எதையாவது சொல்லட்டுமா….2

ஒரு தீபாவளிபோது நாங்கள் இருக்கும் அடுக்கத்தில் யாவரும் வருத்தத்துடன் இருந்தோம். எங்கள் தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் வசித்த வந்த ஒரு வயதான பள்ளி ஆசிரியை கொலை செய்து விட்டான் ஒரு கொலையாளி.. அதவும் நகைக்காக. அந்தப் பள்ளி ஆசிரியை தனியாக வசித்து வந்தார். எங்கள் பகுதியில் சின்ன சின்ன திருட்டுக்கள் நடக்கும். ஆனால் கொலை செய்யும் அளவிற்குப் போகுமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை எங்கள் அடுக்கத்தில் உள்ள வீடுகளின் வாசல்களைப் பூட்டிவிட்டு மாடியில் உள்ள பித்தளை வால்வுகளைத் திருடிப் போனான் ஒருவன்.

கீழே உள்ள ஒரு குடியிருப்பில் புகுந்து பீரோவையெல்லாம் திறந்து நகைகளை எடுக்கப் போனான். கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் அவ் வீட்டின் டிவியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அது பெரிய ரகளையாகிவிட்டது. அந்த வீட்டுக்காரர் போலீஸில் புகார் சொல்ல விரும்பவில்லை. அது எதாவது விபரீதத்திற்கு எடுத்துப் போய்விடுமோ என்று பயந்தார். அந்தக் குடியிருப்பில் இரண்டு வாசல்கள். கொல்லைப் பக்க வாசல் வழியாக பத்துப் பாத்திரங்களைத் தேய்க்கப் நடமாடும் பகுதியைப் பயன்படுத்தினார்கள். பொது இடத்தை அது மாதிரி பயன்படுத்துவதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் அவர்களிடம் சொல்லி அவர்கள் கேட்கப் போவதில்லை என்பதை நிச்சயமாக நம்பினோம். இந்தத் திருட்டு நடந்த பிறகு உடனடியாக இன்னொரு வாசலை மூடி விட்டார்கள்.

அடிப்படையில் இது மாதிரியான திருட்டுகள் எதாவது முடிவை நோக்கி வருகிறதா என்றெல்லாம் யோசிப்பேன். திருடப்படுவதால் நமக்குத் தெரிய வேண்டிய உண்மை எது என்றெல்லாம் யோசிப்பேன். ஒரு முறை மாடியில் உலர்த்திய மனைவியின் பட்டுப்புடவை திருட்டுப் போயிற்று. எனக்கு துணுக்கென்றது. ஏற்கனவே பயன்படுத்திய பட்டுப்புடவைதான். ஆனால் திருடுப் போகக்கூடாது, போய்விட்டது என்று நினைத்தேன். இந்தச் சமயத்தில்தான் மனம் எதாவது தொடர்புப் படுத்திப் பார்த்துக்கொண்டே இருக்கும்.

திருடுப் போயிற்று என்று நாங்கள் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இரண்டு போன்கள் வந்தன. முதல் போன் என் ஒன்றுவிட்ட சகோதரனின் (பெரியப்பாவின் புதல்வன்) பையன் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொள்ளும்போது ஜம்ப் பண்ணும்போது தண்ணீர் ஆழம் இல்லாததால் தலையில் அடிப்பட்டு மரணம் அடைந்த செய்தியைச் சொன்னார்கள். கேட்டவுடன் பதிறிப் போய்விட்டோம். உடனே இரண்டாவது போன் வந்தது. என் அலுவலக நண்பனிடமிருந்து. தெருவில் மருத்துவமனைக்குச் சென்ற அவன் அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் என்ற செய்தி. என்னடா இது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்தேன். அன்று சனிக்கிழமை. பட்டுப் புடவை திருடு போனதற்கும், இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமாவென்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த மூன்றும் வெவ்வேறு நிகழ்ச்சிகள்.

அந்த மரண நிகழ்ச்சிக்கு நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்றோம். தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி ஒன்றுவிட்ட சகோதரினின் பையன் படுத்திருந்தான். பெரியப்பா பையனிடம் சென்று ஆறுதல் சொல்ல முற்பட்டேன். அவன் உடனே, ‘நீ வருத்தப்படாதே,’ என்றான். பெரியப்பாப் பையன் கொஞ்சங்கூட அழவில்லை. ஆனால் அவன் மனைவியோ பயங்கரமாக புலம்பிக் கொண்டிருந்தாள். அதேபோல் அலுவலக நண்பனின் வீட்டில், அவன் அப்பாதான் அந்தக் குடும்பத்தில் முக்கியமானவர். அவருடைய எதிர்பாராத முடிவு அந்தக் குடும்பத்திற்குப் பெரிய அடி. அதுவும் தெருவில் அனாதையாய் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது. அப்பாவின் மரணத்திற்குப் பிறகு என் நண்பன் தன் இயல்பான நிலைக்குத் திரும்ப பல மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அலுவலகம் முடிந்து நாங்கள் இருவரும் மின்சார வண்டியில் செல்வோம். மனம் கலங்கியிருந்த அவனை தினமும் தேற்றுவேன். என்கூட வருவதில் பிரியப்படுவான். இந்த இரண்டு மரணங்களையும் பட்டப் பகலில் பட்டுப்புடவை திருடு போனதற்கும் நான் முடிச்சுப் போடுவேன்.

தெரு முனையில் வயதான ஓய்வுப்பெற்ற ஆசிரியையை நகைக்காக கொலை செய்த விஷயத்திற்கு வருகிறேன். அந்த நகையைக் கொள்ளை அடிக்க வந்தவன், முதலில் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்திற்காக வந்திருக்க மாட்டான். இது என் யூகம். ஆனால் பணத்திற்காக கொலையைக் கூட துச்சமாக நினைப்பவனாக இருப்பான். நகையை எடுக்க முயற்சி செய்யும்போது, ஆசிரியை எதிர்ப்பு தெரிவித்திருப்பார். அப்போது திருட வந்தவன் வேறு வழியில்லாம் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பான். இந்த நிகழ்ச்சியை நாம் பத்திரிகையில் படிக்கும்போது ஒருவித மன அழற்சி ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். என்ன பாடுபட்டிருப்பார்கள். பத்திரிகையில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் வெளிவருகிற செய்தி ஒரு கலைப் படைப்பாக மாறும்போது பலவித உணர்ச்சிக் கோளங்களைப் பிரதிபலிக்கின்றன. இக்கொலையை அடிப்படையாகக் கொண்டு ராம்காலனி என்ற குறுநாவல் ஒன்றை எழுதியிருக்கிறேன்.

பல மாதங்கள் கழித்து போலீஸ் அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடித்து அவன் புகைப்படத்தை பேப்பரில் வெளியிட்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் எனக்கு போலீஸ் மீது ஒருவித மரியாதையே ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த ஒரு இரட்டைக் கொலையும் அவர்கள் துப்பு கண்டுபிடித்துவிட்டார்கள்.

ரொம்ப மாதங்கள் கொலை செய்யப்பட்ட ஆசிரியை வசித்த வீடு பாழடைந்து காணப்பட்டது. எனக்கு பேய் வீடு மாதிரி தோற்றம் தரும்.

இப்போது பாண்டிச்சேரி அன்னையின் பேரில் அந்த வீடு ஒரு அடுக்ககமாக மாறி பலர் குடியும் வந்துவிட்டார்கள். இதை எதற்கு சொல்ல வருகிறேன். போலீஸின் திறமை.

சமீபத்தில் உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தைப் பார்த்தேன். அதில் போலீஸ் அதிகாரியாக வரும் மோகன்லால் தத்ருபமாக ஒரு போலீஸ அதிகாரிபோல் காட்சி தருகிறார். மிகையில்லாமல் அவர் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.

ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்

கதவு

இது ஒரு காலம்
யாராலும்
நிச்சயம் கொள்ள இயலவில்லை
எதைப்பற்றியும்
கதவை
திறந்து வைப்பதா அல்லது
மூடி விடுவதா என்பதையும் கூட

ஒவ்வொரு முறையும்
கதவைத் திறக்கும் போதும்
சிறிதே தயங்குகின்றன கைகள்

மீண்டும் மீண்டும்
நிச்சயம் கொள்ள முடியாமலே போய்விடுகிறது எனக்கு

நான் இருப்பது

கதவுக்கு
இந்தப் பக்கமா அல்லது
அந்தப் பக்கமா?

(ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

எதையாவது சொல்லட்டுமா….1

நான் எதையாவது எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன். அப்படி எழுதும்போது யார் மனதையாவது புண்படுத்தாமல் இருக்க வேண்டும். சிலசமயம் என்னை அறியாமல் யார் மனதையாவது புண் படுத்தி விடுவேன். பேசும்போது கூட சிலசமயம் அப்படி நடந்து விடுவதுண்டு. ஒரு சமயம் என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. நான் அவரைப் பார்த்து,’எப்படி அப்பா இருக்கு உடம்பு’ என்று கேட்டேன். அவருக்கு செம்ம கோபம். உடம்பு எப்படியிருக்குன்னு கேட்கறானே, என்ன திமிர் இருக்குமென்று.

அது போகட்டும், நான் சொல்ல வேண்டிய விஷயம் வேறு. எஸ் சண்முகத்தை நான் நடத்தும் கூட்டத்திற்கு அழைத்தேன். வருகிறேன் என்று சொன்னாலும் கூட அவரால் வர முடியாது என்பதை ஊகித்துதான் அப்படி அழைத்தேன். அப்போதுதான் அவர் சொன்னார் நாகார்ஜுனன் எழுதிய ‘நளிர்’ என்ற புத்தகத்திற்கு நடத்தப்போகும் கூட்டத்தில் அக்டோபர் 2 ஆம்தேதி அவர் பேசப் போவதாக..நாகார்ஜுனன் இந்தியாவில்தான் இருக்கிறார் என்றும் கூறினார். ஆனால் சென்னையில் இல்லை. கேராளாவில் இருக்கிறார் என்றார்.

லண்டனில் இருக்கும் நாகார்ஜுனன் இந்தியாவிட்டு திரும்பவும் லண்டனுக்குப் போவதற்குமுன் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். சென்னையில் நாகார்ஜுனன் இருக்கும்போது நானும் அவரும் இலக்கியக்கூட்டங்கள், சினிமா க்ளப்புகளில் சந்திப்பது வழக்கம். விருட்சம் இலக்கியக் கூட்டங்களிலும் அவர் பேசியிருக்கிறார். அவர் லண்டன் போனபிறகு தொடர்பு இல்லை. அவர் சென்னைக்கு வருகிறார் என்பது கூட தெரியாது. மேலும் நானும் சென்னையில் இல்லாமல 4 ஆண்டுகள் மயிலாடுதுறையில் இருந்தேன்.

அவருடைய வலைத்தளத்தில் நாகார்ஜுனன் 3 கூட்டங்களில் பேசுவதாக அறிவிப்பு விட்டிருந்தார். இதில் காந்தி ஜெயந்தி கூட்டத்தில்தான் கலந்துகொள்ள முடியுமென்று தோன்றியது.

அவருடைய புத்தக விமர்சனக் கூட்டம் நான் கூட்டம் நடத்தும் எல்எல்ஏ பில்டிங்கில்தான் நடந்தது. பேசவந்தவர்களில், எஸ்.சண்முகம், வீ அரசு (இவர் சிறுபத்திரிகைகள் குறித்து எதாவது கூட்டம் பல்கலைக் கழகத்தில் நடத்தினாலும் விருட்சத்தைச் சேர்க்க மாட்டார்.), தமிழவன் முதலியவர்கள் நளிர் புத்தகத்தைப் பற்றியும் நாகார்ஜுனன் பற்றியும் பேசுகிறார்கள்.

பொதுவாக ஒரு கூட்டத்திற்குப் போவதற்குள் என்னை தயார் படுத்திக்கொள்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். அன்று அப்படித்தான் நடந்தது. 2011ல் நானோ கார் வாங்கப் போவதால், கார் ஓட்ட காலை நேரத்தில் கற்றுக்கொள்ள சென்று விட்டேன். பின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு எல்எல்ஏ பில்டிங் நோக்கி பயணித்தேன். பின்தான் தெரிந்தது தி நகர் வழியாகச் செல்வது கடினம் என்பது. பின் சுற்றி தேனாம்பேட்டை வழியாக அண்ணா சாலையைப் பிடித்து எல்எல்ஏ பில்டிங் வந்தேன்.

வண்டியை வைத்துவிட்டு மாடியை எட்டியபோது எனக்கு சந்தோஷம். பலரைச் சந்தித்தேன். அஜயன் பாலா, முத்துக்குமார், டி கண்ணன், வளர்மதி, குட்டி ரேவதி என்றெல்லாம். உள்ளே நுழைந்தபோது கோணங்கி பேசிக்கொண்டிருந்தார். இவர் எழுத்துக்கும் இவர் பேச்சுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எளிதில் புரியாது என்பதுதான். நாகார்ஜுனுனைப் பார்த்தேன், சண்முகத்தைப் பார்த்தேன், வீ அரசைப் பார்த்தேன், தமிழவனைப் பார்த்தேன்…கோணங்கி பேசிக்கொண்டே இருந்தார். என்னால் அவர் பேச்சைப் புரிந்துகொண்டு நிதானத்திற்கு வரவே முடியவில்லை.

பின் அவர் பேசி முடித்துவிட்டு என் சீட்டிற்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார். வலது பக்கத்தில் கோணங்கியும், இடது பக்கத்தில் குட்டி ரேவதியும் உட்கார்ந்து இருந்தார்கள். இலக்கியக் கூட்டங்களில் ஒரு பொதுவான விதி உண்டு. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஹலோ சொல்லும் வழக்கம் உடனடியாக வராது. ‘உங்களைக் கூட்டத்தில் பார்த்தால் கண்டுகொள்ளவே மாட்டேங்கறீங்க..’ என்று வைதீஸ்வரன் பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். எனக்கோ ஆச்சரியமாக இருக்கும். இப்போதுதான் தோன்றுகிறது அது இலக்கியக்கூட்டத்தின் விதி என்று.

கூட்டம் முடியும் நேரத்தை நெருங்கியதால், சண்முகம் 15 நிமிடத்தில் பேசும்படி ஆகிவிட்டது. புத்தகத்தைப் பற்றியும், நாகார்ஜுனன் பற்றியும் மாறி மாறி பேசிக்கொண்டே போனார் சண்முகம்.

அடுத்தது தமிழவன் பேச ஆரம்பித்தார். எனக்குத் தெரியும் தமிழவன் எப்படிப் பேசுவார் என்று. நிதானமாக நாகார்ஜுனன் பற்றியும், பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் பற்றியும், இலக்கியத்தில் ஈடுபட்டு வரும் பல இலக்கிய நண்பர்களைப் பற்றியும் சுவாரசியமாகப் பேசினார். தமிழில் தீவிர எழுத்தைப் பற்றி நன்றாகப் பேசக் கூடியவர்களில் அவரும் ஒருவர். அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை கவர்ந்தது. நாகார்ஜுனன் நாவல்கள் எழுதுவதில்லை. ஆனால் அவருக்குப் பதிலாக கோணங்கி எழுதிவிடுகிறார் என்று.

பல இலக்கிய நண்பர்கள் நாகார்ஜுனுனைப் பார்க்கவே வந்திருந்தார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக லண்டனில் வசிக்கும் நாகார்ஜுனுனைப் பார்க்கும்போது அவர் பெரிதாக மாற்றம் அடையாமலே இருந்ததாகப் பட்டது. அவர் எழுந்து பேசும்போது அவர் வழக்கம்போல் எப்படிப் பேசுவோரோ அப்படியே பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்மொழியுடன் தொடர்பு இல்லாமல் போனதால், தொலைபேசி மூலம் தமிழ்நாட்டில் உள்ள நண்பர்களுடன் பேசியதாகக் குறிப்பிட்டார். வலைத்தளத்தில் தீவிரமாக நாகார்ஜுனன் எழுதிய பல விஷயங்கள் புத்தக உருவத்தில் வெளிவந்தள்ளது. கிட்டத்தட்ட 527 பக்கங்கள் கொண்ட நளிர் புத்தகம். லண்டனிலிருந்து தொலைபேசியில் அவர் பேசும்போது வலைத்தளத்தைப் பற்றி பல விஷயங்களைக் குறிப்பிடுவார். வலைத்தளத்தில் தினமும் எதாவது எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்ற நியதியை அவர் கடைப்பிடித்து வந்தார். நளிர் புத்தகம் அவருடைய உழைப்புதான். அவர் தமிழ் சற்று வித்தியாசமாக இருக்கும். நளிர் புத்தகத்தில் 181ஆம் பக்கம் திருப்பியபோது கண்ணில் பட்ட ஒரு வரி ‘பிறகு ஜானுடன் பார்த்தது இன்னும் சில படங்கள்.’ இதை ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்ல வந்தேன்.

லண்டனிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் நாகார்ஜுனுனைப் பார்த்து ஹலோ சொல்ல நினைத்தேன். அவர் கூட்டம் முடிந்து திரும்பும்போது சொல்லலாம் என்று நினைத்தேன். அவர் நான் வந்ததைக் கூட கண்டுகொள்ளவில்லைபோல் தோற்றம் தந்தார். பல இலக்கிய நண்பர்கள், பல விசிறிகள் அவருக்கு. கூட்டம் முடிந்து வெளியே வந்து அவருடைய நளிர் புத்தகத்தை விலைக்கொடுத்து வாங்கினேன். பின் அவரைப் பார்த்து ஹலோ சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்தேன். பார்த்தல் அவரைச்சுற்றி வேறு சிலர் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நகர்ந்தபிறகு நான் ஹலோ சொல்வதற்குள், நாகார்ஜுனன் நகர்ந்து வேகமாக முன்னால் போய்விட்டார்.

மற்ற நண்பர்களுடன் நான் பேசிக்கொண்டே வந்தேன். எல்எல்ஏ பில்டிங் வாசலில் என் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது வாசலில் பேசிக்கொண்டிருந்த நாகார்ஜுனனைப் பார்த்து ஹலோ சொல்ல நினைத்தேன். அதற்குள் அவர் அங்கு இல்லை. ஆனால் மற்ற நண்பர்கள் இருந்தார்கள். கோணங்கியைப் பார்த்து, ‘என்ன உங்கள் எழுத்துடன் நெருங்கி வர முடியவில்லை,’ என்றேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். அவருடைய பேச்சு கூட சிலசமயம் கவித்துவமாக இருக்கும். அவருடைய நாவல் ஒன்றை வாங்கி நிதானமாக வாசிக்க முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.

ஆழி பதிப்பகம் நிதானமாக நல்ல தரமான புத்தகங்களை குறுகிய காலத்தில் அதிகமாகக் கொண்டு வந்துள்ளது. நிதானமாக வாசிக்க வேண்டிய கோணங்கி நாவலையும், வாசிக்க வாசிக்க பக்கங்கள் குறையாத பா வெங்கடேசனின் நாவலையும் எப்போதுதான் தொடங்கப் போகிறேன் என்பது தெரியாது. நான் எதையாவது சொல்லட்டுமா என்று இப் பகுதியில் ஆரம்பித்திருக்கிறேன். சரி, நீங்கள் இதைப் படித்துவிட்டு எதையாவது சொல்லி விடாதீர்கள்.

மழைக்குப்பின்……..

இந்தக் கணம்தான்
உருவானதுபோல் எல்லாம்

நான் பார்க்க பார்க்க
முளைத்தன மரங்கள்

படர்ந்து சென்றது வானம்
எதிலும், எங்கும்

காற்றில் பழுத்தன பறவைகள்
மனிதர்களும்
இப்போதுதான் தோன்றியதுபோல்
எங்கெல்லாமொ…..எப்படியெல்லாமோ

மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும்
விதைத்துவிடு
மனதில் தோன்றியதை
ஆகாயத்தைக் கூட

சிருஷ்டித்துக் கொள்
விரும்பியவற்றை
மரம், பறவை, வீடு
ஏன் மனிதனையும் கூடத்தான்

தமிழில் : திலீப் குமார்

(ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

செப்டம்பர் மாத இலக்கியக் கூட்டம்

சா கந்தசாமியைத் தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம். எதைப் பேசினாலும் கருத்து முரண்பாடு இக் கூட்டங்களில் முக்கியமான அம்சம். அப்படி இருந்தால்தான் கூட்டம் சிறக்கும். பேசுபவரின் கருத்தையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது இல்லை. பேசுபவர் புதிய எல்லையில் கேட்பவரைக் கொண்டு செல்கிறார். அதை வைத்துக்கொண்டு மற்றவர்கள் சிந்திக்கிறார்கள்.

யவனிகா ஸ்ரீராமை தற்போதைய கவிதைகளைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டேன். அவர் இன்றைய நிலையில் கவிதைகள் எப்படியெல்லாம் வெளி வருகின்றன என்று பேச ஆரம்பித்தார். இன்றைய கவிதையில் குடும்பம் இல்லை என்றார். யாரும் குடும்பத்தைப் பற்றி கவிதைகள் எழுதுவதில்லை என்றார். குடும்பத்தோடுதான் எல்லோரும் இருக்கிறோம். ஆனால் யாரும் குடும்பத்தை கவிதையில் கொண்டு வரவில்லை என்றார்.

என்னால் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்னைப் போன்ற பலரின் கவிதைகளில் குடும்பம்தான் கருப்பொருளாக உள்ளது. என் ஆரம்ப கவிதையில் அம்மா இல்லாத குடும்பத்தைப் பற்றி எழுதியிருப்பேன். வயது முற்றிய பாட்டியை முற்றத்தில் தூக்கி எறிவதைப் பற்றி கவிதை எழுதியிருப்பேன். மேலும் ஆர்.ராஜகோபாலன், ஞானக்கூத்தன், எஸ் வைத்தியநாதன், காளி-தாஸ் முதலிய கவிஞர்கள் குடும்பத்தைப் பிரதானப் படுத்தி எழுதியுள்ளார்கள். எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.

தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம், இன்றைய கவிதைகளில் தத்துவம், பெரிய கோட்பாடுகள் போன்றவை இல்லை என்றார். எப்போதோ கவிதையிலிருந்து தத்துவம், கோட்பாடுகள் போன்றவை உதிர்ந்து போய்விட்டன. எனக்குத் தெரிந்து ஒரு கவிஞர் ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் ஆழ்ந்து கவிதை எழுதுவதிலிருந்து விலகியும் போய்விட்டார். உண்மையில் தத்துவம் கவிதை எழுதுபவருக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

யவனிகா ஸ்ரீராம் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம். கவிதையில் பாலியல் சமாச்சாரங்கள். இப்போதைய கவிதைகளில் இதையெல்லாம் தைரியமாக எழுதுகிறார்கள். முன்பு மறைத்த விஷயம் இப்போது வெளிப்படையாக இடம் பெற ஆரம்பித்து விட்டது. குறிப்பாக பெண் கவிஞர்கள் முன்பைவிட இப்போது அதிகம் எழுதுகிறார்கள். இக் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். முன்பு மூடி மறைத்த விஷயமெல்லாம் கவிதையின் பாடுபொருளாக மாறி உள்ளது. இதை ஆபாசம் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

முன்பெல்லாம், கவிதையில் படிமம் முக்கிய அம்சமாக இருந்தது. இப்போது எழுதப்படுகிற கவிதைகளுக்கு படிமம் தேவையில்லை என்றார் யவனிகா ஸ்ரீராம். கவிதையின் இந்தத் தன்மையை க.நா.சு எப்போதோ தகர்த்துவிட்டார் என்றேன் நான். அவர் கவிதைகளில் படிமம், உவமை எதுவுமில்லை. கவிதையைப் படிக்கிறபோது தென்படுகிற இறுகியத் தன்மை எப்போதோ போய்விட்டது.

கூட்டம் முடியும்போது மணி இரவு 9 ஆகிவிட்டது. இறுதியில் யவனிகா ஸ்ரீராமின் கவிதை வாசிப்புடன் கூட்டம் இனிதாக முடிந்தது. என்க்கு ஞாபகத்தில் உள்ள இந்த விஷயங்களை உடனடியாக எழுதாவிட்டால், பின்னால் மறந்து போய்விடும்.

மிகக் குறைவான பேர்கள் கூட்டத்திற்கு வந்தாலும், ஒரு நல்ல அனுபவமாக இக்கூட்டம் போய்க் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

வந்தமர்ந்து கொண்டது பூனை

கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை
அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில்
அர்த்தமுணர நினைக்காது
வால் வளைத்து ஓரமாய்த்தான்
சுருண்டு படுத்துள்ளது
உணரலில்லாது நிதானமாய்
வரி தாண்டியிருக்கக்கூடும்
தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

செப்டம்பர் மாத இலக்கியக்கூட்டம்

நவீன விருட்சம் செப்டம்பர் மாதக் கூட்டம் 27.09.2009 மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு ககஅ பில்டிங் சென்றேன். சுத்தமாக கூட்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதில் பலமான நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம். மழை. அப்படி யாரும் வராவிட்டால் கொடுத்த காசுக்கு (ரூ.250) 3 மணி நேரம் அங்கு தனியாக இருந்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். நான் உள்ளே நுழைந்தவுடனே மழை பிடித்துக்கொண்டது. லாவண்யா என்கிற என் நண்பர், “நான் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன். மழை பிடித்துக்கொண்டது. வீட்டிற்குப் போகட்டுமா?” என்று கேட்டார். “வரவே வேண்டாம். வீட்டிற்குப் போய்விடுங்கள்,” என்றேன். பழைய அழகியசிங்கராக இருந்தால், கூட்டம் ஏற்பாடு பண்ணிவிட்டு யாரும் வரவில்லை என்றால் பெரிதாக கவலைப்படுவேன். இப்போதோ தெளிவாக இருக்கிறேன். இந்தக் கூட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் மனதிற்குள் வைத்திருக்கிறேன். பதில் என்ன தெரியுமா? வெறுமனே.

இக் கூட்டத்தில் பேச சா கந்தசாமியையும், யவனிகா ஸ்ரீராமனையும் கூப்பிட்டேன். சா கந்தசாமி சிறிது நேரத்தில் வந்துவிட்டார். ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டேன். அவரைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. எல்லாவற்றையும் எளிமையாக சிந்திப்பார். சாதனை மன்னர். ஆனால் பந்தா இல்லாமல் சாதாரணமாக இருப்பார்.
உடனே பேச ஆரம்பித்துவிட்டார். யாரும் வராவிட்டால் அவரைப் பேட்டிகண்டு விருட்சத்தில் போட்டுவிடலாமா என்று நினைத்தேன். என்னுடைய டேப் ரெக்கார்டர் மக்கர் பண்ணுகிறது என்பதை அப்போதுதான் கண்டுபிடித்தேன். போன கூட்டத்தை நான் ரிக்கார்ட் பண்ணியதெல்லாம் வீணாகப் போய்விட்டது. ஃபேன்களின் சப்தம் மனிதர்களின் சப்தங்களை பதியவிடாமல் செய்து விட்டது. கூட்டத்தில் பதியவிடாமல் 2 வாரங்கள் கம்ப்யூட்டர் மக்கர் செய்துவிட்டது. அதனால் போன கூட்டத்தை பதிவு செய்ய முடியவில்லை. மேலும் என்னுடைய மெமரி ரொம்ப வீக். உடனே ஞாபகத்திலிருந்து பதிவு செய்யாவிட்டால் எல்லாம் தப்பாகப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. மௌனி என்ற எழுத்தாளரைப் பற்றி யாருக்காவது தெரியுமா? அவர் நூற்றாண்டு கடந்து போய் 2 ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் எழுதியது மொத்தமே 24 கதைகள்.

மௌனியைப்பற்றி எப்படிப் பேச்சு வந்தது. பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்தில் உட்கார்ந்துகொண்டு நானும் ஞானக்கூத்தனும் பேசிக்கொண்டிருந்தோம். ‘மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மௌனியைப் பற்றி கூட்டம் நடத்த வேண்டுமென்று கூறினார் ஞானக்கூத்தன். உடனே மௌனி என் தலைக்குள் நுழைந்துவிட்டார்.

சா கந்தசாமி, கவிஞர் வைதீஸ்வரன் போன்றவர்கள் மௌனியை நேரில் சந்தித்திருக்கிறார்.

‘மௌனி ஒரு உற்சாகமானவர். என்னைப் பார்த்தாலே போதும், கந்தசாமி என்று கத்திக்கொண்டு அவர் வீட்டு சமையலறை வரைக்கும் அழைத்துக்கொண்டு போவார். உடனே உபசரிக்காமல் இருக்க மாட்டார்…..அவருக்கு எத்தனையோ துன்பம்… ஒரு பையன் டிரெயினில் அடிப்பட்டு இறந்து விட்டான்….இன்னொரு பையனுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது….அவர் ஒண்ணும் சம்பாதிக்கலை….சாதாரண மெடில் க்ளாஸ் குடும்பம்…அவர் எழுத்தில எந்த அரசியலும் இல்லை..அவர் முற்போக்கும் இல்லை..பிற்போக்கும் இல்லை…
கந்தசாமி மௌனியை மட்டும் பேசவில்லை வேற சிலவற்றையும் பேசினார். “நாமெல்லாம் இங்கே கூடியிருக்கோம். ஆனா நாமெல்லாம் தனித்தனியா இருக்கோம். பொதுவா நாமெல்லாம் மனிதர்கள்..”

“பி எஸ் ராமையா மௌனியைப் பார்க்கும்போது அவர் நோட்டில் கதைகள் எழுதி வைத்திருந்தார். அந்த நோட்டிலிருந்துதான் கதைகளை மணிக்கொடியில் ராமையா பிரசுரம் செய்தார்…”

“மௌனி என்கிற பெயரைக்கூட ராமையாதான் அவருக்குவைத்தாராம்,” என்றேன் குறுக்கே நான்.

“ஆமாம். அவர் இயற்பெயர் மணி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு மௌனி எங்களால் கொண்டுவந்த கசடதபற பத்திரிகையில் ஒரே ஒரு கதை எழுதியிருக்கிறார். மௌனி கதைகளில் எந்த ஜாதி என்பது கிடையாது. ஏன் பெயரே கிடையாது…எல்லாரும் மனிதர்கள்…மௌனி மாதிரி இன்னொருத்தர் கதை எழுத முடியாது…”

“ஆனால் கசடதபறவில் பல எழுத்தாளர்கள் மௌனியைப் படித்து கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்காமல் பல கதைகள் வெளிவந்தன…”என்றேன்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேவக்கோட்டை மூர்த்தி,”நான் கூட யாரையாவது பார்த்தால் இரக்கப்பட்டு எதாவது கொடுக்கிறேன். மனிதாபிமானம் இன்று எல்லாரிடமும்தான் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு மௌனியை எடை போட முடியாது. அவர் படைப்புகளைப் பற்றிதான் நாம் பேச வேண்டும்.. கந்தசாமி அதுமாதிரி பேசவில்லை என்று தோன்றுகிறது..”

தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த சாந்தாராம் என்பவர் மிகச் சுவாரசியமாய் ராமையாவைப்பற்றி பல தகவல்களைத் தெரிவித்தார். “வயதான படைப்பாளிகள் மூவரை ஒரு பத்திரிகை பேட்டி கண்டது. அப்பேட்டியை உடனடியாக அப்பத்திரிகை பிரசுரம் செய்யவில்லை. அப்படி கிடப்பில் போட்டுவிட்டது. பல மாதங்கள் கழித்து ராமையா இறந்தபிறகு, அப்போதுதான் பேட்டி கண்டதுபோல் பிரசுரம் செய்தது,”என்றார்.

அவர் சொன்ன இன்னொரு தகவல். “ராமையா முதலில் எதுவும் எழுதவில்லை. மணிக்கொடியில் எல்லோருடைய படைப்புகளைப் பிரசுரம் செய்ய செய்ய அவரும் எழுதுவதில் தூண்டுதல் பெற்று எழுத ஆரம்பித்தார்.”

எஸ் சுவாமிநாதன் பேசும்போது,”மௌனியைப் பற்றி சரியான இலக்கியத் தடம் உருவாகவில்லை. ஆனால் தமிழில் மௌனியைப் போல் ஒருவர் கிடையாது. அவர் எழுத்தில் எந்த வருணனையும் கிடையாது. அனாவசியமாய் ஒரு வார்த்தை கிடையாது… அவர் மனதிற்காகத்தான் எழுதினார். இன்னும் அவர் படைப்புகளைப்படித்து ஆராய வேண்டும்…இது போதாது என்றார.”

வைதீஸ்வரன்,”மௌனி அவர்படைப்புகளை மட்டும்தான் சொல்வார்… மற்ற படைப்பாளிகள் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார், என்றார்.
(இன்னும் தொடரும்)

பொம்மை செய்யப் பழகும் குயவர்கள்

வயலோர நீர்த்தொட்டியின் நிழலும் கலங்கிய குளத்து நீரின் சுவையும் பாதங்களை கறையாக்கும் செம்மண் பாதைகளும் தின்னத் தின்னத் திகட்டாத பனங்கிழங்கும், பனஞ்சுளையும் பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன கோடை விடுமுறையின் வெக்கையான பொழுதுகளும் நடசத்திரங்கள் வந்து குதித்து விளையாட ஆசைப்படும் கண்ணாமூச்சி ஆட்டங்களும் பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில் பேரின்ப பேரானந்தத்தை அடைந்துவிடும் ஐம்பொறிகளும் பணத்தை வைத்து எவரையும் எடைபோடத் தெரியாத பளிங்குகளாய் உருளும் பால்யவெளிப் பயணங்களும் அனைவரையும் பிள்ளையாராய் பிடிக்க நினைத்து குரங்காக்கிய பள்ளியும்,சமூகமும்,ஊரும்,நாடும் ஒரு சில பிள்ளையாருக்காக குரங்கான நாங்களும்…

சிங்கம் ——-


சிங்கம் என்றால்
சிறுவயது முதலே
எனக்கு பயம்.
கதை கதையாக கேட்டிருக்கின்றேன்.
சிங்கம் என்று சொல்லி
ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல்
வாங்கிக்கொள்வேனாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
கூரான நகங்களால்
மான்களின் வயிற்றை
கிழித்துண்பதை பார்த்து
நடுங்கியிருக்கின்றேன் பலமுறை.
அடிக்கடி எனக்குள் வியர்க்கும்.
என்னை தின்றுவிடுமோ
என்னும் பயம்.
பலநாள் கழித்து
பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன்.
வண்டலூர் மிருகக்காட்சிசாலையில்
முடிக்கொட்டி,உடல்மெலிந்து
சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை
எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால்.
இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக.
என்னை தின்றிருந்தால் கூட
வந்திருக்காது இந்த பயம்.

சில குறிப்புகள்

சமீபத்தில் ஒரு பிரயாணத்தின்போது நான் படித்தப் புத்தகம் மகேஷ்பட் எழுதிய A Taste of லைப். இப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களைப் பற்றி விவரிக்கிறது. மகேஷ்பட், லாறி, சூசைன் மூவர்தான் கடைசிவரை யூ ஜி யைப் பார்த்துக்கொள்கிறார்கள். யூஜிக்கு அவர் மரணம் பற்றி நிச்சயம் தெரிந்து விடுகிறது. அவர் பார்க்க விரும்புகிற நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பார்க்கிறார்கள். எல்லோரையும் உடனே உடனே போகவும் சொல்லி விடுகிறார். இதாலியில் உள்ள வலேக்ராஸியா என்ற இடத்தில் அவர் மரணம் நிகழ்கிறது.

அவருடைய மரணம் குறித்து அவரிடமே உரையாடுகிறார்கள்.

“நீங்கள் இறந்தபிறகு உங்கள் உடலை என்ன செய்வது?” என்று கேட்கிறார்கள்.

“தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்,”என்கிறார் யூஜி.

தன்னை ஒரு அவதார புருஷராக யாரும் கருதக் கூடாது என்பதில் யூஜி கறாராக இருப்பவர். மரணத்திற்குப் பிறகு யாரும் கொண்டாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகேஷ்பட்டால் யூஜியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு யூஜியின் மரணம் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

இப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் யூஜியின் வாழ்க்கை வரலாறாகவும், இரண்டாவது பகுதி அவருடைய இறுதி நாட்களை விவரிப்பதாக உள்ளது. ஒரு கதைப் புத்தகம் படிப்பதைவிட மிக சுவாரசியமாக இப் புத்தகம் படிக்க சுவாரியசத்தைக் கூட்டிக்கொண்டு போகிறது.

பல நிகழ்ச்சிகளை இப் புத்தகம் விவரித்தக் கொண்டே போகிறது. ஞாபகத்திலிருந்தும் மகேஷ்பட் யூஜியைப் பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே போகிறார்.

“உன்னால் எனக்கு புகழ் கிடைத்ததா? அல்லது என்னால் உனக்குப் புகழ் கிடைத்ததா?” என்று மகேஷ்பட்டைப் பார்த்து யூஜி கேட்டதாக ஒரு தகவல் வருகிறது.

பர்வீன் பாபியால் ஏற்பட்ட உறவால் மகேஷ்பட் அவதிக்கு உள்ளாகிறார். அப்போது ஒரு கேள்வி எழுகிறது. யூஜி மகேஷ்பட்டை பர்வீன் பாபியிடமிருந்து காப்பாற்றினாரா அல்லது பர்வீன் பாபியை மகேஷ்பட்டிடமிருந்து காப்பாற்றினாரா என்ற சுவாரசியமான கேள்வி எழுகிறது.

மகேஷ்பட்டை யூஜி ரஜினீஷிடமிருந்து காப்பாற்றுகிறார். யூஜியிடம் கோபம்கொண்டு மகேஷ்பட் கொலைவெறியுடன் ஒருமுறை இரவு யூஜி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து கதவைத் தட்டுகிறார். “நாம் எங்கே போகப்போகிறோம்..உன் திட்டத்தை காலையில் வைத்துக்கொள்ளலாம்,” என்கிறார் யூஜி.

பங்களுரில் யூஜி ஒரு இடத்தில் வாடகைக் கொடுத்து வருகிறார். யூஜிக்குப் பிறகு அந்த இடத்தை என்ன செய்வது என்று அங்குள்ளவர் கேட்கிறார். யூஜியோ அதை விபாச்சார விடுதியாக மாற்றி விடலாம் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.

ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணர் என்று எல்லோரையும் வம்புக்கு இழுப்புவர் யூஜி. தான் சொல்வதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். புத்தகமாகக் கொண்டு வரலாம். இதற்கு ராயல்டி எதுவும் கிடையாது என்று கூறியவல் யூஜி.

யூஜியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர் படுகிற அவதியை துல்லியமாக மகேஷ்பட் விவரித்துக் கொண்டே போகிறார். கண்ணீர் மல்க. படிக்க வேண்டிய புத்தகம்