27.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 27ஆவது மொழிபெயர்ப்புக் கவிதை வாசிப்பு அரங்கத்திற்கு வருகை புரிந்து கவிதைகளைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கவிதை வாசிக்கும் கூட்டம் வித்தியாசமானது. வழக்கம்போல் சிறப்புரை வழங்க வருபவர் தமிழறிஞர் இலந்தை இராமசாமி.
தலைப்பு : எது கவிதை?
இந்த வாரம் மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்க இசைந்தவர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
ஜெயராமன் பாகவதர் என் வீட்டில்தான் குடியிருந்தார். என் புதல்வனின் திருமணத்தின்போது ஜெயராமன் பாகவதரின் ராதா கல்யாணம் நடந்தது. சிறப்பாக இருந்தது. அதற்கு முன் வரை எனக்கு ராதா கல்யாணம் என்றால் எப்படி நடத்துவார் என்பது தெரியாது. அன்று பார்க்கும்போது என்னால் மிகவும் ரசிக்க முடிந்தது. ஜெயராமன் பாகவதர் மறக்க முடியாத ஒருவராக மாறிவிட்டார். அவரை நான் எப்போதும் கோவை ஜெயராமன் என்றுதான் குறிப்பிடுவேன். அவர் விருட்சம் வாசகர். ஆன்மிகத்தில் அவர் அதிகமாக ஈடுபட்டதால் அவர் இலக்கியம் பக்கம் திரும்ப முடியவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு போஸ்டல் காலனியில் என் இல்லத்திற்கு அவரே குடி வருவாரென்று எதிர்பார்க்கவில்லை. அவர் வசித்த இடத்தில் உள்ளே நுழையும்போது ஞானானந்த சுவாமிகள் படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும். 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒருநாள் திடீரென்று அவர் போன் செய்து வீட்டை காலி செய்வதாகக் கூறினார். எனக்குத் திகைப்பாக இருந்தது. என் பெண் பிரசவம்போது இந்த இடம் போதாது என்றார். மேலும் வீட்டிலுள்ள தண்ணீர் மஞ்சள் நிறமாக இருக்கிறது என்றார். ஆனால் அவர் குடிபோன இன்னொரு இடம் இதை விட மோசம். 2வது மாடி. அவர்காலி செய்து போனவுடன் என் வீட்டை நூல்நிலையமாக மாற்றி விட்டேன். ஆனால் சில மாதங்களுக்கு முன் போன் செய்து, ‘உங்கள் வீட்டிற்கே மறுபடியும் வந்து விடுகிறேன்,’ என்றார. என்னால் அது முடியாது என்றும் தெரியும். ஏற்கனவே புத்தகங்களைக் குடி வைத்திருக்கும் நான் அவற்றை அப்புறப்படுத்த முடியாது என்று தெரியும். நானும் அதை விரும்பவில்லை. ஒவ்வொரு முறை என்னுடன் போனில் பேசும்போது நட்புடன் விசாரிப்பார். நேற்று காலை அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. போஸ்டல் காலனியில் உள்ள அடுக்ககத்தின் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர்தான் இந்தச் செய்தியை முதலில் சொன்னார். உடனே என் நண்பர் வைத்தியநாதன் வாட்ஸ்அப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார். அவர் வீட்டிற்குப் போன் செய்தேன். யாரும் போனை எடுத்துப் பேசவில்லை. ஜெயராமன் பாகவதர் இனி இல்லை என்பதை நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.
12 பேர்கள் சேர்ந்துகொண்டு புதுமைப்பித்தன் கதைகளை ஒரு அலசு அலசினோம். அதுவும் முக்கியமாகப் பிரபலமாகாத கதைகள். எல்லோரும் பேசப்பட்ட கதைகளை எடுத்து வைத்துவிட்டு யாரும் அவ்வளவாகப் பேசாத கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினோம். அப்படிப் பேசிய ஒளிப்பதிவை இங்கு அளிக்க விரும்புகிறோம்.
ஸ்டெல்லா புரூஸ் என்ற பிரபல எழுத்தாளர் நாவல்கள், சிறுகதைகள் என்று வெகு ஜன பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர். ஆனால் அவர் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்.
அவர் கவிதைகள் பெரும்பாலும் ஆத்மாநாம் உருவாக்கிய ‘ழ’ என்ற சிற்றேட்டிலும், பின்னால் ‘நவீன விருட்சம்’ இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.
‘நானும் நானும்’ என்ற தலைப்பில் அவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு மையம் வெளியீடாக ஜøலை 1996 வெளிவந்தது.
அவர் கவிதைகள் எளிமையாகவும் புரியும் படியாகவும் எழுதப்பட்டிருக்கும். அடிப்படையில் வாழ்க்கையில் நிதர்சன உண்மையைக் கிண்டலாகப் பார்க்கும் தன்மை இருக்கும்.மரணத்தைப் பற்றிய சிந்தனை ஆழமாக அவர் கவிதைகளில் ஓடிக்கொண்டிருக்கும்.
இப்போது அவர் கவிதை ஒன்றிரண்டு பார்க்கலாம்
.”பாடைக் காட்சி”
நான்கு பேர் சுமக்க
கடற்கரையிலிருந்து பாடை
கிளம்பியது
பேசியபடி நண்பர்கள் சிலர்
பாடையை தொடர்ந்தார்கள்
யாருடைய முகத்திலும்
வருத்தமில்லை\
ஒருவரோடு ஒருவர்
பேசிக்கொண்டு போனார்கள்
பாடையைத் தூக்கிச் சென்றவர்கள்
மிகவும் நிதானமாக நடந்தார்கள்
பாடை குலுங்காமலும்
அதிகம் அசையாமலும்
கவனித்துக் கொண்டார்கள்
நண்பர்கள் சிகரெட் பற்ற
வைத்தார்கள்
சினிமா பற்றியும் அரசியல்
பற்றியும்
விவாதித்தார்கள்.
பஸ்ஸிலும் தெருவிலும் பலர்
பாடைக் காட்சியை கண்டார்கள்
சடலத்தின் கழுத்தில் மாலை
இல்லை
பின் போனவர்கள் யாரிடமும்
மரண காரியம் செய்யும்
தோற்றமில்லை
பீடிக்கு தீ கேட்பது போல
ரிஷாகாரன் ஒருவன்
நெருங்கி வந்து கேட்டான்
செத்துப் போனது யார் ஸார்?
ஒருவரும் அவனுக்குப் பதில்
சொல்லவில்லை
வெகுநேரம் சென்றபின் பாடை
திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில்
இறக்கப்பட்டது.
எல்லோரும் மௌனமாக
நின்றார்கள்
பாடையில் இருந்தவர் எழுந்து
வீட்டிற்குள் போனார்
தூக்கி வந்தவர்களுக்குப் பணம்
தந்துவிட்டு
நண்பர்கள் உள்ளே சென்றார்கள்
வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து
கேட்டார்கள் –
என்ன கர்மம் இது
ஏனிப்படி பாடையில் வரணும்?
ரொம்பத்தான் களைப்பாக
இருந்தது
பஸ் டாக்ஸி ரிஷா
எதிலும் ஏறப் பிடிக்கவில்லை
பாடையில் படுத்து நன்றாக
தூங்கிக் கொண்டு வந்தேன்
என்றார்
மரணம் நிகழ்ந்த துக்கம்
முகங்களில் படர
பெண்கள் நிசப்தமானார்கள்
களைப்புடன் நண்பர்களும்
நாற்காலிகளில் சாய்ந்து
கண்மூட
வெற்றுப்பாடை
வீதியில் போனது,
இந்தக் கவிதை எளிதில் படிப்பவருக்குப் புரிந்து விடும். அவ்வளவு எளிமையாக எழுதப்பட்டிருக்கிற கவிதை. ஒருவிதத்தில் அங்கத சுவை கொண்ட கவிதை. பாடைக்காட்சி என்று படிக்கும்போது ஒரு துனுக்குற மன நிலையைத் தானாகவே உண்டாக்கும். பாடை என்பது மரணத்தைக் குறிக்கும் சொல்லாகவே இருக்கிறது.ஆனால் மரணமடைந்தவர்களைப் பாடையில் தூக்கிக்கொண்டு போவதுதான் இயல்பாக நடக்கக் கூடியது. இங்கு வேறு மாதிரி நடக்கிறது.கடற்கரையிலிருந்து ஒருவன் அவன் வீட்டிற்குப் பாடையில் படுத்துக்கொண்டு வருகிறான். கூடவே அவன் நண்பர்கள். பாடையைத் தூக்கிக்கொண்டு போகச் சிலர்.பாடை நிதானமாகப் பயணம் ஆகிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. பாடையைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களுக்கு எந்தத் துக்கமுமில்லை. அதேபோல் பாடையில் படுத்துக்கொண்டிருப்பவருக்கும் வருத்தமில்லை. சொகுசாகத் தூங்கிக்கொண்டு வருகிறார்.ஆனால் வீட்டில் வந்து இறங்கும்போதுதான் வீட்டில் உள்ளவர்கள் பதட்டமடைகிறார்கள்.பாடையில் படுத்து நன்றாகதூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்மரணம் நிகழ்ந்த துக்கம்முகங்களில் படரபெண்கள் நிசப்தமானார்கள்என்று எழுதியிருக்கிறார். இன்னொரு இடத்தில் ஒரு ரிக்ஷாக்காரன் நெருங்கி வந்து கேட்கிறான் செத்துப் போனது யார் சார் என்று. அதுவும் எப்படிக் கேட்கிறான் என்றால், பீடிக்கு தீ கேட்பது போல. செம்ம நகைச்சுவை உணர்வு பொங்க எழுதியிருக்கிறார்.பாடையில் சவாரி செய்வதைக் கிண்டலாகக் கொண்டுவந்தாலும் அது தொடர்பாக ஏற்படும் மரண பயத்தையும் குறிப்பிடுகிறார்.இறுதியில் வெற்றுப் பாடை வீதியில் போனது என்று முடிக்கிறார். மரணம் என்றாலே ஒரு வித பய உணர்ச்சி ஏற்பாட்டாலும் பயத்தையும் வேடிக்கை உணர்வாகவும் மாற்றி விடுகிறார் கவிதையில்.இதை ஒரு சர்ரியலிச கவிதையாகக் கருதலாம்.அடுத்தது இன்னொரு கவிதையை எடுத்துக் கொள்வோம். மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைக்குத் தலைப்பொன்றுமில்லை.
பொழுது விடிந்து
தினமும் நான்”
வருவேனென்று
கடற்கரை மண்ணெல்லாம்
குஞ்சு நண்டுகள்
கோலம் வரைந்திருந்தன
இங்குக் குஞ்சு நண்டுகள் முன்னமே கோலம் வரைந்து விடுகின்றன. இது இயல்பாக நடக்கக் கூடிய நிகழ்ச்சி.இந்த இயல்பான நிகழ்ச்சியை கவிகுரலோன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். சாதாரண விவரணையில் அழுத்தம் கொடுப்பது குஞ்சு நண்டுகள்தான்.தினமும் நடைப்பயிற்சிக்காக வருகிற கவிகுரலோன் குஞ்சு நண்டுகளின் அட்டகாசத்தைக் கவனித்துப் பூரித்துப் போகிறான்.தனக்குத் தென்படுகிற சின்ன சின்ன சம்பவங்களை அழகாகக் கவிதை ஆக்குகிறார். பாடைக் காட்சி மாதிரி சில கவிதைகள் அவரை வேறு விதமாக யோசிக்க வைக்கிறது.எல்லாவற்றிலும் இவர்தான் பாடுபொருளாகத் தென்படுகிறார்.
(இந்த வார (22.11.2020) திண்ணையில் ‘கவிதையும் ரசனையும்’என்ற பெயரில் வெளிவந்த கட்டுரை. ),
போன ஆண்டு ஜøன் மாதத்தில் ஏடிஎம் விஷயமாக நான் ஏமாந்து போனதை முகநூலில் குறிப்பிட்டிருந்தேன். நேற்று திரும்பவும் மேற்கு மாம்பலம் கிளை அலுவலகத்திற்குப் போக நேரிட்டது.
ஒரு செக் கிளியரிங்கில் தாமதமாகிவிட்டது. அதுவும் நவீன விருட்சம் இதழிற்காகச் சந்தாவாக ரூ150 ஐ ஒரு சந்தாதாரர் செக்.
வங்கிக் கிளைக்குப் போனவுடன் நான் ஏடிஎம்மில் ஏமாந்ததை ஞாபகம் வைத்திருந்த ஒரு பெண்மணி, சொன்ன செய்தியால் திகைத்துவிட்டேன். சார், இந்தக் கொரானா காலத்தில் பலர் லட்சக்கணக்கில் ஏமாந்து போகிறார்கள். இரண்டு நாட்களுக்குமுன் ஒரு வாடிக்கையாளர் 2 லட்சம் ஏமாந்து விட்டார். பாவமாக இருக்கிறது, என்றார்.
போனில் ஏமாற்றுபவர்கள் பேசும்போது ஹிந்தியும் தமிழும் கலந்து பேசுகிறார்களாம். மேலும் மானேஜர் பேசுகிறேன் என்கிறார்களாம். பெயர் கேட்டால் கேட்பவரைத் திட்டுகிறார்களாம். அங்கே இன்னும் சிலர் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்கிறார்கள்.
எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் கொடுத்த புகாருக்கு எந்தப் பதிலும் வரவில்லை கமிஷனர் அலுவலகத்திலிருந்து. அவசரம் அவசரமாக ஒரு ஞாபகமூட்டல் கடிதம் தாயரித்தேன்.
எதற்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்யலாமென்று போன் செய்தேன். பொதுவாக கமிஷனர் அலுவலகத்திற்குப் போன் செய்தால், யாரும் எடுத்துச் சரியாகப் பதில் சொல்ல மாட்டார்கள். இப்போதும் அப்படித்தான் நடந்தது. பாங்க் பிராடு பிரிவு 2வது தளத்தில் இருக்கிறது. அங்குத் தொடர்பு கொண்டு போனில் கேட்டேன். போனில் தொடர்பு கொண்டவர் வேறு ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு பேசச் சொன்னார். அங்குப் பேசினால் திரும்பவும் பழைய எண்ணிற்குப் பேசச் சொன்னார்கள்.
எனக்குத் தெரியும் இந்தப் பணம் கிடைக்கப் போவதில்லை என்று. அதனால் நான் மேலே தொடர்பு கொள்ளாமல் அலட்சியமாக ஒன்றரை வருடம் கழித்து விட்டேன்.
நேற்றைய சம்பவம் திரும்பவும் தொடர்பு கொள்ள வைத்தது. நான் திரும்பவும் அவர்களுக்கு இந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்தி கடிதம் எழுதி விட்டேன். ஆனால் பலர் அந்நியாயமாக ஏமாந்து ஏமாந்து போகிறார்களே என்று தோன்றியது.இந்தக் கொரானா நேரத்தில் இப்படி ஏமாறுவது அதிகமாகி விட்டது.
இன்று மதியம் தூங்கி எழுந்தபோது ஒரு போன் வந்தது. பேசியவர் ஒரு பெண்மணி. கிரிடிட் கார்டு ஏடிஎம் கார்டைப் பற்றி விசாரித்தாள். அவள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து குழந்தைகள் சத்தம். உடனே போனை கட் செய்து விட்டேன். திரும்பவும் போன் செய்தாள். அதெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் போனைத் துண்டித்தேன். ஆபத்து போனில் என்று தோன்றியது.
20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கத்திற்கு வருகைப் புரிந்து கவிதைகளை கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கவிதை வாசிக்கும் கூட்டம் வித்தியாசமானது. வழக்கம்போல் சிறப்புரை வழங்க வருபவர் திரு சீனிவாச நடராஜன். தலைப்பு : தற்கால கவிதைகளில் வடிவமும் உள்ளடக்கமும். முக்கியமாக இதில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர்கள், அவர்களுடைய கவிதைகளை வாசிக்கப் போவதில்லை. அவர்கள் விருமபுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள். யார் யாரு எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. வ வே சு – சுந்தரராமசாமி கவிதைகள்
2. ஷாஅ – ஆனந்த் கவிதைகள்
.3. ரவீந்திரன் – தேவதச்சன் கவிதைகள்
4. கணேஷ்ராம் – கல்யாண்ஜி கவிதைகள்
5. ஸ்ரீதர் – ஞானக்கூத்தன் கவிதைகள்
6. சிறகா – அனார் கவிதைகள்
7. பானுமதி – குட்டி ரேவதி கவிதைகள்
இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவ வேண்டும். எல்லோரும் முழுமையாகப் பங்கேற்று கவிதை வாசிப்பை உன்னிப்பாகக் கேட்க வேண்டும்.
மாலை 6.,30 மணிக்கு வெள்ளியன்று நடைபெற உள்ளது. Meeting ID: : 818 0247 4818 Passcode: : 827170 Topic: Virutcham Poetry 26th Zoom Meeting Time: Nov 20, 2020 06:30 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81802474818?pwd=cVJWbFJTeVFONzNGeFFoYzlFTzhRZz09 Meeting ID: 818 0247 4818 Passcode: 827170
‘நவீன கவிதையில் அறிவியல் ஓர்மை’ என்ற தலைப்பில் திரு பிரவீண் பஃறுளி 13.11.2020 (வெள்ஙளிக்கிழமை) அன்றுஆற்றிய உரையை ஒளிப்பதிவு செய்கிறேன். கேட்டு மகிழுங்கள்.
வழக்கம்போல் இன்று எல்லோரும் திறமையாக கவிதை வாசித்தார்கள். இது 25வது கவிதைக் கூட்டம். திரு பிரவீண் பஃறுளி அவர்கள் ‘நவீன கவிதையில் அறிவியல் ஓர்மை’ என்ற தலைப்பில் சிறப்பாகப் பேசினோர். அவர் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினார். அதன் பிறகு கவிதை வாசிப்பு நடந்தது. நான் ‘தீபாவளி’ என்ற தலைப்பில் பேசினேன். அதை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
எழுதிய வரிகளில்
இரண்டாவது வரி
தாளிலிருந்து தப்பி
குதித்து ஓடிவிட்டது
அதைப் பிடிக்க முடியவில்லை
மிரண்டு விட்டதாகச் சொன்னார்கள்
ஆறாவது வரியோ
டி து டி த்
கு த் கு து
கவிதை எழுதும்
கவிஞரைப் பார்க்கச் சென்றுவிட்டது
எட்டாவது வரி
தற்கொலை செய்துகொண்ட
கவிஞன் பேரைச் சொல்லி
தற்கொலை செய்துகொண்டது
சில வரிகள்
புத்தி குழம்பிப்போய் சோர்ந்து வீழ்ந்தன
தற்செயலாய்
விபத்தில் சிக்கிய வரிகள்
ஆபத்தாய் மருத்துவமனையில் படுத்துக்
கிடந்தன
இன்னும் சில வரிகளுக்குக்
கிழடுத் தட்டிப்போய்விட்டன
மிஞ்சிய வரிகள்
தானே இடம் மாற்றிக்கொண்டன
எல்லா வரிகளும்
கவிதை செத்துவிட்டதாய் ஓலமிட்டன.
((1993ல் எழுதிய கவிதை)