படித்ததில் பிடித்தது…..1

அழகியசிங்கர்

புதுமைப் பித்தன்

புதுமைப் பித்தன் இருந்த
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச்
செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து
எத்தனையோ நாட்கள் போக்கியாகி
விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி
புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது
ரெண்டு கப் காபிக்கு காசு இருக்கிறதா
என்று பார்த்துக்கொண்டு காபியும்
சாப்பிட்டுவிட்டு மீதி கையில் காசிருந்தால்
வீட்டுக்கும் எதாவது வாங்கிக்கொண்டு
பேசிக்கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது
இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின்
சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கிவிட்டு
காலையில் காபி சாப்பிட்டு விட்டுத்
திரும்புவதுண்டு !

இப்போது இந்த
வீட்டுக்குள்ளே போனால் எங்கள் பேச்சை
கேட்டிருந்த அந்த சாஷி பூதமான சுவர்கள்
எங்கள் பேச்சை எனக்குத் திருப்பி
சொல்லுமா…? சொல்வதாக வேண்டுமானால்
நான் கதை யெழுதலாம் சுவர்கள் பேசாது.
நன்றி கெட்ட சுவர்கள் – அவை வீட்டுக்
காரன் கட்சி தான் – எழுத்தின் அருமை
தெரியாதவை, உலகமே எழுத்துக்கு – நல்ல
எழுத்துக்கு எதிரியாய் இருக்கும்பொழுது  –
வேறு சொல்ல என்ன இருக்கிறது ..?

எழுதாதே எழுதாதே என்று உலகம் கூடி
சொல்ல நன்றாக எழுதினால் ஆபத்துதான்
அதற்கு நானே உதாரணம் என்று
புதுமைப் பித்தன் சொல்லிப் போனாரோ

என் சிந்தனை எங்கேயோ தொடர்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன