ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

தேனரசன் கவிதைகள் 
வெள்ளை ரோஜா-கவிதைகள் அன்னம் வெளியீடு,   அகரம் சிவகங்கை   ரூ.5-00
 தேனரசன் கவிதைகளை ஒருமுறை படித்ததும் ஒரு திறமையாளனை சந்திக்கிறோம் என்ற உண்மை உடனே புலப்பட்டு விடுகிறது.
   காகங்கள் முடிபுனைந்தால்
   கரைச்சல்களே சங்கீதம்
   சிறுமைக்கு நீர் வார்த்தால்
   தெருநெடுவே முள் வளரும்.
இந்த வரிகளைப் படிக்கும் பொழுது,’பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற பாரதியின் வரியும், மற்றதில் எதிர் மறையாய ஒரு திருக்குறளும் முற்றிலுமாக மறைந்து புதிய வரிகளும் இடம் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
   ‘தேவை பணம் இதுவே
   திருவாய் மொழி  எனவே
   சேவை மனப்பான்மை
   சிவலோகம் போகிறது’
   ‘அவரவர்கள் பாட்டுக்கு
   அகப்பட்டது சுருட்டல்
   தவறில்லை என்னுமொரு
   தருமம் தழைக்கிறது.’
என்ற வரிகளில் ஒரு புதிய கவிஞனின் குரல் ஒலிப்பதைக் கேட்கலாம்.  சொல்லே கவிதை என்பது உண்மையென்றாலும் கவிஞன் கலைஞனுமாகவே காணப்பட்டு வருகிறான்.  கூற்றின் அளவிலேயே மேற்கண்ட வரிகள் தேனரசனுக்குக் கவிதை ஆகிவிட்டாலும் இந்தத் தொகுப்பில் சிருஷ்டி அளவிலான கவிதைகளும் உள்ளது  நிம்மதி தருகிறது.  அவற்றின் எண்ணிக்கை 38ல் 8 என்றாலும் ‘ஒரு வெளியேற்றம்’ ‘யார் சொன்னது?’ என்ற கவிதைகளும் பிறகு ‘ஆதிவாசிகள்,’ ‘ஒரு விவசாயியின் மறைவில்’, ‘ஈடு’, ‘பாவம் அம்மா,’  ‘மேஜை மீது’ ஆகிய கவிதைகளும் நன்றாக உள்ளன என்றாலும், எண்ணல் அலங்காரம் என்ற கவிதை எல்லாவற்றினும் சிறந்ததாக இருக்கிறது.  வயது வந்த தமக்கைக்காக ஒரு சிறுவன்.
   ‘ஐயா சாமி.  நாலு நாளாப் பட்டினி
   மூணு மாசம் முன்னாலே
   மாரி மகமாயி வந்து
   எங்க அக்காவின்
   ரெண்டு கண்ணையும்
   சூறையாட்டிட்டா
   ஒரு மனசு வெச்சு
   ஒதவுங்கையா’
என்று யாசிக்கிறான்.
   ‘நாளைக்குப்
   புத்திலக்கியம் படைத்து
   இந்தச் சமுதாயத்தை
   புணருத்தாரணம் செய்யப் போகிறவன்’

அந்த யாசிப்பில் வரும் நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு என்ற எண்களின் இறக்கத்தை ரசிக்கிறானாம்.  இந்தக் கவிதையின் கடைசி வரிகளில் மனத்தின் வினோதப் போக்கு பிடிக்கப்பட்டிருப்பதால் இந்தக் கவிதையை உயர்வானதாகக் கூறவேண்டும்.

ஆனால் தேனரசன் கவனக்குறைவு என்ற குற்றத்துக்கு ஆளாகக்கூடாது.  உதாரணமாக அந்தச் சிறுவனின் யாசிப்புக் கூற்றில் ‘அக்காவின்’ என்று காணப்படுகிறது.  இந்தச் சொல்லில் வரும் ‘இன்’ பொருந்தாமல் நெருடுகிறது. 
கவிதை என்ற தலைப்பில் உள்ள கவிதை தேனரசனுக்குச் சிறப்பைத் தராது.  ‘பெண் துணை’ இல்லாத சமயத்தில் ஏகாந்தம் மேற்பட்டு ‘இப்போ யாருமில்லே வாடி என் மனச்சுக மோகினி’ என்று கவிதையை அழைக்கும் பொழுது தேனரசனின் திறமை வீணாகிறது.  ‘தனிமை கண்டதுண்டு-அதிலே
சாரமிருக்குதம்மா’ என்ற பாரதியின் வரியை நினைந்து மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ள நேருகிறது.  கவிதை பற்றிய, கவிஞனுக்கு இருக்க வேண்டிய அனுபவம் இங்கு காணப்படவில்லை.  மேலும் விஷயம் மிகவும் சாமான்யமாகி விட்டது. என்றாலும் கூட தேனரசன் நம்பிக்கை தருகிறார்.
                                                                                                –  ஞானக் கூத்தன்.               
 
அன்புடையீர்,
வணக்கம்.
ழ இதழின் 5வது இதழ் உங்கள் பார்வைக்கு முழுவதும் படைத்துவிட்டேன்.  இதேபோல் 6வது இதழ் முழுவதும் தருவதாக உத்தேசம்.  கவிதைகளும் கவிதைகளுக்குரிய பார்வையுடன் ஒரு இதழ் 1988ல் வெளிவந்தது.  பளபள அட்டை எதுவுமில்லாமல், அம்மணப்பதிப்பாக நியூஸ்பிரிண்டில் வெளிவந்த இதழ் ழ.
ஒரு திருமணத்தின்போது, அங்கு பரிமாறப்படும் சாப்பாடு இலைக்குக் கீழ், நியூஸ்பிரிண்ட் தாளைப் பயன்படுத்தினார்கள்.  அத்தாள் உருண்டையைப் பார்த்து, ஆத்மாநாம், எத்தனை ழ பத்திரிகைக் கொண்டு வரலாம் என்று ஞானக்கூத்தனிடம் கூறியதாக சொல்வார்கள்.
ழ பத்திரிகை வந்தவுடன் அதை எல்லோருக்கும் அனுப்புவார்கள்.  விற்பனைக்காக சில இடங்களுக்கும் அனுப்புவார்கள்.  ஆனால் அது விற்று வந்த பணத்தைப் போய்க் கேட்கக்கூட மாட்டார்கள்.  க்ரியா போன்ற சில அமைப்புகள் மொத்த விற்பனையை எழுதி வைத்துக்கொண்டு கொடுப்பார்கள்.  மற்றவர்கள் யாரும் சரியாக தந்ததில்லை. 
இதழ் அனுப்பும் பொறுப்பை ஆர்.ராஜகோபலன் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்.  அவர் ஒரு கல்லூரி பேராசிரியர்.  அந்தப் பொறுப்பில் இருந்துகொண்டு ழ பத்திரிகையையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  இதழை 42 சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெரு, சென்னை 5 என்ற முகவரியிலிருந்து கொண்டு வந்தார். அவர் ழ இதழின் இணை ஆசிரியர்.  திருவல்லிக்கேணியில் உள்ள  மக்கள் அச்சகம்தான் ழ பத்திரிகையை அச்சடித்துக் கொடுத்தது.
  
அன்புடன்,
அழகியசிங்கர்.
             

“ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. பழைய ழ இதழ்கள் மீண்டும் நவீன விருட்சத்தில்…. தொடரட்டும் பழைய பங்களிப்புகள்… புதிய தலைமுறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும்

  2. 'பளபள அட்டை எதுவுமில்லாமல், அம்மணப்பதிப்பாக நியூஸ்பிரிண்டில் வெளிவந்த இதழ் ழ'
    தகவல் என்னவோ மனதை நெகிழ வைக்கிறது, எத்தனை படைப்பாளிகளை வளர்த்தெடுத்திருக்கிறது என்பதை
    நினைக்கும்போது.
    இதழுக்கு நல்ல மரியாதை செய்திருக்கிறீர்கள் சார். மகிழ்கிறேன். நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன