சுஜாதாவின் சில வித்தியாசங்கள்

சுஜாதாவின் சில வித்தியாசங்கள்

அழகியசிங்கர்

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி வைத்திருக்கிறேன். சுஜாதாவின் கதைகள் எல்லாம். 1968 ஆம் ஆண்டு எழுதிய சில வித்தியாசங்கள் என்ற கதை. முதன் முதலாக சுஜாதாவின் கதைகளை ஒவ்வொன்றாகப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன்.

நான் ஒரு கதையைப் படித்தால் அந்தக் கதையைப் பற்றி உடனே எழுதி விடவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும்.

நான் ஏகப்பட்ட புத்தகங்களை ஒரே சமயத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். நியாயமாக என் ஆசை நான் படித்ததெல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான்.

நான் மெதுவாகத்தான் படிக்கிறேன். ஆனால் படித்ததை அப்படியே விட்டுவிடத் தயாராய் இல்லை. மனதுக்குள்ளாகவாவது எதை எதைப் படித்தோம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்கள் போகப் போக இன்னும் சில புத்தகங்கள் படிப்பதற்குச் சேர சேர ஒவ்வொன்றாய் மூளையிலிருந்து கழன்று கொண்டு விடுகின்றன.

சரி, சுஜாதா கதைக்கு வருகிறேன். இந்தக் கதையை 1968ஆம் ஆண்டிலேயே எழுதி விட்டார். குழப்பமில்லாத நடை. வாசகனைக் கட்டிப் போடுகிற மாதிரி விறுவிறுவென்று எழுதி இருக்கிறார்.

நான் ராஜாராம். டில்லி வாசி என்று கதையை ஆரம்பிக்கிறார்.ராஜாராம் பேசுவதுபோல் கதையைக் கொண்டு போகிறார். நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும் ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செகரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக சம்பள ஏணியில் இருப்பவன் ராஜாங்கம்..

இந்தக் கதை முழுவதும் ஒரு நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொண்டு போகிறார். ராஜாராம் சொல்கிறான். இந்த உலகத்தில் இன்றைய தேதிக்கு என் சொத்து ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிடப்பட்டவள் என் மனைவி என்கிறான். வீட்டின் பட்ஜெட்டையும் சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள் என்வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம் என்கிறான் ராஜராம்.

29ஆம் தேதியன்று அவன் கையில் இருப்பது மூன்று ரூபாய் அவனுக்குத் தேவை முந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. அவன் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. உடனே புறப்பட்டுப் போக வேண்டும்.

அம்மாவை உடனே போய்ப் பார்க்க வேண்டும். விமானப் பயணம் மூலம். யாரிடமாவது பணம் கடன் வாங்கிக்கொண்டு போக வேண்டும். யாரைக் கேட்பது என்று குழப்பம். நண்பர்களைப் போய் இருபத்தொன்பதாம் தேதி கேட்டால் ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். மனைவியிடம் நகைகள் கிடையாது.

பணம் கேட்க ராமநாதன் என்பவரைப் பார்க்க தீர்மானிக்கிறான் ராஜாராமன். அவர் ஒரு விதத்தில் தூரத்து உறவினர். முக்கியமான மந்திரிக்கு முக்கியமான மனிதர்.

அவர் வசித்து வந்த இருப்பிடத்தை விவரிக்கிறார் சுஜாதா. ஹோஸ்டிங்ஸ் ரோடின் அமைதியில் பச்சைப்புல் தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏக் கண்டிஷனர், நாய், அம்பாஸ்டர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசஙூல் கதர் அணிந்த சேவகர்.

ராமநாதனின் பையன் வரவேற்றான். ராஜாராமன் தமிழில் பேச, அவருடைய பையன் ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறான். தமிழ் தெரிந்தும் தமிழில் பேசாத ராமநாதனின் பையன் மீது எந்த மரியாதையும் ஏற்படவில்லை ராஜாராமிற்கு.

ராமநாதன் அறையை விட்டு வெளியில் வந்தார். கிளம்பிப் போவதற்குத் தயாராக இருந்தார்.

ராமநாதன் ராஜ சேகரனைப் பார்த்தவுடன் ராமச்சந்திரன் என்று கூப்பிடுகிறார்.

‘நான் ராமச்சந்திரன் இல்லை சார். ராஜாராமன்,’ என்கிறான் ராஜாராமன்.

உண்மையில் உரையாடல் மூலம் கிண்டல், நகைச்சுவை உணர்வு என்றெல்லாம் கொண்டு வருகிறார் சுஜாதா.

இங்கே உரையாடல் மூலம் நகைச்சுவை உணர்வு உண்டாக்குகிற மாதிரி ஒரு காட்சி.

‘சரி, ஜானகி எப்படி இருக்கிறாள்?’

“ஜானகி செத்துப்போய் இரண்டு வருஷங்கசள் ஆச்சு”

“ஓ.எஸ் ஓ.எஸ் ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிடி. அவளுக்கு எத்தனை குழந்தைகள்?”

“ஒரு பையன். இரண்டு வயசுப் பையன்.”

“ஆமாம். ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”

“நான்தான் சார் ஜானகி தம்பி.”

இந்த உரையாடல் மூலம் அலட்சியமாக ஹாஸ்ய உணர்வை உருவாக்கி விடுகிறார் சுஜாதா.

பணம் கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ராஜாங்கம் முந்நூத்தி அம்பது ரூபாய் பணம் வேணும் என்கிறான். இந்த இடத்தில் எதற்காக பணம் வேண்டுமென்று சொல்ல எத்தனிக்கிறான். காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை ராமநாதன்.

“எப்ப வேணும்?” என்று கேட்கிறார்.

“இப்ப,” என்கிறான் ராஜாங்கம்.

அவர் செக் புத்தகம் கொண்டு வந்தார். அவனுடைய பெயரை கேட்டார். செக்கில் எழுதினார். அவனிடம் கொடுக்கும்போது ஒன்று சொல்கிறார்.

“நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.

“எதை சார்?”

“இதுமாதிரி உறவுகாரங்களுக்கு செக் எழுதறதை.”

ராஜாங்கத்திற்குக் கோபம் வருகிறது.

அவர் இன்னும் பேசுகிறார். தான் ஒரு செக் எழுதற மெஷின். உனக்குப் பணம் தேவையாக இருக்கும்போது வருகிறாய் என்கிறார்.

அவர் பேசப்பேச கோபம் அதிகமாக வருகிறது ராஜாங்காத்திற்கு. அவர் கொடுத்த செக்கை நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டான். அவருக்குப் பெரிய அதிர்ச்சி.

சுஜாதா கதையை முடித்துவிடுகிறார்.

முடிக்கும்போது ஒன்று சொல்கிறார். ‘எதிர்பாராத செயலில் அந்த ஒரு தருணத்தில் பூரணமாக வாழ்ந்தேன்

நான் என்று ராஜாங்கம் சொல்வதைப் போல் முடிக்கிறார். கதையில் கடைசியில் ஒரு ட்விஸ்ட். வாசகரைப் பார்த்து ராஜாங்கம் கேட்கிறான். நீங்கள் இவ்வளவு பொறுமையாக என் கதையைப் படித்தீர்கள். அவசரமாக சென்னைப் போய் அம்மாவைப் பார்க்க வேண்டும். எனக்கு முந்நூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுங்களேன் என்று கேட்கிறான்.

கதை நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்களில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது. பெயர்கள் எல்லாம் ராவில் வருகிறது. ராஜாங்கம், ராஜகோபாலன்,கதையின் ஆரம்பத்தில் ராஜாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் மனைவி தன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்து ‘யூலிஸிஸ்’ வாங்க பணம் தருகிறாள்.

ராஜாங்கம்ஆர்வத்தால் ஓர் இலக்கியப் பத்திரிகை இரண்டு மாதம் நடத்த மற்ற நகைகளையும் விற்றுவிட்டாள் அவன் மனைவி.

இலக்கியப் பத்திரிகை மீது சுஜாதாவிற்கு இருக்கும் ஈடுபாடை இங்கே கொண்டு வருகிறார். முழுக்க முழுக்க கற்பனை கதை இது. சுய அனுபவம் எங்கும் தலைக்காட்டவில்லை.நகைச்சுவை உணர்வுடன் மிக மிகச் சுலபமாகக் கதையை எழுதும் திறன் இவரிடம் உள்ளது.

இத் தொகுப்பிலுள்ள கதைகளை எல்லாம் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து வாசிக்கலாமென்று நினைக்கிறேன்.

நவீன விருட்சம் 112வது இதழ் வெளிவந்துவிட்டது

.

அழகியசிங்கர்

112வது இதழ் அச்சிற்கு அனுப்புமுன் கொரோனா பிரச்சினை. அச்சில் இனி கொண்டு வர முடியாது என்று தோன்றியது.  அந்த இதழை அமேசான் கின்டஙூல் அனுப்பி விட்டேன்.  அதன் பின் எல்லாம் சரியானவுடன் திரும்பவும் அச்சிற்கு அனுப்பி விருட்சம் 112வது இதழை இப்போது கொண்டு வந்துவிட்டேன்.  

கடந்த 32 ஆண்டுகளாக விருட்சம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.  

தற்போது 177பேர்களை ஆனந்தவிகடன் வேலையிலிருந்து நீக்கி விட்டது. மேலும் ஆங்கில ஹிந்து பத்திரிகையிலும் பலரை வேலையிலிருந்து நீக்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன்.  தமிழ் ஹிந்துவில் பலருக்குச் சம்பளம் குறைவாகக் கொடுக்கப் பட்டிருப்பதாக அறிகிறேன். 

ஆனால் விருட்சத்திற்கு எந்த ஆட்குறைப்புமில்லை.  மயிலாடுதுறைக்கு விருட்சம் நிர்வாகி மாற்றல் ஆகி பத்துவருடம் பித்துப்பிடித்த நிலையிலிருந்தபோதும், அமெரிக்காவில் சில மாதங்கள் இருந்தபோதும் விருட்சம் கலங்கியதே இல்லை.  தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற இலக்கியப் பத்திரிகை  

நாளையிலிருந்து விருட்சம் 112வது இதழைத் தபாலில் அனுப்ப உள்ளேன்.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 145

அழகியசிங்கர்

முகமூடிகளின் உலகம்

அதங்கோடு அனிஷ்குமார்

தேவைகளுக்கேற்ப
தேவைப்படுகின்றன முகமூடிகள்

பூகம்ப மனதின் அதிர்வுகள் அழித்து
புன்னகை பூக்க
கொலைவெறி புதைத்து
கொல்லென்று சிரிக்க

முகமூடிகளின் பொருட்டு
எல்லோரும் தொலைக்கிறார்கள்
முகங்களை

முகமூடிகளின் உலகத்தில்
முகங்கள் கழுவேற்றப்படுகையில்
உயிர்வலியெடுத்து
கதறுகின்றன
யதார்த்தத்தின் குழந்தைகள்

முடியாது இனி
முகமூடிகளற்று
முகம் காட்ட

எந்த முகமூடியணிந்தாலும்
எட்டிப் பார்க்கும்
என் முகத்தை
எப்படி மறைப்பது?

நன்றி : நிறங்களின் பேராசைக்காரர்கள் – அதங்கோடு அனிஷ்குமார் – மயூரா பதிப்பகம், 37 தொட்டராயன் கோயில் வீதி, கோயமுத்தூர் 641 009 – பக்: 64 – விலை : ரூ.30 – வெளியான ஆண்டு : 2008 – தொலைபேசி : 93607 89001

அஞ்ச லட்டைக் கதைகள் 12

அழகியசிங்கர்


இது என் 12வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 
கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமலிருக்க முடியாது. 

ஏன் இப்படி?

இந்தக் கொடூரமான கொரோனா காலத்தில் நான் வெளியில் செல்வது ரொம்ப ரொம்ப குறைச்சல்.  வயதானவர்கள் போகக்கூடாதென்று யாரையெல்லாம் வயதானவர்கள் என்று அரசாங்கம் சொன்னதோ அதில் நான் அடங்குவேன் என்பதால் நானும் போகவில்லை. 
ஒரு மாதம்வரை நான் வீட்டைவிட்டு வெளியில் போகவில்லை.  பின் ஒருநாள் மாத்திரைகளை வாங்கச் செல்லலாமென்று கிளம்பினேன்.  என் டூ வீலர்கள் எதுவும் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தன.  ஒருவழியாகத் தாஜா பண்ணி கைனடிக் ஹோன்டா வண்டியை ஓட்டத் தயாரானேன்.
அசோக் நகரில் உள்ள மருந்துக் கடைக்கு முகமூடி அணிந்து சென்றேன்.  கடைக்கு முன்னே நிறையா முகமூடிகள்.  நின்று நிதானித்து மாத்திரைகளை வாங்கினேன். 
திரும்பும்போது வழியில் பிள்ளையார் கோயில் மூடி இருந்தது.  அதன் பக்கத்தில் ஒரு மூலையில் ஒரு வெளிநாட்டுக்காரன் அமர்ந்திருந்தான்.  தாடி மீசையுடன்.  உற்றுப் பார்த்தால் அவன் ஒரு யோகியாக இருக்கலாமென்று தோன்றியது. 
கிட்டே போய் ஆங்கிலத்தில்,  “நீ யார்?’  என்று விசாரித்தேன். அவனுக்கு ஆங்கிலம் புரியவில்லை.  அவன் சொன்னான்:  ‘நான் ரஷ்யன்’  என்று.  தடுமாறித் தடுமாறி எனக்குப் புரிய வைத்தான்.  
கை ஜாடைக் காட்டி சாப்பாடு எதாவது வேண்டுமா வென்று கேட்டேன்.  தலை ஆட்டினான்.  பக்கத்தில் உள்ள ஓட்டலுக்குப் போய் டிபன் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். அவசரம் அவசரமாகச் சாப்பிட்டான்.
எனக்கு அவனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றியது. 
வீட்டிற்குப் தொலைப்பேசி செய்து அவனைப் பற்றி விபரம் சொல்லி  அழைத்துக்கொண்டு வரட்டுமா என்று மனைவியிடம் கேட்டேன்.  
உடனே,  ‘நீங்களும் போங்கள் அவனுடன்,’  என்றாள் அவள்.

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்




அழகியசிங்கர்

கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகளை மலையாள மொழியி லிருந்து மொழிபெயர்த்தவர்.  சிற்பி அவர்கள்.  மலையாளத்தில் மட்டுமல்லாது இந்தியக் கவிதை இலக்கியத்திலும் ஓர் அபூர்வமான குரல் கே.ஜி.சங்கரப்பிள்ளையின் குரல்.  
அவர் கவிதைகளைக் குறித்து டாக்டர் பி.கே ராஜசேகரன் சங்கரப்பிள்ளை கவிதைகள் குறித்து இப்படிக் கூறுகிறார்.
உருவத்திலும் மொழியிலும் நமக்குப் பழக்கமில்லாத பாதைகளில் நடந்து தன்னைத் தானே புதுமைப்படுத்திக்கொள்ளும் கவிதை இது.  வடிவாக்கத்திலும், படிம நிர்மாணத்திலும் கவனம் செலுத்தியவாறு, தினசரி வாழ்வின் புறச் சூழல்களிலிருந்து வரலாற்றையும், பண்பாட்டின் நுண்வெளிகளையும் சங்கரப்பிள்ளை கவிதை உற்று நோக்குகிறது. 
73 கவிதைகளின் தொகுப்பைச் சிற்பி மொழிபெயர்த்துள்ளார்.  சாகித்திய அகாதெமி வெளியீடாக இத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
இத் தொகுப்பில் நான் பல கவிதைகளை ரசிக்க முடிந்தது.  1959ஆம் ஆண்டிலிருந்து 1996ஆம் ஆண்டு வரை எழுதியுள்ள கவிதைகளை இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
இக் கவிதைத் தொகுதியை 3 பாகங்களாகப் பிரித்துள்ளார்கள்.  பெரும்பாலான கவிதைகள் நீளமாக எழுதப்பட்டிருக்கின்றன.  சிறிய கவிதையாக இருந்தாலும் பெரிய கவிதையாக இருந்தாலும் கவிதையில் பிடிமானம் தெரிகிறது.  கவிதைத் தன்னை மீறிப் போய்விடுவதில்லை.  சில கவிதைகளை உதாரணமாகத் தரலாமென்று நினைக்கிறேன்.
இதோ ‘பல்லி வால்’ என்ற கவிதையைப் பார்ப்போம்.

பல்லி வால்
பல்லியின் அறுந்துவிழுந்த வால் அமைதியாகத் திரும்பிப் பார்த்தது 
அதோ இருக்கிறது என் பல்லி எதுவும் நடந்த உணர்வே இல்லை உதிர்ந்த பூவை விட்டுச் சென்ற கொடிபோலே கண்ணீர்த்துளியை விட்டுச் சென்ற கவிதைபோலே அதோ இருக்கிறது என் பல்லி
 *இழந்ததை எண்ணி எந்தத்துக்கமும் இல்லாமல் அறிஞரில் அறிஞனாய்* – அதோ இருக்கிறது என் பல்லி 
எவருடனும் பழிவாங்கும் நோக்கின்றி ஒரு புதிய பிரதிக்ஞை ஏதும் இல்லாமல் புகழ் பெற்ற உயர்ந்த ஒன்றை இழந்த துயரமும் இல்ல அதோ இருக்கிறது என் பல்லி பின்பக்கம் தன்னைவிடப் பெரிய நிழலுடன் அதோ இருக்கிறது என் பல்லி ஒரு புதிய இணைக்கோ இரைக்கோ துணைக்கோ காத்திருக்கிறது அதோ என் பல்லி

‘பல்லி வால்’ என்ற தலைப்பில் வேடிக்கையாய் கவிதையை எழுதியிருக்கிறார்.  வாலை இழந்து விட்ட  பல்லியை  உதிர்ந்த பூவை விட்டுச் சென்ற கொடிபோல என்கிறார் மேலும் கண்ணீர்த்துளியை விட்டுச் சென்ற கவிதைபோலே என்கிறார்.  பின் பக்கம் தன்னைவிடப் பெரிய நிழலுடன் என்கிறார் 
கவிதையைக் கச்சிதமான வடிவத்தில் முடித்திருக்கிறார்.  வளவளவென்று எழுதவில்லை.  பெரும்பாலும் இன்றைய கவிஞர்கள் சொல்வதற்கு மேலேயே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு கவிதையை எப்படி முடிப்பதென்று தெரியாது.  இத் தொகுப்பில் பெரும்பாலும் நீளமான கவிதைகள்.  கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டுதான் நீளமான கவிதைகளை நிதானமாக வாசிக்க வேண்டும்.  உதாரணமாக: ‘மரம்’ என்ற தொகுப்பில் ஆரம்பத்தில் எழுதப்பட்ட ஒரு நீளமான கவிதையில் இப்படி ஆரம்பிக்கிறது ஆரம்ப வரிகள் : 
தாரகை சூழ்ந்த இருளைப் போல பூக்கள் நிரம்பிய ஒரு பெருமரம் உண்டு என் சோக இருட்டு மனதில்
பெருமரத்தைப் பற்றி ஒரு நீளமான கவிதை.  நீளமான கவிதையைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குப் படிக்கும் டெம்போ குறைந்து போக வாய்ப்பிருக்கிறது.  ஆனால் இவர் கவிதையில் அப்படித் தெரியவில்லை.  பெரும்பாலும் நீளமான கவிதைகள் இருப்பதால் படிப்பதற்குச் சற்றும் சோர்வு அளிக்கவில்லை.  
‘மழை’

மழை பெய்கிறதுமத்தளம் கொட்டுகிறது மழை பெய்கிறதுகால் சட்டை முற்றத்தில் சேலை முற்றத்தில் சட்டை முற்றத்தில் மழை பெய்கிறது மழை பெய்கிறது பெய்கிறது பெய்கிறது 
தாத்தாவின் முற்றத்தில்கண் கண்ணாடி முற்றத்தில் பாரத முற்றத்தில் கோவண முற்றத்தில் மழை பெய்கிறது மழை பெய்கிறது பெய்கிறது பெய்கிறது பெய்கிறது பெய்கிறது 
நானும் முற்றத்தில் வீடும் முற்றத்தில் நாடும் முற்றத்தில் மழை பெய்கிறது மழை மழை மழை மழை மழை ழ ழ ழ ழ ழ ழ ழ
மேலே குறிப்பிடப்பட்ட கவிதை மழையைப் பற்றி புதுமையாக இருக்கிறது.  நம் உடலில் வழியும் மழையை முற்றத்தில் என்று குறிப்பிடுகிறார்.  தாத்தாவின் முற்றத்தில், கண் கண்ணாடி முற்றத்தில்.  அப்படி கூறப்படுவது புதுமையாக இருக்கிறது.  

இன்னும் எத்தனையோ கவிதைகளைக் குறிப்பிடலாம்.  பொதுவாக கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை.  ஒருவர் வாங்கி வைத்துக்கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  216 பக்கங்கள் கொண்ட கே.ஜி சங்கரப்பிள்ளை கவிதைகளின் விலை ரூ.125தான்.  

இன்னும் எத்தனையோ கவிதைகளைக் குறிப்பிடலாம்.  பொதுவாகக் கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை.  ஒருவர் வாங்கி வைத்துக் கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  216 பக்கங்கள் கொண்ட கே.ஜி சங்கரப் பிள்ளை கவிதைகளின் விலை ரூ.125தான்.  
கடைசியாக ஒரு கவிதையை மட்டும் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
காக்கை
மலை இருக்கிறது மலையாக” மலைக்கு மேலே மாமரம் நிற்குது மாமரமாக மாவின் நிழலில் மேயும் மாடு மாடாக மாவின் கண்ணில் காக்கைக் கொத்திட மா அலையுது மாடாக மலையின் வாலில் காக்கை கொத்திட“ மலை அசையுது மாடாக.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 144

அழகியசிங்கர்  


144)   இன்ஸ்டண்ட் கவிஞர் எம்

கீதாஞ்சலி பிரியதர்சினி 

இன்ஸ்டன்ட் கவிஞர் எம் என்பவர் மாவட்டத்தின்
ஒரு சிறந்த நிர்வாகி, நாட்டுக்கும், அவர் வீட்டுக்கும்
ஸ்டேட்ஸ் போய் படித்து விட்டு, பிடிக்காமல் ஊர்
வந்து முகநூலில் ஸ்டேடஸ் போடுவார் அடிக்கடி
முகநூலில் அவருக்கு மூவாயிரம் பேர் பரஸ்பர
நண்பர்கள் குருதிக்கொடை மற்றும் அடைமழைக்கு
மழைக்குடை உதவும் நண்பர் வரை பேமஸ் அவர்.
முன்தினம் அவர் மொரிஷியஸ் போனதை
அடுத்த நாள் முகநூலில் எழுதுவார், ஒரு நவீன
கைப்பேசி உதவியுடன் கையடக்க புகைப்படம் உண்டு
கண்டிப்பாக யாரோ ஒருத்தியுடன் சிரித்தபடி இருப்பார்
சிந்திப்பது குறித்து சிந்தனையுடன் தினம் பதிவில்
ஏராளம் எழுதுவார் நம் இன்ஸ்ட ன்ட் கவிஞர் எம்.
அணுஉலை எதிர்ப்பாளர், ஈழவிடுதலைக்கு தமிழ்
ஆதரவாளர் கவிஞர் எம் ஏழெட்டு புரட்சிகர தமிழ்க்
குறும்படங்களுக்கும் உரிமையாளர். புதுமற்றும் பழைய
கவிதைகள் குறித்தும், எழுத்தாளர்களின் போக்கு, திமிர்
குறித்தும் ஏராளம் பதிவுகள் போட்டார் நேற்று முன்தினம்
அப்கோர்ஸ் அடுத்த மாதம் இயக்குநர் எக்ஸ்ஒய் என்கிற
ஒருத்தர் தான் அவரின் உலகப்புகழ்ப்பெற்ற தமிழ்ப்புதுக்
கவிதைத் தொகுப்பை வெளியிடப் போவதாகவும் ஒரு
தகவல். உற்றுப் பாருங்கள் உங்கள் கைப்பேசியை பளீஸ்
இதற்குள் முப்பது லைக்குகள் எம் முக்கு
வெற்றி வாகை நமக்கே, வாழ்க கவிதை, வளர்க எம்.
முப்பது நாளில் மூவாயிரம் பிரதிகள் இன்ஸ்ட ன்டாக
விற்கும் கவிதை செய்வோம். வாருங்கள் நண்பர்களே
மிச்சமிருக்கும் பொழுதுக்குள்.


நன்றி : நிலைக்கண்ணாடி நிமிடங்கள் – கீதாஞ்சலி பிரியதர்சினி – இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்) 41 கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011 அலை பேசி : 9444640986 – பக் : 72 – விலை : ரூ.50

ந.முத்துசாமியின் நெய்ச் சொம்பு

 

அழகியசிங்கர்

ந. முத்துசாமியின் ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள நெய்ச் சொம்பு என்ற கதை. நாலரை பக்கங்கள் கொண்ட கதை. 2004ல் எழுதப்பட்ட கதை.


பத்து வயது சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட கதை.  ந.முத்துசாமி அவருடைய பத்தாவது வயதில் அவருடைய அனுபவத்தைத்தான் கதையாக எழுதி உள்ளார்
எங்கள் வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது என்று ஆரம்பம் ஆகிறது கதை.
ஆரம்பத்தில் ஒரு கிராமப்புற வீட்டில் நெய்ச் செம்பு எங்கே வீற்றிருக்கும் என்பதை நுணுக்கமாக விவரிக்கிறார்.  
எங்கள் வீடு எருமைகளுக்குப் பெயர் போனது.  இரண்டு நாளைக்கு ஒரு முறை தயிர் கடைவார்கள்.  நானும் கடைவேன்.  என்று கதாசிரியர் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கிறார்.மோர் கடைவதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.  அந்த சுவாரஸ்யத்தைக் கம்பனும் அனுபவித்திருப்பான் என்று கம்பனின் வரிகள் இரண்டை குறிப்பிடுகிறர்.
தோயும் வெண்தயிரி மத்தொலிதுள்ளவும்.
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்
பிறகுத் தன் வீட்டில் உள்ள அடுப்பங்கரையைப் பற்றி விவரிக்கிறார். எங்கள் அடுப்பங்கரையில் உள்ள தொட்டி முற்றம்தான் மிகவும் பெரியது.  அதைப்போல் நான் எங்கும் பார்த்ததில்லை என்கிறார்.  இந்தக் கதை அவர் மூலமாக அவரை ஆதாரமாக வைத்துக்கொண்டு சொல்லப்படுகிறது.  அடுப்பங்கரையில் தென்படும் இருட்டை விவரிக்கும்போது அதை நாம் தொலைத்து விட்டோம் என்கிறார்.  
ஒரு வரி விவரிக்கும்போது வருகிறது.  நியாயங்கள் குன்றியிருந்த மொத்தச் சமூகத்திற்காகவும் நாம் இப்போதுதான் உழைக்கத் தலைப்பட்டிருக்கிறோம் என்கிறார்
முதலில் நெய்ச் செம்பு தொங்கிக்கொண்டிருக்கும் உறியைப் பற்றியும், எப்படி வாசலில் திண்ணையில் இருப்பவருக்கு இந்த உறியும் நெய்ச் சொம்பும் கண்ணில் படாமல் இருக்கிறது என்பதை விவரித்துக் கொண்டு போகிறார்.
அதன் பின் நெய்ச் சொம்பு பற்றி.  அது ஈயச் சொம்பு என்பது பழைய மனிதர்களுக்குத் தெரியும்.  அது மாயவரத்திலும் கும்பகோணத்திலும் செய்யப் படுகிறது என்பதையும், இந்த ஊர்கள் ஈயப் பாத்திரங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை என்பதையும் குறிப்பிடுகிறார்.
மாயவரத்தில் உள்ள துலா கட்டத்தை ஒட்டிய பட்டமங்கலத் தெருவின் கோடியில் மேற்குப் பார்த்த கீழ்க்கைச் சாரியில் சில கடைகளில் ஈயப் பாத்திரங்களை லொட்டு லொட்டு என்று தட்டி செய்து கொண்டிருக்கலாம்.
ஈயப்பாத்திரங்கள் பற்றிய பிரஞ்ஞையே இப்போது குறைந்து விட்டது என்கிறார்.  வெள்ளீயம், காரியம் பார்த்து வாங்கத் தெரியாவிட்டால் காரியத்தைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள் என்றும் சொல்கிறார்.  
இந்தக் கதையைப் படித்துக் கொண்டு வருபவர்களுக்குப் பல விபரங்களைச் சொல்லிக்கொண்டு போகிறார்.  படிப்பவர்க்குக் கதையா கட்டுரையா என்ற சந்தேகம் வந்து விடும்.  இந்த விவரணைகள் இருந்தாலும் இது கதைதான்.
ரசம் வைப்பது வெள்ளீயம் மிகவும் ஏற்றது.  ஈயச் சொம்பில்தான் ரசம் வைத்துச் சாப்பிட வேண்டுமென்று சொல்வார்கள்.  ஒருக்கால் ஈயம் உடம்பிற்குத் தேவையோ என்னவோ இப்போது ஈய விஷத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.  அளவைப் பொறுத்து மருந்தும் விஷமாக மாறிவிடும் போலும், வைத்தியரைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். 
இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போகிறார். முதலில் உறியைப் பற்றி.  அந்தக் காலத்து வீடுகளில் உறி வைக்கும் அழகைப் பற்றி..பின் உறியில் தொங்கும் ஈயச்சொம்புகளில் தயிர் கடைவது பற்றி.  ஈயச்சொம்பு எங்கே கிடைக்கும் என்ற விபரம் பற்றி. ஈயச் சொம்பில் ரசம் வைப்பது பற்றி என்றெல்லாம் கூறுகிறார்.
ஒருநாள் காலை நேரத்தில் பெரிய கற்சட்டியில்  தயிர் கடைந்து கொண்டிருக்கும்போது, பழனிவேல என்கிற நண்பன் வந்துவிடுகிறான்.   கண்ணா என்று கூப்பிடுகிறான்.  அப்போதுதான்  பத்து வயது சிறுவனான கதை சொல்லியின் பெயர் கண்ணன் என்று அறிமுகமாகிறது. நண்பன் வந்தது கண்ணனுக்கு மகிழ்ச்சி .   பழனிவேல குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமென்று கேட்கிறான். பானையில் வைத்திருந்த பானைத் தண்ணீரை எடுக்கப்போனான் கண்ணன்.  அடுப்படியிலிருந்த அம்மா அவனைக் கூப்பிட்டாள்.  அவன் நண்பனுக்குத் தண்ணீரைக் கொடுக்கும்போது சற்று மோரைத் தெளித்துக் கொடுக்க வேண்டுமென்பதற்காகக் கூப்பிட்டாள்.  அவன் பிராமணன் இல்லை என்பதால் அம்மா அதுமாதிரி செய்யக் கூப்பிட்டாள்.   நண்பன் முதலியார் .  புஞ்சையில் பிராமணர்களைப் போலவே செல்வாக்கோடு இருந்தவர்கள் முதலியார்கள்.  
நண்பனுக்குத்  தண்ணீரில் மோரைத் தெளித்துக் கொடுப்பதற்குக் கண்ணனுக்கு உடன் பாடில்லை. பத்து வயதிருக்கும் போதே அந்த தீமைகள் கண்ணனுக்குத் தெரிந்தது. 
இங்கு மாட்டுக்காரச் சிறுவர்கள் காவிரிக்கரையில் தொலைவில் நின்று ‘காவிரியில் குளிக்கும் பிராமணர்களைப் பார்த்து, அக்ரகாரப் பாப்பானெல்லாம் சாக மாட்டானா, அவன் ஆத்தங்கரை ஓரத்திலே வேக மாட்டானா’ என்று 
தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு பாடத் தொடங்கி விட்டிருந்தார்கள் அப்போது.
பிறப்பிலே அந்தணராக இருந்தாலும் முத்துசாமிக்குத்  தன்னைச் சார்ந்த சமூகத்தைத் தாக்கி எழுத, அலாதியான துணிச்சல் வேண்டும்.  
இதை இந்தக் கதையில் குறிப்பிடுகிறார் கதாசிரியர். நண்பனுக்குத் தண்ணீரில் மோரை ஊற்றாமல் டம்ளரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.  அடுப்படியிலிருந்து அவன் அம்மா ஓடிவந்து கற்சட்டியில் கடைந்து கொண்டிருந்த மோரில் விரலைத் தேய்த்து டம்ளரில் தெளித்தாள்.  இந்த நிகழ்ச்சி கண்ணனை மிகவும் பாதித்துவிட்டது.  கோபத்துடன் டம்ளரை முற்றத்துச் சுவரில் அடித்தான்.  கற்சட்டித் தயிரைக் காலால் முற்றத்தில் உதைத்து உடைத்தான்.  உறியில் தொங்கிக் கொண்டிருந்த நெய்ச் சொம்பை எடுத்து முற்றத்துச் சுவரில் மோதி உடைத்தான்.  சுவர் முழுவதும், முற்றம் முழுதும் நெய், மோர் ஆறாய் ஓடியது. கோபத்துடன் வெளியே ஓடிய அவனை வாயிற்படியில் மோதி அவன் தலையைக் காயப்படுத்தியது.
ஐயோ அம்மா என்று கீழே விழுந்து மயக்கம் போட்ட அவனை அவன் நண்பன்தான் ஓடிவந்து தூக்கிக் கிடத்திவிட்டு வைத்தியனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து மருந்து வைத்துக் கட்டினானாம்.இந்த நெய்க்கறை இன்னமும் தொட்டி முற்றச் சுவரில் அது உண்டான காரணத்தை இழந்து இருந்து கொண்டிருக்கிறது என்கிறார் முத்துசாமி.
 இந்தக் கதை முதல் பகுதி கட்டுரை வடிவத்திலிருந்தாலும் கடைசியில் ஒரு சின்ன சம்பவத்தை விளக்கி கதைபோல் மாற்றி எழுதி விடுகிறார்.   முத்துசாமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமாகப் படுகிறது..  இவர் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகக் கதைகள் எழுதியதாகத் தோன்றுகிறது.
தமிழில் மிகக் குறைவாகச் சிறுகதைகள் எழுதினாலும் குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளிகளில் 
இவர் ஒருவர்.  இவருக்குக் கூத்துப்பட்டறையில்தான் கவனம் அதிகம்.

நன்றி : மேற்கத்திக் கொம்பு மாடுகள் – ந.முத்துசாமி – சிறுகதைகள் – க்ரியா – பக்கங்கள் : 296 – விலை : ரூ.360


நெய்ச்சொம்பு

ந.முத்துசாமி

எங்கள் வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது. மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு ஆதாரமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது. நெய்யைத் தவிர அதில் வேறு எதுவும் தொங்கியதாக எனக்கு நினைவில்லை. நெய் அல்லது வெண்ணெய். நெய் காய்ச்சுவதற்கு நேரமில்லா மல் அல்லது மனது இல்லாமல் வெண்ணெயை உபயோகப்படுத்தும்போது அங்கு வெண்ணெய் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும். வெண்ணெய் மட்டும் எப்போதும் இருக்கும். எங்கள் வீடு எருமைகளுக்குப் பெயர்போனது. இரண்டு நாளைக்கு ஒருமுறை தயிர்கடைவார்கள். நானும் கடைவேன். எல்லோருமே கடைவோம். அதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. அந்த சுவாரஸ்யத்தைக் கம்பனும் அனுபவித்திருப்பான்.

‘தோயும் வெண்தயிர்மத்தொலிதுள்ளவும்

ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.’

எங்கள் அடுப்பங்கரை மிகவும் பெரியது. எங்கள் வீடென்ன, எல்லோர் வீட்டு அடுப்பங்கரையும் மிகவும் பெரியதுதான். ஆனால் எங்கள் அடுப்பங்கரையில் உள்ள தொட்டி முற்றம்தான் மிகவும் பெரியது. அதைப் போல நான் எங்கும் பார்த்ததில்லை. அவ்வளவு பெரிய தொட்டி முற்றமாக இருந்ததால் அடுப்பங் கரையில் வெளிச்சம் இருக்கும். பிற வீடுகளில் அது ஒரு விநோத இருட்டில் இருக்கும். நல்ல நடுப்பகலில் கூட. அப்படிப்பட்ட இருட்டை இன்று நாம் விரட்டிவிட்டோம். பகற்பொழுதிலும் செயற்கையான வெளிச்சத்தில் இருக் கத் தலைப்பட்டுவிட்டோம். நம் தோலையும் கண்களையும் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்த பழைய வெளிச்சம் பிரகாசமாகிவிட்டது. நல்லதுதான். நியாயங்கள் குன்றியிருந்த மொத்தச் சமூகத்திற்காகவும் நாம் இப்போதுதான் உழைக்கத் தலைப்பட்டிருக்கிறோம். அதற்கு இவ்வளவு வெளிச்சம் தேவைப் படுகிறது. 

நெய்ச் சொம்பு தொங்கிக்கொண்டிருந்த இரண்டு தூண்களுக்கு இடையிலான வெளி குறுகலானது. தயிர் கடைவதற்காகவே பிரத்யேகமாக ஒரு தூண் கூடுதலாகக் கூரையைத்தாங்கிக்கொண்டிருந்தது. கிழக்கு மேற்காக நீண்டிருந்த தொட்டிமுற்றத்தில் கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் வந்து இணையும் மூலையில் உள்ள பிரதான தூணுக்கு அருகில் சற்றுக் கிழக்கே தள்ளி தயிர் கடையும் தூண் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு மட்டும் தனிப்பட்ட சித்திர வேலைப்பாடுகள். தூணிலிருந்து மத்தைத் தயிர்ப் பாத்திரத்தில் இணைக்கும் இரண்டு கயிறுகளும் நழுவிவிடாமல் இருக்கத் தேவைப்பட்ட பதிவுகளைச் சித்திர வேலைப்பாடுகளுக்குள் இணைத்துத் தூணைக் கடைந்துவிட்டார்கள் போலும்.

அடுப்பங்கரையின் அமைப்பு சற்று வேறுபட்டது. கிழக்கு மேற்கான தெருவில் இருசாரிகளிலும் கிழக்கு மேற்காகவே அமையும் அடுப்பங்கரைகள் வீட்டிற்கு வீடு வேறுபட்டிருந்தன. ஆனால், ஏதோ ஒரு கணத்தில் பாகப் பிரிவினைகளால் இரண்டாகப் பிரியாமல் இருந்த வீடுகளில் உள்ள அடுப்பங்கரைகள் தொட்டி முற்றங்களைப் பிரதானமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. அத்தொட்டி முற்றங்கள் மூன்று புறங்களில் தாழ்வாரங்களால் சூழப்பட்டிருக்கும். ஆனால் எங்கள் அடுப்பங்கரை இரண்டு தாழ்வாரங்களை மட்டுமே கொண்டிருந்தது. முற்றத்தின் வடக்கு தாழ்வாரத்தால் அல்லாமல் சுவரினால் ஆளப்பட்டது. மேற்புறக் கூடத்தை வடக்கே நீட்டிவிட்டது போலவும், வடக்கே வந்து கிழக் கில் திரும்பும் தாழ்வாரத்திற்கு இணையான ஒரு தாழ்வாரத்தை உள்ளே கொண்டு, இரண்டாம் கட்டிற்கு இடம் கொடுத்து உண்டான வாயிலையும் இரண்டாம் கட்டில் முற்றத்தையும் பிரித்துக்கொண்டு உண்டான ஓர் அமைப்பு இது. கூடத்தை ஒட்டி வந்த தாழ்வாரத்தில் வடகோடியில் தலையை இடிக் கும் ஒரு வாயிற்படி அடுப்பங்கரைக்கு. ஆனால், அதற்கு இணையானதாராள மான ஒரு நிலைப்படி இரண்டாம் கட்டிற்கு வழி விட்டது. இன்று நிமிர்ந்த நடையில் போவதற்கு உண்டான வாயில்களைப் போலல்லாமல் சற்றுக் குனிந்தே இருக்க அமைக்கப்பட்ட அளவுகளை மரபாகக் கொண்டிருந்தவை அவை. அதில் இன்னும் வணக்கத்தை ஏற்படுத்தும் அடுப்பங்கரை வாயிற்படி.

உறியில் தொங்கிக்கொண்டிருந்த நெய்ச் சொம்பு தாழ்வாரத்திலிருந்து இந்த நிலைப்படியின் வழியாக வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியும். வாயிலி மிருந்து உள்ளே வரும் ரேழியைத்தாண்டி இருந்த வாயிற்படியை ஒட்டித்தாழ் வாரத்தின் கீழ்க்கையில் அமைந்திருந்த ஒரு திண்ணையில் ஒருவர் உட்கார்ந் தால் இந்த உறியையும் தயிர் கடைவதையும் பார்க்கலாம். எனவே மேல்புற முள்ள தாழ்வாரத்தையும் அடுப்பங்கரை ஒட்டி அது திரும்பும் வடகையில் உள்ள தாழ்வாரத்தையும் தூண்களால் பிரிக்கப்பட்ட அங்கணங்களில் மூலையில் இரண்டிரண்டை மறைத்துத் தென்னங்கீற்றால் ஆன நெறைச்சல் கட்டி யிருந்தார்கள். ஆகையால் இப்போது சின்னத் திண்ணையில் வந்து அமரும் யாரும் அடுப்பங்கரையை நேரடியாகப் பார்க்கமுடியாது. அதனால் இந்த நெய்ச் சொம்பு பார்வையிலிருந்து மறைந்து இருந்தது.

நெய்ச் சொம்பு என்றால் அது ஈயச் சொம்பு என்பது பழைய மனிதர்களுக்குத் தெரியும். ஈயப்பாத்திரங்கள் மாயவரத்திலும் கும்பகோணத்திலும் செய்யப்படு கின்றன என்பதும் பழைய தஞ்சாவூர்க்காரர்களுக்கு தெரியும். இந்த ஊர் ஈயப் பாத்திரங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. ஒருவர் மாயவரத்திற்குப் போவ தானால்துலாகட்டத்தை ஒட்டிய பட்டமங்கலத் தெருவின் கோடியில் மேற்குப் பார்த்த கீழ்க்கைச் சாரியில் சில கடைகளில் ஈயப் பாத்திரங்களை லொட்டுலொட்டு என்றுதட்டி செய்து கொண்டி ருப்பதைக்காணலாம். புஞ்சை மாயவரத்திற்கு அருகில் இருந்ததால் இது எனக்குத் தெரியும். கும்பகோணம் பெயர் அளவில்தான் தெரியும். அங்கு போக வேண்டிய தேவையில்லை மாமாங்கத்தைத் தவிர. மாயவரத்திற்கு ஐப்பசி மாதம் துலா ஸ்நானத்திற்கு நாங்கள் எல்லோரும் போவோம். சுற்றுப்புறச் சூழல் அசிங்கப்பட்டுப் போவதைப் பற்றி இப்போது நாம் அதிகம் பேசுகிறோம். ஒரு அறுபது வருடத்திற்கு முன்னால் ஒருவர் குடமுழுக்கு, கடைமுழுக்கு நாட்களில் துலா கட்டத்தை நினைப்பாரானால் தெரியும், அன்றும் சுற்றுப்புறச் சூழல் அதிகம் உபயோகப்படுத்துவதனால் கெட்டுப்போயிருந்தது என்பது. இந்த ஐப்பசி மாதத்தில்தான் ஈயப்பாத்திரங்களும் கற்சட்டிகளும் அதிகம் வாங்கப்பட்டன. அப்போதுதான் ஜனங்கள் மாயவரத்திற்கு அதிகம் வருவார்கள். இந்த நெய்ச் சொம்பும் ஒரு துலா மாதத்தில் வாங்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஈயப் பாத்திரங்களைப்பற்றிய பிரக்ஞையே இப்போது குறைந்து போய்விட்டது. சொம்பைப் பற்றிய பிரக்ஞையே குறைந்துபோய்விட்டது. அதன் இடத்தை பிளாஸ்டிக்குவளைகள் பிடித்துக் கொண்டுவிட்டன. சொம்பு. குவளை. ஈயத்தில் இரண்டு வகை ஈயம், வெள்ளீயம், காரீயம். பார்த்து வாங்கத் தெரியாவிட்டால் காரீயத்தைக் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள் என்று சொல்வார்கள். காரீயத்தில் வைக்கும் உப்பு பட்ட பண்டங்கள் கைத்துப்போய்விடும். வெள்ளீயத்தில் அப்படியே இருக்கும். ரசம் வைப்பதற்கும் வெள்ளீயம் மிகவும் ஏற்றது. ஈயச் சொம்பில்தான் ரசம் வைத்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஒருக்கால் ஈயம் உடம்பிற்குத் தேவையோ என்னவோ? இப்போது ஈய விஷத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அளவைப் பொறுத்து மருந்தும் விஷ மாக மாறிவிடும் போலும். வைத்தியரைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த ஈயச் சொம்பு ஒரு மண்டை அளவு இருந்தது. அப்போது நிறைய நெய் யோடு தொங்கிக்கொண்டிருந்தது. நான் அடியில் அமர்ந்து பெரிய கற்சட்டியில் தயிர்கடைந்துகொண்டிருந்தேன். தயிர்கடைவது என்றால் அது காலை நேரம் என்று இன்று நகரத்தில் இருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டும். காலையில் எட்டு மணி இருக்கலாம். கடிகாரத்தை அல்லாமல் முற்றத்தில் இறங்கும் நிழலைப் பார்த்து நேரம் தெரிந்துகொண்டிருந்த காலம் அது. அம்மா அடுப்பில் பிரை ஊற்றுவதற்குப் பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள் என்று நினைக்கிறேன். அடுப்பங்கரையின் கீழ்க்கோடியிலும் வடகோடியிலும் அடுப்புகள் இருந்தன. விறகுவைத்து எரிய விடும் மண் அடுப்புகள். நான் தயிர்கடைந்துகொண்டிருந்த அப்போது அம்மா இருந்தது கீழ்க்கோடியில் இந்த அடுப்படியில். 

என் நண்பன் பழனிவேலு தாழ்வாரத்துச் சின்னத் திண்ணையில் அமர்ந்து கொண்டான் போலும்.

‘கண்ணா ‘ என்றான்.

எனக்குப் பெரிய சந்தோஷம். ‘பழனிவேலு’ என்று விநோதமாகக் கத்தினேன் நான். மத்தைக் கற்சட்டியில் விழாதபடி சாத்தி வைத்துவிட்டு வருவதற்குள், – ‘கண்ணா , தண்ணீ’ என்று அவனிடமிருந்து இன்னொரு உரத்த குரல் வந்தது. நாங்கள் தாழ்வாரத்து நெறைச்சலால் மறைக்கப்பட்டிருந்தோம் என்பது நினைவிருக்க வேண்டும். நான் எழுந்து தண்ணீர் எடுக்கப் போனேன். அவன் என் உயிர் நண்பன். அவனுக்கு நான் குடிக்கும் தண்ணீரைத்தானே கொடுக்க வேண்டும். எனவே, மேற்குத் தாழ்வாரத்தில் வடபுறம் சுவரை ஒட்டிக் கொல்லைக் கொட்டகைக்குப் போகும் வாயிற்படிக்கு அருகில் முற்றத்தின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில் பானையில் வைக்கப்பட் டிருக்கும் காவிரித் தண்ணீரை எடுக்கப் போனேன். அடுப்படியில் இருந்த படியே ‘ஏய் இந்தாடா, இந்தாடா’ என்றாள் அம்மா என்னைப்பார்த்து. அதற்கு அர்த்தம் என் நண்பனுக்குக் கொடுக்கும் தண்ணீரில் சிறிது மோரைத் தெளித்துக் கொடுக்க வேண்டும் என்பது. அவன் பிராமணன் இல்லை. முதலியார். புஞ்சையில் பிராமணர்களைப் போலவே செல்வாக்கோடு இருந்தவர்கள் முதலியார்கள். அவனுக்குத் தண்ணீரில் மோரைத் தெளித்துக் கொடுப்பது எனக்கு உடன்பாடில்லை. அப்போது எங்களுக்கு வயது பத்துதான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தத் தீமைகள் அப்போது எனக்குத் தெரிந்திருந்தது. அவனுக்கும் தெரியும். பிராமணர்கள் அல்லாத நண்பர்கள் எங்களைக் கேலி செய்துகொண்டிருப்பார்கள் இதற்காக. அப்போது மாட்டுக்காரச் சிறுவர்கள் காவிரிக்கரையில் தொலைவில் நின்று காவிரியில் குளிக்கும் பிராமணர்களைப் பார்த்து ‘அக்ரகாரப்பாப்பானெல்லாம் சாக மாட்டானா, அவன் ஆத்தங்கரை ஓரத்திலே வேக மாட்டானா ‘ என்று தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பாடத் தொடங்கிவிட்டிருந்தார்கள் அப்போது. 

நான் முறைத்துக்கொண்டு தண்ணீரில் மோரை ஊற்றாமல் டம்ளரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அடுப்படியிலிருந்து அம்மா ஓடிவந்து கற் சட்டியில் கடைந்து கொண்டிருந்த மோரில் விரலைத் தோய்த்து டம்ளரில் தெளித்தாள். அவ்வளவுதான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. டம்ளரை முற்றத்துச்சுவரில் அடித்தேன். கற்சட்டித் தயிரைக்காலால் முற்றத்தில் உதைத்து உடைத்தேன். உறியில் தொங்கிக்கொண்டிருந்த நெய்ச் சொம்பை எடுத்து முற்றத்துச் சுவரில் வீசி மோதி உடைத்தேன். சுவர் முழுதும், முற்றம் முழுதும் நெய், மோர் ஆறாய் ஓடியது. கோபத்தோடு வெளியில் ஓட எத்தனித்த என்னை,நான் உயரமாய் இருந்ததாலும், வாயிற்படி குள்ளமாய் இருந்ததாலும், அது என் தலையை மோதி உடைத்தது. 

‘ஐயோ அம்மா நான் கீழே விழுந்து மயக்கம் போட்டுவிட்டேன். இந்த ‘அம்மா’ என்பது தாயைக்கூப்பிட்ட ஓலமில்லை. இது வலியில் சொல்லும் விளிச்சொல். என் நண்பன்தான் ஓடிவந்து என்னைத் தூக்கிக்கிடத்திவிட்டு வைத்தியனைக் கூப்பிட்டுக்கொண்டு வந்து மருந்து வைத்துக்கட்டினானாம். 

இது எப்படி நடந்ததென்று என் நண்பனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதை யெல்லாம் கடந்துதான் அவன் எனக்கு நண்பனாக இருந்தான். 

இந்த நெய்க்கறை இன்னமும் தொட்டிமுற்றச்சுவரில் அது உண்டான காரணத்தை இழந்து இருந்துகொண்டிருக்கிறது

அஞ்சலட்டைக் கதைகள் – 11

அழகியசிங்கர்



அம்மா…அம்மா



மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தூங்கச் செய்து விட்டேன்.  இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு எழுந்துகொள்ள மாட்டாள்.  அதன்பின் எழுந்து தொண தொணவென்று எதாவது பினாத்திக் கொண்டிருப்பாள்.  பெரும்பாலும் படுக்கையில்தான் எல்லாம்.


ஒவ்வொரு முறையும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முயற்சி செய்கிறாள்.  அப்போதெல்லாம் என் பெயரைச் சொல்லிக் கத்துவாள். 

இந்தக் கொரோனாவால் நானும் என் கணவரும் வீட்டில் அடை பட்டிருக்கிறோம்.  அம்மாவை நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.  உண்மையில் ஒரு செவிலியர் போட்டிருந்தோம். நான் அலுவலகம் போய்விட்டுத் திரும்பும்வரை செவிலியர் இருப்பாள்.  அவள்  வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்று பயந்து இப்போதெல்லாம் வருவதில்லை.


அவருக்கு வீடே அலுவலகமாக மாறிவிட்டது.  எனக்கு அப்படி இல்லை.  முழுக்க முழுக்க தொலைக்காட்சி.  காலையிலிருந்து இரவு வரை.  அம்மாவைப் பார்த்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.  படுக்கையிலிருந்து விழுந்து விடுவாளோ என்ற பயம் இருக்கிறது.  நாங்கள் முதல் மாடியில் இருக்கிறோம்.  கொரோனா வால் கதவைத் தொடக் கூடப் பயம். 

செய்தித்தாளில் பரவிடும் என்பதால் செய்தித் தாளே வாங்குவதில்லை.  அவர்தான் முகமூடி அணிந்துகொண்டு மளிகைச் சாமான்கள், மருந்தெல்லாம் வாங்கி வருவார்.  


அம்மாவிடம் கொரோனாவைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்.  புரிந்த மாதிரி தலையைத் தலையை ஆட்டினாள்.  ஆனால் ஒன்றும் புரியவில்லை.


“அம்மா, கொரோனா தெரியுமா?”


“யாராவது வாசலில் நிற்கிறாளா?”  என்றாள் அம்மா.

நகுலனின் நினைவு தினம் இன்று..

அழகியசிங்கர்

நான் பொதுவாக ஒவ்வொரு எழுத்தாளரின் நினைவு நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை.  சில தினங்களுக்கு முன்னால் என் நண்பர் உதவியால் நகுலனின் நினைவுநாள் இன்று என்பதை அறிந்தேன். 2007ஆம் ஆண்டு இறந்தார்.  அவர் இறந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன.  86வது வயதில் அவர் இறந்தார்.
‘சென்னைக்கு நகுலன் வந்திருக்கிறார்,’ என்ற தகவலை  நண்பர் ஐராவதம் அவர்களிடம் சொன்னேன்.  நாங்கள் எப்போதும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் சந்திப்பது வழக்கம்.


‘லீவு போடலாமய்யா இன்னிக்கு,’  என்றார் அவர்


‘சரி” என்றேன். 

இருவரும் அசோக்நகரில் நகுலனை சந்திக்கப் புறப்பட்டோம்.  நகுலன் அவருடைய சகோதரர் வீட்டில் தங்கி இருந்தார்.


நகுலன் எப்போதுமே அதிர்ந்து பேசத் தெரியாதவர்.  அவர் ஒரு சமயத்தில் ஒருவருடன்தான் பேச முடியும்.  இன்னொருவர் கேட்க  கிட்டே நெருங்கி வரவேண்டும்.


அன்று பேசிக்கொண்டே இருந்தோம்.  நகுலனைப் பேட்டி எடுத்தோம்.  ஐராவதம்தான் பேட்டி எடுத்தார். 

நான் நோட்புக்கில் அவர் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டிருந்தேன்.  இறுதியில் அந்தப் பேட்டியை வெளியிட வேண்டாமென்று சொல்லி விட்டார்.  நோட்டில் எழுதி வைத்த அந்தப் பேட்டி என் கண்ணில் இன்று வரை படவில்லை.


விருட்சத்திற்குப் படைப்புகள் அனுப்பும் போது தபால் தலை வைத்து அனுப்புவார்.  பிரசுரம் செய்யாவிட்டால் திருப்பி அனுப்பி விடுங்கள் என்பார். 


‘நீங்கள் எது எழுதினாலும் நான் பிரசுரம் செய்வேன்,’ என்று அவருக்குப் பதில் எழுதுவேன்.


மார்ச்சு 1989ஆம் ஆண்டு விருட்சம் இதழில் நகுலனின் குறள் மூலம் ஒரு கவிதை என்ற தலைப்பில் ஒரு கவிதை பிரசுரம் செய்தேன்.

நில் போ வா

வா போ நில்

போ வா நில்

நில் போ வா?


என்று நகுலன் கவிதையைப் பிரசுரம் செய்து விட்டு மாட்டிக்கொண்டு விட்டேன்.  எல்லோரும் இது எப்படிக் கவிதை என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.   பிரமிள் இதற்குப் பதில் அதிரடிக் கவிதை எழுதி என்னையும் நகுலனையும் சாடிவிட்டார்.  காஞ்சிபுரத்திலிருந்து ஒரு இலக்கிய அமைப்பு, எப்படி இதைக் கவிதைன்னு பிரசுரம் செய்தீர்கள் என்று கேள்வி கேட்டு எழுதியது.

நான் நகுலனிடம் பதில் அளிக்கும்படி கேட்டேன்.  அவர் இரண்டரைப் பக்கம் பதில் அனுப்பி இருந்தார்.  அதையும் பிரசுரம் செய்தேன். எல்லோரும் கிண்டல் செய்கிற ராமச்சந்திரன் என்ற கவிதை.  இது அவருடைய கோட். ஸ்டாண்ட் கவிதைகள் என்ற் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.  இது ‘ழ” வெளியீடாக வந்த புத்தகம்.  அந்தக் கவிதை இதோ:


ராமச்சந்திரனா“ என்று கேட்டேன்

” ராமச்சந்திரன்“ என்றார்

எந்த ராமச்சந்திரன் என்று

நான் கேட்கவில்லை

அவர் சொல்லவுமில்லை.


இந்தக் கவிதையைப் படித்துவிட்டு பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தக் கவிதை ஒரு மனநிலையை விவரிக்கிறது.  எல்லா உறவு நிலையிலும் ஆழமில்லை என்று விவரிக்கிறது.  எனக்குப் பிடித்த கவிதையில் இதுவும் ஒன்று.


கவிதைகளைத் தவிர அவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று பலவும் எழுதி உள்ளார்.  இரு நீண்ட கவிதைகள் என்ற புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன்.  ரூ.12தான் புத்தகம் விலை.  மிகவும் முக்கியமான புத்தகம் அது.  ஆனால் யாரும் வாங்கி ஆதரவு கொடுக்கவில்லை. 

அந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நெருப்பு.  பெரும்பாலான கவிதைப் பிரதிகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. நகுலனைப் பற்றி அதிகமாகச் சொல்லலாம்.  முடிந்தவரைச் சொல்ல முயல்கிறேன்.