சில வித்தியாசங்கள்

சிறுகதை :

சுஜாதா

நான் ராஜாராமன். டில்லி வாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ. எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக 210 -10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித்தது எம். ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும், சித்தார்த்தன் என்கிற என் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு – அவனை நீங்கள் சந்திக்க வேண்டும்; அழகான பயல் – பால், விடமின் சொட்டுகள், ‘ஃபாரெக்ஸ்’ வாங்குவதற்கும், என் புத்தகச் செலவுகளுக்கும் … எதற்கு உங்களுக்கு அந்தக் கணக்கெல்லாம்.

வாங்குகிற முந்நூற்று சொச்சம், இருபத்தைந்து தேதிக்குள் செலவழிந்து விடுவது சத்தியம். இந்த உலகத்தில் இன்றைய தேதிக்கு என் சொத்து: ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிடப்பட்டவள் என் மனைவி. இவளைப் பற்றி கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் பட்ஜெட்டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமார்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம். கணவன் ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது. எல்லாம் என் ஆர்வத்தில் ஓர் இலக்கியப் பத்திரிகை தொடங்கி இரண்டு மாதம் நடத்தினதில் போய்விட்டது. அதற்காக நான் அவமானப்படுகிறேன். இலக்கியப் பத்திரிகை நடத்தினதற்காக அல்ல; மனைவியின் சொற்ப நகைகளை விற்றதற்காக

இன்று தேதி 29, என் கையில் இருப்பது மூன்று ரூபாய். எனக்குத் தேவை முந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. அவளைப் பார்க்கச் செல்ல வேண்டும். உடனே செல்ல வேண்டும்.

என் அம்மாவுக்கு இருதயத்தில் கோளாறு. ஐம்பத்தெட்டு வருஷம் அடித்து அடித்து அலுத்துப் போய் திடீரென்று நின்றுவிடலாமா என்று யோசிக்கும் இருதயம். அவளுக்கு உடம்பு பதறும்; சில்லிட்டு விடும். இந்த மாதிரி மூன்று தடவை வந்திருக்கிறது. இந்தத் தடவை தீவிரமாக இருந்திருக்க வேண்டும். என் தம்பி அடித்த தந்தியின் சுருக்கமான வாசகங்களில் தெரிகிறது; “அம்மா கவலைக்கிடம் உடனே வா.”

இதுவரை நான் மேம்போக்காகவே எழுதி வந்திருக்கிறேன். என் உள்ளத்தின் பதற்றத்தைச் சமாளிக்க – என் அம்மாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையை வலியுறுத்த இப்படி எழுதிக் கொள்கிறேன். என் மனத்தின் ஆழத்தில் என் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘அம்மா – அம்மா – அம்மா’ என்று அடித்துக் கொள்வதையும், என்னுள் இருக்கும் சில இனம் தெரியாத பயங்களையும், நம்பிக்கைகளையும் வார்த்தைகளில் எழுதுவது கஷ்டம். அவளை உடனே யட்சன்போலப் பறந்து சென்று பார்க்க வேண்டும் … ‘அம்மா, உன் டில்லி புத்திரன் இதோ வந்துவிட்டேன். ஏரோப்ளேனில் உன்னைப் பார்க்கப் பறந்து வந்திருக்கிறேன். இதோ உன் தலையைத் தடவிக் கொடுக்கிறேன். உனக்குக் குணமாகி விடும்.’ பக்கத்து வீட்டு சாரதாவிடம் ‘என் பிள்ளை பிளேனில் வந்தான்’ என்று பெருமை அடித்து கொள்வதற்காகவாவது பிழைத்துக்கொள்வாள். எனக்கு ரூபாய் முந்நூற்று இருபத்தைந்து தேவை.

என் போன்றவர்களுக்கு விமானப் பிரயாணம் இந்த மாதிரி சோக சந்தர்ப்பங்களில்தான் சாத்தியம். கடன் வாங்கி டிக்கெட் வாங்கி, கண்ணீர் மறைக்கும் கண்களுடன் ஜேம்ஸ் பாண்ட் படிக்க முடியாது. ஹோஸ்டஸ்ஸ§டன் சிரித்துப் பேச முடியாது.

எங்கே போவேன் பணத்திற்கு?… எனக்கு யார் தருவார்கள்? என் நண்பர்களைப் போய் இருபத்தொன்பதாம் தேதி கேட்டால், ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். என் மனைவியிடம் நகைகள் கிடையாது. என் சொத்தைப் பற்றி முன்னமேயே தெரிவித்திருக்கிறேன். அதனால்தான் ராமநாதனிடம் கேட்கலாம் என்று தீர்மானித்தேன்.

ராமநாதன் எனக்குக் கிட்டத்திலும் அல்லாத, தூரத்திலும் அல்லாத உறவினர். என்ன உறவு என்கிற விவரங்கள் அனாவசியம். செக்ரட்டரியாக இருக்கிறார். முக்கியமான மந்திரிக்கு. முக்கியமான மனிதர். சர்க்கார் எத்தனையோ மில்லியன் டன் கோதுமை கடன் வாங்கும்போது இவர்தான் வெள்ளைக்காரர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஜோடியாகக் கையெழுத்துப் போடுவார். போகாத தேசமில்லை. டில்லியில் நான் எட்டு வருஷங்கள் இருந்திருக்கிறேன். இரண்டு தடவை நான் இவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். இரண்டு தடவையும் நடந்தது, எழுதும்படியாக இல்லை. நானும் இவரும் இருப்பது வேறு வேறு மட்டங்களில். உறவுப் பிணைப்பை வைத்துக்கொண்டு இந்த வித்தியாசத்தை இணைப்பது சாத்தியமாகாது என்று அறிந்துகொண்டு மரியாதையாக ஒதுங்கிவிட்டேன். தற்போது என் பணத்தேவை அந்த அவமானங்களை எல்லாம் மறக்கச் செய்துவிட்டது. நான் அவரைப் பார்க்கக் கிளம்பினேன்.

ஹேஸ்டிங்ஸ் ரோடின் அமைதியில் பச்சைப்புல் தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏர் கண்டிஷனர், நாய், அம்பாஸடர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசலில் கதர் அணிந்த சேவகர் என்னைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார். என் பெயர் சொல்லி, நான் அவர் உறவுக்காரர் என்பதையும் சொன்னேன். வேஷ்டி கட்டின என்னை ஏதோ, நாய் கொண்டுவந்து போட்ட வஸ்துவைப் போல் பார்த்து உள்ளே போகுமாறு சொன்னார் சேவகர் (ர்’ மரியாதையைக் கவனிக்கவும்). ‘ சிண்ட்ரெல்லா’ ராஜகுமாரன் மாளிகையில் நுழைவதுபோல் உணர்ந்தேன், உள்ளே செல்லும்போது. ஒரு ஹால். தவறு, ஹால் இல்லை … ஹாரால். கீழே கம்பளம். பக்கத்தில் ‘டெலிஃபங்கன்’ கம்பெனியின் ரேடியோ கிராம் (ராமநாதன் அவர்கள் மேற்கு ஜெர்மனி சென்றிருக்கிறார்). டிரான்ஸிஸ்டர், மடங்கிப் படுக்கையாகத் தயாராக இருக்கும் ஸோபா, ரெப்ரிஜிரேட்டர் திறந்திருக்கிறது. அதில் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட சாராய பாட்டில்கள். மேலே காந்தி படம். அறையின் திரைகளில் டிஸ்டெம்பரின் வர்ணங்கள் ஒன்றுக்கொன்று இழைந்து கண்ணை உறுத்தாத சமாச்சாரங்கள்.

ரேடியோகிராமிலிருந்து பலமாக கிதார் சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் துடிப்பிற்கு ஏற்ப கால்களால் தாளம் போட்டுக்கொண்டு ஓர் இளைஞன் சோபாவில் முக்கால்வாசிப் படுத்துக்கொண்டு ‘ப்ளே பாய்’ என்கிற பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தான். நான் வந்ததையோ, நின்றதையோ, கனைத்ததையோ கவனிக்கவில்லை. அருகே சென்று தாழ்வாக இருந்த நடுமேஜையில் ஒரு தட்டித் தட்டினேன். கவனித்தான். “யெஸ்?” என்றான் பையன். ராமநாதனின் ஒரே பையன். “அப்பா இருக்கிறாரா?” “ஹி இஸ் டேகிங் பாத். ப்ளிஸ் வெய்ட்” என்றான். அவனுக்கு முடிவெட்டு தேவையாயிருந்தது. அணிந்திருந்த சட்டை, பெண்கள் அணியவேண்டியது. போட்டிருந்த பேண்ட்டில் நுழைவதற்கு அசாத்திய சாமர்த்தியம் வேண்டும். “ஐ’ம் ராஜேஷ்” என்று என்னை நோக்கிக் கையை நீட்டினான் “என் பெயர் ராஜாராமன். நான் உங்களுக்கு ஒரு விதத்தில் உறவு.” என்றேன். நான் தமிழை விடுவதாக இல்லை . “இஸ் இட்?” என்றான். “நீ அவர் பையன்தானே?”

ம் “யெஸ்” “தமிழ் தெரியுமா?” “யெஸ்” “பின் தமிழில் பேசேன்.” “ஹானஸ்ட்லி ஐ லாஸ்ட் டச்” என்று சிரித்தான். எனக்கு லேசாகத் தலைவலிக்க ஆரம்பித்தது. மெதுவாக எழப்போகும் கோபத்துக்கு அறிகுறி. “நீ என்ன படிக்கிறே?” “ப்ளே பாய்!” “இல்லை , எத்தனாவது படிக்கிறே?” “ஸீனியர் கேம்பிரிட்ஜ்.” ராமநாதன் உள்ளேயிருந்து வந்தார். நேராக இடப்பக்கம் இருந்த அறையை நோக்கி நடந்தார். “நமஸ்காரம், ஸார்.” தயங்கி என்னைப் பார்த்தார். கண்களில், அவர் ஞாபகத்தில் என்னைத் தேடுவது தெரிந்தது. “ஓ, ஹலோ! வாப்பா, ராமச்சந்திரன்” “ராஜாராமன் சார்.” “ஓ, எஸ்! ராஜாராமன், சௌக்கியமா? ஒரு நிமிஷம்” என்றபடி மறைந்தார்.

ஓர் அசிங்கமான தயக்கம். ராஜேஷ் என் எதிரில் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தான். அவன் வயதில் நான் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கோல்ட்ஸ்மித் படித்துக்கொண்டிருந்தேன். இவன் ட்விஸ்ட் சங்கீதமும் ஓர் இடத்திலும் தேங்காத இந்த யுகத்தின் இந்த நிமிஷத்தின் அமைதியற்ற துடிப்புமாக என்னை மியூசியம் பிறவியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

மேஜை மேல் அவன் வைத்திருந்த பத்திரிகையைப் புரட்டினேன். வர்ணத்தில் ஒரு பெண்ணின் படம் – ஒரே ஒரு புன்னகையை மட்டும் அணிந்துகொண்டிருந்தாள் – அவசர அவசரமாக மூடினேன். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். பற்களில் நிகொடின் காவி.

ராமநாதன் அறையை விட்டு வெளியே வந்தபோது வெளியே கிளம்புவதற்குத் தயாராக முழுக்க உடையணிந்திருந்தார். உயரமானவர். பீர் அதிகம் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட இளம் தொந்தி, கண்ணாடி, அலட்சியம், புன்னகை, அபார உயரம், கீழ்ஸ்தாயிப் பேச்சு – எல்லாம் வெற்றிக்கு அடையாளங்கள்.

“ஸோ?” என்றார், என்னைப் பார்த்து, மேஜை மேல் வைத்திருந்த சிகரெட் பெட்டியை எடுத்து தேவ் ஆனந்த்போல் ஒரு தட்டுத் தட்டி வாயில் பொருத்தினார். “ஸ்மோக்” என்றார். “இல்லை” என்றேன். லைட்டரின் ‘க்ளிக்’கில் ஜோதி எம்பிப் பற்ற வைத்துவிட்டுத் தணிந்தது. ராஜேஷ், “டாட்! கேன் ஐ டேக் தி கார்?” என்றான். அவர் : “நோ, ராஜ். எனக்கு ஒரு கான்பரன்ஸ் போக வேண்டும்.” “ஐவில் ட்ராப் யூ” என்றான் கெஞ்சலாக.

“ஓ. கே. ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு . பெட் ரூமில் சாவி இருக்கிறது. அம்மாவை எழுப்பாதே. அவள் தூங்கட்டும்.”

நான் மரமண்டை இல்லை. எனக்கு ஐந்து நிமிஷம் கொடுத்திருக் கிறார். அதற்குள் வந்த காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

“எஸ். ராமச்சந்திரன் எப்படி இருக்கே? ஜானகி எப்படி இருக்கிறா?” “ராஜாராமன், சார்?” “என்ன ?” “என் பெயர் ராஜாராமன் சார்.” “எஸ்! ராஜாராமன், இல்லையென்று யார் சொன்னார்கள்! ஒருவரும் அதை மறுக்கவில்லையே!” என்று சிரித்தார். நான் பின் பாட்டாகச் சிரித்தேன். “சரி, ஜானகி எப்படி இருக்கிறாள்?” “ஜானகி செத்துப்போய் இரண்டு வருஷங்கள் ஆச்சு.” “ஓ. எஸ். ஓ. எஸ். ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிடி. அவளுக்கு எத்தனை குழந்தைகள் ?” “ஒரு பையன். இரண்டு வயசுப் பையன் – ” “ஆமாம்; ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”

‘விண் விண்’ என்று தலைவலி தெறித்தது எனக்கு. கோபம் கலந்த தலைவலி. “நான்தான் சார், ஜானகி தம்பி” “ஸோ ஸாரி. எனக்கு ரொம்ப மோசமான மெமரி. நம்ம ரிலேஷன்ஸ்கூட டச்சே விட்டுப் போச்சு … ஏன்? தூர தேசத்திலே இருக்கோம். சௌக்கியமா இருக்கிறாயா?” “சௌக்கியம் சார்.”

“இப்ப என்ன வேணும் உனக்கு?”

அந்த நேரம் வந்துவிட்டது. திடீரென்று இரண்டடி உயர மனிதன்போல் உணரும் நேரம். இந்திரன்போல் கூச்சப்பட வேண்டிய நேரம். பணம் கேட்க வேண்டிய நேரம்.

“எனக்கு முந்நூத்தி அம்பது ரூபாய் பணம் வேணும், சார். எங்க அம் …” 

“நான் நினைச்சேன், எப்ப வேணும்?” 

“இப்ப சார், எங்கம்மா …” 

“என்கிட்ட பணமா இருக்கான்னு பார்க்கிறேன்.” – பர்சை எடுத்தார், எட்டிப் பார்த்தார். 

“ம்ஹ¨ம்! இல்லை. ‘செக்’ எழுதித் தருகிறேன்! ஸ்டேட் பாங்கிலே மாத்திக்கிறாயா?” 

“சரி, சார். ரொம்ப வந்தனம். எங்க அம்மாவுக்கு ….” 

“திருப்பித் தருவாயா?” 

“கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிவிடுகிறேன். சார் எங்க அ ….” 

எழுந்து போய்விட்டார். ‘செக்’ புத்தகம் கொண்டுவர. மடையனே, என்னைப் பேசவிடேன். எனக்கு இந்தப் பணம் எதற்கு என்று சொல்லவிடேன். அம்மாவின் உடல் நிலை கவலைக் கிடமாக இருப்பதால்தான் உன்னிடம் வந்து தொங்குகிறேன் என்று பேசவிடேன்…! ‘செக்’ புஸ்தகம் கொண்டுவந்தார். 

பேனாவைப் பிரித்தார். 

“உன் முழுப் பெயர் என்ன?” சொன்னேன். “ஸ்பெல்லிங்?” | சொன்னேன். ‘

‘செக்’கை எழுதிக் கையில் கொடுத்தார். கொடுக்கும்போது 

“நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.

 “எதை சார்?” 

“இந்த மாதிரி உறவுக்காரங்களுக்கு ‘செக்’ எழுதறதை.”

 “இல்லை சார். என் கேஸிலே ரொம்ப அவசரமான தேவை. எங்க அம்மாவுக்கு சீரி ….’ – 

“தேவை எல்லாருக்கும்தான் இருக்கு. இந்த தேசத்துக்கே பணம் தேவை. உன் கேஸையே எடுத்துக்கலாம். இத்தனை நாள் டில்லியிலே இருந்திருக்கே. எத்தனை தடவை வீட்டுக்கு வந்திருக்கே?” 

என் கோபம் என்னைப் பதில் சொல்லவிடவில்லை. 

“எப்போ வருகிறாய்? உனக்குப் பணம் தேவையாய் இருக்கும் போது. நான்தான் இருக்கேனே, ‘செக்’ எழுதுகிற மிஷின்! என் கழுத்தில் போர்டு போட்டுத் தொங்க விட்டிருக்கு, இல்லையா, ‘ஏமாளி’ என்று – இவரிடம் எப்போழுதும் கடன் கேட்கலாம் என்று … நம்ம ஸவுத் இண்டியன் மெண்ட்டாலிட்டியே அப்படி. நான் பொதுவாகத்தான் சொல்கிறேன். உன்னைத் தனியாகச் சொல்லவில்லை. நான்தான் நம் குடும்பத்துக்கு ‘செக்’ எழுதுகிற மிஷின்…!”

அவர் மேலே மேலே பேசப் பேச என் கோபம் ‘போயிங்’ விமானம் புறப்படும் சப்தம்போல் மெதுவாக ஆரம்பித்து உலகத்தையே சாப்பிடும் வேதனை எல்லைவரை உயர்ந்தது.

“அன்னிக்கு ரெண்டு பேர் வந்தாங்க… நாங்கள் இரண்டு பேரும் உங்களுக்கு உறவு ….”

பாதியில் நிறுத்திவிட்டார். ஏன்! நான் அவர் முகத்தின் முன்னால் அவர் கொடுத்த ‘செக்’கை நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டேன். “சார், உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்ககிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை. இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். தயவு செய்து கான்பரன் ஸ§க்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண்ணுங்க.”

அவர் முகம் மாறியது. 

“ராஜாராமன், கடன் வாங்க வந்தவனுக்கு இவ்வளவு கோபம் உதவாது. நீ இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டதற்கு உன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும். மரியாதையாகப் போயிடு. கெட் லாஸ்ட் யூ பாஸ்டர்ட்!” 

“கெட் ரிச் யூ பாஸ்டர்ட்” என்றேன்; 

சிரித்தேன். ம் “மன்ஸாராம்!” என்று சேவகனைக் கூப்பிட்டார். மன்ஸாராம் வருவதற்குள் ராஜாராம் கழண்டுகொண்டேன். வெளியில் வெயிலில் வந்து நின்ற என் நிலைமையைப் பாருங்கள். கௌரவம், மானம் என்பதெல்லாம் பணம் உள்ளவர்களுக்கு உரியவை. எனக்கு ஏன்? அவர் சாதாரணமாகத்தான் பேசினார். அவர் வெறுப்பு அவருக்கு. அந்த வார்த்தைகளைப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ‘செக்’கை வாங்கி மாற்றி டிக்கெட் வாங்கியிருக்கலாம்.

ஆனால், அந்த சமயம் நான் செய்த முற்றிலும் எதிர்பாராத செயலில் அந்த ஒரு தருணத்தில் பூர்ணமாக வாழ்ந்தேன் நான்.

நீங்கள் இவ்வளவு பொறுமையாக இதுவரை படித்தீர்கள். கடனாக முந்நூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவளைப் போய்ப் பார்க்க வேண்டும்.

1968

சுஜாதாவின் சில வித்தியாசங்கள்

சுஜாதாவின் சில வித்தியாசங்கள்

அழகியசிங்கர்

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி வைத்திருக்கிறேன். சுஜாதாவின் கதைகள் எல்லாம். 1968 ஆம் ஆண்டு எழுதிய சில வித்தியாசங்கள் என்ற கதை. முதன் முதலாக சுஜாதாவின் கதைகளை ஒவ்வொன்றாகப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன்.

நான் ஒரு கதையைப் படித்தால் அந்தக் கதையைப் பற்றி உடனே எழுதி விடவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும்.

நான் ஏகப்பட்ட புத்தகங்களை ஒரே சமயத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். நியாயமாக என் ஆசை நான் படித்ததெல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான்.

நான் மெதுவாகத்தான் படிக்கிறேன். ஆனால் படித்ததை அப்படியே விட்டுவிடத் தயாராய் இல்லை. மனதுக்குள்ளாகவாவது எதை எதைப் படித்தோம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்கள் போகப் போக இன்னும் சில புத்தகங்கள் படிப்பதற்குச் சேர சேர ஒவ்வொன்றாய் மூளையிலிருந்து கழன்று கொண்டு விடுகின்றன.

சரி, சுஜாதா கதைக்கு வருகிறேன். இந்தக் கதையை 1968ஆம் ஆண்டிலேயே எழுதி விட்டார். குழப்பமில்லாத நடை. வாசகனைக் கட்டிப் போடுகிற மாதிரி விறுவிறுவென்று எழுதி இருக்கிறார்.

நான் ராஜாராம். டில்லி வாசி என்று கதையை ஆரம்பிக்கிறார்.ராஜாராம் பேசுவதுபோல் கதையைக் கொண்டு போகிறார். நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும் ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செகரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக சம்பள ஏணியில் இருப்பவன் ராஜாங்கம்..

இந்தக் கதை முழுவதும் ஒரு நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொண்டு போகிறார். ராஜாராம் சொல்கிறான். இந்த உலகத்தில் இன்றைய தேதிக்கு என் சொத்து ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிடப்பட்டவள் என் மனைவி என்கிறான். வீட்டின் பட்ஜெட்டையும் சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள் என்வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம் என்கிறான் ராஜராம்.

29ஆம் தேதியன்று அவன் கையில் இருப்பது மூன்று ரூபாய் அவனுக்குத் தேவை முந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. அவன் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. உடனே புறப்பட்டுப் போக வேண்டும்.

அம்மாவை உடனே போய்ப் பார்க்க வேண்டும். விமானப் பயணம் மூலம். யாரிடமாவது பணம் கடன் வாங்கிக்கொண்டு போக வேண்டும். யாரைக் கேட்பது என்று குழப்பம். நண்பர்களைப் போய் இருபத்தொன்பதாம் தேதி கேட்டால் ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். மனைவியிடம் நகைகள் கிடையாது.

பணம் கேட்க ராமநாதன் என்பவரைப் பார்க்க தீர்மானிக்கிறான் ராஜாராமன். அவர் ஒரு விதத்தில் தூரத்து உறவினர். முக்கியமான மந்திரிக்கு முக்கியமான மனிதர்.

அவர் வசித்து வந்த இருப்பிடத்தை விவரிக்கிறார் சுஜாதா. ஹோஸ்டிங்ஸ் ரோடின் அமைதியில் பச்சைப்புல் தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏக் கண்டிஷனர், நாய், அம்பாஸ்டர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசஙூல் கதர் அணிந்த சேவகர்.

ராமநாதனின் பையன் வரவேற்றான். ராஜாராமன் தமிழில் பேச, அவருடைய பையன் ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறான். தமிழ் தெரிந்தும் தமிழில் பேசாத ராமநாதனின் பையன் மீது எந்த மரியாதையும் ஏற்படவில்லை ராஜாராமிற்கு.

ராமநாதன் அறையை விட்டு வெளியில் வந்தார். கிளம்பிப் போவதற்குத் தயாராக இருந்தார்.

ராமநாதன் ராஜ சேகரனைப் பார்த்தவுடன் ராமச்சந்திரன் என்று கூப்பிடுகிறார்.

‘நான் ராமச்சந்திரன் இல்லை சார். ராஜாராமன்,’ என்கிறான் ராஜாராமன்.

உண்மையில் உரையாடல் மூலம் கிண்டல், நகைச்சுவை உணர்வு என்றெல்லாம் கொண்டு வருகிறார் சுஜாதா.

இங்கே உரையாடல் மூலம் நகைச்சுவை உணர்வு உண்டாக்குகிற மாதிரி ஒரு காட்சி.

‘சரி, ஜானகி எப்படி இருக்கிறாள்?’

“ஜானகி செத்துப்போய் இரண்டு வருஷங்கசள் ஆச்சு”

“ஓ.எஸ் ஓ.எஸ் ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிடி. அவளுக்கு எத்தனை குழந்தைகள்?”

“ஒரு பையன். இரண்டு வயசுப் பையன்.”

“ஆமாம். ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”

“நான்தான் சார் ஜானகி தம்பி.”

இந்த உரையாடல் மூலம் அலட்சியமாக ஹாஸ்ய உணர்வை உருவாக்கி விடுகிறார் சுஜாதா.

பணம் கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ராஜாங்கம் முந்நூத்தி அம்பது ரூபாய் பணம் வேணும் என்கிறான். இந்த இடத்தில் எதற்காக பணம் வேண்டுமென்று சொல்ல எத்தனிக்கிறான். காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை ராமநாதன்.

“எப்ப வேணும்?” என்று கேட்கிறார்.

“இப்ப,” என்கிறான் ராஜாங்கம்.

அவர் செக் புத்தகம் கொண்டு வந்தார். அவனுடைய பெயரை கேட்டார். செக்கில் எழுதினார். அவனிடம் கொடுக்கும்போது ஒன்று சொல்கிறார்.

“நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.

“எதை சார்?”

“இதுமாதிரி உறவுகாரங்களுக்கு செக் எழுதறதை.”

ராஜாங்கத்திற்குக் கோபம் வருகிறது.

அவர் இன்னும் பேசுகிறார். தான் ஒரு செக் எழுதற மெஷின். உனக்குப் பணம் தேவையாக இருக்கும்போது வருகிறாய் என்கிறார்.

அவர் பேசப்பேச கோபம் அதிகமாக வருகிறது ராஜாங்காத்திற்கு. அவர் கொடுத்த செக்கை நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டான். அவருக்குப் பெரிய அதிர்ச்சி.

சுஜாதா கதையை முடித்துவிடுகிறார்.

முடிக்கும்போது ஒன்று சொல்கிறார். ‘எதிர்பாராத செயலில் அந்த ஒரு தருணத்தில் பூரணமாக வாழ்ந்தேன்

நான் என்று ராஜாங்கம் சொல்வதைப் போல் முடிக்கிறார். கதையில் கடைசியில் ஒரு ட்விஸ்ட். வாசகரைப் பார்த்து ராஜாங்கம் கேட்கிறான். நீங்கள் இவ்வளவு பொறுமையாக என் கதையைப் படித்தீர்கள். அவசரமாக சென்னைப் போய் அம்மாவைப் பார்க்க வேண்டும். எனக்கு முந்நூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுங்களேன் என்று கேட்கிறான்.

கதை நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்களில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது. பெயர்கள் எல்லாம் ராவில் வருகிறது. ராஜாங்கம், ராஜகோபாலன்,கதையின் ஆரம்பத்தில் ராஜாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் மனைவி தன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்து ‘யூலிஸிஸ்’ வாங்க பணம் தருகிறாள்.

ராஜாங்கம்ஆர்வத்தால் ஓர் இலக்கியப் பத்திரிகை இரண்டு மாதம் நடத்த மற்ற நகைகளையும் விற்றுவிட்டாள் அவன் மனைவி.

இலக்கியப் பத்திரிகை மீது சுஜாதாவிற்கு இருக்கும் ஈடுபாடை இங்கே கொண்டு வருகிறார். முழுக்க முழுக்க கற்பனை கதை இது. சுய அனுபவம் எங்கும் தலைக்காட்டவில்லை.நகைச்சுவை உணர்வுடன் மிக மிகச் சுலபமாகக் கதையை எழுதும் திறன் இவரிடம் உள்ளது.

இத் தொகுப்பிலுள்ள கதைகளை எல்லாம் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து வாசிக்கலாமென்று நினைக்கிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 145

அழகியசிங்கர்

முகமூடிகளின் உலகம்

அதங்கோடு அனிஷ்குமார்

தேவைகளுக்கேற்ப
தேவைப்படுகின்றன முகமூடிகள்

பூகம்ப மனதின் அதிர்வுகள் அழித்து
புன்னகை பூக்க
கொலைவெறி புதைத்து
கொல்லென்று சிரிக்க

முகமூடிகளின் பொருட்டு
எல்லோரும் தொலைக்கிறார்கள்
முகங்களை

முகமூடிகளின் உலகத்தில்
முகங்கள் கழுவேற்றப்படுகையில்
உயிர்வலியெடுத்து
கதறுகின்றன
யதார்த்தத்தின் குழந்தைகள்

முடியாது இனி
முகமூடிகளற்று
முகம் காட்ட

எந்த முகமூடியணிந்தாலும்
எட்டிப் பார்க்கும்
என் முகத்தை
எப்படி மறைப்பது?

நன்றி : நிறங்களின் பேராசைக்காரர்கள் – அதங்கோடு அனிஷ்குமார் – மயூரா பதிப்பகம், 37 தொட்டராயன் கோயில் வீதி, கோயமுத்தூர் 641 009 – பக்: 64 – விலை : ரூ.30 – வெளியான ஆண்டு : 2008 – தொலைபேசி : 93607 89001

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 144

அழகியசிங்கர்  


144)   இன்ஸ்டண்ட் கவிஞர் எம்

கீதாஞ்சலி பிரியதர்சினி 

இன்ஸ்டன்ட் கவிஞர் எம் என்பவர் மாவட்டத்தின்
ஒரு சிறந்த நிர்வாகி, நாட்டுக்கும், அவர் வீட்டுக்கும்
ஸ்டேட்ஸ் போய் படித்து விட்டு, பிடிக்காமல் ஊர்
வந்து முகநூலில் ஸ்டேடஸ் போடுவார் அடிக்கடி
முகநூலில் அவருக்கு மூவாயிரம் பேர் பரஸ்பர
நண்பர்கள் குருதிக்கொடை மற்றும் அடைமழைக்கு
மழைக்குடை உதவும் நண்பர் வரை பேமஸ் அவர்.
முன்தினம் அவர் மொரிஷியஸ் போனதை
அடுத்த நாள் முகநூலில் எழுதுவார், ஒரு நவீன
கைப்பேசி உதவியுடன் கையடக்க புகைப்படம் உண்டு
கண்டிப்பாக யாரோ ஒருத்தியுடன் சிரித்தபடி இருப்பார்
சிந்திப்பது குறித்து சிந்தனையுடன் தினம் பதிவில்
ஏராளம் எழுதுவார் நம் இன்ஸ்ட ன்ட் கவிஞர் எம்.
அணுஉலை எதிர்ப்பாளர், ஈழவிடுதலைக்கு தமிழ்
ஆதரவாளர் கவிஞர் எம் ஏழெட்டு புரட்சிகர தமிழ்க்
குறும்படங்களுக்கும் உரிமையாளர். புதுமற்றும் பழைய
கவிதைகள் குறித்தும், எழுத்தாளர்களின் போக்கு, திமிர்
குறித்தும் ஏராளம் பதிவுகள் போட்டார் நேற்று முன்தினம்
அப்கோர்ஸ் அடுத்த மாதம் இயக்குநர் எக்ஸ்ஒய் என்கிற
ஒருத்தர் தான் அவரின் உலகப்புகழ்ப்பெற்ற தமிழ்ப்புதுக்
கவிதைத் தொகுப்பை வெளியிடப் போவதாகவும் ஒரு
தகவல். உற்றுப் பாருங்கள் உங்கள் கைப்பேசியை பளீஸ்
இதற்குள் முப்பது லைக்குகள் எம் முக்கு
வெற்றி வாகை நமக்கே, வாழ்க கவிதை, வளர்க எம்.
முப்பது நாளில் மூவாயிரம் பிரதிகள் இன்ஸ்ட ன்டாக
விற்கும் கவிதை செய்வோம். வாருங்கள் நண்பர்களே
மிச்சமிருக்கும் பொழுதுக்குள்.


நன்றி : நிலைக்கண்ணாடி நிமிடங்கள் – கீதாஞ்சலி பிரியதர்சினி – இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்) 41 கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011 அலை பேசி : 9444640986 – பக் : 72 – விலை : ரூ.50

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 143

அழகியசிங்கர்  

முதியோர் உள்ளம்…!

ஆர்.கே.இராமநாதன்

வேளைக்குக் கொஞ்சம்போல்

உணவு.

உறங்க ஒரு கட்டில்

நடக்கக் கொஞ்சம் பாதை

வழிபட அருகே ஒரு தெய்வம்

இருவேளைக் காப்பி

ஏதோ ஒரு நாளிதழ்

மூட்டுவலித்தைலம்

சிறு உபாதை தீர மாத்திரை

காலை மாலையில் இல்லத்தாரின் அன்பு விசாரிப்பு…!

எல்லாமும் கிடைக்கும்

முதியோர் இல்லமே நம்வீடு எனும் முடிவை நோக்கி

நகரத் தொடங்கிவிட்டனர்

இன்றைய சீனியர் சிட்டிசன்கள்…!

நன்றி : தென்றல் புழங்கிடும் தெரு – ஆர்.கே.இராமநாதன் – குவிகம் பதிப்பகம் – விலை : ரூ.100 -தொடர்புக்கு: 9600015880 பக்: 122

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 142

அழகியசிங்கர்  

கரப்பான் பூச்சிகள் வசிக்கும் அறை

தாமரைபாரதி

விளக்கொளிர்ந்ததும் 

அறையின் ஏதாவதொரு 

இடுக்கினை நோக்கி ஓடுகிறது

 ஒரு 

கரப்பான்பூச்சி

நான்கு கூட்டுக் கண்களால் 

நோட்டம்விட்டு 

இரவிலும் இருட்டிலும் 

இரைதேடும் 

ஒன்று வெளிச்சத்திற்குப் பயந்தோட 

ஓராயிரம் இருளுக்குள் 

ஒளிந்திருக்கலாம்

சமையலறைகளின் 

குளியலறைகளின் 

அச்சுறுத்தலாக இருப்பினும் 

தூய்மைக் காவலர்களாக 

அறியப்படும் கரப்பான்பூச்சிகள்

 மனிதர்களுக்கு | 

தீங்கு விளைவிக்கக்கூடுமென 

மருந்திட்டுக் கொல்லப்படுகின்றன

காருண்யத்தின் 

ஒளிக்கிரணங்கள் 

தழுவாத அறைகளில் 

ஒழுங்கற்று இங்குமங்கும் 

கண்ணாமூச்சி காட்டி நடமாடுகின்றன

 மனித உருமாற்றமடைந்த 

கரப்பான்பூச்சிகள்.

(ஃப்ரான்ஸ் காஃப்காவுக்கு)

நன்றி : தபுதாராவின் புன்னகை – தாமரைபாரதி – கடற்காகம் வெளியீடு, 10-3-53 கணபதி நகர் முதல் தெரு, எஸ்ஆலங்குளம், மதுரை 625 017 – பக்கங்கள் 112 – விலை : ரூ.199 – கைபேசி : 78716 78748

1992ஆம் ஆண்டு எழுதிய கவிதை

அழகியசிங்கர்

காலையில் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளும்போது எதிர்பாராதவிதமாய் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது.  உடனே என் கவிதைப் புத்தகத்தை எடுத்து அந்தக் கவிதையைப் புரட்டினேன். அந்தக் கவிதையை 1992ஆம் ஆண்டு எழுதியது.
தீர்க்கதரிசனமாக அந்தக் கவிதையை எழுதியிருக்கிறேனோ என்று இப்போது தோன்றுகிறது.  கொரோனாவல் எற்ப்பட்ட இக்கட்டைக் கவிதை அன்றே வெளிப்படுத்தி விட்டது.  ஒரு கவிதை எப்படித் தோன்றுகிறது, எந்தச் சூழ்நிலையில் ஏன் அப்படியெல்லாம் எழுதினோம் என்பதெல்லாம் புரியவில்லை. அந்தக் கவிதையை வாசிக்க இங்குத் தருகிறேன். 

யாருடனும் இல்லை

எதைப் பேசுவது எப்படிப் பேசுவது ஏன் பேசுவது எதற்காகப் பேசுவது 
பேசினால் அடிப்பார்களா கேட்டால் உதைப்பார்களா பார்த்தால் சிரிப்பார்களா 
ஏன் பேசுவது எதைப் பேசுவது எப்படிப் பேசுவது எதற்காகப் பேசுவது
 பார்க்கப் போகலாமா பேசுவதைக் கேட்பார்களா கேட்டதை மனதில் வாங்கி பதில் அளிப்பார்களா? 
எதைப் பேசுவது எப்படிப் பேசுவது ஏன் பேசுவது எதற்காகப் பேசுவது 
பேசாமல் ஓடிப் போகலாம்அதுதான் நியாயம் 
எதையாவது பேசுயாருடனும் இல்லை உன்னிடம் 
எப்படியாவது பேசு யாருடனும் இல்லை உன்னிடம்
எதற்காகவாவது பேசு யாருடனும் இல்லை உன்னிடம் 
ஏன் என்று கேட்காமல் பேசு யாருடனும் இல்லைஉன்னிடம்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 141



அழகியசிங்கர்  

நான்

கே.ஜி.சங்கரப்பிள்ளை“- தமிழாக்கம் : சிற்பி

விலைமகளாய் இருந்தாள் என்

பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டியான பாட்டி

பெண்ணாய் இருந்தால்

நானும்

விலைமகள் ஆகியிருப்பேன்

காமுகனாய் இருந்தார் என்

பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன்

ஆணாக இருந்திருந்தால்

நானும் 

காமுகனாக ஆகியிருப்பேன்

நன்றி : கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள் – தமிழில் : சிற்பி – சாகித்திய அகாதெமி – மொ.பக்: 224 – விலை : ரூ.125 

கௌதம புத்தர் – 7



அழகியசிங்கர்

புத்தர் முதுமை அடைந்தார்.  அவரைப் பார்த்துக்கொள்ள யாராவது வேண்டும் என்கிற நிலையும் உண்டாயிற்று.  குருநாதருக்குப் பணிவிடை செய்யத் துறவியருக்குள் போட்டா போட்டி.

‘நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன், குருவே’ என்றார் சாரிபுத்ரா. 

‘அல்ல! அது என் பணி,’ என்றார் மொகல்லானா.  

புத்தர் சிந்தித்தார். இருவருமே முக்கியமானவர்கள்.  சங்க நிர்வாகத்துக்குத் தேவையானவர்கள்.  அவர்களைத் தன் உதவிக்கு ஏற்றால் சங்கம் நிலை தடுமாறும்.  அதோடு அவர்களும் வயோதிகர்கள்.  இவ்வாறு எண்ணி தன் உறவினரும் வயதில் இளைஞருமான ஆனந்தனைத் தேர்ந்தெடுத்தார்.

ஆனந்தன் புத்தரின் அன்புச் சீடராய் ஆன ஆரம்ப காலத்திலிருந்து இருபது ஆண்டுகள் அவரைக் கவனித்துக் கொண்டார்.  எண்பது வயதிலும் புத்தர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார்.  லிச்சாவிக்குடியரிசின் தலைநகரான வைசாலி நகர் அருகே புத்தர் கடைசியாகத் தங்கி இருந்தார்.  ஆம்பபாலி என்ற நடனமாதின் மாந்தோப்பில் அவர் தங்கி இருந்தார்.  சாக்கிய மகாமுனி தன் தோட்டத்தில் தங்கியிருப்பதறிந்து அவள் அவரை வணங்க வந்தாள்.  அன்றைக்கே அவரைக் காண வைசாலியை அரசுபுரிந்து வந்த லிச்சாவி தலைவர்களும் வந்தனர்.  அவர்களும் அழைத்தனர்.  நான் ஏற்கனவே ஆம்பபாலி வீட்டுக்கு வருவதாக வாக்களித்து விட்டேன் என்று அவர் மறுத்தார்.

கேவலம் ஒரு நாட்டியக்காரிக்காக எங்களை ஒதுக்குவதா என்று அவர்கள் முறையிட்டனர்.  புத்தர் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை.  அவரது பார்வையில் எல்லோரும் சமம்.  அவர்களைக் காட்டிலும் ஆம்பபாலிக்கே தன் பரிவும் கருணையும் அதிகமாகத் தேவை என்பது அவர் முடிவு.

வைசாலியில் இருந்த துறவியரைக் காட்டி தனது இறுதிச் செய்தியை அறிவித்தார். 

‘ஒவ்வொருவரும் தன்னில் தானே சரணடைக.  சுயக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றுங்கள் அது ஒன்றினால் மட்டுமே உண்மையை உணர முடியும்.  நல்ல வாழ்வு வாழ முடியும்’ என்பதே அந்தச் செய்தி.

அங்கிருந்து மல்லர்கள் நாடான ருசி நகரத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயணப்பட்ட புத்தர் வழியல் கண்டா என்ற இரும்புத் தொழிலாளியின் விருந்தோம்பலை ஏற்றார்.  அப்போதைய அவர் உடலநிலைக்கு ஏற்றபடி அது எளிய உணவாக இல்லை.  ஆனால் அந்தக் கொல்லரின் மனம் நோகக்கூடாதென்று புத்தர் அதை ஏற்றுக்கொள்ள, அவர் உடல்நிலை மோசமாயிற்று.  இருந்தும் அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.  ருசி நகரம் சென்றதும் இரு சால மரங்களின் இடையே ஒரு சுத்தமான விரிப்பை விரிக்குமாறு ஆனந்தனிடம் கூறி அங்கு ஓய்வெடுத்தார்.  காணவந்த மல்லர் இனப்பிரப்புக்களைக் கண்டு உரையாடினார்.  அவர்கள் சென்றதும் மீண்டும் களைப்பாறினார்.

அந்த நேரம், சுபத்தர் என்ற சாது அங்கே வந்து புத்தரைக் காண விரும்பினார்.  ஆனந்தன் களைத்த நிலையில் குருநாதர் ஓய்வெடுப்பதைக் கூறினார்.  அதைச் செவியுற்ற புத்தர் அந்தச் சாதுவை அப்போதே சந்திக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மரணப் படுக்கையில் கூடத் தன்னிடம் ஆலோசனைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப அவர் விரும்பவில்லை.  புத்தரின் புனித மொழி கேட்டு சுபத்தர் மடத்தில் சேர்ந்தார்.  புத்தரால் சங்கத்தில் சேர்க்கப்பட்ட கடைசித் துறவி இவரே.  புத்தரின் உடல்நிலை மேலும் மோசமானது.

அக்கம் பக்கத்துத் துறவியர் வந்து கூடினர்.  ‘சாவது இயற்கை. எனவே நல்லோராய் வாழுங்கள்’ என்று புத்தர் இறுதி போதனை செய்தார்.  மகாகுரு காலமானார்.  அவர் ஆன்மா நிர்வாணமுற்று விடுதலை பெற்றது.

இன்று, அவர் பரிநிரவாணமடைந்து இரண்டாயிரத்து ஐந்நூறு  ஆண்டுகளுக்குப்பிறகும், மக்களுக்கு அவர் போதித்த சன்மார்க்கத்தின் சின்னமான தர்மசக்கரம் நமது தேசியக் கொடியை அழகு செய்கிறது.

அவர் மரணத்துக்குப்பின் அவர் போதனைகள் பிற நாடுகளுக்கும் பரவின.  அசோக சக்கரவர்த்தியின் ஆர்வம் இதற்குப் பெரும் காரணமாகும்.  புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரம் முழங்கலாயிற்று.  இதன் பொருள் இதுவே.   

புத்தரைச் சரணடைகிறேன்

தர்மத்தைச் சரணடைகிறேன்

சங்கத்தைச் சரணடைகிறேன்.                            

நவீன விருட்சம் 113வது இதழுக்குப் படைப்புகளை அனுப்புங்கள்

அழகியசிங்கர்

வணக்கம்.

நவீன விருட்சம் தொடர்ந்து 32 ஆண்டுகளாக வரும் சிற்றேடு. 112வது இதழைத் தாமதமாகக் கொண்டு வந்தேன்.  உண்மையில் பிப்ரவரி 2020ல் முடிக்க வேண்டிய பத்திரிகையை மார்ச்சு மாதம் இறுதி வரை கொண்டு போய்விட்டேன். கொரோனா பாதிப்பால் இதழை அச்சிட முடியவில்லை.  ஆனால் இதழை அமேசான் கிண்டஙூல் சேர்த்து விட்டேன். நிலைமை சரியானவுடன் அச்சிட உள்ளேன்.  

இப்போது 113வது இதழைக் கொண்டு வர உள்ளேன். இதற்குப் படைப்பாளிகள் படைப்புகளை அனுப்பி பங்கெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

கவிதை அனுப்புவோர் உங்களுடைய சிறந்த ஒரு கவிதையை மட்டும் அனுப்புங்கள்.  கதைகள் அதிகப் பக்கம் போகாமல் அனுப்புங்கள்.  கட்டுரைகளும், புத்தக மதிப்புரைகளையும் நீங்கள் அனுப்பலாம்.  

மொத்தம் 80 பக்கங்கள் வரை கொண்டு வர உள்ளேன்.  நவீன விருட்சம் இ மெயிஙூல் படைப்புகளை அனுப்புங்கள்.

அன்புடன்  

அழகியசிங்கர்