மகளிர் மட்டும் !

SMALL STORY 
ஜெ.பாஸ்கரன்
‘சே, என்ன டிராஃபிக்; மூணு கிலோமீட்டர் ஊர்ந்து வரதுக்கு மூணு மணி நேரம்’ சலித்துக் கொண்டே வந்தமர்ந்தாள் சுலோசனா – மேல்நாட்டு பெர்ஃப்யூம் அவளைச் சுற்றி மூன்றடிக்கு விரவியிருந்தது !
அன்று அவள் பள்ளித் தோழி காஞ்சனாவின் மகளுக்குத் திருமணம். இது போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் பள்ளித் தோழிகள் சந்தித்துப் பழங்கதைகளையும் புதுச் சுவையோடு பகிர்ந்து கொள்வது அவர்களது பழக்கம் !
காஞ்சனாவின் கணவர் பெரிய தொழிலதிபர் – டெல்லியில் சென்ட்ரல் மினிஸ்டர் வரைக்கும் நல்ல செல்வாக்கு. அவர்களது ஒரே பெண் அனன்யாவுக்கு, ஊரையே கூட்டித் திருமணம். மண்டபம் நிரம்பி வழிந்தது.
எங்கு பார்த்தாலும் பட்டுப் புடவை சர சரக்க, பெரிய்ய ஜன்னலில் இரண்டு நூல் கட்டின முதுகு தெரிய, வைரம் பள பளக்க,நுனி நாக்கு வார்த்தையும், பளிச்சென்ற பற்கள் உதட்டுச் சாயத்தில் படாத சிரிப்புமாய் மண்டபமே களை கட்டியிருந்தது !
‘ காஞ்சனாவுக்குப் பெரிய மனசுடீ – பொண்ணுக்கு  நூறு பவுன் நகையும், பதினைந்து கிலோ வெள்ளியும்னு பிரமாதமா கல்யாணம் பண்றா ‘என்றாள் சுலோசனா.
‘ ஆமாமாம், பட்சண சீரெல்லாம் கூட நூற்றி ஒண்ணு, ஏழு வகை சுவீட்டு, பத்து சுத்து சீர் முறுக்குன்னு சபை நெறைவா பண்றா – இது ஏஜிஎஸ் வந்தனா.
அமெரிக்கா மாப்பிள்ளை, பாத்த உடனேயே பொண்ண புடிச்சுப் போச்சாம் – அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம், அந்தப் பொண்ணுக்கும் அதிர்ஷ்டம்தான்னு வெச்சுக்கோ ‘ என்றாள் மீனா – அவள் வீட்டுக்காரன் பெரிய டிராவல்ஸ் கம்பெனி வெச்சிருக்கான், பெரிய கைதான்.
’அவரையும் சும்மா சொல்லக் கூடாது, காஞ்சனா கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டார்.- பொண்ணுக்கு என்னென்ன வேணுமோ, கேட்டு நீயே எல்லாத்தையும் செஞ்சுடுன்னுட்டாராம் – பொட்டி நெறையப் பணம், டிரைவரோட காரையும் கொடுத்தார் – இவ சூப்பரா எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணிட்டா – என்ன இருந்தாலும் காஞ்சனா ஸ்மார்ட் தான்’ என்றாள் சுலோசனா.
அவ ஸ்கூல் நாட்கள்ளேயே அப்படித்தானே – எல்லார்கிட்டேயும் பணம் கலெக்ட் பண்ணி, நல்ல கிஃப்ட்டா செலெக்ட் பண்ணி,க்ளாஸ் டீச்சருக்குப் பள்ளி ஆண்டு விழாவிலெ கொடுத்து அசத்திடுவாளே என்றாள் மீனா.
முகூர்த்தம் முடிஞ்சு, வந்த விருந்தினருக்கெல்லாம் ’மில்க் ஷேக்’ ஓடிக்கொண்டிருந்தது – ஆளுக்கொரு காகிதக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டு, அரட்டை தொடர்ந்தது..
‘ என்னடீ பண்றான் உன் பிள்ளை ,சாய்ரமேஷ் ? என்றாள் மீனா.
‘ ஃபைனல் இயர் – கேம்பஸ்லயே நல்ல வேலை கெடச்சிடுத்து. ஏகப்பட்ட பணத்தைக் கட்டி படிச்ச படிப்பு, வீணாகலை. பங்களூரோ, ஹைதராபாத்தோ, கிளம்பிடுவான். இவருக்கு ஒண்ணும் தெரியாது- எல்லாத்துக்கும் நான்தான் போகணும். சம்பாதிச்சா மட்டும் போதுமா இந்தக் காலத்திலெ – இந்த ஆம்பளைங்களுக்கு எங்கே இதெல்லாம் புரியுது? என்றாள் சுலோசனா.
‘ ஒரு வென்னீர் வெச்சுக்கத் தெரியாது- அது ஏன், அடுப்பே பத்த வெக்கத் தெரியாது ! ஏதோ ஆபீஸ் போய்ட்டு வந்துட்டா எல்லாம் தானா நடந்துடும்னு ஒரு நெனப்பு. வீட்டுக்கு வந்தா, காபி டிபன் ரெடியா இருக்கணும்- நாம்பதான் சமையல்காரியாட்டமா எப்பவும் அடுப்படியிலேயே வேகணும்… எப்போதான் இந்த மேல் சாவனிஸம் ஒழியுமோ’ அலுத்துக்கொண்டாள் வந்தனா.
எங்க வீட்ல கொஞ்சம் பெட்டர் ! காலையில் எழுந்து, பால் காய்ச்சி, டிகாக்‌ஷன் போட்டு, காபி தயார் பண்ணிடுவார்- அவருக்கு காலைல முதல் காபி குடிச்சாகணும், இல்லேன்னா அடுத்த வேலை ஓடாது – இது மீனா.
’ காலங்கார்த்தாலெ அப்படி என்னப்பா வேலை – வாக் போவாரோ?’ என்றபடி மில்க் ஷேக் ஒரு மிடறு விழுங்கினாள் வந்தனா..
‘ம்ஹூம், அதுக்கெல்லாம் அவருக்கு நேரமில்லப்பா; குளிக்கப் போறதுக்குள்ள, காய்கறி கொஞ்சம் நறுக்கி வெச்சிட்டுப் போவார் – குழந்தைகளைக் குளுப்பாட்டி, யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு அனுப்புற வேலையெல்லாம் இப்போ இல்லே – பெரிய குழந்தைகள் தானா காலேஜுக்கு போயிடறதுகள் ! என்றாள் மீனா.
இதையெல்லாம் கேட்ட சுலோசனாவுக்கு கொஞ்சம் வருத்தமாயிருந்தது – எல்லா வீட்டுக்காரரும் ஏதாவது உதவி செய்யறாங்க – நம்ம வீட்லேயும் ஒண்ணு இருக்கே, சதா ‘உர்’ ருன்னு மூஞ்சியெ வெச்சுண்டு- ஒரு துரும்ப எடுத்துப் போடாது1 எல்லாம் நம்ப வந்த வழி – கழிவிரக்கம் அவள் கண்ணில் தெரிந்தது.
‘ என்ன சுலோ,ஸைலெண்ட் ஆய்ட்டெ ? வீட்டு ஞாபகம் வந்துருச்சா ? இது எல்லா வீட்டுலேயும் நடக்கறதுதான், கவலைய விடு’ – என்றபடி வந்தனா காகிதக் கோப்பையை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள்.
’ நாளைக்கு மயிலாப்பூர் சபாவில ஒரு நாட்டிய நாடகம் அரங்கேற்றம் இருக்கு, வரயா போகலாம் ? வீடுதான் எப்பொவும் இருக்கே; யோசிக்காம வந்துடு’ என்றாள் ஆறுதலாய் வந்தனா.
‘ பாக்கலாம் வந்தனா, நாளைக்கு இவர் எங்கேயோ நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போகணும்னார் ‘
 ’ நீ போகலைன்னா எங்க கூட வாயேன் ‘  என்றாள் வந்தனா “நீயும்தான்”  என்றாள் மீனாவைப் பார்த்து.
தாலி கட்டி முகூர்த்தம் முடிந்த கையோடு மணமேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினர். பல வண்ணங்களில் சிறிதும் பெரிதுமாய் பரிசுப் பொட்டலங்கள் கை மாறின ! கேமரா பளிச்சிட,புன்னகையுடன், பட்டுப் புடவைக்குள் பூவையரும் பளிச்சென்று கண் மினுக்கினர் !
‘ஏய், எல்லோரும் சாப்பிட்டுட்டுப் போங்க  அப்புறம் கிளப்ல பாக்கலாம் ‘ என்றாள் காஞ்சனா அகமும் முகமும் மலர !( அந்தப் புது வைர மாட்டல் டாலடிக்குது – கண்ணைப் பறிக்குது !)
யூனிஃபார்ம் போட்ட ஆண்களும் பெண்களுமாக பந்திகளைக் கவனித்தனர். தள்ளு வண்டிகளில் வகை வகையாகப் பொடிகளும்,பொறியல் , கூட்டு என எல்லாம் கொண்டு வரப்பட்டு,இலைகளில் அணிவகுத்தன! இந்த விருந்தைப் பார்க்கும் எவனும் காசு கொடுத்தாலும், இந்தியா ஒரு ஏழை நாடு என்று ஒத்துக்கொள்ள மாட்டான்! பந்தி முடிந்து, பாதி இலைக்கு மேல் மீதம் வைத்துக்,காகித டவலில் கை துடைத்து வெளியே வந்தனர். ஐந்து வகை ஐஸ்கிரீம், நேர்த்தியாக வெட்டப் பட்ட பழ வகைகள் மற்றும் வெற்றிலைப் பாக்கு,இஞ்சி முறபா, காய்ந்த நெல்லிக்காய், கிராம்பு, என வாய் மணக்க விருந்து முடிந்தது !
கூப்பிய கையுடன் தாம்பூலப் பை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
போன் பண்ணுடீ, கிளப்புல பாக்கலாம் – மீனா காரில் ஏறிக்கொண்டே ‘பார்லருக்குப் போப்பா’ என்றாள் டிரைவரிடம்.
வந்தனா மந்தைவெளியில் உள்ள முன்னணி நடிகையின் தையற்கடைக்குக் கிளம்பினாள் !
காரில் வீட்டுக்குத் திரும்பினள் சுலோசனா !
தெரு முனையில் ஒரு சிறு கும்பல் – நிற்கமுடியாமல் தள்ளாடிய குடிகாரக் கணவனுடன் அவன் மனைவி சண்டை – கிழிந்து, கலைந்த அழுக்குப் புடவையில் தலைவிரி கோலமாய் அவள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள் ‘’ ஐயோ., வூட்லேர்ந்த துட்ட எல்லாம் இப்பிடிக் குடிச்சிட்டு வந்து நிக்கிறியே, நல்லா இருப்பியா நீ, நாசமாப் போவ “
அவிழ்ந்த லுங்கியுடன், கண்கள் சிவக்க, ஏதோ கெட்ட வார்த்தை சொல்லி, கையை ஓங்கி அடிக்க வந்தவன், தட்டுத் தடுமாறி தரையில் விழுந்தான் ! சாராய நெடியில் சிறுநீர் மணந்தது !
‘நாலு வூட்ல வேலெ செஞ்சி சேத்து வெச்ச காசையெல்லாம், குடிச்சி அழிக்கிறியே, அந்த மாரியாத்தா உன்னெ வாரிக்கினு போவாதா?’ அழுது புலம்பினாள் அவள்.
தெருக் கூச்சல் மெல்லக் காற்றில் கரைய, வீடு வந்து சேர்ந்தாள் சுலோசனா.- ‘என்ன மன்ஷனுங்க; இவன்களையெல்லாம்; அப்படியே கட்டிவெச்சி தோலை உரிக்கணும்’ பல்லைக் கடித்தாள் சுலோசனா.. தலை விரி கோலமாய் அலரிய அப்பெண்னின் முகம் மனதில் வந்து போனது.
காரிலிருந்து இறங்கியவள், ஃப்ளாட் வாசலில் வாட்ச்மேன் முனுசாமியின் மனைவி பொன்னாத்தாள் நிற்பதைக் கண்டாள். போன வாரம் அவள் கொடுத்த சில்க் காட்டன் புடவையை மிக நேர்த்தியாகக் கட்டிக்கொண்டு, மஞ்சள் முகம் மலர, பெரிய குங்குமப் பொட்டுடன் சிரித்தாள் பொன்னாத்தா.
‘என்ன பொன்னு, முனுசாமிக்கு சாப்பாடா ?’
‘ஆமாம்மா, வெளீல துண்ணா ஒத்துக்கறதில்லை; வவுத்து வலீன்றாரு. பீடியவு வுட மாட்டேன்றாரு; பொழுதன்னைக்கும் வேல பாக்குறாரு- அதான், வூட்லெயே ஆக்கிக் கொண்டாந்தேன்’  என்றாள். ’இப்படியும் இந்தக் காலத்தில் பெண்கள்’ என்று வியந்தவாறே, லிப்டில் மாடியேறி, காலிங் பெல் பட்டனை ஒற்றினாள்.
கதவு ஒரு ‘கிளிக்’ குடன் திறந்தது !
“ ஹை சுலோ, நல்லா நடந்துதா கல்யாணம் ?” என்றபடி உள்ளே சென்றான் அவள் கணவன். ஹாலில் சோபாவில் சாயுமுன் கேட்டது உள்ளிருந்து சமையல்காரரின் குரல், “ மாமி, காபி ரெடி ! ”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன