நெய்ச்சொம்பு

ந.முத்துசாமி

எங்கள் வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது. மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு ஆதாரமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது. நெய்யைத் தவிர அதில் வேறு எதுவும் தொங்கியதாக எனக்கு நினைவில்லை. நெய் அல்லது வெண்ணெய். நெய் காய்ச்சுவதற்கு நேரமில்லா மல் அல்லது மனது இல்லாமல் வெண்ணெயை உபயோகப்படுத்தும்போது அங்கு வெண்ணெய் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும். வெண்ணெய் மட்டும் எப்போதும் இருக்கும். எங்கள் வீடு எருமைகளுக்குப் பெயர்போனது. இரண்டு நாளைக்கு ஒருமுறை தயிர்கடைவார்கள். நானும் கடைவேன். எல்லோருமே கடைவோம். அதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. அந்த சுவாரஸ்யத்தைக் கம்பனும் அனுபவித்திருப்பான்.

‘தோயும் வெண்தயிர்மத்தொலிதுள்ளவும்

ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.’

எங்கள் அடுப்பங்கரை மிகவும் பெரியது. எங்கள் வீடென்ன, எல்லோர் வீட்டு அடுப்பங்கரையும் மிகவும் பெரியதுதான். ஆனால் எங்கள் அடுப்பங்கரையில் உள்ள தொட்டி முற்றம்தான் மிகவும் பெரியது. அதைப் போல நான் எங்கும் பார்த்ததில்லை. அவ்வளவு பெரிய தொட்டி முற்றமாக இருந்ததால் அடுப்பங் கரையில் வெளிச்சம் இருக்கும். பிற வீடுகளில் அது ஒரு விநோத இருட்டில் இருக்கும். நல்ல நடுப்பகலில் கூட. அப்படிப்பட்ட இருட்டை இன்று நாம் விரட்டிவிட்டோம். பகற்பொழுதிலும் செயற்கையான வெளிச்சத்தில் இருக் கத் தலைப்பட்டுவிட்டோம். நம் தோலையும் கண்களையும் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்த பழைய வெளிச்சம் பிரகாசமாகிவிட்டது. நல்லதுதான். நியாயங்கள் குன்றியிருந்த மொத்தச் சமூகத்திற்காகவும் நாம் இப்போதுதான் உழைக்கத் தலைப்பட்டிருக்கிறோம். அதற்கு இவ்வளவு வெளிச்சம் தேவைப் படுகிறது. 

நெய்ச் சொம்பு தொங்கிக்கொண்டிருந்த இரண்டு தூண்களுக்கு இடையிலான வெளி குறுகலானது. தயிர் கடைவதற்காகவே பிரத்யேகமாக ஒரு தூண் கூடுதலாகக் கூரையைத்தாங்கிக்கொண்டிருந்தது. கிழக்கு மேற்காக நீண்டிருந்த தொட்டிமுற்றத்தில் கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் வந்து இணையும் மூலையில் உள்ள பிரதான தூணுக்கு அருகில் சற்றுக் கிழக்கே தள்ளி தயிர் கடையும் தூண் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு மட்டும் தனிப்பட்ட சித்திர வேலைப்பாடுகள். தூணிலிருந்து மத்தைத் தயிர்ப் பாத்திரத்தில் இணைக்கும் இரண்டு கயிறுகளும் நழுவிவிடாமல் இருக்கத் தேவைப்பட்ட பதிவுகளைச் சித்திர வேலைப்பாடுகளுக்குள் இணைத்துத் தூணைக் கடைந்துவிட்டார்கள் போலும்.

அடுப்பங்கரையின் அமைப்பு சற்று வேறுபட்டது. கிழக்கு மேற்கான தெருவில் இருசாரிகளிலும் கிழக்கு மேற்காகவே அமையும் அடுப்பங்கரைகள் வீட்டிற்கு வீடு வேறுபட்டிருந்தன. ஆனால், ஏதோ ஒரு கணத்தில் பாகப் பிரிவினைகளால் இரண்டாகப் பிரியாமல் இருந்த வீடுகளில் உள்ள அடுப்பங்கரைகள் தொட்டி முற்றங்களைப் பிரதானமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. அத்தொட்டி முற்றங்கள் மூன்று புறங்களில் தாழ்வாரங்களால் சூழப்பட்டிருக்கும். ஆனால் எங்கள் அடுப்பங்கரை இரண்டு தாழ்வாரங்களை மட்டுமே கொண்டிருந்தது. முற்றத்தின் வடக்கு தாழ்வாரத்தால் அல்லாமல் சுவரினால் ஆளப்பட்டது. மேற்புறக் கூடத்தை வடக்கே நீட்டிவிட்டது போலவும், வடக்கே வந்து கிழக் கில் திரும்பும் தாழ்வாரத்திற்கு இணையான ஒரு தாழ்வாரத்தை உள்ளே கொண்டு, இரண்டாம் கட்டிற்கு இடம் கொடுத்து உண்டான வாயிலையும் இரண்டாம் கட்டில் முற்றத்தையும் பிரித்துக்கொண்டு உண்டான ஓர் அமைப்பு இது. கூடத்தை ஒட்டி வந்த தாழ்வாரத்தில் வடகோடியில் தலையை இடிக் கும் ஒரு வாயிற்படி அடுப்பங்கரைக்கு. ஆனால், அதற்கு இணையானதாராள மான ஒரு நிலைப்படி இரண்டாம் கட்டிற்கு வழி விட்டது. இன்று நிமிர்ந்த நடையில் போவதற்கு உண்டான வாயில்களைப் போலல்லாமல் சற்றுக் குனிந்தே இருக்க அமைக்கப்பட்ட அளவுகளை மரபாகக் கொண்டிருந்தவை அவை. அதில் இன்னும் வணக்கத்தை ஏற்படுத்தும் அடுப்பங்கரை வாயிற்படி.

உறியில் தொங்கிக்கொண்டிருந்த நெய்ச் சொம்பு தாழ்வாரத்திலிருந்து இந்த நிலைப்படியின் வழியாக வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியும். வாயிலி மிருந்து உள்ளே வரும் ரேழியைத்தாண்டி இருந்த வாயிற்படியை ஒட்டித்தாழ் வாரத்தின் கீழ்க்கையில் அமைந்திருந்த ஒரு திண்ணையில் ஒருவர் உட்கார்ந் தால் இந்த உறியையும் தயிர் கடைவதையும் பார்க்கலாம். எனவே மேல்புற முள்ள தாழ்வாரத்தையும் அடுப்பங்கரை ஒட்டி அது திரும்பும் வடகையில் உள்ள தாழ்வாரத்தையும் தூண்களால் பிரிக்கப்பட்ட அங்கணங்களில் மூலையில் இரண்டிரண்டை மறைத்துத் தென்னங்கீற்றால் ஆன நெறைச்சல் கட்டி யிருந்தார்கள். ஆகையால் இப்போது சின்னத் திண்ணையில் வந்து அமரும் யாரும் அடுப்பங்கரையை நேரடியாகப் பார்க்கமுடியாது. அதனால் இந்த நெய்ச் சொம்பு பார்வையிலிருந்து மறைந்து இருந்தது.

நெய்ச் சொம்பு என்றால் அது ஈயச் சொம்பு என்பது பழைய மனிதர்களுக்குத் தெரியும். ஈயப்பாத்திரங்கள் மாயவரத்திலும் கும்பகோணத்திலும் செய்யப்படு கின்றன என்பதும் பழைய தஞ்சாவூர்க்காரர்களுக்கு தெரியும். இந்த ஊர் ஈயப் பாத்திரங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. ஒருவர் மாயவரத்திற்குப் போவ தானால்துலாகட்டத்தை ஒட்டிய பட்டமங்கலத் தெருவின் கோடியில் மேற்குப் பார்த்த கீழ்க்கைச் சாரியில் சில கடைகளில் ஈயப் பாத்திரங்களை லொட்டுலொட்டு என்றுதட்டி செய்து கொண்டி ருப்பதைக்காணலாம். புஞ்சை மாயவரத்திற்கு அருகில் இருந்ததால் இது எனக்குத் தெரியும். கும்பகோணம் பெயர் அளவில்தான் தெரியும். அங்கு போக வேண்டிய தேவையில்லை மாமாங்கத்தைத் தவிர. மாயவரத்திற்கு ஐப்பசி மாதம் துலா ஸ்நானத்திற்கு நாங்கள் எல்லோரும் போவோம். சுற்றுப்புறச் சூழல் அசிங்கப்பட்டுப் போவதைப் பற்றி இப்போது நாம் அதிகம் பேசுகிறோம். ஒரு அறுபது வருடத்திற்கு முன்னால் ஒருவர் குடமுழுக்கு, கடைமுழுக்கு நாட்களில் துலா கட்டத்தை நினைப்பாரானால் தெரியும், அன்றும் சுற்றுப்புறச் சூழல் அதிகம் உபயோகப்படுத்துவதனால் கெட்டுப்போயிருந்தது என்பது. இந்த ஐப்பசி மாதத்தில்தான் ஈயப்பாத்திரங்களும் கற்சட்டிகளும் அதிகம் வாங்கப்பட்டன. அப்போதுதான் ஜனங்கள் மாயவரத்திற்கு அதிகம் வருவார்கள். இந்த நெய்ச் சொம்பும் ஒரு துலா மாதத்தில் வாங்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஈயப் பாத்திரங்களைப்பற்றிய பிரக்ஞையே இப்போது குறைந்து போய்விட்டது. சொம்பைப் பற்றிய பிரக்ஞையே குறைந்துபோய்விட்டது. அதன் இடத்தை பிளாஸ்டிக்குவளைகள் பிடித்துக் கொண்டுவிட்டன. சொம்பு. குவளை. ஈயத்தில் இரண்டு வகை ஈயம், வெள்ளீயம், காரீயம். பார்த்து வாங்கத் தெரியாவிட்டால் காரீயத்தைக் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள் என்று சொல்வார்கள். காரீயத்தில் வைக்கும் உப்பு பட்ட பண்டங்கள் கைத்துப்போய்விடும். வெள்ளீயத்தில் அப்படியே இருக்கும். ரசம் வைப்பதற்கும் வெள்ளீயம் மிகவும் ஏற்றது. ஈயச் சொம்பில்தான் ரசம் வைத்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஒருக்கால் ஈயம் உடம்பிற்குத் தேவையோ என்னவோ? இப்போது ஈய விஷத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அளவைப் பொறுத்து மருந்தும் விஷ மாக மாறிவிடும் போலும். வைத்தியரைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த ஈயச் சொம்பு ஒரு மண்டை அளவு இருந்தது. அப்போது நிறைய நெய் யோடு தொங்கிக்கொண்டிருந்தது. நான் அடியில் அமர்ந்து பெரிய கற்சட்டியில் தயிர்கடைந்துகொண்டிருந்தேன். தயிர்கடைவது என்றால் அது காலை நேரம் என்று இன்று நகரத்தில் இருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டும். காலையில் எட்டு மணி இருக்கலாம். கடிகாரத்தை அல்லாமல் முற்றத்தில் இறங்கும் நிழலைப் பார்த்து நேரம் தெரிந்துகொண்டிருந்த காலம் அது. அம்மா அடுப்பில் பிரை ஊற்றுவதற்குப் பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள் என்று நினைக்கிறேன். அடுப்பங்கரையின் கீழ்க்கோடியிலும் வடகோடியிலும் அடுப்புகள் இருந்தன. விறகுவைத்து எரிய விடும் மண் அடுப்புகள். நான் தயிர்கடைந்துகொண்டிருந்த அப்போது அம்மா இருந்தது கீழ்க்கோடியில் இந்த அடுப்படியில். 

என் நண்பன் பழனிவேலு தாழ்வாரத்துச் சின்னத் திண்ணையில் அமர்ந்து கொண்டான் போலும்.

‘கண்ணா ‘ என்றான்.

எனக்குப் பெரிய சந்தோஷம். ‘பழனிவேலு’ என்று விநோதமாகக் கத்தினேன் நான். மத்தைக் கற்சட்டியில் விழாதபடி சாத்தி வைத்துவிட்டு வருவதற்குள், – ‘கண்ணா , தண்ணீ’ என்று அவனிடமிருந்து இன்னொரு உரத்த குரல் வந்தது. நாங்கள் தாழ்வாரத்து நெறைச்சலால் மறைக்கப்பட்டிருந்தோம் என்பது நினைவிருக்க வேண்டும். நான் எழுந்து தண்ணீர் எடுக்கப் போனேன். அவன் என் உயிர் நண்பன். அவனுக்கு நான் குடிக்கும் தண்ணீரைத்தானே கொடுக்க வேண்டும். எனவே, மேற்குத் தாழ்வாரத்தில் வடபுறம் சுவரை ஒட்டிக் கொல்லைக் கொட்டகைக்குப் போகும் வாயிற்படிக்கு அருகில் முற்றத்தின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில் பானையில் வைக்கப்பட் டிருக்கும் காவிரித் தண்ணீரை எடுக்கப் போனேன். அடுப்படியில் இருந்த படியே ‘ஏய் இந்தாடா, இந்தாடா’ என்றாள் அம்மா என்னைப்பார்த்து. அதற்கு அர்த்தம் என் நண்பனுக்குக் கொடுக்கும் தண்ணீரில் சிறிது மோரைத் தெளித்துக் கொடுக்க வேண்டும் என்பது. அவன் பிராமணன் இல்லை. முதலியார். புஞ்சையில் பிராமணர்களைப் போலவே செல்வாக்கோடு இருந்தவர்கள் முதலியார்கள். அவனுக்குத் தண்ணீரில் மோரைத் தெளித்துக் கொடுப்பது எனக்கு உடன்பாடில்லை. அப்போது எங்களுக்கு வயது பத்துதான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தத் தீமைகள் அப்போது எனக்குத் தெரிந்திருந்தது. அவனுக்கும் தெரியும். பிராமணர்கள் அல்லாத நண்பர்கள் எங்களைக் கேலி செய்துகொண்டிருப்பார்கள் இதற்காக. அப்போது மாட்டுக்காரச் சிறுவர்கள் காவிரிக்கரையில் தொலைவில் நின்று காவிரியில் குளிக்கும் பிராமணர்களைப் பார்த்து ‘அக்ரகாரப்பாப்பானெல்லாம் சாக மாட்டானா, அவன் ஆத்தங்கரை ஓரத்திலே வேக மாட்டானா ‘ என்று தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பாடத் தொடங்கிவிட்டிருந்தார்கள் அப்போது. 

நான் முறைத்துக்கொண்டு தண்ணீரில் மோரை ஊற்றாமல் டம்ளரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அடுப்படியிலிருந்து அம்மா ஓடிவந்து கற் சட்டியில் கடைந்து கொண்டிருந்த மோரில் விரலைத் தோய்த்து டம்ளரில் தெளித்தாள். அவ்வளவுதான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. டம்ளரை முற்றத்துச்சுவரில் அடித்தேன். கற்சட்டித் தயிரைக்காலால் முற்றத்தில் உதைத்து உடைத்தேன். உறியில் தொங்கிக்கொண்டிருந்த நெய்ச் சொம்பை எடுத்து முற்றத்துச் சுவரில் வீசி மோதி உடைத்தேன். சுவர் முழுதும், முற்றம் முழுதும் நெய், மோர் ஆறாய் ஓடியது. கோபத்தோடு வெளியில் ஓட எத்தனித்த என்னை,நான் உயரமாய் இருந்ததாலும், வாயிற்படி குள்ளமாய் இருந்ததாலும், அது என் தலையை மோதி உடைத்தது. 

‘ஐயோ அம்மா நான் கீழே விழுந்து மயக்கம் போட்டுவிட்டேன். இந்த ‘அம்மா’ என்பது தாயைக்கூப்பிட்ட ஓலமில்லை. இது வலியில் சொல்லும் விளிச்சொல். என் நண்பன்தான் ஓடிவந்து என்னைத் தூக்கிக்கிடத்திவிட்டு வைத்தியனைக் கூப்பிட்டுக்கொண்டு வந்து மருந்து வைத்துக்கட்டினானாம். 

இது எப்படி நடந்ததென்று என் நண்பனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதை யெல்லாம் கடந்துதான் அவன் எனக்கு நண்பனாக இருந்தான். 

இந்த நெய்க்கறை இன்னமும் தொட்டிமுற்றச்சுவரில் அது உண்டான காரணத்தை இழந்து இருந்துகொண்டிருக்கிறது

அஞ்சலட்டைக் கதைகள் – 11

அழகியசிங்கர்



அம்மா…அம்மா



மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தூங்கச் செய்து விட்டேன்.  இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு எழுந்துகொள்ள மாட்டாள்.  அதன்பின் எழுந்து தொண தொணவென்று எதாவது பினாத்திக் கொண்டிருப்பாள்.  பெரும்பாலும் படுக்கையில்தான் எல்லாம்.


ஒவ்வொரு முறையும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முயற்சி செய்கிறாள்.  அப்போதெல்லாம் என் பெயரைச் சொல்லிக் கத்துவாள். 

இந்தக் கொரோனாவால் நானும் என் கணவரும் வீட்டில் அடை பட்டிருக்கிறோம்.  அம்மாவை நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.  உண்மையில் ஒரு செவிலியர் போட்டிருந்தோம். நான் அலுவலகம் போய்விட்டுத் திரும்பும்வரை செவிலியர் இருப்பாள்.  அவள்  வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்று பயந்து இப்போதெல்லாம் வருவதில்லை.


அவருக்கு வீடே அலுவலகமாக மாறிவிட்டது.  எனக்கு அப்படி இல்லை.  முழுக்க முழுக்க தொலைக்காட்சி.  காலையிலிருந்து இரவு வரை.  அம்மாவைப் பார்த்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.  படுக்கையிலிருந்து விழுந்து விடுவாளோ என்ற பயம் இருக்கிறது.  நாங்கள் முதல் மாடியில் இருக்கிறோம்.  கொரோனா வால் கதவைத் தொடக் கூடப் பயம். 

செய்தித்தாளில் பரவிடும் என்பதால் செய்தித் தாளே வாங்குவதில்லை.  அவர்தான் முகமூடி அணிந்துகொண்டு மளிகைச் சாமான்கள், மருந்தெல்லாம் வாங்கி வருவார்.  


அம்மாவிடம் கொரோனாவைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்.  புரிந்த மாதிரி தலையைத் தலையை ஆட்டினாள்.  ஆனால் ஒன்றும் புரியவில்லை.


“அம்மா, கொரோனா தெரியுமா?”


“யாராவது வாசலில் நிற்கிறாளா?”  என்றாள் அம்மா.

அஞ்சலட்டைக் கதைகள்

அஞ்சலட்டைக் கதைகள் 

அழகியசிங்கர்

இது என் எட்டாவது கதை.  இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  

கதை 8

ஓட்டம்

பத்மநாபன் அன்றைய செய்திகளைத் தினசரி தாளில் படித்துக்கொண்டிருந்தான்.  காற்றோட்டமாக இருக்கட்டுமே என்று வாசல் வராந்தாவில் படித்துக் கொண்டிருந்தான்.  அவன் மனைவி பட்டு அவனுக்குக் காப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள்.

வாசலில் நிழலாடியது.  யார் என்று பார்த்தான்.  

“என்ன?”

“உங்களுக்கு என்ன வயது?”

“66”

“உங்கள் மனைவிக்கு”

“63”

“சளி, தும்பல், ஜ÷ரம் எதாவது இருக்கா?”

“இல்லை.”

“பீபி, சுகர்.”

“உண்டு.  மனைவிக்கு  பீபி”

“நாங்கள் சுகாதாரத் துறையிருந்து வருகிறோம்.  உங்கள் ஏரியாவில் அதிக அளவு தொற்று இருக்கிறது. உங்கள் ரத்த மாதிரி வேண்டும்.”

கொஞ்சம் யோசித்தான் பத்மநாபன்.  

“நீங்கள் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வர முடியுமா?”

“முடியும்.”

       அவர்கள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பிப் போனார்கள்.

      ஒரு மணி மேலேயே கடந்து  அவர்கள் திரும்பி வந்தார்கள்.

பத்மநாபன் வீடு பூட்டியிருந்தது.

அஞ்ச லட்டைக் கதைகள் – 7




அழகியசிங்கர்

இது என் ஏழாவது கதை.  இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  

கதை 7

சொல்ல முடியாத சோகம்

மெதுவாக நடந்தான்.  சோர்வாக இருந்தான். ஒன்றும் சாப்பிடவில்லை.  கொரோனாவால் முழு கதவடைப்பு. அவனுக்கு வீடு இல்லை.  வாசலில்லை.
   ஊருக்குத் திரும்பவும் போய்விடலாமென்று எண்ணத்தில் தனியாகத்  தங்கியிருந்த இடத்தைக் காலி செய்துவிட்டான்.  பெங்களூரிலுள்ள தன் கிராமத்துக்கு எப்படியும் போக முடியாது.  மூட்டை முடிச்சுகளைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்திருக்கிறான்.
தினமும் காலையிருந்து அலைகிறான்.  ஓரிடத்திலும் இருக்க முடியவில்லை.  பசி.  கோரத்தாண்டவமாடும் பசி.  எங்கே உணவு கிடைக்குமோ அங்கேயெல்லாம் போய் நிற்கிறான்.
இதோ இப்போது நடந்து போகும் தெருவில் எல்லா வீடுகளும் திறக்கவில்லை.  யார் வீட்டுக் கதவையும் தட்டப் பிடிக்கவில்லை.  அயர்ச்சியாக இருக்கிறது.  பார்த்துக்கொண்டே போகிறவனுக்கு ஒரு வீடு வா வாவென்று திறந்து கிடக்கிறது.
வீட்டுக் கேட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான்.  யாருமில்லை.  கூடத்தில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது.  அமெரிக்காவில் கொரோனாவால் பத்து லட்சம் பேர்கள் என்று செய்தி அறிவித்துக்கொண்டிருக்கிறது.
அவசரம் அவசரமாகச் சமையலறைக்குள் நுழைகிறான். யாரும் அவனைத் தடுக்கவுமில்லை. அங்கே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.  நிதானமாகச் சாப்பிட வேண்டுமென்று கூடத் தோன்றவில்லை.  சாப்பாட்டைப் பார்த்தவுடன் வெறி.  சாப்பிட்டு கையலம்பிய பிறகு ஒவ்வொரு அறைக்காகச் சென்றான்.  ஒரு அறையில் பீரோ திறந்து கிடந்தது.  பீரோவில் பணம் கட்டுக்கட்டாய் கண்ணில் பட்டது.  ஆச்சரியத்துடன் கொஞ்சம் எடுத்துக் கொண்டான்.  அங்கே இருக்கக் கூடாதென்று தோன்றியது.  வெளியே வந்தான்.  முகமூடி அணிந்த காவலர் அவனைப் பிடித்து அம்புலன்சில் தள்ளினார்கள்.  

அஞ்சலட்டைக் கதைகள்

அஞ்சலட்டைக் கதைகள் 

அழகியசிங்கர்

இது என் ஆறாவது கதை.  இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 

போஸ்டல் காலனி இரண்டாவது தெரு

எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தோம்.  நானும் மனைவியும்தான்.  மனைவி டிவியில்.  நான் கணினியில் மூழ்கியிருப்போம்.  தினமும் கொரோனா செய்தி எங்களைப் பாடாய்ப் படுத்தும்.  உண்மையில் டிவியில் வரும் செய்தியைக் கேட்கும்போது திகில் கதையைப் படிப்பது போலிருக்கும்.  போஸ்டல் காலனி 1வது தெருவிலிருக்கிறோம்.  இரண்டாவது தெருவில் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு இளைஞனுக்குத் தொற்றாம்.  

        யார் அது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  என் நண்பன் வெங்கடேஷ் பையனாக இருக்குமாவென்று யோஜனைப் போயிற்று.  அவன் பையனாக இருக்கக் கூடாதென்று வேண்டிக்கொண்டேன்.  போன வருடம்தான் வெங்கடேஷ் இல்லாமல் போய்விட்டான்.  போய்ப் பார்க்கலாமென்றால், கட்டையைப் போட்டு தடுத்திருக்கிறார்கள்.  எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர்கள் வீட்டுத் தொலைப்பேசியைத் தட்டினேன்.  யாரும் தொலைப்பேசியை எடுக்கவில்லை.  பக்கத்துத் தெருதானே விஜாரிக்கலாமென்று கிளம்பினேன்.  தெருவில் ஆட்கள் நடமாட்டமில்லை.  போக முடியாதபடி தடுப்பு.  

ஓரிடத்தில் கூட்டமாய் காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன.  என்னமோ காக்கைகள் கொரோனா கொரோனா என்று சொல்வதுபோல் தோன்றியது. 

அந்தோன் சேகவ்வின் வான்கா என்ற கதை

அழகியசிங்கர் 

‘அந்தோன் சேகவ்’வின் அருமையான சிறுகதையான ‘வான்கா’  படித்தேன்.  ஒன்பது வயது சிறுவனைப் பற்றிய கதை இது. ‘ வான்கா மூக்கவ்’ வேலை பயிலுவதற்காக 3 வாரங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன்.

பரபரப்பாக இருக்கிறான் வான்கா.  கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எசமானனும் எசமானியும் முதுநிலை வேலை பயிற்சியாளர்களும் கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்தான். 

பிறகு அலமாரியிலிருந்து மசிப்புட்டியையும் துருப்பிடித்த முனை கொண்ட பேனாக்கட்டையையும் எடுத்து வந்து, கசங்கிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு எழுதத் தயாராகி விட்டான்.

யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதத் துடிக்கிறான்.  அவனுடைய தாத்தாவிற்குத்தான்.  அன்புக்குரிய தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச் என்று எழுத ஆரம்பித்தான்.  அந்தக் கடிதத்தில் தாத்தாவிற்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தைத் தெரிவிக்கிறான்.  வான்காவிற்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை.  எல்லாம் தாத்தாதான். 

அவனுடைய தாத்தா கன்ஸ்தன்தீன் ழிவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார்  65 வயதானவர்.  பகல் பொழுதில் பின்கட்டு சமையலறையினுள் தூங்குவார். அல்லது சமையல்காரிகளோடு வேடிக்கையாகப் பேசிக்கொண்டு பொழுதைப் போக்குவார். 

இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து பண்ணையைச் சுற்றி நடப்பார்.  அவருடன் விலாங்கு என்ற நாய் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு உடன் வரும்.  இந்த விலாங்கு பணிவு மிக்கதாய் வாலைக் குழைத்துக் கொண்டு வரும்.  ஆனால் அதை யாராலும் நம்ப முடியாது.  திருட்டுத்தனமாய் வந்து காலைக் கடிப்பதிலும், யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக் குஞ்சுகளைக் கவர்ந்துகொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங்காலில் எத்தனையோ தரம் வெட்டுக் காயம் பட்டிருக்கும் இருமுறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள்.உயிர் போகிற நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். 

தாத்தாவை நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டவாறு கடிதம் எழுதுகிறான்.  

‘நேற்று என்னை அடித்து நொறுக்கி விட்டார்கள்.  முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச் சென்று கடிவாள் வாரால் நையப் புடைத்தார்.  காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கி விட்டேன்.’

இப்படி அற்ப காரணத்திற்காக அடி வாஙகுகிறான்.  ஒன்பது வயதான அவனால் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  மேலும் அவனுடைய எஜமானி வேறு அவனைக் கொடுமைப் படுத்துகிறாள்.  மீனை சுத்தம் செய்ய கொடுக்கிறாள். வான்கா வால் பக்கத்திலிருந்து ஆரம்பித்தான்.  உடனே எஜமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை அவன் முகத்திலே வைத்துத் தேய்த்தாள்.  மற்ற வேலைக்காரர்களும் அவனை கேலி செய்கிறார்கள்.  மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள்.  எசமானுடைய தோட்டத்தில் போல் வெள்ளரிக் காய்களைத் திருடி வரும்படிக் கூறுகிறார்கள். 

பெரும்பாலும் அவமானத்துடனும் பட்டினியுடன்தான் அவன் இருக்கிறான். காலையில் ரொட்டி தருகிறார்கள். மத்தியானத்துக்குக் கஞ்சியும், இரவில் மீண்டும் ரொட்டி கொடுக்கிறார்கள்.  தேநீரோ, முட்டைக் கோஸ் சூப் எதுவும் கிடைப்பதில்லை. 

வான்கா இதையெல்லாம் எழுதிவிட்டு தாத்தாவிடம் கெஞ்சிக் கேட்கிறான்.  ‘என்னை அழைத்துக் கொண்டு போய் விடு,’ என்று.  

‘உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், எந்நாளும் மறக்காமல் உனக்காகப் பிரார்த்தனை செய்வேன். என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு, இல்லையேல் நான் செத்துத்தான் போவேன்,’

என்று அந்தோன் செகாவ் அவன் நிலைமையை விளக்குகிறார். 

கண்ணீர் மல்க வான்கா இன்னும் எழுதுகிறான்.  

‘எனது அன்புக்குரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை, எனக்கு உயிர் போகிறது இங்கிருந்து ஓடி விடலாம். நடந்தே கிராமத்துக்கு வந்து விடலாம்.  ஆனால் என்னிடம் புதை மிதியடிகள் இல்லை.  கடுங்குளிர் தாங்க முடியாதே என்று பயந்துகொண்டு சும்மாயிருந்தேன். கருத்துடன் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்.  யாரும் உன்னைத் துன்புறுத்த விட மாட்டேன்.  நீ இறந்தபின் உன்னுடைய ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை செய்வேன்.  என் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்கிறேனே அதே போல செய்வேன் என்கிறான் வான்கா.  

வான்காவின் கடிதம் தொடருகிறது. ‘ அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப்பெட்டியில் பத்திரமாய் வை.  திருமதி ஓல்கா இக்னாத்யென்னாவிடம் கேட்டு வாங்கு..வான்காவுக்கு என்று சொல்லு.’

அன்புக்கு ஏங்கும் ஒன்பது வயது சிறுவனான பழைய கனவில் மூழ்கி விடுகிறான்.  அவனை அவன் தாத்தா  பண்ணைவீட்டுக் கனவான்களுக்குக் கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காக அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது.  அப்போதெல்லாம் காலம் எவ்வளவு இன்பகரமாக இருந்தது என்று யோஜனை செய்கிறான்.  

திருமதி ஓல்கா இக்னாத்யெவ்னாதான் – வான்காவுக்கு மிகப் பிடித்தவர் – யாரையும் விட முன்னிலையில் நின்று வேலை செய்வார்.  வான்காவின் தாயாகிய பெலகேயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்தபோது ஓல்கா இக்னாத்யெவ்னா வான்காவுக்கு மிட்டாய்த் தருவது வழக்கம். அவனுக்கு அவர் எழுதவும், படிக்கவும் நூறு வரை எண்ணவும் சொல்ஙூக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்குக் கூடக் கற்றுத் தந்தார்.  ஆனால் அவன் தாயார் பெலகேயா இறந்தபிறகு, அனாதையாகிவிட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தாத்தாவிடம் அனுப்பப்பட்டு விட்டான்.  அங்கிருந்து மாஸ்கோவுக்குப் புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டு வந்து விடப்பட்டான். 

தன் துயரங்களை வான்கா கடிதம் மூலம் எழுதிக்கொண்டிருக்கும்போது பழைய நினைவுகளுக்குப் போய் விடுகிறான்.  கதையின் உத்தி சிறப்பாகவே பயன்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் வாசிக்கத் தூண்டும் விதமாக.

வான்கா தாத்தாவை கெஞ்சி எழுதுகிறான்.  

‘தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு என்று மேலும் எழுதுகிறான்.

இப்படிக் கெஞ்சும்போது எதைஎதையோ சொல்லி கெஞ்சுவார்கள்.  வான்கா அந்த நிலைக்குப் போய்விட்டான்.  அவன் கடிதம் உருக்கமாக இருக்கிறது.

‘ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு. உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.. அனாதைச் சிறுவனான நான்  துன்புறுகிறேன்.  எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள்.  எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன்.  துன்பம் தாங்கமாட்டாமல் எப்போதும் அழுது கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் மிக வருத்தத்துடன் கண்கலங்கியபடி கடிதம் எழுதுகிறான்.

இப்படி எழுதிக்கொண்டிருக்கும்போது அல்யோனாவுக்கும், ஒற்றைக் கண் எகோருக்கும், கோச் வண்டிக்காரருக்கும் அன்பைத் தெரிவிக்கிறான். கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே என்கிறான்.

பின் காகிதத்தை நான்காய் மடித்தான்.  ஒரு கப்பேக் கொடுத்து இதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத்திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்.  பிறகுச் சற்று சிந்தனை செய்துவிட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான் : 

தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச், கிராமம்

என்று முடிக்கிறான்.  யாரும் தலையிட்டு தான் எழுதுவதைத் தடுக்கவில்லை என்று மகிழ்ச்சி அடைகிறான். கடிதத்தை தபாலில் சேர்க்க கோட்டு எதுவும் போட்டுக்கொள்ளாமல் வெறுஞ்சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.

அருகாமையிலிருந்த தபாற்பெட்டியிடம் ஓடி மதிப்பிற்குரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான். 

ஒன்பது வயது சிறுவன் தன் தாத்தாவை அழைக்க உருக்கத்துடன் கடிதம் எழுதி அனுப்புகிறான்.

இந்தக் கடிதத்தை தபாலில் சேர்த்த பிறகு ஒரு மணி நேரத்தில் அவனுக்குத் தூக்கம் வந்து விடுகிறது.  அவனுக்கு ஒரு கனவு வருகிறது.  ஒரு கணப்படுப்பு தோன்றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையல்காரிகளுக்குப் படித்துக் காட்டினார் என்று முடிகிறது கதை.  இந்தக் கதையை ரா கிருஷ்ணையா மொழி பெயர்த்துள்ளார். 

ஒன்பது வயது சிறுவனுடைய பார்வையில் கதையை அந்தோன் சேகவ் அற்புதமாக எடுத்துக்கொண்டு போகிறார்.  இக் கதையை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. ஒவ்வொருவரும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய கதை.  

அந்தோன் சேகவ்

வான்கா

           ஒன்பது வயதுச் சிறுவன் வான்கா மூக்கவ் வேலை பயிலு வதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப் பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எச மானும் எசமானியும் முதுநிலை வேலைப் பயிற்சியாளர்களும் கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந் தான்; பிறகு அலமாரியிலிருந்து மசிப் புட்டியையும் துரு பிடித்த முனை கொண்ட பேனாக்கட்டையையும் எடுத்து வந்து, கசங்கிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு எழுதத் தயாராகி விட்டான். முத லாவது எழுத்தை வரையுமுன் நெஞ்சு படபடக்க இரண் டொரு தரம் வாயிற் கதவையும் சன்னலையும் பார்த்துக் கொண்டான். புதைமிதி அச்சுக் கட்டை அடுக்குத் தட்டு களுக்கு நடுவிலிருந்த சாமிப் படத்தை உற்று நோக்கிய வாறு விக்கிச் செறுமிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான். காகிதம் பெஞ்சின் மேல் இருந்தது, வான்கா பெஞ்சின் பக்கத்தில் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.

      ”அன்புக்குரிய தாத்தா கன்ஸ் தன் தீன் மக்காரிச்! என்று எழுதினான்.

         ”உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன். கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அனுப்புகிறேன், ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன். எனக்கு அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை; உன்னைத் தவிர யாரும் இல்லை எனக்கு.”

        இருண்ட சன்னல் கண்ணாடியை நோக்கி வான்கா கண் களை உயர்த்தினான். மெழுகு வத்தியின் பிம்பம் சன்னல் கண்ணாடியில் ஆடித் துடித்தது. அவனுடைய மனக் கண்முன் தாத்தா கன்ஸ் தன் தீன் மக்காரிச் தெளிவாய்த் தோற்ற மளித்தார். இவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் அவர் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார். மெலிந்து உருவில் சிறியவரான கிழவர் அவர், வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஆனால் குறிப்பிடத் தக்க துடிப்பும் விறுவிறுப்பும் வாய்ந்தவர், சிரித்த முகமும் குடி போதை கொண்டு மங்கிய கண்களுமுடையவர். பகற் பொழுதில் அவர் பின் கட்டுச் சமையலறையினுள் தூங்கு வார், அல்லது சமையற்காரிகளோடு வேடிக்கையாய்ப் பேசிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து சடசடப்பியை ஆட்டி ஒலித்தவாறு பண்ணையைச் சுற்றி நடப்பார். அவருக்குப் பின்னால் கிழட்டுக் கஷ் தான்காவும் விலாங்கு என்ற இன் னொரு நாயும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு செல்லும். அதன் கரிய நிறத்துக்காகவும் நீளமான நீர் நாயை ஒத்த உடலுக்காகவும் அதற்கு விலாங்கு என்று பெயர். இந்த விலாங்கு பணிவு மிக்கதாய் அருமையாய் வாலைக் குழைத்துக் கொண்டு வரும்; தெரிந்தவர்களா யினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும் அதே பார்வை கொண்டு தான் உற்று நோக்கும். ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது. அதன் அடக்க மும் பணிவும் வெளிவேஷமே தவிர மெய்யானவையல்ல ; அதன் கள்ளத்தனத்தையும் குரோதத்தையும் மூடிமறைக் கவே பயன்பட்டன இவை. திருட்டுத்தனமாய் அணுகி வந்து காலைக் கடிப்பதிலும், யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக் குஞ்சுகளைக் கவர்ந்து கொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங் கால்களில் எத் தனையோ தரம் வெட்டுக் காயம் பட்டிருக்கும், இரு முறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள், வாரம் தவறாமல் நையப் புடைத்து உயிர் போகும் நிலையில் விட்டுச் சென்றார்கள். ஆனால் அது யாவற்றையும் சாமாளித்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்தது.

          தாத்தா இந்நேரத்தில் அனேகமாய் வெளி வாயில் அருகே நின்று கண்களைச் சுளித்துக் கொண்டு, கோயில் சன்னல்களிலிருந்து சென்னிறத்தில் பளிச்சிடும் ஒளியைப் பார்ப்பார்; ஒட்டுக்கம்பளப் பொதி மிதிகளைக் கால்களில் மாட்டிக் கொண்டு தத்துப்புத்தென நடந்து வேலையாட்களோடு கும்மாள மடிப்பார். அவருடைய சடசடப்பி இடுப்பு வாரில் தொங்கும். குளிராயிருக்கிறது என்று சொல்லிக் கைகளை விரித்துத் தன்னைத் தானே கட்டிப் பிடித்துக் கொள்வார். அல்லது யாராவது சமையற் காரியையோ பணிப்பெண்ணையோ கிள்ளிவிட்டுக் கிளு கிளுத்துக் கிழட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்.

                     ”ஒரு சிமிட்டா எடுத்துக் கொள்” என்று அந்தப் பெண்களிடம் தனது பொடி டப்பாவைக் காட்டுவார்.

               ஒரு சிமிட்டா எடுத்து மூக்கினுள் இழுத்து உடனே தும்முவார்கள் அந்தப் பெண்கள். தாத்தாவுக்கு ஆனந் தம் தாங்க முடியாது, வயிறு குலுங்கச் சிரிப்பார். – ”உறைந்து போன மூக்குக்கு நல்லது!” என்று கூவு வார்.

நாய்களுக்குங்கூட மூக்குப்பொடி கொடுப்பார். கஷ் தான்கா தும்மிவிட்டுத் தலையை ஆட்டி ஆட்சேபித்தவாறு விலகிச் செல்லும். ஆனால் பணி வடக்கம் மிகுந்த விலாங்கு தும்முவது சரியல்ல என்று வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும். வானிலை அற்புதமாயிருந்தது. காற்று அசங்காது அமைதியாய், பளிங்கு போல் தெளிவாய், மாசு று வற்றிருந்தது. கரிய இரவென்றாலும் கிராமத்தின் வெண் ணிறக் கூரைகளும், புகைபோக்கிகளிலிருந்து எழும் புகை யும், உறைபனிக் கவசமிட்டு வெள்ளி போல் பளபளத்த மரங்களும், வெண்பனிப் பெருக்குகளும் தெட்டத் தெளி வாய்க் கண்ணுக்குத் தெரிந்தன. ஒய்யாரமாய்க் கண்சி மிட்டும் விண்மீன்கள் வானத்தில் வாரியிறைக்கப்பட்டிருந் தன. பால்வெளி மண்டலம் விழா நாளுக்காகக் கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு வெண்பனியால் தேய்த்து மெரு கிடப்பட்டது போல் கண்ணைப் பறிக்கும்படி எடுப்பாய்த் தெரிந்தது…. * வான்கா பெருமூச்சு விட்டவாறு பேனாவால் மசியைத் தொட்டு, மேலும் எழுதிச் சென்றான்:

                     ”நேற்று என்னை அடித்து நொறுக்கி விட்டார்கள் . முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச் சென்று கடிவாள வாரால் நையப் புடைத்தார். காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கிவிட்டேன். சென்ற வாரத்தில் ஒரு நாள் எசமானி என்னைக் கெண்டை மீனைச் சுத்தம் செய்யச் சொன்னாள். நான் வால் பக்கத்திலிருந்து ஆரம்பித்தேன், உடனே எசமானி அந்த மீனைப்பிடுங்கி அதன் தலையை என் முகத்திலே வைத்துத் தேய்த்தாள். ஏனைய வேலைப் பயிற்சியாளர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள், எசமானுடைய வெள்ளரிக் காய்களைத் திருடி வரும்படிக் கூறுகிறார்கள், எசமான் கைக்குக் கிடைப்பதை எடுத்து என்னை அடித்துக் கொல்லுகிறார். சாப்பிட இங்கே எனக்கு ஒன்றும் கிடைப் பதில்லை. காலையில் ரொட்டி தருகிறார்கள், மத்தியானத் துக்குக் கஞ்சியும், இரவில் மீண்டும் ரொட்டியும் கொடுக் கிறார்கள். தேநீரோ, முட்டைக் கோ ஸ் சூப்போ எதுவும் எனக்குக் கிடைப்பதில்லை, யாவற்றையும் அவர்களே தீர்த்துக் கட்டி விடுகிறார்கள். என்னை நடையிலே படுக்கச் சொல்கிறார்கள், அவர்களுடைய குழந்தை கத்தும் போது நான் தூங்கக் கூடாது, அதை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். எனது அருமைத் தாத்தா, உனக்குப் புண்ணி யம் உண்டு, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு, கிராமத்துக்குக் கூட்டிச் சென்றுவிடு, என்னால் இனி பொறுக்க முடியாது. தாத்தா, உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், எந்நாளும் மறக்காமல் உனக்காகப் பிரார்த் தனை செய்வேன், என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு, இல்லையேல் நான் செத்துத்தான் போவேன்….”

             வான்காவின் உதடுகள் துடித்தன, கரிபிடித்த முட்டிக் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு செறுமினான் .

          ”உனக்கு மூக்குப்பொடி இடித்துத் தருவேன்” என்று தொடர்ந்து எழுதினான்.’ ‘உனக்காக ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். நான் எதாவது குறும்பு செய்தால் நீ எவ்வளவு வேண்டு மானாலும் என்னை உதைக்கலாம். எனக்கு அங்கே வேலை இருக்காதென நீ நினைத்தால், நான் காரியக் காரரிடம் போய் என் மீது இரக்கங் கொள்ளும்படிக் கேட் பேன், புதைமிதிகளுக்குப் பாலிஷ் போடும் வேலையை எனக்குத் தரும்படி வேண்டுவேன், அல்லது ஃபெத்காவுக்குப் பதில் நான் ஆடு மேய்க்கப் போவேன். எனது அன்புக் குரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை, எனக்கு உயிர் போகிறது. இங்கிருந்து ஓடி விடலாம், நடந்தே கிராமத்துக்கு வந்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்குப் புதைமிதியடிகள் இல்லை, கொடுங் குளிர் தாங்க முடியாதே என்று பயந்து கொண்டு சும்மாயிருந் தேன். நான் பெரியவனானதும் உன்னைக் கருத்துடன் கவ னித்துக் கொள்வேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விட மாட்டேன். நீ இறந்த பின் உன்னுடைய ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்காகப் பிரார்த் திக்கிறேனே அதே போல செய்வேன் உனக்காகவும்.

‘மாஸ்கோ மிகப் பெரிய ஊர், கனவான்களது வீடு களுக்குக் கணக்கே இல்லை, குதிரைகளும் ஏராளம். ஆனால் ஆடுகள் இல்லை, நாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றிச் சாதுவாய் இருக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்துச் செல்வதில்லை. கோயி லில் நம்மைப் பாட விடமாட்டேன் என்கிறார்கள். தூண் டில் முட்கள் அப்படியே தூண்டில் நூல்களும் கோல்களும் அடங்கலாய்க் கடையில் விற்கப்படுவதை முன்பு ஒரு தரம் பார்த்தேன் நான். எந்த மீன் வேண்டுமானாலும் பிடிப் பதற்கு ஏற்றவையாய் விதம் விதமாய் நன்றாய் இருந்தன, ஒரு பூடு எடையுள்ள பெரிய தோப்பா மீனைத் தாங்கக் கூடிய ஒன்றுங்கூட இருந்தது. பண்ணை வீட்டில் எசமான் வைத்திருக்கிறாரே அந்த மாதிரி துப்பாக்கியும் இன்னும் பல விதமான துப்பாக்கிகளும் கடைகளில் விற்கிறார்கள், நான் பார்த்தேன். ஒவ்வொன்றும் நூறு ரூபிளுக்குக் குறை யாது. கசாப்புக் கடைகளில் காட்டுக் கோழிகளும், உள் ளான்களும் முயல்களும் இருக்கின்றன. ஆனால், கடையில் இருப்பவர்கள் இவை எங்கே சுடப்பட்டவை என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

                 ”அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப் பெட்டியில் பத்திரமாய் வை. திருமதி ஓல்கா ? இக்னாத்யெவ்னாவிடம் கேட்டு வாங்கு, வான்காவுக்கு என்று சொல்லு.”

              நெடுமூச்சு விட்டு மீண்டும் சன்னல் கண்ணாடியை உற்றுப் பார்த்தான் வான்கா. பண்ணை வீட்டுக் கனவான் களுக்குக் கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காகப் பேரனையும் அழைத்துக் கொண்டு தாத்தா புறப்பட்டுச் சென்றது அவனுக்கு நினைவு வந்தது. ஆகா, அப்போதெல் லாம் காலம் எவ்வளவு இன்பகரமாய் இருந்தது! தாத்தா கெக்கலித்துக் கொள்வார், உறைபனி மூடிய தோப்பும் கெக்கலிக்கும், இதைப் பார்த்து வான்காவும் கெக்கலித்துக் கொள்வான். பிர் மரத்தை வெட்டத் தொடங்குமுன் தாத்தா புகைக் குழாயைப் பற்ற வைத்துப் புகை பிடிப் பார், ஒரு சிமிட்டா பொடி எடுத்து மூக்கில் வைத்து நெடு நேரம் உறிஞ்சுவார், குளிரில் நடுங்கும் வான்காவைப் பார்த்து வாய்விட்டுச் சிரிப்பார்…. உறைபனிக் கவசம் பூண்ட பிர் மரங்கள் தம்மில் சாவுக்காகக் குறிக்கப்பட்டி ருப்பது யாராய் இருக்குமோ என்று ஆடாமல் அசையாமல் காத்திருந்தன. அப்பொழுது திடுமென ஒரு முயல் வெண் பனிப் பெருக்கைத் தாவி அம்பு போல் பாய்ந்து ஓடிற்று… தாத்தா இருப்பு கொள்ளாமல் துடிதுடித்துக் கத்துவார் :

                ”நிறுத்து அதை! நிறுத்து அதை!… நிறுத்து! ஓ! குட்டை வால் சைத்தான்!”

                  மரத்தைத் தாத்தா பண்ணை வீட்டுக்கு இழுத்து வருவார், அவர்கள் அதைச் சிங்காரிக்கத் தொடங்குவார் கள்…. திருமதி ஓல்கா இக்னாத்யெவ்னாதான்–வான்கா வுக்கு மிக்கப் பிடித்தவர்- யாவரையும்விட முன்னிலை யில் நின்று ஓடியாடி வேலை செய்வார். வான்காவின் தாயா கிய பெலகேயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்த போது ஓல்கா இக்னாத் யெவ்னா வான்காவுக்கு மிட்டாய்த் தருவது வழக்கம். அவ னுக்கு அவர் எழுதவும் படிக்கவும் நூறு வரை எண்ண வும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்குக் கூடக் கற்றுத் தந்தார். ஆனால் பெலகேயா இறந்த பிறகு, அனாதையாகிவிட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தாத்தாவிடம் அனுப்பப்பட்டு விட்டான். அங்கிருந்து மா ஸ்கோவுக்குப் புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டுவந்து விடப்பட்டான்……

           ”தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு” என்று மேலும் எழுதினான் வான் கா.’ ‘ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு, உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

                அனாதைச் சிறுவன் நான், துன்புறுகிறேன், எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள், எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். துன்பம் தாங்க மாட்டாமல் எந்நேரமும் இங்கு நான் அழுது கொண் டிருக்கிறேன். புதைமிதி அச்சுக் கட்டையால் எசமான் ஒரு நாள் என் மண்டையில் அடித்தார். அப்படியே கீழே விழுந்த நான் மீண்டும் எழுத்திருக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இங்கு எனது நிலை நாயினும் கேடான தாய் இருக்கிறது…. அல்யோனாவுக்கும் ஒற்றைக் கண் எகோ ருக்கும் கோச் வண்டிக்காரருக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன். என்னுடைய கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே. உன் னுடைய பேரன் இவான் மூக்கவ். அருமைத் தாத்தா , வா என்னிடம்.”

        காகிதத்தை நான்காய் மடித்தான், ஒரு கப்பேக் கொடுத்து அதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத் திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்….. பிறகு சற்று சிந்தனை செய்துவிட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான்: ‘தாத்தா”-தலையைச் சொறிந் கொண்டு மீண்டும் சிந்தித்துவிட்டு எழுதினான் :

            “கன்ஸ்தன்தீன் மக்காரிச், கிராமம்.” 

        யாரும் குறுக்கிட்டுத் தன்னை எழுத விடாமல் தடுக்க வில்லையென மனம் மகிழ்ந்தவனாய்க் குல்லாவை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டான். கோட்டு போட்டுக் கொள்ளாமலே வெறுஞ் சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.

     முந்திய நாளன்று அவன் விசாரித்த போது, கசாப்புக் கடையில் இருந்தவர்கள் கடிதங்களைத் தபாற் பெட்டி களில் போட வேண்டும், இந்தப் பெட்டிகளிலிருந்து அவை மூன்று குதிரைகளையும் குடிமயக்கம் கொண்ட வண்டிக் காரர்களையும் கண கணத்து ஒலிக்கும் மணிகளையுமுடைய கோச் வண்டிகள் மூலம் உலகெங்கும் அனுப்பப்படுகின்றன என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். யாவற்றிலும் அரு காமையிலிருந்த தபாற் பெட்டியிடம் ஓடி மதிப்பிடற் கரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான்..

        இதன் பின் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் இனிய நம் பிக்கைகள் இதமாய்த் தட்டிக் கொடுத்து அவனைத் தூங்க வைத்தன…. அவனுடைய கனவில் ஒரு கணப்படுப்பு தோன் றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையற்காரிகளுக்குப் படித்துக் காட்டி னார்…… கணப்படுப்புக்கு முன்னால் விலாங்கு தனது வாலைக் குழைத்துக் கொண்டு மேலும் கீழுமாய் நடை போட் டது…..

1886

அஞ்சலட்டைக் கதைகள்

அஞ்சலட்டைக் கதைகள்

அழகியசிங்கர்

     அஞ்சலட்டை எடுத்துக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தேன்.  கதை அஞ்சலட்டைக்குள்தான் முடிய வேண்டும்.  இதுவரை 4 கதைகள் எழுதி விட்டேன். 

இது நான்காவது கதை.  

கொரானாவை ஒழிப்பது எப்படி?

    வீட்டிலேயே இருந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை.  வெளியே போனால்தான் சம்பாத்தியம்.  கிட்டத்தட்ட கொரானாவால் சில நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறேன்.  அப்பா உர்ரென்று என்னை முறைத்துப் பார்ககிறார்.  அம்மா, 'என்னடா செய்யப் போகிறாய்?' என்று கவலையுடன் கேட்கிறாள்.  

    கம்ப்யூட்டர்களை அக்கக்கா பிரித்து ரிப்பேர் செய்கிற இடத்தில்தான் பணி புரிந்து கொண்டிருந்தேன்.  கிட்டத்தட்ட ஒரு மாதம் மேல் ஆகப்போகிறது.  கடையைத் திறக்கவில்லை.  அந்தக் கம்பெனியிலிருந்து கிடைக்கிற சம்பளம் குறைவாக இருந்தாலும், சமாளிக்கும்படி இருந்தது.  ஓரளவு நிலைமையைச் சமாளிக்க போதுமானதாக இருந்தது.  நெட்டியை வாங்கிடும் வேலை.  எந்த நேரமானாலும் எங்க வேண்டுமானாலும் ஓட வேண்டும்.  

ஓனர் முரளியைப் போனில் கூப்பிட்டேன்.   "சார்," என்று.    

    "உங்களைப் போல் பத்து ஊழியர்கள் இருக்கிறார்கள்.  கட்டிட வாடகை அது இதெல்லாம் கட்டாயம் தரவேண்டும்,"  என்று இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டார்.

என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போதுதான் மோகனிடமிருந்து போன் வந்தது.  "என்ன பண்ணப் போறே?  உன் கணக்கில் பணம் அனுப்பறேன். கணக்கு எண், வங்கிப் பெயர் குறிப்பிட்டு செய்தி அனுப்பு."

"சார்," என்று நாத் தழுதழுக்கக் கூப்பிட்டேன்.  அவர் ஒரு வாடிக்கையாளர்.  அடிக்கடி அவர் கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்யப் போவேன்.  அப்படித்தான் பழக்கம்.  ஒரு முறை அவர் கதை தினமணிக்கதிரில் வெளிவந்தது.  அதைப் படித்து அதைச் சிலாகித்துப் பேசினேன்.

கதா மஞ்சரி கதை -3

அழகியசிங்கர்
 
 
 
வீடு நிறைந்த பொருள்
 
 
 
ஒருவன் பதினாயிரம் வராகன் வைத்திருந்தான். அவன் தனக்கு இறக்குங்காலம் அடுத்திருப்பதை அறிந்தான். தன் இரு மக்களையும் அழைத்தான். ஒவ்வொருவனுக்கும் ஐந்தைந்து பணங் கொடுத்ôன். üüஇதனாலே வீட்டை நிறையும்படி செய்பவனுக்கு என் பொருள் முழுவதும் தருவேன்,ýý என்ளான். அவர்களிலே மூத்தவன் ஐந்து பணத்துக்கு மலிந்த பொருளாகிய வரகு வைக்கோலை வாங்கிவந்து வீடு நிறையக் கொட்டி பரப்பி வைத்தான். இளையவன் நல்ல விளக்கு வாங்கிவந்து வீடெங்கும் விளக்கமாகப் பொருள்கள் தெரிய ஏற்றி வைத்தான். தந்தை அவ்விரண்டையும் பார்த்தான். இளையவன் அறிவை வியந்து பாராட்டினான். அவனுக்கே தன் உடைமை முழுவதையும் ஒப்புவித்தான். ஆதலால், அறிவுடை ஒருவனே பெரியவன் ஆவான்.
 
கதா மஞ்சரி கதையை இப்போது எழுதினால் எப்படி இருக்கம்?
 
ஒரு பணக்காரர். மரணம் அடையும் தறுவாயில் அவர் இருக்கிறார். தன் சொத்து முழுவதும் அவருடைய இரண்டு புதல்வர்களில் யார் அறிவில் சிறந்தவர்களோ அவர்களுக்கு அளிக்க விரும்புகிறார். புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு அனுப்பினார். இருவரகளும் வந்தனர். ‘உங்கள் இருவருக்கும் ஒரு பரிட்சை வைக்கப் போகிறேன். அதில் யார் வெற்றிப் பெறுகிறாரோ அவருக்கு என் சொத்து முழுவதும் கொடுக்க விரும்புகிறேன்,’ என்றார். மகன்கள் இருவரும் சிறிது நேரம் யோசித்தார்கள். அப்பாவுக்கு மூளை பிசகிப் போய்விட்டது என்று முடிவுக்கு வந்தார்கள். ஆனாலும் அப்பாவிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் அப்பா ஆளுக்கு ஒரு லட்சம் ருபாய் பணம் கொடுத்து, ‘இந்த வீட்டில் உள்ள அறை முழுவதும் ஒரு லட்சம் ரூபாயக்கு எதாவது வாங்கி நிரப்ப வேண்டும். யார் நிரப்புகிறார்களோ அவர்கள் அறிவை மெச்சி என் சொத்து முழுவதும் தரப்படும்’ என்றார். மூத்தப் பையன் யோசித்தான். இந்த அறை முழுவதும் நிரப்ப கவிதைப் புத்தகம்தான் லாயிக்கு என்று கவிதைப் புத்தகங்களாக வாங்கி வீடு முழுக்க நிரப்பி விட்டான். இளையவன் யோசித்தான். பெரிய குத்துவிளக்குப் போதும் என்று அவனுக்குத் தோன்றியது. பொரிய குத்துவிளக்கை வாங்கிக்கொண்டு, எண்ணெய் இட்டு விளக்கு ஏற்றினான். அவர்கள் அப்பா அவர்கள் இருவரும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தார். பெரிய பையன் மீது கோபமான கோபம். யாராவது கவிதைப் புத்தகங்களை வாங்குவார்களா என்ற கோபம்தான். இரண்டாவது பையனின் செய்தது அவருக்குப் பிடித்திருந்தது. வீட்டிற்கே விளக்கு ஏற்றிவிட்டான் என்று எண்ணினார். தன் சொத்து முழுவதும் இரண்டாவது பையனுக்கு எழுதிக் கொடுக்க எண்ணி அவர் கருத்தைக் கூறினார். முதல் பையன் அவர் பேச்சைக் கேட்டு, ‘கிழவா.. உனக்கு புத்தி எதாவது பிசகிப் போச்சா…ஒழுங்கா பாதிப் பாதியாக சொத்தைப் பிரித்துக்கொடு.. இல்லாவிட்டால் கொலை விழும்,’ என்று மிரட்டினான்.
 
இரண்டாவது பையனோ, ‘சொன்னபடி முழு சொத்தையும் என் பெயருக்கு மாற்று….இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன்,’ என்று மிரட்டினான்.
 
செல்வந்தார் அவர்கள் இருவரும் பேச்சைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
 
 

கதா மஞ்சரி கதை -2

உனக்காக ஒளித்து வைத்தேன்

 

ஒரு செல்வன், தன் தந்தைக்கு ஓட்டிலே கஞ்சி வார்த்துக்கொண்டு வந்தான். அவன் மகன் அதைப் பார்த்தான். ஒருநாள் அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்துவிட்டான். பிறகு அந்தச் செல்வன் தன் தந்தையைப் பார்த்து, ‘ஓடு எங்கே,’ என்று கேட்டு தந்தையை அடித்தான். அந்தப் பையன் அதைக் கண்டான்: “அப்பா என் பாட்டனை அடிக்காதே.. நானே அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்தேன். ஏன் என்றால், நான் பெரியவன் ஆன பிறகு உனக்கு வேற ஓடு சம்பாதிக்க மாட்டேன்,” என்றான். அதைக் கேட்டு அச் செல்வன், வெட்கப்பட்டான். மனம் திருந்தினான். அன்று முதல் தன் தந்தையை மிக அன்புடன் பேணி நலத்துடன் போற்றி வந்தான்.

பிளாட்பார கடையில் கண்டெடுத்த முத்து

சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும்.  அட்டைப் போயிருக்கும்.  விபரம் போயிருக்கும்.  எழுபதெட்டு இனிய கதைகள் என்ற கதா மஞ்சரி புத்தகம் கண்ணில் பட்டது.  உடனே வாங்கிக்கொண்டேன்.  முன்பக்கத்தில் உள்ள பல கதைகளின் பக்கங்கள் போய்விட்டன.  இருக்கும் கதைகளை பத்திரப்படுத்தலாமென்று எடுத்துக்கொண்ட முயற்சி இது.  வாழ்க இவ்வையகம்.

1)   கழுதையின் குரல்

ஓர் ஊரில் இசைப்புலவன் ஒருவன் இருந்தான்.  அவன் தன்னிடமுள்ள குறை தெரியாதவன்.  அவன் வேறு நாட்டு அரசனிடம் இசைபாடிப் பரிசு பெறலாமென்று எண்ணினான்; வேறு நாட்டுக்குவந்து ஒரு வீட்டிலே இறங்கி இருந்து வந்தான்ல்.  மறுநாள் விடியற்காலத்தில் எழுந்து பாட்டுப் பாடினான்.  அடுத்த வீட்டு வண்ணாத்தி ஒருத்தி பெருங்குரலிட்டு அழுதாள்.  இவன் பாட்டை நிறுத்தினான்.  அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள்.  இவ்வாறாக ஒரு வாரம் வரை நடந்து வந்தது.  அதனால் இசைப் புலவன் வண்ணாத்தியை அழைத்தான்: “நான் பாடும்போது நீ ஏன் அழுகிறாய்,” என்று வினவினான்.  அதற்கு அவள்,”ஐயா…தங்கள் பொன்னான குரலைக் கேட்கும்போது போன திங்கள் செத்துப்போன என்னிடம் இருந்த ஒரேஒரு கழுதையினுடைய நினைப்பு வருகின்றது.  அதனால் அழுகின்றேன்,” என்று சொல்லி அழுதாள்.  இசைப்புலவன் வெட்கமுற்றான்.  அரசனைப் பார்க்காமலேயே தன் ஊருக்குப் போய்விட்டான்.

அதனால் தன் குற்றம் தெரியாமல் நடக்கிற அறிவற்றோன் எவனும், உலகில் நன்மதிப்பு இழப்பான்.