வேர் பிறழ்ந்த மனதின் பலிபீடம்


ரேவா


பெரும் மனப்பிறழ்வுக்கு பிறகு
பாவனையில் எந்தவொரு பதட்டமும் இல்லையென்ற
தொனியின் பலத்தோடு வலம் வருகிற

எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம்

நீங்கள் அறிந்திராதபடி

அடிமாட்டைப் போல் அலைக்கழிக்கும் பிரியங்களுக்கு
கசாப்புக் கடைகளின் ரத்தவாடை
பழகி விட்ட படியாலே
புன்னகையோடு 
தலைவெட்டப்படும் கணத்திற்கு காத்திருக்கும்

எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம்

அவருக்கே தெரியாதபடி

மொத்தமாய் அடைக்கப்படும் இடத்திலெல்லாம்
ரகசியமெனும் ஈனஸ்வரம்
கேட்கச் சகியாதவாரு அனற்றிக் கொண்டிருக்க

பலியாவது தெரிந்த நொடி

துண்டாகிப் போன சமாதானத்தில்
சத்தியத்தின் நா தொங்க
நம்பிக்கை விழிபிதுங்கி இறுதிமூச்சில்

புத்தன் பிறக்கிறான் போதிமர வேரை அழித்தபடி

***

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன