இராமானுஜர்



சைவர்கள் உடம்பில் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். இப்படிப்
பூசிக்கொண்டு யாத்திரை போகிறவர்களைப் பூச்சாண்டி என்று ஜைனர்கள்
வருணித்தார்களாம். குழந்தைகளை மிரட்டுவதற்குப் பூச்சாண்டியிடம் பிடித்துக்
கொடுப்பேன் என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.
நாமம் போடுவதென்றால் ஏமாற்றுவது என்று ஒரு சாரார்
அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். அது சைவ வைணவப் பூசல்களை ஒட்டி எழுந்த
தொடராக இருக்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் பிற போராட்டக்காரர்களும்
நாமம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் புதியதல்ல.
மார்ச் 2015ல் மட்டும் இப்படிப்பட்ட இரண்டு நிகழ்வுகளை நான்
தொலைக்காட்சியில் பார்த்தேன். கோவையில் ஒரு தி.மு.க. பெண் உறுப்பினர்
நெற்றியில் நாமம் வரைந்துகொண்டு மன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம் செய்தார்.
20.1.15 அன்று ஜாதிச் சான்றிதழ் பற்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பந்தலில்
நாமம் வரையப்பட்டிருந்தது. தி.மு.க. பொருளாளர் திரு. ஸ்டாலின் ‘நாமம் –
நாற்றிப் பதினொன்று – போட்டுவிட்டார்கள்’ என்றார். மேலும் மூன்று
விரல்களால் 111 என்று நெற்றியில் வரைந்து காட்டினார்.
இப்போது தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி வைணவப் பெரியார், தத்துவச்
சிந்தனையாளர் இராமானுஜரைப் பற்றிய தொலைக்காட்சித் தொடருக்குத் திரைக்கதை
எழுதுவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கல்கியில் அவர் பேட்டியும்
வெளியாகியுள்ளது. இனிமேல் நாமம் போடுவதைக் கேலி செய்ய வேண்டாம் என்று
தி.மு.க. தலைவர் தனது கட்சிக்காரர்களுக்குத் தெரிவிப்பாரா?
சோழனின் சபையில் ஒரு வங்காளப் பெரியவர் வைணவம் சொல்லும் கருத்துகளை
இராமானுஜருக்கு முன்னேயே கோடிட்டுக் காட்டினார் என்பதைக் கலைஞர் அறிவாரா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன