றேன் ராஜகோபாலனிடம். 

ஆனால் அவருக்கு நிறையா நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார் ராஜகோபால் திரும்பவும்.  எனக்குச் சந்தேகமாக இருக்கிறது என்றேன்.   கஞ்சா என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை 64 பக்கங்களுக்கு எழுதி உள்ளார்.  எப்படி சொல்வது என்று தெரியவில்லை அவருடைய கவிதை வரிகளில் தமிழ் விளையாடுகிறது. வண்ணமலைக்குன்றின் மேல் அல்லிக்குளம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.  இனிமேல்தான் மனம் ஊன்றி கவிதையை வாசிக்க வேண்டும். கவிதைப் புத்தகம் எந்த ஆண்டு வந்தது என்பதை ராஜகோபாலன் குறிப்பிடவில்லை. 

பழனிவேள்  இப்போது உயிருடன் இல்லை.  என்னுடைய புத்தக அரங்குக்கு வந்திருந்து சில நிமிடங்கள் உரையாடியிருக்கிறார். அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன்.  அதை கணினியில் தேடிக்கொண்டிருக்கிறேன்.    என் புத்தக அரங்கில் வருபவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என் வழக்கம்.  பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருப்பவரைப் போல் தோற்றம் தருவார்.  ஆனால் பழகுவதற்கு நல்ல மனிதர்.

இந்த முறை புத்தகக் காட்சிக்குப் போகும்போது அவருடைய கவிதைத் தொகுப்பு கிடைத்தது.  விற்கலாமென்று 3 பிரதிகள் மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். விற்பனைக்கு வந்த எல்லாக் கவிதைத் தொகுதிகளையும் ஒரு தட்டில் குவித்து வைத்திருக்கிறேன். அவருடைய தொகுதியையும் சேர்த்து வைத்திருக்கிறேன்.  20 சதவீதம் குறைத்துக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் யாரும் அந்தத் தட்டை தொடக்கூட இல்லை. 

புத்தகக் காட்சி நினைவுகள் 2

அழகியசிங்கர்

புத்தகக் காட்சி ஜனவரி மாதம் நடப்பதுதான் சரி.  வங்கியில் பணிபுரியும் போது பொங்கல் திருவிழாவை ஒட்டி பணம் முன்னதாகக் கொடுப்பார்கள்.  பின் ஓராண்டிற்கான மருத்துவ சலுகைக்கான தொகையும் பெற முடியும். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் எதாவது புத்தகம் கொண்டு வருவதும்,  நடக்கும் புத்தகக்காட்சிக்கு வாடகை தருவதுமாக இருப்பேன்.

ஓராண்டில் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள்தான் கொண்டு வர முடியும்.  பல ஆண்டுகள் நான் இப்படித்தான் புத்தகங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  விருட்சம் இதழையும் நான்கு இதழ்கள் கொண்டு வந்து விடுவேன். சிலசமயம் 3 இதழ்களாகப் போய்விடும். 

நான் முதலில் கொண்டு வந்தது கவிதைப் புத்தகம்.  10 ஆண்டுகள் மேல் ஆயிற்று அதை விற்பதற்குள்.  பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன்.  என்னுடைய கவிதைத் தொகுதி இல்லை. சில எழுத்தாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  என் கவிதைப் புத்தகங்கள் நன்றாக விற்று உள்ளன.  ‘தொலையாத தூர’ மாகட்டும், ‘யாருடனும் இல்லை’ ஆகட்டும்.

என் புத்தகங்கள் கவிதைப் புத்தகங்களாக இருப்பதால் நூலக உத்தரவு வாங்குவதற்கு கிடைக்கவில்லை.  இப்போது இன்னும் மோசம்.

நகுலன் அவர் புத்தகத்தைக் கொண்டு வரும்போது 30 பிரதிகளுக்கு மேல் கொண்டு வராதீர்கள் என்பார்.  அவர் சொல்வது இன்று வரை உண்மை. அதுவும் கவிதைப் புத்தகத்திற்கு அது பொருந்தும்.  அவருடைய இரு நீண்ட கவிதைகள் கொண்டு வந்தேன்.  ஒரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ மாணவர்களுக்கு பாடப் புத்தகம்.  என்ன சோகம் என்றால் அந்தப் புத்தகத்தைப் படிக்க இரண்டே இரண்டு மாணவர்கள்தாம்.

ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சி வரும்போதும் என் பொழுது உற்சாகமாக இருக்கும்.  மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களை நான் விற்பேன். யாராவது என்னிடம் விற்கக் கொடுத்தால் விற்றுக் கொடுப்பேன்.

நான் ஒவ்வொரு ஆண்டும் எனக்குக் கிடைக்கும் தொகையில் புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  ஆனால் ஒரு போதும் என் மனைவியிடமோ என் தந்தையாரிடமோ (அவர் பெயரில்தான் பதிப்பகத்தை நடத்தினேன்) அல்லது என் நெருங்கிய (அப்படி யாராவது உண்டா) நண்பர்களிடமோ ஒரு பைசா கேட்டதில்லை. 

வருடத்திற்கு 15 நாட்கள் எனக்கு உற்சாகமாகப் பொழுதாக இருக்கும்.  பல எழுத்தாளர்களைச் சந்திப்பேன்.  அவர்களுடன் பேசிப் பொழுது போக்குவேன்.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் புத்தக மூட்டைகளுடன் திரும்பவும் என் இடத்திற்கு வரும்போது எதையோ பறி கொடுத்தது போலிருக்கும் கொஞ்ச நாட்களுக்கு…