குரல் கேட்டு ஃபைல் ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் நிமிர்ந்தார். ஹெட்கான்ஸ்டபிளின் பிடியில் அவன் சிக்கியிருந்தான். பரட்டைத்தலையும், கை வைத்த பனியனும், பூப்போட்ட லுங்கியும் மண்ணெண்ணெயில் நாறிக் கொண்டிருந்தது.
“அய்யா … ஆ…ஆ…ஆ..!” என்று பெரிதாய் அரற்றிவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டான் பொன்ராஜ். “அவங்க பொய் சொல்றாங்கய்யா… அவங்க பேச்சை நம்பாதீங்கய்யா… பணம் இருக்கிறவங்க பேச்சை நம்பிக்கிட்டு என்னை மோசம் பண்ணிடா தீங்கய்யா …”
கலியபெருமாள் பொன்ராஜைக் கையமர்த்திவிட்டு மறுபடியும் டெலிபோனின் ரீஸிவருக்கு கையைக் கொடுத்தார். .
“மிஸ்டர் பிள்ளை . . . ! நீங்க பணம் தரலைன்னு அவன் சொல்றானே…?” –
“பச்சைப் பொய் ஸார்… லாக்-அப்புல வெச்சு கொஞ்சம் லாடம் கட்டுங்க. உண்மையச் சொல்லிடுவான்.”
“அவன் பணம் வாங்கிக்கிட்டதுக்கு அடையாளம் நீங்க ஏதாவது கையெழுத்து வாங்கியிருக்கீங்களா…?”
“கையெழுத்து வாங்கல ஸார்… ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்தப் பொன்ராஜ் பணம் வாங்க வந்தப்ப என்னோட சம்பந்தி ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டார்ன்னு போன் வந்தது… அப்ப அந்தப் பதற்றமான நேரத்துல அவன்கிட்டயிருந்து கையெழுத்து வாங்க மறந்துட்டேன். அதைக் காரணமா வெச்சிக்கிட்டு மறுபடியும் பணம் கேட்கிறான்னு நினைக்கிறேன் ஸார்…”
“ஸாரி… பிள்ளை …! நீங்க சொல்ற காரணம் எனக்குச் சரியாப் படலை. நீங்க பொன்ராஜுக்குப் பணம் கொடுத்ததுக்கான ஆதாரம் ஏதாவது இருந்தாத்தான் சட்டப்படி அவன் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். நான் பணம் கொடுத்துட்டேன்னு நீங்க வெறும் வாய்ல சொன்னா போதாது. ஏதாவது ஆதாரம் காட்டணும்… ”
“இன்ஸ்பெக்டர்…! நான் பொய் சொல்வேன்னு நீங்க நினைக்கிறீங்க ளா …?”
“பண விஷயத்துல யார் எப்படி வேணும்னாலும் மாறலாமே…?”
“இன்ஸ்பெக்டர்…” பிள்ளை பேச முயல், கலியபெருமாள் குரல் உயர்ந்தது.
“ஒருத்தன் தற்கொலை பண்ற அளவுக்கு வந்து இருக்கான்னா அவன் பக்கம் நியாயம் இருக்கிற மாதிரிதான் என்னோட மனசுக்குப் படுது. ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிச்சு அவன் செத்துப் போயிருந்தா உங்க மேல் வன்கொடுமை வழக்குப் பதிவு பண்ணிக் கைது செய்வதைத் தவிர வேற வழியில்லை… இன்னிக்கு அவன் தீக்குளிக்க இருந்ததை நாங்க தடுத்துட்டோம்… நாளைக்கு நிலைமை எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது…” –
“இன்ஸ்பெக்டர்… நான் என்ன சொல்ல வர்றேன்னா…?”
“வெரி ஸாரி பிள்ளை… உங்களுக்கு பனிரெண்டு மணி நேரம் டயம். அதுக்குள்ள பொன்ராஜுக்கு நீங்க பணத்தை செட்டில் பண்ணனும். இல்லேன்னா உங்க வீட்டுக்கு முன்னாடி போலீஸ் ஜீப் நிற்கும். அதுக்கப்புறம் உங்க சிட்பண்ட்ஸ் பிஸினஸ் படுத்துடும்…. பரவாயில்லையா?”.
“வேண்டாம் ஸார்… பணத்தைக் கொடுத்துடறேன்…”
“இப்ப சொன்னீங்களே… இது வார்த்தை!” – ரிஸீவரை உற்சாகமாய் வைத்தார் கலியபெருமாள்.
ரூபாய் இருபதாயிரத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டிய பொன்ராஜின் மனசுக்குள் சந்தோஷம் கும்மியடித்தது.
‘ஐந்து லிட்டர் மண்ணெண்ணெயைத் தலையில் ஊற்றிக்கொண்டு ஒரு சின்ன ‘டிராமா’ பண்ணியதில் இருபதாயிரம் ரூபாய் லாபம். சம்பந்திக்கு கார் ஆக்ஸிடெண்ட் என்று சொன்னதுமே பிள்ளை பதறியடித்துக்கொண்டு என்னிடம் கையெழுத்து வாங்காமல் போனதுக்கு போனஸ் இருபதாயிரம் ரூபாய்…!’
பொன்ராஜுக்கு சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டும் போல் இருந்தது. ‘வெளியே லேசாய் பெய்துகொண்டிருந்த மழைக்கு பெப்பர் சிக்கனும் ஒரு குவார்ட்டரும் கையில் இருந்தால் சூப்பராய் இருக்குமே!’
வீட்டைப் பூட்டிக் கொண்டு தலையில் துண்டைப் போட்டபடி லேசாய்ப் பெய்துகொண்டிருந்த மழையில் ஒயின் ஷாப்பை நோக்கி நடந்தான் பொன்ராஜ்.
மறுநாள் காலை வந்த எல்லா நாளிதழ்களிலும் ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு சின்ன பகுதியில் அந்தச் செய்தி இடம் பிடித்து இருந்தது.
மின்னல் தாக்கி உடல் கருகி இளைஞர் மரணம். சமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பொன்ராஜ். வயது 25. நேற்று கிராமத்து வீதியில் மழையில் நனைந்தபடி சென்றுகொண்டிருந்த போது மின்னல் இவரைத் தாக்கியது. அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். இவரையும் சேர்த்து, தமிழகத்தில் பெய்துவரும் மழைக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேஸ் குமார், தேவி பாலா, சுபா, ரமணிச்சந்திரன், இந்திரா சௌந்திரராஜன், பட்டுக்கோட்டை பிரபாகரன் போன்ற எழுத்தாளர்களின் பாக்கெட் நாவல்களை வாங்கி வைத்துக்கொள்வேன். எப்படித்தான் எழுதுகிறார்கள் பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான். ஆனால் ஒன்றையும் படித்ததில்லை. நான் படிக்கவில்லை என்றால் என்ன பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் அவர்கள் பக்கம். அவர்கள் எழுதுவதைப் படித்துக்கொண்டே இருப்பார்கள். தேவி பாலா என்ற எழுத்தாளரைப் பற்றி கலைமகள் ஆசிரியர் அகமகிழ்ந்து முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன். ஆனால் நான் ஒன்றுகூடப் படித்ததில்லை. அவர் ஆயிரக்கணக்கில் சிறுகதைகளும், ஆயிரக்கணக்கில் நாவல்களும் எழுதி உள்ளார். எல்லாத் தீபாவளி மலர்களிலும் நான் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் இல்லாமல் இருப்பதில்லை. சிறுகதைகள் மட்டுமல்ல ஒரு தொடர்கதை எழுத வேண்டுமென்றாலும் அவர்களைத்தான் கூப்பிட்டு எழுதச் சொல்வார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், இலக்கியத்திற்கு என்று ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா என்றும் எழுதச் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் தீபாவளி மலர்களில் அசோகமித்திரன் எழுதாமலிருக்க மாட்டார். இவர்களுடைய பாக்கெட் நாவல்களை வாங்கி வைத்துவிட்டு படிக்காமலிருக்கிறோமே அவர்கள் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றெண்ணி ராஜேஸ் குமார் ‘சிறந்த சிறுகதைகளை’ப் படிக்க எடுத்து வைத்துக்கொண்டேன். மற்றவர்களிடம் இன்னும் போகவில்லை. உயிர்மை பதிப்பகம் ராஜேஸ் குமார் சிறந்த சிறுகதைகளை (எண்ணிக்கையில் 25) கொண்டு வந்துள்ளது. இப்படி புத்தகம் கொண்டு வந்தவுடன், அமைப்பே மாறிவிட்டது. ராஜேஸ் குமார் புத்தகங்களை வலது கையால் படித்துவிட்டு இடது கையால் தூக்கிப்போடும் வாசக தளத்திலிருந்து மாறி வேறு விதமாகத் தோற்றம் கொள்ள ஆரம்பித்து விட்டது. வாசகர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று தோன்றிவிட்டது. புத்தகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. ராஜேஸ் குமார் எழுத்துக்கள் மீது அசோகமித்திரனுக்கு உயர்வான அபிப்பிராயம் இருந்தது. என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். அவர் பேசும்போது நான் பாக்கெட் நாவல்கள் பக்கம் போனதே இல்லை அவர் குறிப்பிட்டபிறகு வாங்கிப் படித்துப் பார்க்கலாமென்று தோன்றியது. வாங்கிவைத்துக்கொண்டேனே தவிர படிக்கவில்லை. உயிர்மை கொண்டு வந்துள்ள ராஜேஸ் குமார் கதையிலிருந்து எதாவது ஒரு கதையைப் படித்து அதைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன். இந்தப் புத்தகத்திலிருந்து 3 கதைகள் படித்து விட்டேன். நான் முதலில் ஒரு கதையைப் படித்துவிட்டு எழுதலாமென்று நினைத்தேன். ஆனால் வரிசையாக 3 கதைகள் படித்து விட்டேன். ‘நேற்றைப் போல் இன்று இல்லை’ என்ற முதல் கதையை எடுத்து வாசித்தேன். ஒன்று புரிந்தது. ராஜேஸ் குமார் அழகாக தன் கதையை வடிவமைத்துக் கொடுக்கிறார். எங்கும் குழப்பமில்லாத வார்த்தைப் பிரயோகம். கச்சிதமான வடிவத்தில் கதையை முடித்து விடுகிறார். பொன்ராஜ் என்பவர் கிராமத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை செய்துகொள்வதுபோல் நாடகமாடுகிறார். இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் பொன் ராஜைக் கூப்பிட்டு விசாரிக்கிறார். அந்தக் கிராமத்துல சீட்டு கம்பெனி நடத்தும் கிருஷ்ண பிள்ளையைப் பற்றி புகார் கொடுக்கிறான் பொன்ராஜ் சீட்டுப் பணம் ரூ.20000 கொடுக்க வேண்டும். கொடுக்காமல் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார் மேலும் ஆளை வைத்து மிரட்டவும் செய்கிறார் கிருஷ்ணப்பிள்ளை என்கிறான் பொன்ராஜ். இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் கிருஷ்ணபிள்ளையிடம் போன் செய்கிறார். ‘பொன் ராஜிற்குச் சீட்டுப் பணம் ரூ.20000 கொடுக்கவில்லையா?’ என்று கேட்கிறார். கிருஷ்ணபிள்ளை பதறி விடுகிறார். ‘சார் அவன் சொல்றது பொய்,’ என்கிறார். உண்மையில் பொன் ராஜிடம் ஒரு இக்கட்டான தருணத்தில் சீட்டுப் பணம் கொடுத்து விடுகிறார். ஆனால் பணம் கொடுத்ததற்கு எழுதிக் கையெழுத்து வாங்கவில்லை. சீட்டுப் பணம் கேட்டு வரும்போது கிருஷ்ணப்பிள்ளையின் சம்பந்தி கார் விபத்தில் மாட்டிக்கொண்டு வருகிறார். அந்த பதட்டமான சூழ்நிலையில்தான் கையெழுத்து வாங்க மறந்து விடுகிறார். இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் கிருஷ்ணபிள்ளையை மிரட்டி விடுகிறார். வேற வழியில்லாமல் பொன் ராஜிடம் இன்னொரு முறை ரூ.20000 கொடுத்து விடுகிறார். பொன் ராஜ் உற்சாகமாகப் போய் விடுகிறான். தான் ஏமாற்றியதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்கிறான். பொன் ராஜ் இதைக் கொண்டாட நினைக்கிறான். வெளியே மழை லேசாகப் பெய்து கொண்டிருந்தது. மழைக்கு பெப்பர் சிக்கனும் ஒரு குவார்ட்டரும் கையிலிருந்தால் சூப்பராக இருக்குமென்று நினைக்கிறான். வீட்டைப்பூட்டிக்கொண்டு லேசாக மழைத் தூற்றலைப் பொருட்படுத்தாமல் ஒயின் ஷாப்பை நோக்கி நடந்தான் பொன்ராஜ். அடுத்தநாள் காலையில் பேப்பரில் ஒரு பக்கத்தில் ஒரு சின்ன பகுதியில் அந்தச் செய்தி இடம் பிடித்து இருந்தது. மின்னல் தாக்கி உடல் கருகி இளைஞர் மரணம், சமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பொன்ராஜ். வயது 25. கிராமத்து வீதியில் மழையில் நனைந்தபடி சென்றபோது மின்னல் தாக்கி இறந்து விட்டார். தமிழகத்தில் மழைக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத விதமாய் இதுமாதிரி ஒரு டுவிஸ்டை ராஜேஷ் குமார் கொடுத்துள்ளார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். ஒருவருக்கு வஞ்சனை செய்தால் அதற்குத் தண்டனை வேறுவிதமாகக் கிடைக்கும் என்கிறாரா? துரோகம் செய்தால் அதற்குத் தண்டனை கிடைத்துவிடும் என்ற ரீதியில் முடிவை வைக்கிறாரா? இவருடைய எல்லாக் கதைகளுக்கும் இது மாதிரியான பார்முலா முடிவை கொண்டு வருகிறாரா என்று தெரியவில்ûல். நான் இன்னும் முழுவதும் படிக்க வில்லை. ‘நியூஜெர்ஸி தேவதை,” அன்றே அங்கே அப்பொழுது’ என்ற கதைகளையும் இப் புத்தகத்தில் படித்து விட்டேன்.
இது என் 14வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.
மஞ்சள் நிறப் பூனைக்குட்டி
வீட்டு வாசல்படியில் ஒரு மஞ்சள் நிறப்பூனைக்குட்டி பார்க்கக் கவர்ச்சியாக இருந்தது. அதைப் பிடித்துக் கொஞ்ச வேண்டும். கிட்ட நெருங்கிப் போனால் ஓடி விடுகிறது.
ஒருநாள் கதவு அருகில் யோசனையுடன் அமர்ந்து இருந்தது. அந்தத் தோற்றமே அழகு. திரும்பவும் மெதுவாக அதற்குத் தெரியாமல் பிடித்து விடலாமென்று நினைத்தேன். நான் கிட்ட வருவதைப் பார்த்தவுடன் அலறி அடித்துக்கொண்டு ஓடியது.
இந்தப் பூனையை கைவசப்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு. எப்போதும் என் காரின் அடியில் கம்பீரமாகச் சயனித்துக் கொண்டிருக்கும். யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்களென்று திமிர் அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.
பார்த்தவுடன் மிரட்ட நினைத்தேன். கார் கிட்டே போய் ‘ ச்சூ…ச்சூ’ என்று விரட்டினேன். கவலையே படாமல் அசையாமலிருந்தது. ஒரு கழியை எடுத்துக்கொண்டு விரட்டினேன். கழியைப் பார்த்தவுடன் பயந்து ஓடிவிட்டது.
கொஞ்ச நாட்களாய் பூனையைக் காணவில்லை. எங்கே போயிற்றென்று தெரியவில்லை. முதலில் எங்கிருந்து இது வந்தது?
எங்காவது விபத்தில் இது செத்துப் போயிருக்குமோ என்று தோன்றியது. தெருவில் நான் நடந்து போகிற பாதையில் இது கண்ணில் படவில்லை. நகுலன் என்ற தமிழ் எழுத்தாளரின் நாவல்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அவர் எழுதிய நாவல்களின் ஒன்றின் பெயர் ‘அந்த மஞ்சள் நிற பூனைக் குட்டி.’. ஒரு வினாடி யோசித்தேன். சரிதான் அந்த நாவலுக்குள் அது நுழைந்து விட்டது.
இன்று கடுகு இறந்துவிட்டதாக திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன். நான் கடுகு என்கிற பிஎஸ் ரங்கநாதன் என்கிற அகஸ்தியன் என்பவரைப் பார்த்ததில்லை. அவர் எழுத்துக்களைப் படித்ததுண்டு. சமீபத்தில் கமலாவும் நானும் என்ற கடுகுவின் புத்தகத்தை நூல் நிலையத்திலிருந்து எடுத்து வந்தேன். நான் நூலகத்திலிருந்து போய் புத்தகம் எடுப்பேனே தவிர, உடனே புத்தகம் படித்து விடுவேன் என்று எண்ணி விடாதீர்கள்.
பொதுவாக நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து வருவதற்குக் காரணம் தொடர்பு விட்டுப் போகமலிருப்பதற்குத்தான். ‘கடுகு’ புத்தகத்தோடு இன்னும் இரண்டு புத்தகங்கள் எடுத்து வந்தேன். ஒன்று ‘தேவன்’ எழுதிய ‘கோமதியின் காதலன்’ இன்னொன்று ‘சுஜாதா’ எழுதிய ‘உள்ளம் துறந்தவன்.’
மூன்று புத்தகங்களையும் நூல் நிலையத்திற்கு எடுத்துக் கொண்டு போவேன். திரும்பவும் புதுப்பித்துக்கொண்டு எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்.
வாரத்தில் ஒருநாள் நூலகத்திலிருந்து எடுத்து வருகிற புத்தகங்களைக் கொஞ்சமாவது படித்து விடுவது என்று நினைத்துக் கொள்வேன். அத்துடன் சரி.
கடுகு மரணமடைந்த செய்தியை அறிந்தவுடன் அவருடைய புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். கொஞ்சமாவது படிக்கலாமென்ற எண்ணத்தில்.
பொதுவாகத் தமிழில் நகைச் சுவையாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. இன்னும் கேட்டால் விரல் விட்டு எண்ணி விடலாம். ஜே.எஸ். ராகவன் என்ற எழுத்தாளர் மாம்பலம் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் தொடர்ந்து நகைச்சுவை கட்டுரை எழுதுவார்.
நான் மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையைப் பார்க்கும்போது அவருடைய கட்டுரையைக் கட்டாயம் வாசிப்பேன். என் பத்திரிகையில் அவருடைய கட்டுரை ஒன்றையும் பிரசுரம் செய்தேன். ஏன் என்றால் சிறுபத்திரிக்கை என்றால் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு படிக்கக் கூடாது என்ற எண்ணத்தால்தான் ராகவன் கட்டுரையைப் பிரசுரம் செய்தேன்.
அந்தத் தருணத்தில்தான் நூல்நிலையத்தில் கடுகுவைக் கண்டு பிடித்தேன். அசந்து விட்டேன். அவர் எழுத்துக்களை விருட்சத்தில் கொண்டு வரலாமா என்று கூடத் தோன்றியது. அவர் எழுத்துக்களைப் படிக்கும்போது எல்லாவற்றையும் அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டு போகிற தன்மை தெரிந்தது.
புத்தக என்னுரையில் அவர் இப்படி எழுதுகிறார். இசை விமர்சகர்களைப் பற்றி ஒரு குறும்பு வாசம் உண்டு. பாடத் தெரிந்தவன் பாடுகிறான். பாடத் தெரியாதவன் விமர்சகனாகிறான். இன்றைய இன்டர்நெட் உலகில் அதைச் சற்று மாற்றிச் சொல்கிறார்கள் எழுதத் தெரிந்தவன் எழுதுகிறான். எழுதத் தெரியாதவன் பிளாக்கைத் துவங்கித் தானே எழுதி, தானே பிரசுரித்துக் கொள்கிறான்.(தானே பாராட்டிக்கொள்ளவும் செய்கிறான்).
அவரும் கடுகு தாளிப்பு என்ற பெயரில் ஒரு பிளாக்கைத் துவங்கி இந்த மூன்றையும் இல்லை இல்லை முதல் இரண்டைச் செய்து வந்து கொண்டிருக்கிறார்.
கடுகு மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இந்தப் புத்தகத்திலிருந்து இரண்டு கட்டுரைகளை உடனே படித்துவிட்டேன். ஒன்று பாரதி ராஜாவைப் பற்றியது. இன்னொன்று ஆர்.கே நாராயணன் பற்றியது.
இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இன்னும் எழுதலாமென்று நினைக்கிறேன்.
“ சூரியனுக்குப் பின் பக்கம் என்ற ஞானக்கூத்தன் கவிதையைப்பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். உடனே நண்பர் ஸ்ரீதரிடமிருந்து (சிரித்த முகமுடைய நண்பர்) ஒரு தொலைப்பேசி வந்தது. மிளகாய்ப் பழங்கள் மாடியில் என்ற கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டார். கடைசி இரண்டு வரிகளில் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்டார். நானும் படித்துப் பார்த்தேன். கவிதை புரிவதுபோல் இருக்கிறது. ஆனால் கடைசி இரண்டு வரிகளில் என்ன சொல்கிறார் கவிஞர் என்று தெரியவில்லை. முதலில் ஒரு கேள்வி எழுகிறது. அணில் மிளகாய்ப் பழத்தைத் தீண்டுமா? என்ற கேள்வி. மிளகாய்ப் பழம் வைத்து வேற எதுவோ ஞானக்கூத்தன் சொல்கிறாரா? இதையெல்லாம் மீறி ஞானக்கூத்தன் கவிதையில் ஒரு வசீகரம் தென்படுகிறது.
கவிதையை இங்கே கொடுக்கிறேன். நீங்களும் படித்துவிட்டு உங்களுக்குப் புரிகிறதா என்று கூறுங்கள். 1982ல் இந்தக் கவிதை எழுதப்பட்டது.
மிளகாய்ப் பழங்கள் மாடியில்
மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன ஆசை மிகுந்து அணிலொன்று வந்தது பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித் தடுத்திழுத்து நிறுத்திய போதும் ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க உலவைப் பழங்கள் எங்கும் சிதறின ஜன்னலை விட்டுத் திரும்பினேன் எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று
ஞானக்கூத்தன் ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதை யாராவது படித்திருக்கிறார்களா என்று தெரியாது. அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரியாது.
இந்தக் கவிதை ‘தீபம்’ இதழில் 1974 ஆம் ஆண்டு பிரசுரமானது. இதைப் பற்றி ஒரு கதை உண்டு. ‘சூரியனுக்குப் பின் பக்கம்’ என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ‘ழ’ வெளியீடாக ஒரு கவிதைப் புத்தகம் கொண்டு வந்தார்.
அந்தப் புத்தகத்தில் இந்தக் கவிதை இல்லை. டிசம்பர் 1998ல் ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகம் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரும்போது, ‘சூரியனுக்குப் பின் பக்கம்’ கவிதையைச் சேர்க்க வேண்டுமென்று ஞானக்கூத்தன் குறிப்பிட்டார்.
‘ழ’ வெளியீடாக நீங்கள் கொண்டு வந்த ‘சூரியனுக்குப் பின்பக்கம் ‘கவிதைப் புத்தகத்தில் இந்தக் கவிதை இல்லையா?’ என்று கேட்டேன்.
‘இல்லை,’ என்றார்.
‘எந்த ஆண்டு எந்தப் பத்திரிகையில் இந்தக் கவிதை வந்தது?’ என்று கேட்டேன்.
‘1974ஆம் ஆண்டு தீபம் பத்திரிகையில் வந்தது/’ என்றார்.
நா.பார்த்தசாரதியின் வீடு என் வீட்டிற்குப் பக்கத்திலிருந்தது. அங்கே போனேன். நா.பாவின் வீடு ஒரு அடுக்ககமாக மாறி இருந்தது.
அவர் புதல்வரை 1974 ஆம் ஆண்டு தீபம் இதழ்களைக் கேட்டேன். அவர் கொண்டு வந்து கொடுத்தார். அங்கே இருந்தவாறு தாள்களில் ஞானக்கூத்தனின் விட்டுப் போன கவிதைகளை எழுதினேன். சூரியனுக்குப் பின் பக்கம் அதில் ஒரு கவிதை.
நான் எழுதிக்கொண்டு வராவிட்டால் எல்லாம் விட்டுப் போயிருக்கும். ஞானக்கூத்தனும் தானாகவே அங்கே சென்று போய் எழுதிக்கொண்டு வந்திருக்க மாட்டார்.
‘சூரியனுக்குப் பின்பக்கம்’ ஒரு வினோதமான கவிதை. ஞானக்கூத்தனால் மட்டும்தான் அப்படி எழுத முடியும். இதோ நீங்களும் அந்தக் கவிதையை இங்கே வாசியுங்கள்.
சூரியனுக்குப் பின்பக்கம்
யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் உடனே
நான் சொல்வேன்:
அனைத்தும் வல்ல இராட்சதரை.
எதனால் என்றால்
அவரில் சிலரைக்
கனாப் பொழுதில் நான் கண்டேன்.
அவர்கள் தொகையால்
எண்ணற்று
ஒன்றாய்க் கூடி
சூரியனைப் பாறைகொண்டு தூளாக்கிக்
கையால் இழுக்கும் வண்டிகளில்
அடுக்கிக் கொண்டு சென்றார்கள்
எதற்காம் இந்தப் பாளங்கள் என்றேன்
சொன்னான் ஓரரக்கன்:
இன்றைக் கெங்கள் உணவுக்கு.
உடம்பும் பொலிவும் ஒரு சேரச்
சோரும் அந்தச் சூரியனை
அள்ளிக் கொண்டு பலர் சென்றார்
நெல்லைத் தூக்கும் எறும்பைப் போல்.
யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் சொல்வேன்:
இராட்சதரை
எதனால் என்றால் சூரியனை
யார் இடித்தார் உணவுக்கு?
தினமும் காலையில் இந்தக் கவிதையை ஒருமுறையாவது படித்துவிடுவேன். சூரியனையே உணவாக எடுத்துக்கொண்டு செல்லும் இராட்சதரை நினைத்துப் பார்க்கிறேன். அதுவும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துக்கொண்டு போகிறார்களாம். நெல்லைத் தூக்கும் எறும்பைப் போல தூக்கிக் கொண்டு போகிறார்களாம்.
உண்மையில் எதைக் குறிப்பிடுகிறது இந்தக் கவிதை? சூரியனை உண்மையில் யாராவது நெருங்க முடியுமா? அதுவும் உணவாக அதைப் பிளந்து எடுத்துக் கொண்டு போக முடியுமா?
நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம் சூமில் நடத்தினேன். எனக்குத் திருப்தியாக இல்லை. நேற்று கவிதை வாசித்தவர்களை தனித்தனியாகக் கூப்பிட்டு இன்னொரு முறை வாசிக்க வைக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இன்னும் எனக்கு சூம் கூட்டம் நடத்துகிற அனுபவம் போதவில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூம் கூட்டம் கவிதை வாசிக்கும் கூட்டமாக நடத்த உத்தேசம். எனக்கு அறிமுகமான கவிஞர்களையெல்லாம் கூப்பிட்டு வாசிக்கச் சொல்லப் போகிறேன்.. ஒவ்வொரு வாரமும் 4 கவிஞர்களைக் கூப்பிட்டுக் கவிதை வாசிக்கச் சொல்லலாமென்று நினைக்கிறேன். ஒரு வாரம் மரபுக் கவிதைகள் எழுதுபவர்களைக் கூப்பிடலாமென்று நினைக்கிறேன் (அப்படி என்னதான் எழுத முடிகிறது அவர்களால்?) அதேபோல் ஐகூ வாசிப்பவர்களை. நான் 32 வருடமாக விருட்சம் நடத்தி வருகிறேன். கவிஞர்கள்தான் பெரும்பாலும் அறிமுகம் எனக்கு. தேங்கிவிட்ட கவிதைப் புத்தகங்களை என்ன செய்வது என்று எனக்கு எப்போதும் தெரியாது? கவலைப் படுவதுமில்லை. பேப்பர் கடைகளிலும் போடுவதில்லை. வரும் வெள்ளிக்கிழமை 4 பெண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன் ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள். கவிஞர்களை நானே அறிமுகப் படுத்தலாமென்று நினைக்கிறேன். எல்லாக் கவிஞர்களையும் முறை வைத்து கவிதை வாசிக்கக் கூப்பிட உள்ளேன். யாரையும் தவிர்க்கும் எண்ணமில்லை. ஏற்கனவே கவிதைக்கணம் என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்த நடத்திய அனுபவம் எனக்குண்டு. சிபிச்சல்வன், லதா ராமகிருஷ்ணன், பூமா ஈஸ்வர மூர்த்தி, நான் என்றெல்லாம் கூடி நடத்தியிருக்கிறோம் மூத்தக் கவிஞர்களுக்குப் பரிசு கொடுத்திருக்கிறோம். திரும்பவும் இப்போது ஆரம்பித்திருக்கிறேன். எல்லோரும் இந்த சூம் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த எளியோனுக்கு ஆதரவு தர வேண்டுகிறேன். இந்த விஷயத்தில் உங்கள் அறிவுரைகளையும் ஏற்க விரும்புகிறேன்.
இது என் 13வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமஙூருக்க முடியாது.
எதிர்பாராத தகவல்?
நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம். குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி, தினசரி எல்லாம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோம். நான் புத்தகங்களுடன் ஐக்கியமானேன். அவள் ஜவ்வரிசி வடாம் இடுவது என்று தீர்மானித்து மும்முரமாக அதில் ஈடுபட்டிருந்தாள். ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்தாள். வெயில் படுகிற மாதிரி பால்கனிக்கு இழுத்துக்கொண்டு வந்தாள். பின் மடமடவென்று ஜவ்வரிசி வடத்தை இட்டாள். “ அலாதியான மகிழ்ச்சி. ஜவ்வரிசி வடாம் இடுவதற்கு முன் என் நாக்கில் அதன் மாவைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள். புளிப்பு உரைப்பு சரியாக இருக்கிறதென்று சொன்னேன். ஒவ்வொரு பையிலும் பத்து பன்னிரண்டு புத்தகங்கள் படிப்பதற்காக வைத்திருப்பேன். இதுமாதிரி 6 பைகள் நிறையப் புத்தகங்கள். ஒரு பையை எடுத்து வைத்துக்கொண்டேன். அந்தப் பையிலிருந்து ஒரு புத்தகத்தில் சில பக்கங்களைப் படித்துவிட்டு வைத்துவிடுவேன். பிறகு இன்னொரு புத்தகம். இப்படியாக நான் புத்தகம் படிப்பது போய்க் கொண்டிருக்கும். இன்று சாப்பாடு முடிந்தவுடன் சில மணி நேரம் தூங்கலாமென்று போய்விட்டேன். பொழுது மெதுவாக நகர்ந்து நகர்ந்து நடுப்பகலைத் தாண்டி இரவும் வந்து விட்டது. நாங்கள் குறிப்பாக அதைப் பற்றிப் பேசவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. நான் எழுதற கதையெல்லாம் அதைப் பற்றியே எழுதுகிறேன் என்று பலர் குற்றம் சாட்டி உள்ளார்கள். அதனால் ஒரு கதையாவது அதைப் பற்றிக் குறிப்பிடாமல் எழுதலாமென்று நினைத்தேன். இரவு தூங்குவதற்குப் போகும்போது ஜவ்வரிசி வடாம் போட்டது பற்றி பெண்ணிடம் சொல்லலாமா என்று மனைவி கேட்டாள். சரி என்றேன். “ பெண்ணிற்கு ஆவலுடன் தொலைப்பேசி செய்தாள். பெண் தொலைப்பேசியை எடுத்தாள். அம்மா இன்றைக்கு 768. மரணம் 100 என்றாள் பெண்.
நான் ராஜாராமன். டில்லி வாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ. எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக 210 -10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித்தது எம். ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும், சித்தார்த்தன் என்கிற என் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு – அவனை நீங்கள் சந்திக்க வேண்டும்; அழகான பயல் – பால், விடமின் சொட்டுகள், ‘ஃபாரெக்ஸ்’ வாங்குவதற்கும், என் புத்தகச் செலவுகளுக்கும் … எதற்கு உங்களுக்கு அந்தக் கணக்கெல்லாம்.
வாங்குகிற முந்நூற்று சொச்சம், இருபத்தைந்து தேதிக்குள் செலவழிந்து விடுவது சத்தியம். இந்த உலகத்தில் இன்றைய தேதிக்கு என் சொத்து: ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிடப்பட்டவள் என் மனைவி. இவளைப் பற்றி கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் பட்ஜெட்டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமார்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம். கணவன் ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது. எல்லாம் என் ஆர்வத்தில் ஓர் இலக்கியப் பத்திரிகை தொடங்கி இரண்டு மாதம் நடத்தினதில் போய்விட்டது. அதற்காக நான் அவமானப்படுகிறேன். இலக்கியப் பத்திரிகை நடத்தினதற்காக அல்ல; மனைவியின் சொற்ப நகைகளை விற்றதற்காக
இன்று தேதி 29, என் கையில் இருப்பது மூன்று ரூபாய். எனக்குத் தேவை முந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. அவளைப் பார்க்கச் செல்ல வேண்டும். உடனே செல்ல வேண்டும்.
என் அம்மாவுக்கு இருதயத்தில் கோளாறு. ஐம்பத்தெட்டு வருஷம் அடித்து அடித்து அலுத்துப் போய் திடீரென்று நின்றுவிடலாமா என்று யோசிக்கும் இருதயம். அவளுக்கு உடம்பு பதறும்; சில்லிட்டு விடும். இந்த மாதிரி மூன்று தடவை வந்திருக்கிறது. இந்தத் தடவை தீவிரமாக இருந்திருக்க வேண்டும். என் தம்பி அடித்த தந்தியின் சுருக்கமான வாசகங்களில் தெரிகிறது; “அம்மா கவலைக்கிடம் உடனே வா.”
இதுவரை நான் மேம்போக்காகவே எழுதி வந்திருக்கிறேன். என் உள்ளத்தின் பதற்றத்தைச் சமாளிக்க – என் அம்மாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையை வலியுறுத்த இப்படி எழுதிக் கொள்கிறேன். என் மனத்தின் ஆழத்தில் என் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘அம்மா – அம்மா – அம்மா’ என்று அடித்துக் கொள்வதையும், என்னுள் இருக்கும் சில இனம் தெரியாத பயங்களையும், நம்பிக்கைகளையும் வார்த்தைகளில் எழுதுவது கஷ்டம். அவளை உடனே யட்சன்போலப் பறந்து சென்று பார்க்க வேண்டும் … ‘அம்மா, உன் டில்லி புத்திரன் இதோ வந்துவிட்டேன். ஏரோப்ளேனில் உன்னைப் பார்க்கப் பறந்து வந்திருக்கிறேன். இதோ உன் தலையைத் தடவிக் கொடுக்கிறேன். உனக்குக் குணமாகி விடும்.’ பக்கத்து வீட்டு சாரதாவிடம் ‘என் பிள்ளை பிளேனில் வந்தான்’ என்று பெருமை அடித்து கொள்வதற்காகவாவது பிழைத்துக்கொள்வாள். எனக்கு ரூபாய் முந்நூற்று இருபத்தைந்து தேவை.
என் போன்றவர்களுக்கு விமானப் பிரயாணம் இந்த மாதிரி சோக சந்தர்ப்பங்களில்தான் சாத்தியம். கடன் வாங்கி டிக்கெட் வாங்கி, கண்ணீர் மறைக்கும் கண்களுடன் ஜேம்ஸ் பாண்ட் படிக்க முடியாது. ஹோஸ்டஸ்ஸ§டன் சிரித்துப் பேச முடியாது.
எங்கே போவேன் பணத்திற்கு?… எனக்கு யார் தருவார்கள்? என் நண்பர்களைப் போய் இருபத்தொன்பதாம் தேதி கேட்டால், ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். என் மனைவியிடம் நகைகள் கிடையாது. என் சொத்தைப் பற்றி முன்னமேயே தெரிவித்திருக்கிறேன். அதனால்தான் ராமநாதனிடம் கேட்கலாம் என்று தீர்மானித்தேன்.
ராமநாதன் எனக்குக் கிட்டத்திலும் அல்லாத, தூரத்திலும் அல்லாத உறவினர். என்ன உறவு என்கிற விவரங்கள் அனாவசியம். செக்ரட்டரியாக இருக்கிறார். முக்கியமான மந்திரிக்கு. முக்கியமான மனிதர். சர்க்கார் எத்தனையோ மில்லியன் டன் கோதுமை கடன் வாங்கும்போது இவர்தான் வெள்ளைக்காரர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஜோடியாகக் கையெழுத்துப் போடுவார். போகாத தேசமில்லை. டில்லியில் நான் எட்டு வருஷங்கள் இருந்திருக்கிறேன். இரண்டு தடவை நான் இவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். இரண்டு தடவையும் நடந்தது, எழுதும்படியாக இல்லை. நானும் இவரும் இருப்பது வேறு வேறு மட்டங்களில். உறவுப் பிணைப்பை வைத்துக்கொண்டு இந்த வித்தியாசத்தை இணைப்பது சாத்தியமாகாது என்று அறிந்துகொண்டு மரியாதையாக ஒதுங்கிவிட்டேன். தற்போது என் பணத்தேவை அந்த அவமானங்களை எல்லாம் மறக்கச் செய்துவிட்டது. நான் அவரைப் பார்க்கக் கிளம்பினேன்.
ஹேஸ்டிங்ஸ் ரோடின் அமைதியில் பச்சைப்புல் தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏர் கண்டிஷனர், நாய், அம்பாஸடர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசலில் கதர் அணிந்த சேவகர் என்னைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார். என் பெயர் சொல்லி, நான் அவர் உறவுக்காரர் என்பதையும் சொன்னேன். வேஷ்டி கட்டின என்னை ஏதோ, நாய் கொண்டுவந்து போட்ட வஸ்துவைப் போல் பார்த்து உள்ளே போகுமாறு சொன்னார் சேவகர் (ர்’ மரியாதையைக் கவனிக்கவும்). ‘ சிண்ட்ரெல்லா’ ராஜகுமாரன் மாளிகையில் நுழைவதுபோல் உணர்ந்தேன், உள்ளே செல்லும்போது. ஒரு ஹால். தவறு, ஹால் இல்லை … ஹாரால். கீழே கம்பளம். பக்கத்தில் ‘டெலிஃபங்கன்’ கம்பெனியின் ரேடியோ கிராம் (ராமநாதன் அவர்கள் மேற்கு ஜெர்மனி சென்றிருக்கிறார்). டிரான்ஸிஸ்டர், மடங்கிப் படுக்கையாகத் தயாராக இருக்கும் ஸோபா, ரெப்ரிஜிரேட்டர் திறந்திருக்கிறது. அதில் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட சாராய பாட்டில்கள். மேலே காந்தி படம். அறையின் திரைகளில் டிஸ்டெம்பரின் வர்ணங்கள் ஒன்றுக்கொன்று இழைந்து கண்ணை உறுத்தாத சமாச்சாரங்கள்.
ரேடியோகிராமிலிருந்து பலமாக கிதார் சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் துடிப்பிற்கு ஏற்ப கால்களால் தாளம் போட்டுக்கொண்டு ஓர் இளைஞன் சோபாவில் முக்கால்வாசிப் படுத்துக்கொண்டு ‘ப்ளே பாய்’ என்கிற பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தான். நான் வந்ததையோ, நின்றதையோ, கனைத்ததையோ கவனிக்கவில்லை. அருகே சென்று தாழ்வாக இருந்த நடுமேஜையில் ஒரு தட்டித் தட்டினேன். கவனித்தான். “யெஸ்?” என்றான் பையன். ராமநாதனின் ஒரே பையன். “அப்பா இருக்கிறாரா?” “ஹி இஸ் டேகிங் பாத். ப்ளிஸ் வெய்ட்” என்றான். அவனுக்கு முடிவெட்டு தேவையாயிருந்தது. அணிந்திருந்த சட்டை, பெண்கள் அணியவேண்டியது. போட்டிருந்த பேண்ட்டில் நுழைவதற்கு அசாத்திய சாமர்த்தியம் வேண்டும். “ஐ’ம் ராஜேஷ்” என்று என்னை நோக்கிக் கையை நீட்டினான் “என் பெயர் ராஜாராமன். நான் உங்களுக்கு ஒரு விதத்தில் உறவு.” என்றேன். நான் தமிழை விடுவதாக இல்லை . “இஸ் இட்?” என்றான். “நீ அவர் பையன்தானே?”
ம் “யெஸ்” “தமிழ் தெரியுமா?” “யெஸ்” “பின் தமிழில் பேசேன்.” “ஹானஸ்ட்லி ஐ லாஸ்ட் டச்” என்று சிரித்தான். எனக்கு லேசாகத் தலைவலிக்க ஆரம்பித்தது. மெதுவாக எழப்போகும் கோபத்துக்கு அறிகுறி. “நீ என்ன படிக்கிறே?” “ப்ளே பாய்!” “இல்லை , எத்தனாவது படிக்கிறே?” “ஸீனியர் கேம்பிரிட்ஜ்.” ராமநாதன் உள்ளேயிருந்து வந்தார். நேராக இடப்பக்கம் இருந்த அறையை நோக்கி நடந்தார். “நமஸ்காரம், ஸார்.” தயங்கி என்னைப் பார்த்தார். கண்களில், அவர் ஞாபகத்தில் என்னைத் தேடுவது தெரிந்தது. “ஓ, ஹலோ! வாப்பா, ராமச்சந்திரன்” “ராஜாராமன் சார்.” “ஓ, எஸ்! ராஜாராமன், சௌக்கியமா? ஒரு நிமிஷம்” என்றபடி மறைந்தார்.
ஓர் அசிங்கமான தயக்கம். ராஜேஷ் என் எதிரில் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தான். அவன் வயதில் நான் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கோல்ட்ஸ்மித் படித்துக்கொண்டிருந்தேன். இவன் ட்விஸ்ட் சங்கீதமும் ஓர் இடத்திலும் தேங்காத இந்த யுகத்தின் இந்த நிமிஷத்தின் அமைதியற்ற துடிப்புமாக என்னை மியூசியம் பிறவியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
மேஜை மேல் அவன் வைத்திருந்த பத்திரிகையைப் புரட்டினேன். வர்ணத்தில் ஒரு பெண்ணின் படம் – ஒரே ஒரு புன்னகையை மட்டும் அணிந்துகொண்டிருந்தாள் – அவசர அவசரமாக மூடினேன். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். பற்களில் நிகொடின் காவி.
ராமநாதன் அறையை விட்டு வெளியே வந்தபோது வெளியே கிளம்புவதற்குத் தயாராக முழுக்க உடையணிந்திருந்தார். உயரமானவர். பீர் அதிகம் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட இளம் தொந்தி, கண்ணாடி, அலட்சியம், புன்னகை, அபார உயரம், கீழ்ஸ்தாயிப் பேச்சு – எல்லாம் வெற்றிக்கு அடையாளங்கள்.
“ஸோ?” என்றார், என்னைப் பார்த்து, மேஜை மேல் வைத்திருந்த சிகரெட் பெட்டியை எடுத்து தேவ் ஆனந்த்போல் ஒரு தட்டுத் தட்டி வாயில் பொருத்தினார். “ஸ்மோக்” என்றார். “இல்லை” என்றேன். லைட்டரின் ‘க்ளிக்’கில் ஜோதி எம்பிப் பற்ற வைத்துவிட்டுத் தணிந்தது. ராஜேஷ், “டாட்! கேன் ஐ டேக் தி கார்?” என்றான். அவர் : “நோ, ராஜ். எனக்கு ஒரு கான்பரன்ஸ் போக வேண்டும்.” “ஐவில் ட்ராப் யூ” என்றான் கெஞ்சலாக.
“ஓ. கே. ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு . பெட் ரூமில் சாவி இருக்கிறது. அம்மாவை எழுப்பாதே. அவள் தூங்கட்டும்.”
நான் மரமண்டை இல்லை. எனக்கு ஐந்து நிமிஷம் கொடுத்திருக் கிறார். அதற்குள் வந்த காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
“எஸ். ராமச்சந்திரன் எப்படி இருக்கே? ஜானகி எப்படி இருக்கிறா?” “ராஜாராமன், சார்?” “என்ன ?” “என் பெயர் ராஜாராமன் சார்.” “எஸ்! ராஜாராமன், இல்லையென்று யார் சொன்னார்கள்! ஒருவரும் அதை மறுக்கவில்லையே!” என்று சிரித்தார். நான் பின் பாட்டாகச் சிரித்தேன். “சரி, ஜானகி எப்படி இருக்கிறாள்?” “ஜானகி செத்துப்போய் இரண்டு வருஷங்கள் ஆச்சு.” “ஓ. எஸ். ஓ. எஸ். ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிடி. அவளுக்கு எத்தனை குழந்தைகள் ?” “ஒரு பையன். இரண்டு வயசுப் பையன் – ” “ஆமாம்; ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”
‘விண் விண்’ என்று தலைவலி தெறித்தது எனக்கு. கோபம் கலந்த தலைவலி. “நான்தான் சார், ஜானகி தம்பி” “ஸோ ஸாரி. எனக்கு ரொம்ப மோசமான மெமரி. நம்ம ரிலேஷன்ஸ்கூட டச்சே விட்டுப் போச்சு … ஏன்? தூர தேசத்திலே இருக்கோம். சௌக்கியமா இருக்கிறாயா?” “சௌக்கியம் சார்.”
“இப்ப என்ன வேணும் உனக்கு?”
அந்த நேரம் வந்துவிட்டது. திடீரென்று இரண்டடி உயர மனிதன்போல் உணரும் நேரம். இந்திரன்போல் கூச்சப்பட வேண்டிய நேரம். பணம் கேட்க வேண்டிய நேரம்.
“எனக்கு முந்நூத்தி அம்பது ரூபாய் பணம் வேணும், சார். எங்க அம் …”
“ம்ஹ¨ம்! இல்லை. ‘செக்’ எழுதித் தருகிறேன்! ஸ்டேட் பாங்கிலே மாத்திக்கிறாயா?”
“சரி, சார். ரொம்ப வந்தனம். எங்க அம்மாவுக்கு ….”
“திருப்பித் தருவாயா?”
“கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிவிடுகிறேன். சார் எங்க அ ….”
எழுந்து போய்விட்டார். ‘செக்’ புத்தகம் கொண்டுவர. மடையனே, என்னைப் பேசவிடேன். எனக்கு இந்தப் பணம் எதற்கு என்று சொல்லவிடேன். அம்மாவின் உடல் நிலை கவலைக் கிடமாக இருப்பதால்தான் உன்னிடம் வந்து தொங்குகிறேன் என்று பேசவிடேன்…! ‘செக்’ புஸ்தகம் கொண்டுவந்தார்.
பேனாவைப் பிரித்தார்.
“உன் முழுப் பெயர் என்ன?” சொன்னேன். “ஸ்பெல்லிங்?” | சொன்னேன். ‘
‘செக்’கை எழுதிக் கையில் கொடுத்தார். கொடுக்கும்போது
“நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.
“எதை சார்?”
“இந்த மாதிரி உறவுக்காரங்களுக்கு ‘செக்’ எழுதறதை.”
“இல்லை சார். என் கேஸிலே ரொம்ப அவசரமான தேவை. எங்க அம்மாவுக்கு சீரி ….’ –
“தேவை எல்லாருக்கும்தான் இருக்கு. இந்த தேசத்துக்கே பணம் தேவை. உன் கேஸையே எடுத்துக்கலாம். இத்தனை நாள் டில்லியிலே இருந்திருக்கே. எத்தனை தடவை வீட்டுக்கு வந்திருக்கே?”
என் கோபம் என்னைப் பதில் சொல்லவிடவில்லை.
“எப்போ வருகிறாய்? உனக்குப் பணம் தேவையாய் இருக்கும் போது. நான்தான் இருக்கேனே, ‘செக்’ எழுதுகிற மிஷின்! என் கழுத்தில் போர்டு போட்டுத் தொங்க விட்டிருக்கு, இல்லையா, ‘ஏமாளி’ என்று – இவரிடம் எப்போழுதும் கடன் கேட்கலாம் என்று … நம்ம ஸவுத் இண்டியன் மெண்ட்டாலிட்டியே அப்படி. நான் பொதுவாகத்தான் சொல்கிறேன். உன்னைத் தனியாகச் சொல்லவில்லை. நான்தான் நம் குடும்பத்துக்கு ‘செக்’ எழுதுகிற மிஷின்…!”
அவர் மேலே மேலே பேசப் பேச என் கோபம் ‘போயிங்’ விமானம் புறப்படும் சப்தம்போல் மெதுவாக ஆரம்பித்து உலகத்தையே சாப்பிடும் வேதனை எல்லைவரை உயர்ந்தது.
“அன்னிக்கு ரெண்டு பேர் வந்தாங்க… நாங்கள் இரண்டு பேரும் உங்களுக்கு உறவு ….”
பாதியில் நிறுத்திவிட்டார். ஏன்! நான் அவர் முகத்தின் முன்னால் அவர் கொடுத்த ‘செக்’கை நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டேன். “சார், உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்ககிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை. இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். தயவு செய்து கான்பரன் ஸ§க்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண்ணுங்க.”
அவர் முகம் மாறியது.
“ராஜாராமன், கடன் வாங்க வந்தவனுக்கு இவ்வளவு கோபம் உதவாது. நீ இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டதற்கு உன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும். மரியாதையாகப் போயிடு. கெட் லாஸ்ட் யூ பாஸ்டர்ட்!”
“கெட் ரிச் யூ பாஸ்டர்ட்” என்றேன்;
சிரித்தேன். ம் “மன்ஸாராம்!” என்று சேவகனைக் கூப்பிட்டார். மன்ஸாராம் வருவதற்குள் ராஜாராம் கழண்டுகொண்டேன். வெளியில் வெயிலில் வந்து நின்ற என் நிலைமையைப் பாருங்கள். கௌரவம், மானம் என்பதெல்லாம் பணம் உள்ளவர்களுக்கு உரியவை. எனக்கு ஏன்? அவர் சாதாரணமாகத்தான் பேசினார். அவர் வெறுப்பு அவருக்கு. அந்த வார்த்தைகளைப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ‘செக்’கை வாங்கி மாற்றி டிக்கெட் வாங்கியிருக்கலாம்.
ஆனால், அந்த சமயம் நான் செய்த முற்றிலும் எதிர்பாராத செயலில் அந்த ஒரு தருணத்தில் பூர்ணமாக வாழ்ந்தேன் நான்.
நீங்கள் இவ்வளவு பொறுமையாக இதுவரை படித்தீர்கள். கடனாக முந்நூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவளைப் போய்ப் பார்க்க வேண்டும்.